Jun 6, 2010

திருமணங்களும் சந்தோஷங்களும்.




"திருமணமான பெண்களுக்குரிய சந்தோஷம் ஓர் ஆணின் சந்தோஷமாகவே விதிக்கப்படுகிறது...."

ஓர் உயிர் இந்த பூமியில் பிறக்கும்பொழுது அது பெண்ணாய் இருப்பின் அவளைச் சுற்றி பல ஆண் எஜமானர்கள் பல்வேறு கட்டளைகளுடன் காத்திருக்கிறார்கள். குழந்தைப் பருவத்திலேயே அவளுக்கு, பெண்மைக்குரிய கட்டளைகள் ஆரம்பம் ஆகிறது. ஆண்களுக்கு கீழ் படியும் தன்மையை வலியுறுத்தியும் அல்லது ஆணின் காமப்பார்வையிலிருந்து அவளை தற்காத்துக்கொள்ளும் பொருட்டும் மட்டுமே எல்லா வழிக்காட்டுதலும், விதிகளும் உள்ளது.

குழந்தையாய் அவள் விளையாடும் பொருள்களிலிருந்து வளர்ந்து அவள் ஒரு தாயான பின்பும் கூட பெண்ணுக்கு உகந்த பொருள் எது, சந்தோஷங்கள் எவை, கடமைகள் எவை, பாசப்பிணைப்புகளின் நடத்தை விதி என எல்லாம், ஆணின் செயல்பாடுகளுக்கு எந்த குறுக்கீடும், தொந்தரவும் ஏற்படாத வண்ணம் வரையப்பட்டுள்ளது. ஆண்டாண்டு காலமாய் ஒரு குழந்தை, தான் கண் விழிக்கும் போதெல்லாம் தாய் தோசை சுட்டுக்கொடிருப்பதைத் தான் பார்க்க நேரிடுகிறது. மறைமுகமாக, தன்னுள் பெண்மைக்குரிய கடமைகள் இவை இவை என அது உள்வாங்கிக் கொள்கிறது. தனக்கான விளையாட்டுப்பொருளாய் சமையலறை சாதனங்கள், பொம்மைகளை அலங்கரிக்கும் விளையாட்டுப் பொருள்கள் என வாங்கிக்கொண்டு தன் தாயைப் போலவே சமைப்பது, பொம்மைகளை தயார் செய்து பள்ளிக்கு அனுப்புதல்..தாயின் இன்ன பிற அன்றாட செயல்களை பொம்மைகள் வைத்து விளையாடி பழகிக்கொள்கிறது. மற்றொரு புறத்தில் ஆண் குழந்தை தந்தையை வழிகாட்டியாய் கொண்டு சாகச விளையாட்டுகள், இயந்திர பொம்மைகள் என்று விளையாடி, தான் ஆண் என்பதற்கான முத்திரையையை நிறுவத் தொடங்குகிறது.



இப்படி மழலையிலேயே அந்நியமாக்கப்பட்டு வளரும் பெண் பிள்ளைகள் பிற்காலத்தில் தன் இருப்பு பற்றிய நிலை என்னவென்று புரியாமல் ஆணைச் சார்ந்துதான் தனக்கு அங்கீகாரமும், அவனோடு ஒத்து வாழ்தலே தன் பிறப்பின் பயன் எனவும் உணர்த்தப்படுகிறாள். அதே மனநிலையோடு திருமணத்திற்கு உடன் படுத்தப்படுகிறாள், எழுதப்படாத அடிமை சாசனத்தில் கையெழுத்திடுகிறாள். அதுவரையில் தந்தையின் கணவுகளுக்காக உடல் சுமக்கும் பெண்ணினம் பிறகு கணவனின் அந்தஸ்த்தை நிலைநாட்டும், பேணிக்காக்கும் பொருட்டு தன் உடலை மாற்றி அமைக்கிறது. எப்பொழுதும் அது தன் உள்ளக் குரலை 'ஒலி வடிகட்டி' செய்தே வைத்திருக்கிறது.


