Jun 19, 2020

அம்பேத்கரின் ஆணாதிக்கம் - பகுதி 1


அம்பேத்கரின் ஆணாதிக்கம்
(புத்தரும் அவரது தம்மமும் நூலை முன்வைத்து ) - #வசுமித்ர 
பகுதி I
அம்பேத்கர் புத்தரது பிறப்பை அதிமானுடப் பிறப்பாக எழுதுகிறார். பிறக்கும்போதே உடலில் 32 இலட்சணக் குறிகளுடன் பிறந்ததாக எழுதுகிறார். அந்த முப்பத்திரண்டு லட்சணங்களாவன,
1.இந்தக் குமாரன் நன்கு நிலை பெற்ற காலை யுடையவன். 2.இவனுடைய திருவடித்தலத்தின் கீழ் ஆயிரம் ஆரக்கால்களும், வட்டங்களும் மையமும் வாய்ந்ததும் நல்வடிவங்கள் அனைத்தும் நிரம்பியதுமான சக்கரம் இருக்கிறது.3.இவனுடைய உள்ளங்கால்கள் நீண்டிருக்கின்றன. 4.விரல்கள் நீண்டவை.5.கைகால்கள் மென்மையும் இளமையும் வாய்ந்தவை.6.அவை வலைகளைப் போல இருக்கின்றன.7.குதிகால்கள் முளையைப் போலவளைந்திருக்கின்றன. 8.துடைகள் பெண்மானின் துடைகளைப் போல் இருக்கின்றன.9.நேரே நின்று வளையாமலே இவன் தன் உள்ளங்கையால் முழங்காலைத் தொட முடிகிறது. அதைத் தடவிக்கொடுக்க முடிகிறது.10.ஆடையினால் மறைக்க வேண்டிய இவன் உறுப்பு உறையினால் மூடப்பட்டுள்ளது.11.இவனுடைய ஒளி பொன்னை நிகர்த்தது.12.சருமம் நுட்பமாக இருப்பதால் இவனுடைய உடலில் தூசு படிவதில்லை.13.இவனுடைய மயிர்க்கால்களில் ஒவ்வொரு மயிரே முளைத்திருக்கிறது. 14.இவனுடைய கேசம் மேல்நோக்கியும் கறுத்து மைவண்ணத்தோடும், சுருள் சுருளாகவும் வலப் பக்கத்தில் வளைந்தும் இருக்கிறது.15.இவனுடைய அங்கங்கள் நேராக இருக்கின்றன.16. இவனுடைய உடலின் ஏழு பகுதிகள் பருத்திருக்கின்றன. 17.இவனுடைய உடலின் முன் பக்கத்திற் பாதி சிங்கத்தின் மோவாயை நிகர்த்திருக்கிறது.18.இவனுடைய தோள்களின் மேற்புறம் பருத்திருக்கிறது.19. ஆலமரத்தைப் போல உருண்டிருப்பதோடு அதன் உயரமும் சுற்றளவும் சமமாக இருக்கின்றன.20.இவனுடைய தோள்கள் ஒரே மாதிரி வளைந்துள்ளன.21.இவனுடைய சுவைப்புலன் சிறந்திருக்கிறது. 22.மோவாய் சிங்கத்தின் மோவாயை நிகர்த்திருக்கிறது. 23.இவனுக்கு நாற்பது பற்கள் இருக்கின்றன. 24.அவை நேராக இருக்கின்றன. 25.அவை நிலையானவை. 26.அவை வெண்மையானவை. 27.இவனுடைய நாக்கு நீண்டுள்ளது. 28.இவன் தெய்வீகக் குரல் வாய்ந்தவன். கரவிகம் என்னும் பறவையின் ஒலிபோல இவன் குரல் இனிமையாக இருக்கிறது. 29.இவனுடைய விழிகள் நீலமாக உள்ளன. 30.இவனுடைய கண்ணிமைகள் பசுவின் இமைகளைப் போல இருக்கின்றன. 31.இவனுடைய புருவங்களில் மென்மையான பருத்தியிழை போன்ற வெள்ளிழைகள் தோன்றியுள்ளன.32.இவனுடைய தலை, பாகைபோல (சிறிது உயர்ந்து) இருக்கிறது.
இத்தகைய அடையாளங்கள் பிறந்த குழந்தைக்கு இருக்குமா என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். பிறந்த உடனே நாற்பது பற்கள் கொண்டவராக புத்தர் பிறந்தார் என்று அம்பேத்கர் நம்பி எழுதுவதை நாம் என்னவென்று சொல்வது?
ஒரு மனிதன் மீமனிதன், அல்லது அதிமனிதன் ஆகும் போது, அதுவும் அவன் ஆணாக இருக்கும்போது, ஆணாதிக்கத்தின் உச்சத்தைக் கைக்கொள்வான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவ்வகையில் அம்பேத்கரின் புத்தர் ஆணாத்திக்கத்தையே முன்வைக்கிறார். அம்பேத்கரும் ஆணாதிக்க மனநிலையிலேயே எழுதுகிறார்.
பெண் வீரமாக செயல்படும்போது, அல்லது ஆண் வரையறுப்பின்படி தைரியமாக ஒரு சூழலைக் கைக்கொள்ளும் போது, அல்லது ஆணுக்கு அடங்கி நடக்க மறுக்க நடக்கும் போது, சக ஆண்களால், அழைக்கப்படுவது ஆம்பளை மாதிரி நடந்துகொள்கிறாள் என்பதே. இங்கு பெண்ணைப் பொறுத்தவரை ஆண் என்பவன் அதிமனிதனாகிறான். ஆணாதிக்கமானது அத்தகைய மனநிலையை பெண்களுக்கு தருவதே, உன்னால் ஒருபோதும் தனித்து முடிவு, எடுக்க முடியாது, அதற்கான ஏற்பாட்டையும், ஆண் இனம் தராது என்பதோடு, தனது இருமை நிலையையும் அது முன்வைக்கும். ஆண் மகத்தானவன், வீரம் மிக்கவன், அதே சமயம் பெண் தன் சுந்தந்திரத்தை முன்வைத்தால், ஆணைப் போல் நடக்கிறாள் என்கிற தாழ்வான நிலையை முன்வைத்து உரையாடும். இந்த இருமை நிலைக்கு இடையில்தான் ஒரு பெண் தன்னை முன்வைக்க வேண்டியிருக்கிறது.
