Mar 28, 2020

இராமாயணம் ஒரு விஷ விருட்சம் - ரங்கநாயகம்மா



இராமராஜ்ஜியம் இலட்சக்கணக்கான தொழிலாளர்களை தலைநகரில் கைவிட்டுவிட்ட அவலத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பண்பாடற்ற, அறிவற்ற ‘லேபர்ஸ்’, ‘இர்ரெஸ்பான்ஸிபிள் இடியட்ஸ்’ என்று ‘தேச பக்தாள்’ சிலர் தொழிலாளர்களை குறை கூறி நியாயம் பேசிக் கொண்டிருப்பார்கள். அரசை எதிர்க்க இவர்கள் ஒருபோதும் துணிய மாட்டார்கள். எதிர்ப்பதை விடுங்கள், எது ஒன்றையும் கேள்வி எழுப்ப இவர்களுக்கு முதுகெலும்பென்ற ஒன்று இருக்காது! அத்தகையோரின் அறியாமைக்கும், சுயநலத்திற்கும் பலியாவது உழைக்கும் வர்க்கமே!

இராமனும் வரமாட்டான், கிருஷ்ணனும் வரமாட்டான் என்பதை எளிய மக்களுக்கு எடுத்துச் சொல்ல உதவிடுங்கள் தோழர்களே! – கொற்றவை!

இராமாயணம்
ஒரு விஷ விருட்சம் - ரங்கநாயகம்மா
ஆங்கிலம் வழி தமிழில் - கொற்றவை

அறிமுகம்

இந்நூலின் சில வரிகளைப் படித்ததுமே இதை எரித்துவிட வேண்டும் என்னும் ஆவேசம் சில உத்தமர்களுக்கு ஏற்படும். ஆனால், அவர்களால் காகிதங்களை எறிக்க முடியுமே ஒழிய சிந்தனைகளை அல்ல. சிந்தனை என்பது இயற்கையாக உதித்து, வரலாற்றின் போக்கில் அனுபவங்கள் வாயிலாக வளரக்கூடியது. இந்த உண்மையை நிராகரிப்பதால் யார்க்கும் பயனில்லை.

இராமாயணம்ஒரு விஷ விருட்சம்என்னும் தலைப்பு சில ‘பகுத்தறிவாளர்களைக்’ கூட தொந்தரவு செய்கிறதென்றால், அது இராமாயணத்தின் குற்றமே ஒழிய என்னுடையதல்ல. எந்த விதியிலிருந்து இந்த விஷ விருட்சம் வளர்ந்தது, எந்த விஷப் பாம்புகளுக்கு அது தன்னுள் தஞ்சமளிக்கிறது என்பதை புரிந்து கொண்டால், இந்த தலைப்பின் அவசியத்தை நீங்கள் உணர்வீர்கள்.

இந்நூல்ஆசாரப் பண்டிதர்களுக்கானதல்ல; கடவுள் பக்தாள்களுக்கானதுமல்ல, நகை நட்டுகள் அணிந்து கோவில்களுக்குச் செல்பவர்களுக்கான நூலுமல்ல, ஆசார விதிகளை மீறும் உடை அணிந்து, ஒப்பனை செய்து விருப்பம்போல் இருப்பதுமுற்போக்குஎன்று அராஜகமாக எண்ணும் பெண்களுக்கு மத்தியில் வாழும் உத்தம புத்திரர்களுக்கான நூலுமல்ல. மாறாக, சுயநலமும், சமய வெறியும் பீடிக்காமல், ஏமாற்றின்றி விழிப்புணர்வுடன், உண்மையை திறந்த மனதோடு ஏற்கத் தயாராக உள்ள குழந்தைகளுக்காக எழுதப்படும் நூலிது. வார இதழ்கள், வெகுஜன நாவல்களை மட்டுமே படித்து வேறு சிந்தனைகளை நாடாத இளைஞர்களுக்கான நூலிது.

தலைமுறை தலைமுறைகளாக அரசியல் மற்றும் பொருளாதார சுரண்டலுக்குள்ளாகி, மிகவும் கேவலமான, துன்பகரமான, ஒடுக்குமுறை வாழ்வை வாழ்ந்து கொண்டு, விடுதலைக்கான நம்பிக்கையை இழந்து தவிக்கும் அந்த பெரும்பான்மை மக்களின் நலன் காக்க இந்நூல் உதவும் என்று நான் நம்புகிறேன்.

