Jun 1, 2020

FAQs - Frequently Asked (stupid) Questions: However!



FAQs - Frequently Asked (stupid) Questions: However!
1. அம்பேத்கரை விமசித்தால் தலித்துகள் நம் (கம்யூனிஸ்ட்கள்) பக்கம் வர மாட்டார்கள் தோழர்! எனவே, கொஞ்சம் “விட்டுக்கொடுங்கள்” என்போருக்கு:

• கடவுளை / இந்து மதத்தை / பார்ப்பனியத்தை விமர்சித்தால் இந்துக்கள் / பிராமணர்கள் நம் பக்கம் வரமாட்டார்கள்.
• காந்தியை விமர்சித்தால் காந்தியவாதிகள் வரமாட்டார்கள்.
• முத்துராமலிங்கத்தை விமசித்தால் ‘முக்குலத்தோர்’ நம் பக்கம் வரமாட்டார்கள்.
• தனியரசுவை விமர்சித்தால் கவுண்டர்கள் நம் பக்கம் வரமாட்டார்கள்.
• பா.மா.க தலைவர் இராமதாசை விமர்சித்தால் வன்னியர்கள் நம் பக்கம் வரமாட்டார்கள்.

• காமராஜரை விமர்சித்தால் நாடார்கள் நம் பக்கம் வர மாட்டார்கள்.
• திமுகவை / அதிமுகவை விமர்சித்தால் – அவர்களின் ஆதரவாளர்கள் / தொழிற்சங்க உறுப்பினர்கள் நம் பக்கம் வரமாட்டார்கள்.
• விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை விமர்சித்தால் புலி ஆதரவாளர்கள், தமிழ் தேசியப் பற்றாளர்கள் நம்முடன் வர மாட்டார்கள்.
• சீமானை விமர்சித்தால் நாம் தமிழர் தோழர்கள் வர மாட்டார்கள்....

இப்படியே பட்டியலை சாதிவாரி, அமைப்புவாரி, தலைவர்களின் ஆதரவாளர்கள் வாரியாக அடிக்கிக் கொண்டே போகலாம்! யார் மனமும் புன்படாமல் வருடிக் கொடுத்தபடியே இருப்பதற்குத்தான் மார்க்சியம் என்னும் ஒரு சமூக விஞ்ஞானத் தத்துவத்தைப் பயின்றோம். எனவே கம்யூனிஸ்டுகளும் அடையாள அரசியலை, தலைகீழ் சாதிய அரசியலை கையிலெடுப்போமா?????

ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்! உழைக்கும் வர்க்கமானது தனக்கான விடுதலையை அளிக்கவல்ல பாட்டாளி வர்க்க அரசியல்/தத்துவத்தோடு சேர்வதை எந்த கொம்பனாலும் தடுக்கவியலாது. என்.ஜி.ஓ பண்பாட்டு மைய முதலாளிகள், பின்நவீனத்துவப் போலிகள் , அடையாள அரசியலின் ஆபத்தைப் புரியாத “கருணையாளர்கள்” அந்த நடைமுறையை கொஞ்சம் பின்னுக்கு இழுக்கலாம். ஆனால், உற்பத்தி உறவுகளில் உள்ள முரண்பாடுகளும், உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிப் போக்குமே உழைக்கும் வர்க்கத்தின் புரட்சிகர ஒருங்கிணைப்பைத் தீர்மானிக்கவல்ல சக்தி (நிலைமை).

*****
2. இதையெல்லாம் யாரும் மறுக்கவில்லை தோழர். அம்பேத்கர் ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்ல (அப்படி சொல்லிப்போம். ஆனால் விமர்சிச்சா ரவுண்டு கட்டி அடிப்போம்!) ஆனால் நீங்கள் ஏன் முத்துராமலிங்க தேவரை விமர்சிப்பதில்லை? இந்து மதத்தை இவ்வளவு தீவிரமாக விமர்சிப்பதில்லை.

