Aug 11, 2011

உடலே சினை முட்டையாய்



அதிகாரம் பற்றிய உரையாடலை 
நிகழ்த்திக் கொண்டிருந்தேன் 
உடலிடம் 
ஆயுதம் ஏந்திய சிவப்பு தேவதை 
எலும்புகளுக்குள் 
வாள் பயிர்ச்சி செய்யும் நாட்களில் 
சினை முட்டைகளின் இருப்பிடத்தை 
மாற்றச் சொல்லிக் கேட்டேன் 

 மரணத்தின் கரிய நகங்களைப் பிடுங்கி 
தசைகளுக்கடியில் ஒவ்வொன்றாய் பதித்தாள் தேவதை 
பெண் உடலுக்கும் போர்களத்திற்கும் 
இருக்கும் ஒற்றுமை பற்றிய பாடல் ஒன்று தயாரானது 

 சிதைவுகள் 
முனகல்கள் 
காற்றைக் கிழித்து வரும் ஈனக் குரல்கள் 
பெருக்கெடுத்தோடும் குருதி 
இவற்றால் நிரம்பி வழிந்ததந்த நதி 

 அடித்து தள்ளப்படும் சினை முட்டைகளை 
ஒவ்வொன்றாக 
சேகரிக்கிறாள் மும்முலைக்காரி 

 குழந்தையின் சிரிப்பொலியை 
இசை குறிப்பென பெயர்த்து 
மரப் பொந்துக்குள் குருவியோடு 
பாடல் இசைத்துக் கொண்டிருந்த வேளையில் 
கிடத்தியிருந்த எனதுடலில் எவரும் அறியா வண்ணம் 
முட்டைகளை வைத்து சென்றாள் அவள் 

 உடலே சினை முட்டையாய் மாறிப்போனதை 
பார்த்துக்கொண்டிருக்கிறோம் 
மரப்பொந்துக்குள் இருக்கும் குருவியும் நானும் 

 மாதவிடாய் நாட்களில் 
எரிமலைக் குழம்பென 
வழிந்தோடும் 
 குருதி 
சொற்கள் 
படிமங்கள் 
இவற்றோடு கண்ணீரும் கலக்கையில் 
உறுதி செய்து கொள்கிறேன்
இதுவரை நான்
எழுதியது
கவிதை
என்று.