Jan 31, 2016

கியூபக் கல்வி

கியூபக் கல்வி
-               மைதிலி சிவராமன்
-               தமிழ் மொழிபெயர்ப்பு – கொற்றவை


உலகில் எந்தவொறு சமூக நிறுவனமோ அல்லது கலாச்சார நிறுவனமோ தனித்திருப்பதில்லை, அதிலும் கல்வி என்பது வெற்றிடத்தில் சஞ்சரிப்பதில்லை. ஒவ்வொரு சமூகத்திலும் கல்வி என்பது, தம் மக்கள் மனதில் விதைக்கப்படவேண்டியதாக அச்சமூகத்தின் ஆட்சியாளர்களால் தீர்மானிக்க்கப்படுகிறது.  அவர்களின் இலக்கை  மதிப்புமிக்கதாக ஏற்றுக்கொள்ளும் வகையில் கல்வி முடக்கிவிடப்படுகிறது. முதலாளித்துவ நாடுகளில், கல்வியானது அதன் ஆட்சியாளர்கள் மறைமுகமாகவும், திருட்டுத்தனமாகவும் வரையறுக்கும் தேவைகளுக்குச் சேவை செய்வதாக உள்ளது. தங்களது கல்வி முறைகள் இலட்சியத் தன்மை கொண்டதாகவும், அனைத்து நம்பிக்கைகளுக்கும் இசங்களுக்கும் நியாயம் செய்வதாகவும், எந்தப் பாகுபாடுகளையும் கொண்டிராததாகவும் அவர்கள் கூறி வந்தாலுமேகூட, முதலாளித்துவ நாடுகள் தங்கள் ஆளும் வர்க்க கருத்தியலை இளம் மனங்களில் எண்ணற்ற குரூரமான, நுட்பமான வழிகளில் திணித்து வருகின்றன. இதற்கு நேரெதிராக, சோஷலிச நாடுகள் கல்வியானது கருத்தியல் நடுநிலையோடு செயல்படுகிறது என்றோ அல்லது செயல்பட வேண்டும் என்றோ முன்வைப்பதில்லை. சமூக ரீதியாக விரும்பப்படும் இலட்சியங்களுக்கேற்ற வகையில் மக்களின் சிந்தனையை வடிவமைப்பதில், முதன்மையில் கல்வியே ஒரு சிறந்த கருவியாகச் செயல்படுகிறது என்று சோஷலிச நாடுகள் கருதுகின்றன. சோஷலிச நாடுகளில் கருத்தியல் சார்ந்த ‘மூளைச் சலவை’ என்பது வெளிப்படையானது, நேரடியானது, துணிவு மிக்கது. அவர்களுடைய கல்வியின் உள்ளடக்கமானது மனம் கவரும் வகையில் அரசியல் தன்மைக் கொண்டது.

கியுபக் குடியரசில் அக்குடியரசின் சமூக இலக்கிற்கு ஏற்றவகையில், அதாவது  பொதுவுடைமைவாதியாக (கம்யூனிஸ்டாக) ஒருவரை உருவாக்குவதற்குக் கல்வி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கண்டறியும் ஒரு சிறு முயற்சியே இக்கட்டுரை. ஃபிடல் காஸ்த்ரோ சொன்னது போல், கம்யூனிசம் என்பது ‘அடிப்படையில் மனிதர்களின் விழுப்புணர்வு வளர்ச்சி குறித்தது’. ஒரு சமூகமானது தனது சோஷலிச அடிக்கட்டுமானத்தைப் பலப்படுத்திக் கொள்வதற்கு ஏற்ப மக்களின் சோஷலிச விழிப்புணர்வும் வளர்ச்சி பெறும். இதன் விளைவாக அவ்வளர்ச்சியானது, கியூப பொருளாதாரம் எதிர்கொள்ளும் சவால்களை அதன் அன்றாடப் பிரச்சினைகளை சோஷலிச வழிமுறையைப் பின்பற்றி வெற்றிகரமாகத் தீர்ப்பதில் அடங்கியுள்ளது. இவ்வாறாக கியூபக் கல்வியானது இரட்டைக் குறிக்கோள்களை உள்ளடக்கியதாக உள்ளது: புதிய சமூகம் முன் வைக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான திறன்களை வளர்த்தெடுப்பது அத்தோடு புதிய சமூகத்தில் உழன்று கொண்டிருக்கும் பழைய மனப்பான்மைகள் மற்றும் மதிப்பீடுகளுக்கெதிராகப் போர் புரிவது.


 கியூபக் கல்வி குறித்துப் பேசுகையில், வகுப்பறை என்பது கற்பதற்கான தளங்களில் ஒன்று மட்டுமே என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் கல்வி கற்பிக்கப்படுகிறது. பட்டறைகள், களப்பயிற்சிகள், நாடகம் மற்றும் இராணுவப் பயிற்சிகள் என பல்வகைப்பட்ட தளங்களில் கல்வி கற்பிக்கப்படுகிறது. இவ்வனைத்து செயல்முறைகளின்  கூட்டுவடிவமானப் புரட்சி -  பதினோரு வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் விடுதலைப் படைகள் அன்றாடம் எதிர்கொண்ட பலப் பிரச்சினைகளைப் போன்று பிரச்சினைகளை எதிர்கொண்டுவரும் அந்தப் புரட்சி என்பதே கியூபாவின் சிறந்தப் பள்ளிக்கூடமாகக் கருதப்படுகிறது.

கியூபாவின் கல்வி அமைச்சர் சொன்னது போல், “எமது நாட்டின் கல்வித் தத்துவமானது இந்நாட்டின் ஆயுதப் போராட்டத்தோடு இணைந்து பிறந்தது. பிறகு அது கல்வியறிவுப் பிரச்சாரத்தோடும், தாய் நாடு காக்கும் போராட்டத்தில் கூலிப்படையினருக்கு எதிரான பிரச்சாரத்தோடும் சேர்த்து நடைமுறைப்படுத்தப்படுகிறது.’ கியூபக் கல்வியின் உள்ளடக்கத்தையும் இலக்கையும் அறிந்துகொள்ள ஒருவர் தன் ஆய்வுகளைப் பள்ளிக்கூடங்களில் மட்டுமல்லாது கியூபாவின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் செய்தல் வேண்டும்.

அந்த மூன்று இலக்குகள்

கியூபக் கல்வி மூன்று முதன்மையான குறிக்கோள்களை வெளிப்படுத்துகிறது; மேட்டிமைத்தன எதிர்ப்பு (anti-elitist) மற்றும் மக்கள் சார்புடையதாகச் செய்வது ; கியூபப் புரட்சியில் தொடர் ஈடுபாட்டுணர்வைப் புகட்டுவது - சே உருவகித்த சர்வதேச புரட்சிகர ஆற்றலை அதாவது உலகின் எந்த மூலையிலும் காணப்படும் அநீதி, ஒடுக்குமுறை ஆகியவற்றை எதிர்க்கும் சீற்றத்தையும்,  விருப்பத்தையும் உயிர்ப்போடு வைத்திருக்கும்படிச் செய்வது. ஒன்றோடொன்று தொடர்புடைய இந்த இலக்குகளை அடையும் வகையில் கல்வியின் ஒவ்வொரு அம்சமும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேட்டிமைத்தன எதிர்ப்பு: மேட்டிமைத்தன எதிர்ப்புக் கல்வியில் இரண்டு அம்சங்கள் உள்ளன: அனைவருக்கும் தரமானக் கல்வி கிடைக்கும் வகையில் செயல்படுவது அத்தோடு அறிவுஜீவிகளுக்கும் உடல் உழைப்பாளிகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பது. முதல் பிரச்சினை, அதாவது ஒரு விலையுயர்ந்த பண்டமாக இருந்த கல்வி – புரட்சிக்கு முன்னர் பள்ளிக் கூடத்தையேக் கண்டிராத ஏழு லட்சம் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்கும் வகையில் போர்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு – அனைவருக்கும் அடிப்படை மற்றும் சம உரிமையின் அடிப்படையில் கல்வி கிடைக்கும் வகையில் செயல்முறைப்படுத்தப்பட்டது.

விளைவு வியக்கத்தக்கதாக இருந்தது: ஒரே வருடத்தில், கல்லாமை 29 சதவிகிதத்திலிருந்து 3.3 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. நெடுந்தொலைவிலுள்ள மலைப்பகுதிகள் மற்றும் சாலையற்ற பகுதிகளைச் சென்றடைவது அவ்வளவு எளிதானக் காரியமாக இருக்கவில்லை. அதற்குத் தேவைப்படும் பொருள் வளம், மனித வளம் எங்கிருக்கிறது? ஆசிரியர்கள் எங்கிருந்து வருவார்கள்? பயிற்சி பெற்ற பல நபர்கள் யாங்கீத் துறைமுகத்திற்குத் (yankee haven) தப்பி ஓடிவிட்டிருந்தனர். ‘எவருக்கு அதிகம் தெரியுமோ அவர் குறைவாக அறிந்தவருக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்’ எனும் ஒரு எளிய கொள்கையினைப் பிரச்சாரம் செய்து கற்றவர்கள் பெரும் திரளாகத் திரட்டப்பட்டார்கள்.

ஒரு லட்சம் இளைஞர்கள் திரட்டப்பட்டு ஆயிரக்கணக்கான அறிவியக்கப் படைப்பிரிவுகளாகப் பகுக்கப்பட்டார்கள். குறிப்பிடத்தக்க வகையில், இளைஞர்கள் வரதேரோவில் கூடினார்கள் – அதன் மணல் நிறைந்த கடற்கரையும், மரகதப் பச்சை நீரும் அதுவரை அமெரிக்கச் செல்வந்தர்களுக்கு விடுமுறையைக் கழிக்கும் ஒரு கொண்டாட்டத் தலமாகவே இருந்தது  - ஆனால், அன்று இளைஞர்கள் கூடி கல்வியறிவவின்மையை ஒட்டுமொத்தமாகத் துடைத்தெரிவதற்காக வாக்குறுதி எடுக்கும் தலமாக மாறியது. ஆசிரிய இளைஞர்கள் புரட்சியின் பிரதிநிதிகளாக விவசாயிகளின் வீட்டில் தங்கியிருந்து பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு கல்வி போதிக்கும்படி பணியமர்த்தப்பட்டனர்.

பெரும்பாலான இளைஞர்கள் தங்கள் வாழ்நாளில் கிராமப்புறங்களுக்கேச் சென்றதில்லை. புரட்சியின் ஆன்மாவே அவர்களைத் தாங்கிப் பிடித்து வந்தது. ஆசிரியர், கற்றறிந்தவர் என இரு தரப்புக்கும் இந்தப் பிரச்சார இயக்கங்கள் கல்வியளித்தன. தங்களது குடிமக்களில் பெரும்பாலானோர் எத்தகைய வாழ்க்கை வாழ்கின்றனர் என்பதை ஆசிரியர்கள் நேரடியாகவே கண்டனர்.

புரட்சிகரப் பணியின் வீச்சு அவர்களின் முகத்தில் அறைந்து அதன் முக்கியத்துவத்தை உரைத்தது. அதில் அவர்களின் சொந்த பாத்திரமும், அது கோரும் தியாகமும் அவர்களுக்குத் தெளிவாகப் புரிந்தது.  அடர் இருளிலும், மோசமான குடிசைகளிலும் அறியாமைக்கு எதிராகவும், உணர்ச்சியின்மைக்கு எதிராகவும் அவர்கள் நிகழ்த்தும் போரானது புரட்சியை கியூபாவின் இதயத்துடிப்பாகக் கொண்டு சேர்த்தது என்பதை அவர்கள் உணர்ந்தனர். பிறகு ஒவ்வொரு கியூபனும் பெருமையாகச் சொல்ல முடிந்தது: ‘உங்கள் நாட்டின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றமானது எந்தப் புள்ளியில் மேலெழத் தொடங்கியது. அத்தகைய ஒரு மாபெரும் எழுச்சியின் குறியீடு என்ன என்று பின்வரும் காலங்களில் எவரேனும் கேட்டால், கல்வியறிவிக்கும் இயக்கமே எங்கள் முன்னேற்றத்தின் தொடக்கமாக இருந்தது, ஒவ்வொரு இளைய ஆசியரும் ஏந்திச் சென்ற கல்வி எனும் அந்த ஒளி விளக்கே அதன் குறியீடு என்று நாங்கள் சிறு தயக்கமுமின்றி உரைப்போம்.’

1961 உலக கல்வியறிவித்தல் பிரச்சாரமானது (அந்த மகத்தான முயற்சியின் அதிகாரப்பூர்வப் பெயர்) தன்னளவில் அதுவே ஒரு மாபெரும் கல்வியானது: அர்ப்பணிப்பும், உறுதிப்பாடும் நிறைந்த ஓர் நாடு எத்தகைய இலக்கை அடைய முடியும் என்பதை ஒவ்வொரு கியூபருக்கும் அது கற்றுக்கொடுத்தது. ஒவ்வொரு கியூபரும் பார்க்கும் வகையில், ‘கல்வியரிவற்றவர்கள் மற்றும் அவர்களின் ஆசியர்களுக்கிடையேயும், நகரத்திலிருந்து நாட்டுப்புறம் வரையிலும் வாழும் ஒட்டுமொத்த குடும்பங்களுக்கும் இடையேயும் கல்வியறிவின்மை எனும் தாழ்மை நிலையைக் களைவதற்காக …… ஒரு மாபெரும் இணைச் சகோதரத்துவத்தை இவ்வழிமுறை ஏற்படுத்தியது’.

