Feb 29, 2012

மாசெஸ் அமைப்பு துவக்க விழா மற்றும் ஓவியப் பட்டறை

10.3.2012, ICSA HALL, 5pm – MASES formal launch and campaign against EMAMI Fair & Handsome Cream For Men advertisement. Com. Sivakami, Prof. A. Marx, Prof. Padmini, Ko. Sugumaran are the speakers. Few more Writers / activists would participate.


On this occassion a Painting Workshop is organized. Eminent Artists would be participating. Interested People could come attend the workshop and interact with Artists & contribute works for exhibition. The exhibition will be open at 7p.m. (Artist Viswam has given his consent as of now… few more eminent artists would participate)..


10.03.2012, இக்சா மையம் மாலை 5 மணி – மாசெஸ் அமைப்பின் துவக்கம் மற்றும் இமாமி விளம்பரத்திற்கெதிரான பிரச்சாரத்தையொட்டி ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தோழர்கள் சிவகாமி, அ. மார்க்ஸ், முனைவர் பத்மினி, கோ. சுகுமாரன் ஆகியோர் உரையாற்றுகின்றனர். மேலும் சில எழுத்தாளர்கள், ஆர்வலர்கள் கலந்து கொள்கிறார்கள்.


இது தவிர… பிரபல ஓவியர்கள் கலந்து கொள்ளும் ஓவியப் பட்டறை நடக்கவிருக்கிறது. அது மாலை 3 மணி அளவில் துவங்கும். ஆர்வமுள்ளவர்கள் ஓவியர்களை சந்தித்து உரையாடலாம், நிகழ்வுக்கான ஓவியங்களை அங்கு வரைந்து பங்களிக்கலாம்.


7 மணி அளவில் ஓவியக் கண்காட்சி நடைபெறும். (இப்போதைக்கு ஓவியர் விஸ்வம் அவர்கள் ஒப்புதல் வழங்கியிருக்கிறார். மேலும் சில ஓவியர்கள் அணுகப்பட்டு வருகிறார்கள்)….


நிகழ்வுக்கு மேற்சொன்னவர்கள் வழங்கியுள்ள ஆதரவும்… வழிகாட்டுதலும் குறிப்பிடத்தக்கவை…அவர்களுக்கு என் நன்றிகள்.

Feb 28, 2012

கூடங்குளம் போராட்டம் - தொடரும் ஒடுக்குமுறை




கூடங்குளம் போராட்டக்காரர்களின் ஐயங்களுக்கு அறிவியல் பூர்வ விளக்கங்களை அளிக்க முடியாத மத்திய அரசு, தன் அவதூறுகளுக்கு ஆதரவு திரட்டும் பணியில் உளவியல் ரீதியான ஒடுக்குமுறையை ஏவுகிறது. ஒரு ஜெர்மானியர் சுப.உதயகுமாரனோடும், போராட்டக்குழுவினரோடும் தொடர்பில் இருந்தார் என்று குற்றம் சாட்டி நாடு கடத்தப்பட்டிருக்கிறார். அது தொடர்பாக வெளிவந்துள்ள செய்திகளில் ஆதாரப்பூர்வ தகவல்கள் எதுவுமில்லை. ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர், விஞ்ஞானி எனும் அடிப்படையில் லால் என்பவருடன் அவர் உரையாடியிருக்கிறார் என்பதாக குழுவினரின் தகவல்கள் சொல்கிறது. இது ஒரு புறம் இருக்கட்டும்.

பன்னாட்டு நிறுவங்கள் சந்தை ஊடுறுவலுக்கான கள ஆய்வை மேற்கொள்ள, மக்களின் நன்மதிப்பைப் பெற, வரி ஏய்ப்பு செய்யவென பல காரணங்களுக்காக தொண்டு நிறுவனங்களை நிறுவியுள்ளன. தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் பல இன்று பெருமுதலாளித்துவ நிறுவனங்களாக செயல்படுகின்றன. அவை தங்களுக்கென வசூல் இலக்கை வைத்து, அதற்கென பணியாளர்களை வைத்து செயல்படுவதை நான் கண்டுள்ளேன். அத்தகைய நிறுவனப் பணியாளர்கள் ஒருவித அதிகாரப் போக்கோடு சேவைஎனும் துருப்புச் சீட்டை முன்வைத்து வீடுகளுக்குள் புகுந்து இப்போதே செக்கைகொடுங்கள் என்று அன்பு மிரட்டல்களைவைத்தனர். எத்தனையோ தொண்டு நிறுவனஙகள் கோடிக் கணக்கில் பணம் சேர்த்து வைத்துள்ளன. இங்கு செயல்படக்கூடிய பண்பாட்டு காவல் மையங்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களின் பணம் நிதியுதவியாகப் பெறப்படுகிறது. நமது பண்பாட்டைக் காக்கும் அக்கறை அவர்களுக்கு ஏன் வருகிறது. Corporate Social Responsibility என்பதே ஒரு ஏய்ப்பு தான்.

அவையெல்லாம் நல்லகாரியங்களுக்கு பயன்படுத்தப்படவேண்டும், அரசை எதிர்க்கும் போராட்டங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்வீர்களானால் வெளிநாட்டில் நிதியுதவி பெரும், இந்தியாவில் வாழும் வெளிநாட்டவரிடமும் நிதியுதவி பெரும் அணைத்து தொண்டு நிறுவனங்களையும், பண்பாட்டு மையங்களையும், ஆய்வு நிறுவனங்களையும் தடை செய்ய வேண்டும். 

இந்திய நாடு பிச்சைக்காரர்களை உருவாக்கும்.... இந்தியர்கள் பெண்களை, குழந்தைகளை வன்புணர்சி செய்து கொடுமைகளுக்கு ஆளாக்குவர், இந்தியக் குடும்ப வாரிசுகள் தங்கள் பெற்றோர்களைத் தெருவில் கைவிடுவர், இந்தியக் கணவன்மார்கள் தங்கள் மனைவிகளைக் கைவிட்டுச் செல்வர்.... இந்திய அரசுகள் கல்வியை தனியார் மையமாக்கும். இந்திய அரசுகள் மருத்துவப் பராமரிப்பை உரிய வசதிகளோடு, போதிய அளவில் வழங்காது, பெண்களுக்கு, சிறுபான்மையினருக்கு அநீதியிழைக்கும்.... இவற்றையெல்லாம் களைய வெள்ளைக்காரன் வருவான்....அவனது நிறுவனங்களின் பணம் பெறப்படும்.... இந்திய அரசுகள் செய்ய மறுக்கும் பணியை வெளிநாட்டவர் செய்யலாம்...ஏனென்றால் அவர்கள் மறைமுகமாக இந்திய அரசின் பொறுப்பின்மைக்குஉதவி செய்கிறார்கள்.....


ஆனால் இந்திய அரசின் அந்நிய நாட்டு உறவின்விளைவாக மேற்கொள்ளப்படும் உயிர் கொல்லிதிட்டங்களுக்கெதிராக போராடும் மக்கள் அமைப்புகள் வெளிநாட்டவர்ர் எவரிடமும் பணம் பெறக்கூடாது....அவர் தன்னார்வலராக இருந்தாலும் கூட.....கட்டவிழ்த்துவிட்ட அவதூறுக்கு வலு சேர்க்கும் விதமாக இன்னும் எத்தனை உளவியல் தாக்குதல்கள் நடக்கப்போகிறது?

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைத்து நீர் வளங்கள் உள்ளிட்ட அணைத்து வளங்களையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், பெரு முதலாளிகளுக்கும் தாரை வார்த்துக் கொடுக்கும் அரசுகளின் ஒப்பந்தங்களின்பின்னால் இருப்பது எவரின் பணம்?

