Jun 20, 2012

இணைய அவதூறு புரட்சியிலிருந்து விலகுதலை நோக்கி:



வணக்கம் தோழர்களே. நான் 2009ன் இறுதியில் எழுத்து என்று ஒன்றை நம்பி எழுதத் தொடங்கினேன். அதுவரை சமூகம் / அரசியல் / சாதி இன்னும் இதர ஒடுக்குமுறைகள் குறித்த எந்த பிரக்ஞையும் அற்ற ஒரு சராசரி மேட்டுக்குடிப் பெண் (இப்போதைய அறிவின் படி சொல்வதானால் அப்போதைக்கு சாதியப் புத்தியோ, புரிதலோ அற்ற ஆதிக்க சாதி (பார்ப்பனச் சாதி) மேட்டுக்குடிப் பெண்).  எதிர்பாராத ஒரு தருணத்தில் வசுமித்ரவுடன் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. நான் எழுத்து, கருத்து என்று நம்பிய ஒன்றின் மீது காரி உமிழாத குறையாக கடுமையான விமர்சனங்களை வைத்தான். அதைத் தொடர்ந்த விவாதங்களும், விமர்சனங்களும் என்னை முற்போக்கு சிந்தனைகளைக் குறிப்பாக மார்க்சியச் சிந்தனைகளைக் கற்றுக் கொள்ளச் செய்தது. 

தனிப்பட்ட வாழ்விலும் சில சம்பவங்கள் என்று என்னை மேலும் தீவிரமாக கற்கச் செய்தது. அக்கல்வியும், வசுவுடனான கடுமையான விவாதங்களுமே எனக்கு மன விடுதலை அளித்தது. அதைத் தொடர்ந்து பெண் விடுதலச் சிந்தனைகளை மற்ற பெண்களுக்கும், சமூகத்திற்கும் பரப்புரை செய்வதும், ஒடுக்குமுறைகளுக்கெதிரான குரலை பதிவு செய்வதும் ஒரு சமூக பங்களிப்பு என்கிற வகையில் நான் எழுதத் தொடங்கினேன். (எழுத்தாளர், கவிஞர் என்றெல்லாம் சொல்லிக் கொள்வது எனக்கு மிகுந்த அருவருப்பைத் தருகிறது……) வாய்ப்புக் கிடைக்கும் போது போராட்டங்களில் பௌதிகமாக கலந்து கொள்கிறேன்..(அரசியல் முரண்பாடு மற்றும் சில தனி நபர் / அமைப்பு சார் குழப்பவாத, சுரண்டல்வாத….குறிப்பாக பெண்ணியப் பார்வையில் தெளிவற்ற தன்மைகள் இருப்பதாக நான் உணரும் போராட்டங்களில் கலந்து கொள்வதில்லை).

மார்க்சியம் மற்றும் இதர முற்போக்கு சிந்தனைகளில் எனது பார்வைகள், புரிதல்களை வைத்து எனது கட்டுரைகள் இயங்குகின்றன. நான் எழுதத் தொடங்கிய காலத்திற்கு முன்னர் சமகால படைப்பாளிகள் மத்தியில் நிலவிய அரசியல் சர்ச்சைகள், தனிநபர் சண்டைகள் குறித்து நான் அறியேன்…அதேபோல் எந்த படைப்பாளிகளோடும் தனிப்பட்ட நட்புகளும் பாராட்டியதில்லை. இங்கு நான் ரோசா லுக்சம்பர்க்கை நினைவு கூறுதல் அவசியமாகிறது.  அவரும் பொதுவாக தன் சமகாலத்தவரிடம் இறுக்கத்தையே கொண்டிருந்தார் ஏனென்றால் பின்னர் அவர்களோடு எப்போது வேண்டுமானாலும் முரண்பட நேரலாம் எனும் எச்சரிக்கை அது.  அரசியல் முரண்பாட்டை, கருத்து முரண்பட்டை தனி நபர் காழ்ப்புணர்ச்சியாக மாற்றி, முதிர்ச்சியற்ற, நாகரீகமற்ற, கண்ணியமற்ற வகையில் ஒருவர் மற்றொருவர் மீது விமர்சனங்களை (வசவுகளை) வைப்பதென்பது காலம் காலமாக மனித இயல்பாக இருக்கிறது.

