Oct 29, 2017

அமைப்பதிகாரம்



தோழர்களே,

ரங்கநாயகம்மாவின் சாதியப் பிரச்சினை நூல் வந்த நாள் முதல், இடதுசாரிகள் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு பிரிவினரின் தாக்குதல்கள் ஆர்.எஸ்.எஸ். ஒடுக்குமுறையை விடவும், ஆபாசமானப் பேச்சைவிடவும் மிகவும் பயங்கரமானதாக இருக்கிறது. ஆதவன் தீட்சன்யா, கருப்பு கருணா, முகமது சிராஜுதீன், சம்சுதீன் ஹீரா, பெரோஸ் பாபு (ஆதரவாளர்) என்று தொடங்கிய இந்த கும்பல் தாக்குதல்களை செய்தவர்கள் சிபிஎம் - தமுஎகச என்று அறிய முடிந்தது.

அமைப்பின் அதிகாரத்திலிருந்து இவர்கள் கேவலமானப் பேச்சுக்களை பேசியும் முகநூலில் எழுதியும் வந்தார்கள். தேனியில் நடந்த  கூட்டத்தில் பேசவிடாமல் வெளியேற்றப்பட்டு வசுமித்ர - வை ஒரு ரவுடி போல் சித்தரித்து தள்ளிவிட்டார்கள்.

இதெல்லாம் குறித்து நாங்கள் பதிவு செய்து வந்தோம். அவ்வப்போது பகடி செய்து பதில்கள் அளித்து வந்தோம். அவர்கள் பாணியில். ஆனால் அறிவுபூர்வமாக எங்களை எதிர்கொள்ள முடியாத இவர்கள் முகநூல் எங்கிலும் ஒரு கும்பலாக சேர்த்துக்கொண்டு எங்களுக்கு சாதி முத்திரை குத்தும் வேலைகளை செய்துவந்தனர்... வருகின்றனர். குறிப்பாக வசுமித்ர யாரிடமாவது உரையாடினாலோ அல்லது எங்களின் நண்பர்கள் ஏதேனும் பதிவெழுதினாலோ அங்கு சென்று "தேவர் ஜெயந்தி 30 ஆம் நீதி என்பது", "பசுமித்ரா, குசுமித்ரா" என்றெல்லாம் தரம் கெட்ட  முறையில் வம்பிழுப்பது போல் எழுதி மன உளைச்சலை எற்படுத்தி வந்தார்கள்.

பலமுறை கண்டும் காணாமலும் இருந்த நாங்கள் ஒரு கட்டத்திற்கு மேல் அவர்கள் பாணியில் 'தரமிறங்கி' பதிலடி கொடுக்கத் தொடங்கினோம். ஏனென்றால் நாங்கள் தனி நபர்கள். எங்களை நாங்கள் தான் தற்காத்துக் கொள்ள வேண்டும். அவர்களை காக்க 'அமைப்பாகத் திரண்டு' மார்க்சியத்தைக் காக்கும் 'பலம்' அவர்களுக்கு இருக்கிறது.

பொதுவாக இது போன்ற சில்லறை அவதூறுகளுக்கு பதில் சொல்லாமல் நான் விலகியே இருந்துளேன். அல்லது தொகுத்து நூலாக  பதிலடி கொடுத்துள்ளேன். இம்முறை முகநூலில் பதிலடி கொடுக்கும் அவசியம் ஏற்பட்டது, ஏனெனில் இந்துத்துவத்தை கடுமையாக, குறிப்பாக தேவருக்கு தங்க கவசம் வழங்கிய நிகழ்வை விமர்சித்து எழுதிக்கொண்டிருக்கையில், சிராஜுதீன் என்பவர் கார்த்திக் மேகா பக்கத்தில் மீண்டும் பசுமித்ரா, குசிக்குமார் என்று ஆபாசமாகப் பதிவெழுதினார் .

பொறுமைக்கும் ஊர் எல்லை உண்டு!

இவர், தான் அமைப்பில் வேலை செய்வதை தியாகத்திற்கு  இணையாகவும், புரடசிகரப் பனி எனவும், வசு  மானங்கெட்ட பிழைப்பு பிழைக்கிறார் என்றும் எழுதியவர். இதற்கு பதில் கொடுத்த போது சின்னையா காசி என்பவர் மிகவும் ஆபாசமாகப் பேசினார். சரளமாக ஒருமையில் தான் இவர்கள் பேசுவார்கள். இதுதான் இவர்கள் கற்ற மார்க்சியம்.

