Jul 2, 2010

கவி பிம்பம்


வனயிளமுலைகளை
கவிஞர் வார்த்தையுதிர்க்கையில்
மரங்கள் கூடி மூட்டும் காட்டுத்தீயை வரைந்துவைத்தேன்

உதடுகளுக்குவமையாய் அவன் விரல்கள் பழம் தேடி அலைகையில்
வன்மம் கிழித்தொரு சொற்கள் பொழியும்
செந்நா சுழண்டெழுந்தது
வனச்சர்ப்பமென

திரு கவிஞர்
கழுத்தைச் சுற்றி வரிகள் பதித்து
தலை புதைய இடம் வேண்டி நின்ற கணம்
புன்னகைத்தது
பணிய மறுக்கும் குரலொன்று

இடையின் வளைவுகளுக்கு
நுரையடங்கும் அலைகளை
முன்னிருத்தினார் கவிஞர்
பெண் மதத்தில்
பிறக்கப்போகும் சிசு
காலூன்றி நடக்கும் காலம் வரை சுமந்து செல்லும்
பெரும் பேழையை காட்சிக்கு வைத்தேன்

என்னிரு பாதங்களை பற்றிக்கொண்டு
இவ்வுலகையவன் தாரைவார்க்கையில்
சட்டகத்திற்கு வெளியில் நிற்கும்
என்னொரு
காலை மடித்து
சிலுவை செய்தேன்
பாடிய கவிச்சொற்களால் ஆணிகள் செய்து
அறைந்தேன்
அவனிரு கைகளை

என்னுடல்
என்மொழி
என் கனா
விடுதலை
நான்.

2 comments:

  1. கொற்றவை மேடம்,

    " என்னுடல் என்மொழி என் கனா விடுதலை நான். " என்ற இறுதி வரிகளில் அனாயாசமாக உங்கள் ஆளுமையை ரசிக்கும்படி வெளிப்படுத்தி உள்ளீர்கள். பெண்கள், அவர்களின் அங்கங்களின் அழகை முன்னிறுத்தி பாராட்டப் படுவதை நீங்கள் இழிவாகக் கருதுவதில் நியாயம் இருக்கிறது. அதென்ன, ஆண்கள் மட்டும் அவர்களின் வீர தீர பராக்கிரமங்களுக்காகவும், அவர்களின் சாகசங்களுக்காகவும் பாடப் படுகிறார்கள், பெண்கள் மட்டும் இடை உதடு இன்னபிற .... ஆகியவைகளுக்கு மட்டுமே பாடப் படுகிறார்கள், கொண்டாடப் படுகிறார்கள் ......... என்ற உங்கள் ஆதங்கம் புரிகிறது.

    ReplyDelete