Jan 22, 2015

We were not born in America, but born in that soil….



We were born
in the past that is in your possession now
body transforms as manure to soil
We don’t fear death
neither do we celebrate birthdays
that announces the death of the past
nor do we have demands for the future

Stars on your stiff uniforms
are nothing but
Pupils of our native children
poked and soaked in their blood

Agents disguised as ministries
issue identity cards
to our bedrooms

You commissoned the Holy Spirit
to spy on our lands
the holy ghost raped our women
who would remind his holiness
those women are none other
than the daughters of the mother
who ate the first fruit of knowledge
when the cannons crush
the vocal chords of democracy
polished boots march and sing
we produce cannons
for world peace
Just for harmony
we fire shells

Tribe singing through the prison window
that looks fattened 
swallowing the flesh of
the nights darned by the cock feathers
demonstrates nudity

promises on change hit the sky
at the ring of a bell
presidents salute like corpses
distributing candies to them
who will tell them
that those candies were
cultivated on the butchered corpses
of the native land

one ought to tell them
we were born 
out of the big bang
one ought to tell them
we are born every day

land may be ignorant of race
land may be ignorant of crime
but
land is aware of treason

the flags that fly high
with the stripes hauled out of our red blood
shall be pulled down
by our young children
they have their weapon
they have their Red Feathers

dedicated to Leonard Peltier…..


(Translated from Tamil, that was published in Kombu magazine)
#Leonard #Peltier 


நாங்கள் அமெரிக்காவில் பிறக்கவில்லை, ஆனால் அம்மண்ணில் பிறந்தோம்…….


நாங்கள் பிறந்தோம்
உங்களுக்குச் சொந்தமான இறந்தகாலத்தில்
மண்ணுக்கு உரமாகப் போகும் உடல்
மரணம்
பயமில்லை
இறந்த காலத்தின் பிறந்த நாளை
அறிவிக்கும் கேளிக்கைகள்
எதிர்காலச் சாவுகளின் கோரிக்கைகள்
எங்களிடத்தில் இருந்ததில்லை

எம் தேசத்துச் சிறார்களின்
கண்மணிகளைப் பறித்து
உதிரத்தில் நனைத்து விரைத்த
உடையில்
நட்சத்திரம் பொருத்தினீர்கள்

தரகர்களான உம் அமைச்சகம்
எங்கள் படுக்கையறைகளுக்கு
எண்ணிட்ட அட்டை கொடுத்தது

எமது
பாதங்களோடிய
நிலங்களில் உங்கள் கடவுளரின்
ஆவிகளை உலாவவிட்டீர்கள்
எம்
பெண்களை புனித ஆவி
வல்லாங்கம் செய்யும் போது
எவர் நாக்கு சொல்லக்கூடும்
அறிவுக் கனிதின்ற
ஆதித் தாயின் குழந்தை அவளென்று


ஜனநாயகத்தின் பசிய குரல்வளையை
தோட்டாக்களால் துளைக்கும் பொழுதில்
பாடல்கள் அரங்கேற
பூட்ஸ்கள் பாடி வருகின்றன
உலக அமைதிக்காகவே
பீரங்கிகளை படைக்கிறோம்
பீரங்கிகளைப் படைக்கிறோம்
சமாதானத்திற்காக

சேவலிறகு தைத்த இரவுகளின்
கொழுத்த தசையுண்டு
பெருத்தலையும்
சிறைச் சாலைகள்
கம்பிகளின் வழியே
பழங்குடி
நிர்வாணத்தை
வரைந்து காட்டுகிறான்

மாற்றம் குறித்து வாக்குறுதி
அழைப்பு மணிக்கு
பிண விறைப்போடு
சல்யூட் அடிக்கும்
அதிபர்களுக்கு மிட்டாய்களை வழங்கி

யார் சொல்லக்கூடும்
உரத்த குரலில்
அம்மிட்டாய்கள்
சொந்த நிலத்தின் பிணங்களின் மேல்
பயிர் செய்யப்பட்டவைகளென

அவர்களுக்கு
சொல்ல வேண்டும்
பெருவெடிப்பிலிருந்து
பிறந்தவர்கள் நாங்களென்று
சொல்லவேண்டும்
நாங்கள்
பிறந்துகொண்டிருக்கிறோமென்று
சொல்ல வேண்டும்

மண் இனமறியாது
மண் குற்றமுமறியாது
மண் துரோகமறியும்

எங்கள் செங்குருதிகளை
கோடுகளாக்கி
பறக்கவிடப்பட்ட
உமது கொடிகளை
அறுத்தெரியும்
செவ்விறகு
எம் சிறார்களிடம்


லியோனார்ட் பெல்டியருக்கு…………


 நன்றி: கொம்பு, காலாண்டிதழ்.

#LeonardPeltier 

Jan 5, 2015

கொடிது கொடிது பெண்களாய் பிறப்பது கொடிது...


