May 31, 2021

நீலம் பண்பாட்டு மைய ஆதரவுவாதிகளின் தேர்ந்தெடுத்த பண்புவாதம்

 நீலம் பண்பாட்டு மையத்தின் கம்யூனிச காழ்ப்புணர்ச்சி மிக்க டிவீட்டிற்கு நேர்ந்த எதிர்வினைகளை ஒட்டி ஆங்காங்கே சில விளக்கங்கள் தரப்படுகின்றன. இரண்டு பதில்கள் என் கவனத்திற்கு வந்தன.

 1. கம்யூனிஸ்ட் கட்சியில் இட ஒதுக்கீடு கேட்பதே வேடிக்கையானது என்றும் அப்படிப் பார்த்தால் ஒன்றிய அரசில் 6 தலித்துகள் உள்ளனரே அவர்கள் தான் தலித் காவலர்களா என்று லாஜிக்காக மடக்கியும்; எத்தனை பேர் தோழர் டி.ராஜா பொதுச்செயலாளர் என்ற உயரிய பொறுப்பில் உள்ள சிபிஐ கட்சியில் இணைந்துள்ளனர் என்றும் அறச்சீற்றத்தோடு முடிவடைகிறது.

படித்துவிட்டு வந்த சிரிப்பை என்னால் அடக்க இயலவில்லை. காரணம்: இதே நபர் தான் இடதுசாரி கட்சிகளும் சாதியத்திலிருந்து தப்பவில்லையா என்ற கேள்விக்கு “இடதுசாரி கட்சிகள் தோன்றி 100 வருடம் நெருங்குகிறது. ஆனால் தலைமைப் பதிவில் எத்தனை பேர் (தலித்துகள்) உள்ளனர் என்னும் கேள்வி எனக்கும் உள்ளது” என்று பேசியிருக்கிறார். அவர் தான் இன்றைக்கு மேற்சொன்ன பதிலை கொடுக்கிறார்.

 இது காலம் செய்த மாயமா… இல்லை பதவி செய்த மாயமா தெரியவில்லை. ஆனால் மார்க்சியக் கட்சியில் இருந்து கொண்டு இவர் மார்க்சிய அடிப்படையில் சாதியப் பிரச்சினையை விளக்கி நான் கண்டதில்லை. சாதி ஒரு மன நோய் என்பதாகவே பேசிக் கொண்டிருப்பவர். மார்க்சியம் குறித்த எதிர்மறை எண்ணத்தை உருவாக்குவதில் இவர் பங்கு ஒன்றும் குறைவில்லை.

 2. இரண்டாவது விளக்கம்: அவர்கள் சொற்களில் தவறிருக்கலாம் கேள்வி நியாயமானதே என்று தொடங்கி… அதற்காக இப்படியா பழி வாங்கும் விதமாக தாக்குவீர்கள். ஜனநாயகம், தோழமை, பொதுவுடைமை பண்பு என்று நமக்கே வகுப்பெடுக்கிறார் ஒருவர். கான்ஸ்பிரசி தியரி, மதிப்பிழக்கம், சமூக நீக்கம் செய்யப் பார்க்கிறீர்களா.. ஐயகோ… என்று நீண்டு… உங்கள் எண்ணம் நிறைவேறாது என்று முடிகிறது.

 ஆஹா! என்னவொரு ஜனநாயகப் பண்பு. தேர்ந்தெடுத்த நியாயவாதம்!

அம்பேத்கரை விமர்சித்த ஒரே காரணத்திற்காக ரங்கநாயகம்மா, நான், வசுமித்ர மூவரும் தொடர்ந்து தாக்கப்பட்டபோது எங்கே போனது இந்த “போதனை”? எவ்வளவு ஆபாசமான, கொச்சையான தாக்குதல்கள். கொலை மிரட்டல்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் நடந்திராத அதிசயத்தை இவர்கள் எல்லாம் சேர்ந்து நிகழ்த்திக் காட்டினார்களே. சக கம்யூனிஸ்ட் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார்… யார் தலைமையில்? தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைமையில்…

 அப்போது இதே நீலம் பண்பாட்டு மையமும், பா. இரஞ்சித்தும் அதை கொண்டாடினார்கள். மாறி மாறி டீவீட் செய்து மகிழ்ந்தார்கள். கருத்து சுதந்திரம் பேசும் பா. இரஞ்சித் அதை நியாயப்படுத்தினார். இதுதான் ஜனநாயகமா? இது தான் தோழமைப் பண்பா? அல்லது இதுதான் அம்பேத்கரியமா?

கருத்தை கருத்தால் எதிர்கொள்ளுங்கள். தெரியவில்லை எனில் பண்புடன் விளக்குங்கள்… என்கிறார்களே இதை ஏன் அன்றைக்கு அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கவில்லை.

 

// தலித்துகளின் உரிமைகளுக்காகச் சமரசமற்ற காத்திரமான உரையாடலை நிகழ்த்தியவர் பாபாசாகேப் அம்பேத்கர்// மறுப்பதற்கே இல்லை. ஆனால், அதனோடு சேர்ந்து மார்க்சியம் குறித்தும், கம்யூனிஸ்டுகள் குறித்தும் ஒரு எதிர்மறை எண்ணத்தையும் உருவாக்கிவிட்டார் என்பதே துயரம்.