பழையனவற்றை எல்லாம் நிராகரிப்பதே முற்போக்கு என்று சிலர் எண்ணுகிறார்கள்.” – புதிய சிந்தனைகள் தோன்றும்போது, வழக்கமாக நாம் எதிர்கொள்ளும் விமர்சனமிது. ஆனால் நாம் இங்கு பேசுவதுபழையவிஷயமல்ல.  அது இன்னும் பழையதாகவில்லை. இராமாயணம் போதிக்கும் மதிப்பீடுகளும், கலச்சாரமும் இன்றைக்கும் நம்வாழ்வில் பின்னிப் பிணைந்துள்ளன. அது இன்னும் பழையதாகவில்லை என்பதை உறுதிசெய்ய பிரச்சினைகளுக்கான தீர்வாக, ‘இராம நாமத்தை ஜபித்தால்போதும் என்று இன்றைக்கும் வழங்கப்படும் ஆசீர்வாதம் ஒன்றே போதுமானது.

அதேபோல், ஒன்றை விமர்சிப்பதால் பழையன எல்லாவற்றையும் நிராகரிப்பதாகி விடாது. பழையனவும் மனிதவரலாறே. வரலாற்று வளர்ச்சியில், இராமாயணத்தின் தோற்றம், அதன் வளர்ச்சி, அதன் இயல்பு மற்றும் உள்ளடக்கம் அது அன்றாடம் பிரச்சாரம் செய்யும் சமூக அமைப்பின் உண்மை முகம் ஆகியவற்றை வெளிச்சம் போட்டு காட்டுவதே இந்நூலின் நோக்கமாகும்.

இராமாயணத்தை பல கவிகள் இயற்றியுள்ளனர். வால்மீகியின் இராமாயனத்தை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே எண்ணற்ற கதைகள் எழுதப்பட்டுள்ளன. அப்படியெனில் எதை நாம் அடிப்படையாகக்கொள்வது?” என்னும் கேள்வி நிலவுகிறது. அனைத்துப் பதிப்புகளும் ஒன்றுதான். தொடரும் பாடல்களில் அதை நாம் காண்போம்.

இராமாயணம் உண்மைக் கதையாஇல்லையா? அப்படி உண்மையில் நிகழ்ந்த வரலாறெனில், அக்காலத்தில் வாழ்ந்தவர்கள் இறந்திருப்பார்கள், இல்லையா? அப்படியென்றால், அந்த மனிதர்கள் பற்றி இப்போது விவாதித்து என்ன பயன்? அதுஉண்மை நிகழ்வல்லஎனில், ஒரு புனைவு குறித்து இவ்வளவு பேச்சு தேவையா?” – இவையும் முக்கியமான கேள்விகளே. இராமாயணம் உன்மைக் கதையோ இல்லையோ, அதன்உள்ளடக்கமேநமது பிரச்சினை. இராமன் என்பவன் உண்மையில் வாழ்ந்தானோ அல்லது அவன் ஒரு கவி படைத்த கற்பனைக் கதாபாத்திரமோ, கரு ஒன்றுதான்.

இந்தக் கதையிலிருந்து நமக்கு பின்வரும் விஷயங்கள் தெளிவாகின்றன:
  • ·        சமூகமானது ஏற்கனவே பணக்காரர் வர்க்கம் ஏழை வர்க்கம் என்று பிளவுபட்டிருந்தது.
  • ·        செல்வந்தர்களின் பிரதிநிதிகளாக, அவ்வர்க்கத்தின் நலனுக்காக தசரதன், இராமன் மற்றும் இராவணன் ஆகியோர் கொடுங்கோல் ஆட்சி நடத்தி  வந்தனர்.
  • ·        சுதந்திரமின்றி, தனித்துவமின்றி பெண்கள் ஆணாதிக்க இருளில்,வாழ்ந்து வந்தனர்.
  • ·        சாதாரண மக்களோ மோசமான ஏழ்மை, சாதிய பாகுபாட்டில் உழன்றதோடு பிச்சையெடுத்தல், விபச்சாரம் ஆகியவற்றில் ஈடுபட்டும் மத நம்பிக்கைகளிலும் மூழ்கியிருந்தனர். ஓர் இனத்திற்கும் மற்றொர் இனத்திற்கும் இடையில் போர், ஒரு வர்க்கத்திற்கும் மற்றொரு வர்க்கத்திற்கும் இடையில் போர்.
  • ·        நோய்த்தொற்று போன்று ஆளும் வர்க்கத்தின் இந்த சுரண்டல்வாத இலக்கியங்கள் மனித மனங்களை ஊடுறுவி முதுகெலும்பையும் கூட அரித்திருந்தது.

 இவ்வாறாக நாம், இராமாயணத்தில் அக்காலத்தைய சமூக அரசியல் பொருளாதார நிலைமைகளோடு, அக்காலக் கொள்கைகள், ஒழுங்கங்கள் பற்றியும் அறிய முடியும். சில புதிய மாற்றங்களோடு அந்நிலைமைகளும், கொள்கைகளும் இன்னும் நடைமுறையில் உள்ளன. இதனை நாம் உணர்ந்து கொள்வது மிகவும் முக்கியம். இராமாயணம் உண்மை நிகழ்வா இல்லையா என்பது அவசியமில்லை.

