Dec 16, 2014

இதுவரை ஏன் இதனை எவரும் முயற்சித்திருக்கவில்லை?:



‘பாலியல் தொழிலை ஒழிக்க முடியாது, அது என்றென்றும் நிலைத்திருக்கும்’ என்பன போன்ற நூற்றாண்டுகால வழமையான பேச்சுக்களுக்கு மத்தியில், அத்தொழிலை ஒழிப்பதில் ஒரு நாடு அடைந்திருக்கும் வெற்றியானது தீர்வை நோக்கி ஒளியூட்டும் ஒரு தனித்த கலங்கரை விளக்கம் போல் உள்ளது. ஐந்தே வருடங்களில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை சுவீடனில் குறைந்துள்ளது. தலைநகர் ஸ்டால்க்ஹோமில் தெருவோர பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கையானது இரண்டு மடங்காகக் குறைந்துள்ளன. ஜான்களின் (பாலியல் வாடிக்கையாளர்) எண்ணிக்கையும் 80% குறைந்துள்ளன. பல சுவீடிஷ் தெருக்களில் பாலியல் தொழில் முற்றிலுமாக மறைந்துவிட்டது. சுவீடனில் பாலியல் தொழில் சட்டபூர்வமாக இருந்தபோது, இருபதாம் நூற்றாண்டின் கடந்த மூன்று பத்தாண்டுகளாக அதிகரித்து வந்த பிரபல சுவீடிஷ் விபச்சார விடுதிகளும், மசாஜ் பார்லர்களும்கூட மறைந்துவிட்டன.

பாலியல் தொழிலுக்கு சுவீடன் நாட்டின் தீர்வுஏன் இதை எவரும் முன்னரேமுயற்சி செய்திருக்கவில்லை?