 

இன்றைக்கு ஒரு சில சமூக ஊடக பதிவிற்கே இந்தளவுக்கு துடித்துக் கொண்டு மறுப்பும், விளக்கமும் தெரிவிக்க வருகிறார்களே. தலித்துகள் உள்ளடங்கிய இந்திய பாட்டாளி வர்க்கம் மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள பாட்டாளி மக்களின் விடுதலைக்கான ஒரு தத்துவத்தை, அதை ஏற்றுக் கொண்டு உழைக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளை தொடர்ந்து சீண்டிக் கொண்டே இருப்பார்கள், வேடிக்கை பார்க்க வேண்டுமா?

 

கம்யூனிஸ்டுகள் தான் வன்முறையாளர்களாயிற்றே, சாத்வீகத்தில் நம்பிக்கையுடைய அம்பேத்கரிஸ்டுகள் ஏன் ஒரு கம்யூனிஸ்டுக்கு எதிராக சாதி வெறியன் என்று சதி செய்து சிறைக்கு தள்ளப் பார்த்தார்கள்?

ஆனால் காலம் காலமாக கம்யூனிஸ்டுகளை, மார்க்சிய தத்துவத்தை பழிக்கும் நபர்களிடம் கம்யூனிஸ்டுகள் பேசிக் கொண்டுதானே இருக்கிறோம், வழக்கா தொடுத்தோம்?

அதெப்படி அது தங்களுக்கு வந்தால் தலைவலி, அடுத்தவருக்கு இவர்களே செய்தால் அது அம்பேத்கரிய போராட்டமா?

பா. இரஞ்சித்திற்கோ அல்லது ஒரு சில அடையாள அரசியல் கும்பலுக்கோ வக்காலத்து வாங்கித் தான் இங்கு தலித்திய ஆதரவாளர் பட்டம் பெற வேண்டிய அவஸ்தை கம்யூனிஸ்டுகளுக்கு இல்லை.

 

பா. இரஞ்சித் விமர்சிக்கப்படுவது போல் தோழர் திருமாவளவன் ஏன் விமர்சிக்கப்படுவதில்லை என்னும் வேறுபாட்டை கண்டால், serving capitalism, NGO politics and only playing hate politics against BCs & Dravidian Parties & Communists என்பதன் பொருள் புரியும்.

அம்பேத்கர் மீதும், தலித் மக்கள் விடுதலை மீதும் உண்மையான அக்கறை இருப்பதால் தான் இதுவரை கம்யூனிஸ்டுகள் பலர் இவர்களைப் போன்ற மேட்டுக்குடி தலித்துகளின் கம்யூனிச எதிர்ப்பு வன்மங்களை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் இனியும் அது நீடிக்காது.

 

இந்த பண்பாட்டு கும்பலோடு சேர்ந்து கொண்டு சி.பி.எம் மின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி செய்த வரலாற்று தவறை இனியாவது உணர வேண்டும். இப்போது உங்களை தொட்டதும் கூப்பாடு போடுகிறீர்கள் அல்லவா? இனியாவது ஏற்றுக்கொண்ட தத்துவத்திற்கு உண்மையாக நடக்குமாறு “தலித்திய அடையாள அரசியல்வாதிகளுக்கு” கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தட்டும்.

தலித்திய அடையாள அரசியல் செயல்படும் ஆபத்தை கண்டே 20 வருடங்களுக்கு முன் ரங்கநாயகம்மா அம்பேத்கரின் சிந்தனையை ஆய்வு செய்து விமர்சன நூல் எழுதினார். அதை நான் படித்தபோது அவசியம் கருதி மொழிபெயர்த்தேன். அன்று தொடங்கி இன்று வரை எங்களுக்கு எவ்வளவு துன்புறுத்தல்கள்? இணையவெளியில் இதை ஊக்குவித்து, அடுத்த நிலைக்கு கொண்டு சென்றவர்கள் யார்?

 

நடைமுறையில் கருப்பு, சிவப்பு, நீலம் என்று எல்லாரோடும் கைக் கோர்த்தே போராடுவோம். அதை யாரும் இங்கே உடைக்க நினைக்கவில்லை. அது முடியவும் முடியாது. ஆனால் தத்துவார்த்த அடிப்படையில் சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு / தலித் விடுதலைக்கான தீர்வு யாரிடம் உள்ளது என்ற விவாதம் வருகையில் இரக்கமின்றி, பூர்ஷுவா கருணைவாத சால்ஜாப்புகள் இன்றி விமர்சிக்க சிலர் உள்ளனர். அவர்களை நீங்கள் முதலில் கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ளுங்கள்.

 

கேள்வி கேட்டால் உங்கள் தத்துவத்தை முன் வைத்து பதில் சொல்லுங்கள். கருத்தை கருத்தால் எதிர்கொண்டு பழகுதல் தான் இடதுசாரிகளின் ஜனநாயகப் பண்பு. நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்களோ முதலில் அதை கொடுத்துப் பழகுங்கள். சமத்துவம் நாடும் நீங்கள் அனைவருக்கும் அதே கருத்து சுதந்திரத்தை நிலைநாட்டுங்கள்.

 

பி. கு: அது கருத்தா வசையா என்பதே விவாதமல்ல… ஏனென்றால் ரங்கநாயகம்மா குறித்து வந்த வசைகளின் தொகுப்பு ஏற்கனவே வசுமித்ரவின் அம்பேத்கரும் அவரது தம்மமும் நூலில் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த நூலும் வருகிறது. பொருமை காக்கவும்!