ஆண்பிள்ளை போன்று நடத்தல், என்ற வார்த்தையில் ஆண் தன்னை மேல் நிலையில் வைக்கும் அடுத்த கணமே, பெண்ணின் பெண் தன்மை என்கிற பதத்தை இழிவு செய்வதோடு அவள் பெண்ணாக இருக்க வேண்டும் என்பதையே தீர்மானமாகச் சொல்கிறான். ஆணுக்குக் கீழே கட்டுப்பட்டு இருத்தலே சிறந்த பெண்ணிற்கான அளவுகோல். அதைவிடுத்து ஆண் தன்னைக் கட்டமைக்கும் புள்ளிகளில் எதேனும் ஒன்றைத் தொட்டால் கூட, அவள் ஆணுக்கு சவால் விடுகிற பெண்ணாக மாறிவிடுவதோடு, ஆண்களால் அவமானத்துக்கும் உள்ளாகிறாள்.
அந்த வகையில் அம்பேத்கரின் ‘புத்தரும் அவரது தம்மமும்’ ஆணாதிக்க பனுவலே. புத்தரது வாயிலாகவும், அதே சமயம் அந்நூலின் ஆசிரியராகவும் அம்பேத்கர் தனது ஆணாதிக்க மனநிலையை வெளிப்படுத்துகிறார். நூலின் எந்த இடத்திலும் பெண்கள் மதிக்கப்படுவதில்லை என்பதோடு, ஆணுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய அவசியத்தை பறைசாற்றிக்கொண்டே இருக்கிறார். ஆணுக்குப் பெண் அடங்கி இருக்க வேண்டும் என்கிற மனநிலையே அம்பேத்கருக்கும் இருக்கிறது. அந்தப் பெண் பிக்குணியாய் இருந்தாலும் கூட.
உதாரணத்திற்கு புத்தர் தனது வளர்ப்பு அன்னையையும், மனைவியையும் சங்கத்தில் சேர்க்க மறுக்கிறார். ஆனந்தன் விவாதித்ததும் இணைத்துக் கொள்ளச் சொல்கிறார். ஆனால் எட்டு விதிகளுக்கு பெண்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற ஆணாதிக்க விதிகளை ஆனந்தன் மூலமாகச் சொல்லி அனுப்புகிறார். வளர்ப்பு அன்னையும், யசோதரையும் அதை மகிழ்ச்சியோடு ஏற்கிறார்கள். ஆனால் அந்த எட்டு அட்ட விதிகள் என்ன என்று அம்பேத்கர் எங்கும் சொல்லவில்லை. அந்த எட்டு விதிகள் என்னவென்று பார்ப்போம்.
1.உபஸம்பதா என்னும் உயர்நிலைத் துறவு பூண்டு ஒருநூறு ஆண்டுகள் ஆகியிருந்தாலும் ஒரு பிக்குணி ஒரு பிக்குவை வணங்க வேண்டும். அவர் முன் எழுந்து நிற்கவேண்டும். மரியாதை செலுத்த வேண்டும். மற்றும் அந்தப் பிக்கு அன்றுதான் உயர்நிலைத் துறவு பூண்டவர் என்றாலும் கூட அவருக்குச் செய்ய வேண்டிய முறையான எல்லாக் கடமைகளையும் செய்ய வேண்டும்.
2.வர்ஷகால வாசம் செய்யும்போது பிக்குகள் யாரும் இல்லாத இடத்தில் ஒரு பிக்குணி தனித்திருந்து தவமியற்றக் கூடாது.
3.இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஒரு பிக்குணியானவர் பிக்குகள் சங்கத்தை அணுகி உபோஸாதா நாளான அமாவாசை அல்லது பௌர்ணமி அன்று கூட்டப்படும் கூட்டம் எப்போது என்றும் தங்களுக்கு விதிகளைக் கூறி அறிவுறுத்த ஒரு பிக்கு எப்போது வருவார் என்றும் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
4.மழைக்கால வாசத்தின் முடிவில் தனிமைத் தவப்பயிற்சிக்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் பவாரண சங்கை ஒரு பிக்குணி பிக்குகளும் பிக்குணிகளும் அடங்கிய ஒரு கூட்டத்தில் நடத்த வேண்டும். (பார்த்தல் கேட்டல் ஐயுறுதல் இவற்றின் மூலமாகத் தவறு ஏதேனும் நேர்கிறதா என விசாரிக்கும் சடங்கு)
5.ஒரு பெருந் தவறைச் செய்துவிட்ட ஒரு பிக்குணி, பிக்குகள் பிக்குணியாரின் முன்னிலையில் மானத்த என்ற ஒழுங்குமுறைக் கட்டுப்பாட்டுக்கு உட்படவேண்டும். 6.இரண்டாண்டு காலம் விதிகளைக் கடைப்பிடித்து பயிற்சி பெற்ற மாணக்கர்கள் மட்டுமே பிக்குகள் சங்கம், பிக்குணிகள் சங்கம் இரண்டின் முன்னிலையில் உயர்நிலைத் துறவு பெற்றுக்கொள்ள வேண்டும்.
7.ஒரு பிக்குணி எக்காரணத்தை முன்னிட்டும் ஒரு பிக்குவை எதிர்த்துப் பேசவோ கடுஞ்சொல் கூறவோ கூடாது.
8.பிக்குணியர் பிக்குகளுக்கு உத்தரவுகள் கொடுக்கலாகாது. அறிவுரை கூறக்கூடாது. ஆனால் பிக்குகள் பிக்குணியருக்கு உத்தரவுகள் கொடுக்கலாம்.