எழுதத் தொடங்கியதற்கு முன் நான் கலந்து கொண்ட முதல் நிகழ்வு லீனாவின் கவிதைத் தொகுப்பு தொடர்பாக நிகழ்ந்த சில அடக்குமுறைகள், மற்றும் கருத்து சுதந்திரத்திற்கெதிரான செயல்பாடுகளை கண்டிக்கும் ஒரு கண்டனக் கூட்டம். அப்போது தான் வசுமித்ர தன் மீது நிகழ்த்தபட்ட அந்த வன்முறைத் தாக்குதலிலிருந்து மீண்டிருந்த சில நாட்கள்…வசுமித்ரவின் துணை என்கிற வகையில அதில் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன்…எனக்கு எவரையும் அக்கனத்தில் தெரியாது. அன்றையக் கூட்டம் மிகுந்த மனவருத்தமளிக்கும் வகையில் நடந்தேரியது. அதிலும் பெண்கள் லீனாவை நோக்கி வைத்த சில கேள்விகள்…தோழர்கள் சிலர் பட்டியல் கேட்டது என்பதெல்லாம் எனக்கு அதிர்சிக்குரியதாக இருந்தது. கொலையேச் செய்தாலும் கருணையோடு அணுகச் சொல்லும் சிந்தனையாளர்கள் ஏன் ஒரு பெண்ணை இப்படிக் கேவலப்படுத்துகிறார்கள்…அவர்தான் மோசமாக எழுதினார் என்றால் மற்றவராவது நண்ணையம் செய்யும் வகையில் அரசியல் ரீதியான, கருத்துப்பூர்வ விமர்சனஙக்ளை வைக்கவிடாமல் செய்தது....ஒருவேளை மார்க்ஸும், ஏங்கல்சும், லெனினும் கூட தங்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை இப்படி எதிர்கொண்டிருக்க மாட்டார்களே... என்ற கேள்விகளோடு….  நம்பிக்கை இழக்கும் சூழல்….அதைத் தொடர்ந்து எனது வலைப்பூவில் ஒரு கட்டுரை எழுதினேன்….. இப்போது அது முடிந்து போன விசயம். அதைக் கிளர்வது அவசியமில்லை.

பின்னர் அவ்வப்போது பெண்ணியம் என்ற பெயரில், பெண் உரிமை என்ற பெயரில் மீண்டும் இது போன்ற அவதூறு கட்டுரைகள் இணையத்தில் வலம் வந்தது. அதிலும் சில எதிர்ப்புகளைத் தெரிவித்ததோடு ஒரு கட்டுரையும் எழுதினேன்.
இதற்கிடையில் பெண்ணியம் குறித்து எனது புரிதலைக் கட்டுரைகளாக எழுதினேன், சில மொழிபெயர்ப்புகளையும் எழுதினேன். அவை சில இலக்கிய இதழ்களில் வெளிவந்தன. சில போராட்டங்களில் பேச வாய்ப்பு கிடைத்த போது பேசியிருக்கிறேன். இதுவே எனது செயல்பாடுகள். ஆனால் இந்த குறுகியக் காலச் செயல்பாடுகள் எனக்கு இங்கு இயங்கும் சக படைப்பாளிகள் மனநிலையை, அமைப்புகளின் போக்கை நன்கு உணரச் செய்தது. அதனால் முடிந்தவரை எழுத்தோடு நிறுத்திக் கொள்வது எவரோடும் நட்பு பாராட்டுவதில்லை எனும் ஒரு சுய பிரகடனத்தை ஏற்கும் படி அது என்னை நகர்த்தியது.

