Mar 31, 2012

நிமிர்ந்து ஒரு முத்தம் தருகிறாள்


உங்கள் அதிகார மொழி உங்களை கைவிடும்போது
அவளை
குழந்தையாக மாற்றுங்கள்
குழைந்து விட்டதாக அறிவித்துக்கொள்ளுங்கள்


விலங்குகளினும் சிறந்த முகரும் தன்மையுடன்
இரத்த வாடையை மோப்பமிட்டு
தயார் நிலையை களி கொண்டு
முரசு கொட்டுகிறது ஊர்


பட்டாம்பூச்சியுடன் சிறகை விரித்து அவள் பறக்கையிலே
வயதின் சுருக்கங்களை முன் வைத்து
பாதுகாப்பு வளையத்திற்குள்
நிறுத்தப்படுகிறாள்

ஒவ்வொரு இரவின் முடிவிலும்
தசைகள் நெகிழும் முன்பே
உடலெங்கும் 
ஒற்றைப் பாதையில் பயணித்து வரும்
கம்பளிப் பூச்சிகள்

அது கடந்து
மண்ணை நுகர்ந்து நடக்கையில்
பார்வைகளால் அங்ககளை அளவிட்டு
கூற முடியா வார்த்தைகளின் முடிவில்....

மற்றொருநாள்
அலுவலக அறை
சுழலும் நாற்காலி
கோப்புகள் எடுக்கும் ஆணை
குனிகிறாள்
பெண்
புட்டம் தடவிய கைகள்
பச்சைக் காகிதத்தில் சுற்றுகிறது
ஆண்மையை

எல்லா முனைப்புகளும் தோற்றுப்போகையில்...
கடவுளாக்கி வழிபடுகிறது....

நிமிர்ந்து ஒரு முத்தம் தருகிறாள்
நீலம் பாவுகிறது
உங்கள் உடல்.

(2010 இல் எழுதியது...அதை மறுவாசிப்பு செய்கையில் சில வரிகள் வெறும் உரைநடை வாசகமாக இருப்பதாக தோன்றியது...அவ்வரிகளை மாற்றி இப்போது வெளியிடுகிறேன்...)

7 comments:

  1. இது எதிர்மறைக் கவிதையா? நல்லா இருக்கு. ஆனால் அப்பட்டமாக சொல்வதைத் தவிர்த்து இருக்கலாம்.

    ReplyDelete
  2. micture of emotions form a poem or whatever we call it! you expressed ur feelings which may be understood in many ways. like it.

    ReplyDelete
  3. கொற்றவை அவர்களே,
    " பெண்ணானவள், நிமிர்ந்து ஒரு முத்தம் தந்துவிட்டாள், அது எப்படி அவள் முதலில் நிமிரலாம், தானாக முத்தமும் தரலாம், ஐயகோ, கலாச்சாரத்திற்கு இது ஒவ்வாதே, இவள் சரி இல்லையே ........இவள் கற்புடையவள் தானா ? ." என்று ஆண்கள் கொள்ளும் சந்தேகம் எனும் விஷம் அவர்கள் உடல் முழுவதும் பரவி, சம்பந்தப் பட்ட இருவருக்கும் தீங்காகவே முடிகிறது என்ற கருத்தைத் தாங்கள் சொல்ல வருகிறீர்கள் என்பதாக இந்தக் கவிதையைப் புரிந்து கொள்கிறேன்.

    ஒரு இடத்தில் பட்டாம்பூச்சியின் சிறகு விரிப்பையும், வயதின் சுருக்கத்தையும் தொடர்பு படுத்தி உள்ளீர்கள். முன்னது இளமையையும் பின்னது முதுமையையும் குறிப்பிடுவதாக அமைந்து இரண்டும் முரண்படுவதாக கருதத் தோன்றுகிறது. ' கம்பளிப் பூச்சிகள் ' என்பது ஆணின் மீசையின் குறியீடு என்று நினைக்க முயலும் போது, அந்தப் பதத்தின் ' பன்மை ' உறுத்தி, உரோமங்களுடன் கூடிய ஆணின் கை என்பதாகப் பொருள் கொள்ள வைக்கிறது.

    இறுதியில், பெண்ணை அடிமைப்படுத்த எல்லா முனைப்புகளும் தோற்றுப் போன பின்பு, இறுதியில் அவளைப் புனிதம் எனும் இன்னொரு அடிமைத்தனத்திற்கு உட்படுத்தும் உத்தியை ஆண்களின் உலகம் பிரயோகிக்கிறது என்கிறீர்கள். தங்கள் ஆதங்கத்தை இவ்வரிகள் நன்கு வெளிப்படுத்துகின்றன.

    இக்கவிதை ஓரளவிற்குப் புரியும் படி உள்ளது.

    ReplyDelete
  4. பெண் பிறப்பு என்பது,பிறப்பிலிருந்து இறப்பு வரை வேதனை நிறைந்ததாகவே உள்ளது.அந்த வேதனையை இந்த கவிதை உணர்த்துகிறது.

    ReplyDelete