ஆணாதிக்கத்தின் அட்டவணையாய் இருக்கும், இந்த எட்டுவிதிகள் குறித்து எழுதாது அம்பேத்கர் நழுவுகிறார். பௌத்தத்தில் அறிஞராகக் கருதப்படும் அம்பேத்கருக்கு இந்த எட்டுவிதிகள் தெரிந்திருக்காது என்பதை நம்பும்படி இருக்கிறதா? அதுவும் போக அவ்விதிகளை ஏற்றுக்கொண்டது குறித்து வளர்ப்பு அன்னையான பிரஜாபதி கோதமி,
“ஆனந்தா! ஆணோ பெண்ணோ இளைய சிறிய வயதுகளில், தம்மைத் தாமே அலங்கரித்துக் கொள்ளும் பழக்கமுடையவராய், நீராடி முடித்ததும், எவ்வாறு இரு கரங்களாலும் தாமரை மலர் மாலைகளை அல்லது மல்லிகை மலர்களை அல்லது ஸ்திமுக மலர்களைப் பெற்று, தம் தலைமீது சூடிக்கொள்வார்களே, அவ்வாறே, ஆனந்தரே! நான் இந்த எட்டுத் தலையாய விதிகளையும் என்றென்றும் என் வாழ்நாள் முழுவதும் மீறாமல் தலைமேல் வைத்துப் போற்றுவேன்”
என அவரது வாயாலேயே அம்பேத்கர் சொல்ல வைக்கிறார். அம்பேத்கரின் ஆணாதிக்கத்தை விளக்க இதை விட வேறு சான்றுகள் நமக்கு வேண்டுமா?
அம்பேத்கர் தனது கடவுளான சித்தார்த்தரை மயக்கச் செய்யும் காரியங்களாக எழுதியிருப்பவை முகச்சுளிப்புக்கே நம்மைக் கொண்டு செல்லும்.
சித்தார்த்தர் துறவு நிலைக்குச் செல்லக் கூடாது என்ற சோதிடத்தை நம்பி சுத்தோதனர், தனது குலகுரு உதாயினரோடு ஆலோசித்து அந்தப் புரத்துக்கு பெண்களை அனுப்ப முடிவு செய்கிறார். இதில் எந்த அறிவார்ந்த தர்க்கத்துக்கும் கிஞ்சித்தும் இடமில்லாதவாறு அம்பேத்கரால் எழுதப்பட்டிருக்கிறது. அதுவும் சித்தார்த்தர் யசோதரையை திருமணம் செய்து ஒரு குழந்தையைப் பெற்றும் இந்த சோதிடம் அவரைத் துன்புறுத்தியிருக்கிறது.
பகுத்தறிவுப் பார்வையின்றி சித்தார்த்தரது அந்தப்புரத்திற்கு அவரை மயக்க பெண்களை அனுப்பும் யோசனைகளை முன்வைக்கும் உதாயினர் என்பவரை கொள்கை கோட்பாடு நெறிமுறைகளில் வல்லவர்! என்றே அம்பேத்கர் போற்றுகிறார். உதாயினர் அனுப்பி வைத்த அந்தப் பெண்கள் சித்தார்த்தரை பாலுறவுக்கு அழைக்கப் படும் பாடுகள் உண்மையிலேயே பகுத்தறிவுடையோர்க்கு கடும் எரிச்சலை ஊட்டக் கூடியத் தன்மையில் இருக்கிறது..
சித்தார்த்தரது நற்குணங்களைக் காட்ட பெண்களை இழிவுபடுத்தும் சொற்றொடர்களாக அவை நம் முன் சாட்சியாக இருக்கிறது. அம்பேத்கர் புத்தர் மீது கொண்டுள்ள பக்தி மனநிலை ஆண்தன்மை கொண்டதாகவே நூல் முழுக்க சுழன்று செல்கிறது.
ஒரு ஆணின் பேராண்மையை விளக்க, பெண்களை இப்படி அந்தப்புரத்திற்கு அனுப்புவதை எப்படி நம்மால் ஏற்றுக்கொள்ள முடியும். மேலும் இத்தகைய மதப்பனுவலை இங்குள்ளோர் எப்படி எந்த அடிப்படையில் காவியம் என்றழைக்கிறார்கள் என்று பார்த்தால் நூலை முழுதாகப் படிக்காத காரணத்தில்தான். படித்தவர்களும் இதிலுள்ள முரண்பாடுகளைக் கூறாது அம்பேத்கருக்கு வக்கீல் வாதம் செய்யும் மனநிலையிலும், அம்பேத்கர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்கிற முன் அனுமானத்தோடுதான் அணுகியுள்ளனர். இன்னும் சொல்லப் போனால், அம்பேத்கரை விமர்சித்தால் அடையாள அரசியல் தங்களது சாதியைச் சொல்லித் தூற்றும் என்கிற அடையாள அச்சமின்றி வேறென்ன? தான் நம்பும் ஆணை உத்தமனாகக் காட்ட பெண் உடலும், பெண் அவமதிப்புமே இங்கு அம்பேத்கரின் அளவுகோல்.
அம்பேத்கரின் புத்தர், ஆணாதிக்கம் நிறைந்தவராக மட்டுமே இருக்கிறார் என்பதை நாம் பல இடங்களில் கண்டுகொள்ளலாம். பெண்களை அறிவற்றவர்களாக சமூகம் குறித்த எந்தப் பார்வையுமற்ற பண்டங்களாகவே அம்பேத்கர் தனது நூலில் படைக்கிறார்.
புத்தருக்கென மூன்று மாளிகைகளைக் கட்டியதைக் கதை என்ற அளவிலாவது அம்பேத்கர் விவரித்திருக்கலாம். விமர்சித்திருக்கலாம். மாறாக மதப்பனுவல்கள் சொன்னதை நம்பி, மூன்று அந்தப்புரங்களிலும் பெண்களை சுத்தோதனர் குலகுருவின் யோசனைப்படி அனுப்பி வைத்தார் என்று விவரிக்கிறார். அப்படியெனில் சுத்தோதனர் ஊதாரித்தனமான ஒரு அரசனாகவே இருந்திருக்க வேண்டும். நினைத்த மாத்திரத்தில் மூன்று அரண்மனைகளைக் கட்டிக்கொடுக்க முடிகிறது என்றால் அவரால் எத்தனை அடிமைகள் அல்லது உழைப்பாளிகள் சித்திரவதை அனுபவித்திருக்க வேண்டும் என்பதை இங்கு நாம் நினைத்துப் பார்க்கலாம். ஆனால் அம்பேத்கர் சித்தார்த்தரின் துறவுக்கு எவ்வளவு பெரிய தடைகள் இருந்தது அவற்றை தெய்வப் பிறப்பான சித்தார்த்தர் எப்படி சமாளித்தார் என்று அவதார மகிமையைப் போல் சித்தரிப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்.
