Jan 19, 2010

சமுக அறமும் , தற்கொலைகளும்.


சில நாட்களாக பத்திரிகைகளைப் படிக்கும் எண்ணத்தை கொலை செய்து விடலாமா என்று தோன்றுகிறது. கள்ளக்காதல் செய்தியும், விபச்சார அழகி கைது என்றும், கற்பழிப்பு விபரங்களும் நாள் தவறாமல் வந்துவிடுகிறது. அவர்கள் உபயோகிக்கும் 'உல்லாசம்', 'பகீர்' போன்ற வார்த்தைகளும், கைது செய்யப்பட்டதாக பிரசுரிக்கப்படும் வாக்குமூல நடையும் மிகவும் அருவருக்கத்தக்கதாக உள்ளது. இச்செய்திகளை படிப்பவர்கள் மனதில் வலியை ஏற்படுத்துவதற்கு பதில, அச்செயல்களை அவர்கள் எப்படி புரிந்திருப்பார்கள் (.ம் கற்பழிப்பென்று வைத்துகொள்ளுங்கள்) என்று மனதில் காட்சி ஓடச்செய்து மேலும் காம வெறியைப் புகுத்துவதாகவே உள்ளது.

ஒவ்வொரு சொற்களும் விவாதத்துக்குரியதாய் உள்ளது. முதலில் 'கள்ளக்காதல்' - காதல் என்பது எவருடன் வந்தாலும் அது காதலாகத்தானே இருக்கவேண்டும், அது கள்ளகாதலாய் குறியிடப்படுவதற்கு எது காரணம்? 'ஒழுக்க' விதிகள் எவ்வாறு எதற்காக தோற்றுவிக்கப்பட்டது என்று விவாதிக்க விரும்புகிறேன். சுதந்திரநாடு என்று நாம் பறைசாற்றிக்கொள்ளும் நிலையில், தனி மனித சுதந்திரம் என்பது ஒழுக்கத்தின் பெயரால் நசுக்கப்படுவதை நான் உணர்கிறேன். திருமணம் என்பது இருவர் செய்து கொள்ளும் ஒப்பந்தம், (திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வாழும் உரிமை பெண்களுக்கு மறுக்கப்படுகிறது - குடும்பம் எனும் அமைப்பு வன்முறைக் களமாக மாறும் சித்திரம் ). சில பல காரணங்களால் ஒருவரை ஒருவர் பிடிக்காமல் போகும்பொழுது ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ளும் உரிமை மானம், அவமானம் எனும் அர்த்தமற்ற கூற்றுகளால் முடக்கப்படுகிறது.

ஆகவே விருப்பமின்றி சகித்துக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது, குறிப்பாக பெண்களுக்கு. இங்கு எப்பொழுதும் ஒரு மனிதனை வீழ்த்த அவமானம் எனும் ஆயுதமே கையில் எடுக்கப்படுகிறது. ஏனென்றால் பெரும்பாலும் அந்தரங்கம் என்பது காமம் சார்ந்தே இருக்கிறது, காமம் என்பதை அடக்கு முறைகளுக்கு உட்படுத்தி, புனிதப்படுத்தி பின்பு அதையே ஒரு இழி செயலாகவும் விவரிக்கிறது சமூகம். எத்தனை ஒழுக்க முறைகள் விதிக்கப்பட்டாலும், பெண்ணுக்கெதிரான பாலியல் வன்முறைகளை தடுக்க எதுவும் உபயோகப்படவில்லை.

வசதி திருமணம் பற்றிய எங்கல்சின் கருத்து "வசதித் திருமணம் பெரும்பாலும் படு மோசமான விபசாரமாகி விடுகிறது. இது சில சமயங்களில் கணவன், மனைவி, இருவர் தரப்பிலும் நடக்கும்; ஆனால் மனைவியின் தரப்பில் மிகவும் பொதுவாக நடைபெறுகிறது. அவளுக்கும் சாதாரண விலைமகளுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் அவள், ஒரு கூலித் தொழிலாளி தனது உழைப்பை விற்பதைப் போலன்றி நிரந்தர அடிமைத்தனத்துக்குத் தன்னுடைய உடலை விற்பனை செய்கிறாள் என்பதே".

திருமணத்தை அதன் வாழ்வுமுறையை சகித்துக்கொள்ளும் நிலையில் , பெண்ணோ, ஆணோ அவரவர் மனதில் இருக்கும் கனவு நபரை காணும் பொழுது மனம் அவரை நாடுவது இயல்பான ஒன்று. நேசிப்பவர்கள் இருவருக்கும் இடையேயான அன்பு அவர்களின் விருப்பத்துக்கேற்ப அமையும் போது ஆணாய் இருந்தால் அலைபவன், பெண்ணாய் இருந்தால் விபச்சாரி. அவர்களின் உறவுக்கு கள்ளக்காதல் என பெயரிட்டு அவர்களை கேலி செய்கிறது. கேலிக்கும், அவச் சொற்களுக்கும் பயந்து அவர்கள் தங்கள் நேசத்தை மறைக்கவேண்டிய நிலை உருவாகிறது. சமுகம் ஒழுக்கம் என திணிக்கும் வன்முறையால் அவர்கள் தற்கொலை செய்யத் தூண்டி, அதில் வெற்றி பெற்று தன்னை ஆசுவாசப் படுத்திக்கொள்கிறது. பிடிக்காத துணையை நீங்கிவிட்டு வரவும் உரிமை இல்லை, தனக்கான துணையை நேசிக்கவும் உரிமை இல்லை. விளைவு சாவு.

சில நேரங்களில் காதலர்கள் பிரிக்கப்பட்டு , வெவ்வேறு நபர்களை திருமணம் செய்யும் கட்டாயம் ஏற்படுகிறது. ஆழ்ந்த காதலாக (இதை சமுகம் கொடுக்கும் அழுத்தத்தோடு நான் கூறவில்லை. உண்மை காதல் என்ற கூற்றை நான் விரும்பவில்லை...ஏனென்றால் உண்மை என்பதும் கற்பிதமே,அதற்கப்பால் எவரின் உண்மை ...என நீண்டு கொண்டே போகும் .) இருந்த பட்சத்தில் அவர்கள் ஒருவரை ஒருவர் மறக்க இயலாமல் தங்கள் காதலை தொடர நினைக்கிறார்கள். குடும்பம், குழந்தை போன்ற உறவுகளை மதித்து அவர்கள் கடமையாற்றுகிறார்கள். அதே நேரம் அவர்கள் நேசத்தையும் விட்டுக்கொடுக்க மனமில்லாமல் தொடர்கிறார்கள்.