ஹவானாவின் ஐந்தாம் அவென்யூ - வடமேல் திசையில் இருக்கும் அதன் ஏகாதிபத்திய சகாவின் பெயரைக்கொண்ட ஒரு தலம்.  ஒரு காலத்தில் கியூப மேல்தட்டு வர்க்கத்தின் பிரத்யேக வாழ்விடமாக இருந்தது அத்தலம், ஆனால் இப்போது ஹவானா மிகவும் திறமை வாய்ந்த கிராமப்புற கியூப மாணவர்களைக் கொண்டிருந்தது. ஆடம்பரம், தனிப்பட்ட வாழ்வியல் மற்றும் பெரும் பணம் என்பதற்கு அடையாளமாக இருந்த இடமானது இப்போது கல்வியில் கியூபாவின் புதிய அனுகுமுறையின் அடையாளமாகிப் போனது.

புரட்சிகர அறிவுஜீவி: கியூபா வழங்கி இருக்கக்கூடியவற்றில் மிகச் சிறந்ததைப் பெற்ற  திறமை வாய்ந்த அக்குழந்தைகள் ஒரு தனித்த மேல்தட்டு அறிவுஜீவிக் குழுக்களாகிவிட்டால், பிறகு அது புரட்சிகரக் குறிக்கோள்களுக்கு சாவு மணி அடித்துவிடும். உண்மையில், அது தற்கொலைக்கு நிகரானதாகி விடும். 1959க்கு முந்தைய காலத்திலிருந்து கியூபத் தலைவர்கள் மீது தனிநபர்கள் நம்பிக்கையைன்மையை பெற்றிருந்த வரலாறு ஒன்றிருக்கிறது. புரட்சிக்கு முந்தைய காலகட்டத்து அறிஞர்களிடையே மூன்று உள்ளார்ந்த பலவீனங்களை அவர்கள் அடையாளம் கண்டிருந்தனர்:  அகவயவாதம், சமூகத்தின் உண்மையான நடைமுறையை அறியாது ஊகங்களின் அடிப்படையில் கலாச்சார மட்டத்தில் தம்மையே ஒரு புரட்சியின் பிரதினிதியாகக் கருதிக்கொள்ளும் ஒரு போக்கு அவர்களிடையே இருந்தது. ‘அறிவுஜீவிப் பணியாளர்கள் தனிநபர்வாதத்திற்குள் வீழும் ஆபத்து என்றென்றைக்கும் இருக்கிறது. இதன்விளைவாக ஆக்கப்பூர்வமான, படைப்பாற்றல் மிக்க நபர்களாக உருவாவதற்குப் பதிலாக பக்கவாட்டிலிருந்து கவனித்து ஒருவித எதிரிடை அனுகுமுறைக்குள் அவர்கள் வீழ்ந்துவிடக்கூடும்.’ வரலாற்றிலிருந்தும், சமூக நடைமுறையிலிருந்தும், மக்கள் போராட்டங்களிலிருந்தும் விலகி நெடுந்தொலைவு சென்றுவிட்டதன் விளைவே தனிநபர்வாதம் என்று அவர்கள் கருதினார்கள்.  ஹவானா பல்கலைக்கழக மாணவர்களில் பலர் புரட்சியில் பங்குபெற்றனர் என்றாலும், பல்கலைக்கழகமானது தன்னளவில் விலகியே இருந்தது.

ஓர் அறிஞ்ர், தன் துறையில் எவ்வளவு தலைசிறந்தவராக இருந்தாலும், புரட்சிகர சிந்தனைக்கு அர்ப்பணிப்பற்றவராக இருந்தால், சோஷலிஸ்ட் கியூபா அவரை நிராகரித்தது. அவர் ஒரு விசுவாசியாக இருக்க வேண்டும்.  பலகலைக்கழகத்தின் செயல்பாட்டுப் பாணியானது மற்ற துறைகளின் செயல்பாட்டுப் பாணியோடு இசைந்திருத்தல் வேண்டும். கூட்டு வேலையின்   படைப்பாற்றலுக்கு வழி விடுத்து ‘தனித்த அசலான படைப்பாளர்’ எனும் பழைய கருத்து விலக வேண்டியிருந்தது; ஊக ஆய்வுகள் மக்களின் உண்மைத் தேவைகள் குறித்த ஆய்வுகளுக்கு வழிவிட வேண்டியிருந்தது; அவ்வாய்வுகள் பயன்தரும் செயல்பாடுகளை நோக்கியதாகவும் இருக்க வேண்டும்.

கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஒருவர் ஹவானா பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறையில் உரையாற்றியபோது இவ்வாறு சொன்னார்: ‘அரசியல், சமூகம் மற்றும் எண்ணிலடங்கா கருத்தியலுக்கான ஆய்வகம் நம் நாடு. பிரச்சினைகள், கேள்விகள், பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த கொந்தளிப்பு நிலவுகிறது…. இந்த உண்மை நடைமுறை குறித்த ஆய்வானது…. பேராசிரியர்கள், மாணவர்கள் என்று உங்கள் ஒருவருக்கும் ஆய்வு செய்வதற்கும் கற்பதற்குமான சிறந்த வழி. புரட்சிக்குத் தோள் கொடுக்க பல்கலைக்கழகங்களுக்கு இது மட்டுமே வழி என்றும்கூட சொல்லலாம்.’

புரட்சி முன்வைக்கும் கேள்விகளின் மீது கவனம் செலுத்துவதன் மூலம் பல்கலைக்கழகங்கள் புரட்சிகர நடவடிக்கைகளில் தங்கள் பங்கேற்பைத் தொடங்க வேண்டும். பழைய பிரச்சினைகள் மற்றும் புதிய பிரச்சினைகளைப் புதிய வழிமுறைகள் கொண்டு தீர்ப்பதற்கு உதவ வேண்டும். பழைய சமூகத்தில், வேலையின்மை ஒரு பிரச்சினையாக இருந்தது.  புதிய சமூகத்தில், மனிதவளப் பற்றாக்குறையும், தனிநபர்களின் திறனை எவ்வாறு மேம்படுத்துவது என்பதும் கேள்விக்குறியதாய் இருக்கிறது. பயங்கரவாதத்தையும், பட்டினியையும் ஓர் இயக்கமுறையாக பழைய சமுதாயம் பயன்படுத்தியது. வாழ்வதற்காகவே ஒரு மனிதன் வேலை செய்தான். ஒரு சோஷலிச சமுதாயத்தில் கற்பனையில்கூட அதற்கு இடமில்லை. வேலை செய்ய வேண்டுமே எனும் அச்சத்திற்கு அப்பாற்பட்டு ஒரு நபர் எவ்வாறு ஊக்குவிக்கப்படலாம்? இதுபோன்ற கேள்விகளில் அறிவுஜீவிகளின் கவனத்திற்குரியதாய் இருக்க வேண்டும்.

மக்களிடமிருந்து ஒதுங்கி தம் பணிகளை செய்துவந்ததே அறிவுஜீவிகளின் பலவீனங்களின் மையப் பிரச்சினையாக இருந்தது போய், இப்போது கியூப அறிஞர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில், வயல்களுக்குச் சென்று விவசாயிகளிடமிருந்து கற்றனர், தங்களது சொந்த உழைப்பின் வியர்வையிலிருந்து கற்றனர்.

உடல் உழைப்பு: கியூபக் கல்வியுடன் பின்னப்பட்ட இரண்டாவது இலக்கை இப்போது நாம் காணவிருக்கிறோம் – புரட்சியியோடு தொடர் ஈடுபாட்டுணர்வைப் புகட்டுவது. புரட்சியை உயிர்ப்போடு வைத்திருத்தலும், ஒருங்கிணைத்தலும் கியூப பொருளாதாரத்தையே பெருமளவில் சார்ந்திருந்தது. சர்க்கரை விளைச்சலே அதற்கு முக்கிய விசையாக இருந்தது. சர்க்கரை அறுவடைக்கான இலட்சியம் மிகுந்த இலக்குகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்: ஒவ்வொரு கியூபரும், அவர் ஒரு விஞ்ஞானியோ, ஓர் அறிஞரோ, ஒரு மாணவரோ, ஓர் எழுத்தரோ அல்லது ஓர் ஓவியரோ எவராக இருப்பினும் வயல்களில் வேலை செய்ய வேண்டும். அறுவடைக் காலத்தின் போது அனைத்து அலுவலகங்களுக்கும், பள்ளிகளுக்கும் விடுமுறையளிக்கப்பட்டது. அமைச்சர்கள், அதிகார வர்க்கத்தினர், எழுத்தாளர்கள் மற்றும் வேளான் பணியாளர்கள் என அனைவரும், அந்த இரக்கமற்ற கியூப வெய்யிலின் கீழ் வியர்வை சிந்தினர். ‘மற்றவரைக் காட்டிலும் கடினமாக உழைக்க வேண்டும் என்பதே எனக்கிருக்கும் கூடுதல் சிறப்பு’ என அடிப்படை தொழில்களுக்கான அமைச்சர் சொன்னது சற்று மிகையானது என்றாலும் உண்மை அதுவே.

இந்த வழிமுறையானது புரட்சியின் நண்பர்களிடமிருந்தும், எதிரிகளிடமிருந்தும் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டது. பின்னவர்களோ அதனை அடிமை உழைப்பு என்று அழைத்தார்கள்,  முன்னவர்களோ வளங்களைத் தவறாக  ஒதுக்கீடு செய்வது என்றார்கள். வேளான் பொருளாதாரப் பேராசிரியர் ஒருவர் மூங்கில் வயல்களில் அரிவாளை தப்பும் தவறுமாகப் பிடித்துக்கொண்டு என்ன செய்யப்போகிறார்? அதேபோல் ஒரு தூதர், ஸ்காட்ச் விஸ்கி அளித்து  ஐநாவில் செல்வாக்கு செலுத்தி கியூபாவுக்கு மேலும் சில நட்புறவுகளை ஏற்படுத்துவதன் மூலம் புரட்சிக்கு சிறந்த சேவை செய்ய முடியாதா? ஆடல் நங்கைகளையும், கவிஞ்ர்களையும் மூங்கில் வெட்டச் சொல்வது முட்டாள்தனமானது.  அவர்கள் செடிகளை பாழடித்துவிடுவார்கள். சுருக்கமாகச் சொல்வதென்றால், விவசாயிகள் மூங்கில் வெட்டட்டும் மற்றவர் தம் வழக்கமானத் தொழில்களை மேற்கொள்ளட்டும்.

செயல்பாட்டுத் திறன் – சந்தேகமேயில்லை, இந்த விமர்சனங்களுக்கு டெப்ரேயின் அழகாக செதுக்கப்பட்ட பதில் இதோ: ’புதிய மனிதனின் உருவாக்கத்தில், எவரும் எவரையும் விட மேலானவர் அல்ல. இதன்படி உழைப்பின் சிறப்புரிமையைப் பொறுத்தவரை, கியூபத் தொழிலாளரும் கல்வியின் சிறப்புரிமையைப் பெறுகிறார்; அதேபோல் கல்வியின் சிறப்புரிமையைப் பொறுத்தவரை, அறிஞர் ஒருவர் உற்பத்தி உழைப்பில் பங்கேற்கும் சிறப்புரிமையைப் பெறுகிறார். இராணுவ ஆக்கிரமிப்பை முறியடிக்கும் போராட்டத்தின் போது, ஏகாதிபத்தியவாதியின் குண்டுகள் ஒரு கவிஞனையும், மூங்கில் வெட்டுபவரையும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. மேலும் அவர் கேட்டார், ‘ஒரு அறிவுசார் தொழிலாளர், உடல் உழைப்பாளியைக் காட்டிலும் தான் மேன்மையானவர் என்று எந்தத் தெய்வீக உரிமையின் பேரில் வலியுறுத்துகிறார், சுரண்டலுக்கெதிரான போராட்டத்தில் அனைத்து தொழிலாளர்களிலிருந்தும் எந்த உரிமையின் அடிப்படையில் விலகி நிற்கிறார்?’ (லத்தீன் அமெரிக்கா பற்றியக் கட்டுரைகள், தொகுப்பாசிரியர்: ரோபின் ப்ளாக்பர்ன் ).