 

May 29, 2021

பாலியல் சுரண்டல் என்பது வேறு வல்லுறவு என்பது வேறு

 

இன்னமும் கூட மூளையில்லாத ஜென்மங்கள் “அவங்கம்மா இதை சொன்னாங்க அதை சொன்னாங்க”, சின்மயி அரசியல் தப்பு என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

நானே சின்மயியையும், சின்மயி அம்மாவையும் மீனவர் தொடர்பான அவரது பதிவை ஒட்டி எதிர்த்தவள்தான். தொலைக்காட்சி நேரலையில் அவர் அம்மா தொடர்புக்கு வந்து “என் மகள் எல்லாருக்கும் உதவக் கூடியவள்” என்றபோது “நல்ல விசயம். அதே போல் அவரை ஆபாச பொருள் படும் பாடல்களை பாட வேண்டாம் என்று கூறுங்கள்” என்றேன்.

அன்றைக்கு பெண்ணியவாதிகள் சிலர் பொங்கி எழுந்து வழக்கம் போல் வசை பாடினர்.நீயெல்லாம் ஒரு பெண்ணியவாதியா” என்றனர். அப்போது என் சாதி பிரச்சினையாகவில்லை ஆனால் நான் பெண்ணியவாதியா என்னும் ஐயம் எழுந்தது! பெண் என்பதாலேயே வக்காலத்து வாங்க வேண்டும் என்பதல்ல பெண்ணியம்! குஷ்பு உட்பட அன்று என்னை அவமரியாதையாக பேச, அன்றைக்கு ஒரு சில தோழர்கள் அதற்கு பதிலடி கொடுத்தனர்.

 அதனையொட்டியே நான் அறிவித்தேன் - “நான் பெண்ணியவாதி (மட்டும்) அல்ல மார்க்சியவாதி”

 இன்றைக்கு சின்மயி பாலியல் குற்றம் சாட்டும் போது சமூக அரசியல் ரீதியான நிலைப்பாட்டிலிருந்து பேசுகையில் என் சாதி விவாதமாகிறது.. ஒவ்வொரு விசயம் பேசும்போதும் ஒவ்வொரு குரூப்பிற்கு ஒவ்வொரு அடையாளப் பிரச்சினை! இந்த அவலம் இங்கு தான் நடக்கும்!

 சின்மயியின் தவறான அரசியல் கருத்தில் உடன்பாடில்லாமல் அவரை விமர்சனம் செய்த அதே கொற்றவை தான் இன்று இந்த பாலியல் குற்றச்சாட்டில் அவர் உடன் நிற்கிறேன். (இதுலையும் வரலாறு தெரியாம வந்துடுறாங்க).. ஏனென்றால் பாலியல் குற்றச்சாட்டு என்பதை நாம் “வாட் அபௌட்டரி” மூலம் எதிர்கொள்ளக் கூடாது!

 சின்மயி அல்லது மீ.டூ இயக்கம் என்பது அவரவரின் சொந்த “விளம்பரப் பதிவன்று”.

 இது சின்மயிக்கான முட்டல்ல மக்களே! மீ டூ என்னும் சமூக ஊடக பகிர்வாக தொடங்கிய ஒன்று இன்றைக்கு பாலியல் சுரண்டல் மற்றும் ஆணாதிக்கம் குறித்த புரிதலை ஏற்படுத்துவதற்கான ஒரு இயக்கமாக மாறியுள்ளது. காலம் காலமாக ஒடுக்கப்பட்டு வந்த பெண்கள் தங்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகள் குறித்து வெளிப்படையாக பேசத் தொடங்கியுள்ளனர். பாலியல் வன்முறைக்கு எதிராக பெண்களை ஒருங்கிணைக்க இது உதவியுள்ளது. அதுதான் பத்மா சேஷாத்ரி ஆசியரின் அத்துமீறலையும் வெளிக்கொண்டு வர உதவியுள்ளது. (தமிழ்நாட்டில் சின்மயியின் முன்னெடுப்பு இதில் பிரதான பங்கு வகிக்கிறது.)

 பொது வெளியில் பேசி என்ன சாதிக்க விரும்புகிறீர்கள் என்றால் – இந்த மீடு இயக்கமானது இனியும் முன்பை போல் ஆண்கள் பெண்களை துன்புறுத்த இயலாது என்னும் எச்சரிக்கை மணி அடித்துள்ளது. இதன் மூலம் அனுகூலம் அடையப்போவது பெண் இனம். அதில் சின்மயியை விபச்சாரி என்று பேசிக் கொண்டிருப்பவர்களின் வீட்டுப் பெண்களும் அடக்கம்.

பாலியல் சுரண்டல் என்பது வேறு வல்லுறவு என்பது வேறு. ஆசை காட்டி, காதல் வலை வீசி, “முற்போக்குப் பெண்ணியம், பாலியல் சுதந்திரம்” என்றெல்லாம் பேசி… அல்லது பதவியை பயன்படுத்தி பணிய வைத்து “இசைவுடன்” “அனுபவிப்பது” பாலியல் சுரண்டல்.அதுவும் ஒருவகையில் துன்புறுத்தலே. இதை குறித்து விரிவாக படித்தறியவும். தயவு செஞ்சு “அன்னைக்கு படுத்தாளே” என்று தொடங்காதீர்கள்! ஆம்பிளை ஏன் படுக்க சொல்றான்னு யோசிங்க.. அதிகாரத்தில் உள்ளோரை நோக்கி கேள்வி கேளுங்கள்!

 

May 28, 2021

என் வாழ்வில் நான் திருப்ப விரும்பாத சில பக்கங்கள்.. தற்போது!