எந்தவொரு சட்டத்திலும் காதலோ,காமமோ குற்றமாக அறிவிக்கப்படவில்லை, இதை வகையில் பிரித்துப்பார்த்து விமர்சிப்பது முறையற்றது. குறிப்பாக 'உல்லாசம்' எனும் வார்த்தையை இவர்கள் உபயோகிக்கும் முறை குமட்டுகிறது. காதல் கொண்ட இருவர் தங்களுக்கான நேரத்தை எடுத்துக்கொள்வதும் , உடல் உறவு வைத்துக்கொள்வதையும் 'கணவனுக்கு அல்லது மனைவிக்குத் தெரியாமல் உல்லாசமாக இருந்துவந்தர்கள்' என்று விவரிக்கிறார்கள்.

அறிவித்துவிட்டு செய்யவும் அக்காதலர்கள் தயார் என்றால் அவர்களை என்ன பெயர் சொல்லி அழைப்பார்கள்? அல்லது தன்னுடன் வாழ விருப்பம் இல்லாத துணையை பெருந்தண்மையுடன் அவர்களுக்குப் பிடித்தவருடன் அனுப்பிவைப்பர்களா?

அடம் பிடிக்கும் கணவனுக்கும், மனிவிக்கும் என்ன தேவை அவர்கள் துணையிடம் இருந்து, மனமொத்த அன்பா அல்லது சமூக குழுக்கள் கற்பித்த மான, அவமான கூற்றுக்கு அடிபணியும் ஓர் அடிமையா? ஓர் ஆணும், பெண்ணும் விருப்பமுள்ள வரை மட்டுமே சேர்ந்து வாழ வேண்டும், இல்லாத பட்சத்தில் விருப்பமானவர்களுடன் சேர்த்துவைக்கவேண்டும் எனும் பெரியாரின் கூற்றை நான் முன்மொழிகிறேன். (ஒருவேளை கணவனோ மனைவியோ புரிதலின் பேரில் அதற்குத் தயார் என்றால், அவன் கூட்டிக்கொடுக்கிறான் என்றும் வசைமாறி பொழியும் இந்த சமுதாயம்).

குடும்பம் என்ற நிறுவனம் (institution) தோன்ற காரணமும், அரசியலும் அறிவதே இதற்கான தீர்வாய் அமையும். படுக்கை அறைக்குள் எட்டிப்பார்க்கும் அல்லது பார்த்தது போல் விவரிக்கும் போக்கை பத்திரிக்கைகள் கைவிடவேண்டும். இது ஒரு தனிமனித சுதந்திரம் சார்ந்த விஷயம், அங்கே ஒருவேளை கொலைகள் நிகழ்ந்து விட்டாலும் கூட கொலைக்கான விசாரணைகளை சட்டம் மேற்கொள்ளட்டும் அதை நீலப்படம் ஓட்டுவது போல் வியாபார நோக்கோடு பிரசுரிப்பது தவிர்க்கப்படவேண்டும்.



"இலக்கணத்தில் இரண்டு எதிர்மறைகள் உடன்பாட்டுப் பொருள் ஆவதைப் போல, திருமண ஒழுக்கங்களில் இரண்டு விபச்சாரங்கள் ஒரு நன்னடத்தை ஆகின்றன"
பூரியே.



சிறு குறிப்பு.

1. கற்பழிப்பு என்பது ஆணாதிக்கச்சொல். அதை வன்புணர்ச்சி என்றே அழைக்கவேண்டும்.
2. சிறிமி கற்பழிப்பு. இச்சொல்லில் இருக்கும் வன்முறையின் உச்சத்தை உங்களால் புரிந்துகொள்ளமுடிகிறதா...

முடிவாக...
கற்பு, ஒழுக்கம் ,தூய்மை, புனிதம், தாய்மை, பெண்மை, விபச்சாரி, இவை போன்ற சமுகம் சார் வார்த்தைகளுக்கு அஞ்சி பெண்கள், இவ்வுறவோடு தொடர்புடைய ஆண்கள், குழந்தைகள் தங்களுக்கு நேரும் வன்முறையை சொல்லப்பயந்து நாளும் இதே சமூகத்தின் முன் செத்து செத்துப் பிழைக்கிறார்களோ, அல்லது தற்கொலை செய்கிறார்களோ அவர்களுக்கு இக்கட்டுரை....இனி இது தொடர்பாய் விரிவாகவும் எழுதுவேன்.

Jan 14, 2010

ஆயிரத்தில் ஓருவன் ;ஆண் வக்கிரமும், அதன் சுயமும், வெளிப்பாடும் ....


நேற்று ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் பார்த்தேன். இப்படி ஒரு அருவெறுப்பான திரைப்படத்தை என் வாழ்நாளில் நான் கண்டதில்லை. யதார்த்தம் என்ற பெயரில் கதாநாயகர்கள் பேசும் வசனங்கள் பெண்களை இழிவுபடுத்துவதாக அமைவதோடு ஆண்களை பெண்ணின் உடலுக்காக சதா ஏங்கி வெறிபிடித்து எந்நேரமும் அதே சிந்தனையாக அலைபவர்களாக சித்தரிக்கிறது.

ஆபாசத்தை திரைப்படமென விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள் . இடம்பெறும் இழிவு காட்சிகள் அனைத்தையும் காணும் பெண்ணுடல் , மனம் கூசி குறுகும்போது ஆண்கள் அக்காட்சிகளை வெகு விருப்பத்துடன் துய்த்து ரசிக்கும் காட்சியில் இயக்குனர் ஆண் என்பதோடு ஆண்களின் உள்ளார்ந்த விருப்பம் பெண்களை பாலுறுப்பாகவே பார்க்கும் மனநிலைதான் என்பதை எந்த சிக்கலும் இல்லாமல் வெளிப்படுத்தியிருக்கிறார். ரசிக்கும் ஆண்களை நான் பரிதாபத்தோடு பார்க்கிறேன் அவர்களை நான் குறை கூற இயலாது, அவர்களுடைய ரசனை இப்படித்தான் இருக்கவேண்டும் என்று இயக்குனரின் பூர்ஷுவா மனம் கட்டமைத்திருக்கிறது .

கதாநாயகன் கார்த்தி கூலி, கூலி என்றால் தரகுறைவாகததான் நடப்பார்கள் என்ற இயக்குனரின் பார்வை ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. கூலிகள் எப்பொழுதும் பாலுறவு சிந்தனை, கலாச்சாரம் பண்பாடு ஒழுக்கம் என எதுவும் அற்றவர்களாய் ஆள்பவர்கள், முதலாளிகள் சித்தரிப்பது புதிதல்ல. மாறாய் நாகரிகம் தெரிந்தவராய் , தன்னை உணர்வுகளின் மையத்தை சரியாக தொடுபவராக அவரது பேட்டிகளின் முலம் வெளிப்படுத்தியவர், இதற்கும் மேலாக படத்தின் இசை நாடா வெளியீட்டு விழாவில் தான் இத் திரைப்படத்திற்காக இழந்தது அதன் வலி தனக்கு மட்டுமே தெரியும் என மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு அறிவித்தார். உங்கள் வலியை பொது இடத்தில் நீங்கள் சொன்ன காரணம் மனிதர்கள் துக்கத்தை புரிந்துகொள்பவர்கள் என்ற நம்பிக்கைதானே. பின் எப்படி ஒரு திரைப்படத்தின் மூலம் இவ்வளவு பெரிய வன்முறையை செய்யமுடிந்தது. முடியும் , பணம் தேவையெனில் முதலாளிகள் அவர்களின் குடும்பப்பெண்களையும் ஒளிவுமறைவின்றி காட்டத்தயங்கமாடார்கள் என்பது மறுபடியும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