நான் இயங்கத் தொடங்கிய காலம் முதல் ஒரு குறிப்பிட்ட குழிவினர், மற்ற ஒரு சில நபர்கள் மீது எழுத்தின் மூலமாக தாக்குதல் நடத்துவதும், ஆபாச பதிவுகளை இடுவதும், அரசியல் விமர்சனம் என்ற பெயரில் தனி நபர் விமர்சனங்களை செய்வதையுமே காண நேர்ந்தது. கடந்த காலத்தை நான் அறியேன்…எவர் முன்னர் கொடுத்தார், எவர் பின்னர் அதற்கு பதிலடி கொடுக்கிறார், எவர் வஞ்சம் தீர்க்கீறார். எவர் எவருடைய வட்டம் என்பது எதுவும் எனக்குத் தெரியாது. நான் அத்தகைய எழுத்துக்களைக் காணும் போது கண்டனங்களைத் தெரிவிக்கிறேன்….கோட்பாடு ரீதியான குழப்பவாத கேள்விகளாக இருப்பின் அதை சுட்டிக் காட்டும், விமர்சிக்கும் கேள்விகளை, பதில்களை, விமர்சனங்களைப் பதிவு செய்கிறேன்…இதில் எது சரி, எது தவறு என்று பொருத்திப் பார்ப்பதும், குறிப்பிட்ட நபர்களோடு என்னைப் பொறுத்திப் பார்ப்பதும் குறுகியப் பார்வையாக மட்டுமே இருக்கும். இந்த பார்வைக் குறைபாட்டிற்கு என்னிடம் மருந்தில்லை.

சக பெண்ணியச் செயல்பாட்டாளரை பெண்ணியவாதி என்று சொல்லிக் கொள்ளும் பெண்களில் எவர் எவர் ஆதரிக்கின்றனர்….அதனுள் எத்தகைய மனநிலை, அரசியல் செயல்படுகிறது….என்று சக படைப்பாளிகளின் பெரும்தன்மையை உணர்த்த தவறியதில்லை… அர்த்தமற்ற பதிவுகளாக இருந்தால் கூட உடனே அதற்கொரு லைக், பின்னூட்டம், அதில் ஒரு விவாதம் என்று  இவர்கள் பொதுவாக தங்களைப் பாராட்டும், தங்கள் பதிவுகளுக்கு லைக் போடுபவர்களையும், தங்களோடு நட்பில் இருப்பவர்களின் பதிவுகளைப் பகிர்வதற்கும், புகழ்வதற்கும் தயங்காததையும், அதேவேளை கவனமாக, சில முக்கியப் பதிவுகளை எழுதும் நபர்களைக் கண்டுகொள்ளாமல் இருபப்தையும், அவரது எழுத்துக்கள் குறித்து வாய் திறக்காமல் இருப்பதையும் காணமுடிகிறது. (ஆனால் அப்படி ஒதுக்கி வைப்பதே இவர்கள் செய்யும் பேறுதவி)….. அவதானிக்கும் மனநிலைகளை இங்கு சுட்டுதல் அவசியமாகிறது. சம்பந்தப்பட்டவர்கள் சுயவிமர்சனம் செய்து கொள்ள இது உதவும்….இப்படிப்பட்ட மனநிலைகளை, அரசியல்களை தனிப்பட்ட முறையில் கொண்டிருக்கும் இவர்கள் பெரும்பாலும் ஒரு கோஷிடியனராகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து ஏசுபவர்கள் மற்ற கோஷிடியனராக இருக்கிறார்கள் என்பது சற்று விந்தையான விசயம்தான்.  சில வேளைகளில் தனிப்பட்ட முறையில் சிலரது குணங்களை அறிந்திருக்க நேர்கிறது, அவர்களின் பொதுவெளி வெளிப்பாடு நகைப்புக்குரியதாய் இருப்பதோடு, அவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கச் சொல்லி எனக்கு அது சொல்லிச் செல்கிறது. என்ன செய்வது…

