Nov 28, 2018

தேசிய இயக்கத்தின் போது கம்யூனிஸ்ட் நீரோட்டம்




கம்யூனிஸ்ட் கட்சியானது தேசிய இயக்கத்தின் மற்றுமொரு மைய நீரோட்டமாகும்.  அதனால் சாதியப் பிரச்சினை பற்றிய அதன் நிலைப்பாடும், செயல்போக்கும் அறிந்துகொள்வது முக்கியமானது. இதை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், இந்திய தேசிய இயக்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை பாத்திரம் வகிக்க முடியாமல் போனதற்கும், மக்கள் ஜனநாயகப் புரட்சியை செயல்படுத்த முடியாமல் போனதற்குமான பலவீனத்தை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். தொடக்கம் முதலே (வரலாற்று வளர்ச்சியில் உள்ளார்ந்த வகையில் இருந்த புறவயக் காரணங்களை நாம் மேலே பார்த்தோம்) கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சித்தாந்த அடிப்படை பலவீனமாகவே இருந்தது, அது தொடரவும் செய்தது. 1920இல் டாஷ்கெண்ட்டில் கம்யூனிஸ்ட் பார்ட்டி நிறுவப்பட்டு அறிவிக்கப்பட்டது. மிகவும் தளர்ந்த அமைப்பாக அனைத்திந்தியக் கம்யூனிஸ்ட் மாநாடும் 1925இல் நடந்தது. ஆனால், அதற்குப் பிறகும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்த கம்யூனிஸ்ட் குழுக்களை ஒரே தலைமையின் கீழ் இணைக்க முடியவில்லை. அந்நாளைய மந்தத் தலைமையானது, நிலவும் சூழ்நிலைகளை ஆராய்ந்து ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு செயல்திட்டங்களை தீட்டி புரட்சிகர பாதையை வகுப்பதற்குப் பதில், கம்யூனிஸ்ட் அகிலத்தின் முக்கிய இதழானஇம்ப்ரெகோர்இல் வெளியாகி வந்த இந்தியா தொடர்பான கட்டுரைகளின் அடிப்படையில், சோவியத் கட்சியின் கடிதங்களில், பிரிட்டிஷ் கட்சியின் ரஜினிபாமிதத்தின் கட்டுரைகளில் இருந்து முடிவுகளையும், நடவடிக்கைகளையும் பெரும்பாலும் எடுத்தது.

1933இல் கம்யூனிஸ்ட் அகிலம் மற்றும் சீனா, பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் கட்சிகளின் ஆலோசனையின் பேரில், முதன்முதலில் லெனினிய அமைப்பு வடிவம் தயாரிப்பதற்காக தற்காலிக மையக் கமிட்டி ஒன்று தோற்றுவிக்கப்பட்டது. இதற்குப் பிறகும் கூட, 10 வருடம் கழித்து, அதாவது 1943இல்தான் கட்சியின் முதல் காங்கிரஸ் நடந்தது. துயரம் என்னவெனில், அப்போதும்கூட கட்சியிடம் புரட்சிகர செயல்திட்டமோ அல்லது விவசாய செயல்திட்டமோ இருக்கவில்லை. 1951இல், ஸ்டாலினுடனும், மாஸ்கோவின் சோவியத் கட்சியின் பிரதிநிதிகளுடனுமான கலந்தாலோசனைக்குப் பின் கம்யூனிஸ்ட் தலைமையானது ஒரு கொள்கை அறிக்கையையும், ஆவணத்தையும் வெளியிட்டது. 1951இல் அனைத்திந்திய கட்சி காங்கிரசிலும் 1953இன் மூன்றாம் காங்கிரசிலும் அது நிறைவேற்றப்பட்டது. பாதை மற்றும் புரட்சிக்கான பொது நோக்குநிலை ஆகியவை அடிப்படையில் சரியாக இருந்தாலும், இந்திய முதலாளித்துவ வர்க்கம், அரசு மற்றும் விவசாய உறவுகளில் நிகழ்ந்த மாற்றம் மற்றும் சமூக வளர்ச்சி பற்றிய நோக்கு நிலை ஆகியவை யதார்தத்தோடு ஒத்துபோகவில்லை. பின்னர் அது மெய்ப்பிக்கப்பட்டது. எதுவாகினும், அந்த செயல்திட்டத்தை இப்போது நாம் அலமாரியில்தான் வைக்க வேண்டும். ஏனென்றால், தெலுங்கானா போராட்டம் முறியடிக்கப்பட்ட பின்னர், கட்சியானது இப்போது முழுவதும் திருத்தல்வாதத்திற்கு மாறி, வெளிப்படையான பாராளுமன்ற கட்சியுமாகிவிட்டது. 1956இல் குருச்சேவிய திருத்தல்வாதத்தின் சர்வதேசிய சான்றிதழையும் பெற்றது. இந்த சித்தாந்த பலவீனத்தால்தான் கட்சியானது தேசிய இயக்கத்தின் போது மீண்டும் மீண்டும் சாதகமான சந்தர்ப்பங்களை நழுவவிட்டு, காந்தி மற்றும் நேருவின் காங்கிரசிடமிருந்து தேசிய போராட்ட தலைமையைக் கைப்பற்றத் தவறியது.

1920இன் தசாப்தத்தில், காந்தி தான் இழந்த நற்பெயரை மீண்டும் பெற முயற்சிக்கையில், சட்டமன்ற ஸ்வ்ராஜியக் கட்சியின் சமரசப் போக்கு அம்பலப்படுத்தப்பட்டபோது, தொழிலாளர்கள் மற்றும் விவசாயக் கட்சிகள் நிறுவி, அதனைப் பரவலாக்கம் செய்வதற்கான காலமாக இருந்தபோது, கட்சியானது நிலைமை பற்றிய சரியான புரிதலற்று, அதனைச் சாதகமாக்கிக் கொள்ளும் தெளிவற்று ஒழுங்கமைக்கப்படாமல் இருந்தது. காந்தி இர்வின் ஒப்பந்தத்திற்கு எதிராகவும், அதனைத் தொடர்ந்த 1935இன் இந்திய அரசாங்க சட்டத்திற்கு எதிராகவோ தேசிய அளவிலான விழிப்புணர்வையோ, மாபெரும் அணிதிரட்டலையோ மேற்கொள்ள முடியாமல் போனதற்கு இந்த அமைப்புசார் பலவீனமே காரணமாகும். அதனைத் தொடர்ந்து, பி.சி. ஜோஷியின் காலத்தில் கட்சியில் நடந்த வலதுசாரி விலகலினால், இயக்கத்தை தம் கையில் எடுத்துக்கொள்வதற்கான பல சந்தர்ப்பங்களை நழுவவிட்டது. ஐக்கிய முன்னணி தொடர்பாக இயங்கியல் கொள்கை இல்லாதபட்சத்தில், பூர்ஷுவா தேசியத் தலைமை நோக்கிய ஒரு சமரச அணுகுமுறை இயல்பானதே. காங்கிரசு மற்றும் லீகின் மாகாண அரசாங்கங்கள் மக்கள் மத்தியில் பரவலான நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி வந்தபோது, வெகுஜன இயக்கத்தை ஒருங்கிணைத்து அனைத்தையும் கையிலெடுப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியிருக்கலாம். ஆனால் அது அப்படி நடக்கவில்லை.

1946 முதல் 1950 வரையிலான மாறும் காலகட்டத்தில் ஒருபுறம் தேசியளவிலான தொழிலாளர்கள் வேலை நிறுத்தம், கடற்படை கலகம், இராணுவம் மற்றும் விமானப் படை ஆகியவற்றில் கிளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியபோது, மிகவும் முக்கியமாக தெலுங்கானா, தெபாகா மற்றும் புனப்பரா-வயலாரின் மாபெரும் விவசாயப் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கையில், மறுபுறம் இந்தியப் பூர்ஷுவா கட்சிகள், காங்கிரசு மற்றும் லீக் கட்சிகள் அதிகார மாற்றத்திற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது, வெறும் 11% மேட்டுக்குடிகள் கூடி அரசமைப்பு சட்டத்தை இயற்றிக்கொண்டிருந்தன என்பது துரதிர்ஷ்டவசமானதே. இந்தியாவின் மற்ற பகுதிகளிலும், சிறு மற்றும் பெரு விவசாயக் கலகங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தன. அப்போது மட்டும் உண்மையான பொருளில் ஒழுங்கமைக்கப்பட்ட லெனினிய கட்சி இருந்திருக்குமேயானால், நாட்டின் வரலாறு வேறு மாதிரி இருந்திருக்கும். ஆனால், இதே காலகட்டத்தில்தான் ரணதிவே ஒருபுறம்இடதுசாகசப் போக்கை நடைமுறைப் படுத்திக்கொண்டும், மறுபுறத்தில், ஜனநாயகப் புரட்சி மற்றும் சோஷலிசப் புரட்சிக் கட்டங்களை இணைப்பதற்காக யுகோஸ்லாவியாவின் திருத்தல்வாதி கார்தெல்ஸின் சிந்தனைகளை உருவி காற்றில் கோட்டைக் கட்டி வந்தார்.