இந்தியா என்றாலே அதன் பன்மைக் கலாச்சாரமும், ‘ஒழுக்க நெறியும்’, குடும்ப அமைப்பின் மகத்துவமும் புகழ்ந்துரைக்கப்படும் நிலை மாறி இப்போது இந்தியா என்றால் அது ஒரு வல்லுறவு தலைநகரமாக, பெண்களுக்குப் பாதுகப்பற்ற நாடாக , பெண்களின் அடிப்படை உரிமைகளான வாழும் உரிமை, உடல் நலம், திருமண உரிமை ஆகியவைகூட மறுக்கப்படும் நாடாக உலக வரைபடத்தில் காட்சி அளிக்கிறது. வளர்ந்து வரும் நாடு இந்தியா என்று சொல்வதைக் காட்டிலும் பெண்கள் விஷயத்தில் பிற்போக்குத்தனம் பெருகி வரும் நாடாக இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகி விடாது. 

ஆனால் இந்தியா பற்றி நாம் இப்படி தொடங்கும்போது இவர்கள் அவநம்பிக்கைவாதிகள், கேடுகெட்ட பெண்ணியவாதிகள், விளம்பரப்பிரியர்கள், வேலையற்ற கம்யூனிஸ்டுகள் என்று வசைபாடப்படுவோம்.  ஏன்றால் ‘நல்லதே நினை, நல்லதே நடக்கும்’ என்னும் மாயாவாத மதவாத நம்பிக்கைகளை சாஸ்வதம் என்று நம்பும் ‘ஆன்மீக’ நாடல்லவா இது. ஆகவே, நாம் எப்போதும் எதிர்மறைகளையோ, குறைகளையோ பேசக்கூடாது. 2 வயது பெண் குழந்தைகளின் பாலுறுப்பை கீறி ஒரு ஆண் தனது  ‘ஆண்மையை’ திணித்து இரத்தம் பீறிட வல்லுறவு செய்து கொன்றாலும் ‘குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா’ என்று பாடுவதோ அல்லது அப்பாடல் பாடப்படும் சபாக்களுக்கோ சென்று தாள-சுருதிகள் பிழையின்றி போடப்படுகிறதா, ஆலாபனைகளில் பிருகா சரியாக விழுகின்றதா என்று கவலை கொள்வதே உத்தமம்.

பெண்களுக்கெதிரான வன்முறைகள், அவர்களுக்கிழைக்கப்படும் கொடுமைகள் பற்றிய புள்ளி விபரங்கள் போதுமான அளவுக்கு அன்றாடம் வெளியிடப்பட்டு வருகின்றன. உலகளவில் பெண்கள் வாழ்வதற்கான பாதுகாப்பற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால் இன்றும் பட்டிமன்ற தலைப்பாக ‘இந்தியா 2020இல் வல்லரசாகுமா 2040இல் வல்லரசாகுமா’ என்றே விவாதம் நடைபெற்று வருகிறது. ஏனென்றால் நம்மைப் பொறுத்தவரை மங்கல்யான் ஏவுகனைகளை வெற்றிகரமாகத் தொடர்ந்து விண்ணில் ஏவும் அரசே வல்லரசு. நம் நாட்டு வளங்களை அந்நிய மூலதனத்திற்குத் தாரை வார்க்கும் ஒப்பந்தங்களைப் போடுவது, ‘சக்தி வாய்ந்த’ அனு உலைகளை அமைப்பதுமே வல்லரக்கான இலக்கணம். நாடு இத்தகைய வளர்ச்சிகளை துய்த்துக் கொண்டிருக்கும்போது ஆங்காங்கே சில நூறு பெண்கள் கொடுமைக்குள்ளாவது ஒரு விஷயமா. அதிலும் பாருங்கள்! பெண்கள் பலவீனமான பாலினம், அவர்களை பலவீனமாகப் படைத்தது ஆண்டவன் குற்றம், அதற்கு யார் என்ன செய்ய முடியும்? மேலும், வல்லரசில் பெண்களுக்கு என்ன இடம் இருக்கிறது? அரசு என்றாலே அது ஆண்பால்தானே?  என்னதான் இந்தியா தாய் நாடாக இருந்தாலும், இந்தியா ஒரு வல்லரசி நாடாவதை எவர்தான் விரும்புவர்?

இந்தியப் பெண்களின் அவல நிலைக்குப் பின்னால் இருக்கும் இந்திய மனநிலை இதுவே. மற்ற நாடுகள் மட்டும் என்ன ஒழுங்கா? இதைவிட மோசமானக் கொடுமைகள் நடக்கவில்லையா என்று கேட்போரும் உண்டு. ஆனால் நாம் இந்தியர்கள் என்றளவில் நாம் வாழும் நாட்டில் பெண்களின் நிலையை உயர்த்த சிந்திப்பது அவசியம்தானே. ஆனால் ஒன்றை உறுதியாகச் சொல்ல முடியும், பெண்களை உடன்கட்டை ஏறச் செய்து, வரதட்சனை என்னும் கொடிய தீயில் பெண்களை காவு கொடுத்து, இன்னும் இதர கொடுமைகள் செய்து  இன்றைக்கும் ஒரு பெண் குழந்தை என்பதே பெரும் சுமையாக கருதும் நிலை இந்தியாவைத் தவிர வேறெங்கும் நிலவுமா என்பது சந்தேகமே.