……….
இந்தமுன்னுரையின்உண்மையான குறிக்கோள்

மக்கள் மத நூல்கள், நீதிநெறி நூல்கள், காவியங்கள் அல்லது சமூக நிலைமைகளை பிரதிபலிக்கும் எந்த நூலைப் படித்தாலும், சிலர் அதை தீவிரமாக போற்றுவர், சிலர் தீவிரமாக அதனை எதிர்ப்பர். ஒரே நூல் ஏன் இப்படி முரண்பட்ட கருத்துகளை உருவாக்குகிறது? ராமாயணத்தையே எடுத்துக் கொள்வோம்,  இக்காலத்திலும் அதனை உயர்த்திப் பிடிக்கும் நபர்கள் உள்ளனர். அதன் போதனைகளை போற்றுகின்றனர். அதேவேளை வேறு சிலர் அந்த போதனைகளை எதிர்க்கின்றனர் ஏன்? ஒரு குழந்தையை வளர்ப்பதில், தாய் தந்தை இருவருக்கும் பொறுப்பு இருக்கும்போது, ‘தந்தை பக்திமட்டும் ஏன் தனிச் சிறப்பான கடமையாகிறது? தாய் பக்தி ஏன் வலியுறுத்தப்படவில்லை? பதிபக்தி உள்ளது, பத்தினி பக்தி ஏன் ஆணின் கடமை ஆவதில்லை? அதுமட்டுமின்றி, பாலியல் உறவில் கணவனுக்கு சுதந்திரம் உண்டு ஆனால் பதிபக்தி மனைவிக்கு அவசியக் கடமை. ஏன் சில பெண்கள்பத்தினிகளாகவும், சில பெண்கள்விபச்சாரிகளாகவும்மாறினார்கள்? ஏற்றத்தாழ்வுகள் ஏன் தோன்றின? இதுபோன்ற நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு நமக்கு சரியான பதில் வேண்டும்.

இப்படியெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது. பல்லாயிரம் வருடங்களுக்கு முன் நம் முன்னோர்கள் இக்கதைகளை கூறியுள்ளனர்.  இதுதான் நமது பண்பாடு.” என்றால் அது சரியான பதில் இல்லை.

சரி,  நம் முன்னோர்கள் சொன்னார்கள்? அவர்கள் ஏன் அப்படி சொன்னார்கள்? சரி இதுதான் நமது பண்பாடு, ஆனால் ஏன் இப்படி உள்ளது?” என்று புதியதொரு கேள்வி எழ வேண்டும்.

ஒரு கேள்வி எழுந்தால், நமக்கு அதற்கு பதில் வேண்டும்.

நிலத்தில் வளரும் ஒரு புல்லைக் கண்டு, “ஏய் புல்லே வளராதே! நில்! முனிவர்களும், வேதங்களும் நீங்கள் வளரக்கூடாது என்று கட்டளை இட்டுள்ளன! நில். நீ வளர்வது நல்லதல்ல. நில்!” என்று சொன்னால் புல் வளர்வது நின்றுவிடுமா? அதேபோல் தான் முன்னோர்கள் சொன்னதாலேயே கேள்விகள் எழக்கூடாது என்றால் நிறுத்திவிட முடியாது.

முன்னோர்களைப் போல், கேள்வி கேட்கும் அறிவை மட்டுப்படுத்தும் போக்கை விட ஒன்றின் ஆணிவேரை ஆய்வு செய்து புரிந்து கொள்ளவேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

இராமாயணம் போன்ற மதப் புராணங்கள் ஏதோ கடவுள் மீதான பக்தியைக் கூறுவதாக தோன்றும். பக்தி என்றால் என்ன? கடவுள், அரசர், பிராமணர் அல்லது எதோ ஒன்றின் மீதான பக்தி என்றால் என்ன? இது அவசியமா? எதற்காக அவசியம்?

இக்கதைகளில் சொல்லப்படுவது மனித வரலாறுதானா? ‘இராமாயணத்தில்கடந்தகால வரலாற்றை காண முடிகிறதா? இந்தக் கதை எக்காலத்தைக் குறிக்கிறது? மக்களுக்கு அது என்ன போதிக்கிறது? எந்த ஒரு மத நூலைப் படித்தாலும், புராணங்களைப் படித்தாலும் நாம் இக்கேள்விகளை எழுப்ப வேண்டும்.

மனிதர்கள் எப்போதும் தங்களது கடந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால வரலாற்றை இயன்றவரை அறிந்து கொள்ளவேண்டும்!