பம்பாயில் டாங்கே குழுவோ பொருளாதாரவாதம் எனும் சகதியில் மூழ்கிப் போயிருந்தது. ஆந்திரக் கட்சி கமிட்டி ஓரளவுக்கு சரியானப் பாதையில் சென்றுகொண்டிருந்தது, சீனத்தைப் போலவே மக்கள் யுத்தக் கட்சியை நாடு முழுவதும் பரவலாக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது.  ஆனால் மையத் தலைமையோஆந்திர ஆய்வறிக்கையைநிராகரித்தது. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் இந்த அனைத்துப் போராட்டங்களிலும் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் தங்களின் தீரச்செயல்களாலும், தியாகத்தாலும் முன்னணியில் இருந்தனர். ஆனால், புள்ளிகளை இணைத்து நாடு தழுவிய போராட்டமாக இதனை மாற்றக்கூடிய தலைமை இல்லாமல் போனது. இறுதியில், தனித்தனியானப் போராட்டங்கள் ஒன்று, சிதறடிக்கப்பட்டது அல்லது நசுக்கப்பட்டது.  இராணுவத்தை அனுப்பிக் கொடூரமான முறையில் நேரு தெலுங்கானா விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்கினார்.

கம்யூனிஸ்ட் இயக்கங்கள் சாதியப் பிரச்சினையை புறக்கணிக்கின்றன (சில நேரங்களில் சாதிய அடிப்படையில் பாரபட்சம் கொண்டவர்கள் என்றும் சொல்லி) என்று பல்வேறு தலித் அறிவுஜீவிகள் குற்றம் சாட்டுகின்றனர். புதுப் பணக்கார மார்க்சியர்கள் சிலரிடமும் இது போன்ற சிந்தனை முறையைக் காண முடிகிறது. இதை வழிமொழியும் சில கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களும், மார்க்சியத்திற்கும், அம்பேத்கரியத்திற்கும் இடையிலான இணைப்பு என்று சொல்லி எந்தவிதமான விரிவான ஆய்வுகளையும் முன்வைக்காமல் பேசிவருகின்றனர். இதன் மூலம் தங்களின் கடந்தகால பாவங்களை கழுவிவிட முடியும், தலித்துகளின் மனதை வென்றுவிட முடியும் என்று கருதுவதுபோல் தோன்றுகிறது.  ஒருவகையில், இது தோல்வி மனப்பான்மை அல்லது ஜனரஞ்சகவாதம் (பாப்புலிசம்). கம்யூனிஸ்ட் கட்சியானது, சரியான கோட்பாட்டுருவாக்கப் பணியை செய்து, இந்திய சமூகம் பற்றியும், புரட்சி தொடர்பான மற்ற பிரச்சினைகள் குறித்தும் கொள்கைகளை, யுத்திகளை முறையாக வகுத்து, சாதியப் பிரச்சினையை மற்றும் புறக்கணித்துவிட்டது என்று சொல்ல முடியாது.

1951 வரை இந்திய புரட்சி குறித்தும் விவசாய வேலைத் திட்டத்திற்குமே கட்சியிடம் சரியானதொரு ஆவணமோ, தெளிவான பாதையோ இல்லாதபோது, சாதியப் பிரச்சினை பற்றி மட்டும் தெளிவான ஆவணமும், பாதையும் எப்படி இருந்திருக்க முடியும்? ஆகவே, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பலவீனம் என்பது இந்திய புரட்சிக்கான வேலைத்திட்டம் தொடர்பான பெரிய பலவீனத்தோடு தொடர்புடையது. இருப்பினும், 1930இல் கட்சி முன் வைத்தகூட்டு நடவடிக்கைக்கான ஒன்றுபட்ட முன்னணிஎனும் ஆவணத்தை முன்வைத்தபோது, சாதியமைப்பு மற்றும் தீண்டாமை குறித்து விரிவாகவே விவாதித்திருந்தது. நிலபிரபுத்துவம் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களோடு சாதி எதிர்ப்பு போராட்டத்தையும் இணைத்து, “தீண்டப்படாதஉழைக்கும் மக்களை நோக்கி அறைகூவல் விடுத்தது. அவர்களை சாதிய அடிப்படையில் பிளவுபடுத்த முனையும் சதிகளிலிருந்து விலகியிருந்து, நாடு முழுவதும் தொழிலாளர்களுடன் ஒன்றிணைந்து நிலப்பிரபுத்துவத்திற்கும், காலனியத்திற்கும் எதிராகப் போராடும்படி அறிவுறுத்தியது.

அதேவேளை, சாதியமைப்பு மற்றும் சாதியடிப்படையிலான அனைத்து வகையான ஏற்றத்தாழ்வுக்கும் எதிராக போராடுவோம் என்றும் அறிவித்தது. மீண்டும் இதே பிரச்சினை, 1948இல் கட்சியின் இரண்டாம் காங்கிரசில் அரசியல் ஆய்வறிக்கை பற்றிய விவாதத்தில் எழுப்பப்பட்டு, தீண்டாமைப் பிரச்சினை தொடர்பாக ஐந்து பத்திகள் இடம்பெற்றிருக்கிறது. ‘மேல்சாதி பூர்ஷுவா வர்க்கத்திற்கு எதிராக சமரசமற்ற போராட்டங்களைத் தொடுப்பதோடு, சுரண்டும் வர்க்கத்திற்கு ஆதரவாக நின்று சாதியரீதியாகப் பிளவுபடுத்தி, தீண்டப்படாதவர்களை பிரிக்க முயலும் சந்தர்ப்பவாத, பிரிவினைவாத தலைவர்களுக்கு எதிராகவும் அம்மக்கள் போராட வேண்டும் என்று தீண்டப்படாதவர்களை நோக்கி கோரிக்கை வைத்தது. தெளிவாக, காங்கிரசு தலித் தலைவர்கள் மற்றும் பெரியார் மட்டுமின்றி, முக்கியமாக அம்பேத்கர்தான் இங்கு மறைமுகமாகக் குறிப்பிடப்படுகிறார். கம்யூனிஸ்ட் கட்சியானது தீண்டாமையை எதிர்த்து போராடுவது குறித்து பேசும்போது சாதியொழிப்பிற்கு எந்த செயல் திட்டங்களையும் வழங்காமல், சாதியரீதியான பாரபட்சங்களையும் உருவாக்கியது என்றும் அம்பேத்கரை சந்தர்ப்பவாதி, பிரிவினைவாதி என்று கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிட்டது குறித்தும் சுபாஷ் கடாடேவும் மற்றும் பலரும் வருத்தப்படுகின்றனர். கம்யூனிஸ்ட் கட்சியானது சாதி ஒழிப்பிற்கு உறுதியான ஒரு வேலைத்திட்டத்தை வழங்கவில்லை என்பது ஒரு தனிப்பிரச்சினை. அம்பேத்கரும் சாதி ஒழிப்பிற்கு எந்த வேலைத்திட்டத்தையும் வழங்கவில்லை. அதை நாம் பின்னர் விவாதிப்போம். ஆனால், அன்றைய யதார்த்த நிலை மீது எப்படி ஒருவர் பாரா முகம் காட்ட முடியும்? காங்கிரசின்மேல்சாதி தலைமையை எதிர்க்கையில், டாக்டர். அம்பேத்கர் அவர்கள் மேல்சாதி ஜமீன்தார்களுக்கு எதிரான கோரிக்கைகளை முன்வைத்து தலித்துகளை ஒருங்கிணைக்கவில்லை, அவர்களது புரவலர்களான பிரிட்டிஷாருக்கு எதிராகவும் அக்கோரிக்கைகளின் அடிப்படையில் அணிதிரட்டவில்லை. காலனிய எதிர்ப்பு போராட்டத்திலிருந்து அம்பேத்கர் விலகியே இருந்தார், சுதந்திர போராட்ட எதிர்ப்பைத் தொடர்ந்து வந்தார். பின்னர், 11 சதவிகித மேட்டுக்குடிகளை பிரதிநிதித்துவப்படுத்திய சட்டமன்றத்தில், லீகின் ஆதரவுடன் இடம்பெற்று அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கினார். நேரு அரசாங்கமானது தெலுங்கானாவில் காட்டுமிராண்டித்தனமாக விவசாயிகளையும் தொழிலாளர்களையும் ஒடுக்கியும், கொன்று குவித்தும் வந்தபோது அம்பேத்கர் காங்கிரசுக்கு நன்றிகளை தாராளமாக வாரி வழங்கிக்கொண்டிருந்தார் (அவரது சட்டமன்ற உரைகளைக் காணவும்).

அவருடைய பாத்திரத்தை முழுமையாக ஆய்வு செய்வோம், ஆனால் 1948இல் அவருடைய இந்த செயல்பாடுகளை சந்தர்ப்பவாதம், பிரிவினைவாதம் என்று சொல்லாமல் வேறெப்படி சொல்ல முடியும்? தலித்துகள் செய்திருக்க வேண்டியது என்னவெனில், உண்மைக்கு மூலாம் பூசி அம்பேத்கரை தழுவிக்கொள்வதல்ல, ஜனநாயகப் புரட்சிக்குள்ளாகவே தீண்டாமை மற்றும் சாதி ஒழிப்புக்கான உறுதியான தொடர் போராட்ட வேலைத் திட்டங்களை வகுத்திருக்க வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சி இதைச் செய்யத் தவறியதென்பது மாபெரும் குறைபாடுதான். அதேவேளை, ஏஐடியுசியும் தீண்டாமை மற்றும் சாதியப் பாகுபாட்டை ஒரு பிரிச்சினையாக தனது நான்கு-ஐந்து-ஆறாம் காங்கிரசில் குறிப்பிட்டு, பின்னர்தொழிலாளர்களுக்கான உரிமை ஆவணத்திலும்சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது. கிசான் சபையின் மையக் கவுன்சிலும் தீண்டாமை எதிர்ப்பை தனது 1945இன் உரிமை ஆவணத்தில் குறிப்பிட்டது. இதையெல்லாம் நாம் முற்றிலுமாக புறக்கணித்துவிட முடியாது. அதேபோல், இடைவெளியையும், பலவீனத்தையும் மறுத்துவிடவும் முடியாது.