தனி நபர் கருத்து என்பார்கள் ஆனால் நாங்கள் பதிலடி கொடுத்தால் அமைப்பாக திரண்டு ஆபாசமாகப் பேசுவதுடன் மிரட்டலும் விடுவார்கள். எல்லாவற்றுக்கும் முகநூலில் ஆதாரம் உண்டு.

நேற்றும் இதே தான் நடந்தது. நெல்சன் பாபு என்பவர் இம்முறை களம்  இறங்கினார்.மிக ஆபாசமாக பேசவும் தொடங்கினார். அதை முன்வைத்து, விமர்சனப் ண்பை வளர்க்கத்  தெரியாத சிபிஎம், எப்படி மார்க்சியத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் என்று தொடங்கி, சாதி ஒழிப்பில் பின்னடைவு - சிபிஎம் போன்ற அமைப்பில் உள்ள அடையாள அரசியல் என்று நான் பதிவிடத் தொடங்கினேன்.

தொடக்கத்தில்  நாங்கள் நடந்ததை சொல்லி முறையிட்டோம். ஒவ்வொரு முறையும் அமைப்பைக் காட்டி மிரட்டுவதால் அமைப்பிடம் கேள்வி கேட்கிறோம், உண்மையில் ஒரு பண்புள்ள அமைப்பானது எங்களை அழைத்தோ அல்லது அலுவலகம் வாருங்கள் பேசுவோம் என்று சொல்வதுதான் தார்மீகம். ஆனால் அதற்குள் நெல்சன் பாபு என்பவர் தாக்குதலைத் தொடங்கினர். இனியும் அமைதியாக சென்றால் அமைப்பின் அதிகாரம் ஓங்கிவிடும் என்பதால் நாங்களும் அவர்களின் 'தரத்திற்க்கு' இறங்கினோம்.

கொற்றவை பெண் தோழர் அவரை விட்டுவிடுவோம் என்னும் 'சமத்துவ' கருத்துக்களை உதிர்த்த அவர் வழக்கம் போல் ஆர்.எஸ்.எஸ். கைக்கூலி , உளவாளி என்று தொடங்கி அரிக்குதா, வா பார்க்கலாம்,உங்க அப்பனையெல்லாம் பார்த்தவங்க என்று தொடர்ந்தார். அவரின் ஒவ்வொரு வசைக்கும், நான் சி.பி.எம்மின் வரலாற்று துரோகங்களை முன் வைத்து கேள்வி கேட்கத் தொடங்கினேன். ஏனென்றால் இவர்கள் அமைப்பாகத் திரண்டும் அமைப்பின் பெயரைச் சொல்லியும் தானே மிரட்டுகிறார்கள். அதுமட்டுமின்றி தொடர்ந்து இந்த அவதூறுகளை செய்து எங்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள்.

பொதுவெளியில் எப்படி உரையாடவேண்டும், விமர்சனங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்னும் பண்புகளை, வழிகாட்டுதலை செய்யும் பொறுப்பு அமைப்பிற்கு உள்ளதா இல்லையா என்பதே என் கேள்வி. இதற்கு முன்பே  அமைப்பில் உள்ளவர்களிடம் கடிதம் வாயிலாக முறையிட்டோம், பதிலுக்கு அவர்கள் கேவலத்தை உதிர்த்ததைத் தவிர வேறேதும் செய்யவில்லை. அவர்கள் அமைப்பினர் பேசினால் தனிநபர் கருத்தென்பதும் அவர்களை நாங்கள் பேசினால் அமைப்பாகத் திரண்டு ஆபாசத் தாக்குதல் தொடுப்பதும்  ஒடுக்குமுறை இல்லையா?. இவர்கள் தான் நடிகர் விஜய்க்காக கருத்து சுதந்திரம் என்று போராடுபவர்கள்.