இந்தியாவில் பெண்கள் நிலை குறித்து ஒற்றை வரியில் சொல்வதானால், பெண் என்பவள் அடக்கப்பட வேண்டியவள், அவள் ஆளப்பட வேண்டியவள், அவள் ஆணுக்கான, ஆணின் தலைமையிலான குடும்பத்திற்கு ஒரு பணிப் பெண்.  பெண்களுக்கெதிரான அனைத்து குற்றங்களுக்கும் அடிப்படையாய் இருப்பது இக்கருத்தியலே.

பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதே ஒரு பொய், ஆண்களைக் காட்டிலும் பெண்கள்தான் அதிகம் படிக்கிறார்கள், வேலை வாய்ப்பில் அவர்களுக்கே முக்கியத்துவம், நிறைய சம்பாதிக்கிறார்கள், நவநாகரீகமாகத் திரிகிறார்கள், சொல்லப்போனால் ஆண்கள்தான் பாவம், ஆண்கள்தான் அடங்கிப் போகிறார்கள் என்பதே பெரும்பாலாரின் வாதமாய் இருக்கிறது. நம் நாட்டில் எங்கே சாதி இருக்கிறது? தலித்துகள் எங்கே ஒடுக்கப்படுகிறார்கள்? எல்லாத் துறையிலும் அவர்கள்தான் இப்போது பெருகி வருகிறார்கள். பிராமணர்கள்தான் ஒடுக்கப்படுகிறார்கள் என்று பேசுபவர்களுக்கும் மேற்சொன்னவர்களுக்கும் எந்த வேறுபாடுமில்லை. எந்த ஒரு மேலாதிக்கத்தையும் மேலாதிக்கமாகப் பார்க்காமல் உயர்வு தாழ்வு என்பதை ஒரு இயற்கையான நடைமுறையாக ஏற்றுக்கொள்ளும் மனநிலை கொண்டவர்கள் அவர்கள். அதனால்தான் அவர்கள் எப்போதும் பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக சித்தரிக்கின்றனர், அல்லது அந்நிலை அவர்களுக்குத் தகும் என்கிற வாதத்தை முன்வைக்கின்றனர்.

பேருந்தில் ஒரு இளைஞி வல்லுறவுக்காட்பட்டாலும் சரி, வீட்டிற்குள் ஒரு பாட்டி வல்லுறவுக்காட்பட்டாலும் சரி இவர்கள் பெண்களின் உடையையும், கலாச்சாரத்தையுமே குறை சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஆனால், வரதட்சனைக் கொடுமையால் ஒரு பெண் கொல்லப்படும்போதோ அல்லது ஏழ்மையால் ஒரு பெண் தன் மனதில் இரும்பைக் காய்ச்சி ஊற்றி தன் பிள்ளைகளின் வாயில் விஷத்தை ஊற்றிக் கொல்லும்போதோ இத்தகைய கதாகாலட்சேபவாதிகளால் பெண்களிடம் குற்றத்தைக் காண முடியவதில்லை. வெறும் அனுதாபங்களோடு நிறுத்திக்கொள்வார்கள். அல்லது ‘மற்றையோர்’ நிலையிலிருந்து குற்றவாளிகளை தூக்கிலிடச் சொல்லி பரிந்துரைப்பார்கள்.

உண்மையில், இந்தியாவில் பெண்களின் நிலைக்கு அத்தகைய குற்றவாளிகளைவிட நிலவும் தந்தை ஆதிக்க சமூக அமைப்பிற்கும், ஏற்றத்தாழ்வு மிக்க பொருளாதார அமைப்பிற்கும் நிபந்தனையற்ற ஆதரவு தருபவர்களே முதன்மை காரணம். குறிப்பிட்ட குற்றத்திற்கு தனிநபர் காரணமாக இருந்தாலும் ஒட்டுமொத்தமாக பெண்களுக்கெதிரான குற்றங்கள் பெருக ஆணாதிக்க சமூக அமைப்பே காரணம். அதைக் களைவதற்காகப் பெண்கள் பெண்ணியம், பெண் உரிமை என்று பேசும்போதும், போராடும்போதும் அதை ஏளனப்படுத்துவோரும், அப்பெண்களை ஆபாசமாகப் பேசுவோரும் ஆணின் அதிகார மனதிற்கு மறைமுகமாக தீனி போடுகின்றனர்.

குறிப்பிட்ட சதவிகிதம் பெண்கள் கல்வியில், பொருளாதார ரீதியில் சில படிகள் முன்னேறியுள்ளனர், உண்மைதான்; பல்வேறு துறைகளில் முதன்மைப் பங்கு வகிக்கின்றனர் என்றாலும் பாலினம் என்ற அடிப்படையில் அவளது உடலுக்கு எவரும் பாதுகாப்பை உறுதி செய்திட முடிவதில்லை. அச்சமின்றி அவள் சுதந்திரமாகப் பொதுவெளியில் நடமாட முடியாது. ஆண்களைப் போல் இரவு 12 மணிக்கு தெருவோர தேனீர் கடையில் கூட்டமாக நின்று அரசியல் பேச முடியாவிட்டாலும் பரவாயில்லை, இயற்கைத் தேவையான சிறுநீர் கழிக்க பகிலிலாவது அவள் அச்சமின்றி பொது வெளியை பயன்படுத்த முடியுமா? பெண்களுக்கு கல்விக்கான வாய்ப்பு பெருகியிருக்கலாம், விண்கல தொழில்நுட்ப பிரிவில் முக்கியப் பணி ஆற்றியிருக்கலாம், ஏன் ஒரு பெண் ஜனாதிபதியாகக்கூட ஆகி இருக்கலாம் ஆனால் பள்ளிகளில், குறிப்பாக அரசு பள்ளிகளில், பொது வெளியில், ஏழைகளாக இருந்தால் வீட்டிலாவது சுகாதாரமான கழிப்பறை இருக்கிறதா?  இதுதான் ‘வியத்தகு இந்தியா’வில் பெண்கள் நிலை.