கூடுதலாக, பாலியல் தொழிலுக்காக சுவீடனுக்குக் கடத்தப்படும் வெளிநாட்டுப் பெண்களின் எண்ணிக்கை பூஜ்ஜியம் என்றளவிற்கு வந்துவிட்டது. கடந்த சில வருடங்களில் வருடத்திற்கு 200 முதல் 400 பெண்கள் மற்றும் சிறுமிகள் மட்டுமே பாலியல் தொழிலுக்காகக் கடத்தப்பட்டனர் என்று சுவீடிஷ் அரசாங்கம் கூறுகிறது. அண்டை நாடான ஃபின்லாந்தில் வருடத்திற்கு 15,000 முதல் 17,000 பெண்கள் கடத்தப்படுகின்றனர் எனும் நிலையை ஒப்பிடுகையில் மேற்சொன்ன எண்ணிக்கை வெகு சொற்பமே.
மற்ற எந்த நாடுககளோ அல்லது மற்ற எந்த சமூகப் பலப்பரீட்சை முயற்சிகளோ சுவீடனின் நம்பிக்கைக்குறிய முடிவை ஈன்றதில்லை.
மகத்தான இந்த சாதனையை அடைய அப்படி என்னதான் சிக்கலான சூத்திரத்தை சுவீடன் கையாண்டது?
வியப்புகுரிய வகையில், சுவீடனின் சூத்திரம் ஒன்றும் அப்படி சிக்கலானதல்ல. உண்மையில், அதன் கொள்கை மிகவும் எளிதானதாகவும், சமயோசித அறிவைக் கொண்டு எவரும் எளிதில் கண்டுவிடக் கூடியத் தீர்வாகவே தெரிகின்றது. அதனால்தான் உடனேயே இக்கேள்வி நமக்கு எழுகிறது, “ஏன் இதை இதுவரை எவரும் முயற்சிக்கவில்லை?”
சுவீடனின் 1999ஆம் ஆண்டின் புரட்சிகரமான சட்டம்
பல வருட ஆய்வுகளுக்குப் பிறகு 1999இல் சுவீடன் ஒரு சட்டத்தை அறிமுகம் செய்தது: அ) பாலின்பத்தை (Sex) வாங்குவதை குற்றமெனக் கருதுதல் ஆ) பாலின்பத்தை விற்பதை குற்றமற்றதாகக் கருதுதல். இந்தச் சட்டத்தின் பின் இருக்கும் புதுமையான கொள்கையை அரசு தனது சட்ட ஆவணத்தில் தெளிவாக விளக்கியிருக்கிறது:
“சுவீடன் நாட்டைப் பொறுத்தவரை, பாலியல் தொழில் என்பது பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான ஆணாதிக்க வன்முறையின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் ஒரு சுரண்டல் எனவும் அது ஒரு பிரதான சமூகப் பிரச்சினை எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது… பெண்களை, குழந்தைகளை பாலியல் தொழிலுக்காக ஆண்கள் வாங்குவதும் விற்பதும் நடக்கும்வரை பாலியல் சமத்துவத்தை நாம் அடைய முடியாது.”
பாலியல் தொழில் பற்றிய சுவீடனின் இரண்டுபக்க சட்ட செயல்திட்டத்தோடு கூடுதலாக ஒரு பக்கமானது பாலியல் தொழிலிலிருந்து வெளியேற நினைக்கும் பாலியல் தொழிலாளிகளுக்கு உதவும் வகையில் ஏராளமான சமூக நல நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், மக்களுக்கான விழிப்புணர்வுக் கல்விக்காகவும் கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. உள்ளபடியே, சுவீடனின் தனித்துவமான இந்த செயல்திட்டம் பாலியல் தொழிலை பெண்களுக்கெதிரான வன்முறையாகக் கருதுகின்றது. அதனால் பாலின்பத்தை வாங்குவதன் மூலமாக பெண்களை சுரண்டும் ஆண்கள் குற்றவாளிகளாகக் கருதப்படுகின்றனர், பெண் பாலியல் தொழிலாளிகள் பாதிக்கப்பட்டவர்களாகக் கருதப்படுகின்றனர். மேலும், இதுநாள்வரை இருந்த பாலியல் தொழில்குறித்த மடத்தனமான ஆண் சார்பை எதிர்கொள்ளும் வகையில் மக்களுக்கு கல்வி வழங்கப்படுகின்றது. அவர்களது கண்ணோட்டத்தை சட்டத்தின் பிடி கொண்டு இருக்கிப் பிடிக்கும் வகையில், பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான சட்டத் தொகுப்பின் ஓர் அங்கமாக பாலில் தொழில் சட்டம் சுவீடனில்1999ஆம் வருடம் இயற்றப்பட்டது.

