Apr 11, 2014

போலி ஒற்றுமையில் உடன்பாடில்லை

வணக்கம் தோழர்களே,

ப.ஜ.க கூட்டணியின் ஆபத்துகளை எடுத்துரைத்து ஒரு கூட்டறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் பெயர்களை இணைத்துக்கொள்ள விருப்பமுள்ள எழுத்தாளர்கள் சிந்தனையாளர்கள் கலைஞர்கள் ஆகியோருக்கு அ. மார்க்ஸ் (மற்றும் தோழர்கள்) அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். எங்களுக்கும் அழைப்பு வந்தது. வலதுசாரியம், மதவாதம், மோடியிசம் ஆகியவற்றுக்கு என்றைக்குமே நாங்கள் எதிரானவர்களே. அவ்வடிப்படையில் நானும் வசுமித்ரவும் எங்களது பெயர்களை இணைத்துக்கொள்ள ஒப்புதல் அளித்தோம்.

பெயர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டது. அவ்வறிக்கையில் எங்களுக்கும் முழு உடன்பாடே.

அதன்பிறகு அ.மார்க்ஸ் அவர்களின் முகப்புத்தகத்தில் உள்ள அறிக்கையின் கீழ் இணைக்கப்பட்டுள்ள நபர்களின் பட்டியலை பார்க்க நேர்ந்தபோது அதிர்ச்சியுற்றேன். அதில், வக்கிர எழுத்தாளர் லஷ்மி சரவணகுமாரின் பெயரை சந்திரா தங்கராஜ் இணைத்திருந்ததைக் காண முடிந்தது. எங்களது தனிப்பட்ட வாழ்வு குறித்து எதுவுமே தெரியாத அந்த வக்கிர எழுத்தாளர் என் மகள் உட்பட எவரையும் விடாது என் குடும்பம் பற்றியக் கதைகளை ஸ்டேட்டஸ்களாக கடந்த இரண்டு வருடங்களாக எழுதி வந்துள்ளார். சமீபத்தில் அவ்வக்கிரத்தை மீண்டும் தொடர்ந்தார். அதையொட்டி நாங்கள் இருவரும் கடுமையான எதிர்வினைகளைப் பதிவு செய்தோம். இதுவரை அதற்கு பதில் எதுவும் லஷ்மி சரவணகுமாரிடமிருந்து கிடைக்கவில்லை. 

இந்நிலையில் மேற்சொன்ன அறிக்கையில் அவரது பெயரோடு எங்களது பெயரை இணைக்க நாங்கள் விரும்பவில்லை என்று எங்களது எதிர்ப்பை பதிவு செய்து, எங்கள் இருவரின் பெயரை நீக்கக் கோரினோம்.. அ.மார்க்சும் நீக்கி விட்டார். மிக்க நன்றி.

அதே சமயம் எங்களது எதிர்பிற்கான காரணத்தையும் நீக்கிவிடபடியால், நானும் வசுமித்ரவும் அவ்வறிக்கையில் ஏன் இணையவில்லை எனும் விளக்கத்தை இங்கு பதிவு செய்வது அவசியம் எனக் கருதுகிறோம்.

நாங்கள் பதிவு செய்து நீக்கப்பட்ட கருத்து பின்வருமாறு:

வசுமித்ரவின் கருத்து:

வணக்கம் அ. மார்க்ஸ்.

தொலைபேசியில் என்னையும் எனது வாழ்நாள் தோழர் கொற்றவையையும் இணைத்துக்கொள்ளலாமா எனக் கேட்டீர்கள். மிக்க மகிழ்வுடன் சம்மதம் தெரிவித்தோம். ஆனால், அரசியலில் மோடியின் மத அரசியலை விடவும், இலக்கியத்தின் பெயரால் தனிமனித அந்தரங்கத்தை கேவலமாக எழுதும் புத்தியை உடைய, ஒரு வக்கிரம் பிடித்த அவதூறாளாரான லஷ்மிசரவணக்குமாரின் பெயர் இணைக்கப்பட்டுள்ளது. அவ்வக்கிரச் செயல்பாட்டாளர் இருக்கும் ஒரு பட்டியலில் எங்கள் பெயர்களை இணைப்பதை நாங்கள் அறுவெறுக்கத்தக்க ஒன்றாக கருதுகிறோம். எங்கள் இருவர் பெயரையும் நீக்கிவிடுங்கள்.

எனது கருத்து:

மதவாதத்திற்கும் ப.ஜ.க கூட்டணிக்கு எதிரான அவ்வறிக்கையில் எங்களுக்கு முழு உடன்பாடே.