மனித உழைப்பு பற்றிய கல்வியிக்குக் கிடைத்த மதிப்பின் மூலம் உடல் உழைப்பு மீதான ஒரு மரபான இகழ்ச்சியை எதிர்த்தபடியே, வேலை என்பது ஒரு மனிதனின் ஆகச்சிறந்த ஆற்றலை வெளிக்கொணரும் எனும் புரட்சி பற்றிய புதிய மதிப்பீட்டை செலுத்தியதன் மூலம் எதிர்வரக்கூடிய எத்தகைய தீமைகளையும் சந்தேகத்திற்கிடமின்றி புறந்தள்ள முடிந்தது. உடல் உழைப்பானது நகரத்திற்கும், நாட்டுப்புறத்திற்கும் இடையேயான பிணைப்பைப் பலப்படுத்தியது, தொழிலாளி- விவசாயி, அறிவுஜீவி-உடல் உழைப்பாளி – புரட்சியின் மூலம் உருவாக்கப்பட்ட பிணைப்பு அது. வயல்களில் வேலை செய்யும் ஒவ்வொருவரும் தங்களது உழைப்பிற்கும் புரட்சியின் ஆதாயத்துக்கும் இடையிலான நெருக்கமான இணைப்பைப் புரிந்துகொண்டனர்.  புரட்சியால் உணர்த்தப்பட்ட மதிப்பீடுகளின் வழி ஒரு தொடர் ஈடுபாட்டுணர்வு உருவாக்கப்பட்டது.

புரட்சிகர சர்வதேசியம்: ஒடுக்குமுறைக்கு முன் சமரசம் செய்துகொள்ளாத, விடுதலைக்காகப் போரிட்டு மடியவும் தயாராக இருக்கின்ற ஆண்களும் பெண்களும் இருந்ததால் கியூபப் புரட்சி சாத்தியமானது. காலப்போக்கில், அந்த எதிர்ப்புணர்வு மங்கியிருக்குமாயின், புரட்சியின் ஆன்மாவுக்கு துரோகமிழைத்த செயலாகிருக்கும். புரட்சிகர உணர்வை எவ்வாறு உயிர்ப்புடன் வைத்திருப்பது என்பதே ஒவ்வொரு புரட்சியின் கவலையாக இருந்திருக்கிறது.  கியூபா - எங்கு சேவின் சர்வதேசிய மரபு பலமாக இருந்ததோ, அங்கு இந்த விவகாரம் ஒரு சிறப்பு கவனத்தைப் பெற்றிருந்தது. சோஷலிசக் கியூபாவின்  புதிய இளைஞர், ‘உலகின் எந்த மூலையில் ஒரு மனிதன் கொல்லப்பட்டாலும் ஒருவர் கடுந்துயர் கொள்ள வேண்டும், அதேபோல் உலகின் எங்கோ ஒரு மூலையில் விடுதலையின் புதிய கொடி உயர்த்தப்படும் ஒவ்வொரு முறையும் ஒருவர் மிகுந்த உற்சாகம் கொள்ள வேண்டும்’ என்று சே நம்பினார். கியூபக் கல்வியானது குழந்தைப் பருவத்திலிருந்தே இந்தப் புரட்சிகர ஒற்றுமை உணர்வை விதைக்கிறது.

ஒரு முழுமையான அளவில், ஏகாதிபத்தியமானது எவ்வாறு விடுதலைக்கு ஆபத்தானது எனும் தொடர் நினைவூட்டலே கியூபக் கல்வி. பள்ளிக்கூடத்தில், ஆசியா, ஆஃப்ரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் நடந்துவரும் விடுதலைப் போராட்டங்கள் மற்றும் இந்த நூற்றாண்டின் முக்கிய நிகழ்வுகள் என்று பிள்ளைகள் விவாதிப்பார்கள். ஆசியர்களும் அதுகுறித்து அடிக்கடிப் பேசுவார்கள்.  முதலாளித்துவ உலகில் ‘மேற்கத்தியர்கள்’ போல் ஆயுதப் போராட்டங்கள் குறித்த ஆவணங்கள் கியூபாவில் பிரபலம்.

பழைய விடுமுறை நாட்கள் மற்றும் திருவிழாக்களைக் கொண்டாடும் இடங்களில், புரட்சியாளர்கள் மற்றும் புரட்சிகளைக் குறிக்கும் தினங்கள் கொட்டாடப்படுகின்றன. கியூபர்கள் மற்றும் இதர லத்தீன் அமெரிக்க புரட்சியாளர்களின் வாழ்கைகள் பிரபலப்படுத்தப்பட்டு, ஓராயிரம் வழிகளில் புரட்சி உணர்வு உயிர்ப்புடன் வைக்கப்படுகிறது. வியட்னாம், ஒடுக்குமுறைக்கெதிரான மனிதர்கள் பற்றிய மனதைக் கவரும் குறியீடு; விளம்பரத் தட்டிகள், சுவரொட்டிகள், பதாகைகள் என வியட்னாமின் போராட்டம் குறித்து அனைத்தும் - கியூபா எங்கும் காணப்படுகிறது.

வளரும்போது என்னவாக விரும்புகிறாய் என ஒரு கியூபக் குழந்தையிடம் கேட்டால், எவ்விதப் பாசாங்குமின்றி மிகுந்த ஆர்வத்துடன் ‘நிச்சயமாக, ஒரு கெர்ரில்லாப் போராளி ஆக வேண்டும்’ என்று சொல்லும். ஓர் இந்தியக் குழந்தை எஞ்சின் ஓட்டுனராக வேண்டும் என்று சொல்வது போல் அப்பதில் அவ்வளவு இயல்பாக இருக்கும்.

‘எங்கள் புரட்சியின் சாரம் கல்வியே’ என்றார் ஃபிடல் காஸ்த்ரோ. கல்வியறிவின்மைக்கெதிரான போர் முடிந்துவிட்டது. புரட்சிக்கு முந்தையக் கல்வியை வெறுமென்று நீட்டிப்பது புரட்சிக்கெதிரான ஒரு செயலாகி இருக்கும். கல்வியின் உள்ளடக்கமும் நோக்குநிலையும் அடிப்படையிலேயே மாற வேண்டியிருந்தது. இப்போது, சோஷலிசக் கல்விக்கான போராட்டம் தொடர்கிறது. கியூபர்கள் பெருமையாகச் சொல்வது போல் அவர்களுடையது ‘நிரந்தரக் கல்வி’. பள்ளிக்கூடத்தில் மட்டும் புரட்சிகர செய்திகள் போதிக்கப்படுவதில்லை, ஒவ்வொரு கியுபருக்கும் அவர் இருக்கும் இடம் தேடி கொடுக்கப்படுகிறது, தொழிற்சாலையில், வயல்களில், இராணுவத்தில், இரவு பகலாக வருடம் முழுவதும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு கியூபரும் புரட்சிக்கு விசுவாசமாக இருக்க கல்வி துணைப் புரிகிறது.

மிகுந்த பரந்த உணர்வோடு ‘மக்களின் அணு ஆற்றலை விடுதலை’ செய்யும் நோக்குநிலையோடு உருவாக்கப்பட்டக் கல்வியால் மட்டுமே இது சாத்தியம் என்று கியூபர்கள் நம்புகின்றனர். இதுபோன்ற கல்வியை வளர்த்தெடுப்பதேப் புரட்சியின் முதல் பணியாகக் கருதப்படுகிறது.

[மைதிலி சிவராமன், Haunted by Fire, லெஃப்ட் வர்ட் புக்ஸ், 2013 வெளியீடு]


 நன்றி: கொம்பு

Related Link:

http://www.latinamericanstudies.org/cuba-education.htm

Jan 30, 2016

ரோஹித் வெமுலா நினைவுச் சொற்பொழிவு


எப்படி கடவுள் இல்லையோ அப்படி சாதியும் இல்லை. பணம் மற்றும் கடவுளின் வரிசையில் மனிதன்தான் சாதியைப் படைத்தான். வணக்கம் தோழர்களே, இன்று நாம் ரோஹித் வெமுலாவின் நினைவுச் சொற்பொழிவி நிகழ்விற்காகக் கூடியிருக்கிறோம்.  பார்ப்பனிய இந்துத்துவ சாதியக் கருத்தியலுக்கு , அடிமையாகிப் போயிருக்கும் இந்தியாவில் உள்ள  ஹைதரபாத் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக இருந்து சாதிய ரீதியான புறக்கணிப்பிற்கும், அரசியல் ரீதியான இந்துத்துவ காழ்ப்புணர்ச்சிக்கும் பலியானவர்தான் ரோஹித்.  ஒரு சமூக எழுச்சிக்காக தன் உடலை அவர் ஆயுதமாக்கியது நமக்கெல்லாம் வருத்தம் தரக்கூடியதுதான் எனினும், இதுபோன்ற மரணங்கள் இனி எப்போதும் நிகழ்ந்துவிடக்கூடாது எனும் கவலையையும் அது நம்முள் எழுப்பியுள்ளது.

சென்ற வாரங்களில் தொடர்ச்சியாக மாணவிகள் தற்கொலை, மர்மமான முறையில் மரணம் போன்ற செய்திகள் உண்மையில் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. பாகுபாட்டினால் நிகழும் சமுதாயப் படுகொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் ஒரு மோசமான காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம்.  இந்நிலையை எப்படி மாற்றப் போகிறோம் என்பதே இன்று நம்முன் இருக்கும் கேள்வி.

காலம் காலமாக யாரோ சிலரின் பேராசைக்கு நாம் நம் பிள்ளைகளை, நம் தோழர்களை இழந்து வருகிறோம். ஆம் பேராசை!  பகிர்ந்துண்டு வாழும் எண்ணமின்றி மற்றையோரை விட தமக்குக் கூடுதலாக செல்வம் வேண்டும் எனும் பேராசையே  மனிதனை மனிதன் சூரையாடியும், வேட்டையாடியும் வாழப் பணிக்கிறது. அப்படியென்றால் எண்ணம்தான் எல்லாவற்றிற்கும் அடிப்படையா என்றொரு கேள்வி உங்களுக்கு எழலாம்.  “ஆதியில் செயல் இருந்தது” எனும் ரோசா லுக்சம்பர்க்கின் மேற்கோளைச் சுட்டிச் சொல்வதானால் செயல் பிறந்தது, செயலினால் சில விளைவுகள் பிறக்கின்றன, அந்த விளைவிலிருந்து சில விளைவுகள், அதிலிருந்து சில விளைவுகள் இப்படித்தான் சமூகம் முன்னேறியிருக்கும். சொல்லா செயலா என்றால் செயல்தான் முதலில் தோன்றியது என்று அடித்துச் சொல்லலாம் செயலினால்தான் இந்த அண்டமே தோன்றியிருக்கிறது, அந்த அண்டத்திலிருந்து கிரகங்கள், அதில் ஒரு கிரகத்தில் உயிரினம். பெரு வெடிப்பு ஏற்படும் (நானோ நொடியில் ஏற்பட்ட பின்பு) போதுதான் ஒலி தோன்றும், செயல் இல்லாத இடத்தில் ஒலி தோன்ற முடியாது.  ஆக ஆதியில் சொல்லுமில்லை, ஆதியில் கருத்துமில்லை.

சொல், மொழி, கருத்து, எல்லாமே மனிதன் தோற்றுவித்ததுதான். ஒவ்வொருவரும் இதை ஆழமாகப் புரிந்துகொள்வார்களேயானால் மூடத்தனமாகவும், பேராசைக்ககவும் தோற்றுவித்த கருத்துகளை முற்றிலுமாக கைவிடுவார்கள். ஆனால், கார்ல் மார்க்ஸ் சொன்னதுபோல் அனைத்தும் பண்டமயமாகும் போது தான் படைத்த கருத்தும் மனிதனை ஆளத் தொடங்குகிறது என்பதைத்தான் நாம் கண்டு வருகிறோம்.

சொல்லும் செயலும் குறித்துப் பேசிவந்தோம் இல்லையா, மனிதர்களிடையே இன்று அன்பு மறைந்து வெறுப்பு மட்டுமே மேலோங்கி இருப்பதற்கான காரணமாக இருக்கும் மதங்கள் அனைத்தும் ஆதியில் சொல் இருந்தது என்கின்றன. அது தமக்கு மட்டும் அசரீரியாகக் கேட்டது, அந்த சொல்லுக்குறியவன் இட்ட கட்டளையின் அடிப்படையில்தான் இந்த சமூகத்தை ஒழுங்கமைக்கும் விதிகளை தாம் உருவக்குவதாக ஒவ்வொரு மதத்தின் உற்பத்தியாளரும் (ஆம், அதுதான் அவர்களுக்குப் பொருத்தமான சொல்) சொல்லி வந்திருக்கின்றனர். சரி அவர்களின் கூற்றுபடியே போவோம். ஒரு சொல் வந்தது எனில் அதற்கான காரணம், தேவை இந்த மண்ணில் இருந்திருக்க வேண்டும் இல்லையா? ஒழுங்கமைக்கும் தேவை இருந்ததெனில் ஒழுங்கின்மையும், அதற்கான காரணமும் இருந்திருக்க வேண்டும். அந்தத் தேவைகள் நிச்சயம் பொருளாயத காரணங்களினால்தான் தோன்றியிருக்க வேண்டும். ஏனென்றால் உயிரினங்களின் தேவை உயிர்வாழ்தல் மட்டுமே. உயிர் வாழ்வதற்கான  முயற்சியின் (உழைப்பு,செயல்) விளைவான சில கண்டுபிடிப்புகளும் (கருவிகள், செயல்) பரிணாம வளர்ச்சியும் மனித இனத் தோற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. இந்த உயிர் வாழ்வதற்கான முயற்சியானது புறச்சூழல் - நிலம் (இதை இயற்கை என்கின்றனர், மனிதனும் இயற்கைதானே) மற்றும் வளங்களைச் சார்ந்திருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இவ்வளங்களை அனைவரும் சமமாகப் பகிர்ந்துண்ணும் சூழல் இருந்திருந்தால் மனிதர்களுக்குள் முரண்பாடு வருவதற்கான காரணங்கள் ஏதும் இருந்திருக்க முடியாது.  மனிதர்களை ஒழுங்கமைக்கும் ‘ஏற்பாட்டிற்கும்’ தேவை இருந்திருக்காது.  ஆக, வளங்களை, அதனைப் பயன்படுத்திப் பெற்ற விளைச்சல்களை தமக்காக (குழு, குடும்பம்) மட்டுமே ஒருவர் அபகரித்துக்கொள்ள முயற்சிக்கும்போதுதான் அங்கு முரண்பாடுகள் தோன்றுகின்றன.

