Jul 25, 2019

சர்வதேசக் குழந்தைகள் வாரம்




கம்யூனிஸ்ட் இளைஞர் இண்டர்நேஷனலின் செயற்குழு, மூன்றாவது சர்வதேசக் குழந்தைகள் வாரத்தை ஜூலை 24 முதல் 30 வரை கொண்டாட முடிவு செய்துள்ளது. குழந்தைகள் இயக்கம் ருஷ்யாவில் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. ஆகவே இதைப் பிரபலப்படுத்த “குழந்தைகள் வாரம்” உபயோகப்படுகிறது.

“குழந்தைகள் இயக்கத்துக்கும், குழந்தைகள் ஸ்தாபனத்துக்கும் என்ன அவசியம்?” என ஒருசில தோழர்கள் கேட்கலாம்.  “அவர்கள் வளரட்டும், மேலும் முதிர்ச்சி அடையட்டும், பிறகு அவர்கள் கம்யூனிஸ்ட் இளைஞர் சங்கத்தில் சேருவார்கள். இப்பொழுது அவர்களுக்கு என்ன புரியும்? அவர்கள் விளையாடட்டும், பள்ளிக்குச் செல்லட்டும்” என்று அவர்கள் சொல்லலாம்.

10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களையும் சிறுமிகளையும் உட்கொண்ட சிறுவர் கம்யூனிஸ்ட் கழகமே இளம் பயனீர் கழகமாகும்.*

இளம் பயனீர் கழகம் அதன் உறுப்பினர்களுக்குக் கூட்டுணர்ச்சியைப் புகட்டுகிறது. இன்பத்தையும் துன்பத்தையும் கூட்டத்துடன் பகிர்ந்துகொள்ள அவர்களைப் பழக்கப்படுத்துகிறது. தங்கள் கூட்டத்தின் நலனே தங்கள் நலன் என்று போதித்து கூட்டத்தின் உறுப்பினராகத் தங்களைக் கருதிக்கொள்ளுமாறு அவர்களுக்குப் போதிக்கிறது.  கூட்டுப் பழக்கங்களை, அதாவது ஒரு ஸ்தாபன ரீதியில் கூட்டாக வேலை செய்யும், இயங்கும் திறமையை வளர்க்கிறது.  தனது விருப்பத்தைவிட கூட்டத்தினரின் விருப்பத்தையே மேலாக மதிக்கவும், தனது  முன்முயற்சியை கூட்ட்த்தினரின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றவும், கூட்டத்தினரின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றவும், கடைசியாக, தாங்கள், மனிதகுலத்தின் மலர்ச்சிக்காகப் போராடும் தொழிலாளி வர்க்கத்தின் உறுப்பினர்கள், சர்வதேசப் பாட்டாளி வர்க்கம் என்ற மாபெரும் சேனையின் உறுப்பினர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்தி குழந்தைகளின் கம்யூனிஸ்ட் மனவுணர்வை வளர்க்கிறது.

மேலே கூறியவை மட்டுமே குழந்தைகளை எவ்வளவு சீக்கிரமாக இவ்வியக்கத்தில் சேர்க்கிறோமோ அவ்வலவுக்கு நல்லது என்பதை நிரூபிக்கிறது. “நாங்கள் எங்கள் தந்தையைக் காண்பதேயில்லை; அவர் பகல் நேரத்தில் வேலை செய்கிறார், சாயங்காலம் கூட்டங்களுக்குச் செல்லுகிறார்” என்று தொழிலாளர்களின் குழந்தைகள் கூறுவதை அடிக்கடி கேட்கலாம்.  அவர்கள் தாயும் வேலை செய்கிறாள் அல்லது வீட்டு வேலைகளிலும் குழந்தைகளை கவனிப்பதிலும் ஈடுபடுகிறாள்.  அகவே அவர்கள் எதையும் பார்க்காமல் வீட்டில் அடைபட்டுக் கிடக்கிறார்கள்;  அல்லது அலுப்புத் தாங்காமல் குறும்புச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.  அல்லது தெருவில் திரியும் சிறுவர்களோடு சேர்ந்து கொள்கிறார்கள். சிறுவர்கள் கழகம் அவர்களுக்கு அநேக இன்பமான வாய்ப்புகளைத் தரும். அவர்களது செயல்களையும், முன்முயற்சிகளையும் வளர்த்து அவர்களது எண்ணங்களின் வளர்ச்சிக்கு உதவும்.

இயல்பாகவே, இளம் பயனீர் கழகம் பெரியவர்களின் கழகத்தைப் போன்று இருக்கக் கூடாது. அவ்வாறு பெரியவர்கள் கழகத்தின் மறுபதிப்பாக இருந்தால் உண்மையிலேயே கெடுதல்தான். ஆனால் அதில் கம்யூனிஸத் தன்மையை ஊட்ட வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக அது கோஷ்டிப் பாட்டுகள், விளையாட்டுகள், நீந்துதல், இயற்கைக் காட்சிகளைக் காணச் செல்லுதல், தீக்கணப்பைச் சுற்றி அமர்ந்து பேசுதல், தொழிற்சாலைகளைப் பார்வையிடுதல், பாட்டாளி வர்க்கத்தினரின் விழாக்களில் கலந்து கொள்ளுதல் போன்ற உல்லாச நிகழ்ச்சிகளுக்கு வழி செய்ய வேண்டும்.  இவை அனைத்தும் குழந்தைகளின் மனதில் அழியாத உளப்பதிவை ஏற்படுத்தி, ஒரு ஸ்தாபனத்தின், ஒரு கூட்டின் அமைப்பை அவர்களுக்கு நன்றாக எடுத்துக் காட்டும்.  பாட்டாளி வர்க்கத்தினரின் விழாக்களில் கலந்து கொள்ளுதலும், தொழிலாளர்களின் கிளப்புகளையும், தொழிற்சாலைகளையும், தொழிலாளர் கூட்டங்களை பார்வையிடுதலும் குழந்தைகளுக்கும் தொழிலாளி வர்க்கத்தினருக்கும் இடையே நெருங்கிய தொடர்பை உண்டு பண்ணும். முடிந்த அளவுக்கு எல்லா வகைகளிலும் இத்தொடர்பை ஊக்கப்படுத்த வேண்டும். மாதர் சங்கக் கிளைகளும், ஆலைகளிலுள்ள கட்சி குழுக்களும், தொழிற்சங்கங்களும் இளம் பயனீர்களுக்கு ஆதரவு தரவேண்டும்; குழந்தைகளிடையே வர்க்க ஒருமைப்பட்டு உணர்வை புகட்டத் தங்களால் இயன்றது அனைத்தையும் செய்ய வேண்டும்.


குழந்தைகள் இயக்க வாரத்தின்போது தொழிலாளர் கழகங்கள் இளம் பயனீர்களை தங்கள் பொறுப்பில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களைத் தொழிற்சாலைகளுக்கு அழைத்துச் சென்று தங்கள் வேலையை அவர்களுக்குக் காட்ட வேண்டும்.  விசேஷமாகப் பொறுக்கப்பட்ட ஆண்களும் பெண்களும் அவர்களுக்குத் தங்கள் இளமைப் பருவத்தைப் பற்றியும், தாங்கள் நிகழ்த்த வேண்டியிருந்த போராட்டத்தைப் பற்றியும் கூற வேண்டும். சுருங்க்க் கூறின் சர்வதேசக் குழந்தைகள் வாரத்தில் தொழிலாளி வர்க்கம் இளம் பயனீர்களைத் ‘தத்து’ எடுத்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைகள் எப்போதும் குழந்தைகளே. ஆகவே தான் இளம் பயனீர் கழகம் விளையாட்டுகளுக்குப் பெரிதும் முக்கியத்துவமளிக்கிறது. ஏனென்றால் குழந்தைகளின் உடற்கட்டை வளர்க்க விளையாட்டுகள் கண்டிப்பாகத் தேவை. அவை உடல் பலத்தை வளர்க்கின்றன, குழந்தைகளின் கைகளை வலுவுறச் செய்கின்றன, உடல் லாவகத்தை அதிகரிக்கின்றன, கண்பார்வையைக் கூர்மையாக்குகின்றன; அவர்களது நுண்ணறிவையும் சமயோசித புத்தியையும், முன்முயற்சியையும் வளர்க்கின்றன.  குழந்தைகளின் ஒழுங்கமைப்புத் திறமை, தன்னடக்கம், பொறுமை, நிலைமையை சீர்தூக்கி ஆராயும் திறமை போன்றவற்றை அதிகரிக்கின்றன.  நல்ல விளையாட்டுக்களும் கெட்ட விளையாட்டுக்களும் இருப்பது உண்மைதான்.  சில விளையாட்டுகள் குழந்தைகளைக் கொடியவர்களாகவும், முரடர்களாகவும் செய்கின்றன. பிற இனத்தினரை வெறுக்கத் தூண்டுகின்றன, குழந்தைகளின் நரம்பு மண்டலத்துக்குக் கேடு விளைவிக்கின்றன. சூதாடும் உணர்ச்சியையும் செருக்கையும் வளர்க்கின்றன.  வேறு சில விளையாட்டுகள் குழந்தைகளைச் சரியான முறையில் போற்றி வளர்க்கின்றன. குழந்தைகளின் மனதிடத்தை வலுப்படுத்துகின்றன. நீதி உணர்வை வளர்க்கின்றன. வேறு சில அவர்களைக் கம்யூனிஸ்டுகளாக்குகின்றன. கடைசியாகக் கூறியதை நிறைவேற்றுவதே இளம் பயனீர்கள் எடுத்துக்கொண்டுள்ள காரியம். இங்குதான் அவர்களுக்கு கம்யூனிஸ்ட் இளைஞர் சங்கம் உதவி புரிகிறது.