 என் குழந்தை பருவத்திலிருந்து நான் கடைசியாக இந்த வேலையே வேணாம் “மானத்தோட” பொழைச்சா போதும் என்று முடிவெடுத்து என் வேலையை ராஜினாமா செய்த 42,43 வயது வரை நான் ஏதோ ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிக் கொண்டே தான் இருந்தேன். (வேலையிடத்தில் நீ கொற்றவையா என்றா பார்க்கப் போகிறார்கள்? அங்கு நான் வெறும் கூலிக்கு என் உழைப்புச் சக்தியை விற்க வந்த ஒரு பண்டம்… அவ்வளவே).

 எனக்கு 10,11 வயது இருக்கும் போது என் நெருங்கிய உறவினர் ஒருவரால் நான் மிகவும் மோசமான பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானேன். அந்த உறவினரை நான் திருமணத்திற்கு அழைக்க வேண்டிய கட்டாயத்தில் தான் இருந்தேன். காரணம் “உறவுகளை” விட்டுக்கொடுக்க இயலாது என்னும் “குடும்ப விதி”.

 அம்மா அப்பா கடுமையான உழைப்பாளிகள். படிப்பு சொல்லிக் கொடுக்க நேரமில்லை. 13 வயது வரை நான் அவர்கள் வீட்டிலிருந்து படிக்க வேண்டிய நிலை! ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் போக இயலாது என்று சொல்லி நின்று விட்டேன் . அந்தாளுக்கு வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு காரணத்தினால் வன்மம் பெருகியது . ஒரு கட்டத்தில் என்னை “தேவடியா” என்று திட்டி ஃபோனை வைத்தான்.

என் திருமணத்திற்கு வந்த அந்த ஆளை நான் மதிக்கவில்லை என்பதால் என் திருமணத்தின் போது அவரின் மனைவி பெரிய தகராறு செய்தார். 24 வயது அப்போது. உண்மையான காரணத்தை அப்போதும் என்னால் சொல்ல இயலவில்லை. அதற்கு பதிலாக அவர் என்னை வசைபாடினார்.. தப்பாக பேசினார் என்று சொல்லி சமாளித்தேன்.

 எனக்கு மகள் பிறந்த பின் ஒரு நாள் அந்த ஆளின் தங்கை எனை காண வந்தார். ஏன் என் அண்ணனை நீ மரியாதை இல்லாம நடத்துற என்றார் “உன் அண்ணன் என்னை xxxx” பண்ணப் பார்த்தான் என்றேன். அதிர்ந்து போனவர் அந்தாளின் மனைவியிடம் அதை சொல்லிவிட… அவர் எனக்கு ஃபோன் செய்து ஏன் அப்படி சொன்ன என்றாரே தவிர “உன்னை அந்தாளு அப்படி துனுபுறுத்தினாரா” என்று வருத்தப்படவில்லை.

 அதையும் விட அவலம் என்னவெனில், “அவரு நான்னு நினைச்சு உன் பக்கத்துல வந்து படுத்திருக்கலாம்ல” என்றார் அந்த பெண்! மீண்டும் சொல்கிறேன் – ‘விட்டுக்கொடுக்க இயலாத உறவுமுறை’… அந்த பதில் என்னை உலுக்கிப் போட்டது. தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு வயது கூட ஆகாத என் குழந்தையை நினைத்து நான் பயந்து போனேன்… இந்த உலகில் இந்த குழந்தை எப்படி வாழப் போகிறதென்று.

 என்னை பாலியல் ரீதியாக சிறுமியாக இருந்த போதே துன்புறுத்தியவரை நான் என் திருமணத்திற்கு அழைத்தேன். அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினேன். அந்த பெண்ணின் தகராரால் நான் அவரை “வாங்க” என்று அழைத்தேன்… அதன் பின்னர் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நான் அவர்களிடம் உறவு பாராட்ட வேண்டிய நிலையில் தான் இருந்தேன். ஒரு காலகட்டம் வரை… எந்த உறவும் வேண்டாம் என்று நான் முடிவெடுத்து ஒதுங்கும் வரை…

 அன்று எனக்கு பென்ணியம் மார்க்சியம் ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது அன்றும் என்னால் அவரை பற்றி வெளியே பேச முடியவில்லை. இதோ இன்று கொற்றவையாகி, பெண் விடுதலை, சமூக விடுதலை என்று கொக்கறித்துக் கொண்டிருக்கும் போதும் அந்த ஆளைப் பற்றி என்னால் எதுவும் சொல்ல இயலவில்லை. ஒருமுறை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக இந்த கதையை நான் சொன்னேன். யார் அந்த உறவினர் என்னும் விவரங்களோடு. பின்னர் ஐயோ அந்த குடும்பம் பாதிக்கப்படுமே, அவரது பிள்ளைகள் இதை தாங்குவார்களா என்று யோசித்து எனது பேட்டியை நீங்கள் ஒளிபரப்பக் கூடாது என்று மெயில் போட்டேன். இன்று அந்தாள் பேரன் பேத்தியும் எடுத்துவிட்டார்.

 இதுதான் பெண்களின் நிலை! இதுபோல் எண்ணற்ற ‘கதைகள்’ உள்ளன. பாலியல் துன்புறுத்துலுக்கு உள்ளானதை சம்பந்தப்பட்ட “இணையிடம்” சொன்னால் அவர்கள் எப்படி என்னையே குற்றவாளி ஆக்கி அவமானப்டுபடுத்தினார்கள் என்று இன்னும் நிறைய கதைகள் உள்ளன. வேறொரு சந்தர்ப்பத்தில் பேசுகிறேன்.