தோழர்களே, நான் இடது களத்திற்கு வந்த நாள் முதல் 'இடது ஒடுக்குமுறையை' கடுமையாக எதிர்கொண்டுள்ளேன். ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டதாலேயே என்னைப் பற்றிய முன் முடிவுகளுக்கு வந்து, தொடக்கத்தில் ஒரு புரட்சிகர அமைப்பு தாக்குதல் தொடுத்தது. ஆரம்பத்தில் நான் மிகுந்த வேகத்தோடு செயல்பட்டேன், ஆனால் எனக்கு சோர்வை ஏற்படுத்தி தனிமைப்படுத்தி விலக்கச்  செய்தவர்கள் இடதின் பெயரால் இயங்கும் ஒரு சில தோழர்களும், அமைப்பும் தான். ஒரு நிகழ்ச்சியில் தோழர்கள் எனக்களித்தப் பணியை செய்துகொண்டு இருந்தேன். மேடையில் தொகுத்தளிக்கும் வேலை, "இவங்களை எல்லாம் ஏங்க மேடை ஏத்துறீங்க, நம்ம அமைப்புலருந்து யாரையாவது ஏத்துங்க, இவங்கல்லாம் விளம்பரம் தேடுறவங்க" என்று பேசினார்.ஒரு 'தோழர்'. இது போல் பல சம்பவம் "பாப்பாத்தியோட சேர்ந்து சொந்த சாதியை காட்டிக்கொடுக்குறீங்களா".... வசு முரடன், சாதி வெறி பிடித்தவன், ரவுடி இப்படியாக.. எங்கள் தனிப்பட்ட வாழவை 'இலக்கியவாதிகள்' எழுதி மன உச்சம் அடைந்தனர். அதிலும் விளம்பரம் தேடவே என் மக்களைக் கூட விட்டு விட்டு வந்ததாக எழுதினார்கள். இவர்கள் 'தலித்திய, முற்போக்காளர்கள்....

இதையெல்லாம் கண்டு நான் மேலும் ஒதுங்கி நின்றேன். நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க மறுத்தேன். தொலைகாட்சி நிகழ்ச்சிகள் என எது வந்தாலும் (அவர்களின் வியாபார நோக்கமும் ஒரு காரணம்).

இந்துத்துவவாதிகள், அரசியல் கட்சிகள் , தலித்திய நம்பிக்கை உடைய தோழர்களைக் காட்டிலும் இந்த இடதுசாரி நபர்களின் வன்மமும், பண்பும், மிரட்டலும் தான் எனக்கு வியப்பாகவும், வேதனையாகவும் உள்ளது. மேற்சொன்னவர்கள் கூட எங்களிடம் இவ்வளவு ஆபாசமாகவும், வன்மத்தோடும் உரையாடியதில்லை. ஆனால் இந்த சி.பி.எம் நபர்கள், ஒரு சில புரட்சிகரக் கட்சிகளில் உள்ள 'தோழர்கள்' செய்யும் இந்த அராஜகத்தைக் கண்டிக்க இங்கு மற்ற அமைப்புகளுக்கு விருப்பமில்லை என்பது விளங்கி விட்டது. ஒரே காரணம் நாங்கள் அமைப்பில் இல்லை.

தோழர்களே இங்கு இதுதான் அமைப்பின் வாயிலாக நாம் அடையக்கூடிய நன்மை என்றால் மன்னித்து விடுங்கள் நாங்கள் விலகியே  இருக்கிறோம்.

இதுவரை நான் முகநூலில் இருந்து விலகியது, எழுத்திலிருந்து விலகப் போகிறேன் என்று அறிவித்தது என்று எல்லாவற்றிற்கும் காரணம் சி.பி.எம் நபர்கள்... ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் பேசுவதாகக் சொல்லி அடையாள அரசியலை முன்னெடுக்கும் ஒரு சில இடதுசாரி ஆதரவாளர்கள், எழுத்தாளர்களே.

வலதுசாரிகள் அச்சுறுத்தல்கள் என்னை ஒரு போதும் அசைத்ததில்லை... ஆனால் இடதுசாரிகளாக கும்பலாக சேர்ந்துக்கொண்டு ஒரு சிலர் செய்யும் தாக்குதல்களும், ஒடுக்குமுறையும், கொடுக்கும் பட்டங்களும் , மொழியும் மனம் வெறுக்கக் செய்து விட்டது..... அறிவு அகந்தை, அமைப்பு அதிகாரம், வரட்டுத் தனமான வாதங்கள், முன் முடிவுகளோடு முத்திரை குத்துதல் இதைத்தவிர இந்த 7 வருடங்களில் இந்தப் பிரிவினர் மத்தியில் நான் ஆரோக்கியமாக எதையும் காணவில்லை....


வாழ்க கருத்துக் சுதந்திரம்.... எங்களுக்கான உரிமைகளைத்தவிர.......

தோழர் ஜி.ராமகிருஷ்ணனுக்கு பகிரங்கக் கடிதம்.

சிபிஎம் கட்சியின்  மாநிலச் செயலாளரான தோழர். ஜி.ராமகிருஷ்ணனுக்குப் பகிரங்கக் கடிதம்.





வணக்கம் தோழர், சமீபகாலமாக உங்கள் அமைப்பில் முழு நேர ஊழியராக இருக்கும் ஒரு சிலர் ஒரு புரட்சிகர முன்னெடுப்பை எடுத்துச்செல்கின்றனர். அதாவது முழுநேர ஊழியராக இருப்பவரே புரட்சியை முன்னெடுத்துச் செல்லும் அருகதையுடையவர் என்று எண்ணும் அளவுக்கு சென்றுவிட்டனர்.

