Dec 30, 2018

கொற்றவை பெயர் காரணம்


கொற்றவை பெண்ணியத்தின் முக்கியமான பேசு பொருள். தமிழகத்தின் ஆளுமைமிக்க குரல். தான் சார்ந்த உரையாடல்களில் தனித்துவ அரசியலினை பேசுபவர். இன்று பெரும் விவாதப் பொருளினையும் அடையாள அரசியலினையும் பேசுகின்ற பெண்ணிய கருத்தியல் வாதி.  இன்று பெண்களின் உரிமைகள், அவர்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகள் அதிகார வங்குரோத்தின் பக்கம் கவனிக்கப்படாமலிருக்கிறது. இதனால் பெண்ணியம் சார்ந்த உரையாடல்களை உலகெங்கும் பரப்பி விஸ்தரிக்க வேண்டிய நிலையிருக்கிறது. அதிகார அரங்கானது பெண்களுக்கான உரிமைகளை தக்க நேரங்களில் வழங்காமல் அவர்களின் தனித்துவ பண்பிற்கு முட்டுக்கட்டையாக அமைந்திருக்கிறது. வீடுகள் தொட்டு தொழில் புரியும் காரியாலயங்கள் வரை இவையே நடந்தேறுகின்றன. இதிலிருந்து மீண்டெழுவதற்கு பல பெண்கள் தங்களது அறச்சீற்றத்தினை எறியத் தொடங்குகின்றனர். மார்க்ஸியம், பெண்ணியம், சினிமா என பல்வேறு குரலாய் இயங்கிக்கிக் கொண்டிருக்கிறார் கொற்றவை. உரையாடல் தொடர்கிறது பகுதிக்கா அவரிடம் மூன்று கேள்விகளைக் கேட்டேன். 

சாஜித், தினகரன் நாளிதழ், இலங்கை

1) பெண் அடையாளம் சார்ந்து அதிகமாய் எழுதியும் பேசியும் வருகிறீர்கள். அதற்கான கலை வடிவமாக எதனை கருதுகிறீர்கள்

பெண் அடையாளம் என்பதைக் காட்டிலும் பெண் விடுதலை என்று சொல்லலாம். ஒலி-ஒளி ஊடக வடிவத்தின் தாக்கம் அளப்பறியது. தனிப் பாடல்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி ஆகியவற்றை நான் முதன்மையானதாகக் கருதுகிறேன். அதனைத் தொடர்ந்து எழுத்து, ஓவியம். 

2) கொற்றவை எனும் பெயருக்கு பின்னால் ஒழிந்தித்திருக்கும் காத்திரமான அரசியல் எத்தகையது

சுயமரியாதையையும், சமத்துவத்தையும் நிலைநாட்டியே தீர்வது என்னும் வெறி கொண்ட அரசியல் அது. கொற்றவை என்று பெயர் வைத்துக்கொள்ள இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று தூய தமிழ் பெயர். இரண்டாவது நான் யார் என்பதை உணர்த்த. பார்ப்பனிய ஆதிக்கம் மற்றும் தந்தை வழிச் சமூக ஆதிக்கம் குறித்து படித்த போது போர் தெய்வமாக இருந்து மன்னாதி மன்னர்களும் வணங்கிச் செல்லும் பெண் (கடவுள்கள்) எல்லாம் பின்னர் பெண்டாட்டிகளாக ஆக்கப்பட்டு இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்பதை அறிந்து கோபம் கொண்டேன். நான் ஆள்பவளும் இல்லை. ஆளப்படுபவதற்கு இணங்குபவளும் இல்லை.  

3) எல்லாவற்றையும் சினிமா பேசத்துவங்குகிறது. எதனை இன்னும் அழுத்தமாக பேச வேண்டுமென நினைக்கிறீர்கள்?

சினிமா எல்லாவற்றையும் பேசுவதில்லை, உண்மையில் அது பொய்களைச் சார்ந்திருக்கிறது, பொய்களைக் கட்டமைக்கிறது. சினிமாக்கள் உண்மையை பேசவேண்டும். சமூகத்தால் மறைக்கப்படும் உண்மைகளைப் பேச வேண்டும். அதிகாரத்தின் கோர முகங்களை அம்பலப்படுத்தி மக்களை ஒன்று திரட்டி அதனை கிழித்தெரிய தொண்டாற்ற வேண்டும். அதனோடு பெண் உடலை பண்டமாக்கி கொண்டாட்டம் என்று வழங்குவதை விடுத்து மக்களின் யதார்த்த வாழ்வியல் கலைகளை, கொண்டாட்டங்களை பிரதிபலிப்பதும், மேம்பட்ட ரசனைகளை வளர்ப்பதும் அவசியம்.