மார்க்சிய தர்க்கத்தோடு விவாதிப்பவர்களுக்கு இதுபோன்ற முட்டாள்தனமான கேள்விகள் கூட அல்வா சாப்பிடுற மாதிரிதான்! இப்படி சாதியைத் தோண்டி கேட்கும் அற்பவாதிகளுக்கெல்லாம் பதிலைச் சொல்ல வேண்டுமா என்று தான் இத்தனை நாள் அமைதியாக இருந்தோம்! ஆனால் முட்டாள்தனம் எல்லை மீறுகையில், சமூகத்தின் நன்மை கருதி….

• இந்துமதத்தை, பார்ப்பனியத்தை, ஃபாசிச மோடி அரசை எல்லாம் விமர்சித்துக் கொண்டுதான் இருக்கிறோம். கூடவே எல்லா மதங்களையும்! குறிப்பாக சாதி ஒழிப்பிற்கான தீர்வு என்று பௌத்த மத மாற்றத்தை முன்வைப்பதை!
• தத்துவார்த்த மட்டத்தில் இப்படி போர் தொடுத்தாலும் நடைமுறையில் தலித்துகள், சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் குரல் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம் என்பதற்கு எங்களது எழுத்துகளும் செயல்பாடுகளுமே சாட்சியாக இருக்கையில், இதுபோன்ற அவதூறுகள் வரலாற்றில் நிற்காது.

• அடுத்து முத்துராமலிங்கத் தேவர் பற்றிய ஜுஜுபி கேள்விக்கு #வசுமித்ரவின் பதில்:
o சாதி ஒழிப்பிற்குத் தீர்வு தன்னிடத்தில் உள்ளது / தேவரிடத்தில் உள்ளது என்று தேவரோ அல்லது யாரேனும் ஆய்வு செய்திருந்தாலோ…

o கந்தப் பெருமானா கார்ல் மார்க்ஸா, தெய்வீகமா, தேசியமா மார்க்சியமா என்று தேவர் எழுதி, அதில் மார்க்சியத்தைப் பன்றித் தத்துவம் என்றும் சர்வாதிகாரம் என்றும் கூறியிருந்தாலோ, அதனை வைத்து சாதி ஒழிப்பிற்கான தலைவர் அவர் ஒருவரே என்று அமைப்புகள், NGOக்கள் உருவாகி மார்க்சியத்திற்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்தாலோ அவரையும் கண்டிப்பாக விமர்சிப்போம்.
கொசுறு: சி.பி.எம் உறுப்பினர்கள் சிலரைப் போல் முத்துராமலிங்கத்திற்கு மாலை எல்லாம் போட்டு அவரை எப்படி புரிந்துகொள்வது என்று இப்போதில்லை, எப்போதும் வருடிக்கொடுக்கும் வேலையை செய்ய மாட்டோம்.

• இந்து மதம், பார்ப்பனியம், சாதி இந்துக் கட்சிகள், சாதியத் தலைவர்களிடம் சமூக விடுதலைக்கான தீர்வு இல்லை என்பது ஊரறிந்ததே. அதனால் தான் அந்தப் பக்கம் இருப்பவர்களை இந்தப்பக்கம் இழுக்க அனைவருக்கும் பொதுவான, தவிர்க்கவியலாத சமூக உறவிலிருந்து ஏற்படும் அடையாளமான #வர்க்க #அடையாளத்தை முன் எடுக்க வேண்டும் என்கிறோம். ஒவ்வொரு பிரச்சினையின் போதும் அதற்குரிய எதிர்வினைகள் மூலம் நாங்களும் சாதியத்தை, சாதி ஆதிக்க அரசியலை விமர்சித்துக் கொண்டுதான் இருக்கிறோம். (So, STFU).

எங்களுக்குத் தலைவர்கள் என்று யாருமில்லை! கார்ல் மார்க்ஸ் உட்பட! நாங்கள் ஏற்றுகொண்ட தத்துவம், அல்லது எங்களது உலகக் கண்னோட்டம் மார்க்சிய தத்துவ-சமூக விஞ்ஞான-அரசியல் பொருளாதார அடிப்படையிலானது. அவ்வளவே!

எனவே கொஞ்சம் தர்க்கப் பூர்வமாக, புத்திசாலித்தனமாகக் கேள்வி எழுப்பவாவது மார்க்சியம் கற்கவும் ’தோழர்களே’!


No comments:

Post a Comment