பாரதி புத்தகாலயத்தில் பணிபுரியும் மேலாளர்சிராஜுதீன் என்பவர் நான் செய்யும் தொழிலைத் தெரிந்துகொண்டே அதை மானம் கெட்ட தொழில், அப்படிப் பிழைத்து அதில் வரும் வருமானம் அவமானத்திற்குரியது என்று பொதுவெளியில் தன் கருத்தை வைத்தார். அப்பொழுது அது குறித்து அவரிடம், மானம் கெட்ட தொழிலில் சம்பாரித்த காசை, உங்கள் பாரதி புத்தகாலயத்துக்கு நிதி உதவியாகச் செய்யலாமா என அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு,  “தோழர்.. மன்னிச்சிடுங்க உணர்சிவசப்பட்டுவிட்டேன்” என்றார். அந்த மன்னிப்பைப் பொருட்படுத்தினேன். அதே சமயம் அதை பொதுவெளியில் வைக்கச் சொன்னேன் அவர் செய்யவில்லை.

தோழர் எனது வேலை சின்னத்திரைத் தொடர்களுக்கு வசனம் எழுதுவது. அப்படி வசனம் எழுதிய பலருக்கு, உங்களது கட்சியின் கலை இலக்கிய அமைப்பான தமுஎகச சம்பந்தப்பட்டசீரியலின் பெயரை அழைப்பிதழில் அச்சிட்டு விருதும் கொடுத்திருக்கிறது. மன்னிக்கவும். அந்த சீரியலும் புரட்சிகர கருத்தியலை வாரி வழங்கும் தொடரல்ல.

ஒரு நேரத்தில் சின்னத்திரையில் இருப்பவர்கள் எங்களது அமைப்பில் இருக்கிறார்கள் என்று கூறுவதில் பெருமிதம் அடைவதும், சில கேள்விகளை முன்வைத்தால் மானம் கெட்ட தொழில் அவமானகரமான வருமானம் எனச் சொல்லுவதும் ஏன். சின்னத்திரையின் எழுத்தாளர் சங்கத்தில் இருக்கும் நான் இதுகுறித்து ஏன் கேள்விகளை எழுப்பக் கூடாது.

மேலும் தோழர் இந்த ஒட்டுமொத்த வசைகளுக்கும் காரணமாக அமைந்தது எனது வாழ்நாள் தோழியான தோழர் கொற்றவை,  தோழர் ரங்கநாயகம்மா அவர்களின்  “சாதியப் பிரச்சினைக்கு தீர்வு: புத்தர் போதாது! அம்பேத்கரும் போதாது! மார்க்ஸ் அவசியத்தேவை!” என்ற நூலிலிருந்து கிளம்பியதுதான்.

அந்த நூலை முன்வைத்துப் பேசுகிறேன் என, அம்பேத்கரின் கருத்துக்களையோ அவரது ஆய்வுகளையோ மார்க்சியத் தளத்தில் முன்வைக்காது, சிபிஎம் கட்சி பொலிட் பீரோவில் பார்ப்பனர்கள் அதிகம் இருக்கிறார்கள், அது குறித்து எனக்கு கேள்விகள் இருக்கிறது என  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்களின் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா பொது ஊடகத்தில் பேட்டி கொடுத்துள்ளார். அந்தக் கேள்விக்கு இதுவரை தமுஎகசவோ, சிபிஎம் கட்சியோ எந்த விதமான பதில்களையும் தரவில்லை.

அதே சமயம், ஆதவன் தீட்சண்யாவை தனி நபர் துதி பாடலில் முன்வைத்த சிராஜுதீன், அவர் அடுத்த அம்பேத்கராக இருந்தால் என்ன என்று கேள்வியை முன்வைத்தார். மேலும் இன்னொரு நபரான கருப்பு கருணா என்பவர், பொதுவெளியில் அவன் இவன் எனப் பேசுவதையே முழுநேர ஊழியப் பணியாக செய்துவருகிறார்.  “வக்காலி” என்று அழைப்பது புரட்சிகர வசனமாக அவருக்கு இருக்கிறது. கட்சியின் தத்துவங்கள் சார்ந்தோ, அதன் விதிகள் சார்ந்தோ எதுவும் பேசத் தேவையில்லை. அவதூறுகளை இரைப்பதுதான் முழுநேர ஊழியரின் பணியா?