எத்தனை குற்றங்களைதான் நாம் பட்டியலிடுவது? 60 வயது முதியவர் 3 வயது சிறுமியை வல்லுறவு செய்தார் என்பதில் தொடங்கி சமீபத்தில் ஒடிசாவில் 16 வயது சிறுவன் 6 வயது சிறுமியை வல்லுறவு செய்தது, வேலூரில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 11 வயது சிறுமியை வல்லுறவு செய்து கொன்றது (இன்னும் விசாரணையில் உள்ளது), வாடகை டாக்சியில் பெண்கள் வல்லுறுவு (தொடர்ச்சியாக), இவ்வளவு ஏன் கௌஹாத்தில் ஐ.ஐ.டி என்னும் ‘பெருமை’ வாய்ந்த கல்வி நிறுவனத்தில், ஒரு பேராசிரியர் அலுவலக உதவியாளர் பெண் ஒருவரை வல்லுறவு செய்தது… இன்னும் எத்தனை எத்தனை. வரதட்சனை பிரச்சினையில் கர்பிணிப் பெண் அடித்துக் கொலை. ஆதிவாசிகள் உரிமைப் போராட்டத்தில் காவல் துறையினரால், இராணுவத்தினரால் வல்லுறவு சித்திரவதை, சாதிய ரீதியான கௌரவக் கொலை…. தேசிய குற்ற ஆவணங்கள் மையத்தின் பதிவின் படி ஒவ்வொரு 1.7 நிமிடங்களுக்கும் பெண்களுக்கெதிரான வன்முறை பதிவு செய்யப்படுகிறது, அதோடு ஒவ்வொரு 16 நிமிடங்களுக்கும் ஒரு வல்லுறவு புகார் மற்றும் ஒவ்வொரு 4.4 நிமிடங்களுக்கும் ஒரு சிறுமி குடும்ப வன்முறைக்குள்ளாகிறாள் என்று தெரிவிக்கிறது.

இவ்வளவு குற்றங்கள் நடந்தும் தண்டனைகளை கூட்டுவது பற்றியும், பெண்களையே பொறுப்பேற்கச் சொல்வதுமாகத்தான் அரசு பெண்கள் பிரச்சினையை கையாண்டு வருகிறது. 2013இல் நீதியரசர் வர்மா குழு பரிந்துரைத்த எந்த சட்டபூர்வ சீர்திருத்தங்களும் நடைமுறைபடுத்தப்படவில்லை. அதுமட்டுமின்றி பெண்களுக்கான பாதுகாப்பு திட்டத்திற்காக நிர்பயா நிதித்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட 1000கோடி ரூபாய் (2013-14) மேலும் ஒரு 1000 கோடி (2014-15) ரூபாய் பணம் இன்னமும் பயன்படுத்தப்படவில்லை என்று பாராளுமன்ற குழு கேள்வி எழுப்பும் நிலையில்தான் பெண்களுக்கான பாதுகாப்பு பிரச்சினை உள்ளது. 660 நிர்பயா மையங்கள் அமைக்கப்படும் அதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவியும், மறு வாழ்வும் அளிக்கப்படும் என்று ஜூலை 3ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். ஆனால் இதுவரை அவ்வறிவுப்பு காகிதத்தில் மட்டுமே உள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி, குற்றமிழைத்தவருக்கு தண்டனை இவையெல்லாம் உடனடி நடவடிக்கைகள். அவற்றை காலதாமதமின்றி செயல்படுத்த வேண்டும். ஆனால், பெண்களின் நிலையை உயர்த்த, அவர்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாழ அடிப்படை சிந்தனை மாற்றங்களை உருவாக்குவதற்கான செயல்திட்டத்தை அரசு வகுக்க வேண்டும். பாலின உணர்வூட்டல் (gender sensitizing) கல்வியை வகுக்க வேண்டும். பாலியல் கல்வி என்பது வேறு.  பாலினக் கல்வி என்பது வேறு பாலியல் கல்வி என்பது இயற்கையான பாலியல் அடையாளம்  பற்றிய உயிரியல் கல்வி, ஆனால் பாலினக் கல்வி என்பது ஆணாதிக்க சமூகத்தில் ஆணாதிக்க சிந்தனையோடு சமூகமயமாக்கப்பட்ட மனங்களுக்கு சமத்துவ சிந்தனையை போதித்தலாகும். இதுவே நிரந்தர தீர்வை வழங்கும்.