 ஆனால் இந்த அனுபவங்கள் எல்லாம் சேர்ந்துதான் பெண்ணின் நிலை குறித்து என்னை ஆய்வு செய்ய தூண்டியது. வசுமித்ர மார்க்சியம் என்னும் ஒளிவிளக்கை என் கையில் கொடுத்தான். அது எனக்கு மன விடுதலையை வழங்கியது. ஆனால் என் விடுதலை என்பது சமூக விடுதலையோடு தொடர்புடையது என்னும் புரிதலையும் வழங்கியது. அதனால் தான் இந்த ஊடகத்தில் பலவித பொய்யான, வக்கிரமான Verbal Abuses களுக்கு மத்தியில் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறேன். மேலும் உக்கிரமாக!

 உறவினரை அழைப்பதும், வைரமுத்துவை அழைப்பதும் ஒன்றா என்று இதைக் கொண்டு “ஆம்பிளைத்தனமான” (ஆண், பெண் இருவரும்) அறிவுஜீவிகள் கேட்பார்கள். அதற்கான நிர்பந்தமோ சூழ்நிலையோ என்னவென்று நமக்கு தெரியாது. அல்லது அன்றைக்கு அவருக்கு அந்த மனிதரின் அங்கீகாரம் தேவையாக கூட இருந்திருக்கலாம்…அல்லது அவரை அழைக்காமல் போனால் யார் யாருக்கு பதில் சொல்ல வேண்டியிருக்குமோ… திருமணத்தின் போது பிரச்சினைகள் வேண்டாம் என்று எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம் .. ஆனால் பெண்கள் வாய் திறந்து பேசும்போது “வாட் அபௌட்டரியை” கையாள்வது மிக மிக கேவலமான விசயம்.

 பெண்கள் தாங்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுகிறோம் என்பதை உணரவே வெகு காலமாகிவிடும். அதை உணர்ந்த பின் அதை வெளியில் சொல்ல பல விசயங்களை யோசிக்க வேண்டும்.. எல்லாவற்றுக்கும் மேலாக இங்கே பல நீதிமான்கள் பல விதமான “சி.ஐ.டி.த்தனமான” கேள்விகள் கேட்கிறார்கள். அதில் அதில் தெரிவதெல்லாம் ஆணாதிக்க மனம், அதற்கு தமிழர், ஆரியம், திராவிடம் என்று சாயம் பூசிக்கொள்கிறார்கள்.

 வழக்கு போடுங்கள் வழக்கு போடுங்கள் என்கிறார்களே.. பாலியல் துன்புறுத்தல் பற்றிய வழக்கில் எப்படிப்பட்ட கேள்விகள் கேட்கப்படும், எப்படிப்பட்ட நியாயங்கள் நமக்கு கிடைத்துள்ளது என்பது தெரியாதா? பிங் மாதிரியான படங்களைப் பார்த்து கைத் தட்டும் நபர்கள் நிஜ வாழ்வில் ஒரு பெண் பாலியல் குற்றம் சாட்டினால் எப்படி பேசுகிறார்கள். இதுதான் இச்சமூகத்தின் HYPOCRICY.

 ஆண்கள் வேட்டையாடிக் கொண்டே இருப்பார்கள்... பெண்கள் தங்கள் நியாயத்திற்காக போராடிக் கொண்டே இருக்க வேண்டும் அல்லது தப்பித்து ஓடிக் கொண்டே இருக்க வேண்டுமா? என்ன நியாயமிது?

ஒரு பாலியல் துன்புறுத்துலுக்கோ அல்லது ஏதோ ஒரு வன்கொடுமைக்கு உள்ளான ஒருவருக்கு முதலில் தேவைப்படுவது EMPATHY. பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்டவர் பெரும்பாலும் பெண்ணாக இருக்கிறார் ஏனென்றால் இது ஆணாதிக்க சமூகம் என்னும் போது ஆண்களுக்கே இங்கே அதிகாரம் உள்ளது. ஆணாதிக்க மூளை சலவைக்கு உள்ளான பெண்களும் சேர்ந்து பெண்களை குற்றவாளிகளாக்கிக் கொண்டிருக்கும் சூழலில் பெண்கள் தங்களுக்கு நேரும் அவலங்களை வெளியில் சொல்ல முடிவதில்லை என்பதே யதார்த்தம். இதை சற்று மனதில் வைத்துக் கொண்டு எந்த ஒரு பாலியல் குற்றச்சாட்டையும் அனுக வேண்டும். இல்லையேல் உங்களிடம் வெளிப்படுவது “நியாயவாதம்” அல்ல “அறியாமை” அல்லது “ஆணாதிக்க வக்கிரம்”.

 அவளே ஒரு விபச்சாரி… அவ சொல்றதெல்லாம் கேட்டுக்கிட்டு” என்று பேசுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். பாலியல் தொழிலாளிக்கும் பாதுகாப்பாக, கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் என்னும் உரிமைகள் உண்டு. அதோடு விபச்சாரம் ஏன் நிலவுகிறது என்பதே இதில் கேள்வியாக இருக்க வேண்டும்! அதை வைத்தாவது ஆண்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாலியல் சலுகை மற்றும் அதிகாரம் குறித்து சிந்திக்க பழகுங்கள்…

இதோ இந்த பதிவை எழுதிவிட்டு… என்னுடைய இந்த பதிவு என் மகளின் வாழ்வை பாதிக்குமோ என்று நானும் உள்ளே அச்சப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறேன்…. இன்னுமா உங்களுக்கெல்லாம் புரியவில்லை!

