Apr 22, 2020

நாம் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் யார்?

அனுபவப் பாடம் 2

இந்த இணைய வெளி தனி மனிதர் ஒருவருக்கு மற்றவர் மீது எல்லையற்ற அதிகாரம் உண்டு என்னும் மாயையை ஏற்படுத்துகிறது. ஆனால் இது மூட நம்பிக்கை!

நாம் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் யார்?

1. தனிப்பட்ட வாழ்வு சார்ந்து - குடும்ப உறுப்பினர்கள். அதுவும் நம்மை சார்ந்திருக்கும் உடனடி / நேரடி உறவுகள் மற்றும் நாம் பொருளாதார ரீதியாக சார்ந்திருக்கும் நபர்/நபர்கள். மற்ற உறவுகளுக்கு நாம் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் அல்லர்.

2. நம்மால் யாரேனும் நேரடியாக பாதிக்கப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட அந்த நபருக்கு நாம் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளோம். அதுவும் அவரிடம் நேரடியாக (அவர் சார்பாக குடும்ப உறுப்பினர்கள் வரலாம்) அல்லது அவர் சட்டத்தை நாடியிருந்தால் சட்டத்தின் முன் நாம் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.

3. சட்டத்திற்குப் புறம்பாக ஏதேனும் நாம் செய்தால் சட்டத்தின் முன் பதில் சொல்ல கட்டமைப்பட்டிருக்கிறோம்.

4. சமூக-அரசியல் ரீதியாக ஏதேனும் கருத்து சொல்லி இருப்பின் கருத்தியல் சார்ந்து அதற்கு விளக்கம் கொடுத்து தெளிவு ஏற்படுத்த முனையலாம். ஆனால் அதை இணைய வெளியில் தான் செய்ய வேண்டுமென்று கட்டாயமில்லை. புத்தகம் / ஊடகம் இதன் வாயிலாக ‘ஓர் எல்லை’ வரை பதில் சொல்லலாம். (தத்துவ / கருத்து தெளிவு ஏற்படுத்த மட்டுமே).

5. விமர்சனம் / திறனாய்வு எழுத்துகளாக இருப்பின், எதிர் கருத்துடையோர் தமது விமர்சனங்களை கருத்தியல்பூர்வமாக வைத்தால் அவசியமிருப்பின் பதில் சொல்லலாம்! (நாம் சொல்ல வேண்டியதைத்தானே ஏற்கனவே விமர்சனமாக வைத்துள்ளோம்). நூலாக வெளியிட்டிருந்தால் பதிலுக்கு எப்போது முடியுமோ அப்போது நூலாக நாமும் பதில் அளிக்கலாம். ஆனால் அது சட்டப்படி கட்டாயமில்லை.

அவதூறு என்று கூறுவார்களெனில் அதற்கு சம்பந்தப்பட்ட நூலே சாட்சியாக அமையும். மேற்கொண்டு விளக்கங்கள் தேவைப்படப் போவதில்லை. அரசியல் களத்தில் இத்தகைய கருத்துமோதல்கள் இயல்பே. ஆயுசு இருக்கும் வரை “நீ என் தலைவரை விமர்சிச்ச”, “நீ இதைப் பண்ண நீ அதைப் பண்ண” என்று வசைபாடிக்கொண்டே தான் இருப்பார்கள். ஒவ்வொரு பொலம்பலுக்கும், பின்னூட்டத்துக்கும் பதில் சொல்லிட்டிருக்கும் அவசியமில்லை! (இவர்களால் அறிவார்ந்த வகையில் பதில் சொல்லவே இயலாது!)

6. ஏதோ ஒரு குழு / அமைப்பு அமைப்புரீதியாக செயல்பட்டு தவறுகள் நடந்திருப்பின் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தார்மீக அடிப்படையில் விளக்கங்கள் அளிக்க கடமைப்பட்டிருக்கிறது. அடுத்து சட்டத்தின் முன் முறையீடு நடந்தால் சட்டத்திற்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறது. சமூக ரீதியாக கருத்து பரவல் ஏற்பட்டிருப்பின் தம் அதிகாரப்பூர்வ பக்கத்தில் கருத்து தெளிவு ஏற்படுத்த வேண்டியுள்ளது. (பண்புடன்!).