தமிழக அரசு இப்பிரச்சனையில் ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். தமிழக அரசு அமைத்த வல்லுனர் குழு போராட்டக் குழு அமைத்த வல்லுனர் குழுவோடு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. மக்களையும் சந்திக்கவில்லை. இந்நிலையில் அவர்கள் அளித்திருக்கும் அறிக்கையை தமிழ அரசு ஏற்கக்கூடாது. இன்று சுப. உதயகுமாரன் உள்ளிட்ட குழுவினரை முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சந்திப்பது போராட்டத்தின் ஒரு முக்கியக் கட்டமாக உள்ளது. அத்தரப்பினரின் கோரிக்கைகள் இதுவரை மத்திய அரசு காது கொடுத்துக் கேட்கவேயில்லை. தமிழக முதல்வராவது அவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழ்க மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அந்நிய நாட்டு நெருக்கடிகளுகாக அம்மக்கள் கைவிடப்படுவது மிகுந்த வருத்தமளிப்பதாக உள்ளது.   உயிர் கொல்லி திட்டத்திற்கும், ஏகாதிபத்தியத்திற்கும் தமிழர்கள் உயிர் பறிபோகக்கூடிய சூழலை தமிழக அரசு தடுக்க வேண்டும். 


Feb 15, 2012

பெண்மையை இழிவுபடுத்தும் இமாமி முகப்பூச்சு விளம்பரத்தை தடை செய்ய வேண்டும்


மாசெஸ் அமைப்பு இமாமி முகப்பூச்சு விளம்பரத்தில் பெண்கள் இழிவு படுத்தப்படுவதைக் கண்டிக்கிறது.  நடிகர் சூர்யா மற்றும் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ஒளிபரப்பப்படும் விளம்பரம் ஒன்றில் -  ஒரு பயிலாவன் பெண்களுக்கான முகப்பூச்சை பூசுவதை எள்ளல் செய்கிறது. அங்கு அவதாரமாக தோன்றும் சூர்யா / கான் அந்த பயில்வானை நோக்கி "ஐய்யோ இன்று பெண்களுக்கான க்ரீம், பிறகு நெயில் பாலிஷ், பின்னர் லிப்ஸ்டிக்கா" என்று கர்ஜிக்கவும், பயில்வான் தன்னை ஒரு பெண்ணின் உடையோடு கற்பனை செய்து பார்ப்பார். உடனே சூர்யா கையெடுத்துக் கும்பிட்டு "Fair & Handsome cream for men" உபயோகிங்க என்று ஆணையிடுவார். அதை உபயோகித்து வெள்ளையாகிவிடும் "ஆண்மை" நிறைந்த அந்த பயில்வானைச் சுற்றி தாவணி கட்டியப் பெண்கள் "ஹாய் ஹேண்ட்ஸ்ம், ஹாய் ஹேண்டஸ்ம்" என்று ஆடி பாடியபடி அவரை உரசிக்கொண்டு அவரது 'ஆண்மையை' போற்றுவர்.

இந்த விளம்பரத்தில் நாம் கவனிக்க வேண்டியது மீசை.  ஆண்மைக்கு அடையாளமாக சில மயிர்களை உயர்த்திப்பிடிக்கும் ஆணாதிக்கம், அந்த பயில்வானுக்கும், இந்தியில் ஷாருக்கானுக்கும் அதை செயற்கையாக ஒட்டி...அவர்களது ஆண்மையை எடுத்துரைக்கிறது.  சூர்யாவின் மீசை 'சிங்கம்' மீசை.

ஆணுக்கு பெண்ணைக் கவர்வதை விட்டால் வேறு வேலையே இல்லையா. கருமை நிறம் அத்தனை அவமானகரமானதா? பெண்மை என்பதும் ஆணாதிக்க கருத்தாக்கமே, அதை அவர்களே உருவாக்கி, அவர்களே எள்ளலும் செய்கின்றனர்.  பெண்கள் எப்பொழுதும் வெள்ளை நிறத்தோலையும், அழகான, வாளிப்பான ஆண்களைத் தான் விரும்புவர் என்பது பெண்களை இழிவு படுத்தும் ஒரு பிரச்சாரம். ஆண்மை பற்றிய 'கட்டளைகள்' ஆண்களுக்கும் மன அழுத்தம் கொடுப்பவை. பெண்ணால் நிராகரிக்கப்படுவது அவமானகரமானது என்று அவர்களை ஒரு தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளுகிறது அது.

அந்த பிரச்சாரத்தில் பெண்களுக்கான முகப்பூச்சை பயன்படுத்துவது அவமானகரமானது என்பது போல் கர்ஜிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.  அத்தோடு முகப்பூச்சு விளம்பரங்கள் அனைத்தும் நிறவெறி, இனவெறி, பாலினப் பாகுபாடு நிறைந்தவை என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.  அதுமட்டுமல்லாமல் மூன்றாம் பாலினத்தவர் இழிவுபடுத்தப்படுவதற்கும் ஆண்மை, பெண்மைக் கருத்தாக்களே காரணம். இருமைவாதத்திற்குள்ளேயே விளம்பரங்களும், திரைப்படங்களும் தங்கள் கதைகளை உருவாக்குகின்றன. இது முற்றிலும் இயற்கைக்கு விரோதமானது. இருக்கும் தோற்றத்தை நிராகரித்து அழகூட்டிக்கொள்ளச் சொல்லும் அணைத்து பண்டங்களும் இயற்கைக்கு விரோதமானவையே.

ஆணாதிக்க முதலாளித்துவ பண்டங்கள் பெரும்பாலும் பாலினவாதத்தை, பிரிவினைவாதத்தை, இயற்கை நிராகரிப்பை முன் வைக்கும் விளம்பரங்கள் மூலமே சந்தைப்படுத்தப்படுகின்றன. இப்போக்கை இனியும் ஊக்குவிக்கக்கூடாது.

சமத்துவ சமுதாயத்தில், பெண் விடுதலையில் அக்கறையுடையோர் இவ்விளம்பரத்திற்கு எதிராக தொடங்கப்பட்டுள்ள பிரச்சாரத்தில் கையெழுத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.  இவ்விளம்பரத்தை இமாமி நிறுவனம் திரும்பப்பெற வேண்டும்.  இல்லையெனில் நீதிமன்றத்த்தை அணுகவும் மாசெஸ் அமைப்பு தயங்காது.  அந்நிறுவனம் இவ்வெதிர்ப்பை பொருட்படுத்த நிறையே பேரின் கையெழுத்து தேவைப்படுகிறது.  ஆதரவு தெரிவியுங்கள் தோழர்களே.

கையெழுத்திட - https://www.change.org/petitions/ask-emami-group-to-stop-telecasting-gender-discriminating-advertisement-fair-and-handsome-cream-for-men-bailwan-advertisement-should-be-withdrawn

மாசெஸ் அமைப்பில் இணைய தொடர்பு கொள்க - kotravaiwrites@gmail.com

முகப்புத்தக பக்கம்: http://www.facebook.com/pages/MASES-Movement-Against-Sexual-Exploitation-and-Sexism/280244415362023

m.a.s.e.s blog - http://masessaynotosexism.wordpress.com/

Racist Notion, Sexist Discrimination, Humiliation to Women – Fair & Handsome fairness cream for Men