தாம் முயற்சித்து (உழைத்து) பெற்ற ஒரு பொருளை ஏன் மற்றவரோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். மதங்கள் சொல்வதுபோல் அதுதான் நல்ல மனிதருக்கு அழகு என்று நிச்சயம் நான் சொல்ல மாட்டேன். உண்மையில் ஒரு மார்க்சியராக நான் என்ன சொல்வேன் என்றால் நீங்கள் அறுவடை செய்ததை நீங்களே உண்ணுங்கள், ஆனால் நீங்கள் அறுவடை செய்து உண்ணுங்கள். அடுத்தவரின் அறுவடையை அபகரிக்காதீர்கள் என்பதோடு அடுத்தவருக்கும் வளங்கள் மீதிருக்கும் உரிமைகளைப் பரிக்காதீர்கள் என்று சொல்வேன். இதையெல்லாம் விட ஒருவர் தம் முயற்சியால் தமது தேவைக்கான எல்லாவற்றையும் உற்பத்தி செய்துவிட முடியாது. அரை மனிதனாக இருந்தபோது வேண்டுமானால் கிடைப்பதை உண்டு வாழ்ந்திருக்கலாம். ஆனால் நிலத்தின், வளத்தின் உடனான தொடர் உறவில், தம் இருப்பை மேம்படுத்திக் கொள்வதற்கான வேட்கையில், முயற்சியில் மனிதர்களிடையே உற்பத்தி முறைகளும் அதன் விளைவான சமூக உறவுகளும் தோன்றுகின்றன.

இந்த சமூக உறவுகள் நியாயமான உறவுகளாக இருக்கும் வரை, அதாவது அனைவரும் உழைத்து (ஏனென்றால் உழைப்பின்றி ஏதும் விளையாது) அனைவரும் அந்த உழைப்புக்கேற்ற பங்கினைப் பெறும்போது அங்கு எந்த முரண்பாடுகளும், பிளவுகளும், பாகுபாடுகளும் இருப்பதில்லை.  ஆனால்  எங்கு வாய்புகள் மறுக்கப்படுகின்றனவோ அங்கு முரண்பாடுகள் தோன்றுகின்றன. எங்கு அபகரிப்பு நிகழ்கிறதோ அங்கு முரண்பாடுகள் தோன்றுகின்றன. எங்கு சுரண்டல் நிகழ்கிறதோ அங்கு முரண்பாடுகள் தோன்றுகின்றன. உற்பத்தி மற்றும் நுகர்வு இதுதான் மனித வாழ்வின் அடிப்படைத் தேவை. உற்பத்திக்கான களமாய் இருப்பது நிலமும் வளமும், நுகர்வுக்கான களமாய் இருப்பது மனித உடல்.  நிலம், வளம், உடல் - இம்மூன்றுக்கும் இடையே  எது ஒன்று நுழைந்தாலும் அது செயற்கையானதுதான். தேவையின் பொறுட்டு மனிதர்கள் உற்பத்தி செய்வதுதான் (அது கருவியாகட்டும், கடவுளாகட்டும்; பொருளாகட்டும், கருத்தாகட்டும்).

நிலத்தையும், வளத்தையும் சார்ந்திருக்கும் மனிதன், அதன் மாறுதலுக்கேற்ப தம் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள இடம் பெயர்கிறான். அப்போது உள்ளூர் பழங்குடிகளிடம் ஏற்பையோ அல்லது எதிர்ப்பையோ எதிர்கொள்ள நேர்கிறது. எதை எதிர்கொண்டாலும் உற்பத்தியும் விளைச்சலும் எல்லா நேரமும் நிலையானதல்ல. இந்த நிலையற்ற தன்மையினால் மனித இனம் புதிய உற்பத்தி முறைகளை, புதிய உற்பத்திக் கருவிகளைக் கண்டுபிடிக்கும் தேவை உருவாகிறது. அது முன்பை விட சாதகமான அனுகூலங்களை ஏற்படுத்தும்பட்சத்தில் அவ்விடத்திலேயே நிரந்தரமாகக் குடியேறிடும் ‘எண்ணம்’ தோன்றும். மேலும், இந்த புதிய உற்பத்தி முறையினால் முன்பைவிட உற்பத்தியும் விளைச்சலும் கூடுதலாக இருக்கும்பட்சத்தில் சேமிப்பு / குவித்தல் போன்ற நடைமுறைகள் தோன்றும். அழியும் பொருளாக இருக்கக்கூடிய ஒன்றை வெகு காலம் சேமித்து வைக்க முடியாது என்பதும் மற்ற நுகர்வுக்கும், மறு உற்பத்திக்கும் மற்ற  ‘பொருள்கள்’  தேவைப்படுவதாலும் கொடுக்கல் வாங்கல்கள் நிகழ்கின்றன. உற்பத்தி முறையின் வளர்ச்சிக்கேற்ப முரண்பாடுகள் தோன்றுகின்றன. அதன் விளைவாக பரிவர்த்தனை முறையில் மாற்றங்களும், பல புதிய ஒழுங்கமைவுகளும் ஏற்படுத்தப்படுகின்றன.  மதிப்பென்னும் கருத்தாக்கம் அதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது.  ஆனால் எப்படிப்பட்ட மதிப்பிற்குறிய பொருளாயினும் ‘தேவை’ இருந்தால் மட்டுமே நுகரப்படும்.  தேவையை முதலில் பூர்த்தி செய்பவர் பொருள் பெரும் நிலை உருவாகிறது.  இதன் விளைவாக உற்பத்திக் கருவிகளை (நிலம், வளம் உட்பட) தனியுடமையாக்கிக் கொள்ளுதல், அபகரித்தல் போன்ற செயல்கள் தோன்றியிருக்கும். தேவைக்கு முந்தி அளித்தல் எனும் இந்தப் போட்டிதான்  குவித்தல் , ஆதிக்கம், சுரண்டல், உற்பத்தி முறையை (தொழிலை) கைப்பற்றுதல்  ஆகிய தீமைகளின் தோற்றுவாயாக இருந்திருக்க முடியும். இந்த முரண்பாடுகளை சரிசெய்ய ஒரு சமூக அமைப்பு, குறிப்பாக வாழவாதாரமான உற்பத்தி முறையை (தொழிலை)  அடிப்படையாகக் கொண்ட சில ஒழுங்கமைவுகள், விதிகள் தோன்றுவதற்கு காரணமாக இருந்திருக்கிறது.  இந்தியாவில் முதன்மையானது என்று அறியப்படும் ஏற்பாடு வருணங்கள். செய்தொழிலை அடிப்படையாகக் கொண்ட ஒரு வகைப்படுத்தல் முறையாக சில சட்டதிட்டங்கள் கொண்டதாக அது இருக்கிறது.  

வரலாற்று வளர்ச்சியில் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட முரண்களின் விளைவாக உற்பத்தியாளர், நுகர்வாளர் மட்டுமின்றி மூன்றாவதாக ஒரு புதிய சமூக உறவும்  தோன்றுகிறது – அதுதான் இடைத்தரகர் எனும் உறவு. இந்த இடைத்தரகர்களின் தோற்றமானது (அல்லது வரவானது) சமூகத்தில் மாபெரும் மாற்றங்களுக்கு காரணமாகியுள்ளது.  உற்பத்தி முறையிலும், பரிவர்த்தனை முறையிலும் மாற்றங்களைப் புகுத்தி மேலும் மேலும் பொருளீட்டிட, செல்வம் குவித்திட அடிமை முறையையும் உட்புகுத்தியது. இப்போது உழைப்பதற்கென்றே ஒரு வர்க்கம் உருவாக்கப்படுகிறது. உழைத்து வாழும் சமூகங்களுக்கிடையில் உழைக்காமல் வாழும் பிரிவினரின் உதயம்தான் சமூகத்தின் அனைத்து ஏற்றத்தாழ்வுகளுக்கும் காரணமாக இருக்கிறது. இம்முரண்பாடானது உற்பத்தியிலும், இடைத்தரகிலும் நேரடியாக ஈடுபடாத ஒரு நிர்வாக அமைப்பின் தோற்றத்திற்கு வித்திட்டது. அதுதான் அரசு.  காத்தல், நிர்வாகம், நீதி ஆகியவை அதன் உறுப்புகளாயின.  ஆனால் இம்மூன்றுக்கும் எதிராக செயல்படுவதுதான் அதன் உள்ளார்ந்த தன்மை ஏனென்றால் சுரண்டல் நிலவும் வரைதான் இங்கு அரசுக்கு வேலை இருக்கிறது. ஆகவே அரசு எனும் இயந்திரம் எப்போதும் சுரண்டும் வர்க்கமான ஆளும் வர்க்கத்திற்குத்தான் ஆதரவாக செயல்படும்.

போட்டியினாலும், பேராசையினாலும் முரண்கள் நிறைந்த ஒரு சமூக அமைப்பில் குடிமக்களுக்கும் தம் வாழ்வாதாரத்திற்காக இடப்பெயரும் குழுவிற்கும் இடையே  எப்போதும் கடும் மோதல்கள் இருக்கத்தான் செய்யும். ஒன்று - குடிபெயர்பவர் உழைக்கும் அடிமையாக வேண்டும் அல்லது போரிட்டு மடிய வேண்டும். இந்த இரண்டிற்கும் தயாராக இல்லாத இனக்குழுக்கள் ஒரு புதிய ஆயுதத்தைக் கையிலெடுக்கின்றன. அதுதான்  ‘கருத்தாயுதம்’ .

அப்படி குடிபெயர்ந்த ஓர் இனக்குழுவானது உட்புகுத்திய கருத்தியல்தான் இன்று சாதியெனும் தீமையாக வளர்ந்து நிற்கிறது.  3500 வருட காலமாக இந்தியாவில் சாதிய பாகுபாடு நிலவி வருவதாகச் சொல்லப்படுகிறது. ஆரியர் படையெடுப்பு எனும் பின்னணியில்  ஒரு வரலாறு அமைந்துள்ளது. அதற்கு மாறாக ஆரியர்கள் என எவரும் படையெடுக்கவில்லை ஆனால் இங்கிருந்த இனக்குழுக்களில் ஒரு குழுவினர் தம்மை மேன்மையானவர் என்று அறிவித்துக்கொண்டு  சாதிய சட்டங்களை உருவாக்கினர் எனும் ஆய்வும் நிலவுகிறது.  