ஜனநாயகப் புரட்சியின்போது, சாதியமைப்பின் தோற்றம் பற்றிய சமூக அடித்தளங்கள், காலனிய சகாப்தம் வரையிலான சாதியமைப்பின் இறுப்பின் தன்மை மற்றும் சாதி, வர்க்கம் இரண்டுக்கும் இடையிலான இணையுறவை பற்றிய மார்க்சிய ஆய்வை மேற்கொண்டபோது சாதியப் பிரச்சினை குறித்த உறுதியான வரைவு உத்தியை வழங்காமல் போனது; சாதி அடிப்படையிலான சமூகப் பிரிவினைகள் மற்றும் பாகுபாடு கலாச்சாரத்திற்கு எதிரான நிலையான, பரவலான, முறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தை வழங்கவில்லை. அதுகூட போகட்டும், பாட்டாளி வர்க்க அரசு நிறுவப்பட்ட பின்னர் முழுமையான சாதி ஒழிப்புக்கான நடைமுறை அல்லது பொது நோக்குநிலை என்னவாக இருக்கும் என்றுகூட முன்வைக்கவில்லை! இந்த பலவீனமானது தனித்ததொரு பிரச்சினையல்ல; 1947க்குப் பிறகு நான்காண்டுகள் வரை கருத்தியல் பலவீனத்தால் புரட்சிக்கான எந்தவொரு செயல்திட்டமும் இல்லாமல் போன பலவீனத்தினால் நிகழ்ந்தது.

ஆனால், நாணயத்தின் இருபக்கத்தையும் காணாமல் போனால் நாம் வரலாற்றுக்குத் துரோகம் இழைப்பதாகிவிடும். கருத்தியல் மற்றும் பாதை சார்ந்து பலவீனங்கள் இருப்பினும், தங்களுக்கு செல்வாக்கு இருந்த பகுதிகளில் எல்லாம் தலித்துகளுக்கு எதிரான ஒடுக்குமுறை மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராக கம்யூனிஸ்டுகள் துணிவுடன் போராடினார்கள். அவர்களைக் காட்டிலும் வேறு எவரும் அப்பணியை மேலாகச் செய்திடவில்லை. சொல்லப் போனால், மேல் சாதி நிலவுடைமையாளர்கள் இகழ்ச்சியுடன்சம்மார்கள் மற்றும் தூஷத்துகளின் கட்சி” (தமிழ்நாட்டு சூழலில் பள்ளர், பறையர் கட்சி-மொ.ர்) என்றே கூறிவந்தனர். கிராமங்களில் பெரும்பாலும் தலித்துகளாக இருந்த நிலமற்ற உழைப்பாளர்கள் மத்தியில்தான் கம்யூனிஸ்டுகளின் பிரதான களம் இருந்தது. விவசாய சபைகளில், குத்தகை விவசாயிகள் பெரும்பாலும் கம்யூனிஸ்டுகளுடன்தான் செல்வார்கள், ஏனென்றால் அவர்கள்தான் தங்களது கோரிக்கைகளை போர்க்குணத்துடன் முன்வைப்பார்கள் என்று கருதினார்கள். (நிலப்பிரபுத்துவ விவசாயிகளிடம் காங்கிரசுக்கு அதிக செல்வாக்கு இருந்தபோதிலும்).  ஆனால், அந்தக் குத்தகைதாரர்களும்கூட கம்யூனிஸ்டுகள் தலித்துகளின் தோழமை அமைப்பு என்றே கருதினர்.

நாடு முழுவதிலும், தலித்துகளுக்கு எதிரான பாகுபாடு அல்லது ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நூற்றுக்கணக்கான இடங்களில் கம்யூனிஸ்ட் ஒருங்கமைப்பாளர்கள் இயக்கங்களை முன்னெடுத்தனர். 1952-72* வரை, முழுநேர புரட்சியாளர்களின் மரபும், செயல்பாடும் அதன் உண்மையான பொருளில் இருந்தது.  மேல்சாதியைச் சேர்ந்தவர்களும் தலித்துகளின் குடியிருப்பில்தான் வசித்து வந்தனர். திருத்தல்வாத சகாப்தத்திலும் இந்த மரபு சிறிது காலம் தொடர்ந்தது. தெலுங்கானா விவசாயப் போராட்டத்திற்கான ஆயத்த வேலைகள் ஆந்திர மஹாசபாவில் நடந்தபோது, மற்ற சமூகத் தீமைகளுக்கு எதிராக கம்யூனிஸ்டுகள் சாதிய பாகுபாடு, தீண்டாமை, மத மூட நம்பிக்கைகள் மற்றும் பெண் ஒடுக்குமுறை ஆகியவற்றிற்கு எதிராகவும் குரல் கொடுத்தார்கள். சக்தி வாய்ந்த சமூக இயக்கங்களின் வழி வர்க்க ஒற்றுமையைப் பலப்படுத்தினார்கள். ஆகவே, கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு எதிராக பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டுகளை அள்ளித் தெளிப்பதற்கு பதில், பிரச்சினைக்கான ஆணி வேரை ஆய்வு செய்வதே அவசியம். கம்யூனிஸ்ட் இயக்கங்களின் கருத்தியல் பலவீனப் பிரச்சினை என்றுதான் அதனைப் பார்க்க வேண்டும்.

* நூலில் தவறாக 1952-52 என்று அச்சாகியுள்ளது. புரட்சிகர கம்யூனிஸ்ட் போராட்ட வரலாற்றை குறிப்பதால் அது 1952-1972ஆக இருக்க வேண்டும் என எண்ணுகிறேன்.

(சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்: தொடரும் விவாதம், நூலிலிருந்து... சுயவிமர்சனத்திற்கு கம்யூனிஸ்டுகள் எப்போதும் தயாராகவே இருக்கிறோம்... தலித்திய அறிவுஜீவிகள்... ஆதரவாளர்களிடமும் இதே நேர்மையை எதிர்பார்க்கிறோம்)  

Nov 9, 2018

‘பொருளாதார நிர்ணயவாதம்’ என்றால் என்ன?




 பொருளாதார நிர்ணயவாதம்என்றால் என்ன?
- ரங்கநாயகம்மா
தமிழில் கொற்றவை, சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்: தொடரும் விவாதம் நூலிலிருந்து.

            மார்க்சிய எதிர்ப்பாளர்கள்மார்க்சியம் ஒரு பொருளாதார நிர்ணயவாதம்என்கிறார்கள். மார்க்சிய ஆதரவாளர்களுக்கும் மார்க்சியம் குறித்து சில ஐயங்களும், சில வேற்றுமை கருத்துகளும் இருக்கின்றன.

            மார்க்சிய எதிர்ப்பாளர்களோ அல்லது பகுதி-ஆதரவாளர்களோ அல்லது பகுதி-எதிர்ப்பாளர்களோபொருளாதாரம்என்றால் என்ன என்றோபொருளாதார நிர்ணயவாதம்என்றால் என்னவென்றோ கேள்வி எழுப்புவதில்லை.  ஒவ்வொருவரும் சொந்தமாக ஏதோ விளக்கங்கள் கொடுக்கின்றார்கள். எல்லோரும் மார்க்சியம் குறித்துப் பேசுவதால், நம்முடைய விவாதத்திற்கு உடனடியாகத் தொடர்புடைய மார்க்சியத்தின் சில அம்சங்களை நாம் முதலில் விவாதிப்போம். பின்னர் எதிர்கருத்துகளை ஆய்வு செய்வோம்.

மார்க்ஸின் வரையறைப்படிபொருளாதாரம்என்றால் என்ன?