உழைக்கும் மகளிர்




தொழிலாளர்களின் உழைப்புதான் அனைத்து செல்வங்களையும் தோற்றுவிக்கிறது, இருப்பினும் அந்த உழைப்பிற்கு ஈடாக அவர்கள் வாழ்வதற்கும் உழைப்பதற்கும் கூட தேவையான உணவு  கிடைப்பதில்லை. இதைக் காணும் தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கை நிலைமைகள் குறித்து அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். உழைப்பாளர்கள் தங்களுக்காக உழைக்கவில்லை, மாறாக பூர்ஷுவாக்கள் என்றழைக்கப்படும் ஆலை முதலாளிகளுக்காக, நிலவுடைமையாளர்களுக்காக, சுரங்கம், கடைகள் ஆகியவற்றை வைத்திருக்கும் எஜமானர்களுக்காக உழைக்கிறார்கள்.

அனைத்து சட்டங்களும் சொத்துடைமை வர்க்கத்திற்குச் சேவை செய்யவே வகுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த நாடும் பூர்ஷுவாக்களின் நலனுக்காகவே இயங்குகிறது. நாட்டின் சட்டதிட்டங்களை வகுப்பதிலோ, நிர்வாகத்திலோ தொழிலாளர்களுக்கு எந்தப் பங்குமில்லை. உழைப்பது ஒன்றே அவர்களின் வேலை. வரிகள் கட்ட அவர்கள் ஓயாது உழைக்க வேண்டும். தங்கள் சுயமரியாதை மடிவதைக் கண்டும் கடும் குளிர், பசி, பட்டினி போன்ற கொடுமைகளையும் பொறுத்துக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டும்.

இந்த நிலைமையைத் தொழிலாளர்கள் மாற்ற நினைக்கின்றனர். இனியும் அவர்களுக்கு வர்க்கங்கள் வேண்டாம், ஏழை பணக்காரன் வேற்றுமை இருக்கக் கூடாது (இந்தியாவில் சாதி வேற்றுமை இருக்கக் கூடாது). ஆலைகள், நிலங்கள், தொழிற்சாலைகள், பட்டறைகள் சுரங்கங்கள் போன்றைவை தனியாரின் உடைமைகளாக இன்றி ஒட்டுமொத்த சமூகத்தின் பொது உடைமையாக, அவர்களால் நிர்வகிக்கப்படுவதாக இருக்க வேண்டும். எஜமானர்கள் எப்போதும் தங்களை வளப்படுத்திக்கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். தங்களுக்காக உழைக்கும் தொழிலாளர்களின் உடல் நிலை, வாழ்க்கை வசதி, நலம்வளம், குறித்தெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை. உழைக்கும் மனிதனின் வாழ்க்கையை அவர்கள் எண்ணுவதில்லை, மாறாக இலாபம் ஒன்றே அவர்களின் குறிக்கோள்.

உற்பத்திக் கட்டுப்பாடுகள் தனியார் முதலாளிகளிடமிருந்து சமூகத்தின் கைகளுக்கு மாறும்போது எல்லாம் மாறிவிடும். சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரும் நல் வாழ்க்கை வாழ, ஒவ்வொருவரின் தேவையும் நிறைவு பெற, மகிழவும், கொண்டாடவும் தேவையான ஓய்வு நேரம் கிடைக்க, மனிதர்கள் அனுபவிக்க வேண்டிய அனைத்து விதமான இன்பங்களும் கிடைத்திட அச்சமூகம் வழிவகுக்கும். தங்களுக்குத் தேவையான சரக்கு இருக்காதோ என்று தொழிலாளர்கள் அப்போது அச்சம் கொள்ள வேண்டியிருக்காது.