இளம் பயனீர்கள் விளையாட்டுகளில் மட்டும் ஈடுபடுவதில்லை. இக்காலக் குழந்தைகள் பலவற்றைக் கண்டுள்ளனர், கேட்டுள்ளனர்; மனிதகுலத்தின் மலர்ச்சிக்கும், புது வாழ்விற்குமான போராட்டத்தில் அவர்கள் கலந்துகொள்ள விரும்புகிறார்கள். இதில் அவர்களுக்குள்ள பங்கு ஒருவேளை பெரிதாக இல்லாமல் இருக்கலாம்;  மருந்துச் செடிகளைத் திரட்டுதல், தொழிற்சாலைகளுக்கு முன்னுள்ள வெற்றிடங்களைச் சுத்தப்படுத்தி அங்கே பூச்செடிகளை நடுதல், பச்சிளங்குழந்தைகள் விடுதிக்காகத் துணிகளைத் தைத்தல், கூட்டங்களுக்கான வரவேற்பிதழ்களை விநியோகம் செய்தல், தொழிலாளர் கிளப்புகளை அலங்கரித்தல் போன்றவையே அவை. ஆனால் இந்தக் கூட்டுப் பணிகள், தான் சமுதாயத்துக்கு உதவும் ஒரு உறுப்பின்ன் என்பதை இளம் பனீர் உணருமாறு செய்து, வேறு ஆக்க வேளைகளைச் செய்யுமாறு அவனைத் தூண்டி விடுகின்றன.  சோவியத் ஸ்தாபன்ங்கள் இளம் பயனீரிடம் கவனம் செலுத்த வேண்டும், அவர்களின் நடவடிக்கைகளின் மண்டலத்தை விரிவாக வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவேண்டும்.

குழந்தைகள் இயக்கம் பள்ளிக்கூடத்துக்கு விசேஷ முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனென்றால் குழந்தைகளின் “சுய ஆட்சியை” வலுவுறச் செய்ய உதவுகிறது.  புதிய போதனை முறைகளைக் கொண்டுவருவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறது. குழந்தைகளின் படிப்பு ஆர்வத்தையும் அறிவு வேட்கையையும் அதிகரிக்கிறது.  முற்போக்கான ஆசிரியர்கள் இளம் பயனீர்களைப் போற்ற வேண்டும். சர்வதேசக் குழந்தைகள் வாரத்தில் பள்ளிகள் இளம் பயனீர்கள் முன்னுள்ள வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். இளம் பயனீர்கள், புதிய பள்ளியை நிர்மாணிப்பதில் ஆசிரியர்களுக்கு முழுமனத்துடன் உதவ வேண்டும், பள்ளியின் நடுமையங்களாகத் திகழ வேண்டும்.

ஜூலை 24 முதல் 30 வரைப்பட்ட இந்த வாரத்தில் ருஷ்ய சோவியத் கூட்டாட்சி சோஷலிசக் குடியரசின் குழந்தைகள் இயக்கத்துக்கு ஒரு திடமான அடிப்படையை ஏற்படுத்த வேண்டும்.

- ந. கா. க்ரூப்ஸ்கயா, இளைஞர்களைக் கம்யூனிச முறையில் பயிற்றி வளர்த்தல், பக்.149-153


புகைப்படங்க: https://weirdrussia.com/2015/05/19/young-pioneer-organization-of-the-ussr/ (இந்த சுட்டியை சொடுக்கிப் படிக்கவும்) 

Jul 13, 2019

இராம காதை – ஒரு விமர்சனப் பார்வை




128: இராம காதை – ஒரு விமர்சனப் பார்வை
கொங்கனி-ஆங்கில நடைமுறை கலைக்களஞ்சிய அகராதி
ஆசிரியர் – பண்டரிநாத் புவநேத்திர ஜனார்த்தன்
சென்னைப் பல்கலைக் கழக, பகுப்பாய்வு வேதியல் துறை ஒய்வு பெற்ற பேராசியர்,தலைவர்.
1999 அச்சிடப்பட்டது

1.  இராமன், விஷ்ணுவின் அவதாரம்:- விஷ்ணுவின் அவதாரங்களில், இராமன், கிருஷ்ணன் ஆகிய இரு அவதாரங்கள் பிரதானப்பட்டுள்ளது. அவதாரம் என்றால் வம்சாவளியாக வாரிசு அல்லது வானிலிருந்து இறங்கி வந்தவர் என்று பொருள்கள் உண்டு. அந்த பின்னணியில், விஷ்ணுவாகப்பட்டவர் வைகுண்டத்திலிருந்து பூமிக்கு இறங்கி வந்தவர். ஆனால் அவர் இறங்கிவந்ததை கண்டவர் எவருமில்லை. வின்வெளி வீர்ர்கள் தங்கள் கண்களாலோ அல்லது சக்திவாய்ந்த தொலைநோக்கிகள் வாயிலாகவேனும் யாராவது அவரைக் கண்டதாக ஆதாரங்கள் இல்லை. இருப்பினும் வைகுண்டம் என்பது வானத்தில் இருக்கிறது என்று நாம் நம்ப வேண்டும். தன்னுடைய தேவலோகத்தை விட்டு விஷ்ணு ஏன் இந்த சாதாரண உலகிற்கு வரவேண்டும்? எப்போது அதற்கான தேவை ஏற்பட்டது? இதற்கான விடையை அவரே கீதையில் அத்தியாயம் IV S1-7 இல் கூறுகிறார்:

யதா யதா ஹி தர்மஸ்ய …. = அதாவது எப்போதெல்லாம் தர்மம் வீழ்த்தப்பட்டு அதர்மம் தலைதூக்குகிறதோ, ஓ! அர்ஜுனா அப்போது நான் இந்த பூமியில் பிறப்பெடுப்பேன். இதில் கிருஷ்ண பகவான், “பிறப்பெடுப்பேன்” என்று சொல்வதாவது பொருளுடையது, ஆனால் புராணங்களோ “இறங்கி வந்தார்” என்று குழப்புகின்றன. வான்வெளியிலிருந்து இறங்குதல் அல்லது அவதாரமெடுத்தல் என்பது இறங்கி வருவது என்பது மேலிருந்து கீழே வருவது அல்லது தரையிறக்கப்படுவது என்றும் பொருளாகும். ஆனால், மாயாஜாலக் கதைகளைக் கேட்டு குதூகலமடையும் மக்கள் வாழ்ந்த காலத்தில் இத்தகைய கேள்விகள் எழவில்லை. ஆனால் நவீன காலத்தில் புராணக் கட்டுக் கதைகளுக்கு ஆதாரமேதுமில்லை என்னும் புரிதல் உண்டாகிவிட்டது.

என்ன கதைகள் சொன்னாலும், ஒரு அவதாரமென்பது பிறப்பதில்லை, உருவாக்கப்படுவது. தாமரை மொட்டு போன்ற கண்கள், முட்டியைத் தொடுமளவு நீளமான கைகள் (ஆஜானபாகு) கையில் சங்கு, சங்கிரம் (ரேகை) போன்ற ‘சாமுத்ரிகா’ இலட்சனங்கள் இருக்கும் ஒரு சிறுவனை கவனமாக தேர்ந்தெடுத்து ஒரு அசாதாரண மனிதன் போல் நடந்துகொள்ளும் வகையில் ஒரு குருவின் கீழ் பயிற்றுவிக்கப்படுகிறார். இதற்காக அந்த சிறுவனுக்கு இறுமாப்பு ஊட்டி வளர்க்கப்படுகிறது. இறுதியில் அவர் தன்னை ஒரு மாபெரும் அவதார புருஷனாக நம்பத் தொடங்குகிறார். புதிய இலாமாவை (திபெத்து) தேர்ந்தெடுப்பதை விட இது சற்று கடினமான பணிதான்.

இராமனின் விஷயத்திலோ, ஆயத்தமாக அப்படி ஒரு சிறுவன் கிடைக்கவில்லை. ஆகவே அதர்வ சடங்குகளை நன்கு அறிந்திருக்கும் வேத விற்பண்ணர்களை தேர்ந்தெடுத்து புத்ர காமேஸ்டி (ஆண் குழந்தை வேண்டி செய்யப்படும் யாகம் – மொ.ர்) யாகம் நடத்த வேண்டியிருந்தது. சட்டப்படி இராமனின் தந்தை தசரதன் எனினும், ருஷ்ய சிருங்கனே அவனை பெற்ற தந்தையாக இருக்கக் கூடும். இராமன் அவதாரமாக உருவாக்கப்படுகிறான் என்பது வசிஷ்டர், கோதமர், விஸ்வாமித்ரர் மற்றும் இந்திரன் போன்ற ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். தசரதனுக்குக் கூட தெரியாது. அதனால் தான் இராமனையும், இலட்சுமணனையும் விஸ்வாமித்ரனுடன் காட்டிற்கு அனுப்ப தசரதன் தயங்கிய போது, “இராமன் யார் என்பது எனக்கு தெரியும், உனக்கு தெரியாது” என்று அவர் கர்ஜித்தார். அதிர்ந்த தசரதன் உடனே வசிஷ்டரிடம் ஒப்புதல் வாங்கினான்.