இதன் மூலம் நான் உருவாக்கிய பொதுவான முடிவை - இந்த முடிவுக்கு வந்தவுடன் அதுவே என்னுடைய ஆராய்ச்சிகளுக்கு வழிகாட்டும் கொள்கையாக மாறியது - பின்வருமாறு சுருக்கிச் சொல்லலாம். மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கைக்காக ஈடுபடும்  சமூக உற்பத்தியில் திட்டவட்டமான உறவுகளில் தவிர்க்க முடியாத வகையில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் அவர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து நிற்பவையாகும், அதாவது அவர்களுடைய உற்பத்தியின் பொருளாயத சக்திகளில் வளர்ச்சியில் அந்தக் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகளாகும். இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம், அரசியல் என்ற மேற்கட்டமைப்பு எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன. பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுத்துறை வாழ்வின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது. மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது. [அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்புமுன்னுரை, மார்க்ஸ் எங்கல்ஸ் தேர்வு நூல்கள்தொகுதி 4, பக்.207]

மார்க்ஸின்  மேற்சொன்ன அந்த விளக்கத்தை வைத்து  நாம்பொருளாதார அமைப்புஎனும் பதத்தை கவனிக்க வேண்டும். ’உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தம்என்பதை  உண்மை அடித்தளம்என்று குறிப்பிட்டு அவர் அதைபொருளாதார அமைப்பின்அடித்தளம் என்கிறார். வேறு சொற்களில் சொல்வதானால் பொருளாதார அமைப்பு (பொருளாதாரம்) என்பதே சமூகத்தின் அடித்தளம். பொருளாதாரம் என்றால்பணம்இல்லை. உற்பத்தி உறவுகளே பொருளாதார உறவுகளாகும். பணம் இல்லாத புராதனக் காலத்தில் கூட பொருளாதார உறவுகள் (உற்பத்தி உறவுகள்) நிலவின. ‘பணத்தின்இருப்பு இன்றி உருவாகப்போகும் கம்யூனிச சமூகத்திலும் பொருளாதார உறவுகள் இருக்கும். உற்பத்தி உறவுகளே சமூகத்தின் அடித்தளத்தை நிர்ணயிக்கிறது, மற்ற மேற்கட்டுமானங்கள் அந்த அடித்தளத்திற்கு ஏற்ற வகையில் உருவாகிறது. இதுவே அவர் கண்டடைந்தபொதுவான முடிவு’ - அவரதுஆய்விற்கு’ ’வழிகாட்டும் கொள்கையாகஅமைந்த முடிவும் இதுவே.
இப்போது நாம் எங்க்லஸின் வரையறைப்படிபொருளாதாரம்என்றால் என்னவென்று பார்ப்போம்.  (1894 இல் எங்கல்ஸ் இதை எழுதினார். இந்தக் கட்டுரையில் பின்னர் நாம் பார்க்கப்போகும் தகவல்களுக்கு தொடர்புடையது இந்த தேதி)

சமூக வரலாற்றை நிர்ணயிக்கின்ற அடிப்படை என்று நாங்கள் கருதுகின்ற பொருளாதார உறவுகளை, ஒரு குறிப்பிட்ட சமூகத்திலுள்ள மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கைச் சாதனங்களை உற்பத்தி செய்து தமக்கு இடையில் உற்பத்திப் பொருள்களைப் பரிவர்த்தனை செய்கின்ற (அங்கே உழைப்புப் பிரிவினை இருக்கிறது என்ற அளவில்) வழி மற்றும் முறை என்று நாங்கள் புரிந்து கொள்கிறோம்”.

பொருளாதார நிலைமைகள் முடிவில் வரலாற்று வளர்ச்சியைத் தகவமைக்கின்றன என்று நாங்கள் கருதுகிறோம்”.

இந்த மெய்யான உறவுகளில் பொருளாதார உறவுகள் (இவற்றின் மீது மற்ற உறவுகள்-அரசியல் மற்றும் சிந்தாந்த உறவுகள்-எவ்வளவு அதிகமாகத் தாக்கம் செலுத்தினாலும்) முடிவில் இன்னும் தீர்மானகரமான உறவுகளாக இருக்கின்றன; அவை சமூக வளர்ச்சி முழுவதும் இழயோடியிருக்கின்றன; அவை மட்டுமே இவ்வளர்ச்சியைப் புரிந்து கொள்ள இட்டுச் செல்கின்றன” [பி. எங்கல்ஸ், பிரெஸ்லாவிலிருந்து வொ. போர்கியுசுக்கு எழுதிய கடிதம், மார்க்ஸ் எங்கல்ஸ் தேர்வு நூல்கள்தொகுதி 12,பக்.239]

            பொருளாதார உறவுகள்என்பதில் மார்க்ஸும் எங்கல்ஸும்உறுபத்தி உறவுகளையேகுறிக்கிறார்கள். ஒரு சமூகத்தில் பல்வேறு மட்டங்கள் வெவ்வேறு விதமான செல்வாக்கைக் கொண்டிருக்கும், ஆனால்,  ஒட்டுமொத்தமாக அம்மட்டங்கள்  அனைத்தும் அடித்தளத்தின் செல்வாக்குக்கு உட்பட்டே செயல்படும். மார்க்ஸ் மற்றும் எங்கல்ஸின் ஆய்வுகளின் சாரம் இதுவே. ஒரு சமூகத்தின் அடித்தளத்தை உருவாக்கும் உற்பத்தி உறவுகள் உழைப்புச் சுரண்டலைக் கொண்டதாக இருந்தால், அந்த சமூகத்தின் அரசியல், அத்தகைய சுரண்டல்வாத உறவுகளை எதிர்ப்பதற்கு மாறாக நிலைத்திருக்கவே செய்யும். அந்த அரசு (=அரசாங்கம்) உருவாக்கும் சட்டங்களும் சுரண்டலை நிலைத்திருக்கச் செய்யுமே அல்லாது, சுரண்டலை எதிர்க்காது. அத்தகையதொரு சுரண்டல் நிறைந்த சமூகத்தில் மதமானது தொழிலாளர் வர்க்கத்தை ஒரு அறியாமையில் ஆழ்த்தியிருக்குமே ஒழிய, தர்க்கத்தை போதிக்காது. அத்தகையதொரு சமூகத்தில், கல்வி, கலை மற்றும் இதர துறைகள் அனைத்தும் மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வை போற்றி வளர்க்கும், அத்தகைய குணங்களையே போதிக்கும். ஆண் பெண் உறவு மற்றும் இதர பண்பாடுகள் அனைத்தும் சுரண்டல்வாத பண்பாட்டை கட்டிக்காக்கும். சமூகத்தின் எந்த மட்டம் எந்த மட்டத்தின் மீது தாக்கம் செலுத்தினாலும் சரி; அனைத்து மட்டங்களும் சுரண்டல்வாத உறவுகளுக்கு பொருந்தும் வகையிலேயே இருக்கும், அந்த எல்லைக்குட்பட்டே செயல்படும்.

            அடிப்படை உறவுகள் உழைப்புச் சுரண்டலில் இருந்து விடுபட்டதாக  நாம் கற்பனை செய்வோமாயின், பிறகு அரசியல், கல்வி, கலை, பண்பாடு ஆகியவை பழைய முறைக்கு எதிராக மாற வேண்டும். மதம் போன்ற அம்சங்கள் முற்றிலுமாக மறைய வேண்டும். அடித்தளத்தின் இயல்புக்கு பொருந்தும் வகையில்,  மேற்கட்டுமான அம்சங்கள் உருவாகிறது, நிலைத்திருக்கிறது என்று சொல்வது தர்க்கப்பூர்வமானதே. அடித்தளத்திற்கு ஏற்றவகையில் மேற்கட்டுமான அம்சங்கள் இருப்பது இயல்பே. அடித்தளத்தின் தன்மைக்கு அப்பாற்பட்டு அந்த மேற்கட்டுமான அம்சங்கள் தனித்து இருக்கிறது, சுதந்திரமாக இருக்கிறது என்று சொல்வதே தர்க்கத்திற்கு முரணானது. அவை அடித்தளத்தின் எல்லைக்குட்பட்டே, அதன் வரையறையை விட்டு வெளியே எங்கும் நகராமலேயே தனது தன்னாட்சி அதிகாரத்தை பிரயோகிக்கிறது. மேற்கட்டுமான அம்சங்களுக்கும் தன்னாட்சியும், சுதந்திரமும் இருக்கும், ஆனால் அது ஒரு சிறிய மரத்தூணில் கட்டப்பட்ட கன்றுகுட்டியின் சுதந்திரம் போன்றது. கட்டப்பட்டிருக்கும் கயிறு அனுமதிக்கும் எல்லை வரை கன்றுகுட்டி சுதந்திரமாக அசையலாம், அதேபோல் ஒவ்வொரு மேகட்டுமான அம்சமும் அடித்தளம் அனுமதிக்கும் எல்லை வரை தன்னுடைய தன்னாட்சியைப் பிரயோகிக்கலாம்.

            ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், கடந்த காலத்தின் தாக்கங்கள் மீதமிருக்குமேயானால், கடந்த காலத்தின் அடித்தள அமைப்பின் தாக்கமே அதற்கும் காரணம். அந்த தாக்கமே பின்வரும் காலங்களில் தொடர்கிறது. அடிக்கட்டுமானம் மற்றும் மேற்கட்டுமானம் தொடர்பான மார்க்ஸ் மற்றும் எங்கல்ஸின் சிந்தனைகள் எப்போதும் மாறியதில்லை.