7. நம்மை மீறி ஏதேனும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் யார் பற்றியாவது தனிப்பட்ட அளவில் யாரிடமாவது ‘பொறணி’ பேசியிருந்து, சம்பந்தப்பட்டவர் காயப்பட்டால் தார்மீகமாக பொறுப்பேற்று மன்னிப்பு கேக்க வேண்டும். (அவர் மன்னிப்பதும் மன்னிக்காததும் நம் கையில் இல்லை). அதனால் வன்மம் கொண்டு நம்மை காலம் முழுக்க வசைபாடலாம். பொறணி பேசுனதுக்கு தண்டனையா எடுத்துக்கிட்டு கம்முன்னு போக வேண்டியதுதான்!

8.  இதுவல்லாது வேறு யாருக்கும் நாம் எந்த விளக்கங்களையும் அளிக்கத் தேவையில்லை (நாம் சம்பந்தபட்டவர்கள் பற்றி பொதுவெளியில் பெயர் சொல்லி கருத்து தெரிவிக்காத போது). குறிப்பாக மேற்சொன்ன எந்த வகையிலும் நமக்கு தொடர்பில்லாத இணையவெளி ‘நீதிமான்களுக்கு’ நாம் எந்த பதிலும் அளிக்க கடமைப்பட்டவர்கள் அல்லர்.

நாம் பொருட்படுத்தி பதில் அளிக்கும் நம் அர்ப்பணிப்பை இவர்கள் கேலிக் கூத்தாகிவிடுகிறார்கள். எனவே அவங்க shut up பண்ணாத போது, நாம பண்ணிக்க வேண்டியதுதான்.

9. அரசியல் ரீதியாக முரண்பட்டு ஒரு பிரச்சாரத்திலிருந்து வெளியேறியிருந்தால் ஏன் வெளியேறினோம் என்ற விளக்கத்தை பொதுவெளியில் தெளிவுபடுத்த கடமைப்பட்டுள்ளோம். வெளியேறியபின், விளக்கம் கொடுக்கப்பட்ட பிறகு நடக்கும் எந்த செயலுக்கும், பொறணி பேச்சுகளுக்கும், அவரவர் கற்பனைகளுக்கும் விளக்கம் கொடுக்க நாம் கடமைப்பட்டவர்கள் அல்ல.

அவரவர் தம் பக்கங்களில் என்ன வேண்டுமானாலும் ‘கதைக்க’லாம். தூற்றலாம், அவதூறு செய்யலாம், ‘பதில் சொல்லு’ ‘பதில் சொல்லு’ என்று உங்களை வண்டியில் ஏற சொல்லலாம். உலகமே நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறதே என்னும் பதட்டம், மன உளைச்சல் எல்லாம் ஏற்படும். அது மாதிரி நேரத்தில் கடைய தற்காலிகமா சாத்திவிட்டு, எந்த குப்பைப் பேச்சுகளும் நம் கண்ணில் படாமல் ஒதுங்கி இருந்து, நம்மை நாமே தேற்றிக்கொண்டு தேவைப்படும் விளக்கங்களை மட்டும் அளித்துவிட்டு (அரசியல் ரீதியான பேச்சாக இருந்தால் மட்டுமே) கடந்து போக வேண்டியதுதான்.

இது எனக்கு நானே சொல்லிக் கொள்ளும் வழிகாட்டுதல்! (Self-motivation! Self-Talk!)

இது எந்த இசத்துலையும் சேர்த்தி இல்லைங்க! ஏன்னா எல்லா இசத்தைப் பற்றியும் தலைவர்கள் பற்றியும் பேசும் ‘குத்தகை’ ஒரு சிலரிடம் மட்டுமே உண்டு. (என்ன இருந்தாலும் இது தனியுடமை அமைப்பு அல்லவா). குறிப்பா அம்பேத்கர பத்தி பேசனும்னா ‘பொறப்பு’ முக்கியம்… இனி அவங்களே பேசிக்கட்டும்… நான் என் பொழைப்பை பார்க்குறேன்… இனியாவது! ஏன்னா அவங்க பொழப்பெல்லாம் நல்லாதான் ஓடுது! நமக்கு ஒரு பய வேலை தரமாட்றான்!

EMI கட்டலன்னா உடமாட்டோம், 3 மாசம் moratorium அரசு சொன்னா என்ன யார் சொன்னா என்ன... நீ வட்டி கட்டித்தான் ஆகனும்னு மெயில்ல மிரட்ட ஆரம்பிச்சுட்டானுவ!
Top of Form
Bottom of Form


No comments:

Post a Comment