இப்படியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இராமனுக்கு தன்னுடைய சபதங்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய பயிற்சிகளை விஸ்வாமித்ரர் அளித்தார். உடனே அவன் இலட்சியபூர்வ நாயகனாகிறான். மற்றவர்களை விட இப்போது இச்சிறுவன் வேறு மாதிரி நடக்க வேண்டும். அதற்கு அவனுடைய இறுமாப்பை தூண்டிவிடுவதில், குரு முக்கிய பங்கு வகிப்பார். அதனோடு அவன் சில மாயாஜாலங்களைச் செய்ய வேண்டும், ஆகவே, மிதிலைக்கு செல்லும் வழியில், கல்லாகிப் போன அகலிகையை தொட்டு சாப விமோசனம் கொடுத்து அழகிய பெண்ணாக்குகிறான். சிவனின் (பினாகா) வில்லை முறித்தது மற்றொரு சாகசம். சத்திரியர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து, ஒரு சத்திரியனையும் உயிரோடு விடாத பரசுராமனை தோற்கடித்ததுதான் இராமனின் பெருஞ்சாகசம். அதற்கடுத்து ககாசுரனை (இந்திரனின் மகன்) வென்றது. இதெல்லாம் இராமனை பெருமைக்குரியவனாக்கியது. இப்படியாக தன்னுடைய சிந்தனை, வீர தீர செயல்கள் மூலம் ஒரு மனிதனை கடவுள் நிலைக்கு உயர்த்தினால் அதற்குப் பெயர் மேம்படுத்துதலே அன்றி அவதாரமில்லை (இறங்குதல் அல்லது தரையிரக்கம் இல்லை).

பாரத கண்ட்த்தில் ஆரிய இராஜ்ஜியத்தை பரப்பி, நிலைநாட்டுவதும், ஆரியர்களை பாதுகாப்பதும் தான் அவதார புருஷனுக்கான கடமை. அதாவது ஆரிய தர்மத்தை நிலைநாட்டி அதர்மத்தை ஒழித்தல். கூர்மதியுடன் ஒருவர் புராணங்களை ஆய்வு செய்தால், “ஆரியரால்லாதாரின் தர்மத்தை” ஒழித்தால் ஒழிய ஆரிய தர்மத்தைக் காக்க இயலாது என்பது தெளிவாகும். ஆரியரல்லாத (அநாரிய) என்றால், ஆரிய குலத்தைச் சாராதவர்கள் என்று பொருள், அதாவது ஆதிவாசிகள், பழங்குடிகள் என்றாகிறது. வேளாளர்களான ஆரியர்கள் மற்றும் பழங்குடிகளின் வாழ்வாதாரம் காடுகளைச் சார்ந்திருந்தது, ஆகவே அவர்களிடையே கடுமையான மோதலும் நிலவியது. யாகம் என்னும் பெயரில் ஆரியர்கள் காடுகளை தீயிட்டு கொளுத்தி அழித்தனர். தங்களுடைய வாழ்விடங்கள் அந்நியர்களால் அழிக்கப்படுவதைப் பார்த்துக்கொண்டு யார்தான் அமைதியாக இருப்பார்கள்? மூட்டப்பட்ட தீயை அணைக்க தண்ணீர் ஊற்றினால், அது அதர்மாகிவிடுகிறது. ஆரியர்களின் யாகத்தை குலைக்க அவர்கள் யாக குண்டத்தில் இரத்தத்தை ஊற்றினார்கள் என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டது. இப்படியாக ஆரியரல்லாத பழங்குடிகளுக்கு தீங்கு இழைக்காமல் ஓர் அவதார புருஷனால் ஆரியர்களுக்கு எந்த நன்மையும் செய்ய இயலவில்லை. “கடவுளானவர் தன்னுடைய படைப்பில் ஒவ்வொரு குழந்தையையும் நேசிக்கிறார்” என்னும் பழமொழி பொய்யாகிறது. ஆனால் ஆரிய புராணங்களோ விஷ்ணு கடவுளர்கள் அல்லது ஆரியர்களிடம் பாகுபாடு பார்க்கிறார் என்கின்றன. சரி, தர்மம் – அதர்மம் என்னும் இந்த மோதலில், எந்த சூழல் இராம அவதாரத்தை உண்டாக்கியது? சில காரணங்கள் பின்வருமாறு:

1.  பழங்குடிகள் பிரதானமாக விந்திய மலைப் பகுதியில் வாழ்ந்து வந்தனர். அதில் வானரர்கள், இராட்சசர்கள் ஆகிய பழங்குடிகள் பெரும்பான்மையினர். வானரர்களை (காட்டுவாசிகள்) வால்மீகி இராமாயணத்தில் வானரங்கள் (நீள வால் குரங்கு) என்று சித்தரித்தார். தக்‌ஷின கண்டத்திற்கு (தக்காணம்) பயணித்த ஆரியர்கள், பழங்குடிகள் மத்தியில் பெண்களை வேட்டையாடத் தொடங்கினர். வானரர்கள் இதனை எவ்வித எதிர்ப்புமின்றி மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர். இராட்சசர்கள் எதிர்த்தனர். ஆகவே ஆரியர்கள் இராட்சசர்கள் குறித்து அவதூறுகளை பரப்பினர் . மறுபுரம், வானரர்களை விஷ்ணுவின் படைப்பு என்று புகழ்ந்து, இராவணனை (சுரா சர்வே ஜயரேன் பூமாஒ வானர ரூபினா சஹாயம் கர்த்தும் மே இராவண நிக்ரஹே – ஸ்ரீ இராமோதந்தம்) எதிர்ப்பதற்கு ஏற்ற கூட்டணியை உருவாக்க திறம்பட வேலை செய்தனர்.

2.  இராட்சசர்களோ ஒழுங்கற்ற வகையில் வரவிக் கிடந்த இனமாகும். தொடக்கத்தில் ஆரியர்கள் அவர்களுக்குள் ஊடுறுவ முடிந்தது. அப்போதுதான் அவர்கள் இனத்தில் மானமும், விவேகமும் நிறைந்த ஒரு இராட்சசன் உதய சூரியன் போல் உதயமானான். அவன் தான் இராவணன். தன் கொடையின் கீழ் அந்த இனத்தை ஒருங்கிணைத்து தனயர்கள், நாகர்கள் மற்றும் இந்திரனை தோற்கடித்தான். இராட்சசர்களிடமிருந்து ஆரியர்கள் அபகரித்த நிலங்களையெல்லாம் மீட்டான். குபேரனிடமிருந்து இலங்கையை மீட்டான். வணிக முக்கியத்துவம் வாய்ந்த நீர் தடங்கள் பல இலங்கையில் இருந்தன. ஆரிய விரிவாதிக்கத்திற்கு இடைஞ்சலாக இருந்ததால் இராவணனின் இருப்பு அவர்களுக்கு அதர்மமானது.

3. ததாகி என்பவள் சக்திவாய்ந்த இராட்சசி. அவள் இராவணனின் உறவினள். அகத்திய முனிவர் தன் ஆசிரமத்தை ததாக வனத்தில் அமைத்தார். அப்போதுதான் வில்வித்தை பிரபலமாகி வந்தது. அவர் அதில் வித்தகர். கற்கள் மற்றும் மரங்களின் கிளைகள் கொண்டு சண்டியிட்டு வந்த வானரர்கள் மற்றும் இராட்சசர்களால் நீண்ட தூரம் பாயும் இரும்பாலான ஆரியர்களின் அம்புகளை எதிர்கொள்ள இயலவில்லை. அகத்தியரும் அவரது சீடர்களும் ஆசிரமத்தின் அருகில் வரும் இராட்சசர்களுக்கு தொந்தரவு கொடுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்கள். ஒரு நாள் இரவு ததாகை ஆசிரமத்திற்கு திடீர் விஜயம் செய்து, அகத்தியரை கைது செய்தாள். அகத்தியரின் சகோதரன் புலத்சிய பிரம்மனின் கண் முன்னே அகத்தியர் கழுத்தில் கயிறு கட்டப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டார். இந்த அவமானத்தைப் பொறுக்க முடியாது கடுஞ்சினம் கொண்ட பிரம்மன், இராட்சசர்களின் பௌலத்ஸய இனத்தையே அழித்தொழிப்பேன் என்று சபதம் பூண்டான்.