மூன்றாவதாக, வருணங்கள் – அதாவது வேதகாலத்தில் தொழில்ரீதியான பாகுபாடுகள் இருந்தன, ஆனால் இன்றைக்குப் போல் அது இவ்வளவு இறுக்கமானதாக இருக்கவில்லை, தீண்டாமை இருக்கவில்லை வருணம் என்பது தகுதியின் அடிப்படையில் மாற்றிக்கொள்ளக் கூடியது  என்றும் முன்வைக்கின்றன.  அதன்படி விவசாயத்தின் தோற்றம் சாதிய சமூகத்தின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்திருப்பதைக் காண முடிகிறது. சிற்றரசுகளின் தோற்றம், நிலப்பிரபுத்துவத்தின் வளர்ச்சி , பிராமணிய இந்துமதத் தோற்றம்  ஆகியவை ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருக்கிறது.  நான்காம் நூற்றாண்டு வாக்கில் நிலப்பிரபுத்துவமும், சாதியமும் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்வு தொடங்கி 10ஆம் நூற்றாண்டு வாக்கில் அது ஓர் உச்ச நிலையை அடைந்ததாக வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர். 
இதனை ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளும் மற்றொரு பிரிவினர் கூறுவது என்னவெனில் வருணங்கள் எனும் பாகுபாடு நிலவியது.  வரலாற்று வளர்ச்சியில் தொழில்மட்டுமின்றி ப்ராமணியமானது சில பண்பாட்டு விதிகளையும் உட்புகுத்தியது. அரசுகளின் ஆதரவோடு இச்சட்டங்கள் பரவலாக்கம் செய்யப்பட்டன. ஆனால் அந்த ப்ராமணிய பண்பாட்டு முறை பல்வேறு காலகட்டங்களில் எதிர்ப்பையும் வீழ்ச்சியையும் எதிர்கொண்டுள்ளது.  புத்த மத எழுச்சி, ஜைன மத எழுச்சி ஆகியவை அதற்கு உதாரணங்கள்.  புத்தமதத்தின் செல்வாக்கு காரணமாக புதிய விதிகளோடும் தத்துவங்களோடும் ப்ராமணிய இந்துமதம் புதுப்பிக்கப்படுகிறது. மேலும் மேலும் தூய்மைவாதமும், விலக்குகளும் புகுத்தப்படுகின்றன. குறிப்பாக பெண்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். விதவைத் திருமணம் மறுக்கப்படுகிறது. குழந்தைத் திருமணம் கட்டுப்படுத்தப்படுகிறது. பிறப்பை, உடலை அடிப்படையாகக் கொண்ட பாகுபாடுகள் உச்சத்தை அடைகின்றன. இதற்கிடையே பார்ப்பனிய சத்ரிய வைசியக் கூட்டுகளுக்குள்ளாகவே தம்முள் யார் சக்தி வாய்ந்தவர் எனும் மோதல்களும் (ரிஷி, குரு, அரசு)நிகழ்ந்துள்ளன. சந்தர்ப்பத்திற்குத் தகுந்தார்போல் ப்ராமணியமானது தன்னை தகவமைத்துக் கொண்டும், சமரசம் செய்துகொண்டும் இருந்து வந்துள்ளது.  

9ஆம் நூற்றாண்டில் சங்கராச்சாரியாரின் காலத்தில் மறுபடியும் ப்ராமணியம் தலையெடுத்தது. 1206 –இல் டில்லி சுல்தான் குத்புதீன் என்ற இஸ்லாமிய மன்னனின் ஆட்சிகாலத்தில் ப்ராமணியம் மறைந்துபோனதாக முனைவர் வெ. கன்னுப்பிள்ளை குறிப்பிடுகிறார்.  அதன் பிறகு 18ஆம் நூற்றாண்டுவரை காணாமல் போயிருந்த வருண அமைப்பு முறை திரும்பவும் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங் காலத்தில் (1774-1785) அவரது ஆதரவோடு, வேத கால பிராமண இந்து மதம் புதுப்பிக்கப்பெற்றது என்கிறார். அதுமட்டுமின்றி சாதி என்ற சொல் பதினாராம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது, முதன் முதலில் கோவாவிற்குள் அவர்கள் நுழைந்துபோதுதான் அச்சொல் இந்தியாவிற்குள் நுழைந்தது என்றும் சொல்கிறார்.

பிரிட்டிஷாரின் வருகைக்கு முன்பு வரை இந்தியாவில் வணிகத்திற்காக குடிபெயர்ந்த பல அயல்நாட்டு ஆட்சியாளர்கள், அயல்நாட்டு மரபுக்குழுக்கள் வேதத்தில் குறிக்கப்பட்ட ஆசார முறையைப் பின்பற்றி இந்தியர்களாக  உள்வாங்கப்பட்டு சங்கமமாக்கப்பட்டனர். அவர்கள் சத்ரியர்களுக்கு சமமாகவோ அல்லது பிராமணருக்குச் சமமாகவோ ஆக்கப்பட்டனர். இராஜபுத்திரர்கள், குஜார்கள், அபிராஸ் என்று இன்றைக்கு இந்தியாவின் ஆதிக்க சாதியினராய், சாதியத்தை மூர்க்கமாக பற்றிக்கொண்டு கொடுமைகள் செய்யும் பல ஆதிக்க சாதியினர் அனைவரும் அப்படி குடிபெயர்ந்தவர்கள், உள்வாங்கப்பட்டவர்கள் என்பதை அவரது ஆய்வுகளில் குறிப்பிட்டுள்ளார்.

வருண முறை நிலவிய காலகட்டத்தில் கலப்பு வருண திருமணங்களால் அதிக எண்ணிக்கையில் புதிய பிரிவுகள் (சாதிகள்) உருவாகின. அப்படி உருவாகும் சாதிகள் வெளியேற்றப்பட்டன, விலக்கி வைக்கப்பட்டன. இதன் விளைவாக சாதி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தீர்த்து வைக்க ஆட்சி செய்யும் அரசரால் பணி அமர்த்தப்பட்ட மன்றங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் சத்ரிய கூட்டோடு  ப்ராமணர்களின் அதிகாரம் மீண்டும் கூடுகிறது. ஆனால் வருண அமைப்பு தளர்வாக இருந்ததால் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஒரு சாதி மேல்நிலையில் உள்ள மற்றொரு சாதியாக தன்னை மாற்றிக்கொள்வதும் நடந்திருக்கிறது. ரோமிலா தாப்பரும் இத்தகவல்களைத் தெரிவித்துள்ளார். ஏழைகள் (கடைநிலைத் தொழில் புரிவோர்) பணம் கொடுத்து உயர்சாதியினராக மாற இயலாத காரணத்தால் அவர்கள் கீழ் சாதியிலேயே இருக்கும் நிலை தொடர்ந்திருக்கிறது.

பல்வேறு காரணங்களால் சாதிக் கலப்புகளும், மதக்கலப்புகளும், இனக்கலப்புகளும் இந்தியாவில் நிகழ்ந்துள்ளன. ப்ராமணர் உட்பட எந்த ஆதிக்க சாதியினரும், எம்மொழ்யினரும் தம்மை தூய இனத்தவர் என்று உரிமை கோர முடியுமா என்பது தெரியவில்லை.   அதனால் பாரம்பரியத் தொழில்  புரிந்தோர் எனும் வரயரையும் பொய்த்துப் போகிறது. ஒரு குறிப்பிட்ட காலம் வரை நிலவியல் அமைப்பின் காரணமாக வட இந்தியாவுக்கும் தென் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்பு அதிக அளவிலாக இல்லாத காரணத்தால் வட இந்தியாவுக்கும், தென் இந்தியாவுக்கும் இடையில் வேறுபாடுகள் இருந்துள்ளன. சமஸ்கிருத மொழி உட்பட மனு ஆராய்ந்து விளக்கிய சாதி மற்றும் ப்ராமணியப் பண்பாடு ஆகியவை திராவிட நாட்டிற்கு அந்நியமானதாகவே இருந்திருக்கிறது. இன்றைக்கும் அதன் தாக்கத்தை நாம் காண முடிகிறது.

ப்ரிட்டிஷாரின் வருகைக்குப் பின்னர் சாதியமைப்பு பல்வேறு மாற்றங்களை எதிர்கொண்டது. ப்ரிட்டிஷாரின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு தான் (1871-72 – 1931) சாதியமைப்பின் மீளுருவாக்கத்திற்கு முக்கிய காரனம் என்று க்ரிஸ்டஃப் ஜாஃப்ரெலோ (Chirstophe Jaffrelot) எனும் ஃப்ரென்ச்சு நாட்டு அரசியல் அறிவியலாளரும்  குறிப்பிடுகிறார்.

    ஆங்கில அரசாட்சியின் 1871ஆம் ஆண்டு முதல் மக்கட்தொகை கணக்கெடுப்பு துவக்கப்பட்டது.  அப்பொழுது W.R. கார்னிஷ் என்பவர் சென்னை மாகாண ஆணையராக பணி புரிந்தார். அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

“மனு தர்மம்” என்கிற இந்து மதச்சட்ட கோட்பாட்டின்படி இந்துக்கள் வர்ணத்தின் அடிப்படையில் பார்ப்பனர்கள், சத்திரியர்கள் வைசியர்கள், சூத்திரர்கள் மற்றும் தீண்டத்தகாத தலித்மக்கள் என பிரிக்கப் பெற்றனர்.  மக்கட்தொகை கணக்கெடுப்பு அறிக்கையில் சாதி அமைப்பின் துவக்கம், அடிப்படை ஆதாரம் பற்றிய கருத்துக்கள் ஓர் தனி இணைப்பாக அளிக்கப்பட்டுள்ளது. மனு தர்ம சட்டத்தை வன்மையாக கண்டித்த அவர் பொய்மை நிறைந்த நூலை “புனித” நூல் என போற்றப்படுவதை சாடுகிறார்.  “தம்மைப் பொருத்தவரை சாதியின் ஆணிவேர் பார்ப்பனர்களின் உருவாக்கமே” என நிறுவுகிறார். பார்ப்பனர்கள் ஏதோ வானத்தில் இருந்து வந்த தேவ தூதர்கள் என்கிற கோட்பாட்டின் அடிப்படையில் சாதி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் பிற மக்களிடமிருந்து வேறுபட்ட புனிதர்கள் என்கிற கருத்து திணிக்கப்பட்டுள்ளது.  இந்த அறிக்கை தெளிவாக்குகிற உண்மை என்னவெனில் பார்ப்பணர்கள் அளித்த கட்டுக்கதைகளின் அடிப்படையிலேயே வர்ண அமைப்பும், சாதிப்பிரிவுகள்  உருவாயின என்பதாகும்.  (சாதி ஓர் கண்டுபிடிப்பு வெ. கண்ணுப்பிள்ளை)

காலனியாக்கத்தின்போது பார்ப்பணர்கள் மீண்டும் கோலோச்சுகின்றனர். அதுமட்டுமின்றி வட இந்திய, தெனிந்திய பாகுபாடும் ஒரு நுண்ணிய வடிவைப் பெறுகிறது. ப்ரிட்டிஷ் ஓரியண்டலிசமானது சாதி மற்றும் மொழி அடிப்படையிலான  இனவாத சிதாந்தங்களை உட்புகுத்துகிறது. காலனிய இனவரைவியலானது ஆரியர்களை மேல் சாதியினர் என்றும் திராவிடர்களை கீழ் மக்கள் என்றும் வகை பிரிக்கிறது.


சாதியப் பெரும்பான்மை நிலை அடைவதற்காக உட்சாதிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. அகமண முறையை தளர்த்துகின்றனர். புதிய பண்பாட்டு அடையாளங்கள் உருவாக்கப்படுகின்றன. கூட்டு வரலாற்று உருவாக்கங்கள் நடைபெறுகின்றன.  புதிய இனமயமாக்கல் (ethnicization) நிகழ்கிறது.  இந்த நிகழ்முறையின் அடுத்த கட்டமாக மேல்நிலை வேண்டி காலனிய நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக சாதிய சங்கங்கள் இக்காலகட்டத்தில்தான் உருவாகின்றன.  சாதிய தலைமைகள் உருவாகின்றன. ஆனால், சாதியத்திற்கு எதிராக ஜோதிராவ் புலே (1827-90) , அம்பேத்கர்,பெரியார், ராம் மனோஹர் லோஹியா ஆகியோர் முக்கியத் தலைவர்களாக உருவாகின்றனர்.  வட இந்திய சாதியச் சங்கங்கள் சமஸ்கிருதமயமாக்கலை விட்டு வெளிவராத போது இனமயமாக்கலில் - தென் இந்தியாவின் திராவிட அடையாளமானது அனைவரையும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைப்பதற்கான சித்தாந்தமாக செயல்பட்டது.  அதேவேளை இந்த இனமயமாக்கலும், சாதிய சங்கப் போராட்டங்களும் இடைநிலை சாதி எழுச்சிக்கும், அவரவர்களின் அரசியல் வளர்ச்சிக்கும் வித்திட்டது. இக்காலகட்டத்தில் இடதுசாரிகளின் அரசியல் எழுச்சியும் நடைபெறுகிறது. இந்த எழுச்சிகள் பெரும் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தின.
இப்படி, காலம் காலமாக, குறிப்பிட்ட பிரிவினரின் வளர்ச்சிக்காக இந்திய அரசியலானது சாதிய அரசியலாகவும், சாதியத்திற்கான அரசியலுமாகவே இருந்துவந்திருக்கிறது. செல்வக்குவிப்புக்கான அதிகாரம் வேண்டி உழைப்புப் பிரிவினையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வருணம், சாதி ஆகிய கருத்தியல்கள் பிரித்தாள்வதற்கும், சுரண்டலுக்கும் சாதகமாக இருப்பதால் ஒவ்வொரு காலகட்டத்திலும் அது புத்துயிர்ப்பு பெருகிறது.
நாம் ஏற்கனவே பார்த்தது போல் பணம் கொடுத்து தம் சாதியை மாற்றிக்கொள்ளவோ அல்லது சாதியச் சங்கங்கள் மூலமாக தம் நிலையை மேல்நிலைக்கு உயர்த்திக்கொள்ளவோ முடியாத நிலையில் இருக்கும் ஏழைகள் / தாழ்த்தப்பட்ட சாதியினர் இந்த உழைப்புப் பிரிவினையின் அடிப்படையில் பன்னெடுங்காலமாக கீழ் நிலையில்யே வைக்கப்பட்டதன் விளைவாக மேலெழ முடியாமல் இருக்கின்றனர். தனியுடமை அடிப்படையிலான உற்பத்தி முறைக்கு என்றென்றும் உழைக்கும் அடிமைகள் தேவைப்படுவதால் சாதியமைப்பென்பது அதற்கு சாதமகாக இருக்கிறது. ப்ராமணிய இந்துத்துவமே அதன் மூலாதாரம் என்பதால் ஆளும் / சுரண்டும் வர்க்கமானது அதனை ஆழப் பற்றிக்கொண்டிருக்கிறது. பிறப்பின் அடிப்படையிலான இந்த பாகுபாட்டு முறையானது  தனித்தன்மை, மேன்மை அடையாளம் இவற்றோடு பொருளாதார ஆதாயங்களையும் வழங்குவதால் மக்களும் அதை கைவிடத் தயாராக இல்லை.

