Mar 22, 2012

கூடங்குளம் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தொடர் உண்ணாநிலைப்போராட்டம்



கூடங்குளம் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தொடர் உண்ணாநிலைப்போராட்டம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.

தாயகம், ம.தி.மு.க. அலுவலகம், எழும்பூர், சென்னை. அணைவரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் கடந்த பல பத்தாண்டுகளாகவும், கடந்த 7 மாதங்களாக இடிந்தகரை பகுதி மக்களின் ஒருங்கிணைந்த தீவிரமான போராட்டமாக உருவெடுத்தது இடிந்தகரையில் இன்று ஒரு நெருக்கடியான நிலையை எட்டியுள்ளது. மத்திய அரசின் பொய், புரட்டு, இந்திய அணு விஞ்ஞானிகளின் அறிவியலுக்குப்புறம்பான பிரச்சாரம் இவையெல்லாவற்றையும் மீறி உழைக்கும் மக்களின், மீனவ மக்களின் போராட்டம் அசாத்திய உறுதியுடனும் கொள்கைப் பிடிப்புடனும் தொடர்ந்து வந்துள்ளது. மக்கள் மலையென நம்பிய தமிழக அரசு தான் கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு, சங்கரன்கோவில் தேர்தல் வரை காத்திருந்து இப்போது அணு உலையைத் திறக்க உத்தரவிட்டிருக்கிறது.

இந்தச்சூழ்நிலையில் தொடர்ந்து அறவழியில் போராடிக்கொண்டிருக்கும் மக்களை அச்சுறுத்தும் நோக்கத்தோடு ஆயிரக்கணக்கில் போலிஸார், துணை இராணுவம் மற்றும் தொழில் துறை பாதுகாப்புப் படையினர் ஆயுதங்களுடன் இடிந்தகரையை முற்றுகையிட்டுள்ளனர். இது சட்டத்திற்குப்புறம்பானது மட்டுமல்ல, ஜனநாயகம் என்ற கருத்திற்கே எதிரானதும் கூட.

அரசு தன் அதிகாரத் தின் கோர முகத்தை இடிந்தகரை போராளி மக்கள் மீது செலுத்துமானால் அதை பார்த்துக்கொண்டு சும்மா இருப்பது நாம் செய்யக்கூடிய மிகப்பெரிய அநீதியாக இருக்கும். எனவே கீழ்க்காணும் கோரிக்கைகளை முன்வைத்து கூடங்குளம் மக்கள் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் பல அமைப்புகள் ஒருங்கிணைந்து ஒரு தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தை ஒழுங்கு செய்திருக்கிறோம். உண்ணாநிலைப் போராட்டத்தின் முதல்நாளான 22 மார்ச் 2012 அன்று பெண் படைப்பாளிகள் மற்றும் செயல்பாட்டாளர்கள் உண்ணாநிலையில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகள்:
1. கூடங்குளம் பகுதியில குவிக்கப்பட்டிருக்கும் காவல்துறையினரை திரும்பப் பெறவேண்டும். ஓர் அறவழிப்போரட்டத்தை ஒடுக்கும் நோக்கோடு போடப்பட்டிருக்கும் காலவரையற்ற 144 தடையுத்தரவு நீக்கப்படவேண்டும்.
2. குடி நீர், மின்சாரம், சுகாதார வசதிகளை முடக்குவதன் மூலம் ஒரு மக்கள் போராட்டத்தை ஓர் அரசு முடக்க நினைப்பது மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் செயலாகும். இதேபோல் உணவு, மருத்துவ வசதிகள், குழந்தைகளுக்கு தேவையான பால் போன்ற அத்தியாவசிய தேவைகள்கூட காவல்துறையால் தடுக்கப்படும் நிலை தொடரக்கூடாது.
3. இடிந்தகரையில் போராடிக்கொண்டிருக்கும் மக்களின் குழந்தைகள் பள்ளித் தேர்வுக்கு அனுமதிக்கப்படவில்லை. இது குழந்தைகளின் அடிப்படை உரிமையையே மறுப்பதாகும். உரிய பாதுகாப்புடன், குழந்தைகள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவேண்டும்.
4. கூடங்குளம் அணு உலைக்கு எதிரான அறப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மீனவ மக்களுடன், தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
5. தங்கள் வாழ்வாதாரங்களையும் தங்கள் சந்ததிகளின் வாழ்வுரிமைக்காகவும், ஒட்டுமொத்த தமிழகத்தின் பாதுகாப்புக்காகவும் போராடிவரும் மக்களின் கோரிக்கையை ஆதரிக்காவிட்டாலும் அவர்கள் மேல் ஏவிவிடப்படும் நியா யமற்ற வன்முறை, அரசு ஜனநாயக நியதிகளுக்குப் புறம்பாக நடத்திவரும் காட்டுமிராண்டித்தனம் ஆகியவற்றை எதிர்க்க ஜனநாயக சக்திகள் முன்வரவேண்டும்.

2 comments:

  1. இந்த மக்கள் போராட்டம் வெல்ல அனைவரும் முடிந்தவரை கைகோர்த்து ஒன்றிணைந்து செய்ற்படுவோம்.

    ReplyDelete