அதே சமயம் மதவாதிகளிடம் எதிர்க்கப்பட வேண்டியவைகளில் பெண்களுக்கெதிரான அவர்களது கருத்தியல் மிகவும் முக்கியமான ஒன்று. பொது வெளியில் இயங்கும் பெண்களை ஒடுக்கும்விதமான மதவாதிகளின் ஆபாச பேச்சுகளுக்கு நிகராக இங்கு சில எழுத்தாளர்கள் எழுதிவருகின்றனர். சமூகத்தின் மீது அக்கறையும், சக எழுத்தாளர்கள் மீது வக்கிரத்தையும் பொழியும் அத்தகைய எழுத்தாளர்களோடு இணைந்து சமூகத்திற்காக நாங்கள் சிந்தும் கண்ணீர் முதலைக் கண்ணீர் ஆகிவடக்கூடாது எனும் அச்சம் எழுவது தவிர்க்கவியலாத ஒன்றாக இருக்கிறது, மன்னிக்கவும்.

வக்கிரமும் வன்மமும் பொங்க தனிநபர்களின் அந்தரங்க வாழ்வை எழுதுபவர்களும், சக பெண் எழுத்தாளர்களை ஆபாசமாக வசைபாடுபவர்களும் இணைந்திருக்கும் ஒரு பட்டியலில் இணைவதன் மூலம் எங்களது ஒற்றுமையை போலி ஒற்றுமையாக்குவதில் எங்களுக்கு உடன்பாடில்லை.

ஆகவே நாங்கள் அக்கூட்டறிக்கையில் எங்களது பெயர்களை இணைத்துக்கொள்ளவில்லை.

நன்றி
கொற்றவை 
வசுமித்ர

அவ்வறிக்கை:

*********************************************************
தமிழக வாக்காளர்களுக்கு தமிழ் எழுத்தாளர்கள், இதழாளர்கள், கலைஞர்கள் வேண்டுகோள்
**********************************************************
சென்னை, 12 -04 - 2014

இந்து அரசு ஒன்றை அமைப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் ஒரு இயக்கத்தின் முன்னணி அமைப்பாக உள்ள ஒரு கட்சி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு, இந்திய வரலாற்றில் வேறெப்போதும் இல்லாத அளவிற்குத் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. 2002ல் குஜராத்தில் முஸ்லிம்களைக் கொன்று குவித்த கொடுஞ் செயலுக்குத் தலைமை தாங்கியது மட்டுமின்றி, அதற்காக இதுவரை வருத்தம் தெரிவிக்காத நரேந்திர மோடிதான் இந்த முயற்சியிலும் தலைமை ஏற்றுள்ளார். இந்த நாட்டில் மிகவும் சக்தி வாய்ந்த கார்ப்பொரேட் நிறுவனங்கள் இதற்குப் பின்புலமாக உள்ளன. கார்போரேட் மூலதனமும் வகுப்புவாத சக்திகளும் அமைத்துள்ள இந்தக் கூட்டணி, நமது மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் எதிர்காலத்தைக் 
கேள்விக்குள்ளாக்கியுள்ளது. 

இந்த ஆபத்தை எதிர்த்து இன்று இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலுமுள்ள எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், இதழாளர்கள் மற்றும் கலைஞர்கள் களம் இறங்கியுள்ளனர், அவர்களின் குரலுடன் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களாகிய நாங்களும் இணைந்து கொள்கிறோம். 

தமிழகத்தைப் பொறுத்த மட்டில் ஆதிக்க சாதிகளின் கூட்டணியை உருவாக்கிச் செயல்படும் ஒரு கட்சியும் இக் கூட்டணியில் இணைந்திருப்பது இந்த ஆபத்தை இரட்டிப்பாக்குகிறது. மதச் சார்பின்மையை முன் வைத்து உருவான திராவிட இயக்கத்தின் பெயரைத் தாங்கி நிற்கும் இரு கட்சிகள் மோடியை முன் நிறுத்துவதில் துணை போகின்றன. 

இந்த ஆபத்து குறித்துத் தீவிரமாகச் சிந்தித்து, இதைத் தடுப்பதற்கான எல்லவிதமான செயற்பாடுகளையும் மேற்கொண்டு, நமது மதச் சார்பற்ற ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டுமென பொறுப்புள்ள குடிமக்களையும், அமைப்புக்களையும் நாங்கள் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். பா.ஜ.கவால் தலைமை தாங்கப்படும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக வாக்களித்து, ஆட்சியைக் கைப்பற்ற முனையும் இந்தக் கார்பொரேட் - மதவாத - சாதிய சக்திகளின் முயற்சியை வீழ்த்துமாறு தமிழக வாக்காளர்களைக் கேட்டுக் கொள்கிறோம். மதச் சார்பற்ற, ஜனநாயக சக்திகளை ஆதரித்து வாக்களிக்க வேண்டுகிறோம்.

தொடர்பிற்கு:
எழுத்தாளர் அ.மார்க்ஸ், +91 94441 20582, professormarx@gmail.com

No comments:

Post a Comment