 

May 27, 2021

“யார் உண்மையான பிராமணர்” என்றொரு விவாதம்

யார் உண்மையான பிராமணர்” என்றொரு விவாதம் நடக்கிறது!

உண்மையில் இப்படிப்பட்ட விவாதங்களே தவறானவை! அவசியமில்லாதவை! புண்ணை நோண்டி முகர்ந்து பார்ப்பது போன்றது அது! (மன்னிக்கவும்).

 மேன்மைத் தன்மை”, அல்லது “புனிதத் தன்மை” அல்லது ”உயரிய” குணம் என்ற ஒன்றை அடிப்படையாகக் கொள்ளும் பார்வைதான் பார்ப்பனிய படிநிலை உருவாக்கத்தின் அடிப்படை..

 உங்களில் யார் வேண்டுமானாலும் பிராமணர் ஆகலாம்? யார் உங்களை தடுத்தது? நீங்கள் அதற்குரிய தகுதிகளை வளர்த்துக்கொள்ளுங்கள்… ” என்பது விவேகானந்தர் வாதம் (இந்தியா காலத்தை எதிர்நோக்கி, யேன் மிர்தால்) .. நமக்கு அது தேவையா?

அந்த காலத்தில் “குணங்களுக்கு” ஏற்ப ஒரு “இடம்” வழங்கப்பட்டது… உங்களை நீங்கள் உயர்த்திக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது, சூத்திரனும் பிராமணன் ஆகலாம்! இதெல்லாம் என்ன மாதிரியான பேச்சு?

 இந்த” குணம் உயர்ந்தது என்று வகுக்கும் அதிகாரத்தை யார் கொடுக்கிறார்கள்? யார் எடுக்கிறார்கள்?

 மார்க்சியம் கற்றோரால் எளிதில் சொல்லிவிட முடியும் “ஆளும் வர்க்கத்திற்கு சார்பான குணங்கள் உயர்ந்தவை, தொல்லை கொடுக்கும் குணங்கள் தாழ்வானவை” என்று! ஆனால் இதை ஏற்றுக்கொள்ளத்தான் இங்கு ஆட்கள் குறைவு!

 குணம்” என்பது மருவி பின்புபிறப்பு” என்று ஆனது. ஆனால் ஆழ்ந்து ஆய்வு செய்தால் “தொழிலின்” (அதாவது உழைப்பு, வேலை) அடிப்படையில் தான் உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்டு அது கோட்பாடானது! இதையும் மார்க்சியமே உணர்த்தும்!

இதையெல்லாம் விட்டுவிட்டு “யார் உண்மையான பிராமணர்கள்?” என்று தொடங்கி “அப்படிப்பார்த்தால் இன்னார் தான் (அதாவது பிறப்பால் பிராமணரல்லாதவர்) உண்மையான பிராமணர்?” என்று சொல்வதன் மூலம் அவர்கள் பிராமணிய தத்துவத்தை ஏற்றுக்கொள்கிறார்கள் என்றல்லவா பொருளாகிறது.

இதற்கு பெயர் பகுத்தறிவல்ல! வருத்தமாக உள்ளது!

 மனிதனாக பிறந்த எவரும் சுயமரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். உயர்வு தாழ்வு கற்பித்தல் கூடாது. அனைத்து உயிர்களும் சமமாக வாழ இடம் வேண்டும். உயர்ந்தவரோ, தாழ்ந்தவரோ இல்லை என்னும் இடத்தில் ஒருவரை (யாராக இருந்தாலும்)உயர்ந்த குணம்” கொண்டவர் என்று பகுத்து அவரை போற்றுவதற்கான தேவை என்ன உள்ளது?

 நற்குணங்களை கொண்டவர்களை மதிப்போம், பாராட்டுவோம், பின்பற்றுவோம் பிரச்சினையில்லை! அதற்கு ஒரு “நற்சான்றிதழ்” எதற்கு.. அதுவும் ஒரு சமஸ்கிருத (ஆரிய… ப்ளா ப்ளா) அங்கீகாரம் எதற்கு?

 அதேபோல் தீய குணங்கள் கொண்டோர்.. அதாவது “மதங்கள் சொல்லும் நற்குணங்கள்” அல்ல மற்றவரை துன்புறுத்தும் வகையிலான குணங்களைக் கொண்டோரை தண்டிக்கவும், நல்வழிப்படுத்தவும் தேவை இருக்கிறது. அதற்காக ஒரு சுரண்டலான படிநிலை அமைப்பில் கற்பிக்கப்பட்டிருக்கும் உயர்வு தாழ்வு குறித்து எது உண்மையில் உயர்ந்தது என்று வாதிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?

 தீயவர் உருவாக காரணமாக இருக்கும் நிலைமைகள் என்ன என்பதை குறித்து ஆய்வு செய்யலாம்.. அதை மாற்ற என்ன செய்ய வேண்டும் என்று விவாதிக்கலாம்! ஆனால் இதற்கும் சரியான ஒரு சமூக விஞ்ஞான வழிகாட்டி தேவையல்லவா? பகுத்தறிவு என்கிற பெயரில், பிராமண எதிர்ப்பை மட்டுமே மனதில் கொண்டு ஒரு குரூப் இயங்கிக் கொண்டிருக்கிறது!

 அவர்களில் பலருக்கு - உழைப்புச் சுரண்டல் பற்றி கவலையே இல்லை! தங்கள் சாதியினர் முதலாளியாகவோ, ஆட்சியாளராகவோ ஆகிவிட்டால் போதும்… தங்கள் சாதி மக்கள் சுரண்டப்பட்டால்… பரவாயில்லை… உழைச்சு முன்னேறு என்று சொல்லிக் கொள்ளலாம்!