மார்க்சியத்தை ஏற்றுக்கொண்டவன் என்ற அடிப்படையில், நான் சாதிகுறித்த ஒடுக்குமுறைகளை எதிர்ப்பவன். அத்தோடு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் நீண்ட காலத்துக்கு முன், அறிவிக்கப்படாத முழுநேர ஊழியனாய் இருந்திருக்கிறேன். அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட கன்வீனராக, மாணவர் பெருமன்ற மாவட்ட கன்வீனராக, கட்சியின் உறுப்பினராக இருந்து பணிசெய்திருக்கிறேன். இப்பொழுது எந்த அமைப்பிலும் இல்லை.

மார்க்சிய வழியில் பயணிக்கும் என்னை, சிராஜுதின் என்பவர் எல்லா நேரங்களிலும் தேவர் சாதி என்றே சொல்லி அடையாளப்படுத்தி அவதூறும் பரப்பி வருகிறார். நானே என்னை சாதி நீக்கம் செய்து கொண்டபிறகு, அம்பேத்கரை விமர்சித்த ஒரே காரணத்தால், எனக்கு சாதி முத்திரை குத்தியும் அவதூறு செய்தும், வசுமித்ர என்னும் என் பெயரை பசுமித்ரா என்றெழுதுவதும், மானங்கெட்ட தொழில் செய்பவன் என்று சொல்வதையே ஒரு பணியாக நினைக்கிறார். இதுதான் உங்கள் அமைப்பு முழுநேர ஊழியர்களுக்கு கற்றுக்கொடுக்கும் விமர்சனப் பண்பா.

கிடாரி என்கிற திரைப்படத்தில் நான் நடித்ததையும். ஒரு வாய்ப்பாக முன்வைத்து அவதூறு செய்கிறார். தோழர் அந்தத் திரைப்படத்தில் வேலராமமூர்த்தியும் நடித்திருந்தார். செம்மலரின் வந்த கிடாரி விமர்சனத்தை தோழர் தமிழ்ச்செல்வன் எழுதியிருந்தார். அதில்  “அட நம்ம வேலா” என்றெழுதி புளங்காங்கிதம் அடைந்திருந்தார். அது சாதிப் பாசமா.. இல்லை வேறெதும் பாசமா என்று எனக்குத் தெரியவில்லை.

மேலும், சோம்நாத் சட்டர்ஜி என்று பெயரில் இருப்பதாலும், பூணுல் கல்யாணம் நடத்தியதாலும், அவர் பார்ப்பனர் என்று எனக்குத் தெரிகிறது. சாதி முறைகளை அவர் இன்னும் கடக்கவில்லை என்றும் புரிகிறது. அவப்பேறாக, நான் தீர்மானிக்கமுடியாத பிறப்பின் சாதியை வைத்துப் பேசும், உங்களது அமைப்பைச் சேர்ந்தவர்களை முன்வைத்து, இப்பொழுது எனக்கு சில விளக்கங்கள் தேவைப்படுகிறது. இந்த மாதிரியான அணுகுமுறைகள் மூலம்தான் சாதியைக் கடக்கமுடியும் என்று அவர்கள் நினைப்பதால் அதையே நானும் இப்பொழுது கேள்விகளாக முன்வைக்கிறேன்.

நீங்கள் என்ன சாதி, உங்களது வெகுஜன அமைப்பில் இருக்கும் தலைவர்கள் செயலாளர்களின் சாதிகள் என்ன? நீங்கள் எல்லாம் எப்படி சாதியைக் கடந்தவர்கள் என்று பாரதிபுத்தகாலயத்தின் மேலாளர் சிராஜுதின் எப்படி ஏற்றுக்கொண்டார் என்று தெரிவித்தால், நானும் அப்படிப் பட்ட சான்றிதழைப் பெறுவதற்கு ஆயத்தமாக உள்ளேன்.

மேலும், உங்களது அமைப்பில் சேர்ந்தால்தான், சாதியைக் கடக்கமுடியுமெனில், அதை பொதுவெளியில் வைத்து உரையாடுங்கள். நான் மட்டுமல்லாது, பலரும் உங்களது அமைப்பில் சேர்ந்து சாதியைக் கடப்பார்கள். சாதியை ஒழிக்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அது சிபிஎம்மில் சேர்வது என்றானபின், இந்தியாவில் சாதி ஒழிந்துவிடும் இல்லையா!

தோழரே...