நன்றி: தினகரன் நாளிதழ்

(இந்தியாவில் பெண்கள் நிலை என்று எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு மேற்சொன்ன தலைப்பை கொடுத்திருப்பது அப்பத்திரிகையினரின் முடிவாகும்)

Jan 2, 2015

தற்கொலை எனும் சமூக-அரசியல் கொலை


தற்கொலை முயற்சி என்பது தண்டனைக்குறிய குற்றமல்ல என்று அறிவிக்கும் வகையில் இந்திய தண்டனை சட்டப் பிரிவான 309ஐ நீக்க அரசு முடிவு செய்துள்ளது. இதுநாள் வரை தற்கொலை செய்து இறப்பவர்களை தண்டிக்க முடியாத நிலையில், அம்முயற்சியில் தோல்வியுற்றவர்கள் தண்டனைக்குள்ளாகி வந்தனர்.  மனமுடைந்து வாழ்வைத் துறக்க முயற்சித்த அந்நபர்களுக்கு தண்டனை என்பது மேலும் துன்பகரமானது; வாழும் உரிமை உள்ளது போல் வாழ்வை முடித்துக் கொள்ளும் உரிமையும் ஒருவருக்கு உண்டு; தற்கொலை கோழைத்தனம் என இப்படியாகப் பலவிதமானக் கருத்துகளை நாம் கேட்டு வந்திருக்கிறோம்.

உலகளவில் ஓர் ஆண்டுக்கு 8 லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்வதாகவும், அதில் 1,35,000 பேர் இந்தியர்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. வருடந்தோறும் தற்கொலை எண்ணிக்கைகள் கூடுகிறதே ஒழிய குறைவதில்லை. தற்கொலை செய்துகொள்பவர்களில் 15-29 வயது வரம்பிற்குள் இருப்பவர்களே அதிகம் பேர்  என்றும், 2012ஆம் ஆண்டில் 75% கீழ்-மத்தியத்தர வருமானம் உள்ள நாடுகளில்தான் அதிகளவில் தற்கொலைகள் நடைபெற்றுள்ளன என்றும் தெரிவிக்கிறது. அதேபோல் இந்தியாவில் குடும்பப் பிரச்சினைகளும், உடல்நலமும் தற்கொலைக்கு முதன்மை காரணங்களாக உள்ளன. (மேலும் விவரங்களுக்கு http://ncrb.nic.in/CD-ADSI-2012/suicides-11.pdf)

பொருளாதாரம், குடும்ப பிரச்சினை, உடல்நலம், காதல் பிரச்சினை, என அப்புள்ளி விபரங்கள் காரணங்களை வகைப்படுத்துதன் மூலம் தற்கொலை என்பது தனிநபர் பிரச்சினையாக, ஒருவரது மனத்திடத்தின் குறைபாடாக இன்னும் முத்தாய்ப்பாக கோழைத்தனம் என்று முத்துரை குத்தும் செயலைதான் செய்து வருகின்றன. ஆனால் சமூக அரசியல் பிரக்ஞையுள்ள எவரும் இவ்வனைத்து காரணங்களையும் ஒரே ஒரு காரணியின் கீழ் வகைப்படுதவே விரும்புவர். அதுவே ‘சமூகம்’ என்னும் காரணி - அதாவது தற்கொலை என்பது தற்கொலை அல்ல அது ஒரு சமூகக் கொலை. இன்னும் சொல்லப்போனால் அது ஒரு சமூக-அரசியல் பிரச்சினையாகும்.

குடும்ப பிரச்சினை, தொழிலில் நஷ்டம், இன்னும் இதர என எந்த காரணங்களை எடுத்துக்கொண்டாலும் ஏற்றத்தாழ்வு நிறைந்த ஒரு சமூக அமைப்பில் வாழ்வது என்பது கடும் நெருக்கடிகள் நிறைந்த ஒன்றாக இருக்கிறது என்பதே நிதர்சனம். குடும்ப பிரச்சினைக்கு சமூக அமைப்பு எப்படி காரணமாக இருக்க முடியும் என்ற கேள்வி எழலாம். அடிப்படையில் ஒரு சமூக அமைப்பை அதில் நிலவும் பொருளாதார அமைப்பைக் கொண்டே நாம் எடைபோட வேண்டும். பொருளாதாரம் என்பது வெறும் பணம் மட்டுமல்ல, பொருளாதாரம் என்றால் ஒரு சமூகத்தின் தேவைக்கான உற்பத்தி, பரிவர்த்தனை, பண்ட விநியோகம், நுகர்வு மற்றும் செல்வ விநியோகம் ஆகிவற்றை உள்ளடக்கியதாகும். இது ஒரு பரந்த துறையாகம். இருப்பினும் அதன் அடிப்படை கட்டமைப்பு குறித்துச் சொல்வதானால் உற்பத்தி செய்வதற்கான கருவிகள், சாதனங்கள் மற்றும் மூலதனம் ஒரு குறிப்பிட்ட சிலரிடம் இருக்க மற்றையோர் தங்களது உழைப்புச் சக்தியை விற்று பிழைப்பு நடத்த வேண்டும் என்னும் நிலை கொண்ட அமைப்பாகும். இதனை நாம் முதலாளித்துவ அமைப்பு என்கிறோம். அதனோடு நிலத்தை தனியுடமையாகக் கொண்டு இயங்கும் நிலப்பிரபுத்துவ அமைப்பும் இங்கு பிரதானமாக நிலவுகின்றது. இவ்விரண்டிலும் மேல் கீழ் அதிகார ஓட்டம் என்பது உள்ளார்ந்த பண்பாக இருக்கின்றது. இலாபம் மற்றும் செல்வக் குவிப்பே அதன் குறிக்கோளாக இருக்கையில் சமத்துவம் அற்ற, ஏற்றத்தாழ்வு நிறைந்த ஒரு வாழ்வையே அதனால் மக்களுக்கு அளிக்க முடிகின்றது. தம் வாழ்விற்காக, தம் உயர்விற்காக மனிதர்களை பந்தையக் குதிரைகளாக மாற்றி வைத்திருப்பதே இந்த தனியுடமை பொருளாதார அமைப்பின் சாதனை.