பிராமண எதிர்ப்பு மிக மிக அவசியம் அதில் எனக்கு மாற்று கருத்தே இல்லை! ஆனால் பிராமணியம் என்றால் என்னவென்பதை சமூக-அரசியல்-பொருளாதார அறிவோடு ஆய்ந்தறிந்து பேச வேண்டும்.. அதை விடுத்து ஒரு வெறுப்பு அரசியல் மனநிலையிலிருந்து கொதித்தெழுவதும், “நீ மட்டும் தான் பெரியாளா, நானும் தான்” என்பதும், “உன்னை விட நான் பெரியாளு… ஏன்னா நான் தான் ஆதி….” என்பதும் “நீ பெரியாளே இல்ல… அந்த இலக்கணப்படி அவர் தான் பெரியாளு” என்பதும்… எந்த வகையிலும் நாம் ஒழிக்க நினைக்கும் பார்ப்பனியத்தை அசைக்கக் கூட உதவாது!

 தயவு செய்து பகுத்தறிவுக்கு அப்பால் உங்கள் சமூக அக்கறையை வளர்த்துக்கொள்ளுங்கள்! அதாவது கடவுள் மறுப்பு, மத மறுப்பு, பிறப்பின் அடிப்படையிலான பார்ப்பன எதிர்ப்பு, தேர்ந்தெடுத்த விஞ்ஞானவாதம் என்பதைக் கடந்த சமூக-அரசியல்-பொருளாதார பகுத்தறிவு தேவை! உலகத்தில் உள்ள செல்வங்களை எல்லாம் படைத்தும் உயிர் வாழக் கூட உணவின்றி செத்து மடியும் உழைக்கும் வர்கத்தின் நிலையிலிருந்து அனைத்தையும் பார்ப்பதும், ஆராய்வதும் தேவை. அதற்கு மார்க்சியத்தைக் கற்பது உதவும்! முயன்று பாருங்கள்!

  

May 25, 2021

Sreekarm Movie Review

 அம்மா நிறைய தெலுங்கு படங்கள் பார்ப்பார்… அறையை கடக்கும் போது நானும் சில காட்சிகளைக் காண்பேன். அப்படி இன்று ஒரு படம் பார்த்துக் கொண்டிருந்தார். ஏதோ ஒன்று எனை ஈர்க்க நானும் பார்க்க அமர்ந்தேன்.

விவசாயத்தை மையப்படுத்தி எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் இந்தப் படம் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக தோன்றியது.

 மண்ணைக் காக்கிறேன், கார்ப்ரேட்டுகளை ஒழிக்கிறேன், தாய் நாடு காக்கிறேன்.. ஜெய்ஹிந்த்.. அந்நியனை விரட்டுகிறேன் என்னும் போலியான புரட்சிகர கொந்தளிப்புகளின்றி இப்படம் இருந்ததே அதற்கு காரணம்.

 நான் பார்த்தவரையில்! உற்பத்தி முறை மற்றும் பகிர்தலை மாற்றினால் மக்களின் வாழ்க்கை எவ்வாறு மேம்படும் என்பதை மிகவுன் நேர்த்தியான திரைக்கதையோடு தந்தை மகன் பாசப் போராட்டத்தோடும் பிணைத்து மன நெகிழ்ச்சி தரும் ஒரு படைப்பை கொடுத்திருக்கிறார் இயக்குனர் கிஷோர்.

 பேசுபொருள் பற்றிய கூருணர்வு அவரின் படைப்பில் வெளிப்படுகிறது… அவருடன் இணைந்து வசனம் எழுதியிருப்பவர் சாய் மாதவ் புர்ரா என்பவர். நல்ல கூட்டணி!

 என்ன படம் என்று கேட்கிறீர்களா – ஸ்ரீகாரம். (SUNNXT) தொடக்கம், அனுகூலம், ஆரம்பம் ஆகிய பொருள்படும் சொல்.. உண்மையிலேயே நல்ல தொடக்கம். நம்பிக்கை தரும் படைப்பு. எனக்கு பிடித்திருக்கிறது 😉

 

கதைச் சுருக்கம்

 மருத்துவர், எஞ்ஜினியர், தொழிலதிபர், நடிகர் என்று வாரிசுகள் அப்பன் பாட்டனின் தொழிலில் ஈடுபடுகையில் நான் ஏன் என் அப்பாவின் தொழிலான விவசாயத்தில் ஈடுபடக் கூடாது என்று படித்த, அமெரிக்கா செல்ல வாய்ப்பு கிடைத்திருக்கும் ஓர் இளைஞன் கேட்கிறான். செயலில் இறங்குகிறான்.

விவசாயத்தால் கடன் பட்டு, வாழ்க்கை நலிந்து மக்கள் எல்லாம் கிராமத்தை விட்டே சென்று விட்ட நிலையில், அவனது முடிவு தந்தைக்கு பெரும் கோவத்தை ஏற்படுத்துகிறது. மகன் ஒரு முடிவோடு இருக்கிறான். ஊரைக் கூட்டி தன் யோசனையை கூறுகிறான். நலிந்து போய் கூலி வேலைக்கு சென்று பிழைத்துக் கொண்டிருக்கும் மக்களால் அதை எளிதில் ஏற்க முடியவில்லை. ஊராரின் நிலங்களை அடமானமாக வாங்கி வைத்துக் கொண்டு “ஏகாம்பரபுரம்” கட்ட 25 வருடங்களாக நிலங்களை அபகரித்து வரும் “வில்லனுக்கு” அது பெரும் அதிர்ச்சியை கொடுக்க அவன் அந்த முயற்சியை மறைமுகமாக கெடுக்கிறான். (ஆதி மூலதனத் திரட்டலாக நாம் இதை காணலாம்).