“Fair & Handsome cream for Men advertisement  humiliates a man for using “Feminine Products”.  It projects & propagates that ‘feminine qualities’ are inferior. They disseminate that men who have feminine qualities will not be respected by the society. It shows that women will fall for men who are “Manly” thus degrading the qualities of Women. These ‘Manly’ concepts create stress & wrong ideologies in the minds of Men. The Portrayal of such masculinity contributes to be the important reason for humiliating the queer people. Most of the ‘Women’ products designed & marketed by Capitalists target the Male Gaze present in the society and wants to retain it for their ‘marketing’.
Movment Against Sexual Exploitation and Sexism condemns the Racist Notion, Sexist Discrimination, Humiliation to Women in Fair & Handsome fairness cream for Men Advertisement.   We will be taking up all forms of protest to get this advertisement banned.  One such step is to gain support via e-petition. More signatures will help us approach legal institution and convince them to condemn this Gender bias. As People who value ‘Human Rights’ and ‘Equality’ I request you to kindly sign the petition and also share it with your friends and circles.
Related links - http://wp.me/p29ZgW-41 - m.a.s.e.s blog - http://masessaynotosexism.wordpress.com/2012/02/07/two-advertisements-one-point/
We from M.A.S.E. S demand that Fair & Handsome Cream for Men 'Bailwan' Advertisement to be withdrawn
Greetings,
I just signed the following petition addressed to: Ask Emani Group to stop telecasting gender discriminating advertisement.
To sign the petition pl click
https://www.change.org/petitions/ask-emami-group-to-stop-telecasting-gender-discriminating-advertisement-fair-and-handsome-cream-for-men-bailwan-advertisement-should-be-withdrawn

Feb 12, 2012

காதலின் மீதான அவதூறுகள்:




காதலர் தினத்தை முன் வைத்து சமீப காலங்களில் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, பா.ஜ.க ஆகிய இந்துத்துவ அரசியல் கட்சிகள் நகைப்புக்குறிய ஒரு அரசியலை நடத்தி வருகின்றனர். காதலர் தினம் பண்பாட்டு சீரழிவு என்கிறார் இராம. கோபாலன். பண்பாட்டு சீரழிவை பற்றி இந்த்துவ அமைப்பு பேசுவதுதான் நகைப்புரியது. புரோகித கும்பல் இம்மண்ணில் செய்த பண்பாட்டு ஆக்கிரமிப்பைவிட, சீரழிவைவிட வேறெவரும் பண்பாட்டு சீரழிவை மேற்கொண்டுவிட முடியாது. இம்மண்ணின் பன்மைத் தன்மையை, தாய்வழிச் சமூக மரபை சீர்குலைத்து அரசியல் லாபங்களுக்காக மூட நம்பிக்கைகளை வளர்ப்பவர்கள், மதவாதத்தை முன்னெடுப்பவர்கள் பொது மக்களுக்கு, சமூகத்திற்கு ஒரு விதியை வைத்து விட்டு புழக்கடையில் பல்வேறு சலுகைகளை அனுபவிப்பவர்கள் சமூகம் பற்றியும், பண்பாட்டு சீரழிவு பற்றியும் கவலை கொள்வது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்.

உயிரினங்களின் இயல்பூக்க வெளிப்பாடு காதல், காமம் ஆகிய உணர்ச்சிகள். உற்பத்தி சாதனங்களின் வளர்ச்சி, உற்பத்தி உறவுகளுக்கிடையே ஏற்பட்ட மாற்றங்களின் காரணமாக சமூக பொருளாதார அமைப்பில் மாற்றம் ஏற்படுகிறது. அப்படி ஒவ்வொரு முறை சமூக அமைப்பில் மாற்றம் ஏற்படும்பொழுது பண்பாட்டு மாற்றங்களும் நிகழ்கின்றன.  இந்த பண்பாட்டு மாற்றங்களில் வெகுசில இயல்பானவையாக இருந்தாலும், பெரும்பாலும் அவை பண்பாட்டு அதிகார மையங்களால் தீர்மானிக்கப்படுபவையாக இருக்கின்றன. உழைப்பு, உழைப்புக் கருவி, உற்பத்தி, மிகை மதிப்பு (surplus) ஆகியவற்றை கையகப்படுத்தி, பின்பு அதை தக்கவத்துக்கொள்ளவும், தடையின்றி அனுபவிக்கவும் முயற்சித்து, பல்வேறு செயல்திட்டங்களின் வழியாக அதில் வெற்றியும் பெற்றுவிட்ட ஒரு பிரிவினர் அதிகார வர்க்கமாக தலையெடுத்தனர். அவர்களை இன்றைய பொருளாதார அமைப்பின் படி முதலாளிகள் என்று சொல்கிறோம். ஆனால் இந்த முதலாளித்துவ அமைப்பு வெவ்வேறு சமூக அமைப்பிலிருந்து பரிணாமம் பெற்று இந்த நிலையை அடைந்திருக்கிறது. இந்த அதிகார மையமானது சமூகத்தில் பல்வேறு கட்டுமானங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆளும் வர்கங்களாக வடிவெடுத்து சமூகத்தின் மதிப்பீடுகளை அவைகளே உருவாக்குகின்றன. அதன்காரணமாக சமூக நலன் என்பது புதைக்கப்பட்டு ஆளும் வர்கங்களுக்கு சார்பான நலன்கள் ’பொது நலன்’ என்ற போர்வையில் உலவவிடப்பட்டன, அவ்வதிகார ஊடுறுவல் என்றென்றைக்கும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.  அதற்கென பல நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டது, அதில் ஒன்று தான் மதம் எனும் நிறுவனம். இந்த மதம் எனும் நிறுவனமே ‘பண்பாடு’ என்பதை தீர்மானிக்கும் அதிகாரப்பூர்வ சக்தியாக விளங்குகிறது. அந்த மதவாத பண்பாடு பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பித்து தனது பண்பாட்டு ஆதிக்கத்தை பூர்வகுடிகள் மேல் திணித்து தீண்டத்தகாதவர்களாக சித்தரித்தது. பல்வேறு கொடுமைகளை அரங்கேற்றிய அந்நிறுவனம் இந்திய சூழலில் இந்துத்துவம் எனும் கொடுங்கோன்மை மதமாக இருக்கிறது. நூற்றாண்டு கால போராட்டங்கள், உயிரிழப்புகளுக்குப் பின்னர் அந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கென்று வெகு சில உரிமைகள் நிலைநாட்டப்பட்டது.

மதம் எனும் நிறுவனமானது (எல்லா மதங்களுமே)  மதத்தை மறுப்பவருக்கும் கூட ஒரு ‘பண்பாடு’ இருக்ககூடும் என்பதை கணக்கில் கொள்வதில்லை. அதற்கான சுதந்திரத்தையும் வழங்குவதில்லை.