இந்த உற்பத்தி முறை இயல்பானதுதானே என்று கருதுவீர்களேயானால் அது தவறு. ஆனால் அதுபற்றிய விவாதத்திற்கான வேறு ஒரு சமயத்தில் மேற்கொள்வோம். இப்போது நமது விவாதப் பொருளுக்கு திரும்புவோமானால், குடும்ப பிரச்சினைக்கும் அல்லது தற்கொலைக்கான மேற்சொன்ன மற்ற காரணங்களுக்கும் பொருளாதாரத்திற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்விக்கு விடை காண முயற்சிப்போம்.

நான் மேலே சொன்னதுபோல் அதிகார ஓட்டம், ஏற்றத் தாழ்வு, போட்டி பண்புகள் நிறைந்த ஒரு கட்டமைப்பில் அதனை வாழவைக்கத் தேவையான அனைத்து அலகுகளிலும் (மேற்கட்டுமானம்) அதே பண்புகள் நிறைந்திருக்கும். ஆக குடும்பப் பிரச்சினை என்பது ஏதோ ஒரு குடும்பத்தின் பிரச்சினை மட்டுமன்று. அடிப்படையில் தற்போதைய வடிவில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் குடும்பம் என்னும் அமைப்பில் நிலவும் சமத்துவமற்ற தன்மை என்பது ஒரு சமூகப் பிரச்சினை. அதாவது குடும்ப உறுப்பினர் ஒருவர் மற்றவரை தாக்குவது, கொடுமைபடுத்துவது போன்றவை தனிநபர் அளவிலான குணம் சார்ந்த பிரச்சினை மட்டுமன்று, ஒரு மனிதர் எவ்வாறு சமூகவயப்படுத்தப்படுகிறார் என்பதில் தொடங்கி, இந்த பொருளாதார அமைப்பு ஒரு மனிதரின் மேல் என்னவிதமான எதிர்பார்ப்புகளைத் திணித்திருக்கிறது, ஒரு குடும்பத்தின் சமூக பாத்திரம் என்ன என்பது வரை நாம் கவனமாக விவாதிக்க வேண்டியுள்ளது.

அவ்வெளியில் நின்று நாம் சிந்திக்கத் தொடங்கினால் குடும்பமாக இருந்தாலும் சரி, தனிநபராக இருந்தாலும் சரி ஒருவருக்கு ஏற்படும் மனநெருக்கடிகளுக்கும், இழைக்கப்படும் கொடுமைகளுக்கும், மறுக்கப்படும் உரிமைகளுக்கும் சமூக-அரசியலின் தாக்கம் பெரிதும் இருக்கிறது. உதாரணமாக, வரதட்சனை கொடுமை காரணமாகவோ அல்லது கடன் தொல்லை காரணமாகவோ குழந்தைகளைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொள்ளும் பெண் அல்லது பெற்றோர் ஏராளம் பேர் உள்ளனர். தற்கொலை முயற்சி வெற்றி என்றால் அவர்கள் இறந்து விடுவார்கள், தோல்வி என்றால் முந்தைய நிலையில் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். இப்போது அந்த தண்டனை கிடையாது அவ்வளவுதான், ஆனால் அவர்களைத் தற்கொலைக்குத் தூண்டிய சமூகக் காரணிகள் இறுதிவரை களையப்படாமலே இருக்கும்.