எந்த இடத்திலும் சித்தார்த்தருக்கு, நம் தந்தை ஏன் மூன்று அரண்மனைகளையும், அதில் பெண்களையும் நிரப்புகிறார் என்ற கேள்வி கடைசி வரை எழவே இல்லை.அம்பேத்கர் அதைக் கண்டுகொள்ளவும் இல்லை.
சித்தார்த்தரை அந்தப் பெண்கள் எப்படி மயக்க முயற்சித்தனர் என்பதை, பகுதிக்கு மேல் அலுப்பூட்டும் சொற்களால் அம்பேத்கர் விவரிக்கிறார். ஓரிரு உதாரணங்களாக,
‘இமவதப் பார்வத வனங்களில் உலவும் யானையைப் போல அடர்ந்த சோலைகளில் பெண்களில் கூட்டத்தோடு இளவசரசை அவர்கள் உலவச் செய்தனர்.'
'தேவ வனத்தில் அப்ஸரஸ்கள் சூழ வீற்றிருக்கும் சூரியனென அந்த மகிழ்வனத்தில் பெண்கள் புடைசூழ அவர் ஒளி படைத்தவராய் வீற்றிருந்தார். மற்றவர்களோ தம்பொன்னுடைகள் மின்மினுக்க, இங்குமங்கும் உலாவி, மெல்லிய உடைக்குள் மிளிரும் தம் உடலழகைக் காட்டி அவரை மயக்க முயன்றனர்.’
சாக்கிய குலத்தில், பிறந்த எந்தப் பெண்ணாவது, ஓர் ஆணை மணக்க ஒரு பெண் செய்யும் தொழிலா இது என்று கேட்டு, தன் சுயமரியாதையை வெளிப்படுத்தவில்லை. அரசரும், குலகுருவும் ஆணையிட்டதும் இளவரசரை காம வயப்படுத்த வண்டுகள் போல் மொய்க்கத் தொடங்கிவிடுகின்றனர். இதன் மூலம் சாக்கிய குலத்து இளம் பெண்கள் மன்னர் ஆணையிட்டதும் அடிமைகள் போல் தங்களது உடலை ஈவதற்கு முன்னே வருகின்றனர்.
சுத்தோதனாரது பண்ணைகளில் ஆண்களான அடிமைகளும், உழைப்பாளர்களும் கொளுத்தும் வெயிலில் வேலை செய்து அரசனின் வருவாயைப் பெறுக்கவேண்டியது. அவர் தம் பெண்கள் இங்கு அந்தப்புரத்தில் இளவரசனை மயக்க வேண்டியது. இதுவே அன்றைய நிலைமை என்று நாம் எடுத்துக்கொள்ள வேண்டுமா? அம்பேத்கர் பகுத்தறிவோடு எதையும் இங்கு விமர்சிக்கவே இல்லை.
இளவரசரின் உறுதியைக் குலைக்க பெண்கள் அந்தப்புரத்திற்கு செல்ல வேண்டும் என்று சொல்பவர் குலகுரு, அதற்கு கட்டளையிடுபவர் அரசர். அது குறித்து எந்தக் கேள்வியையும் அம்பேத்கர் மறந்தும் கூட முன்வைக்கவே இல்லை. அவரைப் பொறுத்தமட்டில் பெண்கள் ஆண்களை மயக்கவே படைக்கப்பட்டிருக்கும் பண்டங்கள்.
சித்தார்த்தரது இளம் பருவக் குணநலன்கள் குறித்து
“ஒருமுறை தன் நண்பர்களோடு அவர், தன் தந்தையின் பண்ணைக்குச் சென்றார். அங்கே கொளுத்தும் வெய்யிலில், கந்தல் உடைகளுடன். வேலையாட்கள் ஏர் உழுதல், அண்டை வெட்டுதல், மரங்களை வெட்டுதல் போன்ற கடுமையான வேலைகளைச் செய்வதைக் கண்டார்.” “இந்தக் காட்சி அவரை மிகவும் பாதித்தது” “ஒரு மனிதன் மற்றொருவரைச் சுரண்டுவது சரியாகுமா? என்று அவர் தன் நண்பர்களைக் கேட்டார். வேலையாள் கடுமையாக உழைக்கவும், அதன் பயனை எஜமானன் சுகமாய் அனுபவிக்குமாக இருப்பது எப்படி சரியாகும் என்றார்?”
என்று புத்தரின் இளம்பருவ கருணை உள்ளத்தை எழுதிய அம்பேத்கர், அந்தப்புரத்தில் தன்னை படுக்கையில் வீழ்த்த வந்திருக்கும் பெண்களின் மனநிலை குறித்து சிறிதும் கவலைப்பட்டதாக எங்கும் சொல்ல வில்லை.
இதை ஒரு வேலையாக ஏன் தன் தந்தை நினைக்கிறார் என்று இப்பொழுதும் அவரிடம் கேட்கவில்லை. கேட்கவும் தோன்றவில்லை. சிறுவயதில் பண்ணை அடிமைகளின் கோலங்கள் அவர் மனதை உறுத்தி தொந்தரவு செய்தது போல், தான் வளர்ந்து, ஒரு குழந்தைக்கு தகப்பான பின்பும் ஏன் இதுபோன்ற பெண்களை வரவழைத்து தன்னை மயக்கும் காரியங்களைச் ஏன் செய்கிறார் என்ற கேள்விகள் சித்தார்த்தருக்கு எழவிடாது அம்பேத்கர் தடுத்தாட்கொண்டு விடுகிறார். மாறாக பெண்கள் புத்தரை மயக்குவதை ரசனையுடன் செய்ததாக விவரிக்கிறார். அம்பேத்கருடைய சித்தார்த்தரின் குணம் உண்மையில் எத்தகையது. தேர்ந்தெடுத்த விசயங்களில் மட்டும்தான் அவரது கவனம் செல்லுமா? இத்தனைக்கும் இந்த கேளிக்கூத்துக்கள் ஓரிரவில் நடந்தவைகள் அல்ல.