பண்பாட்டு ஆதிக்க சக்திகள் சமூக நலன் என்ற பெயரில் தனிமனித இயல்பூக்க உணர்வுகளை பொதுமைப்படுத்தி அதை கட்டுப்படுத்தும் நிபந்தனைகளை உருவாக்கி, அதைச் சுற்றி கொள்கைகளை வகுத்துக் கொண்டு அதையும் ஒரு அரசியல் பிரகடனமாக மாற்றி வருகின்றனர். வெவ்வேறு இனங்களின் நம்பிக்கைகளை, சடங்குகளை உட்செறித்து இந்திய மண்ணில் அதற்கு ‘இந்து மதம்’ என்று அச்சக்திகள் பெயர் சூட்டி தொடர்ந்து எல்லா தளங்களிலும் மதவாத அரசியலை நிகழ்த்திவருகிறது. அதில் ஒரு அரசியல் தந்திரமே காதலர் தின எதிர்ப்பு என்பதாகும். இந்த காதலர் தின எதிர்ப்புக்கு பண்பாட்டு சீரழிவு, அந்நியர்களின் பழக்கம் என்றெல்லாம் கவலை கொள்கிறது இந்து முன்னணி. நாட்டு மக்கள் மீதும், பண்பாட்டின் மீதும் அவர்களுக்கு இருக்கும் அக்கறை வரவேற்கத்தக்கது, ஆனால் பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சி புரிந்த காலம் தொடங்கி இண்றைய பன்னாட்டு நிறுவனங்கள் வரை உயர் பதவிகளில் இருப்பது பெரும்பாலும் அவர்கள் குலம் தானே. அந்நியர்களின் பணத்தைக் கொண்டு பிழைப்பு நடத்துவது பண்பாட்டு சீரழிவில் சேர்த்தியில்லையோ. சரி அதாவது பொது மக்களின் வாழ்வாதார பிரச்சனை என்கிற அளவில் கருணைக் காட்டலாம் ஆனால் இந்த நாட்டு மக்களின் வரிப்பணங்களை வசூலித்து அந்நிய நிறுவங்களின் உயிர் கொல்லித் திட்டமான கூடங்குள அணு உலை அமைத்ததோடு மட்டுமல்லாமல், ருஷிய நாட்டு அரசுக்கு விசுவாசமாய் இப்போதையப் பிரதமர் மன்மோகன் சிங் ருஷியா சென்று அணு உலையை இன்னும் இரண்டு வாரங்களில் திறப்போம் என்று சொல்வது எந்த சீரழிவில் சேர்த்தி. அனுக்கதிர் வீச்சின் தன்மையால், இரத்தமும் சதையுமாக இருக்கும் உயிர்கள் துர்மரணங்களை எதிர்கொள்கின்றனர், குழந்தைகள் ஊனமாய் பிறக்கின்றனர் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் உயிரற்ற கருத்துமுதல்வாத கொள்கைக்காக கவலைப்படுகிறார்கள். இந்த ஒரு திட்டம் மட்டுமா, இன்று இந்தியா ஒட்டு மொத்தமாக அந்நிய ஏகாதிபத்திய வளர்ச்சிக்கான இலக்காகிவிட்டது, இதற்கு காங்கிரஸ், பா.ஜா.க என்று வலதுசாரி கட்சிகள், பெரு முதலாளிகள் துணை என்பது மறுக்கமுடியாத உண்மை.

இப்படி முதலாளித்துவ பொருளாதார அடித்தளம் குலைந்து போகாமல் இருக்கவும், அதனோடு பின்னிப் பிணைந்திருக்கும் இந்துத்துவ பெரும்பான்மை, அதிகாரம் மழுங்கிப்போகாமல் இருக்கவும் ஆர்.எஸ்.எஸ் காதலர் தினத்தை அவதூறு செய்கிறது. அரசியல் காரணிகள் மட்டுமல்லாது காதலின் மூலம் ஏற்படும் சாதியக் கலப்பை முடக்கி ’பார்ப்பன இந்துத்துவ தூய்மைவாதத்திற்கு’ பங்கம் நேராமல் காப்பதும் இவர்களது நோக்கம். 

காதல் எனும் போது அங்கு முக்கியமாக நிகழ்வது சாதியக் கலப்பு, அதை சகித்துக்கொள்ள முடியாமலேயே அவர்கள் இதை பண்பாட்டுச் சீரழிவு என்கின்றனர். பார்பனப் பண்பாடு சீரழிவு பற்றியக் கவலை இது. உயிர் தோன்றிய காலம் முதல் உயிர் சேர்க்கை இருந்து கொண்டுதான் இருக்கிறது, அதற்கு காதல் என்ற பெயர் இல்லாமல் இருந்திருக்கலாம், அதற்கு அப்போது ஒரு அடையாளம் தேவைப்படவுமில்லை. ஆதிச்சமூகங்கள் முழுச்சுதந்திரமாக காதலையும், காமத்தையும் அனுபவித்து வந்தனர் என்பதற்கு சாட்சியாக தொன்மைக் காலம் தொட்டு இருக்கும் இலக்கிய ஆதாரங்களை, வரலாற்று நிகழ்வுகளைச்சொல்லலாம்.  காதலை பொது வெளியில் அறிவித்து, காதலி ஏற்க மறுத்தால் உயிரை மாய்த்துக்கொள்ளும் சிறப்பு மிக்க மடல் ஏறுதல் எனும் பண்பாட்டைக் கொண்டது தமிழ்சமூகம். இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல், காதலை கொச்சைப்படுத்துவதும், காதலர்களை துன்புறுத்துவதும், காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் பண்பாட்டு அக்கறையன்று இது முழுக்க முழுக்க பார்ப்பன-இந்துத்துவ வெறி என்று தான் சொல்ல வேண்டும்.  இன்னும் இவர்களே இம்மண்ணில் பிறந்தவர்களா அந்நியர்களா என்று விவாதம் முடிவுறாமல் இருக்கிறது. இவர்கள் அந்நிய தலையீடு பற்றிக் கவலை கொள்கின்றனர். வேடிக்கையாக உள்ளது. 

காதலர் தினக் கொண்டாட்டம் என்பது அந்நியர்களின் மரபுதான், அந்த தினம் மட்டுமல்லாது பல்வேறு தினங்களும் அந்நியர்களின் பாணியே. அத்தகைய தினங்களை ‘பிரபலப்படுத்தியது’ யார்? அதன் மூலம் அனுகூலம் பெருவது எந்த வர்க்கம் என்று பார்த்தோமானால் அது முதலாளித்துவம் என்பது வெட்டவெளிச்சமாக தெரியும் ஒன்று. இந்த தினங்களை ஓயாது பிரபலப்படுத்தி முதலாளிகள் பரிசுப் பொருள்களால் சந்தைகளை நிரப்புகின்றனர். அந்த தினத்தை அனுசரிக்காமல் போனால் நாம் மனிதர்களே இல்லை என்கிற அளவிற்கு நம் மீது திணிக்கப்படுகிறது. அன்னையர் தினம், பெண்கள் தினம் என எல்லாம் ‘முதலாளிகளின்’ நலனுக்கான தினமே. இதில் நாம் கூர்ந்து கவனித்தோமானால் அன்னை, பெண், காதலி என்று எல்லாப் பெண்களுக்குமே பரிசுகளை வாங்கிக் கொடுத்து கவருங்கள், அவர்கள் அறிவற்றவர்கள், பரிசு பொருளுக்காக தங்களையே ஒப்புவிக்கத் தயாராய் இருப்பவர்கள் எனும் பரிந்துரையே இருக்கும். இந்த முதலாளித்துவ அரசியலை இந்து முன்னணி எதிர்க்காது. அந்நிய முதலாளிகள் நாட்டுக்கள் முதலீடு செய்யக்கூடாது எனும் அறிவிப்புகளை வெளியிடாது. ஆனால் ‘பண்பாட்டு சீரழிவு’ எனும் பெயரால் காதலர் தின எதிர்ப்பு, ஏன் இந்த தேர்ந்தெடுத்த எதிர்ப்பு வாதம். சாதியக் கலப்பு நிகழ்வது அத்தனை பெரியக் குற்றமா.

பார்கள், டிஸ்கோதெக்குகளில் குடித்து விட்டு கூத்தடிக்கும் நபர்கள், காதலர்களின் செயல்பாடுகளை விமர்சிப்பது இருக்கட்டும், இந்த ‘வியாபாரங்களுக்கு’ உரிமும், இடமும் கொடுத்திருக்கும் அரசு, முதலீட்டியலாளர்கள், அவற்றை தங்களின் ஓயாத விளம்பரங்கள் மூலம் மக்களின் மனதில் திணிக்கும் முதலாளிகள், முதலாளித்துவ வெகுஜன ஊடகங்கள் இவற்றை ஏன் இந்து முன்னணி கண்டிப்பதில்லை. அதிலும் குறிப்பாக பெண்கள் குடிப்பதால் பார்களில் புகுந்து அப்பாவிகளை அடிக்கும் அளவுக்கு செல்லும் இவர்கள் முதலாளிகள் நடத்தும் ‘கேளிக்கை விருந்துகளில்’ சென்று ஏன் கலகம் செய்வதில்லை.  சட்டபூர்வமாக காதலுக்குத் தடையோ, காதலர்கள் பொதுவெளியில் தங்கள் அன்பை பரிமாரிக்கொள்ளவோ, சந்தித்துக்கொள்ளவோ தடையேதுமில்லையே, அப்படி இருக்கும் போது இந்து முன்னணி எந்த உரிமையின் அடிப்படையில் காதலர்களை அச்சுறுத்தி, வலிய தாலியை கட்டச் சொல்லி மிரட்டுகிறது.  சாதிய வெறி, மதத் தூய்மைவாதம் அன்றி இதற்கு வேறேதும் காரணமில்லை.

