Feb 26, 2017

நெடுவாசல் போராட்டம்

புதுக்கோட்டை – #நெடுவாசல் ஹைட்ரோ கார்ப்பன் திட்டத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு நானும் வசுமித்ரவும் எங்களது ஆதரவை பதிவு செய்து கொள்கிறோம்.
வளர்ச்சியின் பெயரால் அரசாங்கமும், முதலாளித்துவ நிறுவனங்களும் இனியும் மக்களை ஏமாற்ற முடியாது என்பதனை சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்து வரும் போராட்டங்கள் உணர்த்துகின்றன.
ஹைட்ரோ கார்பன் (மீத்தேன் உள்ளிட்ட வாயு) எடுக்கும் திட்டம் எவ்வளவு தீங்கானது என்றும், 6500 அடி ஆழம் வரை தோண்டுவதால் விவசாயமும், நிலத்தடி நீரும் எப்படி பாழ்பட்டுப் போகும் என்றும் அறிஞர்கள் பேசி வருகிறார்கள். ஆனால் இதையெல்லாம் நிராகரித்து, மக்களையும், சமூக ஆர்வலர்களையும் எப்போதும் நக்சலைட்டுகள், தேச விரோதிகள் என்று முத்திரை குத்தி மக்களை அரசு கொச்சைப்படுத்துகிறது. மக்களின் அரசியல் உணர்வை, குறிப்பாக மாற்று அரசியல் சக்திகளோடு மக்கள் ஒன்றுபடுவதை கண்டு அஞ்சி அரசு (மத்திய-மாநில) பிளவுபடுத்த முனைகிறது.. ஆட்சியதிகாரத்தில் அமர்பவர்களுக்குத் தான் அறிவு பற்றாக்குரை இருக்கிறதே ஒழிய மக்களுக்கு அல்ல. குறிப்பாக விவசாயம், நீர்வளம், இயற்கை வளங்கள் குறித்த அறிவு இருப்பதால் தான் மக்கள் தம் நிலங்களையும், வளங்களையும் காக்கப் போராடுகிறார்கள். நிலமும் வளமும் எவருடைய தனியுடமையும் அல்ல. தனியுடைமை பொருளாதார அமைப்பின் கீழ் அது அரசுக்கும் சொந்தமாக முடியாது. பொது சொத்து பொதுவானது. அதன் மீது மக்கள் அனைவருக்கும் உரிமை உள்ளது. அந்தந்தப் பகுதிகளில் வாழும் மக்களின் உரிமைகள், கோரிக்கைகள் மதிக்கப்பட வேண்டும்.

முதலாளித்துவமோ அல்லது முதலாளித்துவ ஆதரவு அரசோ “இலாப” நோக்கோடு மட்டுமே எந்தவொரு “தொழிலிலும்” ஈடுபடும். உழைப்புச் சுரண்டல், இயற்கை வளச் சுரண்டல் ஆகியவை அதன் உள்ளார்ந்த பண்புகள். வேலை வாய்ப்பு என்னும் பெயரால் சொற்பளவிலான நபர்களுக்கு கூலியை விட்டெறிந்து கொழுத்த இலாபம் பார்ப்பதற்குப் பெயர் வளர்ச்சியல்ல. இதற்குப் பெயர் உழைப்புச் சுரண்டல். முதலாளித்துவ அமைப்பின் இந்த உள்ளார்ந்த பண்பை மக்கள் நன்கு உணர வேண்டும். ஆபத்தான திட்டங்களை, ஒடுக்குமுறைகளை ஆங்காங்கே எதிர்ப்பதோடு, ஒட்டுமொத்தமாக இந்த அமைப்பை தகர்ப்பதற்கான தேவையையும் மக்கள் உணர வேண்டும். தனி மனித உரிமை பாதுகாப்பு, இயற்கை வள பாதுகாப்பு, ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் அமைதல் ஆகியவற்றை உண்மையாக வலியுறுத்தி மக்களுக்காக களமாடும் அரசியல் சக்திகளோடும், அமைப்புகளின் பின்னாலும் அணிதிரளும் காலம் நெருங்கிவிட்டது. இந்த சக்திகளைத் தான் அரசு வேலையற்ற கம்யூனிஸ்டுகள், நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள், தேச விரோதிகள் என்று முத்திரை குத்துகிறது. வலதுசாரி அரசியல்வாதிகளைக் காட்டிலும் இவர்கள் ஆபத்தானவர்கள் இல்லை!
முதலாளித்துவ வளர்ச்சி என்பது சொற்ப அளவிலான நபர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும், அவர்களின் பிரதிநிதிகளாக செயல்படும் அரசாங்க பிரதிநிதிகளுக்கும் மட்டுமே பயனளிக்கக் கூடியதே அன்றி மக்களுக்கு எந்தவிதத்திலும் அது பயனளிக்கப் போவதில்லை.
நாம் அறிவியலுக்கு எதிரானவர்கள் அல்ல! ஆனால் அந்த அறிவியல் ஒருசிலரின் ஆதாயத்திற்காக சுரண்டல்வாத தன்மையோடு செயல்படுவதைத்தான் நாம் எதிர்க்கிறோம். இயற்கை வளங்களை கொள்ளை அடிக்காமல், நிலத்தடி நீரை மாசுபடுத்தாமல், விவசாயத்தை அழித்திடாமால் அறிவியல்பூர்வமாக திட்டங்களை கொண்டுவர அரசு முயற்சிக்க வேண்டும். அந்த அறிவை நிலத்தோடு உறவாடி வாழும் மக்களிடமிருந்து பெற முடியுமே ஒழிய ”சுயநலவாத அறிஞர்களிடம்” இருந்தல்ல.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழ்நாட்டு உரிமையை காத்து, தமிழக மக்களின் உணர்வை மதித்து இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடச் சொல்லி மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.
- கொற்றவை