அடுத்ததாக, தற்கொலைக்கான முதன்மைக் காரணங்களில் இரண்டாவது காரணம் உடல்நலக் குறைபாடு. மருத்துவச் செலவை சமாளிக்க முடியாதது, கோமா நிலை, தாங்கொணாத் துயரினால் மரனத்தை நாடுதல் என இதில் பல்வேறு வகையான நெருக்கடிகள் அடங்கும். ஆனால் இதுவும் அந்த தனிநபர் சார்ந்த பிரச்சினையாகத்தானே சொல்லப்படுகிறது. அடிப்படை உரிமைகளில் ஒன்றான மருத்துவ உரிமை இந்த ‘ஜனநாயக’ ’குடியரசில்’ உறுதி செய்யப்படுகிறதா? மருத்துவ சிகிச்சை என்பது கற்பனை செய்தும் பார்க்க முடியாத நிலையில் இருக்கிறது. அரசின் மருத்துவத் துறையோ ஆட்கொல்லி நிறுவனங்களாக இருக்கிறது. மருத்துவத் துறையில் தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏகாதிபத்திய நாடுகளின் ஏகபோகமானது ஒன்று மருத்துவம் பார்த்து மக்களிடமிருந்து பணத்தைக் கொள்ளை அடித்துக் கொல்கிறது அல்லது மனிதர்களை பரிசோதனை எலிகளாக கையாண்டு கொல்கிறது.  இப்பின்னணியில் மருத்துவம் என்பதை எட்டாக்கனியாக மாற்றியதும், அதற்கு செலவு செய்ய முடியாமல் மேற்கொள்ளப்படும் தற்கொலை முடிவிற்கும் யார் காரணம்?
சமீபத்திய தற்கொலை முயற்சிகளில் கல்வித் துறையின் பங்கு அதிகரித்து வருகிறது. நேரடியாக கல்வி, மதிப்பெண்கள் சார்ந்த மன அழுத்தங்கள் மற்றும் உயர்கல்வி வாய்ப்புகளுக்கான வங்கிக் கடன்கள் மறுக்கப்படுதல், ஆண் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத் துறையினரின் பாலியல் தொல்லை, ராகிங் கொடுமைகள் என காரணங்களின் பட்டியல் நீள்கிறது. விவசாயி ராஜாவின் மகன் மருத்துவம் படிக்கச் சென்று இந்தியன் வங்கியில் கல்விக் கடன் கிடைக்காததால் அர்மேனியாவில் தற்கொலை செய்து கொண்டதை அவ்வளவு எளிதில் நாம் மறந்துவிட முடியுமா?

இதற்கெல்லாம் உச்சபட்சமாக ஆணாதிக்கம் நிறைந்த சாதி இந்தியாவில் கௌரவக் கொலைகள் அதிகரித்து வரும் சூழலில், கொலைகளுக்கே நியாயம் கிடைக்காத போது ஒரு பெண்ணை அல்லது காதலர்களைக் கொன்று தற்கொலை செய்து கொண்டார்கள் என்று எளிதாக வழக்கை முடித்து விடலாம்.

இப்படி நம்முடைய அன்றாட வாழ்வில் நமது ஒவ்வொரு செயலுக்கும், சிந்தனைக்கும் பின்னால் சமூக-அரசியல்-பொருளாதார காரணங்கள் இருக்கையில் தற்கொலை முயற்சி என்பதை வெறும் தனிநபர் பிரச்சினையாகவோ அல்லது ஒருவருக்கு தனது உயிரை மாய்த்துக் கொள்ள உரிமை உண்டு என்று மனித உரிமை சார்ந்த பிரச்சினையாகவோ மட்டும் பார்ப்பது சரியாக இருக்குமா?

விபச்சாரத்தை சட்டபூர்வமாக்குதல், தற்கொலை முயற்சியை குற்றமாகக் கருதாதிருத்தல் போன்ற அறிவிப்புகளால் அரசு தன்னை  பெரும் மனித உரிமை காவலராகக் காட்டிக்கொள்ள முனைகிறது. ஆனால் உண்மையில் அது மக்கள் காவலர் என்னும் தனது கடமையை தட்டிக் கழிக்கவே பார்க்கிறது.

என்ன செய்யலாம்?

தற்கொலையை குற்றமாகக் கருதும் சட்டம் வேண்டும் என்பதல்ல எமது வாதம். ஒவ்வொரு தற்கொலைக்கும் அதற்குக் காரணமாகும் தனிநபர்கள் குற்றவாளிகளாகக் கருதப்படுவதுபோல் மக்களை வாழவைக்கவியலாத இந்த கையாலாகாத அரசும், அதன் பிரதிநிதிகளும் குற்றவாளிகளாகக் கருதப்பட வேண்டும்.  

தற்கொலை வழக்குகளை விசாரிக்க மனித உரிமை ஆணையம் போன்று மக்கள் வாழ்வுரிமைக்கான ஆணையம் ஒன்றை அமைக்கலாம். ஒவ்வொரு தற்கொலையும் ஒரு சமூகக் குற்றமாகப் பதிவு செய்யப்பட வேண்டும்.  காரணங்கள் தீர விசாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் பிரச்சினையிலிருந்து விடுபட தேவையான உதவிகளை அரசு செய்துதர வேண்டும்.  மேலும், தற்கொலை தடுப்புப் பிரிவு அமைக்கப்பட்டு அதன் மூலம் உளவியல் ரீதியான உடனடி உதவிகள் நீட்டிக்கப்படலாம்.