எஸ்.வி.இராஜதுரை உங்களது கட்சியின் தேசியச் செயலாளரான, பிரகாஷ் காரட்டுக்கு அரசியல் அரிச்சுவடி கூட தெரியாதெனச் சொல்லியவர். பாரதிய ஜனதாவுக்கும், சிபிஎம்முக்கும் வேறுபாடுகள் இல்லை எனச் சொன்னவர். அதற்கு இன்றுவரை சிபிஎம் எந்தப் பதிலும், விளக்கமும் கொடுக்கவில்லை. ஆனால், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அவருக்கு தேனி மாவட்டத்தில் மார்க்சிய அறிஞர் பட்டம் கொடுத்தார்கள்.  

அதே சமயம், உங்களது கட்சியின் பார்வையில், கண்டவர் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் கொடுக்கத் தேவையில்லை என்ற நோக்கம் இருக்கலாம். ஆனால் அப்படிச் சொல்லும் ஒருவரை மார்க்சிய அறிஞர் எனச் சொல்லுவது, பிரகாஷ் காரட்டுக்கு அரசியல் அரிச்சுவடி கூடத் தெரியாது என்பதை உங்கள் கட்சி வெகுஜன அமைப்பான தமுஎகச மார்க்சிய அறிஞர் பட்டம் கொடுத்திருப்பதால் அதை உறுதி செய்வதாகவே தோன்றுகிறது. மேலும் மார்க்சிய அறிஞர், விருது கொடுத்த மேடையிலேயே,  “மார்க்சியத்தை பன்றித்தத்துவம்” என அம்பேத்கர் சொன்னது சரி, என விளக்கம் கொடுத்தபோது, அங்கிருந்த சிபிஎம்மின் தோழர்களில், ஒருவர் கூட குரல் எழுப்பவில்லை. விவாதிக்க முனைந்த என்னையும் வெளியே தள்ளிச் சென்றார்கள்.

தோழர், நான் மேடையில் அதைப் பேசினேன் இதைப் பேசினேன் என்று திரிக்க, ஆதவன் தீட்சண்யா, சிராஜுதீன், கருப்பு கருணா போன்றவர்கள் முன்னெடுக்கலாம். ஆனால் நான் மேடையில் பேசியதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. மேலும் தேனியில் நடந்தது என்ன என்று நீங்கள் உங்கள் கமிட்டியில் ஒரு ஆய்வையும் செய்யச் சொல்லலாம். அதுகுறித்து என் தரப்பைச் சொல்ல ஆவலோடு காத்திருக்கிறேன்.

அதோடு அக்கூட்டத்தில் பங்கேற்ற தோழர். தி.சு.நடராஜன், பிராங்க்பர்ட் மார்க்சியவாதியெல்லாம் மார்க்சிய அறிஞர் என்று அழைக்கப்படுவதில் எனக்கும் உடன்பாடில்லை என்று என்னிடம் சொல்லவும் செய்தார். தமிழ்ச்செல்வன் ‘தம்பி உன் கருத்துக்கு எதிர்ப்பு மட்டுமல்ல ஆதரவும் இருக்கு’ என இதை முன்வைத்தே சொன்னார்.

கலந்துரையாடல் என அறிவித்துவிட்டு, மேடையில்  “மார்க்சியம் பன்றித்தத்துவம்” என்று வாதிடுபவருக்கு எதிராக, எந்தக் கேள்வியையும் கேட்காமல், என்னை வெளியே அனுப்பியதுதான் தமுஎகசவின் கருத்துச் சுதந்திரம் என்பதை அன்று அறிந்துகொண்டேன்.

மேலும் அதன் தொடர்ச்சியாக தமுஎகசவின் கலை இலக்கியத் தூண்களாக தேனியில் அறியப்படும் தோழர் சீருடையானிடம், ராஜதுரைக்கு நீங்கள் எப்படி மார்க்சிய அறிஞர் எனப் பட்டம் கொடுத்தீர்கள் எனக் கேட்டதற்கு, ராஜதுரையின் இரண்டு கட்டுரைகளை படித்தேன், அதனால் அவருக்கு அந்தப் பட்டம் ஏற்புடையதே என்றார். இதை பதிவு செய்யலாமா எனக் கேட்டதற்கு சம்மதமும் கொடுத்தார்.

அடுத்து தோழர் காமுத்துரை ஒரு கட்டுரையும் படிக்கவில்லை என்று சொன்னார். முக்கியப் பொறுப்பிலிருக்கும் தோழர்களே இப்படி இருக்கும் போது, ராஜதுரையை மார்க்சிய அறிஞர் எனச் சொன்னது யார். அதன் நோக்கங்கள் விளக்கங்கள் என்ன. மேலும் கம்யூனீஸ்ட் கட்சி அறிக்கையை மொழிபெயர்த்ததாலேயே அவர் மார்க்சிய பேரரறிஞர் என்று இப்பொழுதைய தமுஎகசவின் மாநிலச் செயலாளர் சு.வெங்கடேசன் அங்கு சொன்னதாக அறிந்தேன். இது ஒன்றுதான் மார்க்சிய அறிஞராகும் தகுதியா?