அன்றாடவயிற்றுப்பாட்டிற்கு சாலையோரம் நிற்பவள் விபச்சாரி அதையே வெளிச்சங்களுக்கு மத்தியில் தன்னுடலை வைத்தால் கலை.அதை வெளிப்படுத்துபவர் இயக்குனர், அதற்கு பணம் போட்டவர் கலையுலகின் விற்பனர். வருத்தமாக இருக்கிறது. ஆயிரத்தில் ஓருவன் இத்திரைப்படம் முழுக்க முழுக்க பெண்களின் ப்ருஷ்ட்டம் , மார்பு, திறக்கத் தயாராய் இருக்கும் தொடைகள் இதை நம்பியே ஒட்டுமொத்த படமும் இயக்கப்பட்டிருக்கிறது.


இதில் வரும் ஆண் கதாப்பாத்திரங்கள் அனைவரும் , காட்டுவாசிகளின் தலைவன் உட்பட பெண்களின் மேல் புணர்ச்சி நாட்டம் கொண்டவர்களாகவே சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர். ஒருவகையில் பெண்கள் எக்காலத்திலும் ஆண்களால் இப்படித்தான் நடத்தப்பட்டிருக்கிறார்கள் என்று காட்ட முயற்சிக்கிறாரோ என்று எண்ணவும் வாய்ப்பில்லை அனைத்து பாத்திரங்களும் எந்த கணத்திலும் புணர்ச்சியைத் தவிர வேறு சிந்தனை எதுவும் அற்றவர்களாகவே இருக்கிறார்கள்.

கதாநாயகியின் மீது மோதுவதும், உரசுவதும் அவர்களை இழிவு படுத்திப்பேசுவதும் இயக்குனர் பெண்களை எப்பார்வையில் பார்கிறார் என்று தெளிவாக விவரிக்கிறது. புரட்சித்தலைவரின் ஆயிரத்தில் ஒருவன் பாடலை ரீ மிக்ஸ் (அதற்கு சற்றும் தகுதியற்றவர்களாய்) செய்து கப்பலில் இவர்கள் பாடும் பொழுது ஒரு கும்பல் ரீமா சென்னின் மேலாடையை (கோட்) பிடித்து இழுக்கிறார்கள், முதலில் அவர்களை விரட்டும் இவர் பின்பு திறந்த முதுகை காட்டி ஆட ஆரம்பித்துவிடுகிறார், பிறகு மது அருந்திவிட்டு, அவர் புட்டத்தை காமிராவிற்கு காட்டி ஆடுகிறார். இயக்குனர் ரீமா சென்னின் முலைகளையும், தொடைகளையும் மட்டுமே நம்பி படம் எடுத்திருக்கிறார். ஈசா ஈசா பாடலில் ரீமா குவிந்த மார்புடன், மண்டியிட்டு தன் உடைகளைத் தூக்கி தடவி நெளியும் பொழுது, பெண்கள் ஆண்களின் காம வேட்கையைத் தீர்க்கும் கருவிகள் உறுதி பட கூறுகிறார்.

பெண்களை ஆண்கள் இப்படித்தான் நினைப்பார்கள் என்ற நினைவுடனும் தன்னாலும் இப்படித்தான் பார்க்கமுடியும் என்ற உறுதியான சிந்தனையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். கதை, திரைக்கதை இது எதுவும் தேவையில்லை. கொஞ்சம் வரலாற்று பூச்சாண்டி, நிறைய சதைகள் இவற்றை கலந்துகட்டி மனிதக்கடை விரித்திருக்கிறார் இயக்குனர்.

வரலாறு எனக்கு தெரியாதென்பவன் அவசியம் ஏற்ப்பட்டால் கற்றுக்கொள்வான். ஒரு முழு நீள திரைப்படத்துக்கு வரலாற்றை முன்வைத்திருப்பதாய் காட்சி படுத்திய நீங்கள் கொஞ்சம் வரலாறு படித்திருக்கலாம். இது அறிவுரையாக சொல்லவில்லை வேண்டுகோள்தான். இந்தியாவில் பார்ப்பன ஆதிக்கம் எப்படி ஒரு இனம் முழுவதையும் அவமானப்படுத்தி அடிமை ,விபச்சாரியின் பிள்ளைகள் என சொல்ல வைத்திருக்கிறது என்பது இயக்குனர் அறியாததல்ல.

ஒரு நடிகருக்கு, நடிகைக்கு தேதி வாங்க காத்திருக்கிறீர்கள், அவர்களின் சம்பளத்தை அள்ளித்தர உங்களின் பணப்பெட்டி எந்நேரமும் திறந்தே இருக்கிறது. அத்தனையும் ,ஒட்டு மொத்த உழைப்பும் இப்படி பாலியல், வரலாறு அனைத்தையும் குழப்பவா.

500 ரூபாய் செலவழித்தால் உளவியல், வரலாறு, என அத்தனையும் உங்கள் வீட்டு வாசலில் கிடக்குமே , புரட்டிப்பார்க்க உங்களைத் தடுப்பது எது. திரைப்படம் இயக்கத்தெரியும் என்ற நம்பிக்கையா. அது வெறும் தொழில் நுட்பம் மட்டும்தானே கதை, திரைக்கதை இதில் இயக்குனரான உங்களுக்கு எந்த பங்கும் இல்லையா.


எல்லாவற்றையும் பாலியல் குறிப்புகளாகவே அணுகும் இயக்குனர் வரலாற்றையும் அவ்வாறே குழப்பியிருக்கிறார்.

சரியான வரலாறும் தெரியாமல், உறுதியான கதைக்களமும் இல்லாமல் சாக்கடை வழிந்தோடுவதைப்போல் ஆபாசமாக நகர்கிறது திரைப்படம், ஒரே சதை வாடை. உன் மேல ஆசைதான் பாடலில் நாயகிகளை வக்கிரமாக காட்டுவதற்காகவே குடிக்கும் காட்சியை திணிக்க வைத்திருக்கிறது இயக்குனரின் குடியும் கொண்டாட்டமும் பற்றிய தவறான புரிதல். கதை நாயகன் பெண்ணை சுவாசிக்கும் கறித்துண்டாகவே பார்கிறான். மேஜராக வரும் ரவி எனும் பாத்திரம், கூலியை சிந்தனையற்ற கறித்துண்டாகவே பார்க்கிறது. இதை இயக்குனரின் பார்வையாகவே நான் காண்கிறேன். (படைப்பு வேறு, படைப்பாளி வேறு என்பதை இவ்விடத்தில் பொருத்தி பார்க்க முடியாது. நான் அறிந்த வரை இயக்குனர் பார்வையாளனாக தான் இயக்கிய திரைப்படத்தில் ஓரிடத்தில் கூட தெரியவில்லை. முழக்க முழுக்க பங்கேற்பவராகவே இருக்கிறார்).