தீவிர உணர்ச்சியாளர்களாக இருக்கும் இவர்கள் ஒரு சில வேளைகளில் பொதுப் பிரச்சனை சார்ந்து போராட்ட பதிவுகளை வைப்பதும், அடுத்த நொடி நக்க்கல் நையாண்டிகள் செய்வதும் என்று எல்லா உணர்ச்சிகளையும் கொட்டும் ஒரு போக்கையும் காண முடிகிறது…அவ்வகை எழுத்துக்கள் சமூகத்திற்கு என்ன பயன் அளிக்கிறது எனும் கேள்வி எனக்கெழுகிறது…அது என்ன வகையான அரசியல் பாடத்தை கற்றுத்தர உதவும் என்றும் எனக்குத் தெரியவில்லை.
சம்பந்தபட்ட இந்த வட்டங்களில் பெரும்பாலும் எல்லோரின் தனிப்பட்ட குணங்களும், கோட்பாடுகளும், வாழ்வியல் முறைகளும் இவர்கள் பொது வெளியில் பதிவதிலிருந்தும், சக செயல்பாட்டாளரை நோக்கி வைக்கும் விமர்சனங்களிலிருந்தும் மாறுபட்டதாகவே இருக்கிறது. இதுவும் அந்த படைப்புலக வட்டங்களில் இயங்கும் மற்றவர்கள் வாயிலாக, சில வேளைகளில் அவர்களே எழுதும் எழுத்துக்களில் வெளிப்படும் சொற்கள், கருத்துக்கள் வாயிலாக அறியமுடிகிறது.  ஒரு படி மேலே போய் சிலர் எனக்குத் தனிப்பட்ட முறையில் தொலைபேசியிலும், மென் கடிதத்திலும், நீங்கள் அவர்களோடு சேராதீர்கள், இவர்கள்ளோடு சேராதீர்கள் என்ற அறிவுரைகள் கொடுக்கின்றனர்…அதுவும் குறிப்பிட்ட இரண்டு பெண்களுக்கெதிரான கருத்துக்கள் அவை, அவற்றை சொன்னவர்கள்  ஆண்கள். அவர்களது குற்றச்சாட்டு சம்பந்தபட்ட அந்த இரு பெண்கள் மார்க்சிய, லெனினிய கருத்துக்களை திரித்து பெண்ணியம் பேசும் போலிகள் என்பது…..பெண்களைப் பற்றி வரிந்து கட்டிக் கொண்டு வந்து பேசும் இவர்களுக்கு ஆண்கள் அணைவரும் உண்மை மார்க்சிஸ்டுகளாய் தெரிவது ஏன்? பெண்ணியவாதியாக தன்னை சொல்லிக்கொள்ளும் ஒரு பெண் எத்தகைய எழுத்துக்களை தங்கள் குடும்ப வலைத்தளத்தில், முகப்புத்தகத்தில் வைத்தார், ஏன் அவரை இந்த உண்மை மார்க்சிஸ்டுகள் கண்டிக்கவில்லை என்றும் எனக்குத் தெரியவில்லை…அவர்களுக்கு கொடுக்க வேண்டிய பதில்களை கொடுத்து ஓய்ந்து என்னுடைய அடுத்த கட்ட பணியாக அமைப்புத் தொடக்கம்….அதிலும் அரசியல்….”அவர் அடையாளச் சிக்கலுக்காக தன்னை அறிவுஜீவியாக காட்டிக் கொள்கிறார்…..அமைப்புக்குள், ஒழுங்குக்குள் வரவைல்லை…..அவருக்கு அமைப்பில் இருக்கும் நீங்கள் ஏன் ஆதரவு தெரிவிக்கிறீர்கள்….” இப்படி மற்றவரிடம் விசாரனை….என்னிடம்….”நீங்கள் ஏன் அவரை வைத்து நிகழ்ச்சி நடத்துகிறீர்கள், ஏன் இவரை வைத்து நிகழ்ச்சி நடத்துகிறீற்கள்….”என்பதாக…..அதையும் சமாளித்து எப்படியோ அன்று அமைப்பை தொடங்கி, ஒரு படத்தையும் வெளியிட்டு முடித்தேன்….அதற்கு வந்திருந்த சக பெண்ணியவாதிகளின் கூட்டம், சக படைப்பாளிகளின் கூட்டம் எனக்கு மிகுந்த நம்பிக்கை அளித்தது…..பல உண்மைகளை உணர்த்தியது!!!!!!!!!
பொதுவாக இந்த கோஷ்டிப் பூசல்காரர்கள் பேசியதையே பேசுவதும், மற்றவர்களையும் அது குறித்து கருத்து தெரிவிக்கச் சொல்லி நெருக்கடிகள் கொடுப்பதும்…சில நிகழ்வுகள் குறித்து விளக்கமளித்த பின்னரும் அவதூறு பேசுவதை, குற்றம் சாட்டுவதை தேவைப்படும் நேரங்களில் எல்லாம் கையாள்வதும் சலிப்படையச் செய்கிறது.  அவ்வப்போது புது எதிரிகளும் முளைத்துவிடுகின்றனர். பின்னர் அவர்களோடு ஒரு சண்டை, அதைத் தொடரும் விளக்கங்களில், இதில் யார் யாருக்கு ஆதரவு….எனும் பிரச்சனை. அருவருப்பு மட்டுமே மிஞ்சுகிறது…