மேலும் புத்தகம் பேசுது இதழில் கோணங்கி குறித்து ஒரு துதி பேட்டி வெளிவந்தது. அது குறித்த எனது கேள்விகளை முன்வைத்து எழுதிய கடிதத்தை பிரசுரிக்கவும் இல்லை. ஆனால் அந்தப் பேட்டியில் கலைஞனை நம்புவதும் கலைஞனைப் பின் தொடர்வதுதான் மனிதகுலத்திற்கு விடுதலை என்று முன்னட்டையிலேயே கொட்டை எழுத்துக்களில் போட்டிருந்தார்கள். அப்படி நம்பும் வகையில் ஒரு கலைஞனை தமுஎகசவிலாவது சுட்டிக்காட்டமுடியுமா என எனக்குத் தெரியவில்லை. இதை ஒரு எழுத்தாளர் கூற்று என எடுத்துக்கொண்டாலும் அந்த எழுத்தாளர் கூற்றுக்கு பதில் சொல்லும் எழுத்தாளர் தமுஎகசவில் இல்லையா.

தோழர்... தொடர்ந்து இது போன்ற தனிமனிதக் குழுக்களை, அவர்களை முன்னெடுத்து முதுகு சொறியும் நபர்களை, முழுநேர ஊழியர்கள் என்றும், அவர்கள்தான் புரட்சியை முன்னெடுத்துச் செல்பவர்கள் என்றும் கவனத்தில் கொள்ள முடியுமா?

மேலும் ரங்கநாயகம்மாவின் புத்தகத்தை பாரதி புத்தகாலயம் தனது அடுக்குகளில் கூட வைக்காமல் ஒளித்து வைத்தே விற்கிறது. மாறாக ஆந்திராவில் சிபிஎம் கட்சியின் பத்திரிக்கையில் ரங்கநாயகம்மா தொடர்ந்து எழுதிக்கொண்டுதான் இருக்கிறார். அவரது கட்டுரைகளை சிபிஎம்மின் கட்சிப் பத்திரிக்கை பிரசுரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது.

கட்சியில் இருந்துகொண்டு, தலித்தியம்தான் விடுதலை, மார்க்ஸ் தேவையில்லை என்று கருதும் நபர்கள், உங்கள் அமைப்பில் முழுநேர ஊழியராகவும், மற்றவர்களை ஏக வசனத்தில் திட்டி தன் பிழைப்புவாதத்தை வளர்த்துக்கொள்பவராகவும் இருப்பது ஏன்.

மேலும் தலித்தியத்தை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் மார்க்ஸ் தேவையில்லை எனும் இவர்களுக்கு நீங்கள் அறிந்த மார்க்சியத்தின் படி கூறும் பதில்கள் என்ன.

எல்லாவற்றிற்கும் மேலாக மார்க்சிய அறிஞராக ,செயலூக்கமான வழிகாட்டியாக பல புத்தகங்களை எழுதிய, இப்பொழுதும் எழுதிக்கொண்டிருக்கிற தோழர் ரங்கநாயகம்மாவை நக்கல் நையாண்டி செய்து சிராஜுதீன், ஆதவன் தீட்சண்யா கருப்பு கருணா போன்றவர்கள் ஆற்றும் பணிகளையும் நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்.

உங்களது வாசிப்பு வசதிக்காக எனது கேள்விகளைத் தொகுத்துக் கேட்கிறேன்.

1.சின்னத்திரையில் கதை வசனம் எழுதுவது, சினிமாவில் நடிப்பது கேவலமான பிழைப்பா? அதில் வரும் வருமானம் அவமானகரமான வருமானமா?

2. சாதியப் பிரச்சினைக்கு அம்பேத்கர் சொல்லும் தீர்வுகள் என்ன?

3.புத்தரா கார்ல் மார்க்ஸா என்றும் அம்பேத்கரின் நூல் குறித்து உங்களது பார்வை என்ன?

4. சிபிஎம் கட்சி அம்பேத்கரின் சாதி ஒழிப்புக் கருத்தியல்களை எப்படி ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துகிறது.

5.சாதி ஒழிப்புக்கு மார்க்சியம் உதவுமா?
உதவுமெனில். அதன் தத்துவார்த்த புரிதல்கள் என்ன?

