Dec 8, 2018

சில தவறான மற்றும் முழுமையற்ற, அரைவேக்காட்டுச் சூத்திரங்கள்




சாதிகளுக்கு இடையிலான போராட்டம் என்பது கூட அடிப்படையில் வர்க்கப் போராட்டத்தின் சிதைந்த, திரிந்த வடிவங்கள்தான். தலித் அமைப்புகளில் பூர்ஷுவா அல்லது குட்டி பூர்ஷுவா தலைமைகள் இருப்பின், வெவ்வேறு தீர்வுகளை முன்வைத்தாலும், நிலவும் அமைப்புக்குள்ளாக சில சீர்திருத்தங்களோடு பரந்த தலித் மக்கள் கூட்டத்தை அடைத்துவிடுகின்றனர். பாட்டாளி வர்க்க அரசியல் நடவடிக்கை என்பது - ஜனநாயக உரிமைகளின் வரம்புக்குள்ளாக, உழைக்கும் தலித் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவது, அதேவேளை, பரந்த தலித் அல்லாத மற்ற சாதிகளின் பொதுத் தேவைகளோடு அதனை ஒருங்குபடுத்துவது, அதன் மூலம் சாதி ஒழிப்புக்கான ஒரு முழுமையான செயல் திட்டத்தை முன் வைப்பது; மேலும், மேற்கட்டுமான அளவில் நிலவும் பாகுபாடுகள், முரண்பாடுகளை உடைப்பதற்கான தொடர் பிரச்சாரம் மற்றும் இயக்கங்களை முன்னெடுப்பது ஆகியவையாகும்.

இரட்டையர்களின் ஆய்வுக் கட்டுரையின் திருத்தப்பட்ட வடிவத்தை, மேலும் வெளிப்படையான நோக்கங்களோடு ‘நியு சோஷலிஸ்ட் இனிஷியேட்டிவ்’ (ஜனவரி 2011) வரைவு கொள்கை விளக்க அறிக்கையில் காணலாம். அந்த அறிக்கையில் வெளிப்படையாகக் காணப்படும் மாற்றம் என்னவெனில், வர்க்கப் போராட்டங்கள் இனி, சமூக இயக்கங்களாக மட்டுமே வெளிப்படும் என்பது நீக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் வர்க்க மக்களின் போராட்டங்களையும் வர்க்கப் போராட்ட வடிவங்களாக அங்கீகரிக்கிறது, அதேவேளை, மார்க்சிய தர்க்க ஏணிப்படிகள் கொண்டு அடையாள அரசியலின் புதிய பதிப்பை எழுதுவதில் சென்று முடிகிறது. ஒரு மனிதருக்கு ஒரே ஒரு அடையாளம் இருக்காது, பன்முக அடையாளங்கள் இருக்கும் என்கிறது. “சமூக அலகாக ஒவ்வொரு தனிநபரும் பல அச்சுகளில் நிற்கின்றனர்”, “பல அடையாளங்களைத் தங்களோடு சுமக்கின்றனர்.” ஆக, பல அச்சுகளோடு, வர்க்கமும் ஒன்று. மேலும், “பாலினம், சாதி, இனம், இனக்குழு, தேசியம் மற்றும் மத அடையாளங்கள் ஆகியவை, பல வழிமுறைகளில் வர்க்க உறவுகளை ஊடறுத்து, சமூக யதார்த்தத்தை உருவாக்கும் சில சமூக உறவுகளின் உதாரணங்கள்.” ஆக, இந்த அச்சுகளுக்கென்று சுதந்திரமா இருப்பு உள்ளது, அவை, வர்க்க உறவுகளை ஊடறுத்து செல்கிறது. முன்னர், அது தம்மளவிலேயே அச்சுகள் என்றனர். மார்க்சிய ஆய்வுகளுக்கு அப்பாற்பட்டு நிற்கக்கூடிய இதுபோன்ற மாற்று சொல்லாடல்கள் குழப்பம் விளைவிக்கக் கூடியவை. ஆனால், அதன் நோக்கம் தெளிவானது.

அதாவது, அனைத்து முரண்பாடுகளையும் சமமானதாக்கி, சமூக இயக்கத்தை, முதன்மை சமூக முரண்பாட்டோடு இணைத்து ஒட்டுமொத்த மக்களின் வர்க்கப் போராட்டமாக ஒருங்கிணைக்காமல் அடையாளப் போராட்டமாக சிதைப்பதே இவர்களின் நோக்கம். இத்தகைய ஏராளமான அடையாளங்கள் கடந்த காலத்தின் சுமை என்றும், வர்க்கக் குழுக்களாவதைத் தடுப்பதற்காகவே நனவுபூர்வமாக அவை காக்கப்பட்டு வந்துள்ளன என்றும் மார்க்சியம் நமக்குச் சொல்கிறது. சில எச்சங்கள் மேற்கட்டுமான அளவில் நிலைத்திருக்கின்றன, சிலது, புதிய உற்பத்தி உறவுகளின் அடித்தளத்திலும் வேரூன்றி இருக்கின்றன. சிலது, கற்பனையான அடையாளங்கள், ஒன்று கடந்த கால எச்சங்கள்  அல்லது கட்டமைக்கப்பட்டவை. சிலது ஒட்டுமொத்த வர்க்க சமூகத்தின் காலகட்டத்திலும் உறுதியாக நிலைத்திருக்கும் முரண்பாடுகள், உ.ம். பாலினப் பிரச்சினை. முன்னர், பெண் ஒடுக்குமுறைக்கு நிலப்பிரபுத்துவ பண்பு இருந்தது, இப்போது அதற்கு முதலாளித்துவ பண்பு உள்ளது. முதலாளித்துவ சமூகத்தில், சில முரண்பாடுகள் பிரதானமாக, பல மட்டங்களில், பல வடிவங்களிலான முரண்பாடுகளின் கீழ் வருகிறது. பல முன்-முதலாளித்துவ அமைப்புகளுக்கு புத்துணர்ச்சி ஊட்டி முதலாளித்துவமானது தத்தெடுத்துக்கொண்டது. கடந்த கால முரண்பாடுகளுக்கு ஒரு வெளிவேஷ தொடர்ச்சியைக் கொடுக்கிறது என்பது வெளிப்படை, ஆனால் அதன் வர்க்க அமைப்பு சாரத்தில் மாறாமல் இருக்கிறது.