திருமண வாழ்க்கை தரும் சந்தோஷங்களாக அவளுக்கு கற்பிக்கப்படுவது கெட்ட பழக்கம் இல்லாத கணவர் (அதாவது குடி, புகை பழக்கம் அல்லாதவர்), வசதியாக வாழ பெரிய வீடு, தோளுக்கும், கழுத்திற்கும் இடைவெளியே தெரியாத அளவுக்கு நகைகள், பட்டுப் புடவைகள், கார்..இப்படி வசதிகள் நிறைந்த வாழ்க்கை. இவற்றை பெற்றுத் தரும் கணவன் கடவுளுக்கு நிகரானவன் (ஆம் அங்கேயும் பெண் கடவுள்களின் நிலையில் பெரிய வேற்றுமை இல்லை). தன் கணவனின் அந்தஸ்த்தை சித்தரிக்கும் ஒரு விளம்பரப் பலகையாக மனைவிகள் உலா வருவார்கள், அவருக்கு பெற்றெடுத்த குழந்தைகளை அவர் பெயரை காப்பாற்றும் எதிர்காலத்திற்கான முதலீடாய் பார்த்துப் பார்த்து வளர்ப்பார்கள். அதுவே தன் வாழ்க்கையின் பேராக எண்ணி பூரித்து கடமை உணர்ச்சி பொங்க உருகிக்கொண்டிருப்பார்கள்.


இது போன்ற பெண்கள் எப்பொழுதாவது தன் இருப்பு பற்றிய கேள்விகள் எழுப்பியிருப்பார்களா என்று தெரியவில்லை. அப்படி தனக்கென்று ஒரு இருப்பு இருக்ககூடும் என்ற உண்மையைக் கூட அறிந்திருக்க வாய்ப்பில்லை. தான் ஏன் எப்போதும் ஆணைச் சார்ந்தே தன் இருப்பை நிலை நாட்டிக் கொள்ளவேண்டியுள்ளது என்று கேள்வி எழுந்தபோதுதான் பதில் கிடைத்தது. ஒரு ஆணின் சந்தோஷமே பெண்ணின் சந்தோஷமாகவும், ஆணின் லட்சியங்களே பெண்ணின் லட்சியமாகவும் ( குறிப்பாக திருமணத்திற்கு பின் ) கட்டமைக்கப்பட்டிருப்பதை உணரமுடிந்தது.

ஆம் குடும்பம் என்ற ஒன்றை அமைத்துக்கொண்டவுடன் ஒரு ஆண் தன் தலையில் தானே கிரீடம் ஏற்றிக்கொள்கிறான். இன்னாருக்கு மகனாக அறியப்பட்டிருக்கும் ஆணுக்கு, தான் என்ற அடையாளம் மிக அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. அதுவும் பொருளாதார நிலைப்பாடு சார்ந்தே இருக்கிறது. திருமணம் செய்துக் கொள்கிறான். குடும்பத்திற்காக உழைக்கிறேன் என்று கூறிக்கொண்டு தனக்கான முத்திரையை பதிக்கும் செயல்களை துவங்குகிறான். அதற்கு சம்பளமற்ற காரியதரிசியாக மனைவியைப் பயன்படுத்துகிறான். மனைவியும் ஆஹா என் கணவர் எவ்வளவு உழைக்கிறார் என்று பெருமை பாடிக்கொண்டு அவனுக்கான அத்தனை பணிவிடைகளையும் செய்கிறாள். சில இல்லங்களில் அவளும் வேலைக்கு சென்று பொருள் ஈட்டுகிறாள். அப்பொழுதும் கணவனுக்கு மட்டுமே சலுகைகள் உள்ளது. நேரம் காலமின்றி அவர் வீடு திரும்பலாம், வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளலாம். தொழிலதிபராய் இருந்தால் வீடென்ற ஒன்றை மொத்தமாக மனைவியின் பொறுப்பில் விட்டுவிட்டு, வணிகம் பேசிக்கொண்டே திரியலாம் நட்சத்திர ஓட்டல்களில். மனைவிக்கு லஞ்சமாய் நகைகள், உயர்ரக கார், வருடாந்திர சுற்றுப்பயணம் என கிள்ளிக்கொடுத்துவிட்டு மீண்டும் வேலை நிமித்தமாக ஊர் சுற்றலாம். கணவர்கள் தன் கீழ் பணிபுரியும் பெண்களை படுக்கைக்கு அழைக்கலாம், கள்ள உறவு வைத்துக்கொள்ளலாம். அவ்வப்போது பார்ட்டிகளுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் மனைவியை அழைத்துக்கொண்டு போகலாம்.