பொது வெளியில் காதலர்கள் தங்கள் அன்பைப் பரிமாரிக் கொள்ளும் போக்கில் பொது புத்தியில் ‘அந்தரங்கம்’ என்று சொல்லக்கூடிய, காமத்தின் வெளிப்பாடான சில செயல்களில் ஈடுபடுகின்றனர் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றுதான். ஆனால் அதை ஆபாசாம், பொறுக்கித்தனம், தறுதலைகள் என்று சொல்வது சரியானதன்று.  துணை தேடுதல் என்பது இயல்பூக்க விதிகளில் ஒன்று அதற்கு நாம் தான் காதல், காமம் என்றெல்லாம் பெயர்கள் சூட்டிக் கொள்கிறோம். ஹார்மோன்களுக்கு அவை தெரியாது. பதின்பருவ வயதிலேயே அவ்வுணர்ச்சிகள் பெருக்கெடுக்க துவங்குகின்றன. அவற்றை மேலும் மேலும் தூண்டும் விதமாக பொது வெளியெங்கிலும் தொலைகாட்சி, பத்திரிகைகள், சினிமா இதழ்கள், திரைப்படங்கள், இணையதளங்கள் என்று ’காமத் திணிப்பு’ நிரம்பி வழிகிறது. காமம் என்பதை ‘தவறான’ ஒரு உணர்ச்சியாக மதவாதம் சித்தரிக்கிறது, அதைச் சுற்றி ஒரு இறுக்கமான கருத்துமுதல்வாத கட்டுப்பாடுகள் இயற்கையை மறுத்தலிக்கும் விதமாக கட்டியெழுப்பப்பட்டுள்ளன. ஆனால் அதேவேளை மற்றொருபுரத்தில் அது கட்டுப்பாடில்லாமல் திணிக்கவும் படுகிறது. அத்தகைய திணிப்புகளை இந்த மதவாத அரசியல் எதிர்ப்பதில்லை. 13 வயதில் காதல், காம உணர்வுகள் (அதற்கு முன்னரே கூட சாத்தியம்) ஏற்பட்டுவிடுகின்றன, ஆனால் நம் சமூகத்தில் பொருளாதார படிநிலை அச்சம் காரணமாக ஒருவருக்கு திருமணம் நிகழ்வது 25 வயதுக்குப் பின்னர். அப்படியிருக்க குறைந்தது பத்து வருட காலம் மக்கள் தங்கள் இயல்பூக்க உணர்வுகளுக்கு வடிகாலின்றி இருக்கின்றனர், மறுபுரம் காமத்தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இந்த சீரற்ற தன்மையை எந்தவித்திலும் நியாயப்படுத்த முடியாது.  உடனே கட்டுக்கடங்காத காமத்தை முன்மொழிகிறேன் என்று அவசரகதியில் புரிந்து கொள்வது தவறாகிவிடும்.

காதலை மறுப்பதை விட, காதல் எனும் உணர்வில் உயிரியல்-வேதியலின் பங்கினை பாலியல் கல்வி மூலமாக புகட்ட வேண்டும். அவ்வுணர்வை கையாளும் வழிமுறைகளை வெளிப்படையாக கற்பிக்க வேண்டும். பெற்றோர்கள் ‘காதல்’ என்பதை ஏதோ பாவகாரியமாக பார்க்காமல் அவ்வுணர்வை சோதித்துப் பார்ப்பது குறித்து, வெல்வது குறித்து, ஒத்திப்போடுவது குறித்து மேலும் அவ்வுறவை சிலக் கட்டுப்பாடுகளுடன் கையாள்வதின் அவசியம் குறித்தும் தங்கள் பிள்ளைகளிடம் பேசலாம்.  அதேபோல் பொதுவெளியில் ‘காமம்’ என்று பார்க்கப்படும் சில செய்கைகளை தவிர்ப்பதன் அவசியத்தை விளக்கலாம். ஆண் பெண் விகிதாச்சாரம் குறைவாக இருக்கும் நிலைமையினாலும், பொருளாதார காரணிகளாலும் ‘காதலர் / காதலி’ என்பது எல்லோருக்கும் கிடைப்பது சாத்தியமில்லாத போது, ஒரு சிலர் மட்டும் தங்களது அன்பை மிக நெருக்கமான தன்மைகளோடு வெளிப்படுத்தும் பொழுது அது எப்படி மற்றவரின் மனதைப் புன்படுத்தும் எனும் விதமாக ‘இல்லாதவர்களுக்கு’ சேர்த்து யோசிக்கும் பண்பை காதல் எனும் உணர்வு மூலமும் விதைக்கலாம். இந்த பொதுவெளியில் குழந்தைகளும் உலவுகின்றனர், அவர்கள் மனதை அது பாதிக்கும் என்கிற வகையில் எடுத்துச்சொல்லலாம் (ஆனால் எல்லாவற்றையும் தான் திரைப்படங்கள் காட்டி விடுகிறதே)

சமூகமும் அவரவர்க்கென்று இருக்கும் நியாயமான உரிமைகளை மதிக்கும் விதமாக நடந்துகொள்வது அவசியமாகிறது. அரசானது இந்த மதவாத அரசியலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காமல் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனும் அறிவிப்பை வெளியிட வேண்டும். காதலர்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்வதோடு காதலர்கள் மட்டும் சுதந்திரமாக சந்திப்பதற்கான பூங்காக்களை உருவாக்கலாம்.

காதல் என்பது மனிதர்களை மனிதர்களாக வாழவைக்கும் ஒன்று. நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ சமூக அமைப்பு தோன்றுவதற்கு முன்னர் மனித இன விருத்தியில் முக்கியப் பங்கு வகித்தது காதல். இங்கு சாதிய சட்டங்கள் தோன்றிய பின்னரே காதல் என்பது தவறான ஒன்றாக கற்பிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வருகிறது. இலக்கியங்களில் காதலையும், காமத்தையும் பொழிந்து தள்ளியுள்ளனர் நம் சமூகத்தினர். காமத்தினை வெளிப்படுத்தும் சிற்பங்கள் நிறைந்த  காமக்கோயில் உள்ள ஒரே நாடு இந்தியநாடுபொருளாதார ரீதியில், சாதிய அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலளிக்கும் ஒரே விசயம் காதல்தான், ஆனால் இந்த மதவாதப் பிரச்சாரங்களாலும், சாதியப் பிடிப்பினாலும் காதலர்கள் துன்புறுத்தப்படுகின்றனர், சில வேளைகளில் எரித்துக் கொல்லவும் படுகின்றனர். மதவாத அரசியலுக்காகவும், இனத்தூய்மைக்காகவும் இந்து முன்னணி முன்வைக்கும் இந்த காதலர் தின எதிர்ப்பை அனுமதிக்கக்கூடாது. காதல் வெளிப்பாட்டில் தேவையான சீர்திருத்தங்களை பரிந்துரைப்போம் ஆனால் அணைவரும் ஒன்றிணைந்து காதலர் தின ’இந்துத்துவ தூய்மைவாத’ எதிர்ப்பை புறக்கணிப்போம். 