இச்சூழ்நிலையில் சாதியை ஒழிப்பது எப்படி? சமத்துவத்தை நிலைநாட்டுவது எப்படி?
சாதிய ஒழிப்பு, சமத்துவம் அடைதல் இரண்டுமே சம வாய்ப்பை உறுதி செய்வது என்பதாகும்.  ஆனால், இந்தியச் சூழலில் வாய்ப்பின்மை  என்று பார்க்கும்பொழுது - ஒன்று விலக்கி வைக்கப்படுவதால்  ஏற்படுவது மற்றொன்று தனியுடமையின் விளைவாக ஏற்படுவது. ஆக, நமது போராட்டங்கள் அனைத்தும் சம வாய்ப்பிற்கான, சமூக நீதிக்கான  போராட்டமே அன்றி பார்ப்பனிய இந்துத்துவமும், முதலாளித்துவமும் கூறுவதுபோல் தேசத் துரோகச் செயல்பாடுகளோ அல்லது வளர்ச்சிக்கெதிரான போராட்டமோ அல்ல என்பதை நான் ஆணித்தரமாக சொல்லிக்கொள்கிறேன்.

இந்த விலக்கி வைத்தல் எனும் ஏற்பாட்டை எடுத்துக்கொள்வோமேயானால் தீண்டத்தகாதவர்கள் என்று பிரிக்கப்பட்டோரின் தொழில்கள் அல்லது உழைப்பானது கடின உடல் உழைப்போடும் (கூலி உழைப்பு), சுத்தம் செய்தல் எனும் தேவையோடும் தொடர்புடையதாக இருக்கிறது. உ.ம் விவசாயக் கூலிகள், தோல் தொழில், கழிவுகளை அகற்றுவது, பிணம் எரிப்பது போன்றவை. பிரதானமாக இவர்களிடம் நிலம் மற்றும் ஏனைய உற்பத்திக் கருவிகள் இருக்காது. இதனால் இவர்கள் தம் வாழ்வாதாரத்திற்காக ‘வழங்குபவரை’ சார்ந்திருக்கும் நிலையில் உள்ளனர். என்றென்றைக்கும் அவர்கள் அப்படியே இருக்க வேண்டும் என்பதே ஆளும் வர்க்கத்தின் எண்ணம்.

ஏனென்றால் இந்நிலையில் எந்த மாற்றம் ஏற்பட்டாலும் தங்களது நிலையில் மாற்றம் ஏற்படும், தாமும் உழைப்பில் ஈடுபட வேண்டியிருக்கும் – தனித்தன்மை போய்விடும், அளவுக்கதிகமாக செல்வம்  சேர்க்க முடியாது, அதிகாரம் கைமாறிவிடும் என்பதே அவ்வர்க்கத்தின் / சாதியினரின் அச்சம். ஆனால் ஒடுக்கப்படும் வர்க்கத்தின் அரசியல் எழுச்சியின் காரணமாக வாய்ப்பை மறுக்கும் அதிகாரம் உடைக்கப்பட்டு வருகிறது.  இடஒதுக்கீடு, தனித்தொகுதி உள்ளிட்ட சட்டபூர்வமான ஏற்பாடுகள், ஒடுக்கப்பட்ட பிரிவினரில் இருந்து உதயமாகி இருக்கும் அரசியல் தலைவர்கள், கட்சிகள், இடதுசாரி  கட்சிகள் மற்றும் அமைப்புகளின் இயக்கச் செயல்பாடுகள் ஆகியவை இம்மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாகும்.

இதில், ஆதிக்க சாதியினரால் எப்போதும் தவறாகப் பேசப்படுவது இடஒதுக்கீடு பற்றியதாகும். விலக்கப்பட்டதால் ஏற்பட்ட இழப்பிற்கு ஈடும் செய்யும் ஏற்பாடுதான் இடஒதுக்கீடு, ஆனால் அதை ஏதோ தனிச்சலுகை, அநியாயமானது என்று சொல்லும் இவர்கள் தகுதியுடன் இருக்கும் தங்களது வாய்ப்பு பரிக்கப்படுவதுபோல் கூப்பாடு போடுகின்றனர். இது வாய்ப்பு பற்றிய அச்சம். எதற்கான வாய்ப்பு – அதிகாரம், செல்வக்குவிப்பிற்கு  சாதகானச் சூழல் பரிபோவது பற்றிய அச்சம். இது எல்லாவற்றுக்கும் ‘போட்டி’ நிறைந்த இந்த அரசியல்-பொருளாதார நிலையே காரணமாக இருக்கிறது.  குறிப்பிட்ட அடையாளத்தின் கீழ் பெரும்பான்மையாக இருப்பதன் மூலம் அதிகாரத்தையும் வாய்ப்பையும் தக்கவைத்துக்கொள்வதற்கான அனுகூலங்கள் அதிகம். அதேபோல் எதிர் பிரிவினரும் பெரும்பான்மை ஆகிவிட்டால் நம் நிலை என்னாகும் என்பதே இவர்களின் அச்சத்திற்குக் காரணம்.  

அதனால்தான் இவர்கள் இடஒதுக்கீட்டை அச்சுறுத்தலாகப் பார்க்கிறார்கள். ரோஹித் வெமுலா உள்ளிட்ட பல மாணவர்கள் மீதும், தலித் மக்கள் மீது ஏவப்படும் சாதிய வன்முறைக்கும் இதுதான் காரணம். ஆனால் இந்த ஆதிக்க சாதிகளும் ஆளும் வர்க்கமும் என்ன மறந்துவிடுகிறதென்றால் - அவர்கள் அல்லதுஅவர்களது மூதாதையர்கள் அடித்துப் பிடுங்கியதைத்தான் நாம் இப்போது நமது என்கிறோம் என்பதை மறந்துவிடுகின்றன.  அதனால்தான் ஒடுக்கப்பட்டவர்களுக்கு என்று நியாயமான பங்கை ஒதுக்கிவிட்டு மற்றவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. உண்மையில் ஒடுக்கப்பட்டவர்கள் பரந்த மனப்பான்மையுடன் இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் சட்டத்தை மதித்து ஆதிக்க சாதியினருக்கென்று ஒதுக்கப்பட்டப் பங்கை ஒப்புக்கொள்கிறார்களே, ஆனால் ஆதிக்க சாதியினர் எல்லாவற்றையும் அல்லவா பிடுங்கிக்கொண்டார்கள் . உயிர் உட்பட.

அதனால் இடஒதுக்கீடு, அரசியல் அதிகாரத்தில் பங்கு போன்றவையெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களின் அரசியல் உரிமை. இது ஏதோ சலுகையோ அல்லது விட்டுக்கொடுப்போ அல்ல.  ஒரு சமூகத்தில் வாய்ப்பு என்பது எல்லாருக்கும் சமமாக இருக்க வேண்டிய ஒன்று ஆனால் ஆதிக்க சாதியில் பிறந்துவிட்டதாலேயே தமக்கு மட்டுமே சிறப்புரிமை என்று எண்ணுவது அறிவின்மை உண்மையில் பேராசை. இந்துத்துவமும், முதலாளித்துவமும் இந்த அறிவின்மையையும், பேராசையையும்தான் கட்டிக்காக்க நினைக்கின்றது. இந்து மதத் தீவிரவாதம் பேசும் RSS ஆதரவு கட்சியான பா.ஜ.க மத்தியில் ஆட்சி பிடித்த பின்னர் எங்கு பார்த்தாலும் பார்ப்பனியவாதமும், அடக்குமுறையும், வன்கொடுமைகளும் பெருகிவருகின்றன. இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. இந்தியா என்பது பன்முகத்தன்மை கொண்ட நாடு. இது இந்துக்களின் நாடு, இந்து மதமே இந்தியாவின் மதம் என்று எவரும் உரிமை கோர முடியாது. இந்தியா மட்டுமின்றி எந்த நாடும் ஒரு குறிப்பிட்டவருக்கே சொந்தம் என்று சொல்லவும் முடியாது. நாடு, எல்லை இவையெல்லாம் ஒரு நிர்வாக ஏற்பாடுதான். மனிதனாக தோற்றுவித்தவை.  தவறான ஒரு சமூக அமைப்பின் விளைவால் உதித்துவிட்ட இந்த சட்டதிட்டங்களை நாம் வேறு வழியின்று ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. மதிக்க வேண்டியுள்ளது. இயற்கைக்கு எல்லையும் கிடையாது, அடையாளமும் கிடையாது.

இதுபோன்ற அறிவார்ந்த தருக்க ரீத்தியான உண்மைகளைத்தான் முற்போக்கு சக்திகள் எடுத்துரைக்கின்றன.  அறிவூட்டுவதால்தான் நாம் தேச துரோகிகள் எனப்படுகிறோம். அவர்கள் என்ன வேண்டுமென்றாலும் நம்மீது முத்திரை குத்தட்டும், அவமானப்படுத்தட்டும் நாம் அவற்றை துணிவோடு எதிர்கொள்ள வேண்டும். பொய்யர்களே மனம் தளராதபோது நாம் ஏன் மனம் தளர வேண்டும். நம் பக்கம் உண்மை இருக்கிறது, நியாயம் இருக்கிறது அதைத் துணிவோடு எடுத்துரைப்போம். தலித்துகள் என்று மட்டுமில்லை ஒடுக்கப்படுபவர் யாராக இருந்தாலும் நாம் நம் உரிமையைத்தான் கேட்கிறோம், கேட்டுப்பெற்றுள்ளோம் எனும் பதிலடியைக் கொடுப்பதுதான் சரி. நம் தளர்வு அவர்களின் வெற்றி.
சாதிய ரீதியாக ஒடுக்கப்படுவதென்பது கொடுமையானதுதான். அதேபோல் பிறப்பின் அடிப்படையில்.. இன்னும் பல்வேறு காரணங்களால் நிலவும் ஒவ்வொரு பாகுபாடும் கொடுமையானதுதான். அதை எதிர்க்கத்தான் நாம் பிறந்துள்ளோம் என்பதை ஒவ்வொரு போராளியும் மனதில் இருத்திக்கொள்ள வேண்டும். நம் வழிகாட்டிகளும் தலைவர்களும் குறைந்தபட்சம் நமக்கு சில வழிகாட்டுதல்களையும், உரிமை மீட்பிற்கான ஏற்பாடுகளையும் செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அதை சரியாகப் பயன்படுத்திக்கொள்வோம், மக்களிடம் எடுத்துச் செல்வோம்.  சாதிய ரீதியாக ஒரு பிரிவினரை ஒடுக்கும் இந்த சமூக அமைப்பு அவர்களை வேறொரு வடிவத்தில் ஒடுக்குகிறது, சுரண்டுகிறது, அநீதி இழைக்கிறது என்பதை உரக்கச் சொல்வோம்.  இணைந்து போராடுவோம்.

ரோஹித்தின் கடிதங்களில் அவர் - தனது கனவோடு - இந்த சமூகத்திற்கான தனது கனவையும் சுட்டிக்காட்டியுள்ளார். அனைத்து தளங்களிலும் நாம் சமத்துவம் எய்த வேண்டும் என்பதும் ரோஹித்தின் கனவு. ஆனால் எந்தப் பாதையில் பயணிப்பது என்பதில் அவருக்கு குழப்பங்கள் இருந்திருக்கிறது என்பதாக அவரது கடிதத்திலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. இருவேறு அமைப்புகளின் மீதும் அவருக்கு சில விமர்சனங்கள் இருந்திருக்கிறது. ரோஹித் மட்டுமில்லை நம்மில் பெரும்பாலருக்கும் எது சரியான பாதை எனும் கேள்வி இருக்கிறது. ஆனால் அதற்கு ஒற்றைப் பதிலைப் பெற முனைவதுதான் நம் பின்னடைவுகளுக்குக் காரணம் என நான் கருதுகிறேன். பிரச்சினைகளை வரிசைப்படித்தி ஒரு கூம்பு வடிவில் அடுக்குவோம் என்றால் அடித்தளம் பொருளாதார அடிமை நிலையாகவும் அதை அடிப்படையாகக் கொண்ட அடிமைத்தனங்கள் மேலே இருப்பதை நாம் உணர்ந்துகொண்டால் போதுமானது.  இதைத்தான் கார்ல் மார்க்ஸ் Base and Super Structure என்று விளக்குகிறார். அதாவது எல்லாவிதமான ஏற்றத்தாழ்வுகளுக்கும் பொருளாதார காரணங்கள்தான் அடிப்படை என்பதே அது. மற்றவையெல்லாம் அதன் manifestations.  உழைப்புப் பிரிவினையின் விளைவாக தோன்றிய பாகுபாடுகள்.