நீங்களும் அவர் பெருமைகளை பறை சாற்ற நன்கு அலங்காரம் செய்துக் கொண்டு போவீர்கள். அவருக்கு கிடைக்கும் பெயரை உங்கள் அடையாளமாக எண்ணி மகிழ்வீர்கள். நம் கணவர் நமக்காக எவ்வளவு செய்கிறார் என்று எலும்புத்துண்டை மென்றுக்கொண்டிருப்பீர்கள்; நீங்கள் நாயாக மாற்றப்பட்டதுதெரியாமல்.

மனைவிகளே நீங்கள் மனைவிகளாய் இருப்பது உங்களுக்கு உகந்ததாக இருக்குமாறு ஆண் முதலாளிகள் கலாச்சாரத்தின் பெயர் கொண்டு நிறுவியிருக்கிறார்கள். அந்நிறுவனத்தில் முதலாளிக்குரிய கடமைகளை அவரே ஏற்றுக்கொண்டு, தொழிலாளிக்குரிய கடமைகளை பேருள்ளம் கொண்டு உங்களுக்கு கொடுக்கிறார்கள். உங்களின் கடமைகளை நீங்கள் ஆற்றும் பொருட்டு உங்களுக்கு கூலி அந்தஸ்த்து எனும் பெயரில் வழங்கப்படுகிறது. நீங்களும் அதை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறீர்கள், உங்களுக்கான உன்மையான சந்தோஷம் என்னவென்றறியாமல். அப்படி நீங்கள் உங்களுக்கான அடையாளத்தைக் கண்டு கொண்டீர்களானால் (இந்த ஆணுலகில் அதுவே மிக அரிதான ஒன்று), அதற்காக நீங்கள் உழைக்கத் துவங்கும் பொழுது, கணவரின் பேரன்பு வெளிப்படும். உங்களைக் கட்டி அணைத்து முத்தங்களாய் பொழிவார், அம்முத்தங்கள் என்றும் இல்லாதவாறு கூர்மைக் கொண்டதாக இருக்கும். சொற்களால் ஆன முத்தம் அல்லவா, அப்படித்தான் இருக்கும்.


நான் எனைக் கண்டுக்கொண்டேன் என்று உண்மையை நிதர்சனமாக போட்டுடைப்பீர்கள். 'நீ' என்ற ஒன்று சாத்தியமில்லை என்பார் கணவர். நான் குடும்பத்துக்காகவே என்னை அர்பணித்துக்கொன்டு மாடாய் உழைக்கிறேன், நன்றி இல்லாமல் நடந்துக் கொள்ளாதே என்பார். ஆம் அவர் உழைப்பு குடும்பத்துக்காக, உங்கள் உழைப்பு உங்கள் உடல் திமிருக்காக மனைவிகளே. நீங்கள் உங்கள் விருப்பங்களை அவ்வப்போது அவர் காதில் போட்டுக்கொண்டே இருப்பீர்கள், அவரும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்பார். ஒரு நாள் பொறுமை இழந்து, படுக்கை அறையில் 'வேலை நிறுத்தம்' செய்வீர்கள் அப்பொழுதுதான் இழப்பு நோட்டம் பெறும். நிறுவனத்தில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தால் முதலாளி தான் தரும் கூலி, சலுகைகள் இவற்றை கணக்கு வைத்து பேசுவது போல், குடும்பத் தலைவரான முதலாளி மனைவித் தொழிலாளியிடம் கணக்குகள் வைப்பார் "நான் என்ன குறை வைத்தேன் உனக்கு, நீ கேட்ட எல்லாம் செய்தேனே, அதை வாங்கித் தந்தேன், இதை வாங்கித் தந்தேன் என்பார், நான் சம்பாதிக்கும் அணைத்தும் உனக்கும் நம் குடும்பத்துக்கும் தானே" என்பார்.