ரீமா
சென்னின் முலைகளை அழகுப்படுத்தி காட்ட எடுத்துக்கொண்ட முனைப்பைக்கூட இவர்கள் கதை செய்ய எடுத்தொண்டதாக தெரியவில்லை.

முட்டாள் தனமான நகர்வுக்கு பின்னால் சோழர்கள் கிராமத்தை (நகைச்சுவையாகத்தான் உள்ளது) அடைந்த பின்னர் சோழ மன்னன் முன்னால் ஒரு தாய் முலையில் இரத்தம் தான் வருகிறது என்று பஞ்சப்பாட்டை பாடுவது வெகு செயற்கையாக உள்ளது. (இதற்கடுத்து சில காட்சிகளுக்கு பின் சோழ மன்னன் தன் பாலியல் தேவையை அதிகாரத்தோடு துயிக்கிறான். )

சோழர்கள் ஏன் அக்கிராமத்திலேயே பல்லாண்டு காலமாக தங்கி உள்ளனர்?
மந்திர மாயத்தில் கோள்களையே கட்டுப்படுத்தும் இவர்கள், ஏன் உணவிற்கு வழியில்லாமல் இருக்கிறார்கள்?
உணவிற்கில்லாமல் இருப்பவர்கள் எப்படி படையை வழிநடத்த முடியும்?
இவ்வளவு கஷ்டப்படும் இவர்கள் ஏன் தங்கள் நிலையை தற்போதுள்ள அரசுக்குத் தெரிவித்து [ஆராய்சியாளர் பிரதாப்போத்தன் உதவியுடன்) அதற்கான வாழ்வியல் ஆதாரத்தை பெற முயற்சிக்கவில்லை?]


ஒரு தனி மனிதனின் சிலைத்தேவைக்கு எப்படி தேசிய ராணுவம் அவ்வளவு உதவி செய்கிறது?

இப்படி நிறைய கேள்விகள் கேட்டுக்கொண்டே போகலாம்.

இதை எல்லாம் விடக் கொடுமை, ரீமா சென் சோழனிடம் (அரசர்) தான் ஒரு சேதி கொண்டுவந்திருப்பதாக கூறி அதை சொல்ல வேண்டுமென்றால், அரசர் அவளுடன் கூட வேண்டும் என்று எவருடைய உத்தரவாகவோ கூறுகிறார். இதைக் காரணமாக வைத்து மறுபடியும் உடல்பாகங்களை முன்னிறுத்துகிறார். தன் மக்களின் கவலைகளை முன் வைத்து அவளிடம் சல்லாபம் செய்யத் தயாரில்லை என்பதை வன்முறையாக வெளிப்படுத்திய மன்னன் அடுத்து வளம் வரும் நீ முடி சூட்டப்படுவாய் என்று ஆருடம் வந்ததும் அவளையும் புணர்ந்து அதற்கடுத்து ஆராய்ச்சியாளராக கதையின் முதலில் வரும் பாத்திரம் [அவள் அப்பா விட்ட ஆராய்சியையே அவளும் தொடர்ந்து அவளால்தான் இப்பயணமே என்பதும் காட்டப்படுகிறது. ] நீங்கள் அவளை நம்பியது தவறு எனச்சொல்ல வருகையில் அவளை சரியான ஆண் தேடி அலைந்தாயாமே வா வந்து படுத்து இன்பம் அனுபவித்து போ பாவம் அயல்நாட்டுக்காரி வேறு என்று பெரியமனதுடன் அனுமதிக்க அவளோ உண்மையை சொல்ல, அவள் படுக்க வரவில்லை என்பதறிந்து அவளுக்கு பைத்தியமோ , என் ஆண்குறியை வேறு பார்த்துவிட்டாளே ஏதேனும் பிழை வருமோ என ஆருடம் கேட்க்கச்சொல்கிறான். ஆக கஞ்சி இல்லாவிட்டால் வறுமை, அதன் விளைவை யோசிக்காத எரிச்சல், பின் வளம் வரும் என்ற செய்தி கேட்டவுடனேயே புணரும் வேட்கை. இதில் பார்வையாளாராய் என்னை மிகவும் வருத்தமும் கோபமும் அடைய வைத்தது பாண்டிய ரத்தம் ஊறிய பெண் சோழனிடம் பேசும் காட்சி.

அவள் உண்மையானவள்தானா என அரசர் அவளை பல விதங்களில் சோதிக்கிறார், வாள் சண்டை உட்பட. ரீமா அதில் நன்கு தேர்ச்சி பெற்றவர் . ஆனால் அத்திறமையை நம்பாமல், ரீமா தன் மார்பை குவித்து குவித்துக் காட்டி வா வா என்றழைக்கிறார். இது எனக்கு உச்சக் கட்ட கோவத்தை வரவழைக்கிறது. ஒரு பெண் ஆணை வெல்ல தன் உடலைத்தான் முன்வைக்கிறாள் என்று ஆண்டாண்டு காலமாய் ஆண்கள் கற்பித்து வரும் அதே செய்தியை (அது அவர்கள் எதிர்பார்ப்பாய் இருப்பதால்) இவரும் வைக்கிறார். அவ்வளவு திறமை, கூட்டாளிகளின் பலமிருந்தும் ரீமா ஏன் அரசனுடுன் கூடித்தான் அவரை கவிழ்க்க வேண்டுமென்று நினைக்கிறார் என்பது இயக்குனரின் வக்கிரத்திற்கு மட்டுமே வெளிச்சம்.