4. தான்யர்கள், நாகர்கள் அடங்கிய பெரும் படையுடன் இராவணன் இருந்தான். அவனது இலங்கை இராஜ்ஜியத்திற்கு போகும் வழிகளில் நிறைய ரிஷிகளின் ஆசிரமங்கள் இருந்தன. அதில் ஒருவர் இராஜ ரிஷி குஸத்வஜ ஜனகர். மிதிலையின் சிரத்வஜ ஜனகரின் அண்ணன். அகலிகைக்கும் இந்திரனுக்கும் பிறந்தவள் வேதவதி. சட்டப்படி அவளுடைய தந்தையான கோதமர் வேதவதியை தன்னுடன் வைத்துக்கொள்வதை அவமானமாகக் கருதினார். எனவே குஸத்வஜர் வேதவதியை தத்தெடுத்துக் கொண்டார். 16 வயதில் வேதவதி பேரழகியாக வளர்ந்து நின்றாள். எனவே பல இராட்சச இளைஞர்கள் அவளை பெண் கேட்டு குஸத்வஜரை அனுகினர். தன்னை விட்டு வேதவதி சென்றுவிட்டால் தனிமையில் துன்புற வேண்டுமே என்ற சுயநலம் காரணமாக தன் மகளை விஷ்ணுவிற்கு மட்டுமே திருமணம் செய்து கொடுப்பேன் என்று அந்த முதியவர் சொல்லி வந்தார். தன்னை வீட்டிலேயே அடைத்துவைக்கவே இந்த திட்டம் என்பது அப்பெண்ணுக்கும் தெரியும். ஆசிரமத்தை சுற்றி வலம் செல்லும் இராவணனை அவள் அடிக்கடி பார்ப்பாள். தன்னுடைய பலத்தால் இராவணன் அப்போது புகழ்மிக்கவனாக இருந்தான். இராவனேஸ்வரன் என்று அவனை எல்லோரும் கொண்டாடினர். அவன் தான் விஷ்ணுவிற்கு பதிலானவன் என்று வேதவதி பலமுறை எண்ணினாள். ஒருநால் அவர்களின் கண்கள் நான்கும் சந்தித்தன. சில நாட்களில் அவர்கள் நெருங்கி பழகத் தொடங்கினர். வேதவதிக்கு இராவணனின் வீரமும், புகழும் பிடித்திருந்தது. எனவே கந்தர்வ முறைப்படி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. உடனே கோரமாஸ்ரம்மும், குஸத்வஜ ஆசிரமமும் கோபத்தாலும், சாபத்தாலும் நிறைந்தது; இராவண குலத்தை அக்குலத்தின் சொந்த கரு கொண்டே அழித்திடுவதாக கோதமர் சபதம் பூண்டார். சில மாதங்களில் குழந்தையை தூக்கிக் கொண்டு சதாநந்த கோதமி மிதிலையில் ஓர் வனத்தில் கிடத்திச் சென்றாள். அக்குழந்தையை சிரத்வஜ ஜனகர் கண்டெடுத்தார். இதுதான் சீதையின் பிறப்பு மற்றும் வளர்ப்பு குறித்த இரகசியம். ஆனால் அவள் பூமா தேவியின் மகள் என்று இட்டுகட்டினர். வேதவதியை இராவணன் திருமணம் செய்தது பெரும் அதர்மம், ஏனென்றால், இராட்சச குலம் கீழ் வர்க்கம் (சாதி – மொ.ர்) எனவே இராவணன் தண்டனைக்குரியவன், கொல்லப்பட வேண்டியவன்.

5. திபெத்தின் வம்சாவளி மன்னன் இராவணன். அப்பொது அது திவிஸ்தபா என்று அழைக்கப்பட்டது. அநேகமாக அவன் அண்டை நாடுகள் பலவற்றையும் வென்றிருந்தான். இந்திரனின் அமராவதி மட்டுமே எஞ்சியது. போதிய முன் தயாரிப்புகள் இன்றி, அதிலும், இந்திரன் இத்தகைய தாக்குதலை எதிர்பார்த்து ஏற்கனவே படைகளை தயார் நிலையில் வைத்திருந்தான் என்றரியாது அமராவதி மீது போர் தொடுத்தான். தோல்வியின் விளைவாக இராவணன் பல நாட்கள் சோகத்தில் மூழ்கினான். மேகநாதன் தன் தந்தையின் இன்னலைக் காண முடியாது, மின்னல் வேக நடவடிக்கை எடுத்து, அமராவதி நகரத்தை துவம்சம் செய்தான். இந்திரனை கையும், காலும் கட்டி இழுத்துவந்து இராவணனின் காலில் கிடத்தினான். எல்லை வாயிற்கதவில் கட்டப்பட்டான், இலங்கையின் ஒவ்வொரு குடிமகனௌம் இந்திரனை ஏளனம் செய்தனர், கடவுளர்களின் அரசனை நையாண்டி செய்தனர்.  புலஸ்தைய பிரம்மனின் வேண்டுகளுக்குப் பிறகு, அதுவும் தனக்கு இந்திரஜித் (இந்திரனை வென்றவன்) என்று பட்டமளித்தப் பின்னரே இந்திரனை விடுவிக்க மேகநாதன் ஒப்புக்கொண்டான். இதனால் வன்மம் கொண்ட இந்திரன் என்ன விலை கொடுத்தேனும் இராவணனை பழிதீர்க்க கங்கணம் கட்டினான்.

இப்படியாக, இந்திரன், அகத்தியன், விஸ்வாமித்ரன், குஸத்வஜன், கோதமன், வைஸ்ரவணன் இன்னும் சிலரின் கோபங்களுக்கு இராவணன் ஆளானதாலேயே, அவனைக் கொல்வதற்கு இவர்கள் கூட்டணியில் இராமாவதாரம் உருவானது. அதுமட்டுமா, ஒவ்வொரு அவதார புருஷர்களின் உருவாக்கத்திற்குப் பின்னரும் தேவரிஷி நாரதன் (பண்டையக் கால நடமாடும் செய்தித் தாள்) தான் இருக்கிறான் என்பது பெரும்பாலருக்குத் தெரியாது. ஹிரண்யகசிபுவைக் கொண்ற வராஹ யாகத்திற்கு அவனே காரணம். மஹாபலியை ஏமாற்றிய உபேந்திரனின் தோற்றத்திற்குப் பின்னிருப்பவன் அவனே. அதேபோல் இராமனின் விஷயத்தில் நாரதன் செய்தது என்ன? தன்னுடைய சீடனான வால்மீகியிடம் ஒரு கதைக் கருவைக் கொடுத்தான். அவர் தன்னுடைய கவித் திறனால் அதனை ஒரு விரிவான நாடகமாக வடித்தார். இராமன் பிறக்கும் முன்பே இந்த திரைக்கதை உருவாகிவிட்டது. அதனைத் தொடர்ந்து இராமாயணம் என்பது அந்த திரைக்கதையின் அரங்கேற்றம் மட்டுமே.

தொடரும்….


Jul 12, 2019

ஆய்வு நூலா? வசைகளின் தொகுப்பா?


ஜூலை6 அன்று ‘நூல்வெளி’ பகுதியில் அம்பேத்கரின் சாதிய ஆய்வுகள் குறித்த ரங்கநாயகம்மாவின் நூலையும் அதை மறுத்து மதிவண்ணன் எழுதிய நூலையும் பற்றிய விமர்சன அறிமுகத்தைப் படித்தேன். செல்வ புவியரசன் சொல்லியிருப்பதுபோல அம்பேத்கரின் சாதி குறித்த பார்வையில் உள்ள போதாமைகளை ரங்கநாயகம்மா நிறுவ முயலவில்லை. நிறுவியேவிட்டார்.
செல்வ புவியரசன், அம்பேத்கரின் ஓரிரு மேற்கோள்களை எடுத்து அவர் மார்க்ஸியத்தை வெறுக்கவில்லை அல்லது மார்க்ஸை ஏற்றுக்கொண்டார் என்ற சித்திரத்தை வழங்க முடியுமெனில், அதேபோல் பல நூறு மேற்கோள்கள் கொண்டு அம்பேத்கர் எவ்வாறு மார்க்ஸியம் குறித்தும், புரட்சி குறித்தும் காழ்ப்புணர்ச்சியோடு பேசியுள்ளார் என்பதையும் நிரூபிக்க முடியும்.
அம்பேத்கருக்குத் தெரிந்தது ஏபிசிடி மார்க்சியம்தான் என எஸ்.வி.ராஜதுரை சுட்டிக்காட்டியதிலிருந்து அம்பேத்கருக்கு மார்க்ஸியம் சம்பந்தமான புத்தகங்கள் கிடைக்கவில்லை என அருணன் சொல்லியது முதற்கொண்டு டெல்டும்டே வரையில் அம்பேத்கருக்கு மார்க்ஸியம் பற்றிய புரிதல்கள் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக இருக்க, அம்பேத்கரின் தலையில் மார்க்ஸியப் புத்தகங்களைக் கட்டிச் சுமக்கவிடுகிறார் மதிவண்ணன்.
ஒட்டுமொத்தமாக, ரங்கநாயகம்மாவையும், கொற்றவையையும் திட்டுவதற்கு ஒரு நூலை எழுதி, அதை ஆங்காங்கு அம்பேத்கர் எழுதிய வார்த்தைகளால் வெட்டி ஒட்டி நிரப்பிவிட்டால், அது ஆய்வு நூல் தகுதியை அடைந்துவிட முடியுமா என்பதை செல்வ புவியரசன் விளக்க வேண்டும்.
மற்றபடி டுபாக்கூர் மற்றும் ஒரிஜினல் ஆய்வுகளை ஆய்வாளர்களும், வாசகர்களும் சமப்ந்தப்பட்ட நூல்களை வாசிக்கும்போது உணர்ந்துகொள்வார்கள். சுருக்கமாகச் சொன்னால், மதிவண்ணனின் நூல் ஒரு வசைக் குப்பை. பெண்களின் மீதான அருவருப்பு மற்றும் மத துவேஷத்தோடு இருப்பதுடன் அது அம்பேத்கருக்கே முரணான நூல்.
நன்றி - #வசுமித்ர (இன்றைய இந்து தமிழில் எதிர்வினை வெளியிடப்பட்டுள்ளது)