இதில் கவனிக்கப்பட வேண்டியது கணக்கு அணைத்தும் பொருளும், பொருளாதாரமும் சார்ந்தே இருப்பது. பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்ய எத்தனிக்கும் கணவர்கள் ஏன் ஓர் உறவுக்கு அடிப்படைத் தேவையான அன்பு, அக்கறை, சமத்துவம், காதல் சார்ந்த விருப்பங்கள் இவற்றின் தேவையையும், அதில் உள்ள குறைகளையும் பொருட்படுத்துவதில்லை. தனக்கு பெருமைத் தரக்கூடிய பொருள்களை ஈட்டி அதை மனைவியின் சந்தோஷமாய் கற்பித்து தன்னை உயர்த்திக்கொள்ளவும், தன் வாரிசை தன் பெயர் சொல்ல வளர்த்தெடுக்கவும் தான் ஆண்களுக்கு மனைவிகள் தேவைப்படுகிறார்கள். ஒரு போதும் அவள் துணைவியாக இருக்க முடிவதில்லை. மனைவியாக இருப்பதால் தான் கடமை உணர்வு மிக்கவளாக அவள் செயல்பட வேண்டியுள்ளது. துணைவியாக (Life Partner) கணவர் நினைத்தாரானால், கூட்டு முடிவுகள் எடுக்கப்படும். ஒவ்வொரு விஷயத்தையும் சேர்ந்தே முடிவெடுப்பார்கள். பொருளை முதன்மைபடுத்தாது, கணவன் மனைவியின் அருகாமையை உன்மையில் விரும்புவதாயின் வயிற்றுப்பாட்டிற்கு சிறிதும், அடிப்படை தேவைகளுக்கும் மட்டுமே பொருள் ஈட்டினால் போதுமே இதை மனைவியிடம் பேசி 8 முதல் 10 மணி நேர உழைப்பு போக மீதமுள்ள நேரத்தை மனைவியுடனும், பிள்ளைகளுடனும் செலவிடலாமே. அதுவல்லாது, தன் பேராசையை, பணம் மற்றும் புகழ் வெறியை குடும்ப நலன் என்று சாயம் பூசி மனைவியின் விருப்பு வெறுப்பு அறியாது, தன் பேராசையை அவள் மேல் திணித்து அதற்கு அவளையும் பயன் படுத்திக்கொள்ளும் மனப்போக்கே இங்குள்ள பெரும்பான்மையான கணவன்மார்களுக்கு இருக்கிறது. மனைவியும் வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் சுதந்திரத்தைக் கொடுத்துள்ளோமே என்று கணவர்கள் கூறுகிறார்கள்.

அது சுதந்திரம் சார்ந்த விஷயமாக என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது. பொருளாதாரத்தை பெருக்கிக்கொள்ளும் ஒரு செயலே மனைவியும் வேலைக்குச் செல்வது. எவ்வளவு பொறுப்புகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் இடையில் அவள் வேலை செய்ய வேண்டியுள்ளது. அலுவலகப் பணியின் பெயர் சொல்லி ஆண்கள் எடுத்துக்கொள்ளும் அத்தனை சுதந்திரத்தையும் பெண்கள் எடுத்துக்கொள்ள முடிவதில்லை. சுதந்திரம் என்ற பெயரில் அவளுக்கு கிடைப்பது மனச் சோர்வு மட்டுமே. சில குடும்பங்களில் பெண்களின் ஆதிக்கம் ஓங்கி இருக்கும், அங்கேயும் பொருளாதாரம் சார்ந்தே அந்த நிலை இருக்கக்கூடும். இருவரும் சமம் என்ற நிலையில் கணவன் மனவி உறவு அமைவது அபூர்வமே.