அதன் பாதையில் தொடக்ககாலத் தடைகள்
ஆர்வமூட்டும் வகையில், அச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்னரான விரிவான திட்டமிடல் காலத்தின்போது முதல் ஓரிரு வருடங்களில் இந்தப் புதுமையானத் திட்டத்தில் பெரிதாக ஏதும் நடைபெறவே இல்லை. பாலியல் தொழில் சுவீடனில் சட்டபூர்வமாக இருந்த காரணத்தால் முந்தைய மனநிலையிலேயே இருந்த காவல்துறையானது மிகவும் குறைவான ‘ஜான்களையே’ கைது செய்தது. தோல்வியை உலகெங்கிலும் உள்ள எதிர்ப்புவாதிகள் மிதமிஞ்சைய வகையில் விளம்பரப்படுத்தியதோடு “பாருங்கள்! பாலியல் தொழில் எப்போதும் இருந்திருக்கிறது, இனியும் இருக்கும்” என எக்காளமிட்டனர்.
அவர்களது திட்டத்தை சரியாகப் புரிந்துகொண்ட சுவீடர்கள் அவர்களின் கூச்சலுக்கு செவி சாய்க்கவில்லை. விரைவில் பிரச்சினையை அடையாளம் கண்டு அதற்கு தீர்வும் கண்டனர். அவர்களின் சிறப்பான முயற்சி எங்கு கோளாரில் சிக்கியது என்பதைக் கண்டுபிடித்தனர். சட்ட அமலாக்கப் பிரிவானது தன் கடமையை சரிவரச் செய்யவில்லை. சுவீடிஷ் மக்களும், சட்டமும் புரிந்துகொண்ட பிரச்சினையின் ஆழத்தை சரியாகப் புரிந்துகொள்ளாத காவல்துறைக்கே தீவிர பயிற்சித் தேவைப்படுகிறது என்பதை உணர்ந்தது. பாலியல் தொழில் என்பது பெண்களுக்கெதிரான ஆணாதிக்க வன்முறை. சுரண்டுபவர்கள் மற்றும் வாங்குபவர்களே தண்டனைக்குரியவர்கள். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பாலியல் தொழிலாளிகள் உதவிக்குரியவர்கள் என்பதில் சுவீடன் அரசு உறுதியாய் இருந்தது. சுவீடிஷ் அரசாங்கம் பெரும் நிதியை ஒதுக்கி அந்நாட்டின் காவல்துறையினர், அரசு வழக்குறைஞர்கள், மேலிருந்து கீழ்நிலை வரையிலான அதிகாரிகள் ஆகியோருக்கு தீவிர பயிற்சி அளித்து, இலக்கையும் கண்டிப்போடு தெளிவுபடுத்தியது. அதன் பிறகே எவரும் ஒப்பிட முடியாத விளைவுகளை அந்நாடு கண்டது.
சட்டத்தின் தோல்வி அல்லது ஒழுங்கமைப்பு உத்தி
பாலியல் தொழில் பெருமளவில் நடைபெறும் ஒரு நாட்டில், நம்பிக்கையளிக்கக் கூடிய வகையில் செயல்புரிந்த இந்த சுவீடிஷ் முறையானது ஓர் தனித்த உதாரணமாகும். 2003இல், பாலியல் தொழில் குறித்த தன்னுடைய அனுகுமுறையை மறுஆய்வு செய்யும் வகையில், சுவீடிஷ் அரசாங்கமானது மற்ற நாடுகளில் உள்ள பாலியல் தொழில் கொள்கைகளின் விளைவுகளை ஆய்வு செய்யுமாறு லண்டன் பல்கலைக்கழகத்தைப் பணித்தது. சுவீடனின் செயல்திட்டத்தை ஆய்வு செய்ததோடு, ஆய்வாளர்கள் ஆஸ்திரேலியா, ஐயர்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் உத்திகளான பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குதல், ஒழுங்கமைத்தல் உள்ளிட்ட பல்வேறு உத்திகளை ஆய்வு செய்தது. பாலியல் தொழிலை குற்றமென அறிவிக்கும் அமெரிக்கச் சட்டம் போன்ற சட்டங்கள் இருக்கும் சூழல்களை ஆய்வாளர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. ஏனென்றால், அதன் விளைவுகள் என்னவென்பது வெட்டவெளிச்சம். பாலியல் தொழிலாளிகளை மீண்டும் மீண்டும் கைது செய்வதன் தோல்வியும், பயனின்மையும் உலகறிந்ததே.
ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நாடுகளில் கிடைத்த தரவுகளின்படி, பாலியல் தொழிலை ஒழுங்குபடுத்துதல் அல்லது சட்டபூர்வமாக்குதல் என்ற நிலையும், மரபார்ந்த நிலையிற்கு ஒத்ததாகவும், சொல்லப் போனால் அதனைவிட ஏமாற்றமளிப்பதுமாகவே இருந்தது. ஒவ்வொரு நாட்டிலும் விளவு எதிர்மறையாகவே இருந்தது.
அவ்வாய்விபடி, பாலியல் தொழிலை ஒழுங்குபடுத்துதல் அல்லது சட்டபூர்வமாக்குதல் என்ற அனுகுமுறையானது:
  • பாலியல் தொழிலின் அனைத்து பண்புக்கூறுகளிலும் ஓர் அதிகரிப்பு,
  • பாலியல் தொழிலை மையப்படுத்திய திட்டமிடப்பட்ட குற்றங்களின் அதிகரிப்பு,
  • குழந்தைப் பாலியல் தொழில் அதிகரிப்பு
  • வெளிநாட்டுப் பெண்கள் கடத்தப்படுதல் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறையில் நம்பமுடியாத வகையிலான அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவில், விபச்சாரம் என்பது ஒழுங்கிற்குட்பட்ட ஒரு தொழிலாக நிறுவப்பட்ட விக்டோரிய மாகாணத்தில், விபச்சார விடுதிகளின் எண்ணிக்கை அதிகளவில் உயர்ந்தன. அதை ஒழுங்குபடுத்துவது மிகவும் கடினமானதாகி, திட்டமிடப்பட்ட குற்றங்கள், ஊழல் மற்றும் பாலியல் தொடர்புடைய குற்றங்களின் ஊற்றானது விக்டோரியா. கூடுதலாக, பாலியல் தொழிலாளிகளிடம் நடத்திய ஆய்வில், அவ்வாறு ஒழுங்குபடுத்தப்பட்ட அல்லது சட்டபூர்வமாக்கப்பட்ட சூழலிலும் பாலியல் தொழிலாளிகள் அத்தொழிலில் தள்ளப்பட்டதாகவும், பலவந்தப்படுத்தப்படுவதாகவும், பாதுகாப்பற்றவர்களாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
நெதர்லாந்தில் சட்டபூர்வமாக பாலியல் தொழில் செய்பவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 79% பேர் அத்தொழிலிருந்து விடுபட நினைப்பதாகத் தெரிவித்துள்ளனர். இந்நாடுகளில் ஒவ்வொரு சட்ட அல்லது ஒழுங்கமைப்பு திட்டங்கள் பாலியல் தொழிலிலிருந்து விடுபட நினைக்கும் நபர்களுக்கு உதவிகள் அளிப்பதாக வாக்குறுதி அளித்தாலும், எதுவும் பயனளிப்பதில்லை. அதற்கு நேர்மாறாக, சுவீடனில், பாலியல் தொழிலிலிருந்து விடுபட நினைப்பவர்களுக்கு அரசாங்கம் எராளமான சமூக சேவை நிதி கொண்டு உதவி செய்தது.
சுவீடனின் 60% பாலியல் தொழிலாளிகள் அரசின் அந்த நிதித் திட்டங்களை செவ்வனே பயன்படுத்தி, பாலியல் தொழிலிலிருந்து வெளியேறினர்*.
* பாலியல் தொழில் கொள்கை பற்றிய ஸ்காட்டிய அரசாங்கத்தின் முழு அறிக்கையையும் படிக்க
ஏன் இதுவரை இதை எவரும் முயற்சிக்கவில்லை?
சுவீடனின் வெற்றி நாம் பின்பற்ற வேண்டிய பாதைக்கு இவ்வளவு தெளிவாக ஒளியூட்டிய பின்னரும், ஏன் இதுவரை எவரும் அப்பாதையைப் பின்பற்றவில்லை? அப்படி சொல்லிவிட முடியாது. ஃபின்லாந்து மற்றும் நார்வே அப்பாதையில் செல்வதற்கான அடிகளை எடுத்து வைக்கவிருக்கிறது. மேலும், தன்னுடைய ஆய்வின் பரிந்துரைகளை ஸ்காட்லாந்து எடுத்துக்கொள்ளும் எனில், அதுவும் அதே பாதையில் செல்லும். ஆனால், சுவீடனின் திட்டத்தை ஏன் மற்ற நாடுகள் எடுத்துக்கொள்ளவில்லை எனும் கேள்விக்கு ஏன் மற்ற அரசாங்கங்கள் சுவீடனின் தீர்வை நடைமுறைப்படுத்திப் பார்க்கவில்லை என்பதே பதிலாக இருக்க முடியும்.