Feb 19, 2017

நிகழ்கால அரசியல் வெற்றிடம்


மார்க்சை முன்வைத்து சாதி என்னும் கருத்துருவை புனரமைத்தல் - பி.ஆர். பாபுஜி
(கட்டுரையின் ஒரு பகுதி)
பாட்டாளி வர்க்க அரசியல் அமைப்புகளால் மட்டுமே பாட்டாளி வர்க்க புரட்சிகர செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும். ஆனால், தொழிலாளர் வர்க்கத்தின் முன்னணிப்படைகள் என உரிமை கோரும் இந்தியவில் உள்ள கம்யூனிஸ்ட் அமைப்புகள் சாதி பற்றிய மார்க்ஸின் கருத்துருவாக்கத்தைப் பின்பற்றுவதில்லை. இந்திய தொழிலாளர் வர்க்கத்தின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் சாதிய பாகுபாட்டை அப்படியே நீடித்திருக்க வகை செய்யும் நிலவுகின்ற உழைப்புப் பிரினையை அடிப்படை சார்ந்து மாற்றி அமைக்கும் புரட்சிகர செயல்திட்டமும் அவர்களிடத்தில் இல்லை. 70 வருட அமைப்பார்ந்த அனுபவங்கள் இருந்தும், ஆயிரக்கணக்கானத் தொண்டர்களின் கற்பனை செய்தும் பார்க்க முடியாத தியாகங்களுக்குப் பிறகும், பல லட்சம் கணக்கான தொழிலாளர் கூட்டத்தின் அரசியல் அனுதாபத்தைப் பெற்றிருந்தும், மார்க்சின் அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சனத்தினை படித்தறியாத காரணத்தால் இந்த கம்யூனிஸ்ட் அமைப்புகளால் ஒரு விரிவான புரட்சிகர செயல்திட்டத்தை இன்னமும் வகுக்க முடியவில்லை. நாங்கள் இப்படி சொல்வது ‘கல்வித் திமிர்’ அல்லது ‘குட்டி பூர்ஷுவ அறிவார்ந்த அகந்தை’ என்று தோன்றலாம். இருப்பினும், இதுவே வெளிப்படையான உண்மை. 17
கம்யூனிஸ்ட் அமைப்புகளின் இன்றைய நிலைமையைக் காணும்போது, 130 வருடங்களுக்கு முன்பு ஜெர்மன் தொழிலாளர் வர்க்க இயக்கத்திற்கு எங்கெல்ஸ் (1874:170) வழங்கிய அறிவுரைதான் நினைவுக்கு வருகிறது. “இதற்கு ஒவ்வொரு போராட்டத் துறையிலும் கிளர்ச்சித் துறையிலும் இரட்டித்த முயற்சிகள் தேவைப்படும். குறிப்பாக, எல்லாத் தத்துவார்த்தப் பிரச்சினைகளிலும் மேலும் தெளிவான உட்பார்வை பெறுவதும், பழைய உலகக் கண்ணோட்டத்திலிருந்து சுவீகரித்த மரபுச் சொற்றொடர்களின் சொல்வாக்கிலிருந்து மேன்மேலும் விடுவித்துக் கொள்வதும், சோஷலிசம் ஒரு விஞ்ஞானமாக ஆகிவிட்டதால் அதை ஒரு விஞ்ஞானமாகப் பின்பற்றுவது – அதாவது, அதைப் பயில்வது-அவசியம் என்பதை இடையறாது நினைவில் கொள்வதும், தலைவர்களின் கடமையாக இருக்கும்.”18, 18அ