ஒருவேளை மனைவிக்கும் பெரும் பொருளாசை இருக்குமாயின், அதற்கும் ஆண்கள் பெண்களை பொருளாசைக் காட்டி அவளை அடிமைப்படுத்த ஆதியில் போட்ட விதையே காரணம். எப்படி முதலாளிகளின் சாதுர்யங்கள் அவர்களுக்கெதிராகவே திரும்பிவிடுகிறதோ, அதுபோல் ஆண் சமுதாயம் தோற்றுவித்த பொருள்சார்ந்த சமுதாய அங்கீகாரத் தேவையின் அரிப்பு தொடக்கத்தில் சொரிந்து கொடுக்கும் பொழுது சுகமாகத்தான் இருந்தது. நாளடைவில் புரையோடிப்போன ரணமாகி, மருத்துவம் செய்ய முடியாத அளவுக்கு கைவிடப்பட்ட நிலைக்கு வந்துள்ளது. இதில் ஆண்களும் சிக்கித் தவிப்பது பரிதாபமே.

திருமணம் மூலம் நாம் கூட்டு உறவுக்குள் நுழைகிறோமா அல்லது எதோ நிறுவனத்தில் ஒப்பந்த வேலை மேற்கொள்கிறோமா? பொறுப்புகளை பிரித்துக்கொள்கிறோம் என்ற பெயரில் எப்போதும் ஆண் தனக்கு வசதியான பொருளீட்டும் பொறுப்பை மட்டும் ஏன் எடுத்துக்கொள்கிறான்? உத்தியோகம் புருஷ லட்சணம்...இல்லையா அது மட்டுமே அவனுக்கு அங்கீகாரம் கொடுக்கும் என்பதால் தானே? உறவு சார்ந்த முறை என்றால் அங்கு காதல், பந்தம், நேரம் எல்லாம் அன்பை முதன்மைப் படுத்தி இருக்கவேன்டும், ஆனால் குடும்ப உறவுகள், லாப நோக்கோடு இயங்கும் நிறுவனங்களைப் போல் பொருளாதாரத்தை முதன்மைப்படுத்தியே அமைக்கப்படுகிறது (நல்ல உ.ம் - வரதட்சனை). அன்பை முதலீடாக கொள்ளும் குடும்பங்களில் பெரிதாக பொருள் ஈட்ட வேண்டியதில்லை என்று கணவன் மனைவி இருவருமே சேந்து முடிவெடுப்பார்கள். (இது இருவருக்கும் பொருந்தும், ஆனால் மனைவி பொருளாதரம் பெரிதில்லை என்று முடிவெடுக்கலாம் என்பது அவளுக்குத் தெரிவதில்லை) உழைப்பு போக மீத நேரத்தை வீட்டில் ஒருவருக்கொருவர் உதவியாக, சந்தோஷமாக செலவிடுவர்.

தன் பிள்ளைகள் ஊரிலேயே உயர்ந்த பள்ளிப்படிப்பு, மற்றும் உயர்ந்ததாக கருதப்படும் எதற்கும் அறிமுகப்படுத்தப்பட வேண்டியதில்லை என்று கூட்டாக முடிவு செய்வர். பிள்ளைகளுக்கு பணமீட்டும் வெறியை புகுத்தாமல் அனுபவத்தை முதலீடாக வழி மொழிவர்.அறிவை வளர்கும் பொறுப்பை ஆசிரியர்களிடம் தாரை வார்த்துக் கொடுக்கமல், தொடக்கம் முதல் வாழ்வின் பொருள் பொருள் மட்டுமன்று, வாழ்தல் என்று கற்றுக்கொடுப்பர். சுருங்கக் கூரின், கணவர்கள் A.T.M களாய் வாழாமல், மேன்மை மிகுந்த மனிதப் பிறப்பாய் வாழ்வர்.