“அவரை (சித்தார்த்தரை) வசீகரீப்பதற்காகப் புகழ்வதும், அவர் இளமையை, அழகைப் பாராட்டுவதுமாகப் பெண்கள் எடுத்த முயற்சி மாதக் கணக்கிலும், ஆண்டுக்கணக்கிலும் நீண்டும் தோல்வியுற்றது.”
என்று தயங்காமல் கூறுகிறார் அம்பேத்கர். இத்தனை மாதங்களில் ஆண்டுகளில் பெண்களே, நீங்கள் அடிமைகளா? உங்களது பிழைப்பு ஒரு பிழைப்பா? என்று சித்தார்த்தர் அப்பெண்களை நோக்கிக் கேட்டிருக்க வேண்டும். அல்லது சுத்தோதனரை அழைத்து, கட்டிய மனைவி இருக்கும் போது இதுபோன்ற களியாட்டங்களில் என்னை ஈடுபடச் சொல்வது ஒரு தந்தைக்கு அழகா? பெண்கள் ஆண்களை மயக்கும் பண்டங்களா,? இது கீழ்த்தரமான காரியங்கள் இல்லையா? என்றாவது கேட்டிருக்க வேண்டும். இதற்கும் மேலாக, இது போன்ற மோசமான காரியங்கள் குறித்து என் மனைவி யசோதாரா என்ன நினைப்பாள். இதெல்லாம் ஒரு முறையா? அடிமைப் பெண்களை, அல்லது உழைக்கும் வர்க்கப் பெண்களை இதுபோன்ற கட்டளைகளுக்கு அடிபணியச் சொல்வது சரியா? என்று கேட்டிருக்க வேண்டும். கேட்கவே இல்லை. குறைந்தபட்சம் இது ஆபாசமான செயல் இதில் நான் ஈடுபடமாட்டேன் என்றாவது சொல்லியிருக்கலாம் சொல்லவில்லை.
ஆனால் ஆண்டுகணக்கில் அந்தப் பெண்கள் தன்னை மயக்கி சுகம் அனுபவிக்க முயல்வதை ஏற்காமல் ஒரு பேராண்மை கொண்ட! மனிதராக அமைதியாக இருந்திருக்கிறார். பெண்கள் ஆண்டுக்கணக்கில் மயக்கும் போது சித்தர்த்தர் அத்தனை ஆண்டுகளிலும் அமைதியாக வேடிக்கை பார்த்தபடி இருந்தாரா என்ன? கேள்விகள் மேல் கேள்விகள் நமக்கு வருகிறது.
ஆண்டுக்கணக்கில் அப்பெண்கள் தன்னை மயக்க நினைத்து தழுவுவதும் விளையாடுவதுமாய் இருக்கையில் சித்தார்த்தர் ஒன்றே ஒன்றை நினைத்ததாக அம்பேத்கர் துணிச்சலுடன் எழுதுகிறார்.
"இளமை நிலையற்றது என ஏன் இந்தப் பெண்கள் உணரவேயில்லை? என்ன குறை உள்ளது இவர்களிடம்? இருக்கும் அழகையெல்லாம் அழித்துவிடுமே முதுமை”
இந்த இளமை முதுமைப் பிரச்சினைதான் அவருக்கு ஆண்டுக்கணக்கில் தோன்றிய சிந்தனை! ஆனால் அப்பெண்களின் தன்மான உணர்ச்சி குறித்தோ, ஏழ்மை நிலைகள் குறித்தோ, மன்னருக்குக் கட்டுபடவேண்டிய நிலைமைகள் குறித்தோ, யதோசரையின் மனநிலை குறித்தோ எதுவும் தோன்றவில்லை என்பதையே அம்பேத்கரின் விவரிப்புகள் காட்டுகிறது.
மேலும் உதாயினர் இளவரசரை மயக்குங்கள் என்றதும், அந்தப் பெண்கள் உள்ளக் கிளர்ச்சியுற்று இளவரசரை வெற்றி கொள்வதற்குத் தம்முடைய நிலைக்கு ‘மேம்பட உணர்வு பெற்றனர்’ என அம்பேத்கர் எழுதிச்செல்கிறார். உண்மையிலேயே அம்பேத்கருக்கு இது மேம்பட்ட உணர்வாகத் தெரிகிறது போலும்.
அம்பேத்கரது வர்ணனைகளைக் கவனித்தோமானால் அது மத, புராண வர்ணனைகளை மிஞ்சிக் காணப்படுகிறது. புராண வர்ணனைகளையே அவர் இங்கு பெரிதும் எடுத்தாள்கிறார். அப்சரஸ்கள் சூழ வீற்றிருக்கும் சூரியனைப் போல என்கிறார். மேலும் இதற்கு சித்தார்த்தரும் உடன்பட்டிருக்கிறார் என்பது போல் சில இடங்களில் காணப்படுகிறது.
“தங்கள் வில்லென வளைந்த புருவமும், வசீகரம் மிக்க பார்வையும், காதல் மொழிகளும், கனிச்சுவைப் புன்னகையும், நளின சித்ர நடையும் கூட அந்தப் பெண்களுக்குத் தன்னம்பிக்கையைத் தரவில்லை.” “ஆனாலும் குலகுருவின் போதனைகளும், இளவரசரின் நயமான நடையும், அப்பெண்கள் அருந்தியிருந்த மதுவும், நேசமும் அவர்களுக்குள் உறுதிப்பாட்டை மீட்டன”
என்கிறார் அம்பேத்கர். இளவரசரைப் பெண்கள் உலாவச் செய்தனர் என்றும் கூறுகிறார். இதன் மூலம் சித்தார்த்தர் அவர்களுக்கு நம்பிக்கை வரும் படி நடந்தாரா? என்ன என்ற கேள்வி வருகிறது. அதே சமயம் இளவரசரை மயக்கி படுக்கையில் வீழ்த்துங்கள், காம சுகத்தைத் தாருங்கள் என உதாயினரின் உரையைக் கேட்ட பெண்கள், எப்படியாவது இளவரசரைத் தம்வசப்படுத்த உறுதி மேற்கொண்டர் என்ற ரீதியில் எழுதிய அம்பேத்கர், அடுத்த உரையாடலிலேயே அந்த நம்பிக்கையை அப்பெண்கள் இழந்ததாகக் கூறி பின் குல குருவின் போதனை, மது, மற்றும் இளவரசரின் நயமான நடை என்று கூறுகிறார். இங்கு சாக்கிய குலப் பெண்கள் குடிப்பதை ஒரு தவறாகக் கருதவில்லை என்று கருத்து மேலும் வலுப்பெறுகிறது.