இறுதியாக, விமர்சனம் செய்வதற்கான உரிமையை, அரசியல் அமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியிருக்க, ஒரு நூலை எழுதியதற்காகவே சாதி முத்திரை குத்துவதும், அவதூறு செய்வதும், நூலை  “நரகல்” என்று சொல்வதுமாக இருக்கும் சிபிஎம் முழுநேர ஊழியர்களின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள். அமைப்பில் உள்ளதானலேயே இந்த அதிகாரம் கிடைத்துவிடுமா?

அதோடு, என் குறித்தான கேள்வியில், தேவர் சாதி சங்கங்களில் சென்று பிரச்சாரம் செய்வார்களா என்றொரு கேள்வி வந்தது. அதே பாணியை முன்வைத்து, சிபிஎம் தலைவர்கள் அனைவரும், அவர்களின் சாதி சங்கங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்திருக்கிறீர்களா என்று நான் கேட்கிறேன். மேலும் ஒருவர் இந்த சாதியில் பிறக்கவேண்டும் என்பது அவரது தேர்வாக இருக்கமுடியுமா.?

மறுபடியும் அழுத்தமாகப் பதிவு செய்கிறேன். சிபிஎம் பொலிட் பீரோவில் பார்ப்பனர்கள் அதிகம் இருக்கிறார்கள், தலித் உறுப்பினர் இல்லை எனும், ஆதவன் தீட்சண்யா கேள்விக்கு பதில் சொல்லவேண்டும்.

அதே சமயம், தலித்துக்களுக்கு வாய்ப்பளிக்காத சிபிஎம் கட்சியில், இந்த தலித்தியப் போராளிகள்,  அமைப்பாளர்களாக, பணியாளர்களாக, உறுப்பினர்களாக ஏன் இருக்கிறார்கள்.?என்பதையும் ஆய்ந்தறிந்து சொல்லுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

தலித்துக்களின் மேம்பாட்டிற்காக இந்த தலித்திய போராளிகள் கட்சிக்குள் இதுவரை என்ன வகையான போராட்டங்களை முன்வைத்திருக்கிறார்கள்,அதற்கு கட்சி கூறிய பதில்கள் என்ன, என்கிற ஆவணங்கள் ஏதேனும் இருந்தால் அதையும் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
வசுமித்ர

Sep 4, 2017

மாணவிக்கு உதவி தேவை




வணக்கம் தோழர்களே,

சில மாதங்களுக்கு முன் பொறியல் படிக்க உதவி வேண்டிய மாணவி பவித்ராவிற்காக நிதியுதவி வேண்டி முகநூலில் பதிவிட்டிருந்தேன்

முகநூல் நண்பர்கள் பலரின் உதவியால் அவர் முதலாமாண்டு கட்டணத்தை கட்ட முடிந்தது.

இப்போது மீதமுள்ள கட்டணத்தை கட்ட வேண்டிய தேதி நெருங்கி வருகிறது. விருப்பமுள்ளவர்கள் kotravaiwrites@gmail.com க்கோ அல்லது உள்பெட்டியில் செய்தி அனுப்பினால், பவித்ராவின் விபரங்கள், வங்கி கணக்கு உட்பட அனுப்பி வைக்கப்படும்.

சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி உறுதி செய்து கொண்டு நீங்கள் அவரது வங்கிக் கணக்கிலேயே பணத்தை செலுத்திவிடுங்கள். (உறுதி செய்து கொண்டு).

தனியார் அறக்கட்டளை, மற்றும் சில நண்பர்களிடமும் உதவி கேட்டுள்ளோம். பதிலுக்காக காத்திருக்கிறோம்.

மாணவி பவித்ராவின் கடிதம்:

From: "PAVITHRA PAVI" <mallaiyanpavi@gmail.com>
Date: 25-Aug-2017 10:27 AM
Subject: 
To: <
க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்>
Cc: 

முதலாம் ஆண்டு  மொத்த கட்டணம் 74915 .இதில் 70000 நாம் கொடுத்து உதவி செய்தார்கள் . மீதம் வீட்டில் செலுத்தி விட்டார்கள் . இனிமேல் மீதம் இருக்கும் மூன்று ஆண்டுக்கான தொகை உள்ளது மொத்தம்  1,67, 430 . 

இரண்டாம் ஆண்டிற்கு - 55810
மூன்றாம் ஆண்டிற்கு - 55810
நான்காம் ஆண்டிற்கு - 55810
மொத்தம் =1,67,430

இதில் இரண்டாவது ஆண்டு முதல் பருவ கல்வி கட்டணம் 9905 ஜூலை 1ம் தேதி உறவினரிடம் கடன் வாங்கி கட்டியிருக்கிறோம்..