Jul 6, 2019

மார்க்சியர்களை தரம் பிரிக்க முதலில் மார்க்சியம் அறிந்திருக்க வேண்டும்

உலகம் தோன்றியது எப்படி என்று தொடங்கி… சமூகத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து அல்லது மனித சமூக வாழ்நிலைமைகள் குறித்து இங்கு பலரும் (தலைவர்களும்) வியாக்கியானம் செய்துள்ளனர். ஆய்வுகள் மேற்கொண்டு தரவுகளை தந்துள்ளனர். சில பல (தத்துவார்த்த) கண்டுபிடிப்புகளும் உண்டு.
சமூகத்தில் நிலவும் அநீதிகளுக்கெதிராக எண்ணற்றோர் கிளர்ந்தெழுந்துள்ளனர். சிலர் சீர்திருத்தங்களை முன் வைத்துள்ளனர். சிலர் புரட்சியில் ஈடுபட்டு பெரும் மாற்றங்களை கொண்டுவந்துள்ளனர். ஆனால் தத்துவார்த்த அடிப்படையில், சமூக விஞ்ஞானமாக எல்லா பிரச்சினைகளுக்குமான ஆணி வேரை அதாவது காரண காரியங்களை, அதாவது சமூகத்தின் இயக்க விதியை வரலாற்று வளர்ச்சியிலிருந்து, அதாவது அதன் உள் முரண்பாடு மற்றும் மாறும் தன்மைகளோடு எது சமூகத்தின் அடித்தளமாக விளங்குகிறது என்று விளக்கியவர் கார்ல் மார்க்ஸ் (எங்கல்ஸ், லெனின் இப்படியாக).
மார்க்சியம் என்பது வெறும் பொருளாதாரமல்ல... பொருளாதாரக் கண்ணோட்டம் மட்டுமல்ல. அது வெறும் பொருளாதார பிரச்சினைகளை மட்டும் அலசவில்லை. மனிதர்கள் சமூகமாக வாழத்தொடங்கிய வரலாற்று நிலைமைகள் தொடங்கி, அதன் வளர்ச்சிப் போக்கு, இயக்கப் போக்கு என்று கடந்த கால நிலைமைகள் மட்டுமின்றி எதிர்கால நன்மை மிகு சமூக அமைப்பிற்கான வேலைத்திட்டத்தையும் (தீர்வையும்) வழங்குவது மார்க்சியம்.
மார்க்சியம் என்பது வெறும் தத்துவமல்ல, வெறும் பொருளாதாரமல்ல, கற்பனாவாத பொதுவுடைமை பிதற்றலும் அல்ல.
மார்க்சியம் என்பது ஓர் உலகக் கண்ணோட்டம் - இயற்கையின் தோற்றத்தோடும், வளர்ச்சியோடும், இயக்கப் போக்கோடும் மட்டுமின்றி மனித உறவுகள் (அதாவது கூட்டுச் சமூக வாழ்வு) மற்றும் சமூக அமைப்பு, அதன் உள்ளார்ந்த விதிமுறைகள், சமூக வளர்ச்சி, இயக்கப் போக்கு ஆகியவற்றை ஆய்ந்தறிந்து, தொகுத்து, ஒரு வரைபடம் போல், அறிவியல் கண்டுபிடிப்புகளின் விதியைப் போல் நிறுவும் சூத்திரம் (உன்மையில் இந்த சொற்கள் போதவில்லை).
மார்க்சியம் என்பது ஓர் உலகப் பொதுமறை என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா? தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான சோஷலிசம் ஆகிய மூன்று கூறுகளைக் கொண்டது. இதை அடிப்படையாகக் கொண்டு எந்த நாட்டு நிலைமைகளையும், உழைக்கும் வர்க்கப் பிரச்சினைகளையும் ஆய்வு செய்ய முடியும்.
மேலும் மார்க்சியம் என்பது வெறும் பொருளாதாரக் கண்ணோட்டம் என்று கூறுவது மார்க்ஸை (மார்க்சியத்தை) கொச்சைப்படுத்துவதற்கு சமம்.. அல்லது மார்க்சியம் அறியாத பேச்சு! மார்க்ஸ் விளக்கும் அரசியல் பொருளாதாரம் என்பது சமூகத்தின் கட்டுமானம் குறித்தது – அது அடிக்கட்டுமானம், மேற்கட்டுமானம் என்று சமூகத்தின் அனைத்து இயக்க இயந்திரங்கள் (பண்பாடு உள்ளிட்ட) பற்றியும் உள்ளடக்கியது.
பொருளாதாரம் என்றால் ஏதோ பணப் பரிவர்த்தனை, சில கூட்டல் கழித்தல், ஐந்தாண்டு நலத் திட்டம், வரிவிதிப்பு இப்படியான புரிதலில் மார்க்சியத்தை வெறும் பொருளாதாரம் என்று கூறுவது அபத்தம்.
சமூக கண்ணோட்டம் என்று ஒன்று தனித்ததாக இங்கு இல்லை…. ஒவ்வொரு வரலாற்று கட்டத்திலும் நிலவும் உற்பத்தி முறைகளின் அடிப்படையில்தான் ஒரு சமூக கண்ணோட்டம் உருவாகும்… அது அடுத்த உற்பத்தி முறையில் தொடரும், நீர்த்து போகும், எச்ச சொச்சம் இருக்கும், அடுத்து அதுவே முரண்பட்டு மாறும்… அதாவது உற்பத்தி உறவுகளில் ஏற்படும் முரண்பாடுகள் காரணமாக உற்பத்தி முறையில் மாற்றம் ஏற்பட்டு சமூக-அரசியல்-பண்பாடு- பொருளாதார கட்டுமானம் எல்லாம் மாறும்….
இப்படியாக சமூக கண்ணோட்டம் என்பதை வரலாற்று வளர்ச்சியிலிருந்து காணக் கற்றுக்கொடுப்பதுதான் மார்க்சியக் கண்ணோட்டம்… அதுவே அதன் தத்துவார்த்தப் பார்வை… அதனுள் அடங்கியிருப்பது அரசியல் பொருளாதாரம். மேலும் சமூக கண்ணோட்டம் என்பதை புரிந்துகொள்வதில் மார்க்சியம் ஒரு தனித்துவமான சிந்தனையை நமக்களிக்கிறது – ஆளும் வர்க்க கருத்தியலே ஆளப்படும் வர்க்கங்களின் கருத்தியல் என்பதாகும்… மார்க்சியம் கற்ற ஒருவர் இந்த தத்துவ, அரசியல் பொருளாதார பார்வையிலிருந்தே எந்த ஒரு நிலைமையையும், பிரச்சினையையும் ஆய்வு செய்யவார்.
மார்க்சியக் கண்ணோட்டத்தில் வைக்கப்படும் விமர்சனங்களையும் இந்த கண்ணோட்டத்திலிருந்தே அணுக வேண்டும். அதைவிடுத்து நடுநிலைமையோடோ அல்லது பரிதாப உணர்விலிருந்தோ அல்லது தங்களின் அடையாள உணர்விலிருந்தோ… தங்களது தலைவர் என்கிற பக்கச் சார்பிலிருந்தோ அல்லது மிதவாத, தாராளவாத புரிதல்களிலிருந்தோ அணுகுவது விமர்சனத்தின் மீதான முழுமையான விமர்சனமாகாது.
அத்தகைய விமர்சனத்தின் மீதான விமர்சகரானவர் ‘ஒர்ஜினலா’ ‘டுபாக்கூரா’ என்று கண்டுபிடிக்க குறைந்தபட்சம் இந்த புரிதலாவது வேண்டும்.

மார்க்சியர்களை தரம் பிரிக்க முதலில் மார்க்சியம் அறிந்திருக்க வேண்டும். அதனோடு முதலாளித்துவ பேராசையும், அதிகாரப் பசியும் இல்லாதிருக்க வேண்டும்!

Jul 4, 2019

பின்-காலனிய இந்தியாவில் முதலாளித்துவ வளர்ச்சியும், சாதியமைப்பும்



மதம் என்பது இன்றைக்கு ஆளும் வர்க்க மேலாதிக்கத்திற்குப் பயன்படும் செயலூக்கமுடைய மேற்கட்டுமானக் கருவியாகும். ஆனால், சாதியமைப்பு என்பது மேற்கட்டுமானத்தோடு மட்டும் பிணைந்திருப்பதல்ல. அது, முதலாளித்துவ உற்பத்தி உறவுகளிலும் ஆழமாகச் சிக்குண்டு, இணைக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது.