இப்போராட்டத்தில், அரசர் ரீமா வின் நிழலை கட்டுக்குள் எடுத்து, சேட்டைகள் செய்கிறார், அதில் விரக தாபம் பொங்க ரீமா குழைகிறார், பாதியில் நிறுத்திவிட்டு அரசர் இன்னும் வேண்டுமா, இன்னும் வேண்டுமா என்று கேட்பதும், தாபத்தில் மூழ்கி ரீமா ஆமாம் ஆமாம் என்று காமம் பொங்க கூறுவதும், ஒரு பெண் காமத்துக்கும் எப்படி அடிமை ஆக்கப்படலாம் என்று கற்றுக்கொடுக்கிறார் இயக்குனர் . சினிமாவில் நடிக்க வரும் பெண்கள் தங்கள் உடலின் மேன்மையரியாமல் பணத்திற்காக திறந்து காட்டுவது வருத்தமாக உள்ளது. கொண்டாடப்படவேண்டிய அவளின் உடலை பணக்கார முதலைகள் விலைபேசி, பின்பு அவளையே இழிவாக கண்டும், படுக்கைக்கு அழைத்தும் பீத்திகொள்ளும் இவர்களை பெண்கள் எவ்வாறு சகித்துக்கொள்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஆபாசம், வக்கிரமட்டுமல்லாமல் வன்முறையும் சேர்த்து குமட்டுகிறது. உயிரற்ற ஒரு சிலைக்காக இரக்கமே இல்லாமல், உயிருள்ள மனிதர்களை விலங்குகளை சுடுவதுபோல் சுடுகிறார்கள். அப்பொழுதும், ரீமாவின் கதாபாத்திரம் மிருகத்தனமாகவே நடந்து கொள்கிறது. அதற்கு காரணம் பாண்டிய வம்சாவளியில் பிறந்த அவருக்கு சிலையை மீட்பது ஒன்றே லட்சியம். கடைசி காட்ச்சியில் கோமாளித்தனமாக பாண்டியக்கால உடையணிந்து மேஜர் "TAKE POSITION" என்று பேசுவது அருவருப்பும், நகைச்சுவையாகவும் உள்ளது.

சத்தியமாக குழந்தைகளுடன் இத்திரப்படத்தைக் காண இயலாது.

வெறும் டிரைலர் மட்டும் காட்டி சினிமா வட்டாரத்தை ஏமாற்றி மேடையில் எல்லோரும் இவரை புகழும் படி செய்துவிட்டார் இயக்குனர் . பாவம் இவர்கள் அனைவரும் முழு திரைப்படத்தைப் பார்த்தால், பேசிய சொற்களை எப்படித் திரும்பப் பெறுவது என்று வருந்துவார்கள்.

இத்திரைப்படத்தை பார்த்ததால் எனக்கு கிடைத்த ஒரே லாபம், இனிமேல் இயக்குனர் செல்வராகவனின் திரைப்படங்களை காண்பதில்லை எனும் தெளிவான முடிவு.

எதை காட்டி ஆண்களை ஏமாற்றுவது, அவர்களை விலைபேசுவது, அவர்கள் மூளைகளை மழுங்கடிப்பது என்று முதலாளிகள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். பெண்ணுறுப்பு இன்றி இவர்கள் பிழைப்பு நடத்தவே முடியாது. பெண்ணின் உடலை காட்டி ஆண்கள், தாங்கள் விலைப்பேச படுகிறோம் என்று அறிந்தோ அறியாமலோ விலை போகிறார்கள். இப்படி எல்லா வழிகளிலும் பெண்ணையும் அவள் உறுப்பையும் கையில் எடுத்துக்கொண்டு அலையும் ஆண்களுக்கிருக்கும் உரிமைக் கூட பெண்ணுக்கிலாமல் செய்ய வரிந்து கட்டிக்கொண்டு செயல் படுகிறது என் சக இனமான ஆண் இனம்.

பெண்ணுடலை தங்கள் சுயநலத்திற்காகவும், வியாபார நோக்கோடும் கையாளும் ஆண்களுக்கு மத்தியில், தன் உடலுக்கு நேரும் வன் கொடுமைகளை அவள் எழுதும் பொழுது, பொறுக்க முடியாமல் பெரும்பான்மையான ஆண்கள் நாங்கள் எங்களுக்கு பெருமைவேண்டி எங்கள் உறுப்பை கையில் எடுப்பதாக விமர்சிக்கிறது. ஆண்கள் பெண்ணுறுப்பை கவர்ச்சிப் பொருளாகவும், காதலை விவரிக்கவும், அவளை வீழ்த்தவும் மட்டும் கையாளும் பொழுது, பெண் உடலால் மனதால் எதிர்கொள்ளும் சித்திரவதைகளை பெண்கள் தானே உண்மையுடன் எழுத முடியும்.

Jan 13, 2010

ஆணின் பெண் - பாகம் 3


தாயுரிமை தூக்கி எரியப்பட்டது பெண்ணினம் உலக வரலாற்று ரீதியில் பெற்ற தோல்வி ஆகும். ஆண் வீட்டிலும் ஆட்சியின் கடிவாளத்தைக் கைப்பற்றினான். பெண் இழிநிலைக்குத் தள்ளப்பட்டாள். அடிமைபடுத்தப்பட்டாள்; ஆணின் உடலின்ப வேட்கைக்குக் கருவியானாள், கேவலம் குழந்தைகளைப் பெறுகின்ற பொருளாகி விட்டாள் என்கிறார் மார்கன்.

மார்க்ஸ் அவர்கள் இதற்கு கூடுதலாக பின் வருமாறு தெரிவிக்கிறார்: "நவீன காலக் குடும்பம், அடிமை முறையை மட்டுமின்றி பண்ணையடிமை முறையையும் கரு அளவில் கொண்டிருக்கிறது ....இப்படிப்பட்ட குடும்ப வடிவம் இணை மணம் ஒருதார மணத்துக்கு மாறியதைக் காட்டுகிறது. மனைவியின் விசுவாசத்தை உறுதிப்படுத்துவதற்காக, குழந்தைகளின் தகப்பனார் இவர்தான் என்பதை உறுதி செய்வதற்காக ஆணின் முழுமையான அதிகாரத்தின் கீழ் பெண் வைக்கப்படுகிறாள்" என்கிறார். (இது கட்டாய விவசாய வேலை தொடர்புடையது)

இவ்வாறாக அரசியல், சுயநலம், அதிகாரம் ஆகிய பல காரணங்களால் பெண் ஆணுக்கு கீழ் என்ற அடக்குமுறை எண்ணத்தை பின் வந்த சந்ததியினருக்கு வழிமொழிந்திருக்கிறது வரலாறு. இதை இரு இனங்களும் அறியாமலே கற்ற ஒன்றாகிவிடுகிறது...

இதன் தொடர்ச்சியாக பெண் வெறும் காதல் துணையாகவும், காமத்துனையாகவும் திரைப்படங்கள் தன் பங்குக்கு சித்தரிக்கிறது. பெண் அழகு தேவதையாகவும், பார்த்த மாத்திரத்தில் விழும் ஆண் அவளை துரத்தி துரத்தி பித்து பிடித்த பாடல்களை பாடி அவன் வலைக்குள் விழ வைத்துவிடுகிறான். அத்துடன் திரைப்படம் முடிகிறது. காதல் சேர்கிறதா இல்லையா என்பதையே மையமாக வைத்தெடுக்கப்படும் திரைப்படங்கள், அவர்கள் திருமணம் செய்துகொண்டபின்னர் படும் அவஸ்தைகளையும், சந்திக்கும் மண உளைச்சல்களையும், முன்பு அவள் காலில் விழுந்து கெஞ்சிய ஆண் பிறகு எப்படி அவளை அடக்கி ஆள்கிறான் என்றோ தொடர்வதில்லை (வெகு சில படங்கள் 80 - 90 களில் இருக்கலாம்)..