பாலியல் தொழிலாளிகளை ஆண் பலாத்காரத்திற்கும், ஆணின் வன்முறைக்கும் உள்ளாகும் பலியாள்களாகக் காண ஒரு அரசாங்கம் முதலில் பாலியல் தொழிலை ஆணின் கண்ணோட்டத்திலிருந்து காண்பதை விட ஒரு பெண்ணின் கண்ணோட்டத்திலிருந்து காண்பது அவசியம். உண்மையில், பெரும்பாலான, சொல்லப்போனால் உலகின் அனைத்து நாடுகளும் பாலியல் தொழிலை மட்டுமின்றி மற்ற அனைத்துப் பிரச்சினைகளையும் முதன்மையில் ஆணின் கண்ணோட்டத்திலிருந்தே காண்கின்றன.
அதற்கு நேரெதிராக, சுவீடன் நாடானது பெண்களுக்கான சமத்துவத்தை வலியுறுத்தி நீண்ட காலமாகவே செயல்பட்டு வருகிறது. உதாரணமாக, 1965இல் திருமணத்தில் வல்லுறவை குற்றமென அறிவித்தது சுவீடன். 1980களில் கூட பெண்களுக்கு தன் உடல் மீதான கட்டுப்பாடு உண்டு என்னும் அடிப்படை உரிமையைக் கூட அமெரிக்கா போன்ற நாடுகள் உறுதி செய்யவில்லை. அதேபோல் அரசாங்கப் பணிகளில், அனைத்து மட்டங்களிலும் அதிகமான பெண்கள் வேலை செய்யும் நாடாக சுவீடன் நாடே திகழ்கிறது. 1999இல், அப்புரட்சிகரமான சட்டத்தை சுவீடன் நிறைவேற்றியபோது 50% பெண்கள் சுவீடிஷ் அரசாங்கத்தில் அங்கமாய் இருந்தனர்.
சுவீடனின் பாலியல் தொழில் கொள்கையானது முதலில் தயாரித்து ஆதரவு தேடும் பணியில் இறங்கியது பெண்களின் பாதுகாப்பிற்கான சுவீடன் நிறுவனம் (Sweden’s organization of women’s shelters) ஆகும். பிறகு சுவீடனின் இருகட்சிகளைச் சார்ந்த தனித்துவமான சக்திவாய்ந்த எண்ணற்ற பெண் பாராளுமன்றவாதிகள் அக்கொள்கையைப் பேணி வளர்த்து, போராடினர். அத்தோடு சுவீடன் நின்றுவிடவில்லை. 2002இல், முந்தைய பாலியல் தொழில் சட்டத்தை பலப்படுத்தும் வகையில் கூடுதல் சட்டங்களை இயற்றியது. பாலியல் சுரண்டலுக்காக மனிதர்கள் கடத்தப்படுவதை தடுக்கும் 2002ஆம் ஆண்டின் சட்டமானது முந்தைய சட்டத்திலிருந்த ஓட்டைகளை அடைத்து, பாலியல் தொழிலை ஆதரிக்கும் தரகர்கள், ஆட்சேர்ப்பாளர்கள், ஓட்டுனர்கள் மற்றும் விருந்தாளிகளின் வலைப்பின்னல்களைக் கண்டுபிடிக்கும் அரசாங்கத்தின் பணிக்கு வலு சேர்த்தது.
சுவீடனின் வெற்றிப் பாதையை நாம் ஏன் பின்பற்றக்கூடாது?
நம் நாடும் சரி மற்ற நாடுகளும் சரி, தந்தை ஆதிக்க சமூக அமைப்பின் இருளில் ஆழ மூழ்கி இருப்பது உண்மைதான் எனினும், சுவீடன் நடைமுறைப்படுத்திய கொள்கை மாற்றங்களை வலியுறுத்தக் கூடாது என்பதற்கு எவ்விதக் காரணங்களும் இல்லை. அடித்தளம் தகர்க்கப்பட்டு, வெற்றிக்கான சான்று நிறுவப்பட்டுவிட்டால், பின்னர் அப்பாதையில் செல்லும்படி மற்றவர்களை ஏற்கச் செய்வது எளிதான காரியமே.
நன்றி: http://www.eanil.com/?p=605#&page=2