உற்பத்தி நடவடிக்கை என்பது மனித நடவடிக்கையின் அடித்தளமாக இருக்கிறது, ஆகவே, உற்பத்தி உறவுகளே சமூகத்தின் அடித்தளமாக இருக்க முடியும், அதிலிருந்து உருவாகும் வர்க்கங்கள் மட்டுமே அதன் அடிக்கட்டுமான வகையினமாக இருக்க முடியும். மற்ற சமூக வகையினங்களின் வேர்களில் இந்த வர்க்க சாரம் ஏதோ ஒரு வகையில் இடம்பெற்றிருக்கும். இதனால், மனிதர்களுக்கு இடையிலான அனைத்து அடையாளங்களிலும், வர்க்க அடையாளமே அனைத்திலும் மேலெழும் அடையாளம்.

 இந்த அடிப்படையில்தான் பரந்த மக்கள் கூட்டத்தின் அணிதிரட்டல் நடைபெற வேண்டும். வர்க்க அடையாளத்தை பலப்படுத்துதல் எனும்போது, மற்ற அடையாளங்களைப் புறக்கணித்தல் என்று பொருளாகாது, மாறாக நியாயமான பிரச்சினைகளான தேசியம், பாலினம், சாதி போன்ற போராட்டங்களை, முதன்மைப் போராட்டப் பாதையில் ஒருங்கிணைப்பது என்றாகும். வர்க்க அடையாளம் மட்டுமே மற்ற அனைத்து அடையாளங்களைக் காட்டிலும் மேலெழும் சர்வதேசிய அடையாளம்.

முதலாளித்துவமானது அனைத்து அடையாளங்களின் போராட்டங்களையும் தனக்கானப் பாதுகாப்பு அரணாக, புகை-திரையாக, வர்க்க அணிதிரட்டலை குறைப்பதற்காக, தனது வசதிக்கு ஏற்றவாறு கையாள்கிறது. பாட்டாளி வர்க்க முன்னணிப் படையானது தங்களது வர்க்க சாரத்தைப் புரிந்துகொண்டு, பரந்த புரட்சிகரப் போராட்டத்திற்கு துணை நிற்கிறது, அதுவே அவர்களை வர்க்கப் போராட்டத்தின் பிரதான அங்கமாக ஆக்குகிறது. இன்றைக்கு, புதிய நீரோட்டமாக நவ-மார்க்சியர்கள் தோன்றியுள்ளனர். வர்க்க ஆய்வுகள், வர்க்கப் போராட்டம், கட்சி, அரசு, புரட்சி போன்ற அடிப்படை செயல்திட்டங்களிலிருந்து விலகிடவோ அல்லது தப்பிக்க எண்ணியோ, அவர்கள் பின் நவீனத்துவ சொல்லாடல்களின் (அடையாள அரசியலையும் அது உள்ளடக்கியது) வார்த்தை ஜாலங்களைப் பயபடுத்துகின்றனர். இந்த நீரோட்டத்தின் சுபாஷ் கட்டாடே வகையறா சிந்தனையாளர்கள், பல சிறிய அமைப்புகள் மற்றும் தலித் இயக்கங்களின் புதிய சுய அடையாளங்களைக் கொண்டாடுகின்றனர். ஆனால், அத்தகைய அமைப்புகள் அருவருக்கத்தக்க வகையில் பாராளுமன்ற அரசியலின் சந்தர்ப்பவாத ஆட்டக்காரர்களானார்கள் என்பதை இவர்கள் காணத் தவறுகின்றனர்.

(சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்: தொடரும் விவாதம் என்னும் நூலில் சில தவறான மற்றும் முழுமையற்ற, அரைவேக்காட்டுச் சூத்திரங்கள் என்று துணை தலைப்பின் கீழ் வரும் விவாதத்தின் ஒரு பகுதி இது)

மேற்குறிப்பிட்டுள்ள நூலில் வரும் ஆய்வுக் கட்டுரை தோழர் அர்விந்த் அவர்கள் தோற்றுவித்த அர்விந்த மார்க்சியக் கல்வியக கருத்தரங்கில் மார்க்சியர்களால் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை என்ற குறிப்போடு அவரைப் பற்றியும் இச்சுட்டியில் படித்து தெரிந்துகொள்ளலாம்.

http://english.arvindtrust.org/about-comrade-arvind 

No comments:

Post a Comment