            உறபத்தி உறவுகளின் (அடிக்கட்டுமானத்தை உருவாக்கும்) தாக்கம் மேற்கட்டுமானத்தின் மீது இருக்குமாயின், நாம் அதனைஉற்பத்தி உறவுகளின் நிர்ணயவாதம்என்கிறோம். அந்த உற்பத்தி உறவுகளுக்குபொருளாதார உறவுகள்என்று பெயர் இருக்குமாயின், நாம் அதனைபொருளாதார உறவுகளின் நிர்ணயவாதம்என்கிறோம். அதன் சுருக்கப் பெயர்பொருளாதார நிர்ணயவாதம்’. இந்த பெயர் மீது நாம் எத்தகைய குறையும் காண வேண்டியதில்லை. எதுவாகினும், ‘பொருளாதார உறவுகள்எனும் அந்தப் பதத்தின் பொருள்விளக்கம் சரியானதாக இருக்க வேண்டும். அதாவது, ‘பொருளாதார உறவுகள்என்றால்உற்பத்தி உறவுகள்’, அதாவதுஅடிக்கட்டுமானம்என்பதன்றி வேறில்லை. மார்க்சிய எதிர்ப்பாளர்கள் உழைப்புச் சுரண்டல் எனும் உண்மையை, உண்மை என்று ஒப்புக்கொள்வதில்லை. அடிக்கட்டுமானத்திற்கும், மேற்கட்டுமானத்திற்கும் அவர்கள் எந்த வேறுபாட்டையும் காண்பதில்லை. அவர்களின் பார்வையில் பொருளாதாரம் என்றால் அதுபணம்மட்டுமே. அவர்கள்பொருளாதார உறவை’ ‘பண உறவோடுசமன் செய்து, மார்க்சியம் எப்போதும் பணக் கணக்கீட்டைக் குறித்து மட்டுமே பேசுகிறது என்கின்றனர்.  மனித நேயம், அன்பு இவை குறித்தெல்லாம் மார்க்சியத்திற்கு கவலை இல்லை என்று மார்க்சியத்தை எதிர்க்கும் அறிவுஜீவிகள் கருதுகின்றனர். மற்றொரு வகையினர், மார்க்சியத்தை ஆதரிக்கும் அறிவுஜீவிகள். உழைப்புச் சுரண்டலை ஒழிக்க வேண்டும் என்று சொல்லும் மார்க்சியக் கோட்பாட்டின் அந்த அம்சத்தை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் அடிக்கட்டுமானம்தான்  மேல் கட்டுமானத்தை தீர்மானிக்கிறது என்னும் கூற்றை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அடிக்கட்டுமானத்தின் எல்லைக்குட்படாமலேயே மேற்கட்டுமானத்திற்கு எல்லையற்ற அதிகாரம் இருப்பதாக அவர்கள் அனுமானிக்கின்றனர். அத்தகையதொரு அரை-ஆதரவாளர் மற்றும் அரை-எதிர்ப்பாளருக்கு உதாரணம் திரு. சைதுலு அவர்கள். ‘சமமான உழைப்புப் பிரிவினை மூலம் சாதி ஒழிப்புஎன்னும் ஒரு கட்டுரையில் நான் மார்க்சியத்தின் அம்சங்கள் குறித்து சுருக்கமாகப் பின்வருமாறு எழுதினேன்: ”உற்பத்தி உறவுகள், சொத்துரிமை, எஜமானர்-உழைப்பாளர் உறவுகள், உழைப்புச் சுரண்டல் மற்றும் உழைப்புப் பிரிவினைஆகிய பல்வேறு அம்சங்களைக் கொண்டது பொருளாதாரம். உற்பத்தி உறவே சமூகத்திற்கு வடிவத்தையும் உள்ளடக்கத்தையும் கொடுத்தது. உற்பத்தி உறவுகளில் ஏற்றத்தாழ்வு நிறைந்திருப்பதால், நாம் முதலில் அதில் சமத்துவத்தை அடைய வேண்டும்” (ஆந்திர ஜோதி, 10-7-2012).

என்னுடைய இந்தக் கண்ணோட்டத்தோடு திரு. சையதுலு முரண்படுகிறார். (ஹீதுவதம் [=பகுத்தறிவு], அக்டோபர் 2013). மார்க்சிய எதிர்ப்பாளர்கள் மார்க்சியம் குறித்து என்ன சொல்கிறார்களோ அதற்கு நிகராகவே மார்க்சியம் பற்றிய என்னுடைய கூற்றும் இருக்கிறது ; நானும் மார்க்சியத்தைபொருளாதார நிர்ணயவாதமாகவேகருதுகிறேன், நான் புரிந்துகொண்டதுபோல் மார்க்சியத்தைப் புரிந்து கொள்ளக்கூடாது என்பதே அவரது விமர்சனம்.

            நான் சொன்னது ஏதேனும் மார்க்சியத்திற்கு எதிராக இருக்கிறதா? மார்க்சிய எதிர்ப்பாளர்கள் பேசுவதையே நானும் பேசுகிறேனா? இல்லை, நான் அப்படிப் பேசவில்லை. உற்பத்தி உறவுகளே ஒரு சமூகத்தின் பொருளாதார அடித்தளமாகிறது, இந்த அடிக்கட்டுமானமே மற்ற மட்டங்களை நிர்ணயிக்கிறது என்று மார்க்ஸின்பொருளாதாரம்வரையறுக்கும் பொருளிலேயே நானும்பொருளாதரம்என்பதை விளக்கியிருக்கிறேன். உண்மையில், திரு. சையதுலு அவர்கள் மார்க்சியத்திற்கு ஆதரவாகப் பேசுவதாக நினைத்து அவரையறியாமல் அவர் என்னுடைய விளக்கத்தில் தவறு கண்டுபிடித்ததன் வாயிலாக, மார்க்ஸின் விளக்கங்களிலேயே அவர் தவறு கண்டுபிடித்திருக்கிறார்.

            சையதுலு மார்க்சிய எதிர்ப்பாளரல்ல  ஏனென்றால் அவர் மார்க்ஸியத்தை ஏற்றுக்கொண்டவர். ஆனால் மார்க்சியம் பற்றிய அவரது புரிதல் தவறாக உள்ளது. அவர்பொருளாதாரம்என்பதைஉற்பத்தி உறவுகள்என்று புரிந்து கொள்ளாமல்பணம்என்று புரிந்து கொண்டார். அவருடைய கட்டுரையிலிருந்து நாம் அவரது  சிந்தனைகள் சில்வற்றைப் பார்ப்போம்.

            சையதுலு:  பரிணாம வளர்ச்சியின் இறுதி கட்டத்தில் பொருளாதாரம் தோன்றியது
            இறுதி கட்டத்தில் தோன்றியதுஎன்றால் பண அமைப்பு தோன்றியது பற்றி பொருளாகிறதே ஒழிய, உற்பத்தி உறவுகளோடு பொருளாதாரத்தை ஒப்பிடுவதாகாது. அது உற்பத்தி உறவுகளாக இருந்தால், அது இடையிலோ, இறுதியிலோ தோன்றியிருக்க முடியாது. அது எப்போதுமே நிலைத்திருந்த ஒன்று.

            சையதுலு: “….. இறுதி கட்டத்தில் தோன்றிய  பொருளாதாரத்தைநாம் அடிக்கட்டுமானம்என்று அழைக்கக்கூடாது, இதனால், பொருளாதாரம் அடிக்கட்டுமானமாகாது”.

            இங்கும் பொருளாதாரம் என்றால்பணம்என்ற பொருளிலேயே அவர் குறிப்பிடுகிறார். பொருளாதாரத்தை உற்பத்தி உறவுகள் என்று கருதியிருந்தால், அவர்அது அடிக்கட்டுமானம்இல்லை என்று சொல்லியிருக்க மாட்டார். நாம் பொருளாதாரத்தைபணம்என்று புரிந்து கொண்டோமேயானால், அது சமூகத்தின் அடிக்கடுமானமாக இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றும்.

            பொருளாதார அமைப்பே உண்மையான அடித்தளம்என்று மார்க்ஸ் சொன்னபோது, அவர் பணத்தைக் குறிக்கவில்லை. அவர் உற்பத்தி உறவுகளையேக் குறிக்கிறார்.

 ‘பொருளாதாரம்பற்றிய திரு.சைதுலுவின் புரிதல் தவறானது. இந்த தவறின் காரணமாக, அவரது மற்ற வாதங்களும் தவறான போக்கிலேயே தொடர்கிறது.

            சையதுலு: “பொருளாதாரமே அடிக்கட்டுமானம் என்றும் சிந்தனைகள், கோட்பாடுகள் அந்த அடிக்கட்டுமானத்தின் மேல் உருவாகும் மேற்கட்டுமானம் என்று சொல்வதற்கு…” இந்த கண்ணோட்டத்தில் அவர் குறை கண்டுபிடிக்கிறார். அடிக்கட்டுமானத்திலிருந்துதான் மேற்கட்டுமானம் எழுகிறது என்று சொல்வது தவறு, சில கம்யூனிஸ்டுகளும், ரங்கநாயகம்மாவும் அத்தவறை செய்கிறனர் என்கிறார். மேலும், அவர்கள் விஷயங்களைஇயங்கியல் அடிப்படையில் புரிந்து கொள்ளாததால்அத்தவறை செய்கின்றனர் என்கிறார். கூடுதலாக, ‘பொருளாதாரமே அடிக்கட்டுமானம்என்று சொல்லும் தவறு மற்றும் இதர தவறுகள்இயங்கியல்பார்வை இல்லாததாலேயே நேர்கிறது என்பது அவரது வாதம். ‘அடிக்கட்டுமான-மேற்கட்டுமான உறவுகளில்தவறு கண்டுபிடிப்பது என்பது, கம்யூனிஸ்டுகளிடம் தவறு கண்டுபிடிப்பதாகாது, அது மார்க்ஸிடமே தவறு கண்டுபிடிப்பதாகும்.