ஒரு நாளில் இது நடந்திருந்தால் கூட அப்படி நடக்க வாய்ப்பில்லை இளவரசர் அவர்களை விரட்டியடித்தார் என்று முடித்து வைத்திருக்கலாம். ஆனால் இளவரசரை மயக்கும் இந்தக் கொடுமையானது மாதக் கணக்கிலும், ஆண்டுக் கணக்கிலும் அல்லவா தொடர்ந்தது என்கிறார் அம்பேத்கர். ஒரு நாளில் கூடவா இது தவறென அவர்கட்கு தெரியவில்லை, அல்லது திருமணம் முடித்துக் குழந்தையும் பெற்ற சித்தார்த்தர் சுட்டிக்காட்டவில்லை? காட்டவேயில்லை! ஒட்டுமொத்தத்தில் சித்தார்த்தருக்கு ஆண்டுக்கணக்கில் பெண்கள் பாலுறவுக்கான அழைப்பையும், தொந்தரவுகளையும் கொடுத்தபடியே இருந்திருக்கின்றனர் என்றே முடிவையே இங்கு வைக்கத் தோன்றுகிறது.
இப்படி பல மாதங்கள் ஆண்டுக்கணக்கில் அப்பெண்கள் அடைந்த தோல்வியை உதாயினர் ஒவ்வொரு நாளும் வேவு பார்த்து வந்திருக்கிறார். யதார்த்த மொழியில் சொல்ல வேண்டுமென்றால் இன்றைக்கு நடக்குமோ, நாளைக்கு நடக்குமோவெனக் காத்திருந்தார். நடக்கவில்லை. ஆனால் அடுத்து என்ன செய்கிறார். குலகுரு உதாயினர் இளவரசரிடம் பேசுகிறார். ஆனால் சித்தார்த்தர் பெண்களை அனுப்பி என்ன செய்யச் சொல்கிறீர்கள், இதற்கான நோக்கம் என்ன, இதன் அடிப்படைகள் என்ன? இதற்கான அவசியங்கள் ஏன் ஏற்பட்டது என்று கோபமாவது பட்டிருக்க வேண்டும். இல்லை, சித்தார்த்தர்தான் கருணையாளராயிற்றே. அம்பேத்கரும் இது குறித்து எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை.
உதாயினர் மகாபாரதக் கதைகளில் பெண்களால் மோசம் போன முனிவர்களையும், மதவாதக் கதைகளையும் எடுத்துச்சொல்லி அடுத்தவர் மனைவியைப் புணர்ந்த முனிவர்களின் கதைகள், பக்தையைப் புணர்ந்த சந்திரன் கதைகளையும் சொல்லி, சோமாவின் மனைவி ரோகினிமேல் அகஸ்தியர் ஆசை வைத்தார்; இவ்வாறே லோபமுத்திரைக்கும் சேர்ந்ததாய் சுருதிகள் கூறுகின்றன என்று விளக்குவதாகக் கூறி ஆணாதிக்கத்தின் உச்சத்தோடு சித்தார்த்தரின் குலகுரு உதாயினர்
ஒரு பெண்ணை தந்திரமாகவேனும் கவர்ந்திடுவதே சரி- இதனால் இரண்டு பயன் – ஒன்று அவமானப்படாமல் தப்பிக்கலாம்.- மற்றொன்று பெருமகிழ்ச்சி அடையலாம்”
“இவ்வாறாக மாபெரும் நாயகர்களே இழிவான இன்பங்களைக் கூடவிடாமல் தேடி உழன்றும், புகழ்பெற்றனெரன்றால், அவ்வின்பத்தின் இன்றியமையாமைதானே இதற்கெல்லாம் காரணமாக இருக்கமுடியும்”
“ஆகவே – இளமையும் ஆற்றலும் வனப்பும் மிகுந்த தாங்கள் தங்களுக்கேயுரியதும், உலகமே உவப்பதுமான இன்பத்தை ஏன் மறுத்தலிக்கிறீர்கள்?.”
என்று சொல்வதாக சொல்கிறார். இத்தகைய கேடான காரியத்தை பாத்திரத்தின் வார்த்தைகள் என்று எடுத்துக்கொண்டாலும், இத்தகைய மோசமான எண்ணங்களைக் கொண்ட உதாயினரை, “கொள்கை கோட்பாட்டு வழிமுறைகளில் வல்லவரான உதாயினர்” என்றே புகழ்கிறார் அம்பேத்கர் அதை நாம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
குலகுரு உதாயினரின் இத்தகைய புனித மரபுக் கதைகளை ஆதாரமாகக் கொண்ட போலியான வார்த்தைகளைக் கேட்ட 'இளவரசர் இடிமுழக்கக்குரலில் தன் மறுப்பை வெளிப்படுத்தினார் என்று அம்பேத்கர் கூறுகிறார். சித்தார்த்தர் தனது இடிமுழக்கக் குரலில், பெண்களை இவ்வளவு தரக்குறைவாக பேசும் மத நூல்களை ஆதாரமாகக் கொண்டு எனக்கும் அந்த அயோக்கியத்தனத்தைச் செய்யத் துணிந்தீரா? என்று கேட்கப் போகிறார் என்று நாம் நினைக்கலாம் (அப்படிக் கேட்டால் முதல் நாளிலேயே இது உனக்குத்தெரியவில்லை ஏன் மாதக் கணக்கில் ஆண்டுகணக்கில் அமைதியாய் இருந்தீர் என்று உதாயினர் கேட்கக் கூடும்!) ஆனால் சித்தார்த்தர் தன் ஆண்மைத் தனத்தையே முன்னிருத்துகிறார். அம்பேத்கர் அதையே தொடர்ந்து எழுதுகிறார். குலகுரு தன்னை தவறாக எடைபோட்டுவிட்டார் என்று சித்தார்த்தர் பேச்சைத் தொடங்குகிறார். தனது மதவாத உரையை முற்றும் துறந்த முனிவர் போல் பெண்கள், உணர்ச்சிகள் இவற்றை அடக்குவது, பற்றி குலகுருவுக்குப் போதிக்கிறார். ஆண்டுக்கணக்கில் தன்னை பாலியல் தொந்தரவு செய்த பெண்களிடமாவது சித்தார்த்தர் இவற்றை விளக்கியிருக்கலாம். அம்பேத்கர் எந்த இடத்திலும் இத்தகைய வாதங்களை வைப்பதில்லை.