நிலப்பிரபுத்துவ எச்சம் அல்லது நிலப்பிரபுத்துவ மேற்கட்டுமானத்தின் ஆற்றல்மிக்க தொடர்ச்சி என்பதோடு தொடர்புடைய பிரச்சினையல்ல இது. சாதியடிப்படையிலான மதிப்பீடுகள்-நம்பிக்கைகள் மற்றும் பாகுபாடுகள் மூலம் பொல்லாங்குகள் கொண்ட ஒரு புதிய பொருளாதார அடித்தளமொன்று  உருவாக்கப்பட்டு விட்டது. பல்வேறு மக்கள் பிரிவின் சாதியக் கொள்கைகளை உடைக்காமல் முதலாளித்துவ உற்பத்தியும், விநியோக அமைப்பும் அதன் மேலாதிக்கத்தை நிறுவியுள்ளது. உதாரணமாக, இன்றைக்கு ஆதிக்க சாதி மக்களே பெரும்பாலும் அரசு அதிகாரத்தில் உள்ளனர். சுதந்திர அறிவுஜீவித் தொழில்களும், சாதியும் அவர்களின் ஒற்றுமைக்கும்,  தங்களின் வர்க்க நலனைக் காக்கவும் பிணைப்பாக செயல்படுகின்றன.  அதற்கு எதிர்ச்செயலாக, அவர்களின் கீழ்நிலையில் இருக்கும், தலித் சாதிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சார்ந்த அலுவலர், எழுத்தாயர் மற்றும் சுதந்திர அறிவுஜீவிகள் சாதியடிப்படையிலானக் குழுக்களாக தம்மை ஒருங்குபடுத்திக் கொள்கின்றனர்.

கிராமப்புறங்களில், ஆதிக்க சாதி முதலாளித்துவ நில உடைமையாளர்கள் மற்றும் இடைநிலை சாதி குலாக்-விவசாயிகள் தலித்துகளையும், ஏழை விவசாயிகளையும் ஒடுக்க சாதியடிப்படையிலான அணிதிரட்டலை மேற்கொள்கின்றனர். அப்போது மேல் சாதியைச் சேர்ந்த ஏழைகள் கூட, எழுச்சியுடனோ அல்லது அடக்கத்துடனோ தங்கள் சாதியைச் சேர்ந்த சுரண்டலாளர்களின் பக்கம் நிற்கின்றனர் என்பதே இந்த சாதி அடிப்படையிலான அணிதிரட்டலின் மூலம் கிடைக்கும் வெற்றியாகும். அதேபோல், தலித்துகளும், தங்களின் அடையாளத்தையும், சுயமரியாதையையும் காக்கும் வண்ணம் தற்காப்பு ஒற்றுமை வேண்டி அம்பேத்கரின் பாரம்பரியத்தைத் தூக்கிப் பிடிக்கும் கட்சியின் தலைவர் பின்னால் அணிதிரள்கின்றனர்.