            சையதுலு: ”பொருளாதாரம் அடிக்கட்டுமானம் என்று சொல்வதன் பொருள்…..” இந்த உருவாக்கத்தில் குறை கண்டுபிடித்து பின்வருமாறு சொல்கிறார்: “இதன் விளைவாகவே, அம்பேத்கரியர்களும், பெண்ணியலாளர்களும்,  மார்க்ஸியர்களுக்கு மத்தியில் உருவானார்கள்”. ‘பொருளாதார உறவுகளே அடிக்கட்டுமானத்தை அமைக்கிறதுஎனும் அந்தத் தவறான கருத்தின் காரணமாகவே இது நடந்தது என்கிறார் சையதுலு. அடிக்கட்டுமானம் மேற்கட்டுமானத்தின் மீது பலமான தாக்கத்தை செலுத்துகிறது என்று சொல்வது தவறென்றால், சில குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கு (அம்பேத்கரியர்கள், பெண்ணியலாளர்கள்) மார்க்ஸியத்திலிருந்து விலகி, தனித்து நின்று தங்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ள முயற்சிப்பது எப்படி தவறாகும்? (இப்படிச் சொல்வதால், சாதியமைப்பு ஒரு மேற்கட்டுமான பிரச்சனை என்று நான் சொல்வதாகப் பொருளில்லை, அது முற்றிலும் அடிக்கட்டுமானத்தோடு தொடர்புடையதே).

            அடிக்கட்டுமானம்மற்றும்பொருளாதார உறவுகள்என்பதில் நாம் உற்பத்தி உறவுகளைக் குறிக்கிறோம் என்றால், மார்க்சியத்தை பொருளாதார நிர்ணயவாதம் என்று சொல்வதில் தவறேதுமில்லை. ஆனால், மார்க்சியத்தை பொருளாதார நிர்ணயவாதம் என்று சொல்வோர், ‘பொருளாதார அமைப்பே உண்மையான அடித்தளம்என்னும் மார்க்சின் கருதுகோளையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதுவல்லாது, அடிக்கட்டுமானம் குறித்த மார்க்சின் கருத்தை புறக்கணித்து, தங்களுடைய சொந்த பொருளை வழங்குவோர், அடிக்கட்டுமானத்தின் தாக்கத்தை தவறான கருத்து என்றே கருதுகின்றனர். இதைத்தான் திரு. சையதுலுவும் செய்கிறார்.

            பொருளாதாரத்தை அவர் பணத்தோடு தவறாக ஒப்பிடுவதால், அதுஇறுதியில் தோன்றியதுஎன்கிறார். அவர் பொருளாதாரத்தை பணம் என்று புரிந்துகொண்டதால், கம்யூனிஸ்டுகள் பணத்தைஅடிக்கட்டுமானமாகக்கருதுவதாக அவர் தவறாகப் புரிந்து கொண்டார். அதனாலேயே அவர் பலமுறைநாம் பொருளாதாரத்தை அடிக்கட்டுமானம்என்று சொல்லக்கூடாது என்று சொல்லிவந்தார். அப்படி அவர் சொன்ன இடங்கள் பல. இந்த ஒரு உதாரணமே அதற்குப் போதுமானது.

            சமூகத்தின் ஒவ்வொரு பிரச்சினையையும் நாம் வர்க்கப் பிரச்சினையாகவே காண வேண்டும், வர்க்கத்தொடர்பின்றி எந்த பிரச்சினையும் தனித்திருப்பதில்லை என்று தனது கட்டுரையில் திரு. சையதுலு கூறுகின்றார். “எல்லா சமூகப் பிரச்சினைகளும் வர்க்கத்தின் ஒரு பகுதியேஎன்றார். இப்படி பிரச்சினைகளுக்கு சரியான காரணத்தைக் கூறிய நபர்தான், உற்பத்தி உறவுகளின் தீர்மானகரமான தாக்கத்தை மறுக்கிறார்.

            இன்றைய கம்யூனிஸ்டுகள் தவறு செய்கின்றனர் என்பது அவரது விமர்சனத்தின் ஒரு அம்சம்: அதாவது, ஒவ்வொரு பிரச்சினையையும் அவர்கள் வர்க்கப் பிரச்சினையாகக் காண்பதில்லை என்று பொருள். “தலித் மற்றும் பஹுஜன் இயக்கங்கள் வர்க்கப்பார்வையற்ற இயக்கங்கள் என்பது இன்றைய கம்யூனிஸ்டுகளின் கண்ணோட்டமாக இருக்கிறதுஎன்கிறார்.

            இங்கு திரு. சையதுலுபிரச்சினைகுறித்துப் பேசுகிறாரா இல்லைஇயக்கம்குறித்துப் பேசுகிறாரா? அவர்பிரச்சினைகுறித்துப் பேசுகிறார் என்றால், ‘ஒவ்வொரு பிரச்சினையும் வர்க்கப் பிரச்சினையால் எழுகிறதுஎன்று சொல்வது சரி. ஆனால் அவர்இயக்கம்குறித்து பேசுகிறார் என்றால், ஒரு இயக்கத்திற்கு வர்க்கப் பார்வை இருக்கலாம், இல்லாமலும் போகலாம். திரு. சையதுலு குறிக்கும்தலித் மற்றும் பஹுஜன்இயக்கங்கள் பூர்ஷுவா அரசாங்கத்தில் (அரசு) இடஒதுக்கீடு மற்றும் பதவிகளை இலக்காகக் கொண்டது. அதற்கு வர்க்கக் கண்ணோட்டம் இல்லை. அத்தகைய இயக்கங்களைவர்க்கப் பார்வையற்றஇயக்கங்கள் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது? உண்மையில், பிரச்சினைகளைத்தான் ஒருவர் வர்க்கப் பர்வையின்றி அனுகக்கூடாது. ஆனால் ஒரு சில இயக்கங்களை, அவர்கள் முன்னுடுக்கும் பாதையைப் பொருத்து, வர்க்கப் பார்வையற்ற இயக்கங்கள் என்று சொல்வதில் தவறேதுமில்லை. தலித்துகளும், பஹுஜன்களும் தங்கள் பிரச்சினைகளை வர்க்கப் பிரச்சினையாக கருதாது தவறு செய்கின்றனர் என்று திரு. சையதுலு விமர்சிக்கிறார். சையதுலுவின் விமர்சனத்திலேயே சரி என்று தோன்றும் ஒரு விமர்சனம் இதுவே.

            சையதுலுவின் வாதங்களில்வர்க்க வார்ப்பு’ (class stereotype) என்றொரு சொல்லாடலை நாம் பார்க்க முடிகிறது. அந்த சொல்லை நாம் முதலில் படிக்கும்போது, அவர் அதை ஆதரிக்கிறாரா அல்லது எதிர்க்கிறாரா என்பது புரிவதில்லை.  மேலும் கீழும் அவரது கட்டுரையை ஒரு பத்து முறை வாசித்தால் மட்டுமே அதற்கான பொருள் புரிகிறது. அவரைப் பொறுத்தவரை வர்க்க வார்ப்பு என்பது நல்ல விஷயம். வர்க்கக் கண்ணோட்டம் மற்றும் வர்க்க அர்பணிப்பு என்று பொருள்.

என்னையும் திரு. சையதுலு அதைக் கொண்டு விமர்சிக்கிறார்: அவரிடமும்வர்க்க வார்ப்புஇருக்கிறது, ஆனால் அது அரை-வேக்காடாக இருக்கிறது; போதுமான வர்க்கக் கண்ணோட்டம் அவரிடம் இல்லை. ’பொருளாதார பிரச்சினையை தீர்த்துவிட்டால் எல்லா பிரச்சினையும் தீர்ந்துவிடும்என்ற ஒரு தவறான புரிதல் அவரிடம் இருக்கிறது என்கிறார். அவருடைய பார்வையில், எனக்கு வர்க்க வார்ப்பு கண்ணோட்டம் இருக்கிறது, ஆனால் அது ஒரே ஒரு அம்சத்தோடு சுருங்கிவிடுகிறது.

            கம்யூனிஸ்டுகள் குறித்தும் அவர் இதே விமர்சனத்தை வைக்கிறார்: “பொருளாதார போராட்டமே, வர்க்கப் போராட்டம் என்று இன்றைய கம்யூனிஸ்டுகள் கருதுகின்றனர்
             பொருளாதார போராட்டம்மற்றும்வர்க்கப் போராட்டம்என்று ஒருவர் பேசுகையில், ஒரு குறிப்பிட்ட பிரச்சனை குறித்து மட்டுமே அவர்கள் பேசுகிறார்கள் என்று பொருள் இல்லை. உற்பத்தி உறவுகளில் உள்ள சுரண்டலை ஒழுக்கும் போராட்டத்தினூடே அவர்கள் பொருளாதார போராட்டத்தைப் பேசுகிறார்கள் என்றால், சுரண்டல் காரணமாக எழும் அனைத்துப் பிரச்சினைகளையும் அவர்களின் கோட்பாடு பேசுகிறது என்றே பொருள். ’பொருளாதார பிரச்சினை தீர்ந்துவிட்டால்…” என்று அவர்கள் சொன்னால், ‘சுரண்டல்வாத உழைப்புசார் உறவுகள் ஒழிக்கப்பட்டுவிட்டால்என்று பொருள்உழைப்புச் சுரண்டலை ஒழிப்பது என்றால், கடந்த காலத்தின் சுரண்டல்வாத உரிமைகளினால் விளைந்த (இன்றும் தொடர்கின்ற) அனைத்துப் பிரச்ச்னையையும் தீர்ப்பது என்று பொருள். சுரண்டலற்ற உறவுகளை அடித்தளமாகக் கொண்ட ஒரு அமைப்பை உருவாக்குவதற்கான போராட்டம் என்றால், மேற்கட்டுமானத்தில் நிலவும் அனைத்து ஏற்றத்தாழ்வுகளுக்கும் எதிராகப் போராட்டம் தொடுக்கப்படும் என்று பொருள். அதனால் அவர்கள் ஒரே ஒரு அம்சத்தை மட்டுமே காண்பதாகப் பொருளாகாது. அனைத்து அம்சங்கள், பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகளை உள்ளடக்கியதேபொருளாதார பிரச்சினை தீர்ந்துவிட்டால்என்பதின் பொருள்.