மார்க்ஸின் சாதி பற்றிய கருத்துருவாக்கத்தோடு போதிய பரிச்சியமில்லாத நிலையும், கம்யூனிஸ்ட் அமைப்புகளிடம் பாட்டாளி வர்க்க புரட்சிகர செயல்திட்டம் இல்லாததும் ஒரு அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக ‘சாதியப் பிரச்சினையில்’. இந்த நிலைமையின் காரணமாகவே, பலவிதமான சாதியக் கட்சிகள், குழுக்கள், சாதிய இயக்கங்கள் மற்றும் போராட்டக் குழுக்கள் தோன்றிவிட்டன. அதேபோல், ‘புரட்சிகர’ கம்யூனிஸ்ட் (நக்சலைட்) குழுக்களின் சிலத் தொண்டர்களும் ‘தலித் இயக்கங்கள்’ எனப்படும் குழுக்களில் இணைந்து விட்டனர். வட இந்தியாவில் 19 பகுஜன் சமாஜ்வாடி கட்சி (பிஎஸ்பி) மற்றும் சமாஜ்வாடி கட்சி (எஸ்பி) தவிர ஆந்திராவில் ‘மாலா மஹானாடு’(பட்டியல் சாதிகளில் குறிப்பிட்டதொரு உட்பிரிவு), ‘மடிகா டண்டூரா’ (பட்டியல் சாதியில் இது மற்றொரு பிரிவு), சத்யஷோஷக் சமாஜம் (இதர பிற்படுத்தப்பட்ட அறிவுஜீவிகள் அடங்கிய சிறு குழு), பகுஜன் குடியரசு கட்சி (பிஎஸ்பியிலிருந்து உடைந்த குழு) போன்ற பல சிறு சிறு ‘தலித்’ குழுக்கள் உள்ளன. இவற்றில் எந்தக் குழுவும்/அமைப்பும் சாதி ஒழிப்பிற்கு வழிவகுக்கும் விதமாக நிலவும் உழைப்புப் பிரிவினையை வேரோடு மாற்றி அமைக்கும் செயல்திட்டம் எதையும் கொண்டிருக்கவில்லை. “உழைப்பவருக்கே நிலம் சொந்தம்!”, “ஏகாதிபத்திய மூலதனத்தைப் பறிமுதல் செய்!” என்பன போன்ற பூர்ஷுவா ஜனநாயக கோரிக்கைகளைக் கூட இவர்கள் வைப்பதில்லை. பிராமணிய/மனுவாதக் கட்சிகள் எனப்படும் கட்சிகளோடுகூட கூட்டணி வைத்து கூட்டணி அரசாங்கம் அமைப்பதிலேயே அவர்களின் வேட்கை இருக்கிறது. அல்லது சில சட்டமன்ற/பாராளுமன்ற இடங்களைப் பிடிப்பது, மற்ற உட்சாதிகள்/இணைசாதிகளைக் காட்டிலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை அதிகமாகப் பெறுவது என்பதே இவர்களின் இலட்சியம். ஆனால், பலவித நவ-முற்போக்கு சொல்லாடல்கள் மூலம் இந்தியாவிற்கு மார்க்ஸ் பொருந்தமாட்டார் (அல்லது போதமாட்டார்), இந்தியாவில் ‘சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு’ சொல்வதில் மார்க்சியம் ‘தோற்றுவிட்டது’ என்று சொல்வதில் மட்டும் இவர்கள் அனைவரிடத்திலும் வியக்கத்தக்க வகையில் ஒற்றுமை காணப்படுகிறது. இந்த அரசியல் சூழமைவில், மார்க்சின் சாதி பற்றிய கருத்துருவாக்கத்தை புனரமைப்பதற்கான முக்கியத்துவமும் அவசரத் தேவையும் முன்னெப்போதையும்விட இப்போது அதிகமாக இருக்கிறது.
(தொடர்புக்கு: brbapuji@yahoo.com)

Feb 13, 2017

சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும் - நூலிலிருந்து.....