திரைப்பட பாடல்கள் அணைத்திலும், பெண்ணின் அழகை அங்குலம் அங்குலமாக வர்ணித்து ஆண் கவிஞர்கள் பாடி வருகிறார்கள். பெண்ணுக்குண்டான அத்தனை உணர்ச்சிகளுக்கும் (தாய்ப்பாசம், தங்கைப்பாசம், இன்னும் பிற) அவர்களே முதலாளியாக நின்று பாடுகிறார்கள். அதையும் மீறி பெண் அத்துறையில் வந்துவிட்டால், அவள் அத்துறையை சார்ந்த ஆணின் பாலியல் தேவையை தீர்த்துப் பெற்றதாக கூறுவார்கள். உலகமெங்கிலும் ஆணுக்கு பணம், பெண்ணுக்கு உடல் இந்த தீர்மானம் தான் ஆணாதிக்கத்தின் மைய்ய நோக்கு. இதுவே பெண்களின் உறுப்புகளுக்கு எதிராக அவர்களை கட்டவிழ்த்துவிடுகிறது. விளைவு ஆண் வரலாறு, ஆண் மதம், ஆண் இலக்கியம், ஆண் அதிகாரம், ஆண் அரசியல், ஆண் சர்வாதிகாரம், ஆண் வன்முறை.

(சிறு குறிப்பு: கட்டுரைகளில் நான் குறிப்பிட்ட மார்க்ஸ், எங்கெல்ஸ் இவர்களின் தத்துவத்தை பின்பற்றுபவர்கள் கூட ஆணாதிக்கத்திற்கு விதிவிலக்கல்ல)

ஆணின் பெண் - பாகம் 2


நான் படித்த, கேட்ட பண்டைய இலக்கியங்களில் பெரும்பாலும் இல்லை முடிவாகவே சொல்லலாம் பெண் எப்பொழுதும் உணர்ச்சியை மட்டும் உணர்கிற வெளிப்படுத்துகிற ஒரு பிராணியாகவே சித்தரிக்கப்படுகிறாள். பெண்ணைப்பற்றி வரும் ஆண் சிந்தனைகள் [ இதில் சாபக்கேடு என்பது சக பெண்ணே இந்த ஆண்களின் வார்த்தைகளை நம்பி அவளும் அப்படியே எழுதத்தொடங்கியதுதான் ] அவள் அழகியலை வர்ணிப்பதாகவும், காதலன் பிரிவால் விரகதாபத்தின் உச்சியில் அவளும், அவளுக்கு ஒரு தோழியும் அறைகூவல் விடுவதாகவுமே உள்ளது. இதிலும் அழகு என்பது ஆண்களின் காமத்தை பேணுகிற ஒன்று மட்டுமே. ஏதோ ஓரிடத்தில் மட்டுமே அவளின் வீரம் (அதுவும் ஆண், பெண் தன்னை ஆண்டுவிடக்கூடாதென்ற நோக்கத்தில் கருணைக் கொள்கையை முன்வைத்து) குறித்து பேசுகின்றனர். மேலும் புராணங்கள், பதிவிரதைக் கதைகள் எல்லாம் பெண் மேற்கொள்ளவேண்டிய சகிப்புத்தன்மைகளை பட்டியலிடுகிறது. அவ்வாறு அவள் நடக்கும் பட்சத்தில் அவள் பத்தினித் தெய்வமாகிறாள். ஆண்களுக்கு கட்டுப்பட்ட தெய்வம். இல்லையேல் பிடாரி.

ஒரு முனையில் அழகியலை வர்ணித்து பெண்ணுக்கு ஆடை, ஆபரணங்கள் , அலங்காரங்கள் இவற்றின் மேல் மோகம் வரவழைத்தும், மறுமுனையில் ஒழுக்கம், பத்தினித்தன்மை ஆகிய அர்த்தமற்ற கூற்றுகளை அரங்கேற்றி அவள் தெய்வீகத்தன்மைக்கு உயரும் மோகத்தையும் சிறிது சிறிதாக ஏற்றியுள்ளர்கள் ஆண்கள். அழகியல் வர்ணிப்புகள் எல்லாமே ஓர் ஆணின் கண்களுக்கு விருந்தாக எவ்வாறெல்லாம் அவள் காட்சியளிக்க வேண்டும் எனும் விதியாக உள்ளதை நாம் அறியா வண்ணம் திறம்பட வகுத்துள்ளனர். அந்த கருத்து ஊசி ஏற்றிய விஷ மருந்து ஆண்டாண்டு காலமாய் பெண் மரபணுக்குள் புகுந்துகொண்டு, அணுக்களையே மாற்றியமைக்கும் வல்லமைப்பெற்று திகழ்கிறது.

இந்தியாவில் பெண்ணை அடிமைப்படுத்தியதில், பார்ப்பனியர்களின் பங்கு பெரிதும் உள்ளதாக நான் காண்கிறேன். (கடவுளின் பெயரால் மொத்த மக்கள் இனத்தையும் அடிமைப் படுத்திய பேருள்ளம் கொண்டவர்களாயிற்றே அவர்கள்). பெண்ணை தனிக் கடவுளாக வழிபாட்டு வந்த காலத்தில் (கொற்றவை), அவளை ஆண் கடவுளின் மனைவியாக கதைகள் புனைந்து, ஆடவும் பாடவும் கணவனின் காலடி பிடித்து சேவை செய்யவும், அவன் கோபம் கொண்டு சபிக்கும் பொழுது சாப விமோசனம் கேட்டு மன்றாடவும் வைத்து பெண்ணின் நிலையை இழிவாக விதித்தனர். பின்பு உழைப்புக்கு அஞ்சி, சோற்றுக்கு வழி வேண்டி கோவில்களை நிறுவி அங்கே பெண் தெய்வ சிலைகளை ததும்பும் முலைகளையும், வடிவமான இடையும் வைத்து வடித்து அப்பாவி மக்களுக்கு வக்கிரத்தை கடவுளின் பெயரால் அறிமுகம் செய்தனர்.

ஒவ்வொரு சாங்கியங்களாக தோற்றுவித்து, அதற்கு பின் பெரும் தத்துவங்கள் இருப்பதாக பொய் கூறி, கயமைகளைக் கற்பித்து அற்பமாக வயிற்றை கழுவிவந்த இவர்கள், ஒவ்வொரு ஆணுக்குள்ளும் புராணங்களில் கூறியுள்ளது போல் தன் மனைவி பெரும் சகிப்புத்தன்மை உள்ளவள்ளக, பதிபக்தியுடன் அடிமையாக திகழவேண்டும் எனும் பேராசையை அறியாமையை பயன்படுத்தி, அரசுகளை கையில் போட்டுக்கொண்டு விதைத்தனர்.