இயந்திரங்களின் வரவால் மனித உழைப்புத் திறன் அதிகரித்துள்ளது. அதன் விளைவாக புதிய விவசாய முறைகள் கண்டுபிடிக்கப்பட்டு, மண் வளம் அதிகரித்துள்ளது. ஆகவே அதுகுறித்து யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை. எல்லோருக்கும் போதுமான அளவு சரக்குகள் இருக்கும். இன்றைய நிலையில் மக்கள் ஏழ்மையில் வாட, போதிய உணவு தானியங்கள் இல்லை, உடை இல்லை என்பதல்ல காரணம். அத்தனை தானியங்களும் வாங்குபவரை எதிர்நோக்கி ரயில் நிலையங்களில், கிடங்குகளில் அழுகிக் கிடக்கின்றன. மறுபுறம் தொழிலாளர்கள் பட்டினியில் வாடி இறக்கின்றனர். ஒரு தொழிற்சாலை முதலாளியின் சேமிப்புக் கிடங்கு விற்பனையாகாத சரக்குகளின் குவியலால் வெடித்துவிடும் போல் உள்ளது. ஆனால் அவனது தொழிற்சாலை வாசலில், சாக்குத் துணி அணிந்தபடி தொழிலாளர்கள் வேலை கேட்டு காத்துக்கிடக்கின்றனர்.

உற்பத்தியானது சமூகத்தால் நிர்வகிக்கப்படும் போது, அனைவரும் உழைத்தே வாழ வேண்டும். ஆனால் இன்றுள்ளது போல் உழைப்பது அவ்வளவு கடினமானதாக இருக்காது. உழைக்கும் இடத்தில் நிலவும் வெறுக்கத்தக்க சூழல் இலகுவாக்கப்படும். காற்றோட்டமில்லாமல், நாறும், நோய்த் தொற்றுங்கள் ஏற்படும் தொழிற்சாலைகள் போலின்றி, நன்கு ஒளியூட்டப்பட்ட, தாராளமான இடம் நிரம்பிய, உலர்ந்த, காற்றோட்டமுள்ள கட்டிடங்களாக அது மாற்றப்படும். இன்றைக்குப் போல் நீடித்த பணி நேரமிருக்காது. ஏனென்றால், இன்றைக்குப் போல் கர்ப்பிணிகள், குழந்தைகள், உழைப்பாளிகள் மட்டும் கடுமையாக உழைக்க மற்றொரு பிரிவினர் வேலை வாய்ப்பின்றி சும்மா இருக்க நிர்ப்பந்திக்கப்படும் நிலை இருக்காது.  அனைவரும் உழைத்து வாழ வேண்டும். அதேவேளை அது தற்போது உழைக்கும் வர்க்கம் அனுபவித்துவரும் நிர்ப்பந்திக்கப்பட்ட உழைப்பாகவோ, அயர்ச்சியூட்டுவதாகவோ, இழிவான நிலையிலோ இருக்காது.

முதியவர்கள், உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள், பலவீனமானவர்கள் ஆகியோரைப் பராமரிக்கும் பொறுப்பை சமூகமே ஏற்றுக்கொள்ளும். ஏதோ ஒரு புழக்கடையில் மரணித்துக் கிடப்போமோ, யாரையோ சார்ந்து பிச்சையெடுத்து வாழ்ந்து அனாதையாக மரணித்துவிடுவோமோ என்ற கவலைகள் இருக்காது. தாங்கள் படுத்த படுக்கையாகி விட்டால் குடும்பம் அனாதையாகி விடுமோ என்று யாரும் அச்சம் கொள்ள வேண்டியிருக்காது. ஏனென்றால் குழந்தைகள் ஆரோக்கியமானவர்களாக, அறிவாளிகளாக, நல்ல குடிமகன்களாக உருவாகத் தேவையான பயனுள்ள அறிவைக் கொடுத்து சமூகத்தால் நல்ல முறையில் வளர்த்தெடுக்கப்படுவார்கள்.

அத்தகைய நிலைமையை வேண்டுவோரும், அதற்காகப் போராடுபவர்களுமே சோஷலிஸ்டுகள் ஆவர்.

“உழைக்கும் மகளிர்”, க்ரூப்ஸ்கயா, தமிழில் கொற்றவை. பக். 31

தோழர் நதேழ்தா கான்ஸ்டான்டினோவா க்ரூப்ஸ்காயா 1899ல் எழுதி 1901ல் வெளியான ’உழைக்கும் மகளிர்’ தமிழில் தற்போது.. பக்கங்கள் 77. விலை ரூ. 70
நூல் வாங்க சிந்தன் புக்ஸ்,  132/251, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை - 600086, தொடர்புக்கு: 9445123164 Chinthan Books - சிந்தன் புக்ஸ்