ஆணுக்கு மனைவியாகிய பெண் எதற்கு அதுபோல் பெண்ணுக்கு கணவனாகியவன் எதற்கு என்ற அடிப்படைக் கேள்வி எழும் நிலை உருவாகி வருகிறது. பொருள் ஈட்டவும், உடல் இச்சையை போக்கிக்கொள்ளவும், வாரிசு வளர்க்கவும், இவற்றை செய்வதற்காக வாழ்க்கையைத் தொலைப்பதும்தான் திருமணங்கள் மூலம் கிடைக்கும் பயனாக உள்ளது. காதலிக்கும் பொழுது காணும் சுகம் ஏன் திருமணத்திற்கு பின் தொலைந்து விடுகிறது என்றால், மேற்கூறியது போல் தலைமைப் பொறுப்பை கணவன் என்ற பெயரில் ஆண் தன் தலையில் ஏற்றிக்கொண்டு சமுதாயத்தில் தனக்கொரு அங்கீகாரம் தேவை என்று பொருளாதரத்தின் பின்னும், புகழின் பின்னும் ஓடிக்கொண்டு, அன்பை அடகுவைத்துவிடுவதால்தான்.


மார்க்ஸ் கூறிய தொழிலாளர்களுக்கான கூற்றை பெண்களாகிய நாமும் மனதில் கொள்ள வேண்டும்....

ஆம்..தோழிகளே நாம் முதலாளிகளுக்காகவும் சேர்த்துத்தான் போராடுகிறோம்.

நம் வீட்டில் கிடக்கும் விலையுயர்ந்த டீ வி, சோபா அலங்காரப்பொருட்கள், கழுத்தில் மின்னும் நகைகள் என அனைத்தும் நம் அன்பை தின்று கொழுத்த மிருகங்கள். ஆம் தோழிகளே...... அம்மிருகத்திற்கு தலையைக்கொடுக்கும் கணவன் எனும் ஆணை பார்வையாளர் வரிசையில் இருந்து காணுவதை விட காப்பாற்றுவது கடமை.

6 comments:

  1. தெள்ளிய பார்வை கொற்றவை

    ReplyDelete
  2. தொடர் வாசிப்பிற்கு நன்றி நேசமித்திரன்

    ReplyDelete
    Replies
    1. இப்போதுள்ள எல்லா கலாச்சார முறைகளும் களையப் பெற்று, " சுதந்திரம் " மற்றும் " ஆசைகள் ஈடேற்றம் " ஆகியவைகளையே பிரதானமாகக் கொண்ட ஒரு உலகத்தை ஒரு கணம் மனசாட்சியோடு நினைத்துப் பாருங்கள் கொற்றவை. அந்த உலகம் உங்களுக்கு அழகாகவா தெரிகிறது ???

      பெண்களுக்கென நீங்கள் சொல்லும் எல்லா அடிமைத்தனங்களையும் அனுபவிக்கும் ஆண்களும் இருக்கிறார்கள். ஆண்களுக்கென நீங்கள் சொல்லும் எல்லா அடிக்கு முறைகளையும், தந்திரங்களையும் பிரயோகிக்கும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

      Delete
  3. நுண்ணிய பார்வை உள்ளது கொற்றவை உங்களுக்கு,வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. நல்ல முயற்சி.
    பெரு மலையை சிறு உளி கொண்டு
    துளைக்க ஆரம்பித்திருக்கிறீர்கள்.
    நிச்சயம் ஒரு நாள் மலை சிதறும்
    நம் காலத்திற்கு பின்னாவது.

    ReplyDelete
  5. இப்போதுள்ள எல்லா கலாச்சார முறைகளும் களையப் பெற்று, " சுதந்திரம் " மற்றும் " ஆசைகள் ஈடேற்றம் " ஆகியவைகளையே பிரதானமாகக் கொண்ட ஒரு உலகத்தை ஒரு கணம் மனசாட்சியோடு நினைத்துப் பாருங்கள் கொற்றவை. அந்த உலகம் உங்களுக்கு அழகாகவா தெரிகிறது ???

    பெண்களுக்கென நீங்கள் சொல்லும் எல்லா அடிமைத்தனங்களையும் அனுபவிக்கும் ஆண்களும் இருக்கிறார்கள். ஆண்களுக்கென நீங்கள் சொல்லும் எல்லா அடிக்கு முறைகளையும், தந்திரங்களையும் பிரயோகிக்கும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    ReplyDelete