ஓர் ஆண், அவன் அடையப்போகும் பெண்ணுக்கு இப்படியெல்லாம் விதிகள் வைத்துவிட்டு, அவன் புணர்ச்சி அரிப்புக்கு தாசி குல மரபை அதிகார போக்குக்கொண்டு நிறுவி அனுபவித்து வந்திருக்கிறான், கடவுளின் பெயரால். இங்கு பெண்ணுக்கெதிரான எல்லா அநியாயங்களும் கடவுளின் பெயராலேயே நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்பதை நான் காண்கிறேன். படுக்கைக்கு ஒத்துழைப்பவளை தேவதை என்றும், மறுப்பவளை தேவடியாள் என்றும் பட்டங்கள் சூட்டி மகிழ்ந்து வருகின்றனர் நம் உடன்பிறப்புகள்.

பெண்களை அனுபவிக்கவும், அடிமைபடுத்தவும், அவமானப்படுத்தவும் ஆண்கள் அவள் உறுப்பையே கையில் எடுக்கும் துற்பக்கியத்திற்கு ஆளாகியுள்ளர்கள். எதை அவர்கள் சாதனையாக கருதினார்களோ அதுவே அவர்களுக்கெதிராய் திரும்பும் காலம் நெருங்கிகொண்டிருக்கிறது.

ஆணின் பெண் - பாகம் 1

பெண் உறுப்பைப்பற்றி, பெண் எழுதக்கூடாது என்ற ஆணின் அதிகாரத்தை முன் வைத்து...

பல்லாயிரம் வருடங்களாக பெண்களை கவர்ச்சிப் பொருளாகவும், புணர்ச்சித் துணையாகவும் , வீட்டு வேலைக்காரியாகவும் இன்ன பிற அடிமையாகவும் நடத்துவதற்கு ஏதுவாக இலக்கியங்கள், புராணக்கதைகள், ஒழுக்ககூறுகள், பெண் கடவுள் தன்மை என்று வரைந்து, பல பல வழிகளில் அவள் பிறப்பின் உண்மை அறியா வண்ணம் ஓர் மாயைக்குள் புதைக்கப்பட்டிருப்பதை அவளே அறியா வண்ணம் மிகவும் சாமர்த்தியமாக புனைந்திருக்கிறார்கள். இந்த மாயையின் பரிதாப கட்டம் என்னவென்றால், இப்புனைப்புகளை கண்டுகொண்டுவிட்டதாக ஒருவள் அறைகூவல் விடும் பொழுது, பெண்களே அதை எதிர்க்கவும், பேசும் பெண்ணின் மீது கல் எரிந்து கொல்லவும் கூட இந்த ஆணாதிக்க சமுதாயம் அவள் மூளையை, அவளே அறியாமல் சலவை செய்து வைத்திருப்பது தான்.

ஒவ்வொரு பெண்ணும் குடும்பத்தின் ஆரம்பகால தோற்றம் குறித்து கற்க வேண்டும். பின்பு பெண் ஏன் அடிமை ஆனால் எனும் பெரியாரின் புத்தகத்தை கண்டிப்பாக வாசிக்க வேண்டும். பின்பு ஆண் பெண் உயிரியல், உளவியல் குறித்து ப்ராயிட், சிமோன் தே பொவ்வார் போன்றோரின் கூற்றுகளை படிக்க வேண்டும். இக்கல்வி பெண்ணுக்குரிய தாழ்வு நிலைகளை ஆண் சமூகம் எவ்வாறு கட்டமைத்திருக்கிறது என்று அறிய உதவும். இவற்றை உணர்ந்தவுடன் ஆணுக்கெதிராய் நாம் போர்க்களத்தில் குதிக்கவேண்டியதில்லை எனும் நிதானம் பிறக்கும். பண்டைய காலத்தில், அறிந்தே பெண்ணை அடிமையாக்கிய ஆணாதிக்கத்தை, அறியாமல் பின்பற்றிவரும் நம் சக இனமான ஆண்களுக்கு எடுத்துச்சொல்லும் பக்குவமும் , தன்னம்பிக்கை பிறக்கவும் இது போன்ற வாசிப்புகள் உதவும் என்று நான் கருதுகிறேன்.

உறுப்புகளும், கருப்பையும் மட்டுமே ஆணிடமிருந்து, பெண்ணை வேறுபடுத்திக்காட்டுகிறது. இயற்கை மிகவும் அழகாக ஒரு உயிருக்கு மற்றொரு உயிரை துணையாக படைத்துள்ளது. ஆதி காலத்தில் இவ்வுண்மைக்கு குறை ஏதுமின்றி, ஆண் பெண் பேதமின்றி வாழ்ந்துவந்ததாக பல்வேறு அறிஞர்கள் எழுதியுள்ளார்கள்.

எங்கல்ஸ் - குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் - தமிழில் நா. தர்மராஜன். இப்புத்தகத்தில் பாஹா பென்னின் கருத்தை குறிப்பிடுகிறார் ஆசிரியர்:
  1. தொடக்கத்தில் மனிதகுலம் வரைமுறையற்ற புணர்ச்சியில் ஈடுபட்டிருந்த நிலையில்தான் இருந்தது. இந்நிலைக்கு ஆசிரியர் பொதுமகளின் முறை (hetaerism) என்று பெயரிட்டுருக்கிறார்.
  2. இந்த வரைமுறையற்ற புணர்ச்சி காரணமாக யார் தந்தை என்று நிச்சயிக்க முடியவில்லை ஆகவே மரபு வழியைத் தாய்வழியாகவே - தாய் உரிமைப்படிதான் - கணக்கிட முடியும்.
(மேலும் ஒரு பெண் பிள்ளை பெறுவதற்கு, ஆண் தான் தான் காரணம் என்று அறியவே பல காலங்கள் ஆனதாக நான் படித்தது நினைவுக்கு வருகிறது)

3. எனவே தாய்மார்கள் என்ற முறையில், இளம் தலைமுறையினருடைய பெற்றோர்கள் என்று பெண்கள் மட்டுமே திட்டமாக உறுதிப்படுத்தப்பட முடிந்த காரணத்தால் அவர்கள் மிகவும் உயர்ந்த சலுகையுடனும், மரியாதையுடனும் நடத்தப்பட்டார்கள் என்கிறார். (gynaecocracy) (இது போன்ற வரலாற்றை நான் 'பெண் தெய்வ வழிப்பாடு' குறித்து ஆராய்ச்சி செய்த போதும் படித்திருக்கிறேன்)

4. ஒரு பெண் ஓர் ஆணுக்கு மட்டுமே உரியவள் என்கிற ஒரு தார மனத்துக்கு மாறிச் சென்ற நிலை ஆதிகால மதக் கட்டளையை மீறியதையே குறித்தது. இந்த மதக் கட்டளையை மீறியதற்கு கழுவாய் செய்தாக வேண்டும், அல்லது அதைப் பொறுத்துக் கொண்டு அனுமதி கொடுப்பதற்குப் பரிசம் தர வேண்டும், அதாவது அந்தப் பெண்ணைக் குறிப்பிட்ட காலத்துக்கு மற்ற ஆண்கள் துயிப்பதற்கு ஒப்படைக்கவேண்டும் என்று பாஹா பெயினின் சாட்சியங்களுடன் எங்கல்ஸ் குறிப்பிடுகிறார்.