அரசுக்கு இது சுமையாகி விடும், அரசை மிரட்டி பலர் ஆதாயம் காண்பார்கள் போன்ற வாதங்கள் பொருளற்றவை. ஏனென்றால் மகிழ்ச்சியாக இருக்கும் எவரும் தம் வாழ்வோடு விளையாடி, உயிரைப் பணையம் வைத்து அரசை மிரட்டி ஆதாயம் தேடும் அளவுக்கு செல்லப் போவதுல்லை. மக்கள் அவ்வளவு அற்பமானவர்கள் அல்ல (அதெல்லாம் முதலாளிகளின், ஏகாதிபத்தியங்களின் பண்பு).  மேலும் ஒவ்வொரு மக்களும் மகிழ்ச்சிகரமாக வாழ வழி செய்வது அரசின் கடமையாகும். ஆக, எவ்வகையான போதாமையாக இருப்பினும், அதனை ஈடுசெய்வது அரசின் கடமையே. என்ன மாதியான உதவிகளை, வாழ்க்கை வசிதகளை அரசு வழங்கும் என்பதை வகுக்க, அவற்றுக்கான நடைமுறை விதிகளை வகுக்க மக்கள் வாழ்வுரிமைக்கான ஆணையம் தலைமையிலான ஒரு குழுவைக் கொண்டு வரையறுத்து ஒழுங்குபடுத்தலாம்.  ஓய்வு பெற்ற நீதிபதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், பெண் உரிமை ஆர்வலர்கள், எதிர்கட்சிப் பிரதிநிதிகள் தேவைப்பட்டால் தொழிற்துறை வல்லுனர்கள் ஆகியோரைக் கொண்டு அக்குழுவை அமைக்கலாம். நிச்சயமாக இந்த வாழ்வுரிமை அளிக்கும் செயல்பாடுகளில் அரசுசாரா நிறுவனங்களை, தொண்டு நிறுவனங்களை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக்கூடாது. வகுக்கப்பட்ட விதிகள், உதவிகள் குறித்து மக்களிடம் கருத்து கேட்டு தேவைப்படும் இடங்களில் திருத்தங்கள் செய்து அவற்றை சட்டமாக்க வேண்டும்.

அவ்வளவு பணத்திற்கு அரசு எங்கே போகும் என்ற கேள்வி பூர்ஷுவா மட்டத்தில் எழும். அதானி போன்ற நிறுவனங்களுக்கு 6,200 கோடி ரூபாய் கடனாக வழங்க வங்கிகள் மூலம் வகை செய்ய முடிகிறது, மேலும், மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு முதலாளித்துவ நிறுவனங்களுக்கு சிறப்பு பொருளாதார மண்டலங்களும் அமைத்துக் கொடுத்து, அதில் இலவச மின்சாரம், தண்ணீரும் கொடுத்து, வரி விலக்கும் கொடுத்து முதலாளிகளை காப்பதற்கு அரசிடம் பணம் இருக்கிறதென்றால் மக்களைக் காப்பாற்றவும் அரசிடம் பணம் இருக்க வேண்டும். இந்நாட்டில் வந்து தொழில் தொடங்கி, பொய்யாக நஷ்டப் பாட்டு பாடி தொழிலாளர்களின் வயிற்றில் அடித்து கொள்ளை இலாபங்களை வாரிச் சுருட்டி, வரி ஏய்ப்பு செய்யும் நோக்கியா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு பெரு நிறுவனங்களிடமிருந்து வாராக் கடன், நிலுவையில் இருக்கும் வரிகள் போன்றவற்றை வசூல் செய்தாலே போதும் ஒவ்வொரு இந்தியப் பிரஜைக்கும் அடிப்படை வாழ்வாதாரங்களை இந்திய அரசு உறுதி செய்ய முடியும்.

சட்டங்களை வகுப்பதும், வகுத்த சட்டங்களை போலி ஜனநாயக முகமூடிகளை அணிந்து ரத்து செய்வதும் மட்டுமல்ல ஒரு அரசின் பணி. ஒவ்வொரு சமூகப் பிரச்சினையை உண்மையான சமூக அக்கறையோடு ஆய்வு செய்து, குறிப்பாக அப்பிரச்சினைகள் மீண்டும் மீண்டும் வருவதற்கான காரணங்களையே வேரோடு களைவதற்கான அறிவுபூர்வமான நிரந்தர தீர்வுகளைக் கண்டு ஒவ்வொரு குடிமகரும் மகிழ்ச்சியாக வாழ வழி செய்யும்போது மட்டுமே  ‘இறையாண்மை உடைய ஜனநாயக, சமதர்ம, சுதந்திரக் குடியரசு’ நாடாக இந்தியா இருக்க முடியும் . இல்லையேல் எவர் மடிந்தால் எனக்கென்ன, இறப்பிற்கு காரணமாக எம்மையோ, எமது அரசு இயந்திரங்களையோ மக்கள் காரணம் சொல்லி விடக்கூடாது, அத்தகைய தலைவலிகளிலிருந்து எம்மை விடுவித்துக்கொள்ள அத்தனை சட்ட திருத்தங்களையும் யாம் செய்வோம் என்று அரசு கருதுவதாகவே நாம் பொருள் கொள்ளமுடியும்.

பிரச்சினைகளின் வேர்களைக் களையாமல் தற்கொலை முயற்சியை (அல்லது தற்கொலை) குற்றமாகக் கருதுவதில்லை போன்ற மேலோட்டமான போலி மனித உரிமை சட்ட திருத்தங்களை அரசு கொண்டு வருமேயானால், அரசானது தான் கையாலாகாத அரசு என்பதை ஒப்புக்கொண்டு எவ்வித குற்றவுணர்வுமின்றி மீண்டும் மீண்டும் ஒரு சமூக-அரசியல் கொலைக்கு தயாராகிறது என்பதை நாம் உறுதி செய்துகொள்ளலாம்.



நன்றி - உயிரோசை மாத இதழ், மதுரை (பக்க வரையறையின் காரணமாக சுருக்கப்பட்ட வடிவம் இதழில் வெளியானது. முழு வடிவம் இங்கே...)