இடஒதுக்கீடானது 10 சதவிகித தலித் மக்களுக்கே பயன்பட்டுள்ளது, வேலைப் படிநிலையில் ஒருவர் மேலே போகும்போது, அது ஒன்று அல்லது இரண்டு சதவிகிதமாகக் குறைந்து போகிறது.
காலனிய சமூக-பொருளாதார அமைப்பிலிருந்து பிறந்து, ஏகாதிபத்திய உலகில் இருப்பது போன்று வளர்க்கப்பட்ட இந்திய முதலாளித்துவமானது, ஒரு எல்லைக்கு மேல் ஏகாதிபத்திய நலன்களுக்கு இடையூறு செய்ய முடியவில்லை (புதிதாக சுதந்திரம் பெற்ற நாடுகளின் முதலாளித்துவ வர்க்கத்தின் மிக தீவிர சக்திகள் கூட ஏகாதிபத்தியத்திடம் அடிப்படைக்கூறு சார்ந்து விரிசலை ஏற்படுத்த முடியவில்லை), பூர்ஷுவா நிலச் சீர்திருத்தங்களைக் கூட தீவிர முறையில் செயல்படுத்த முடியவில்லை. பிரிட்டிஷிடமிருந்து, நிர்வாக இயந்திரத்தையும், ஒன்றுபட்ட நாட்டின் சட்ட அமைப்பையும் உள்வாங்கிக் கொண்டது. பலவீனமான அரசமைப்பையும் உருவாக்கியது. தொடக்கத்தில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு அதன் மீது அதிக செல்வாக்கு இருந்தது. ஆனால் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மோதல்களைப் பயன்படுத்திக்கொண்டு மெல்ல தனது பொருளாதார மாற்றுகளை அது விரிவுபடுத்தி, மேலான நிலைமைகளின் கீழ் மூலதனம் மற்றும் தொழில்நுட்பத்தை பெற முயற்சித்தது. அதனைத் தொடர்ந்து, அதே தொழில்நுட்பத்தை இந்தியமயப்படுத்தி, தனது சொந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியது.
இங்கிருந்த முதலாளித்துவ வர்க்கத்திடம் மூலதனப் பற்றக்குறை இருந்ததால், அந்நிய மூலதனத்தின் அழுத்தத்தைக் குறைத்து தனியார் துறை வளர்ச்சி துரிதப்படும் வகையில், அடிப்படை மற்றும் உள்கட்டைமைப்பு சார்ந்த தொழிற்சாலைகளைக் கட்டியெழுப்ப மக்கள் கடுமையாக உழைத்துச் சேர்த்தப் பணத்தைப் பயன்படுத்தியது. இறக்குமதிக்கு மாற்றான தொழில்மயமாக்கலின்பாதை இதுவே. முதலாளிகளுக்கு மேலும் மேலும் மூலதனத்தை கொடுக்கும் வகையில் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. செல்வ வளமுள்ள நடுத்தர வர்க்க வளர்ச்சியோடு பங்குச் சந்தையின் மூலம் பெருமளவிலான மூலதனத் திரட்டலுக்கான பாதை வேயப்பட்டது. இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் பலம் பாரிய அளவில் பெருகியபின்னர், அரசு நிறுவனங்களை அற்ப விலைக்கு விற்கும் நடைமுறை தொடங்கியது. இந்திய முதலாளித்துவத்தின் இந்த தனியார்மைய தாராளவாத யுகமானது, அதன் தேவையை, கட்டாயத்தை, அதிகரித்து வந்த அதன் நம்பிக்கையை உணர்த்துகிறது. இன்றைய நவ-தாராளவாத யுகத்தில், நெருக்கடிகள் ஆட்கொண்டுள்ள சர்வதேச மூலதனமும்கூட பாதுகாப்புக் கொள்கைகளை கைவிடச் சொல்லி அழுத்தம் கொடுக்கின்றன. பரந்த, தொடர்ந்து விரிவடைந்து வரும் இந்திய சந்தையில் தனது பங்கை எடுத்துக்கொள்ளும்விதமாக ஏகாதிபத்தியங்களுக்கு இந்திய முதலாளித்துவம் கதவைத் திறந்து விட்டது. மறுபுறம், உலகமயமாக்கப்பட்ட உலகச் சந்தையில், நாட்டிற்கு வெளியே மெல்ல முதலீடு செய்யத் தொடங்கியது. உலக முதலாளித்துவ அமைப்பில், இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் நிலையானது ஒரு இளைய பங்காளியைப் போன்றதாகும். உலகளவில் கைப்பற்றப்பட்ட உபரியிலிருந்து ஒரு சிறு பங்கைப் பெறுகிறது, ஆனால் உள்நாட்டளவில், இன்றைக்கும் அதுவே மிகப் பெரிய பங்குதாரராக உள்ளது. ஒப்பீட்டளவில், அதிக வளர்ச்சியுற்ற உற்பத்தி சக்திகளைக் கொண்டிருக்கும் பின்-காலனிய நாடுகளின் வரிசையில் உள்ளது.
வரலாற்று நிலைமைகளில், தீவிர நிலச் சீர்திருத்தங்கள் மூலம் சிறு மற்றும் பெரிய நில உடைமையாளர்களின் நலன்களைத் திட்டவட்டமாக முறியடிக்க முடியாத வகையில் இந்திய முதலாளித்துவ பண்பு பரிணமித்தது. அதனால் அது, ஜெர்மானிய ஜங்கர் பாணி மாற்றம் மற்றும் ரஷிய ஸ்டோலிபின் பாணி நிலச் சீர்திருத்தங்களின் கலவையான இந்தியப் பாணியை நடைமுறைப்படுத்தியது. பழைய சுரண்டலாளர்கள் தங்களது சுரண்டல் முறையை மாற்றிக்கொள்ள வாய்ப்பு வழங்கியது. பழைய ராஜாக்கள், இளவரசர்களின் தோட்டங்களை எடுத்துக்கொண்டது, ஆனால் அவர்களது ஏராளமான செல்வம், கோட்டை மாளிகைகள் மற்றும் நில உடைமைகள் விட்டுவைக்கப்பட்டன. மேலும், இரண்டு தசாப்தங்களுக்கு இரகசிய பண முடிப்புகளும் வழங்கப்பட்டன. இந்த அடிப்படையில்தான் ராஜாக்கள், பெரிய முதலாளிகளின் வரிசையில், அவர்களது ஹோட்டல்கள், தொழிற்சாலைகளில் செயல்படா பங்காளிகளானார்கள் அல்லது முதலாளித்துவ நிலக்கிழார்களானார்கள். ஜமீன்தாரி ஒழிப்பு மெதுவான வேகத்தில் முன்னெடுக்கப்பட்டது, நிலக்கிழார்கள் குத்தகையை சார்ந்திருப்பதைக் காட்டிலும், சந்தைக்காக உற்பத்தி செய்யும் பூர்ஷுவா நிலப் பிரபுக்களாக மாறவும், நில உச்ச வரம்பிலிருந்து தங்களது நிலங்களைக் காத்துக் கொள்ளவும், நகர்புற மேல் மத்திய வர்க்கங்களின் வரிசையில் இணைவதற்குமான வாய்ப்புகளை வழங்கியது.
நிலவுடைமையாளரான பின்னர் முந்தையகால பணக்கார மற்றும் நடுத்தரக் குத்தகைதாரர்களின் பெரும் பிரிவினர்கூட முதலாளித்துவ விவசாய குலாக்குகள் ஆனார்கள். பெரும்பாலானவர்கள் ரெட்டி, கம்மா, தேவார், மராத்தா, ஜாட், குர்மி, குஷாவா, சைந்த்வார் போன்ற இடைநிலை சாதியினர் ஆவர். (இங்கு தேவர், கவுண்டர் போன்ற சாதிகள் மொர்.) பூர்ஷுவா கட்சிகளில், குலாக்குகள்-விவசாயிகள் குழுக்கள் உருவாக்கப்பட்டு, அவர்களது கட்சிகள் வட்டார அளவில் தோன்றலாயின. அத்தகைய கட்சிகளில் மக்களை அணிதிரட்டுவதில் சாதி ஒரு முக்கிய பங்காற்றியது. தலித்துகளை ஒடுக்குவதில், இந்த இடைநிலை சாதிகளின் விவசாயிகள் (சூத்திர சாதிகள் என்று சொல்லப்படுவோர்) பழைய நிலக்கிழார்களின் வாரிசுகளான மேல்சாதியைச் சேர்ந்த பூர்ஷுவா நிலப்பிரபுக்களையும் மிஞ்சியவர்களாக இருந்தனர்.
பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி என்றெல்லாம் சொல்லப்பட்ட புரட்சிகள், கிராமப்புறங்களிலும், வேளாண் தொழிலிலும் மூலதன வரவுக்கு வழிகோலும் விதமாக செழிப்பானக் களத்தை தயார் செய்தன. மறுபுறம், மூலதனத்தின் பலத்திற்கு ஏற்றவாறு, உபரியைக் கைப்பற்றிக் கொள்வதற்கான வாய்ப்பை முதலாளித்துவ நிலப்பிரபு-குலாக்குகளுக்கு வாரி வழங்கின. வேளாண் மற்றும் அதுசார்ந்த துறைகள் நாடு முழுவதிலும் வளர்ச்சியடைந்தது. நகர்புற செல்வந்தர்கள் கூட தங்களது மூலதனத் திரட்டிலிருந்து விவசாயத்தில் முதலீடு செய்தனர். மூலதனத் தீவிரமுடைய நவீன விவசாயப் போக்கு முன் நகர்ந்தது. விவசாயக் குடிகளுக்கிடையிலான பாகுபாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. இயற்கைப் பொருளாதாரம் மற்றும் வட்டாரச் சந்தை ஆகியவற்றின் எச்சம் துடைத்தழிக்கப்பட்டது, தொலைதூரப் பகுதிகள்கூட தேசிய மற்றும் சர்வதேசியச் சந்தையோடு இணைக்கப்பட்டது. பழைய நில வாடகை முறை இன்னும் சில இடங்களில் நிலவியது, ஆனால் முதலாளித்துவ வளர்ச்சிப் பாதைக்கு அது தடையாக இருக்கவில்லை (மார்க்ஸும் எங்கெல்ஸும் இதனை தெளிவுபடுத்தியுள்ளனர்).
வாடகையின் பண்பு முற்றிலும் முதலாளித்துவமாகி விட்டது. விவசாயத்தில் உள்ள முதலாளித்துவமானது ஒன்று, முன் முதலாளித்துவ அமைப்புகளை உடைத்துவிட்டது அல்லது இணைத்துக் கொண்டது. முன் முதலாளித்துவ எச்சங்களின் இருப்பு வட்டம் சுருங்கிக் கொண்டே வருகிறது. இந்தப் போக்கானது கிராமப்புறங்களிலிருந்து பெருமளவிலான உழைப்பாளர் இடப்பெயர்வுக்கு வழிவகுத்தது. தொழிற்துறை முதலாளித்துவத்திற்கு உழைப்பு சக்தியை குறைந்த விலைக்கு வாங்குவது எளிதாகி விட்டது. பெருநகர தொழில் நகரங்களின் நரகம் போன்ற தொழிலாளர் காலனிகள், தற்காலிக, முறைசாரா, தினக்கூலி, ஒப்பந்த மற்றும் எண்ணிக்கை விலைத் தொழிலாளர்கள் மற்றும் மாபெரும் அளவில் அரைப் பாட்டாளி வர்க்க கூட்டங்களால் நிரம்பியது.