ஐயா மார்க்ஸ் மற்றும் இதர மக்கள் தலைவர்களே உமது பெயரால் நடக்கும் இந்த ‘அரசியல் முக்கியத்துவம்’ வாய்ந்த பேச்சுக்களை கேட்க நீவிர் இல்லாமல் போனது துரதிர்ஷ்டம்….

 இது போன்ற சர்ச்சைகளில் அரசியல் ரீதியான விவாதங்களைக் காண முடிவதில்லை, காண முடிவதேயில்லை, கற்றுக் கொள்ள ஏதுமில்லை….ஆகையால் பெரும்பாலும் நினைத்ததையெல்லாம் கொட்டித் தீர்க்கும் நோய் பீடித்திருக்கும் இந்த இணையப் புரட்சிப் பதிவுகளிலிருந்து விலகி இருக்கவே விரும்புகிறேன்….சில வேளைகளில் அர்த்தமற்ற, விரைப்புத்தனமை மிகுந்த பார்வையோடு அவதூறாக, தரமற்ற மொழியில் வைக்கப்படும் பதிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறேன்…சில வேளைகளில் சலிப்பின் காரணமாக, எரிச்சலின் காரணமாக அதையும் தவிர்த்துவிடுகிறேன்…..சில வேளைகளில் நான் ப்ளாக் செய்து வைத்திருப்பவர்கள் ஏதேனும் ஆபாசமாக எழுதியிருந்தால் அதை படிக்கும் வாய்ப்பு எனக்கில்லை….அதனால் அதற்கு எதிர்வினையாற்ற முடியாது….(ஆனால் இந்த அற்ப பதிவுகளுக்கு எதிர்வினையாற்றுவது ஆற்றாமல் போவது என்பது தனிப்பட்ட தேர்வு சுதந்திரம் எனப்தைக் கூட கணக்கில் கொள்ளாமல், அவசர அவசரமாக வசவுகள், விமர்சனங்கள்….பட்டங்கள்….).இதில் பெரிய அரசியலைக் காண்பதோ, அதிகார மனோபாவாமோ, சாதியச் சிக்கலோ இருப்பதாக எவரேனும் கருதினால் அது அவர்களது முதிர்ச்சியினமை. அதற்கும் மேலாக சுயநலம், அடையாளச் சிக்கல், ஆதரவு தேடும் மார்க்கெட்டிங் செயல்பாடு என்று தான் சொல்லத் தோன்றுகிறது. 
எழுத்துலகில் இங்கு நிலவும் அற்ப அரசியலுக்கு இத்தனை நீளமான கடிதமும், விளக்கமும் அவசியமற்றதே….ஆனால் வேறு வழியில்லை…தீவிர உணர்ச்சிக் காரணமாக, உணர்ச்சி பொங்க சில பதிவுகளை எழுதிவிட்டு சாடை மாடையாக ஏன் எனக்காதரவாக குரல் கொடுக்கவில்லை, அவருக்காதரவாக குரல் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பும்  நபர்களுக்கான பதிலாகவும், எதிர்காலத்தில் இந்த அற்ப இணையப் புரட்சிகளுக்கு எவ்வித வினையும் நான் அற்றப்போவதில்லை என்ற அறிவிப்பாகவும் இதை வைக்கின்றேன். அது எத்தரப்பினருடையதானாலும் சரி, எவ்வகை எழுத்தானாலும் சரி….ஏனென்றால் எதுவும் சம்பந்தபட்ட நபர்களின் மனநிலையை மாற்றுவதில்லை…..இதில் கிசுகிசுக்களுக்கும், சுவாரசியங்களுக்கும் அலைபவர்கள் மட்டுமே குளிர்காய்கின்றனர். கால விரையம்…..