அப்படியென்றால் இந்த பாகுபாடு ஏன் தலித் மக்களுக்கு எதிராக மட்டும் செயல்படுகிறது? இந்த உழைப்புப் பிரிவினை என்பது எல்லா நாடுகளிலும்தானே இருக்கிறது ஆனால் சாதி என்பது இந்தியாவில் மட்டும்தான் இருக்கிறது. என்று கேட்கப்படுகிறது.  உண்மைதான் இந்தியாவில் மட்டும்தான் சாதிகள் இருக்கிறது ஏனென்றால் இந்தியாவில்தான் பார்ப்பனிய கருத்தியல் உருப்பெற்றது. அது உருப்பெருவதற்கான ஒரு சமூகச் சூழல், பொருளாயத சூழல் இந்தியாவில் மட்டும் தனித்தன்மையோடு இருந்திருக்கிறது. உழைப்புப் பிரிவினையினை நிலைபெறச் செய்வதற்கான ஒரு கோட்பாட்டு வடிவமாய பார்ப்பனிய இந்துத்துவ சாதிய பகுப்புமுறை தோன்றியது.  ஆனால் சாதி என்பது மற்ற நாடுகளிலும் இருந்திருக்கிறது, இந்தியாவில் உள்ளது போன்ற வடிவத்தில் அது இருக்கவில்லை என்பதுதான் வேறுபாடு. கார்ல் மார்க்சின் சொற்களிலேயே அதனைப் பார்ப்போம்:

இந்தியர்கள் மத்தியில் நிலவும் பக்குவமற்ற (crude) உழைப்புப் பிரிவினையைக் காணும்போதும், எகிப்தியர்கள் தங்களது ஆட்சியிலும்மதத்திலும் சாதிய-அமைப்பை நிறுவியதைக் காணும்போதும்வரலாற்றியலாளர்கள் சாதிய அமைப்பு எனும் அதிகாரமே அந்த பக்குவமற்ற சமூக வடிவத்தை உருவாக்கிய சக்தி என்று கருதுகிறார்கள். (மாஸ்கோ பதிப்பு 176, பக். 63).

மற்றொரு எழுத்தாளரின் அடிக்குறிப்பை மேற்கோள் காட்டி எழுதுகிறார் மார்க்ஸ்:
எகிப்தில் கலைகளும் தேவையான பூரணத்துவத்தின் உச்சத்தை அடைந்துவிட்டதுமற்றொரு வர்க்கக் குடிகளின் விவகாரங்களில் தலையிடாத கைவினைஞர்கள் வாழும் ஒரே நாடு அதுவாகத்தான் இருக்கும்ஆனால்  வாழ்வாதாரத் தொழில் (life calling) மட்டும் இனங்களுக்குள்ளான பாரம்பரியத்திற்குட்பட்டது... மற்ற நாடுகளில் வணிகர்கள் தங்களது கவனத்தை பல தொழில்களுக்கிடையில் பகிர்ந்தளித்தனர்ஒரு சமயத்தில் அவர்கள் வேளான்மையை முயல்கின்றனர்மற்றொரு சமயத்தில் வாணிபம்வேறொரு சமயத்தில் இரண்டு அல்லது மூன்று தொழில்களை கவனிப்பதில் ஒருங்கே ஈடுபட்டிருந்தனர்சுதந்திரமான நாடுகளில்அவர்கள் மக்கள் மன்றங்களை அடிக்கடி கூட்டுபவர்களாக இருந்தார்கள்..... அதற்கு நேர்மாறாக எகிப்தில் அரசு விவகாரங்களில் தலையிட்டால்அல்லது ஒரே நேரத்தில் பல தொழில்களில் ஈடுபட்டாலோ கைவினைஞர்கள் கூட கடுமையாக தண்டிக்கப்பட்டனர்இவ்வாறாக அவர்ள் தங்களது வாழ்க்கைத் தொழிலை மேற்கொள்ள இடையூறு எதுவும் இருக்கவில்லை..... மேலும்தங்களது மூதாதையர்களிடமிருந்து எண்ணற்ற விதிமுறைகளை உள்வாங்குவதால்அதிலிருந்து புதிய அனுகூலங்களைக் கண்டுபிடிக்க எப்போதும் ஆர்வமாய் இருப்பர். (பக். 461).

குறிப்பிட்ட தொழிலைச் செய்வோர், அவர்கள் மட்டுமே அந்தத் தொழிலில் நீடித்திருக்க வேண்டும் என்பதற்காக எகிப்தில் கைவினை தொழில் அத்தகையதொரு நிலையை எட்டியதுஅவர்கள் வேறு தொழிலை மேற்கொள்ள அனுமதிக்கப்படவில்லைஅப்படிச் செய்தால்அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்அதனால் ஒவ்வொரு தொழிலும் சிறப்புத் தொழிலாக உருவெடுக்கும் நிலைக்குச் சென்றது. இப்படித்தான் சாதிகள் உருவாகின்றன.  (சாதி குறித்து மார்க்ஸ், ரங்கநாயகம்மா)
அதேபோல் ரோசா லுக்சம்பர்க்கின் வாழ்க்கை வரலாற்று நூலில் இருந்து ஒரு சம்பவத்தைப் பார்ப்போம்:
 ஜனவரி 1907, 10ம் தேதியன்று லியோ ஜொகிச்செஸ் இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.  விசாரனையின் தொடக்கத்தில் ஒரு நிகழ்வு நடந்தது. விசாரனையின் போது நடந்த அச்சம்பவம் ஜொகிச்செஸின் ஆளுமையை வெளிப்படுத்தக் கூடியது. ஜாரிச ரஷ்யாவில் பண்டைய சாதிய அமைப்பில் நடைமுறையில் இருந்த வழக்கப்படி, குற்றப்பத்திரிகையில் அவர் கீழ்-மத்தியத்தர வர்க்கம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் நீதிமன்ற தலைவர் யொகிசெஸ்ஸை ‘தௌ’ 1 எனும் பட்டப்பெயர் கொண்டு விளித்தார்ர். இந்த இழிவுபடுத்தலை யொகிச்செஸ்ஸும், அவரது வழக்குரைஞரும் எதிர்த்தனர், அவர் ஒரு ரஷ்யப் பிரஜை என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் நீதிமன்றம் அப்பட்டப்பெயரை உறுதிசெய்தது.  இதைத் தொடர்ந்து மேற்கொண்டு நடந்த நீதிமன்ற விசாரணைகளில் பங்குபெற மறுத்தார் ஜொகிச்செஸ், மூன்று நாள் விசாரணை முழுமையிலும் மௌனம் காத்தார்.  இராணுவப் பணியை கைவிட்டதால் கடமை தவறுதல் (1891ல் நடந்தது) மற்றும் இராஜ துரோகம் எனும் குற்றங்களுக்காக எட்டு வருட கடுங்காவல் தண்டனைக்குள்ளானார்.
போலந்தில் யூதர்கள் மத்தியில் நிலவிய சாதியமைப்பு குறித்து The Jews in polish culture – Alexander Hertz, Northwestern University Press- எனும் நூல் விளக்குகிறது. அதன் தன்மைகள் இந்தியா சாதியமைப்பிலிருந்து சற்று மாறுபட்டதாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு இனக்குழுக்களுக்கு மத்தியிலும் இப்படிப்பட்ட அதிகாரப் படிநிலை அமைப்புகள் நிலவியுள்ளது. 

பாகுபாடுகளை ஒழிக்க சீர்திருத்தங்கள், அரசியல் நடவடிக்கைகள், அதிகாரத்தைக் கைப்பற்றுதல் போன்ற  நடவடிக்கைகள் அவசியம் ஆனால் ஏற்பட்ட மாற்றங்கள் என்றென்றைக்கும் நிலைத்து நிற்க வேண்டுமெனில் தனியுடமை அடிப்படையிலான உற்பத்தி முறைகள் ஒழிக்கப்பட்ட  பொதுவுடமை சமூதாயமாக அது உதயமாக வேண்டும் இல்லையெனில் மீண்டும் மீண்டும் அடையாளம் சார்ந்த அதிகாரத்தின் கீழ் உழைப்பாளிகளை குறைந்த கூலிக்கு அமர்த்தி சுரண்டிப் பிழைக்கவே அது உதவும், ஏனென்றால் உழைப்புப் பிரிவினையினால் உருவானதுதான் சாதி.
இதை அம்பேத்கரும் ஏற்றுக்கொள்கிறார்.

“இந்து சமூக அமைப்பு உழைப்புப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்டது. இதன்படி, இந்த அமைப்பு இந்துக்களுக்கு அழுக்குப்படியாத, சுத்தமான சமுதாய மதிப்புடைய பணிகளை வழங்குகிறது; அதே சமயம் தீண்டப்படாதவர்களுக்கோ அது அருவருப்பான, இழிவான வேலைகளை ஒதுக்குகிறது; இதன் மூலம் இந்துக்களின் மீது கண்ணியத்தைப் பொழிந்து அவர்களைக் கௌரவிக்கிறது; அதேபோழ்து தீண்டப்படாதவர்களின் மீது இழிவைச் சுமத்தி அவர்களை அவமதிக்கிறது” (தொகுதி 10, பக்.204)

உழைப்புப் பிரிவினையை அங்கீகரிக்கும் அதேவேளை, ‘உழைப்பாளர் பிரிவினை’ என்று ஒன்று இருப்பதாக அவதானிக்கிறார். உழைப்புப் பிரிவினைக்கும் சாதி அமைப்பிற்கும் தொடர்பில்லை’ என்று அவர் சொல்லவில்லை. மேலும், இரண்டுக்கும் உள்ள தொடர்பை அங்கீகரிக்கிறார். அம்பேத்கரைப் பொறுத்தவரையும் கூட உழைப்புப் பிரிவினையே சாதியமைப்பிற்கு அடிப்படை என்று இதற்குப் பொருள். (ரங்கநாயகம்மா)

மூளை உழைப்பு செய்வோர் மேலானவர் உடல் உழைப்பு செய்வோர் கீழானவர் எனும் கருத்து உலகளாவிய அளவில் நிலவுகிறது. எல்லா நாடுகளிலும் ஏழைகளாக இருப்போர் உடல் உழைப்பில் மட்டுமே ஈடுபட முடிகிறது. அங்கும் இனம், மதம், மொழி போன்ற பிறப்பின் அடிப்படையான பேதங்கள் நிலவத்தான் செய்கிறது. இந்தியாவில் அது சாதி எனும் ஒரு unique வடிவத்தை எடுத்துள்ளது. 

இன்னாருக்கு இந்தப் பணி என்று நிலவும் உழைப்புப் பிரிவினையை மாற்றி அனைவரும் மூளை உழைப்பு, உடல் உழைப்பு என்று இரண்டு விதமான உழைப்பையும் செய்ய வேண்டும் எனும் நிலை உருவாக வேண்டும். அதுமட்டுமின்றி ஒரு சிலர் மட்டும் உழைத்து மற்றவர் அந்த உழைப்பைச் சுரண்டி வாழும் நிலையையும் மாற்ற வேண்டும். அனைவரும் உழைத்துத்தான் சாப்பிட வேண்டும் எனும் நிலை உருவாக வேண்டும். இது ஒரு தலைகீழ் மாற்றமாகும்.
சாதி வர்க்கம் எனும் இரண்டையும் ஒழித்தல் வேண்டும்.  ஆகவே சாதிய எதிர்ப்பு, தனியுடமை எதிர்ப்பு எனும் இரண்டின் இணைப்பும் தேவைப்படுகிறது. இதற்கு EBC economically backward class எனும் அடையாளத்தின் கீழும் நாம் அனைவரும் ஒருங்கிணைவது அவசியமாகிறது.  ஏனென்றால் பொருளாதார மேல்நிலை என்பது அனைத்து பாகுபாடுகளையும் நீர்த்துப் போகச் செய்கிறது.*  

உ.ம். கலப்புத் திருமணத்தை எடுத்துக்கொள்வோம் – ஆதிக்க சாதிப் பெண் ஒருவர்  தலித் இளைஞரை திருமணம் செய்துகொள்ள தடையாய் இருப்பது சாதி – இதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் அதே தலித் இளைஞர் ஒரு பணக்காரராக, தொழில் அதிபராக, மில்லினியராக இருந்தால் மறுப்பை விட ஏற்ப்புக்கே அதிக வாய்ப்புள்ளது, இல்லையா?
அதேபோல் ஆதிக்க சாதியினர் மத்தியில்கூட – ஏழையாக இருந்தால் அந்த ஆண்மகனை எவர் ஏற்றுக்கொள்கின்றனர்?  