Feb 5, 2012

மாண்பு மிகு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு,




4.2.2012 கூட்டத்தை முடித்து விட்டு வீடு வந்தவுடன் தொலைக்காட்சியில் ஒரு செய்தியைப் பார்க்க நேரிட்டது. மத்திய உள்துறை அமைச்சர் .சிதம்பரம் பாளையங்கோட்டையில் அணு  உலையை விரைவில் திறக்க வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தார். இன்னும் எத்தனை நாளுக்குத்தான் ’22 வருடங்கள் எங்கேயிருந்தார்கள் அவர்கள், யார் இந்த சுப. உதயகுமாரன், எங்கிருந்து பணம் வருகிறது இவர்களுக்கு” எனும் முட்டாள்தனமான கேள்விகளையே இவர்கள் வைத்துக் கொண்டிருக்கப்போகிறார்கள். ’கூகிள் சர்ச்’ செய்தாலே போதுமான வரலாறு கிடைக்கிறதே, அதன் மூலம் இது கடந்த 23 வருட காலப் போராட்டம் என்பதை ஒரு குழந்தை கூட படித்து அறிந்து கொள்ளும். கார்ப்பச்சேவ் பதவி இழந்தது, ராஜீவ் காந்தியின் மறைவு என்று பல்வேறு காரணங்களால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. பிறகு 1997 - அப்போதைய பிரதமர் ஹெச்.டி. தேவே கவுடா மற்றும் ருஷிய பிரதமர் போரிஸ் யெல்ஸ்டன் 1988ல் மீன்டும் ஒரு துணை ஒப்பந்தத்தை கையெழுத்திட்டனர்.  1989ல் நடந்ததை மேலே குறிப்பிட்டுள்ளேன்...இப்படி தொடர்ந்து போராட்டங்கள் வெவ்வேறு அமைப்பின் கீழ், தலைமைகளின் கீழ் நடந்து வந்திருக்கிறது. இதற்கு மேலும் ஆதாரமாக, நேற்றைய கூட்டத்தில் ஞாநி  அவர்கள் சொன்னதை இங்கு பகிர்கிறேன். 1987, செப்டம்பர் மாதம் நடந்த கூட்டத்தில், அணு  உலைகளினால் ஏற்படவிருக்கும் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வு போராட்டத்தில் அவர் பேசியுள்ளார், அவர் சொன்னது “சென்ற தலைமுறையக் கடந்து இன்று அடுத்த தலைமுறைக்கு இப்போராட்டம் நீண்டு தொடர்ந்து வந்திருக்கிறது” ஆம்...இது தான் உண்மையை, ஆனால் இந்த உண்மையை மத்திய அரசு மறைக்கிறது. வெகுஜன ஊடகங்களாவது இப்போராட்ட வரலாற்றை முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
தொழில்நுட்பம் உச்சத்தில் வளர்ந்திருக்கும் இந்த காலத்தில் இணைய இணைப்பு என்பது பயணங்களின் போதுகூட நமக்கு கிடைக்கிறது.  2G அலைக்கற்றை ஊழலில் தொடர்பிருப்பதாக சொல்லப்படும். சிதம்பரம் அவர்களுக்கு இது கூடவா தெரியாமல் இருக்கும். பாளையங்கோட்டையில் பேச செல்வதற்கு முன் கூட கூகிளில் அவர் தேடியிருந்தால், போராட்ட வரலாற்றை அவர் படித்திருக்கலாம். இத்தருணத்தில் படைப்பாளர் இயக்கத்தினரிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன், சிதம்பரம், தினமலர், காங்கிரஸ், RSS ஆகியோர் மாற்று அறிவை அதாவது சமூகத்திற்கு நன்மை விளைவிக்கக்கூடிய பரிந்துரைகளைக் கொண்ட மாற்றுச் சிந்தனையாளர்கள் எழுதிய புத்தகங்களைத் தேடி கற்பதில்லை என்பது தெரிகிறது. குறைந்தபட்சம் அணு சக்திக் கதிர்களால் ஏற்பட்டிருக்கும்  ஆபத்து குறித்த உலக அறிஞர்களின் ஆய்வுகள், கூடங்குளம் அணு உலைக்கெதிரான மக்கள் இயக்கத்தின் அறிவியல்பூர்வ தகவல்களைக் கொண்ட வெளியீடுகள், மத்திய அரசின் வல்லுனர் குழுவினரின் அறியாமையை வெட்ட வெளிச்சமாக, ஆதாரபூர்வமாக பேசும் வெளியீடுகள், மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் வெளியிட்டுள்ள புத்தகங்களை நம் கைக்காசுகளைப் போட்டாவது வாங்கி அணுப்புவோம்.
சிதம்பரம் மற்றொரு அரைத்த மாவை மீண்டும் அரைத்தார் – அது தான் அப்துல் கலாமின் பரிந்துரைகள். ”அப்துல் கலாமே சொல்லிவிட்டார்” அப்துல் கலாமே பேசிவிட்டார்....அப்துல் கலாமே சாப்பிட்டு விட்டார் என்று பேச்சுக்கு பேச்சு அவரை இழுத்தார்....மிக்க மகிழ்ச்சி.

மாண்பு மிகு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு,
அப்துல் கலாம் யார்...எங்கிருந்து வந்தார் என்பது தாங்களுக்குத் தெரியாததல்லவா. குடியரசுத்  தலைவராக கேப்டன் லட்சுமி பாயை இடது சாரிகள் முன்வைத்தபோது பாரதிய ஜனதாவால் நிறுத்தப்பட்டவர் அப்துல் கலாம். ஆனால் வாஜ்பேயி அவர்களை விட மிக மோசமான இந்துத்துவ குணங்கொண்டவராக இருக்கிறார் கலாம். அய்யா நீங்கள் கூறும் திருவாளர் அப்துல் கலாம்தான் பாராளுமன்றத்தில் காந்தியைச் சுட்டுக்கொன்ற கோட்சேவின்  அதிகாரப்பூர்வ குருவான சாவர்க்கரின் படத்தை திறந்து வைத்தவர். பகவத் கீதை என்ற நூலை சத்தியம் என்று நம்பும் பரிதாப ஆத்மா...அய்யா வாஜ்பேயி யார் 1942ல் பட்டேஸ்வர் கிராமத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளார்களுக்கு எதிராக மக்கள் திரள,  போலிஸ் அடக்க, மக்கள் கொந்தளிக்க  பிரிட்டிஷ் அரசு அவர்களை, அந்தப் பழங்குடி மக்களை துவம்சம் செய்து மக்கள்  தலைவர்களைக் காட்டிக் கொடுக்கச் சொன்னது. மக்கள் மறுத்தனர். ஆனால் மக்கள் தலைவர்கள் காட்டிக் கொடுக்கப்பட்டனர். அய்யா காட்டிக்கொடுத்த அந்த உன்னத ஆத்மாக்கள் நம்பர் 1. பிரேம் பிகாரி வாஜ்பாயி. நம்பர் 2 அடல் பிகாரி வாஜ்பாயி...அய்யா எப்படி இருக்கிறது பாருங்கள் வரலாறு. மிக்க மகிழ்ச்சி இந்த அப்துல் கலாமும், வாஜ் பேயிம் அவர்கள் சார்ந்த அமைப்புகளும் சொல்வதனால் எல்லாவற்றையும் செய்ய வேண்டுமென்றால் நீங்கள் இந்தியாவை மனநோயாளர்களின் நாடு என்றழைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறீர்கள் என்றே அர்த்தம். அய்யா இந்தியாவை அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று கேட்டு ஆட்சி நடத்துவதற்கு பதில் அவர்களை  சர்வாதிகாரிகளாய் மாற்றி மக்கள் குடியரசை ஒழியுங்கள் நிம்மதியாய் போகும். நீங்கள் இந்த அணு உலைக் கருத்தாக்கத்துக்கு உங்களால் முடிந்த அளவுக்கு ஆதரவு தெரிவித்து அதைத் அன்னை சோனியா காந்தியின் கையில் கத்தரிக்கோல் பிடித்து ரிப்பன் வெட்ட நினைக்கிறீர்கள்.  நாங்கள் முடிந்த அளவுக்கு போராடுகிறோம்.  அய்யா உள்துறை அமைச்சரான உங்களுக்கு அப்துல் கலாமும், அணு உலையும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவுக்கும் மேல் உதயகுமாரன், புஷ்பராயன், ஜேசுராஜன், அம்மக்களின் வாழ்வாதாரம், இயற்கை மாசுபடாதிருத்தல் ஆகியவை எங்களுக்கு  முக்கியம்.
அணுகுண்டுகள் பற்றி அதன் பேரழிவு பற்றி கவிஞரொருவர் ஒரு மிக அற்புதமான கவிதையொன்றை இயற்றியிருக்கிறார். அதைத் தங்களின் பார்வைக்கும் வைக்கிறேன். ’சில இரவுகளில்’ -
சில இரவுகளில்
எனது தூக்கம் திடீரென்று கலைக்கப்படுகிறது
எனது கண்கள் திறக்கின்றன
அணு ஆயுதங்களைக் கண்டுபிடித்த
அந்த விஞ்ஞானிகளைப் பற்றி நினைக்கிறேன்
ஹிரோஷிமா - நாகசாகியில் நிகழ்ந்த
பயங்கர இனப்படுகொலை பற்றிய செய்தியைக் கேட்டபோது
இரவில் அவர்கள் எப்படித் தூங்கியிருப்பார்கள்?