உதாயினர் பெண்களிடம் கூறும்போது
‘எனவே, மன்னரின் குலமரபு இவரோடு முடிவு பெற்றுவிடாமல் இருப்பதற்காக உங்களுடைய கைவரிசையெல்லாம் துணிவோடு காட்டுங்கள் என்று கூறுவதாக அம்பேத்கர் கூறுகிறார்’
அப்படியெனில் சுத்தோதனரின் குலமரபு இப்படித்தான் பல பெண்களிடம் கைவரிசையைக் காட்டியிருக்கிறது என்று பொருள் கொள்ளலாமா.மேலும்
'சாதரண பெண்கள் சாதாரண ஆண்களையே வசப்படுத்துவார்கள், ஆனால் இயல்பிலேயே உயர்ந்தவர்களும் வசப்படுத்துவதற்குக் கடினமானவர்களுமான ஆண்களை வசப்படுத்துவோரே உண்மையான பெண்களாவர்'
என்று கூறுவதிலிருந்து உதாயினரின் ஆண் மனம் எத்தகையப் போக்கு கொண்டது என்று நாம் அறியலாம். அதே சமயம் இவ்வகையான மோசமான அறிவுரைகளைச் சொல்லும் உதாயினரை அம்பேத்கர் கொள்கை கோட்பாட்டு நெறிகளில் வல்லவரான உதாயிணர் என ஏன் குறிப்பிடுகிறார் எனத் தெரியவில்லை.
அம்பேத்கரின் பார்வையில் இங்கு புத்தர் மட்டுமே கதைநாயகன். அவர் மட்டுமே ஒழுக்கவான். எனவே அவரது துக்கமே பெருந்துக்கம். மற்றவர்களைப் பற்றிக் கவலையில்லை. மேலும் இந்த அந்தப்புர விவகாரங்களில் யசோதரா என்ன நினைத்தார், இதை எப்படி எதிர்கொண்டார் என்ற யதார்த்த ரீதியான காரணங்கள் எதையும் அம்பேத்கர் சொல்லவில்லை.இயல்பாக பெண்கள் அவரை மயக்க முயன்றார்கள் என்று நம்பி எழுதுகிறார். அனைத்து இடங்களிலும் அவர் பெண்கள் ஆண்களை மயக்கும் பண்டமாகவே சித்தரிக்கிறார்.
புத்தரின் அறிவுரை கேட்டு வாயடைத்துப் போன உதாயினர் நடந்த சேதியை சுத்தோதனருக்கும் தெரிவித்துவிட்டார். சுத்தோதனருக்கு உறக்கம் போய்விட்டது. சுத்தோதனரின் மூடத்தனத்தை எண்ணி நம்மால் இங்கு வியக்காமல் இருக்க முடியாது. குழந்தை பிறந்ததுமே அசித்தர் புத்தரது உடலைப் பார்த்து அதில் உள்ள குறிகள் கண்டு சோதிடம் சொல்லிவிட்டார். ஒன்று புத்தர் பேரரசர் ஆகவேண்டும், இல்லையேல் துறவியாக வேண்டும். தனது மகன் குறித்த விசயங்கள் இப்படி இருக்கும்போது சித்தார்த்தர் இளைமையாக இருக்கும்போதே அவர் பெண்களை வைத்து மயக்கியிருக்க வேண்டும். ஆனால் அசித்தர் சொன்னது திடீரென ஞாபகம் வந்ததுபோல், திருமணம் ஆகி குழந்தை பெற்றுத் தகப்பனானதும் வந்திருக்கிறது. இதிலும் தர்க்கமற்ற பார்வை என்னவென்றால். திருமணம் முடிந்த பின்பு பல பெண்களை அந்தப்புரத்துக்கு ஏன் அனுப்ப வேண்டும் என்பதுதான்.
சித்தார்த்தர் மணம் முடித்து ஒரு குழந்தை பெற்ற பிறகும், பல பெண்களை அனுப்பி அவரை வசமிழக்கச் செய்வதுதான் வழி என சுத்தோதனர் மட்டுமல்ல அவரது அமைச்சர்களும் கூட இதே மனநிலையில்தான் இருந்திருக்கிறார்கள் என்றால் சாக்கிய குலத்தின் பெருமை எத்தகையது என்பதை புரிந்து கொள்ளலாம். சுத்தோதனரின் எண்ணமும் அவருக்கு யோசனை சொல்லும் அமைச்சர்களின் கீழும் வாழ்ந்த மக்கள் எப்பேர்ப்பட்ட துர்பாக்கியசாலிகள்.
அதோடு சித்தார்த்தரை உடலின்ப வாழ்வின்பால் ஈடுபடவைத்து அதன் மூலம் வாழ்க்கையில் ஏற்படப் போவதாகத் தோன்றும் திருப்பத்திலிருந்து அவரை திசை திருப்புவதற்கு ஏதாவது வழி வகை காண அவரும் அவருடைய அமைச்சர்களும் நெடுநேரம் கலந்தாலோசித்தனர், எனினும் அதுவரையில் கையாண்டு பார்த்ததைத் தவிர வேறு வழிகளெதுவும் அவர்களுக்கும் புலப்படவில்லை என்கிறார் அம்பேத்கர். இதை விவாதிக்க கலந்து ஆலோசனையெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது!