Dec 5, 2014

அரசின் அதர்மம்



 தர்மபுரி அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களில் நடந்த 12 பச்சிளம் குழந்தைகளின் உயிரழ்ப்பு அனைவரது மனதையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. அதே வாரத்தில் பிலாஸ்பூரில் அரசு மருத்துவமனை ஒன்றில் நடந்த குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையின் விளைவாகப் 12 பெண்கள் இறந்தனர் என்ற செய்தியும் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இவ்வளவு உயிர் இழப்புகளுக்கும், துயரங்களுக்கும் நடுவிலும் மத்திய மாநில அரசுகள் சடங்குரீதியான அறிவுப்புகளை வெளியிட்டு, தப்பித்தல் மனப்பான்மையுடனேயே செயல்படுகின்றன. ஊட்டச் சத்து குறைபாடு, குறைமாத குழந்தைகள், இளம் தாய்மார்கள் கர்ப்பமுற்றது என்று காரணங்கள் ஒருபுறம் சொல்லப்பட்டாலும் இலக்குகளை பூர்த்தி செய்யச் சொல்லி மருத்துவர்களுக்குக் கொடுக்கப்படும் நெருக்கடி, செவிலியர்கள் பற்றாக்குறை, போதிய வசதியின்மை, சுகாதாரமின்மை, மருத்துவர்கள் பற்றாக்குறை, போதிய பயிற்சியின்மை, முறையான கண்காணிப்பின்மை என்று ‘இன்மை’களின் காரணத்தை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஏதோ தற்போதுதான் ஆய்வு செய்து கண்டுபிடித்ததுபோல் அரசு அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. கிராமப்புற பகுதிகளில், அடித்தட்டு மக்கள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடுள்ளதைப் பற்றியும், அது உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்றும் அமர்த்தியா சென் உட்பட பல அறிஞர்கள், ஆர்வலர்கள் குரல் எழுப்பி வந்துள்ளனர். நலத்திட்டம், விசாரணை, ஆய்வு என்கிற பெயரில் அரசு இப்பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்க முனைகிறது. கல்வி, சுகாதாரம், மருத்துவம், உணவு, இருப்பிடம் ஆகியவை ஒருவரின் அடிப்படைத் தேவைகளை எவ்விதக் குறைபாடும், பாகுபாடும் இன்றி ஏற்படுத்திக் கொடுத்து, அவற்றை சரியாகப் பராமரிப்பதும் அரசின் கடமையாகும். உண்மையில் இப்பணிகளுக்காகத் தோற்றுவிக்கப்பட்டதே அரசு*. ஆனால் முக்கியத் துறைகள் அனைத்தையும் தனியார்மயமாக்கிவிட்டு சடங்கு ரீதியாக அவற்றை நடத்தி வருவதே இக்கொடுமைகளுக்குக் காரணம்.

தனியார் சேவையே அரசின் சேவை என்பதே இங்கு நிதர்சனம். தனியார் நிறுவனங்கள் கொழுத்த இலாபத்தோடு வாழ்வதற்காக எவ்வளவுக்கெவ்வளவு பொதுத்துறை நிறுவனங்களை மோசமாகப் பராமரிக்க முடியுமோ அதைச் செய்கிறது அரசு. இதில் மத்திய மாநில அரசுகளுக்குள் எந்தப் பேதமும் இல்லை.

இதற்கு முன்பு நமக்கெல்லாம் ஒரு நம்பிக்கை இருந்தது ‘ஓட்டு’ என்னும் ஒரு நம்பிக்கை. மக்களை ஏமாற்றும், மக்கள் நலன்களைப் புறக்கணிக்கும் கட்சிகளுக்கு ஓட்டளிப்பதில்லை என்று மக்கள் முடிவெடுக்கும் சாத்தியங்கள் இருந்தன. ஆனால் தற்போது தேர்தல் வெற்றி என்பதும் மக்கள் கையில் இருப்பதைவிட பெருநிறுவனக் குழுமங்களிடமே இருக்கின்றது என்றால் அது மிகையல்ல. பெருநிறுவன முதலாளிகளோ பன்னாட்டு நிதி நிறுவனங்களின் அடிவருடிகள். மூலதனக் குவிப்பு ஒன்றே இவர்களது குறிக்கோள்.

இன்றைய காலகட்டத்தில் முதலாளிகள் தீர்மானிப்பவரே ஆட்சி அதிகாரத்தில் அமர முடியும். அவர்களின் தயவில் ஆட்சியில் அமரும் ‘முதலமைச்சர்’ அல்லது ‘பிரதமர்’ எப்படி முதலாளிகளுக்குத் துரோகம் செய்வார்? ஆக அவர்களால் முடிந்ததெல்லாம் பொதுத்துறை நிறுவனங்களை சீரழியச் செய்வதே. அதன் முதல்படி மோசமான பராமரிப்பு. மருத்துவத் துறையில் இப்போக்கு சகித்துக் கொள்ள முடியாத அளவுக்குச் சென்று விட்டது.