அறிவியல் என்பது உறுதியான உண்மையையும், இலக்கையும் கொண்டது. உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தம் பற்றிய நுண்ணிய ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்பொழுது, இந்தியா என்பது ஒரு பின்தங்கிய முதலாளித்துவ நாடு என்பதும் இங்கு, ஏகாதிபத்தியம்-நிலப்பிரபுத்துவம் மற்றும் முதலாளித்துவத்துக்கு முந்தைய எச்சசொச்சங்கள் என அனைத்தையும் ஒழித்துடுவதற்கான சோஷலிசப் புரட்சிக்குத் தயார் செய்யும் தொடக்க காலத்திலிருந்தே சாதியமைப்பு ஒழிப்பிற்கான செயல்திட்டத்தையும் முன்வைக்க வேண்டும், உடனடி நடவடிக்கைகள், நீண்டகால நடவடிக்கைகள் என வகுக்கவேண்டும் என்பதும் எங்களது தெளிவான நம்பிக்கை. சாதி என்பது நிலக்கிழாரிய எச்சம் மட்டும் கிடையாது. முதலாளித்துவமானது, தன்னுடைய நலனை மேலும் வளர்த்தெடுப்பதற்காக தன் அமைப்போடு அது சாதியை வெளிப்படுத்துகிறது. இது ஒரு முதலாளித்துவ சாதியமைப்பாகும். அது பொருளாதார அடித்தளத்தோடு (உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தம்)உயிர்ப்புடன் (ஆர்கானிக்கலி) பின்னிப் பிணைந்துள்ளது மேலும் கருத்தியல்-அரசியல்-சமூக மேற்கட்டுமாமனத்தில் அதன் திறன்வாய்ந்த இருப்பானது கட்டுக்கோப்பாக உள்ளது.
கட்டுரையின் நீளம் கருதி எங்களது நிலைப்பாடு குறித்து தற்போது நாங்கள் சுருக்கமாக மட்டுமே குறிப்பிட்டுள்ளோம். இருப்பினும், ஒரு நீடித்த, பொருளார்ந்த விவாதத்தைப் புதிதாகத் தொடங்குவதற்கு இது போதுமானதாக இருக்கும். -

சாதியின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்த ஒரு வரலாற்றுப் பொருள்முதல்வாதப் பார்வை:

சாதியமைப்பு பற்றி முழுமையான வரலாற்றை இங்கு கொடுப்பதல்ல எங்களது நோக்கம். சாதிக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான தொடர்பு, சாதி மற்றும் வர்க்கத்திற்கு இடையிலான தொடர்பு மற்றும், சாதியமைப்பு என்பது எவ்வாறு அடிக்கட்டுமானம் மேற்கட்டுமானம் எனும் மார்க்சிய உருவகத்திற்குள் பொருந்துகிறது என்று புரிந்துகொள்ளத்தக்க வகையில் வரலாறு விவாதிக்கப்படும்.
முதலில், சாதியமைப்பின் தோற்றம் மற்றும் இந்தியாவில் மட்டும் அது குறிப்பிட்ட வடிவில் பரிணமித்துக்கொண்டே இருப்பதற்கான காரணங்கள் யாவை என்பது குறித்து உறுதியாக ஏதும் கூற முடியாது, ஏனென்றால், ஆய்வாளர்களும் அதற்கான தெளிவான காரணங்களை இதுவரை கூற முடியவில்லை. ஆதிகால அல்லது புராதனச் சமூக உழைப்புப் பிரினையானது, அதே புற ரீதியான சமூக அடித்தளத்திலிருந்து உருவான மதச் சடங்குகளை அடிப்படையாகக் கொண்டு உருவான சமூகச் சடங்குகள் வழியாக இந்தியாவில் சாதியமைப்பாக படிமப்பட்டுப் போனது. அதேபோல், இந்திய சாதியமைப்புக்கு ஒத்ததாக, எகிப்தில் அகமணமுறை மற்றும் அரசமரபு சார்ந்த தொழில்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு அமைப்பு கில்ட்-அமைப்பாக இறுகியது. ஆனால், அதற்குப் பின்னால் இருந்த மதத்தின் அடிப்படையிலான சமூக அற விதிமுறைகளின் அடித்தளமானது அந்தளவுக்கு திட்டவட்ட ஒழுங்குமுறை கொண்டதாக இல்லாத காரணத்தாலும், சமூக-பொருளாதார மட்டத்தில் நிகழ்ந்த மாற்றங்களுக்கு ஏற்றவாறு தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் நெகிழ்வுத் தன்மை இல்லாது போனதாலும் அந்த அமைப்பு நீடித்திருக்க முடியவில்லை.
இந்தியாவில் மட்டும் சாதியமைப்பு எவ்வாறு தோன்றியது, வளர்ந்தது என்பதற்கான காரணங்களைத் தேடும் முயற்சியில் நாம் பின் வரும் சில காரணிகளைக் குறிப்பிடலாம்: வானிலை, காலநிலை, வாழ்வதற்கும், விவசாய உற்பத்திக்கும் உகந்த சூழல், வரலாறு மற்றும் அதிலிருந்து உருவாகும் உழைப்பு நடைமுறை வளர்ச்சியின் மந்தப் போக்கு, ஒப்பீட்டளவில், தொடக்கம் முதலே உழைப்புப் பிரிவினையின் வரம்புகுள் உடல் உழைப்பு மற்றும் மூளை உழைப்புக்கு இடையில் திறன்மிக்க வகையிலான உழைப்புப் பிரிவினை (மேலும் உடல் உழைப்பின் வரம்பிற்குள் மேலும் மேலும் உட்பிரிவினை) மற்றும் சமூக விதிமுறைகளை கட்டியெழுப்புவதில் அதிக ஓய்வு நேரம் கொண்டிருந்த ஒட்டுண்ணி அறிவுஜீவிகளின் (பிராமண மதகுருக்கள்) திறமை மற்றும் தொலைநோக்குப் பார்வை. ஆனால், இவைகூட ஊகங்களும், அனுமானங்களுமே ஒழிய வரலாறு கிடையாது. வரலாற்று ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு நாம் கண்டிப்பாக விவாதிக்கக்கூடியது என்னவெனில்: சாதியமைப்பு எவ்வாறு தோன்றியது, வரலாற்று மாற்றங்களுக்கு ஏற்றவகையில் அது தன்னை எவ்வாறு தகவமைத்துக்கொண்டு இன்னமும் உறுதியாக இருக்கிறது? நாமும் அதையே சுருக்கமாக விவாதிப்போம். ஏனென்றால் தற்போதைய சூழ்நிலை பற்றிய விவாதத்திற்கும், சாதியொழிப்புக்கான திட்ட வடிவமைப்பிற்கும் இது அவசியம்.