மேலும் சித்தார்த்தரை மயக்கச் சென்ற பெண்கள் அவர் மயங்காததால்
"தாம் அணிந்திருந்த மாலைகள் வாடவும், அணிகலன்கள் ஒளியிழக்கவும், தம் நளினக்கலைகளாலும், நயத்தகு முயற்சிகளாலும் பயனேதும் விளையாமற் போகவே, ஆரணங்குகளின் தொகுப்பு, தம் நேசத்தை நெஞ்சின் ஆழத்தில் புதைத்தபடி கலைந்து போயிற்று”
என்று சர்வ சாதாரணமாக அம்பேத்கர் முடிக்கிறார். இதனடிப்படையில் பார்த்தால் சுத்தோதனர் ஏற்பாடு செய்த அனைத்து பெண்களும் அவர்களாகவே விருப்பப்பட்டு சித்தார்த்தரை மயக்க வந்ததாகவே தெரிகிறது. இதை முன்வைத்து நாம் கேள்வி எழுப்பும் போது, இவர்கள் எந்த வர்க்கத்துப் பெண்கள். இளவரசரை மயக்க இவர்களை எங்கிருந்து சுத்தோதனர் வரவழைத்தார். இவர்களின் அடுத்த பணி என்ன? இதோடு முடிந்ததா? இல்லை கபில வஸ்துவில் இருக்கும் பல அரசர்களுக்கும் இத்தகைய பணிகளைச் செய்வார்களா? இவர்களது குலத்தொழிலே இதுதானா? என்ற கேள்விகள் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. அவர்கள் கலைந்து போயினர் என்பதுடன் முடித்துக்கொள்கிறார்.
மேலும் சித்தார்த்தரின் உடல் அழகு சதா சர்வ காலமும் பெண்களை மயக்கிக்கொண்டெ இருந்தது என்று வேறு சில இடங்களிலும் முன்வைக்கிறார் அம்பேத்கர். அதாவது பெண்கள் மயக்கம் கொள்ளும் வகையில் இருந்தால்தான் அது ஆணின் பேரழகு என்பது அம்பேத்கரின் அழகு பற்றிய கோட்பாடு.
இத்தோடு, புத்தரின் அழகை அம்பேத்கர் முடித்துக் கொள்ளவில்லை. இதுவரை சொல்லியது போதாதென்று, அதற்கென “அவருடைய (புத்தருடைய) தனிப்பெருந் தோற்றத்தின் சிறப்பு” என்று ஒரு தனி அத்தியாயம் கொடுத்தே விளக்கியிருக்கிறார்.
சில பௌத்த இலக்கிய நூல்களின் கருத்துக்களை வைத்து புத்தரை, புனிதர், அழகு மிக வாய்ந்தவர் என்று தொடங்கும் அம்பேத்கர்,
‘பொன்மலைச் சிகரம் போன்ற வடிவம், உயரம், வலுமிக்கவர், மகிழ்ச்சி ததும்பும் தோற்றம், நெடிய தோள்கள், சிங்க நடை, வேழ நோக்கு, அவர் தம் அழகும், பொன்னென ஒளிரும் பரந்த நல் மார்பு,அவர் புருவம், நெற்றி, வாயிதழ்கள், உடலை, கரங்களை, நடையை, அவரது குரல் தனிச்சிறப்பான இனிமையுடையதாய், பேரிகையின் நாதமென ஈர்த்ததாய், வசீகரம் மிக்கதாய் துள்ளலும், தொய்வின்மையும் உடையதாய், அவர் குரலினிமை கேட்போரை பிணித்தது, அவர் தம் பார்வை வியந்து பணியத் தூண்டியது, அவர் யாது கூறுகிறார் என்பது கூட அத்துணை முக்கியமானதாயில்லை அவருரை கேட்டோர் எவரையும் தம் விருப்பிற்கீத்து உணர்வினை உந்துபவராயிருந்தார் அவர்’
என்று புத்தரின் அழகை சலிக்க சலிக்க, கூறியது கூறியே வர்ணித்துச் செல்கிறார். பகுத்தறிவை தள்ளிவைத்து ஒரு பக்தராய் மட்டுமே அம்பேத்கர் தன்னை முன்வைக்கிறார் என்பதை இங்கு நாம் மறுக்க முடியாது. அம்பேத்கர் இதோடு நிற்கவில்லை தொடர்ந்து தனது ஆணாதிக்க மனநிலையை நூல் முழுக்க புத்தரின் வாயிலாக வைத்துக்கொண்டே செல்கிறார்.
திருமணமாகப்போகும் பெண்களுக்கு புத்தர் சொல்லுவதாக அம்பேத்கர் வைக்கும் வார்த்தைகள் எவ்வளவு அபத்தமானவை என்பதை நாம் கண்டுகொள்ளலாம்.
நம்முடைய நல்வாழ்வை விழைந்து, நம் இன்பத்தை நாடி, கருணையுடன் எவ்வகையான கணவர்க்கு நம்மை நம் பெற்றோர் மணமுடித்துக் கொடுப்பினும், அவர்பால் அன்புடைமையின் விளைவாய், முன் எழுந்து, பின் உறங்குவோராய், விரும்பி உழைப்போராய், கோருபவற்றை இன்சொற்களால் இனிமையாய் கோருபவராய் இருத்தல் வேண்டும். குழந்தைகளே! இவ்வாறு உம்மை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இவ்வார்த்தைகளை புத்தர் எங்கும் சொல்லியிருக்க வாய்ப்பில்லை. அப்படிச் சொல்லியிருந்தாலும் இதிலுள்ள கருத்துக்கள் எவ்வாறு ஆணாதிக்கத்தன்மை கொண்டவையென அம்பேத்கர் விவாதித்திருக்கலாம். ஆனால் அவர் எந்த இடத்திலும் இத்தகைய விவாதங்களை மேற்கொள்வதே இல்லை. வழிபடும் மனநிலையில் புத்தரின் வாயிலாக தனது ஆணாதிக்கப் பார்வையையே முன்வைக்கிறார்.
தொடரும்....


No comments:

Post a Comment