அதேபோல் சாதிய கொடுமைகள் மட்டுமின்றி பொருளாதார நிலையில் பின்னடைவு காரணமாக இன்னும் சொல்லப்போனால் வறுமையின் காரணமாக நிகழும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எந்த ஒரு இடமாக இருந்தாலும் அங்கு ஏழைகளாக இருப்போர் கொடுமைப்படுத்தப்படுவதும், அவமதிப்பிற்கு உள்ளாவதும் நடக்கத்தான் செய்கிறது. குறிப்பாக கல்வி நிறுவனங்கள், கூலி உழைப்புக்குறிய தொழில் புரியும் இடங்களில் சாதிக்கு அப்பார்பட்டு கொலைகளும் தற்கொலைகளும் நிகழ்கின்றன. SVS மருத்துவக் கல்லூரியில் மூன்று மாணவிகளின் மர்மமான மரணமானது பொருளாதாரம் சம்பந்தப்பட்டது. இதுபோல் பல சம்பவங்கள் உள்ளன.


அதேபோல் சமூக நீதிக்கான போராட்டத்தில் நாம் ஆணாதிக்க ஒழிப்பையும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது.  ஆணாதிக்கம் என்பதும் தனியுடைமை உற்பத்தி முறையின் விளைவே.  உடலின் அடிப்படையிலான பாகுபாட்டில் பெண் உடலும் கடுமையான ஒடுக்குமுறைக்கும், பாகுபாட்டிற்கும் உள்ளாகிறது.  சாதியை கட்டிக்காக்கும் கருவிகளாக பெண் உடல் பார்க்கப்படும் அதேவேளை, சாதி / மத அடையாளத்திற்கு ஆண் தான் அடையாளமாக இருக்கிறான். அதாவது ஆணின் சாதிதான் பிள்ளைகளின் சாதியாக கணக்கில் கொள்ளப்படுகிறது. ஆணாதிக்க சாதி / மதங்களின் உச்சபட்ச அநீதி இது.  ரோஹித்தின் விஷயத்திலும் இந்த ஆணாதிக்க சாதிய சிந்தனை வெளிப்பட்டது.  தந்தையின் சாதியை வைத்து ரோஹித் தலித் இல்லை என்று நிறுவப்பார்த்தார்கள். விளைவுகளை எண்ணி அவ்வளவு அச்சம்.  ஆணாதிக்க சாதிய மற்றும் மதக் கருத்தியல்களால் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் உடல்கள், இன்னும் கூடுதலான வன்முறைக்கு உள்ளாகிறது.  
விலக்குதல், ஒடுக்கப்படுதல் எந்தெந்த வடிவங்களில் எல்லாம் செயல்படுகிறது என்பதை இன்னும் கூர்மையாக ஆய்வு செய்து அக்கொடுமைகளுக்கு உள்ளாகும் அனைத்துப் பிரிவினரையும் ஒன்றிணைத்து ஓர் அடையாளத்தின் கீழ் போராடுவதுதான் இதற்குத் தீர்வாக அமையும். அது சாதிய அடையாளமற்ற, அதாவது இந்துத்துவ அரசியலும், அடிப்படைவாதமும் எளிதாக எதிர்க்கக்கூடிய, மக்கள் மனங்களில் அச்சத்தையும், வெறுப்புணர்வையும் ஊட்டி பிரித்தாள்வதற்கு இடமளிக்காத வகையிலான ஓர் அடையாளமாக அது இருக்க வேண்டும்.

இன்றைக்கு கம்யூனிசம், சோஷலிசம், மார்க்சியம் போன்ற தத்துவச் சொற்களை  உள்ளடக்கிய பெயர்களும் சரி, அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட தலைவர்களது பெயர்களைக் கொண்ட அமைப்புகள், ஒடுக்கப்பட்ட சாதியின் எழுச்சிக்காக தலித் அல்லது ஒடுக்கப்பட்ட சாதியின் பெரைக் கொண்ட அமைப்புகள் அனைத்தின் மீதும் இந்துதுவ பாசிசமானது ஒரு வெறுப்புணர்வை வளர்த்து வருகிறது. அதுமட்டுமின்றி பிரித்தாள்வதற்கான நாரதர் வேலையையும் பார்க்க முனைகிறது. இச்சூழ்நிலையில் பொதுவான அடையாளத்தின் கீழ் நாம் ஒருங்கிணைவதைத் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். 

நம்மை ஒடுக்குபவர்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருந்தாலும் ஒரு ஒற்றை அடையாளத்தின் கீழ் ஒற்றை இலக்கோடு ஒருங்கிணைந்து செயல்படுவதால் அவர்களது அதிகாரம் வலுப்பெற்றுக்கொண்டே இருக்கிறது. நாம் அதாவது உழைக்கும் வர்க்கம் பெரும்பான்மையாக இருந்தாலும் பல்வேறு காரணங்களால் உடைந்து உடைந்து சிறுபான்மை குழுக்களாகிக் கொண்டே இருக்கிறோம்.  இதனால் இளைஞர்கள் நம்பிக்கை இழக்கும் சூழல் உருவாகிறது.  இதில் உளவியல் ரீதியாக நாம் ஒன்றை கவனமாகப் பார்க்க வேண்டியுள்ளது. இதை பொது புத்தியின் சிந்தனை ஓட்டத்தைக் கணக்கில் கொண்டு முன்வைக்க விரும்புகிறேன், மற்றபடி எந்த அமைப்பையும், தலைவர்களையும் மதிப்புக் குறைவாக சொல்வதற்கில்லை.

நான் மேற்சொன்னபடி ஒரு பொது அடையாளத்தின் கீழே நாம் இயக்கமாக இணைய வேண்டும், ஒருங்கிணைக்க வேண்டும், போராட்டங்களை தொடுக்க வேண்டும். ஏனென்றால் : இடதுசாரி அமைப்பின் பெயர் கொண்ட அமைப்பாக இருந்தால், முற்போக்கு சக்திகளாக இருந்தாலும் மார்க்சியம் குறித்த தவறான புரிதலாலும், சில இடது சாரி கட்சிகளின் செயல்பாட்டில் கருத்து வேறுபாடு இருப்பதாலும் அதில் இணைவதற்கு இளைஞர்கள் மத்தியில், மக்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. அத்தோடு அமைப்புகளுக்குள் இருக்கும் முரண்பாடுகள் பெரும் தடையாக இருக்கின்றது.


அதேபோல் தலித் அமைப்புகளின் இயக்கம், அம்பேத்கரின் பெயரில் இயக்கம் என்றால் அதிலும் சில பின்னடைவுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அரசியல் விழிப்புணர்வு பெற்றுவிட்டாலும், மாற்றத்தை விரும்பினாலும், பன்னெடுங்காலமாக பொதுப் புத்தியில் ஊறிப்போயிருக்கும் சாதிய புத்தியின் காரணமாக 50 / 50 என்றிருக்கும் மக்கள் தங்களை தலித்துகளின் அடையாளத்தின் கீழ் ஒருங்கிணைத்துக்கொள்ள தயாராக இருப்பார்களா என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது. இது மிகவும் பிற்போக்குத்தனமானதுதான், ஆனால் யதார்த்த நிலையையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.  ஏனென்றால் அத்தகையோர் சீர்திருத்தம் வேண்டுபவர்களாக இருப்பார்களே ஒழிய தங்களின் அடையாளங்களை விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்க மாட்டார்கள்.

பெரியார் பெயரில் இயங்கும் முற்போக்கு இயக்கங்கள் என்றால் இன்னும் கூடுதலான தயக்கம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.  ஏனென்றால் பெரியார் ஏற்படுத்திய தாக்கம் அப்படி. அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்கள் எனில் அது வேறு விதமான எதிர்மறை எண்ணங்களைக் கொண்டிருக்கிறது. மொழி உணர்வின் அடிப்படையில் மிக மோசமான எதிர்ப்புணர்வையும் கொண்டிருக்கிறது.

மக்களை அணிதிரட்டுவதில் இப்பிரினிவைகள் பெரும் தடையாக இருக்கின்றது என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிவோம். புரட்சிகர அமைப்புகள் பலமாக இருந்தபோது மாணவ அமைப்புகள், விவசாய அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் பலமாக இருந்தன. எத்தகையப் போராட்டங்களெல்லாம் முன்னெடுக்கப்பட்டுள்ளன, என்னென்ன மாற்றங்கள் விளைந்தது என்பதை வரலாற்றில் காணலாம்.

கல்விச் சூழல் என்று எடுத்துக்கொண்டால் புரட்சிகர அரசியல் மேலோங்கியிருந்த காலத்தில் கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் இந்துத்துவ சக்திகள் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. இடதுசாரிகளுக்குள் ஏற்பட்ட பிளவின் காரணமாக ஒடுக்கப்படுபவர்கள் தம்மைத் தாமே காப்பாற்றிக்கொள்ள வர்க்க ஒருங்கிணைப்பைக் காட்டிலும் சாதிய ஒருங்கிணைப்பைக் கையிலெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. ஆனால், இந்துத்துவ அரசியல் மீண்டும் எழுச்சி பெரும் சூழலில் அது அவர்களுக்குப் பின்னடைவாகிப் போகிறது.
மாற்று அரசியலில் இப்படிப்பட்ட பின்னடைவுகளால் எதிர்த்துப் போராடும் நம்பிக்கை குறைந்து, கைவிடப்பட்ட மனநிலை பாதிக்கப்படுபவர்களுக்கு மேலெழுகிறது. அவர்கள் தற்கொலையை நாடுகின்றனர். அதிகரித்து வரும் விவசாயிகள் தற்கொலை, தலித் மாணவர்கள் தற்கொலை, சாதிய ரீதியான படுகொலைகள் அனைத்திற்கும் நம்மிடையே உள்ள பிளவுதான் காரணம்.

ரோஹித்தின் கடிதமும் அதை சுட்டிக்காட்டுகிறது. அனைத்து முற்போக்கு தத்துவங்களையும் வழிகாட்டியாகக் கொண்ட ஓர் அமைப்பாக நாம் அனைவரும் ஒன்று திரள்வதுதான்  ரோஹித்தின் மரணத்திற்கு உண்மையான மரியாதை செலுத்துவதாக இருக்க முடியும். அந்த வகையில், மக்கள் நலக்கூட்டணி Joint Action Committee against CASTE போன்ற ஒருங்கிணைப்புகள் நல்லதொரு  முன்னேற்றம். ஆனால் இதை அனைத்துத் தளங்களிலும் விரிவுப்படுத்த வேண்டும். ஒற்றை அடையாளத்தின் கீழ் அணிகள் உருவாக்கப்பட வேண்டும்.  அது பன்மைத் தன்மைக்கும், சிறந்ததொரு ஜனநாயக அமைப்பிற்கும் முன் உதாரணமாக இருக்க வேண்டும்.

* இதற்கு நாடார் சாதியின் வளர்ச்சி ஒரு சிறந்த உதாரணம் - கூட்டத்தில் தோழர் ஒருவரும் இதைக் குறிப்பிட்டார்

குறிப்பு:

ரோஹித் வெமுலாவின் நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் 30.1.2016 அன்று ஆற்றிய உரை.

சாதிகளின் வரலாற்று வளர்ச்சி பற்றிய குறிப்புகள்அவசியம் கருதி இப்பதிவில் சற்றே விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

References:

1.  மாறி வரும் சாதிகள்
2.  சாதி – ஓர் கண்டுபிடிப்பு (19 ஆம் நூற்றாண்டில் வியக்கத்தகு நிகழ்வு)
3.  சாமுகப் புறக்கணிப்பு (தாழ்த்தப்பட்டோர், முகமதியர்கள், பழங்குடிகள்)
          -   முனைவர் வெ. கண்ணுப்பிள்ளை, (இ.கா.ப. ஓய்வு), வளரும் சமுதாயப் பதிப்பகம்
3. Caste Question and Marxism (collection of Papers Presented in the Fourth Arvind Memorial Seminar) , Arvind Memorial Trust
4.  Caste and Class: A Marxist Viewpoint, Ranganayakamma, Rahul Foundation
5.  Religion, Caste & Politics in India, Christophe Jaffrelot, Primus Books
6.  சாதி குறித்து மார்க்ஸ், ரங்கநாயகம்மா - http://saavinudhadugal.blogspot.in/2014/09/blog-post.html


More Suggesstions

1.    CAPITAL, Karl Marx
2.    அம்பேத்கரின் சாதி ஒழிப்பு – சில சிந்தனைகள், இராசேந்திர சோழன்.
3.    வலைவிரிக்கும் இந்துத்துவம் - தலித்துகளை ஈர்க்கும் இந்துத்துவ தந்திரங்கள், பத்ரி நாராயண் திவாரி, கிழக்கு பதிப்பகம்
4.    தலீத்துகளின் இன்றைய நிலைமை – குழப்பமும் தடுமாற்றமும் – அவர்களின் முந்தைய தற்போதைய போராட்டம், ஆ. பத்மநாபன். பூம்புகார் பதிப்பகம் வெளியீடு
5.   சாதியப் போர்வையில் வர்க்கப் போராட்டம் - http://saavinudhadugal.blogspot.in/2016/01/blog-post_30.html