சிமோன் தே பொவ்வார் அவர்கள் தன் புத்தகத்தில் - மனிதர்கள் நாடோடிகளாக வாழ்ந்தபோது பெண்கள் கருவுற்ற காலத்தில், வேட்டைக்குச் செல்வதும், இடம் பெயர்தலும் கடினமாக இருந்த காரணத்தால் வாழ்க்கை வசதிமுறைக்காக (மனமுவந்து) பணிகளை பகிர்ந்துகொண்டதாகவும் (பாலியியல் வேற்றுமையும், அடிமைத்தனமும் ஏதுமின்றி), அதுவே பின்பு ஆண்கள் வெளியில் சென்று பொருள் ஈட்டும் உரிமைப்பெற்றவராகவும், பெண்கள் வீட்டை பேணும் அடிமையாகவும் மாற்றியமைக்கப்பட்டதாக குறிப்பிடுகிறார்.

பின்பு ஆண்டான் அடிமை, நிலப் பிரபுத்துவம், மன்னராட்சி, அரசமைப்பு என்று குழு மேலாண்மை முறை அதிகாரத்தின் கைக்கு மாறி வரும் பொழுது திருமணம், குடும்பம் ஆகிய வாழ்வியல் முறை சொத்துக்களை தக்கவைத்துக்கொள்ளும் உள்நோக்கோடு மாற்றியமைக்கப்பட்டன. இம்மாற்றங்களுக்கேற்ப பெண்களை தயார் படுத்த தந்தை வழி சமுதாயம் தோற்றுவிக்கப்பட்டு, பெண்கள் தங்களை பலகீனமானவர்களாகவும் ஆண்களுக்கு சேவகர்களாகவும், புணர்ச்சித்துணையாகவும் ஆக்கப்படுகிறாள். உலகம் மிக எளிதாக ஆண்களின் உலகமாக அவர்களின் சிந்தனையாக மாறுகிறது. படைத்த, படைக்கப்பட்ட எல்லாம் பெண்ணுக்கு அடிமைக்கோலமாகவே ஆணுலகம் புனைந்தது . இலக்கியமும் விதிவிலக்கல்ல. அவள் பெண்ணுறுப்பை புனிதப்படுத்தும் போர்வையில், அதையே அவளுக்கெதிராக திருப்பி ஏவி விட்டிருக்கிறார்கள். தனிமனிதப் பேராசை, பின்பு கூட்டு விதியாக மாறி அதிகாரத்தின் துணையோடு கட்டமைப்பாக மருவி நிற்கிறது. ஒரு கருத்தானது லட்சம் பேரைப் பற்றுகையில் அது பொருளாக மாறுகிறது என்ற மார்க்சின் கூற்றை நாம் இக்கணத்தில் நினைத்தாலும் பெரும்பான்மை எப்பொழுதும் சரியான முடிவையே எடுக்கும் என்பதை நாம் நம்பக்கூடாதென்ற லெனினின் மேற்கோளையும் நாம் மறக்கமுடியாது.

பல மணமுறை எண்ணற்ற ஆண்டுகளாய் வழக்கிலிருந்து வந்துள்ளது, மக்கள் தொகை பெருக்கமும், வாழ்வியல் மாற்றங்களும்,ஆணின் உளவியல் காரணமாய் பொறாமைக் குணமும் ஒரு தார முறையை ஒரு மாற்றாக பரிந்துரைத்திருக்ககூடும், பின்பு பல அரசியல் காரணங்களால் ஒழுக்க விதிகள் புகுத்தப்பட்டு இன்று அது உச்ச நிலையை அடைந்து, மூச்சு திணறிக்கொண்டிருக்கிறது.

Jan 7, 2010

எலும்புத்துண்டை கடைவாய் வலிக்க தின்னப் பழக்கப்பட்ட நாய்.

நான் நாயாக வளர்க்கப்பட்டதாகவே உணர்ந்திருந்தேன். நன்கு பழக்கப்படுத்தப்பட்ட நாய். எவ்வாறு மனிதத்தசைகளின் சுருக்கங்களுக்கேற்ப வினைசெய்ய வேண்டுமென வலிக்க வலிக்க பழக்கப்படுத்தப் பட்ட நாய். சொற்களற்ற நாய்.

நாகரீகத்தாலும், பழக்கவழக்கத்தாலும் கலாச்சாரத்தின் பெயராலும், பால்வகைப்பிரிவுகளாலும், பாரம்பரியத்தின் பெயராலும் நடக்கும் கற்பிதங்களை சந்தேகிக்கவோ, கேள்விகேட்கவோ, அதற்காக நான் வாயைத்திறக்க எண்ணும்போதெல்லாம் என்வாயில் திணிக்கப்பட்ட நடத்தைப்பேறென்னும் எலும்புத்துண்டை கடைவாய் வலிக்க தின்னப் பழக்கப்பட்ட நாய்.

என்னைக் குளிப்பாட்டி ஓர்நாள் நடுவீட்டில் வைத்தார்கள். ஆவலாய் மலம் ஊண்பேன் என்ற எதிர்பார்ப்பு அவர்கள் கண்களில் மிள்ர்வதையும் அவர்கள் எதிர்பார்ப்புக்கு பதிலாய் நானென் குலைந்த வாலை சற்றும் அசைக்காது நீங்கள் உண்ட மலம் எனக்கானதில்லையென்பதை எனக்கு போதித்திருந்த நடத்தைகளைக் காறி உமிழ்ந்துவிட்டு பற்கள் நெறிபடச் சொன்னேன். பழக்கப்பட்ட வெற்று நாயாகிய என் மனதில் ஏன் இப்படி எனை நாயாக உணர்கிறீர்கள் என்ற கேள்வி எனக்குள் எழுமென்றோ, அவர்களிடம் கற்றுக்கொண்ட என் விதிகளின்படி அவர்களையே வேவு பார்ப்பேனென்றோ அவர்கள் அறிய வாய்ப்பில்லை.

என் அனுமதியை என் குழைந்த உடலால் அறிந்து பழக்கப்படுத்தியவர்களுக்கு என் உடல் சுபாவம் ஒன்றே என்னை அறிதலின் விதி. சுபாவன் என் குணமல்ல வளர்க்கும் விதியறிந்தவர்களே. நீங்கள் வினைச்செயல்களைப் பழக்கம் என்று நம்பி அதன் பின் உங்கள் கால்களை ஓடவைப்பது காண்டு நான் அறுவெறுக்கிறேன். நான் வெற்று நாய் உங்கள் வாயசைவுகளுக்கு ஒட்டுமொத்த உடலையும், என்னையும் ஒப்படைத்த வெறும் நாய். நன்றியுள்ள மிருகம் வெற்றுநாய்.