தாங்கள் செய்வது சரியல்ல என்ற உணர்வு
அவர்களுக்கு ஒரு வினாடியாவது ஏற்பட்டதா?
ஏற்பட்டிருந்தால் காலம் அவர்களை
குற்றவாளிக் கூண்டில் ஏற்றாது
இல்லையென்றால் வரலாறு அவர்களை
ஒரு போதும் மன்னிக்காது.

அய்யா அணுகுண்டுகளுக்காக அதன் பேரழிவிற்காக இந்த உருக்கம் மிகுந்த கவிதையை எழுதியது வேறு யாருமல்ல அணு உலை வேண்டும் வேண்டும் வேண்டும் என்று அப்பாவி மக்களின் வாழ்வாதரத்தின் மீதும் உயிரிலும் அடித்து விளையாடும் நீங்கள் கூறும் அப்துல் கலாம் திறந்து வைத்த புகைப்படத்தில்...பாரளுமன்றத்தில் இன்னும் காந்தியை திறந்த கண்களால் வெறித்துக்கொண்டிருக்கும் சாவர்க்கர் அவர்களின் வழிமரபான அய்யா அடல் பிகாரி வஜ்பேயிதான். ஆனால் பாருங்கள் அவரும் தான் பிரதமராய் இருந்தபோது பொக்ரானை வெடித்துவிட்டு suo motu அறிக்கையில் 5 வது விளக்கமாக
இப்போது இந்தியா மறுக்கமுடியாதபடி ஒரு அணு ஆயுத அரசாக உள்ளது. இந்தத் தகுதி " நாங்கள் தேடி எங்களுக்கு வழங்கப்பட்டதல்ல; மற்றவர்கள் எமக்கு மானியமாக அளித்த அந்தஸ்தும் அல்ல. அது "எம் விஞ்ஞானிகளும் பொறியியலாளர்களும் தேசத்துக்கு வழங்கிய கொடை.” மேலும்  " மனித குலத்தின் ஆறில் ஒரு பங்குக்கு, இந்தியாவுக்கு உள்ள உரிமை.” மிக்க மகிழ்ச்சி. ஆனால் தாங்கள் விரும்பாத வகையில்தான் இதை சுட்டிக்காட்டியதற்கு எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஒரு குறிப்பிட்ட எல்லை வரை ஒரு இந்திய குடிமகளாக எனது வீட்டின் மின்சாரத் தேவைகளுக்கு நீங்கள் என்னைத் துணைக்கழைப்பதில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை. அப்படி ஒரு மின்சாரத்தை நான் விரும்பவில்லை. மன்னித்திவிடுங்கள்.  அய்யா ஒரு இடைத்தகவலாக நீங்கள் வழிமொழியும் அப்துல்கலாமும் பொக்ரான் அணுகுண்டு வெடிப்பில் ஒரு தொழில் நுட்ப வல்லுனர். அவரிடம் இப்பொழுது கேளுங்கள் அணு குண்டு நல்லதா என்று...மிக எளிதாக அவரால் சொல்ல முடியும். கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்று. நீங்களும் உங்கள் கடமையைச் செய்கிறீர்கள். ஆனால் அய்யா அது ஒரு மத்திய உள்துறை அமைச்சராக மக்கள் மேல் அபிமானம் கொண்ட ஒருவரைப் போல் இல்லை. கடமையைச் செய் இல்லையெனில் நீ துரோகி...நாசமாய்ப் போக என்று கூறுவதைப் போல் உள்ளது. அதே போல் சுப. உதயகுமாரை நீங்கள் அடிக்கடி விளிப்பது மிகவும் அறுவெறுக்கத் தக்க ஒன்றாக உள்ளது. இன்றைய நிலையில் அவர் அப்துல் கலாம் வாஜ்பேயி ஏன் உங்களை விட மிகக் கீழான வசதியில் மக்களின் சார்பாக நிற்கும் ஒரு மனிதன் அவ்வளவே. அய்யா ஒரு சிறிய ஆலோசனை தாங்கள்  ஏன் பாரதிய ஜனதாவிலோ அல்லது ஆர்.எஸ்.எஸ்.ஸிலோ இணையக் கூடாது.( கூடங்குள மக்கள் கிறித்தவர்கள் என்ற அளவில் பூசிய மதச் சாயம் குறித்து நீங்கள் விரிவாக விளக்காமல் போனதற்காக)   எங்களுக்கு இப்பொழுது நீங்கள் அடிக்கடி முன் மொழியும் பெயராக ஆகிவிட்ட அப்துல் கலாம் மற்றும் சோனியா காந்தி என்ற பெயர்களில் வெறுப்புக் கூடிக்கொண்டே போகிறது. அதிலும் பின்னவருக்குப்  பின் இணைக்கப்பட்டிருக்கும் காந்தி என்ற பதத்திற்கு உள்ள  பொருள் இன்னும் கொச்சையாக உள்ளது. அது சம்பந்தப்பட்ட  நபரான மோகன் தாஸ் கரம் சந்தை ஞாபகப்படுத்துவதோடு, அது என்னை அவரை மகாத்மா என்றழைக்க கூச்சப்படவும் வைக்கிறது. ஆனால் பெயருக்கும் கவிதைக்கும் அறிக்கைக்கும் உளறலுக்கும் உள்ள வித்தியாசங்களை நானறிவேன் என்பதை மகிழ்ச்சியுடன் கூறுகிறேன். மேலும் கூடங்குள அணு உலைக்கு செலவான தொகை 13,500 கோடிகள் என்பது ஸ்பெக்ட்ராம் கொள்ளையில் அடிக்கப்பட்டதைவிட மிகக் குறைவாகவே உள்ளது. ( estimated 2G scam value is 176,645 crore (US$ 39 billion) எனவே அய்யா அவர்கள் நிதி விவகாரங்களில் இந்தியாவுக்கு ஒரு முன்மாதிரியாக இருப்பதாலும், சம்பந்தப்பட்ட வழக்கில் தாங்கள் இணைந்திருப்பதாலும்...அது குறித்து உங்கள் மனந்திறந்த விளக்கத்தை அதே  பாளையங்கோட்டையில் வைத்து விளக்கினால் நான் மகிழ்வேன்.
அப்துல் கலாமென்ன ஒட்டுமொத்த மானுட அறிவுக்குமான அளவுகோலா ஐயா, அவருக்கு மட்டும் தான் அறிவியல் அறிவு இருக்கிறதா?    Dr. சாந்தா போன்றோர் அணு  சக்திக் கதிர்களால் புற்று நோய் வராது என்று சொல்வது எத்தனைப் பெரிய துரோகம் என்பதை வரலாறு சொல்லும். இப்படி சூதும் வாதும் செய்யும் நீங்கள், போபர்ஸ் ஊழல், 2ஜி ஸ்பெக்டரம் ஊழல், காமன் வெல்த் ஊழல் ஆகிய ஊழல்களில் பங்கு வகித்த உங்கள் கட்சியாளர்கள், தலைமைகள், RSS, பா.ஜ.கவினருக்கு  சுப. உதயகுமாரன் பற்றியும், கூடங்குள மக்களைப் பற்றியும் பேசுவதற்கான அறுகதை கிடையாது என்பதை குறித்துக்கொள்ளுங்கள். 