இன்றைய இணைய யுகத்தில் ஒவ்வொருவருக்கும் எண்ணிக்கை என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது….லைக்குகளையும், பின்னூட்டங்களையும், ஆதரவுக் கரங்களையும் எதிர்பார்க்கும் அம் மனங்களுக்கு உங்கள் எதிர்ப்பார்ப்பில் ஒரு எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி ஏமாற்றத்திலிருந்து காக்க விரும்புகிறேன்.
மார்க்சியத்தை, பெண்ணியத்தை இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று திணிப்பதில் எனக்கு உடன்பாடில்லை… அதுவும் ஒருவகை பாசிசமே.ஆனால் அவர் அவர் எழுதும் கருத்துக்களை நாகரீகமாக உரையாடலுக்கு உட்படுத்துவதில் நான் உடன்படுகிறேன்….அவ்விவாதம் பகை முரண்பாடு, நட்பு முரண்பாடு என்கிற புரிதலோடு அனுகப்பட வேண்டிய ஒன்று…..எவரும் எவரையும் வென்றெடுக்கும் நோக்கம் இல்லாமல் அது முழுக்க முழுக்க அரசியல் விவாதகாம இருப்பின் அதில் மற்றவருக்கும், சம்பந்தபட்டவர்களுக்கும் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது….அதுவல்லாத அற்ப பேச்சுகக்ள் வெறும் நேர விரையம்…..அறிவு விரையம்….சொற்கள் விரையம்….. அதனால் அத்தகைய எழுத்துக்கள், அல்லது அத்தகைய எழுத்துக்களை வைக்கும் நபர்களின் ஒட்டு மொத்த பதிவுகளை நான் படிப்பதே இல்லை…படித்தாலும் வினையாற்றுவதில்லை…எல்லா உணர்ச்சிகளையும் முகப்புத்தகத்தில், இணையத்தில் கொட்ட வேண்டும் என்ற வேட்கையும், தீவிர உணர்ச்சியும் எனக்கில்லை….அதன் மூலமாகத்தான் என்னை ஒருவர் எடைபோடுவர்…புரட்சியாளராகக் கருதுவர் என்றால் எனக்கு அதுவும் தேவையில்லை…நான் நிச்சயமாக புரட்சியாளரோ, எழுத்தாளரோ, இன்னும் இதர ‘எவரோ’ இல்லை…குறிப்பாக இணையப் புரட்சியாளர் இல்லை….எனக்கான வெளி மிகச் சிறியது…அதில் உபயயோகமாக ஏதாவது செய்ய விரும்புகிறேன்……கருத்துக்கு எதிர் கருத்தை தர்க்க பூர்வமாக வைப்பதையே நான் விரும்புகிறேன். வினவு வலைத் தளத்தின் எழுத்துப் போக்கிலும் எனக்கு உடன்பாடில்லை…(சில வேளைகளில் அவர்களது கோட்பாட்டுப் பார்வையிலும்)….ஆனால் அத்தோழர்களின் களப்பணி மரியாதைக்குறியது….மதிப்பு மிக்கது…பெரும்பாலும் முக்கியத்துவம் வாய்ந்தது என்கிற வகையில் நான் மௌனம் காக்கிறேன்….அவர்கள் என்னுடைய கேள்விகளை சரியாக புரிந்து கொள்ளாமல், வழக்கம் போல தங்களது எழுத்து புரட்சியை முன்வைத்து என்னைக் கிண்டலடித்து எழுதியிருக்கும் தற்போதைய பதிவிற்கும்…(எதிர்காலத்தில் எவரும் எழுதவிருக்கும் பதிவிற்கும்)  கூட நான் எதிர்வினையாற்ற விரும்பவில்லை….

அவ்வளவே...



Related Links:


http://saavinudhadugal.blogspot.in/2011/03/blog-post_19.html -

மார்க்சிய முத்திரையும், இணைய அவதூறுகளும், பெண்ணியச் சிந்தனையும்.


பெண்ணியம் – ஓர் உரையாடலுக்கான தொடக்கம். (1)