 நீங்க வாங்கும் கூலியை நான் தருகிறேன்… இலாப நட்டம் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நட்டம் வந்தால் நானே ஏற்கிறேன்” என்று கெஞ்சியும் பார்க்கிறான். வில்லனின் பேச்சால் மக்கள் குழம்பி செல்கின்றனர்.

 ஒரு கட்டத்தில் ஹீரோவின் மாமா ஒரு சிலரோடு வந்து முயன்று பார்க்கலாம் என்கிறார். ஆனால் முடியுமா என்று கேட்கையில் கதாநாயகன் சொல்வது ஊற்பத்தி முறை மாற்றம்! “கூட்டு விவசாயப் பண்ணை” – கூட்டு உழைப்பு.. பருவத்திற்கேற்ற, மண்ணுக்கேற்ற பயிரிடுதல்.. சுழற்சிமுறை விவசாயம் என்று பல விசயங்களை கூறி கூட்டாக உழைப்போம் என்கிறான்.

ஒருவர் எல்லாருக்காக, எல்லாரும் ஒருவருக்காக என்னும் பொதுவுடைமை தத்துவம் இழையோடியது!

 எல்லாரும் கடுமையாக உழைத்து பயிரிட்டு விளைச்சல் கண்டு மன நிறைவு கொள்ளும் போது கதாநாயகன் ஒரு கவரில் கொஞ்சம் பணத்தை கொண்டு வந்து கொடுக்க. “அதான் எங்களுக்கு சம்பளம் கொடுத்துட்டியேபா” என்க. “அது அவசிய உழைப்பிற்கான கூலி, இது நம் கூட்டு உழைப்பிற்கு கிடைத்த இலாபம். இதை அனைவரும் பகிர்வதே சரி” என்கிறான்.

 பொதுவுடைமை அடிப்படையிலான கூட்டு உற்பத்தி… கூட்டுப் பகிர்தல்… இழையோடுகிறது! ஆனால் இது எதுவும் ஆர்பாட்டமின்றி!

அந்த பணத்தை வைத்து என்ன செய்யலாம் என்பதை அனைவரும் ஒன்று கூடி முடிவெடுக்கும்படியும் கூற, அது அவசியாக இருக்கும் ஒருவரின் நிலத்தை மீட்கப் பயன்படுத்தப்படுகிறது!

 இவ்வாறாக கூட்டு வாழ்க்கை முறை, ஒருவர் வீழ்கையில் மற்ற அனைவரும் சேர்ந்து கைகொடுத்தல் ஆகிய அவசியமான “பண்பாடு” மிகவும் யதார்த்தமாக சொல்லப்படுகிறது.

இவர்களின் இந்த ஒற்றுமை வில்லனை அச்சுறுத்த அவன் பிரித்தாளும் தந்திரத்தை கையாள, பின் என்ன நடக்கிறது என்பதை திரையில் காணவும்.

 அதீத கதாநாயகத்தன்மையோ, சினிமாத்தனமோ இல்லாத படம். இதில் ஒரு முக்கியமான விசயம் கொரோனா தொற்று, WHO, MODI முதலில் கொண்டுவந்த லாக்டவுண் எல்லாம் வருகிறது. ஒரு பெருந்தொற்று அல்லது பேரிடர் காலங்களில் ஒற்றுமையான உற்பத்தி முறையின் அவசியத்தை நயமாக சொல்லி நகர்கிறது ஸ்ரீகாரம்.

 வில்லன் அல்லது எதிரி சற்று குறைத்து மதிப்பிடப்படுதல், கதாநாயகி ஒரு சராசரி பெண்ணாக உலாவருதல் (ஏனென்றால் அவள் பணக்கார வீட்டுப் பெண்) போன்ற சில குறைகள் இருந்தாலும் எது மாதிரியான மாற்றம் தேவை என்பதை சுட்டி நம்பிக்கை தரும் வகையில் நிறைவு பெருகிறது ஸ்ரீகாரம்.

விவசாயம் அல்லது எந்த ஒரு தொழில் பற்றிய உணர்வும் வெறும் நாட்டுப்பற்று, உள்நாட்டு உற்பத்தி, வளர்ச்சி (என்னும் பெயரில் ஒரு சில செல்வந்தர்கள் கொள்ளை இலாபம் ஈட்டுதல்) பற்றியது மட்டுமன்று.. தற்சார்பு பொருளாதாரத்தை நிறுவ வேண்டும். அதற்கு உற்பத்தி முறை மாற வேண்டும். உற்பத்தி உறவுகளும் (உழைப்புசார் உறவுகள்), விநியோகமும் மாற வேண்டும்.

வீழ்ந்து போன மரத்தை அனைவரும் ஒன்று கூடி இழக்கும் போஸ்டர்… உணர்த்தும்!

 

பி.கு!

 பூமி என்றொரு படத்தை எடுத்து கொடுமைபடுத்திய இயக்குனர் இப்படத்தை பார்க்குமாறு சிறப்பு பரிந்துரை செய்யப்படுகிறது 😉

 

#Sreekaram #sreekarammoviereview I Loved it. A very sensible movie that discusses about the good beginning and probability of a happy life through the change of mode of production, labour relations and distribution. Unity is strength! A new beginning & a new hope.