கலாமை விடவா இவர்கள் மக்களை நேசிக்கிறார்கள் என்று  நீங்கள் கேட்பதிலிருந்து மக்கள் அறிவற்றவர்கள், உங்கள் அடிமைகள் என்று உறுதி செய்ய விரும்புகிறீர்கள் என்பதை அறியமுடிகிறது....ஆனால் மக்கள் எல்லாக் காலத்திலும் மடையர்களாக இருப்பதில்லை, அவர்களுக்கு அறிவு வந்துவிட்டது என்பதால் ஐயமும், பதட்டமும் கொண்டே இப்படி பேசுகிறீர்கள் என்பது எங்களுக்கும் புரிகிறது.....கலாம் எங்கே மக்களை நேசிக்கிறார்.  அவர் தனக்கு கிடைக்கும் புகழாரங்களை நேசிக்கிறார்.  அவர் ஒரு அரசியல் பகடைக் காய் அவ்வளவுதான்...அவர் சொல்வதெல்லாம் மானுடம் வாழவேண்டும் என்ற நோக்கோடு அல்ல, மக்களையெல்லாம் கொன்று விட்டு, இயந்திரங்கள் மட்டும் நிறைந்த ஒரு வல்லரசு இந்தியாவை உருவாக்க வேண்டும், ‘இந்தியா’ வாழவேண்டும் என்பதற்காக மட்டும் தான். எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கும் அவர் தன்னைக் குழந்தைகள் பிரியர் என்று சொல்லிக் கொள்கிறார். அணுக்கதிர் வீச்சினால் எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படும் என்ற கூறுணர்வின்றி பிதற்றிக் கொண்டிருக்கிறார். அதை எந்தக் கேள்வியும் இன்றி நீங்கள் சொல்வதாலேயே நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறீர்கள். கருத்துச் சுதந்திரம் என்று ஒன்று உள்ளதே அது பற்றி உங்களுக்குத் தெரியாதா ஐயா....உங்கள் கட்சிக்கெதிராக எதுவும் பேசமுடியாத அடிமையாக ஒருவேளை நீங்கள் இருக்கலாம்....மக்களாகிய நாங்களும் அப்படி இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது சிறுபிள்ளைத் தனமாக இருக்கிறது ஐயா.
2G அலைக் கற்றை ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள உங்கள் வீட்டுக்கெல்லாம் ‘ரெயிட்’ ஏவப்படவில்லை, ஆனால் மக்கள் இயக்கமாக செயல்பட்டு வரும் ஒரு போராட்டக் குழுவினரின் மதப் பின்னணியை வேண்டுமென்றே பெரிது படுத்தி கிறித்தவ என்.ஜி.ஓக்களிடம் சோதனை நடைபெற்றது.  இவ்வளவு மோசமான ‘இந்துத்துவ’ ஒடுக்குமுறை நிலவும் ஒரு நாட்டில் அவர்கள் மதம் மாறியதால் மட்டுமே ஏதோ தப்பிப் பிழைத்தார்கள் என்று தான் சொல்வேன்.  இப்போராட்டத்தில் கிறித்தவர்கள் அல்லாதோரும், மத நம்பிக்கை அற்றோரும், மானுடத்தின் மீது, இயற்கை மீது அக்கறை கொண்டவர்கள் அணைவரும் இணைந்திருக்கிறார்கள் என்பதை ஏன் ஐயா மறைத்துப் பேசுகிறீர்கள். கீழ்த்தரமான மதச்சாயம் பூசுவதை தயவு செய்து நிறுத்திக்கொள்ளுங்கள்.  13,500 கோடி முதலிடு போட்டாயிற்று என்று கூவுகிறீர்களே....யாரிடம் கேட்டு நீங்கள் முதலீட்டைப் போடுகிறீர்கள், மக்களிடம் அணுமதி பெற்றா ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறீர்கள்...அப்படியே மக்கள் மத்தியில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினாலும் ‘எந்த மக்களிடம்’ அதை நடத்துவீர்கள் என்று நாங்கள் சொல்லவும் வேண்டுமா ஐயா?
மாட மாளிகைகளும், கார்ப்ரேட் நிறுவனங்களும், அந்நிய முதலாளிகளின் முதலீடும், தொழில்நுட்ப வளர்ச்சியும் மட்டும் தான் எதிர்காலம் என்று நீங்கள் சொல்கிறீர்கள், அப்பகுதி மக்களின் மேம்பாட்டுக்கு என்று சொல்லும் நீங்கள் அதை ஏற்கும் அல்லது மறுக்கும் உரிமையை ஏன் அப்பகுதி மக்களிடம் விடாமல் உங்கள் ஆட்சி அதிகார வலைக்குள்ளேயே வைத்திருக்கிறீர்கள் சிதம்பரம் ஐயா அவர்களே....
முடிந்தால் அறிவியல் பூர்வமான வாதங்களை வைத்து ஏதாவது பேசுங்கள், இல்லையேல் சொல்லுங்கள் உங்களுக்கு சில புத்தகங்களை நாங்கள் அணுப்பி வைக்கிறோம்.
இறுதியாக “நீங்கள் சொல்லும் ’எதிர்காலம்’  என்ற வார்த்தைகளில் எங்களுக்கான ’கல்லறைச் செங்கல்கள்’  எத்தனை உற்பத்தியாகிறது என்பதை நாங்கள் அறிவோம்”. 
இப்படிக்கு,
உங்கள் பாஷையில் சொல்வதானால்...
தேசத்துரோகி* கொற்றவை.

உதவிய நூல்கள் மற்றும் சுட்டி:
1. விடுதலைத் தழும்புகள் சு.போ. அகத்தியலிங்கம், தமிழ் புத்தகாலயம்
2.  ஓர் அணுகுண்டு இரண்டு கவிஞர்கள் எஸ்.வி. ராஜ துரை, அடையாளம்
3.  பா.ஜ.கவின் அணு ஆயுத சோதனையும், விளைவுகளும் தமிழில். சிங்கராயர், சவுத் விஷன்
4.  கூடங்குளம் அணுமின் திட்டம் (ஜனவரி, 2012) பூவுலகின் நன்பர்கள்
*  இந்திய ’தேசம்’ என்பது  இம்மண்ணில் பிறந்த அணைவருக்குமான இடம் என்பதை மறுக்கும் வகையில், அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கேள்வியின்றி ஏற்றுக்கொள்ளும் வெற்றுப் பொம்மையாய் இருப்பதை விட நியாயத்திற்காக குரல் கொடுக்கும் ‘துரோகி’யாய் இருப்பது சுயமரியாதை கூடிய ஒன்று.