            அவர்கள் பார்வை அனைத்து அம்சங்களையும், பிரச்சினைகளையும் உள்ளடக்கியிருந்தால், சரி. நானும் அதையே சொல்கிறேன்என்று திரு. சையதுலு சொல்கிறாரா?

            இல்லை. அவரது பார்வையில், ‘பொருளாதார உறவுகள்என்றால், உற்பத்தி உறவுகளை உள்ளடக்கிய அடிக்கட்டுமானத்தைக் குறிப்பதில்லை. உழைப்புச் சுரண்டலுக்கெதிரான போராட்டம் என்றால், அனைத்து பிரச்சனைகளுக்கும் எதிரான போராட்டத்தை அது உள்ளடக்கியது எனும் கண்ணோட்டம் அவரிடம் இல்லை.

            உண்மையில் சையதுலு சொல்லவருவது என்னவென்றால், பொருளாதார பிரச்சினைக்கான தீர்வு அனைத்து பிரச்சினைகளுக்குமான தீர்வாகாது என்பதாகும்.  ஆனால் அவரேதான், ‘அடிப்படையில் அனைத்து பிரச்சினைகளும் வர்க்கப் பிரச்சினைகளே வர்க்கப் பிரச்சினைக்குமேல் எதுவுமில்லை என்றார். அனைத்தும் வர்க்கப் பிரச்சினை என்றால் பிறகெப்படி ஒரே ஒரு பிரச்சினைக்கெதிராக மட்டும் வர்க்கப் போராட்டம் தொடுப்பது? ஏற்றத்தாழ்வுக்கு பங்களிக்கும் அனைத்து உறவுகளுக்கும் எதிராகத் தொடுக்கப்பட வேண்டாமா? அனைத்துப் பிரச்சினையும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருக்க, மற்ற பிரச்சினைகளைத் தொடாமல் ஒரே ஒரு பிரச்சினையை மட்டும் ஒரு கோட்பாட்டால் சரி செய்ய முடியுமா?

            அனைத்து பிரச்சினைகளுக்கும் வர்க்கத் தொடர்பு உள்ளதென்றால், வர்க்கம் மறைந்து வர்க்கமற்ற நிலைமை தோன்றினால், வர்க்கத்தினால் உண்டாகும் அனைத்துப் பிரச்சினைகளும் மறைந்துவிடாதா? ஒருவேளை வர்க்கம் மறைந்த பின்னரும்கூட ஒருசில பிரச்சினைகள் தொடரும் எனில், அவை வர்க்கத்தினால் உண்டானதல்ல என்றுதானே பொருளாகும்!

            சொல்லப்போனால், அனைத்துப் பிரச்சினைகளையும் களைய கம்யூனிஸ்டுகள் பணிபுரிய வேண்டும் என்பது திரு. சையதுலுவின் விருப்பம். எனினும், அரைவேக்காட்டு கம்யூனிஸ்டுகளாக இல்லாமல் முழுமையான கம்யூனிஸ்டுகளாய் இருந்தால் அவர்கள் அனைத்துப் பிரச்சினைகளையும் களைய நிச்சயம் உழைப்பார்கள். அவர்களுக்கு அதுபற்றி தெரியும்.

            சையதுலுவின் பின்வரும் சொற்களைப் பாருங்கள்: “மார்க்சியத்தில் போதாமை உள்ளதா? அப்படி இல்லை என்றே கருதுகிறேன். சமூகத்தின் அனைத்துப் பிரச்சினைகளுக்கு மார்க்சியம் தீர்வு சொல்கிறது. ஒருவேளை இன்றைய மார்க்சிஸ்டுகளால் அதைச் சுட்டிக்கட்ட முடியவில்லை என்றால், எதிர்கால மார்க்சிஸ்டுகள் அதைச் சரியாக சுட்டிக்காட்டுவார்கள்

            என்னவொரு பெருந்தன்மை! மார்க்சியத்தை இவ்வளவு புரிந்துகொண்ட ஒரு மனிதர் மேற்கட்டுமானம் அடிக்கட்டுமானத்திற்குமிடையேயான தொடர்பை புரிந்துகொள்ளாதது வியப்பில்லையா!

            சையதுலு: “ரங்கநாயகம்மாவின் விளக்கங்களில் வெறும் பொருளாதார அம்சங்களே உள்ளது. அதில் பாலின ஏற்றத்தாழ்வு மற்றும் சாதிய ஏற்றத்தாழ்வு குறித்து எந்த குறிப்பும் இல்லை”.

            என் கட்டுரையில் எதெல்லாம் இல்லை என்று திரு. சையதுலு சொல்கிறாரோ அதெல்லாம் கட்டுரையில் இருக்கிறது. என்னுடைய கட்டுரையின் பெயரேசாதி ஒழிப்பு…..’ பாலின உறவுகள் குறித்தும் அக்கட்டுரையில் உள்ளது. அதனால் அதை மீண்டும் இங்கெழுதுவது அவசியமில்லை.

            அடிக்கட்டுமானம் மாறினால் சமூகத்தின் அனைத்து தளங்களும் தாமாக மாறும்என்று கம்யூனிஸ்டுகள் சொல்வதாக திரு. சையதுலு விமர்சிக்கிறார்.

            அடிக்கட்டுமானத்தில் மாற்றம் என்றால் அது உழைப்புசார் சுரண்டல் உறவுகளிலும், உழைப்புப் பிரிவினையிலும் மாற்றம் என்று பொருள். போராட்டம் இன்றி மாற்றங்கள் தாமாக நிகழ்ந்துவிடும் என்று எந்த கம்யூனிஸ்டுகளும் கூறுவதில்லை. எனினும், அடிக்கட்டுமானத்திலிருந்து விலகி நின்று எந்த ஒரு பிரச்சினையையும் தனித்து தீர்க்க முடியாது என்றே கம்யூனிஸ்டுகள் கூறுகின்றனர்.  அவர்கள் அடிக்கட்டுமானத்தை கவனத்தில் கொள்ளுங்கள் என்றே கூறுகின்றனர்.

            சையதுலுபிரச்சினைகளை இயங்கிலின் அடிப்படையில் காண வேண்டும் என்கிறார்’.  இயங்கியல்குறித்து பேசுவோர் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும்.  சமூகத்தில் அடிக்கட்டுமானமும், மேற்கட்டுமானமும் முறையே வெவ்வேறு அளவிலான தாக்கத்தை கொண்டிருக்கின்றன. அனைத்தும் ஒரே மாதிரியான தாக்கத்தை செலுத்துவதில்லை. ஒன்று கூட ஒன்று குறைய இருக்கும். ஆனால் அடிக்கட்டுமானம் கொண்டிருக்கும் தாக்கம் போன்று வேறு எதுவும் கொண்டிருப்பதில்லை, அடிக்கட்டுமானம் மேற்கட்டுமானமாகும் அதேபோல் மேல் கட்டுமானம் அடிக்கட்டுமானமாகும். இறுதியில் அதே பழைய அடிக்கட்டுமானமும், மேல் கட்டுமானமுமே மீதமிருக்கும். இல்லையேல், இரண்டும் சமமான தாக்கம் கொண்டிருப்பின்,  ஒன்று மற்றொன்றை பாதிப்பதில்லை. இரண்டும் முன்பு போலவே இருக்கும். ஒன்றைவிட மற்றொன்றுக்கு தாக்கம் அதிகமாக இருக்கும்போது மட்டுமே ஒன்று மற்றொன்றின் மீது தாக்கம் செலுத்தும். இந்த சிறிய விஷயத்தை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.    

            சமூகத்தில் பொருளாதார உறவுகள் நிர்ணய சக்திகளாக இருப்பதில்லை என்று கூறுவதற்காக எங்கல்ஸின் ஆங்கில மேற்கோள் ஒன்றை திரு. சையதுலு சுட்டிக்காட்டினார். எங்கல்ஸின் மேற்கோளுக்கு அவர் தெலுங்கு மொழிபெயர்ப்பை கொடுக்கவில்லை (தெலுங்கு இதழானது தெலுங்கு மொழியில் படிக்கும் வாசகர்களுக்காக, மேற்கோள் ஆங்கிலத்தில் இருந்தால் அவர்களுக்கு விவாதம் எப்படி புரியும்? புரியவில்லை என்றால் அந்தக் கட்டுரையைப் படிப்பதை அவர்கள் கைவிட்டுவிடுவார்கள்).