இவ்வாறாக, இடைப்பட்டதரமான, சிதைந்த-நெளிந்த முதலாளித்துவமானது இந்தியாவில் கூடுதல் வலி மிகுந்த பாதையில் வளர்ந்தது, மெல்ல மெல்ல முன் முதலாளித்துவ அமைப்புகளை ஒன்று உடைத்தது அல்லது, இணைத்துக் கொண்டது அல்லது அடக்கியது. அத்தகைய முதலாளித்துவமானது ஆரோக்கியமான ஜனநாயக மதிப்பீடுகளையும், நம்பிக்கைகளையும் உருவாக்க தகுதியற்றது. அதன் ஜனநாயகமானது மிகவும் வரையறுக்கப்பட்டது, சிதைந்து-நெளிந்தது. அதனால்தான் அது முன்-முதலாளித்துவ மதிப்பீடுகள் மற்றும் நிறுவனங்கள் மீது கை வைக்கவில்லை. கப் பஞ்சாயத்துகள் மற்றும் சாதிப் பஞ்சாயத்துகள் தொடர்ந்தன, வைதீகத் தளைகளின் இருப்பு தொடர்ந்தது. அவை ஓரளவுக்கு பலவீனப்பட்டதென்றால், அது அரசின் முயற்சியாலோ அல்லது, அரசமைப்பு விதிகளினாலோ அல்ல மாறாக, முதலாளித்துவ வளர்ச்சியின் சுதந்திர புறவய இயக்கத்திற்கு அதில் பங்கிருக்கிறது. மதங்களின் தலையீடு முடிவுக்கு வரவில்லை, சற்று தளர்ந்திருக்கிறது. ஆனால், மறுபுறம் புதிய நவீனப் பிரிவுகள் தோன்றியுள்ளன, அவை மூட நம்பிக்கையை பரப்புவதற்கான, முன்பிருந்த நிலையை அப்படியே தக்கவைத்துக் கொள்வதற்கான செயலூக்கக் கருவிகளாக இருப்பதோடு, மூலதனத் திரட்டல் மற்றும் முதலீட்டிற்கான ஒரு சாதனமாகவும் இருக்கிறது. முதலாளித்துவ அமைப்பில், மதத்தின் புறவய அடிப்படையே, சரக்கு உற்பத்தியின் கண்ணுக்குத் தெரியாத சக்தி, மேலும், மதம் என்பது இன்றைக்கு ஆளும் வர்க்க மேலாதிக்கத்திற்குப் பயன்படும் செயலூக்கமுடைய மேற்கட்டுமானக் கருவியாகும். ஆனால், சாதியமைப்பு என்பது மேற்கட்டுமானத்தோடு மட்டும் பிணைந்திருப்பதல்ல. அது, முதலாளித்துவ உற்பத்தி உறவுகளிலும் ஆழமாகச் சிக்குண்டு, இணைக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது.
நிலப்பிரபுத்துவ எச்சம் அல்லது நிலப்பிரபுத்துவ மேற்கட்டுமானத்தின் ஆற்றல்மிக்க தொடர்ச்சி என்பதோடு தொடர்புடைய பிரச்சினையல்ல இது. சாதியடிப்படையிலான மதிப்பீடுகள்-நம்பிக்கைகள் மற்றும் பாகுபாடுகள் மூலம் பொல்லாங்குகள் கொண்ட ஒரு புதிய பொருளாதார அடித்தளமொன்று உருவாக்கப்பட்டு விட்டது. பல்வேறு மக்கள் பிரிவின் சாதியக் கொள்கைகளை உடைக்காமல் முதலாளித்துவ உற்பத்தியும், விநியோக அமைப்பும் அதன் மேலாதிக்கத்தை நிறுவியுள்ளது. உதாரணமாக, இன்றைக்கு ஆதிக்க சாதி மக்களே பெரும்பாலும் அரசு அதிகாரத்தில் உள்ளனர். சுதந்திர அறிவுஜீவித் தொழில்களும், சாதியும் அவர்களின் ஒற்றுமைக்கும், தங்களின் வர்க்க நலனைக் காக்கவும் பிணைப்பாக செயல்படுகின்றன. அதற்கு எதிர்ச்செயலாக, அவர்களின் கீழ்நிலையில் இருக்கும், தலித் சாதிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சார்ந்த அலுவலர், எழுத்தாயர் மற்றும் சுதந்திர அறிவுஜீவிகள் சாதியடிப்படையிலானக் குழுக்களாக தம்மை ஒருங்குபடுத்திக் கொள்கின்றனர்.
கிராமப்புறங்களில், ஆதிக்க சாதி முதலாளித்துவ நில உடைமையாளர்கள் மற்றும் இடைநிலை சாதி குலாக்-விவசாயிகள் தலித்துகளையும், ஏழை விவசாயிகளையும் ஒடுக்க சாதியடிப்படையிலான அணிதிரட்டலை மேற்கொள்கின்றனர். அப்போது மேல் சாதியைச் சேர்ந்த ஏழைகள் கூட, எழுச்சியுடனோ அல்லது அடக்கத்துடனோ தங்கள் சாதியைச் சேர்ந்த சுரண்டலாளர்களின் பக்கம் நிற்கின்றனர் என்பதே இந்த சாதி அடிப்படையிலான அணிதிரட்டலின் மூலம் கிடைக்கும் வெற்றியாகும். அதேபோல், தலித்துகளும், தங்களின் அடையாளத்தையும், சுயமரியாதையையும் காக்கும் வண்ணம் தற்காப்பு ஒற்றுமை வேண்டி அம்பேத்கரின் பாரம்பரியத்தைத் தூக்கிப் பிடிக்கும் கட்சியின் தலைவர் பின்னால் அணிதிரள்கின்றனர்.
நகரங்களின் நிலைமை சற்று மாறுபட்டது. ஆனால் அங்கும், அதன் பொருளாயத அடிப்படையிலும் சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் நிலவத்தான் செய்கின்றன. முறைசார் தொழிலாளி வர்க்க மக்களில் மேலான வாழ்க்கை நிலை கொண்ட தலித்துகளின் விகிதம் என்பது மிகக் குறைவு. முறைசாராத் தொழிலாளர்களில் அவர்களுடைய விகிதம் குறிப்பிடத்தக்கது, அங்கும் அசுத்தம் எனக் கருதப்படும் பணிகளிலேயே அவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும், கடுமையான, குறைந்த ஊதியம் மட்டுமே கிடைக்கக் கூடிய தொழில்களையும் அவர்களே செய்ய வேண்டும். அரசாங்கப் பணிகளிலும், துப்புரவுத் தொழிலாளர்கள் தலித்துகளே. இடஒதுக்கீடானது 10 சதவிகித தலித் மக்களுக்கே பயன்பட்டுள்ளது, வேலைப் படிநிலையில் ஒருவர் மேலே போகும்போது, அது ஒன்று அல்லது இரண்டு சதவிகிதமாகக் குறைந்து போகிறது. நிர்வாகம், இராணுவம், காவல்துறை, நீதித்துறை மற்றும் சுதந்திர அறிவுஜீவிப் பணிகள் எல்லா இடத்திலும் இதே நிலைதான். இதற்கு சமமான நிலையில் இருக்கும் சமூகம் ஒன்று உண்டென்றால் அது முஸ்லிம் சமுதாயமாகும், பெரும்பாலானவர்கள் ஏழைகளாக இருக்கின்றனர், அவர்களில் பெரும்பாலர் சுதந்திர கைவிவினைத் தொழிலில் ஈடுபடுகின்றனர்.
தொழிற்சாலை தொழிலாளர்களிடையே, வேரோடு இன்னும் தூக்கி எறியப்படாத மேல் மற்றும் இடைநிலைச் சாதிகளை சார்ந்தவர்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். இருக்கும் கொஞ்ச நஞ்ச நிலத்தில் நஷ்டத்தையும் சமாளித்துக்கொண்டு தங்கள் கூலிகள் மூலம் காலம் தள்ளுகின்றனர். அத்தகைய தொழிலாளர்களின் பாட்டாளி வர்க்கப் பண்பில் விவசாயத்தின் சாயல்களை நாம் காண முடியும், மேலும் அது வர்க்க உணர்வை மழுங்கடித்து, சாதிய முற்சாய்வை தக்கவைத்துக் கொள்கிறது. சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் தாழ்த்தப்படுதலானது சாதியடைப்படையில் ஒன்றுபடும் உணர்வையே அவர்களிடத்தில் ஏற்படுத்துகிறது. நகரங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் தலித் சாதிகள் விலக்கி வைக்கப்படுவது நிகழ்கிறது. கிராமங்களைப் போல் அது வெளிப்படையாகத் தெரிவதில்லை. இப்போக்கை தொழிலாளர் வர்க்கத்தில் மட்டுமல்ல இடைநிலைச் சாதிகளிலும் காணலாம். குடியிருப்பு கூட்டுறவு சமுதயாங்களில், தலித்துகளோ முஸ்லீம்களோ உறுப்பினராவதென்பது இயலாத காரியம். பெரு நகரங்களில்கூட வீடு வாடகைக்குப் பிடிப்பது கடினமாக இருப்பதற்கும் சாதி (அல்லது மதம்) ஒரு காரணம்.
இந்தியாவில் உள்ள பூர்ஷுவா பாராளுமன்ற அரசியலானது சமூக பொருளாதார திட்டங்களின் அடிப்படையில் வேலை செய்வதில்லை. மாறாக, மூலத்தனத்தின் திறந்த விளையாட்டின் உதவியுடனும், சில ஜனரஞ்சக வாக்குறுதிகள் மூலமாகவும் அல்லது நிலவும் மனநிலைக்கு ஏற்பவும் செயல்படுகிறது. ஆனால், சாதி அடிப்படையிலான பிரிவினை என்பதே இன்று அதன் முக்கியத் தூண். பூர்ஷுவா கட்சிகளின் கொள்கைகள் மூலம் சாதிக்கு எந்த சேவையும் செய்யவில்லை, மாறாக ஆளும் வர்க்கத்திற்கே சேவை செய்கிறது. அது, சிறு, பெரு முதலாளிகள், குலாக்குகளின் குழுக்கள் மற்றும் நிலக்கிழார்கள், குலாக்குகள் மற்றும் வட்டார முதலாளிகளை உள்ளடக்கியிருக்கிறது. பிராந்திய முதலாளிகள் தங்களுக்கென்று கட்சிகளை வைத்துக்கொள்கிறார்கள், அவர்களுடைய வர்க்க நலன்களும் ஒன்றோடு ஒன்று மோதுகின்றன. ஆனால், பொதுவான பூர்ஷுவாப் பொருளாதார கொள்கைகள் மற்றும் பாராளுமன்ற அமைப்பின் மீது அவர்களுக்குள் ஒற்றுமை நிலவுகிறது.
அதேபோல், பல்வேறு சாதியினரின் ஆதரவு வேண்டி ஒவ்வொரு பெரிய பூர்ஷுவாக் கட்சிகளிலும் பல்வேறு சாதித் தலைவர்கள் உள்ளனர். சட்டமன்றத் தொகுதிகளுக்கு வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது கூட குறிப்பிட்ட தொகுதியின் சாதி விகிதம் பொருத்தே அமைகிறது. பிராந்திய முதலாளிகளின் நலன்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகளைப் பொறுத்தவரை, நடுத்தர வர்க்கமே அவர்களது முக்கிய ஓட்டு வங்கி. தலித்துகளின் பிரதிநிதிகளாகச் சொல்லிக் கொள்ளும் அனைத்து பாராளுமன்ற கட்சிகளும், கொள்கை அளவில் மிகுந்த சந்தர்ப்பவாதக் கட்சிகள், வளம் மிக்க தலித் நடுத்தர வர்க்கம் அதில் தலைமைப் பதவி பெற்றுவிடுகின்றன. தலித் அரசு அதிகாரிகளும், அறிவுஜீவிகளும் அதற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். நூற்றாண்டுகாலமாக ஒடுக்கப்பட்டுவந்த தலித் மக்களை சாதிய அடிப்படையிலான ஓட்டு வங்கியாக மாற்றுகின்றனர். அடிப்படை ஆதார மாற்றம் என்று கூறி புதிய நம்பிக்கைகளை இக்கட்சிகள் ஊட்டுகின்றன. அதேவேளை, காங்கிரஸ், பிஜேபி அல்லது எந்தக் கட்சியுடனாவது சந்தர்ப்பவாதக் கூட்டணிகள் அமைத்துக் கொள்ளத் தயங்குவதுமில்லை. கூட்டணி எனும் பூர்ஷுவா அரசியலில் இக்கட்சிகள் எடைத் தராசின் எடைக் கற்களாகின்றனர். அதிகாரத்தில் பங்குபெற்று சமூக ஒடுக்குமுறை மற்றும் இழிவுபடுத்துதலை வெல்ல நினைக்கும் தர்க்கமானது கடந்த எழுபது ஆண்டுகளில் இந்தளவில்தான் இருக்கிறது; அடையாள அரசியலின் விற்பனையாளர்கள் ஒரு அரங்கத்திற்குள் இதை எவ்வளவு வேண்டுமானாலும் கொண்டாடிக் கொள்ளட்டும், ஆனால் சாதாரண உழைக்கும் தலித் மக்கள் இதனால் எந்தப் பயனையும் அடையப்போவதில்லை. இதுவரையிலும் எதையும் சாதிக்கவில்லை, எதிர்காலத்திலும் எதையும் சாதிக்கப் போவதுமில்லை.
(சாதியப் பிரச்சினையும் அதற்கான தீர்மானங்களும்: ஒரு மார்க்சியக் கண்ணோட்டம் - அர்விந்த் மார்க்சியக் கல்வியகம், சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்: தொடரும் விவாதம்... பக். 84)