எதேச்சிகாரம் நிறைந்த அரசின் இயந்திரத்தில் பணிபரிபவர்களுக்கும் அதே மெத்தனப் போக்குத்தானே இருக்கும். மக்களின் வரிப்பணம்தான் தங்களுக்குச் சம்பளமாக வழங்கப்படுகிறது என்ற ஒரு தன்னுணர்வுகூட இல்லாமல் அரசுத் துறை அலுவலர்கள், குறிப்பாக மருத்துவத் துறைப் பணியாளர்கள் பலர் மக்களை அலைக் கழிப்பதையும், சேவை செய்ய மறுப்பதையும் நாம் அன்றாடம் காணலாம். இவற்றையெல்லாம் ஒழுங்குபடுத்தி உண்மையில் மக்கள் சேவை ஆற்ற வேண்டிய அரசோ மக்களின் இடுப்பெலும்பை முறித்து தனது சேவையை தனியாருக்கு ஆற்றுகிறது.

மக்கள் இனியும் இறைஞ்சிக் கொண்டிராமல், அரசு விடுக்கும் அறிக்கைகளை நம்பிக் கொண்டிருக்காமல், அரசின் முதலாளிகளை கதிகலங்க வைக்கும் போராட்டங்களில் ஈடுபட வேண்டும். உதாரணமாக, அரசு மருத்துவமனையில் அசம்பாவிதங்களோ, மரணமோ நேர்ந்தால் சுற்று வட்டாரத்தில் இருக்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளின் கதவுகளையும் இழுத்து மூடி பூட்டு போடும் போராட்டம் போன்ற போராட்ட முறைகளில் ஈடுபடலாம்.

நாம் கத்தினால் அரசின் செவிகள் திறக்காது, ஆனால் முதலாளிகள் முகம் சுருங்கினாலே போதும் அரசு பதறி அடித்துக் கொண்டு மாற்றங்களைக் கொண்டு வரும். ஆக பொதுத்துறை நிறுவனங்களை காக்க தனியார் நிறுவனங்களைக் கைப்பற்றுவோம். பொதுத்துறை நிறுவனங்களை மூடினால் அதே ‘சேவையில்’ ஈடுபட்டிருக்கும் சுற்று வட்டார தனியார் துறை நிறுவனங்களுக்கு இழுத்து பூட்டு போடுவோம்.

நமக்காக அவர்களைக் குரல் கொடுக்க வைப்போம்!

இது ஒரு நீண்ட காலப் போராட்டமாக அமையும். மேலும் இதற்கெதிராக நிச்சயமாக கடுமையான ஒடுக்குமுறைகள் நிலவும் என்பதில் ஐயமில்லை.

இதுபோன்ற நூதனப் போராட்ட முறைகளை முன்னெடுப்பதோடு நாம் சட்டரீதியாகவும் உடனடி தீர்வுக்கு வழி வகை செய்யலாம். முதல் அமைச்சர்கள், பிரதம மந்திரி மற்றும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கண்டிப்பாக அரசு மருத்துவமனைகளில் மட்டுமே மருத்துவம் பெற வேண்டும், அதை மீறினால் அவர்களது பதவிகள் பறிக்கப்படும் என்று ஒரு அவசரச் சட்டம் இயற்றப்பட்டால் அரசு மருத்துவமனைகளின் தலையெழுத்து திரைப்படங்களில் வருவது போல் ஒரே இரவில் மாறிவிடும்!

இது அதிகப்படியான கற்பனையோ! ஆனால் கற்பனையை மெய்யாக்கும் வலிமை மக்கள் சக்திக்கு உண்டு.


*அரசு தனக்குத் தானே கொடுத்துக்கொண்ட விளக்கத்தின்படி… பொதுபுத்தியின் புரிதலின்படி