இரண்டாவது, போகிற போக்கில் மார்க்சியர்கள் மீது சுமத்தப்படும் குற்றம் என்னவெனில், மார்க்சும் எங்கெல்சும் விளக்கிய வரலாற்று சமூக வளர்ச்சியின் மூன்று கட்டங்களையும் (அடிமையுடைமை-நிலவுடைமை-முதலாளித்துவம்), ‘ஆசிய பொருள் உற்பத்தி முறை’ மற்றும் ‘தன்னிறைவு பெற்ற கிராமச் சமூகங்களின் தேக்கநிலை’ பற்றிய அவர்களது கூற்றுகளையும் அப்படியே இயந்திரத்தனமாகப் பிரயோகிக்கின்றனர் என்பதாகும். இது அப்பட்டமான அறியாமை. ஆசிய பொருளுற்பத்தி முறை பற்றிய கருத்து மற்றும் கிரேக்கம், ரோம் போன்றே இந்தியாவிலும் அடிமையுடைமை முறை நிலவியது போன்ற கருத்துகள் அரை நூற்றாண்டுக்கு முன்னரே மறுத்தலிக்கப்பட்டுவிட்டது (முதலில் கோசாம்பியால்). தற்போது நாம் அதில் காணப்படும் சிற்சில வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டால், ஏறக்குறைய மார்க்சிய வரலாற்றியலாளர்கள் அனைவரும் இதில் ஒத்த கருத்து கொண்டவர்களாகவே உள்ளனர். கிராமச் சமூகங்களின் தேக்கநிலை குறித்த கருத்திலும் இதேதான் நடந்தது. எனினும், ஏற்கனவே நிலவி வந்த இந்திய நிலவுடைமை அமைப்பில் 13ஆம் நூற்றாண்டு வாக்கில் சில மாற்றங்கள் நேர்ந்தது என்பதும், அது மார்க்ஸ் விளக்கிய ‘கீழைத்தேய கொடுங்கோன்மை’க்கு ஒத்த முறையில் இருக்கிறது என்பதும் நிறுவப்பட்ட உண்மையாகும். அதேபோல், 1850களில் இருந்த சிந்தனையோடு ஒப்பிடுகையில், 1870களில், கிராமச் சமூகங்களின் தேக்கம் மற்றும் ஓரியல்பான தன்மை குறித்து மார்க்சின் சிந்தனையோட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது என்பதும் கவனத்திற்குரியது. இந்த விஷயம் குறித்து இர்ஃபான் ஹபிப் மற்றும் சுனிதி குமார் கோஷ் உள்ளிட்ட அறிஞர்களின் கட்டுரைகள் 1980களின் தசாப்தத்திலேயே வெளியிடப்பட்டுள்ளது. இங்கு நாம் விவாதிக்க வேண்டிய தொடர்புடைய மற்றொரு கூற்றும் உள்ளது. மார்க்சிய ஆய்வுமுறை என்பது ஐரோப்பாவை மாதிரியாகக் கொண்டது, இந்திய சமூகத்தை, குறிப்பாக சாதியமைப்பை ஆய்வு செய்வதற்கு அது உதவாது என்று பரவலாகச் சொல்லப்படுகிறது. இது ஒரு மேலோட்டமான கண்ணோட்டமாகும். ஐரோப்பிய சமூகத்தின் இயக்கவியல் பற்றிய ஆய்விலிருந்து மார்க்சியம் தோன்றியது (முதலாளித்துவ வளர்ச்சியின் செவ்வியல் மாதிரி) மேலும், ஜெர்மன் தத்துவம், பிரிட்டிஷ் அரசியல் பொருளாதாரம் மற்றும் ஃப்ரெஞ்சு சோஷலிசம் ஆகியவை அதன் முக்கிய ஆதாரமாக இருந்தது.
ஆனால், #மார்க்ஸ் மற்றும் #எங்கெல்சின் பொது நோக்குநிலையானது ஒட்டுமொத்த உலகிற்குமானதாகவே இருந்தது. வரலாற்று வளர்ச்சியினை பொதுமைப்படுத்துவதிலிருந்து பெறப்பட்ட இயங்கியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் ஆகியவை வாழ்வை, இயற்கையை ஆய்வு செய்வதற்கும், செயலூக்கத்துடன் அதில் தலையிடவும் தேவையான ஒரு உலகக் கண்ணோட்டத்தையும், வழிமுறையையும் வழங்குகிறது. இந்தக் காரணத்தினாலேயே மார்க்சியமானது, ருஷியா மற்றும் சீனா மட்டுமல்லாது லத்தீன் அமெரிக்கா, ஆசியா, ஆப்ரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் சமூக-பொருளாதார அமைப்புகளின் மாறுபட்ட அம்சங்களை ஆய்வு செய்யவும், வர்க்கப் போராட்ட உத்திகளை வகுத்திடவும் பயன்படுத்தப்பட்டது. இச்சூழமைவில் (கான்டெக்ஸ்ட்), மார்க்சும் எங்கெல்சும் சாதியமைப்பு பற்றி சில விளக்கங்களையும் 6,7 கருத்துரைகளையும் ஜெர்மன் சித்தாந்தம் (1845-46) படைப்பிலிருந்து மூலதனம் தொகுதி 1இல் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதும், அது #சாதியமைப்பு பற்றி புரிந்துகொள்வதற்கான முக்கியப் பார்வையை வழங்குகிறது என்பதும் கவனத்திற்குரியது. (மேலும் விளக்கங்களுக்கு, சாதியமைப்பு பற்றிய மார்க்ஸின்க ருத்துரு, பி.ஆர். பாபுஜியின் ஆய்வுக் கட்டுரையையும், ரங்கநாயகம்மாவின் சாதி குறித்து மார்க்ஸ் கட்டுரையையும் பார்க்கவும்).
(அடைப்புக் குறிக்குள் உள்ள இந்த குறிப்பு கட்டுரையாளர்களுடையது. #ரங்கநாயகமா மற்றும் #பாபுஜி கட்டுரைகள் பின்னிணைப்பாக இணைக்கப்பட்டிருக்கிறது )
- அர்விந்த் நினைவு அறக்கட்டளை ஆய்வுக் குழு