            அடிக்கட்டுமானம் மற்றும் மேற்கட்டுமான உறவுகள் குறித்து விவாதிக்கையில், மார்க்ஸும் எங்கல்ஸும், ஒரு சமூகத்தில், ஒவ்வொரு சமூக மட்டமும் மற்றொன்றின் மீது செல்வாக்கு செலுத்தும், அதேபோல் ஒவ்வொரு மட்டமும் தன்னாட்சியும் கொண்டிருக்கும், ஆனால் அனைத்து மட்டங்களும் அடிக்கட்டுமானத்தின் இயல்போடு ஒத்ததாய், துணையாய் இருக்குமே ஒழிய, அதற்கு முரணாய் செயல்படாது. அவர்கள்இறுதியாக / முடிவாகஅடிக்கட்டுமானமே மேற்கட்டுமானத்தை தீர்மானிக்கிறது என்று அழுத்தம் கொடுக்கின்றனர்.

            திரு. சையதுலு கொடுத்த மேற்கோளிலும் எங்கல்ஸ் இறுதியாக இதையே சொல்லியிருக்கிரார். ஆனால், அவர் அந்த சொற்கள் மீது கவனம் செலுத்தவில்லை, அதைக் குறிப்பிடவும் இல்லை. திரு. சையதுலு குறிப்பிடாமல் விட்ட எங்கல்ஸின் அந்த மேற்கோளில் இறுதியாக நீங்கள் இதைக் காணலாம். (மார்க்ஸ் எங்கல்ஸ் தேர்வு நூல்கள்தொகுதீ 12, பக். 208),
அரசியல், சட்டவியல், தத்துவஞானத் தத்துவங்கள், சமயக் கருத்துக்களும் வறட்டுக் கோட்பாடுகளைக் கொண்ட அமைப்புகளாக அவற்றின் கூடுதலான வளர்ச்சியும்வரலாற்றுப் போராட்டங்களின் நிகழ்வுப்போக்கின் மீது தாக்கம் செலுத்துகின்றன……”

அதனைத் தொடரும் வாக்கியங்களிலும், அதே சிந்தனையை நாம் காணலாம்.

“…… மத்தியில் முடிவில் பொருளாதார இயக்கம் இன்றியமையாததாகத் தன்னை நிறுவுகிறதுஇவற்றில் பொருளாதார நிலைமைகள், இதரவை, மனித அறிவை வட்டமிட்டுக் கொண்டிருக்கின்ற மரபுகளும் கூட ஒரு பாத்திரத்தைஅது தீர்மானகரமானதல்ல என்றாலும்வகிக்கின்றன.”

அடிக்கட்டுமானத்தின் தாக்கமேதீர்மானகரமானதுஎன்று எங்கல்ஸ் கூறியிருந்தாலும், மேற்கட்டுமான அம்சங்களும்வரலாற்றுப் போராட்டங்களின் நிகழ்வுப்போக்கின் மீது தாக்கம் செலுத்துகின்றன…” என்பதை எங்கல்ஸின் இறுதி கூற்றாக சையதுலு முன்வைக்கிறார்.

எங்கல்ஸின் மேற்கோள் (திரு. சையதுலு குறிப்பிடாமல் விட்டதோடு சேர்த்து) 1890ல் எழுதப்பட்டது. 1894ல் எங்கல்ஸ் என்ன எழுதினார் என்பதை இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் கண்டோம். எங்கல்ஸ் 1890ல் எழுதியதில் ஒரு தெளிவின்மை இருப்பதாக எடுத்துக் கொண்டாலும், “இறுதியில் பொருளாதார நிலைமைகளே வரலாற்று வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது என்று நாங்கள் (மார்க்ஸும் எங்கல்ஸும்) கருதுகிறோம் என்று 1894இல் எழுதியதில் அவர்களது முடிவு மிகவும் தெளிவாக உள்ளது.

மார்க்ஸும், எங்கல்ஸும் தங்களில் எழுத்துக்களில் முன்வைத்த அதே கோட்பாடுகளை சையதுலு புறம்தள்ளுகிறார். ‘உழைப்புப் பிரிவினைமற்றும்மதம்பற்றி மார்க்ஸும், எங்கல்ஸும் கூறியதை நாம் இங்கு பார்ப்போம்:
உழைப்புப் பிரிவினையின் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களானது, வெவ்வேறு சொத்து வடிவங்களேயாகும். அதாவது, உழைப்புப் பிரிவினையில் நிலவும் (குறிப்பிட்டமொ.ர்) கட்டமானது, மனிதர்களுக்கிடையிலான உறவுகளையும் பொருள், கருவி மற்றும் உழைப்பின் பலன் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கிறது”. (மார்க்ஸ், எங்கல்ஸ். 1845. ஜெர்மன் சித்தாந்தம், மாஸ்கோ பதிப்பு, 1976. ஆங்கிலத்தில் பக்.38)1

மனிதர்களிடம் உற்பத்தி சாதன உடைமையைப் பொறுத்தோ அல்லது உழைப்பின் பலன் அபகரிக்கப்படுவதைப் பொறுத்தோ மனித உறவுகள் அமைகின்றன.  யார் உழைக்கிறார்கள்என்னும் கேள்வியையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். [இருப்பினும், இந்த மேற்கோளில் அக்கேள்வி இல்லை]

மேலும், 1850இல் மதம் குறித்து எங்கல்ஸ் என்ன எழுதியிருக்கிறார் என்று பார்ப்போம், குறிப்பிட்ட காலகட்டத்தின் வர்க்கப் போராட்டமானது மதச்சாயலைக் கொண்டிருக்குமெனில் (மத அம்சங்களைமொ.ர்), பல்வேறு வர்க்கங்களின் நலன்கள், அவசியங்கள் மற்றும் தேவைகள் ஒரு மதத்திரையின் பின் ஒளிந்து கொண்டிருக்குமெனில், அது உண்மை நிலையை சிறிதளவே மாற்றக் கூடியது, அது அந்தக் காலச்சூழலின் நிலைமைகளைக் கொண்டே விளக்கப்பட வேண்டும்” – (எங்கல்ஸ், 1850 ஜெர்மனியில் விவசாய யுத்தம், முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, ஆங்கிலத்தில் www.marxists.org)2

மார்க்ஸும் எங்கல்ஸும் பொருளாதார உறவுகள் குறித்து (அடிக்கட்டுமானம்) விரிவாக விளக்கியுள்ளனர், சையதுலும் எங்கல்ஸின் கருதுருகளை விளக்குகையில்பொருளாதார கட்டுமானம் அடிக்கட்டுமானம் இல்லைஎன்று எங்கல்ஸ் சொன்னதுபோல் விளக்குகிறார். இவ்வாறாக, பொருளாதார அடிக்கட்டுமானத்தின் தீர்மானகரமான தாக்கத்தை அங்கீகரிக்காமல், தொடர்பற்ற வாதங்கள் மூலம் சையதுலு தனது கட்டுரையை முடித்திருக்கிறார்.

சாதி மற்றும் பாலின ஏற்றத்தாழ்வு பிரச்சினைகளை ரங்கநாயகம்மா புறக்கணிக்கிறார் என்கிறார். இதுகுறித்து நான் சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லிவிட்டேன், அது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருப்பின், அவரவர் தம் விருப்பம்போல் என்ன வேண்டுமானாலும் பேசலாம்.

இங்கு நாம் முதலுல் சாதியமைப்புக்கு தீர்வு தேடுகிறோம். உழைப்புசார் உறவுகள் மற்றும் உழைப்புப் பிரிவினையை மாற்றுவதன் மூலம் அது சாத்தியம் என்று மார்க்சியர்கள் விவாதிக்கின்றனர். அது தவறென்றால், சாதியப் பிரச்சினையை வர்க்கத்திற்கு அப்பாற்பட்ட ஒரு சுதந்திரப் பிரச்சினையாகக் காண்பார்களெனில், வர்க்கத்திற்கு தெடர்பற்ற ஒரு தீர்வைச் சொல்ல வேண்டும். உழைப்புசார் உறவுகள் மற்றும் சொத்துரிமை பற்றி குறிப்பிடாமல் அவர்கள் தங்கள் தீர்வுகளை வழங்கட்டும். சாதியப் பிரச்சினைக்கு அம்பேத்கர் சொல்லும் கலப்புத் திருமணம் ஒரு சரியான தீர்வுதான்.  இருப்பினும், கலப்புத் திருமணங்கள் தங்கு தடையின்றி நடக்க ஒரு தீர்வைச் சொல்லுங்கள்! அது சரியாக இருக்குமெனில், நாங்கள் நிச்சயம் அதை ஏற்றுக்கொள்கிறோம். எங்களுக்கு, நோயைக் குணப்படுத்தும் சரியான மருந்து வேண்டும். மறுபடியும் எங்களுக்கு நோய் வேண்டாம். எங்களுக்கு ஆரோக்கியமும், மருந்தும் வேண்டும். எங்களுக்கு அத்தகையதொரு பாதையைக் காட்டுங்கள்.
(ஹீதுவதம், ஜனவரி, 2013).

1. “The various stages of development in the division of labour are just so many different forms of property, i.e. the existing stage in the division of labour determines also the relations of individuals to one another with reference to the material, instrument and product of labour”. (Marx & Engels. 1845. The German Ideology. Moscow edition, 1976. P.38).

2. “ If the class struggles of that time appear to bear religious earmarks, if the interests, requirements and demands of the various classes hid themselves behind a religious screen, it little changes the actual situation, and is to be explained by conditions of the time”-emphasis added. (Engels, 1850. Peasant War in Germany. Progress Publishes, Moscow, page: 48 of the Telugu edition. The English translation given here is taken from the text given in www.marxists.org)