- ரங்கநாயகம்மா
தமிழில் - கொற்றவை

இந்த ஊரடங்கைப் பயன்படுத்தி இந்துத்துவமானது தனது மதப் பிரச்சாரத்தை மேற்கொள்ள இராமாயணம், மகாபாரதம் ஆகிய தொன்மங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் போகிறது. இது கடவுளரின் கதை என்று நம்பும் உரிமை மக்களுக்கு உண்டு. ஆனால் மூட நம்பிக்கையானது அறிவிற்கு எதிரி. எனவே இக்கதைகளை அக்கால மக்கள் வரலாறாக - முற்கால சமூக வாழ்வியல் எப்படி (மோசமாக – அதிகாரம், சாதி, ஏற்றத்தாழ்வு நிறைந்ததாக) இருந்தது என்பதை தெரிந்துகொள்ளும் வகையிலும் காணலாம். அதில் கூறப்படும் மதிப்பீடுகளை கேள்விக்கு உள்ளாக்கலாம். மத இலக்கியங்கள் (எம் மதமானாலும்) மக்களை மூளைச் சலவை செய்யவே இயற்றப்பட்டன. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆளும் வர்க்கமும், அரசும் ஏற்படுத்தும் சட்ட திட்டங்களை மக்களே விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்னும் நோக்கில் எழுதப்பட்டவை. (எழுதப்படுபவை).

“மனிதனாகப் பிறந்தவர் கேள்வி கேட்காமல் அழியக் கூடாது”. இதுகாரும் நமக்கு போதிக்கப்பட்ட அனைத்தையும் கேள்வி எழுப்புங்கள்! ஒவ்வொன்றிலும் ஒளிந்திருக்கும் அதிகாரக் குரலை கண்டுகொள்ளுங்கள்! குறிப்பிட்ட சாதி, மதம், பாலினம், வர்க்கம் தமது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளவே இக்கதைகளை புனைந்தன என்பதை உணர்ந்து பகுத்தறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்!

ஆக்கக் கடவுள் என்று சொல்லப்பட்டவர்களை அழிவுக்கு ஏன் பயன்படுத்துகிறார்கள் என்னும் கேள்வி நமக்கு எழாமல் போனால் ஆறாம் அறிவினால் என்ன பயன்? அது மனிதர்களின் தவறு என்பீர்களானால் , அத்தகைய அராஜகங்களைத் தடுக்க கடவுள் ஏன் அவதாரம் எடுத்து வரவில்லை என்னும் கேள்வியை முன்வைக்கலாம்! தனக்குக் கோவில் கட்டச் சொல்லி, அதற்காக மற்றொரு சமூகத்தை அழிக்கச் சொல்லி சொல்லும் கடவுள் இருக்கக் கூடுமா? எங்கும் நிறைந்திருக்கும் கடவுளுக்கு ஏன் ‘பெட்ரோமாக்ஸ்’ லைட்டே தேவைப்படுகிறது?

வர்க்கப் பகைமைகள் நிறைந்த ஒரு சமூகத்தில் மதம் என்பது ஒடுக்குமுறைக்கான கருவி, மூளைச் சலவை செய்யும் ஆயுதம் என்பதை உணர இனியும் கால தாமதம் ஏன்?

(ரங்கநாயகம்மாவை (என்னையும், வசுமித்ரவையும்) சாதி வெறியர், மண்டை வீங்கி என்றெல்லாம் அவதூறு செய்த சாதியவாதிகள் இப்போது இராமனையும், இராமாயணத்தையும் மார்க்சியக் கண்னோட்டத்தில் விமர்சித்திருப்பதை படிக்கையில் என்ன செய்வார்கள் என்று நினைத்து சிரித்துக் கொள்கிறேன். இராமாயணம் மட்டுமல்லாது ‘இதண்டி மகாபாரதம்’, ‘ஏம் செப்பாயி வேதாலு’ என்று மகாபாரதம், தேவங்கள் என எல்லாவற்றையும் மார்க்சிய நோக்கில் விமர்சித்துள்ளார். சமீபத்தில் தத்துவம் ஒரு சுருக்கமான அறிமுகம் என்ற நூலையும் வெளியிட்டார். வயது, கண் பார்வை கோளாறு என எதையும் பொருட்படுத்தாமல் இன்னும் எழுதிக்கொண்டே இருக்கிறார். ரங்கநாயகம்மா நூல்கள் தற்போது இணைய பதிப்பாக 40ரூபாய்க்கு (ஒரு புத்தகம்) கிடைக்கின்றன.

“பெரியவா சொன்னா கேள்வி கேட்கப்டாது! பெரியவாளையே நீ விமர்சிக்கிறியா” என்பதெல்லாம் பார்ப்பனிய (மத ஆதிக்க) அராஜகம். அதை அனைவரும் உணர வேண்டும்!)

No comments:

Post a Comment