சமீபத்தில் வெளிவவந்த “சூடான வெளி” படத்தில் நடுநிலைவாதம் என்னும் பெயரில் நாறும் ஆணாதிக்க வாசம் குறித்து எனது விமர்சனத்தை எழுதினேன். வழக்கம் போல் இணைய ரவுடியனர் ஆபாசமாக சுத்து போட்டனார். அதை விடக் கொடுமை ஒரு paid influencer, அதை படத்திற்கான இலவச விளம்பரம் என்று ஆண் மன வன்மத்தில் டிவிட் செய்தார்,. இயக்குநரோ ஒரு படி மேலே சென்று படம் வெற்றி, போலி பெண்ணியவாதிகள் உளறுகின்றனர் என்று ஆணாதிக்க வன்மத்தோடு சப்பைக் கட்டு கட்டினார்.
பல பதிவுகளை நான் எழுதினாலும், ஆடை விஷயத்தில் அப்பா மகளுக்கு “சரியான பாடம் புகட்டும்” அந்த காணொளி Feminists & Periyarists களுக்கு செருப்படி என்று Viral ஆக சுற்றில் வருகிறது. (in public & paid promotion pages).
என்னுடைய விமர்சனத்திற்கு பதில் அளித்த இயக்குனர் “சென்ற படத்தில் ஆண்களை துவம்சம் செய்தபோது நீங்கள் மகிழ்ந்தீர்கள், இப்போது நான் நடுநிலையாக பேசும்போது கோவம் வருகிறதா” என்று கேட்டிருந்தார்! இங்கு தான் அவரது உண்மையான எண்ணம் வெளிப்படுகிறது. அதாவது அவருக்கென்று ஒரு சித்தாந்த பார்வையோ, நிலைப்பாடோ இல்லை. அந்தந்த கணத்திற்கு Rage Bait என்று சொல்லத்தக்க “கோஷ்டி மோதல்”களை Content ஆக மாற்றி புகைச்சலில் குளிர் காய்பவர் என்பது கண்டு சற்று அதிர்ச்சி ஆனேன்.
சமூகப் பிரச்சினை குறித்து உரையாடும்போது ஒடுக்கப்படுபவர் பக்கம் நின்று பார்க்காமல் “நடுநிலை” என்று பேசுவது அயோக்கியத்தனம்! சமூக அடுக்கில் யாருக்கு அதிகாரம் உள்ளது, யார் கீழ்நிலையில் உள்ளனர் என்கிற அறிவு இல்லை எனில், இப்படித்தான் அரைவேக்காடாக எதையாவது கிளப்பி விடுவார்கள். ஆனால் இவர் ஒடுக்கப்படுபவர் தரப்பு அரசியல் நிலைப்பாடு கொண்டவரை அரைவேக்காடுகள் என்கிறார்!
இவரது 2ஆம் பாக படத்தில் உள்ள ஆபத்து என்னவென்றால், பெண்ணியம் என்றாலே ஆடை அவிழ்க்கும் சுதந்திரம், பாலியல் சுதந்திரம் மட்டுமே பேசுபவர்கள் என்னும் ஆணாதிக்க வெறியர்களின் எண்ணத்தையே இவரும் பிரதிபலிக்கிறார். அதனால் தான் அது அத்தனை வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஒரு சிறிய உதாரணத்தைப் பார்ப்போம்.
“எங்க காலத்துல அம்மிக் கல்லு, ஆட்டுக்கலுல சட்டினி அரைப்போம் அம்புட்டு ருசியா இருக்கும், இப்ப உள்ள பொம்பளைங்க எங்க சமைக்குறாளுக, அப்படியே சமைச்சாலும் மிக்ஸி, கிரைண்டர்ல சரு புன்னு அரைச்சு என்னத்தயோ ஆக்கிப் போடுராளுக, ருசியே இல்ல” என்கிற பேச்சுகளை கேள்விப்பட்டிருப்பீர்கள்.
போதாக்குறைக்கு, கல்லில் அரைத்தால் சத்து பல உண்டு, மிக்ஸி அதை கெடுக்கிறது என்று பேசிக் கொண்டிருப்பார்கள்! கல்லில் அரைத்தால் சத்து, மிக்சியில் அரைத்தால் சத்தில்லை என்பதற்கு அறிவியல் ஆய்வுகள் இருக்கிறதா? சரி இருந்தாலும் அதை எப்படி அணுகுவது என்று “பெண்ணிய-மார்க்சிய” நோக்கில் பார்ப்போம்!
மனிதர்கள் தொடக்க காலகட்டத்தில், தங்களுக்கு கிடைத்த மூலப் பொருட்களை வைத்து தமக்குத் தேவையான உற்பத்திச் சாதனங்களை உருவாக்கி பயன்படுத்தி வந்தனர். தொழில்நுட்பம் வளர வளர பண்டங்கள் மாறின, தம் தேவை, வசதிக்கு ஏற்ப மனிதர்கள் அதற்கு தகவமைத்துக் கொண்டனர். கழுதை, குதிரை, மாட்டு வண்டிகளில் இருந்து இன்று Rocket வரை பரிணமித்து விட்டனர். பொருட்களை தழுவிக் கொள்ளும் சமூகம் பெண்கள் உடல், உடை, சமூக அரசியல் பொருளாதார சுதந்திரம் போன்ற விஷயங்களை மட்டும் மாற்றிக் கொள்ளத் தயாராகவில்லை. அதுதான் ஆணாதிக்கத்தின் விளைவு!
சமீபத்தில் ஒரு சிறிய ரக விமானம் விபத்திற்கு உள்ளாகி திரு அஜித் பவார் உள்ளிட்டோர் இறக்க நேரிட்டது. மிகுந்த துயர் மிகு சம்பவம் அது. ஆனால், அந்த விமானத்தின் துணை விமானியாக ஒரு பெண் இருந்தார் (அவரும் இறந்து விட்டார்) என்கிற செய்தி வெளியான உடன், இதற்குதான் பெண்களை இந்த வேலைகளில் அமர்த்தக் கூடாது என்று பெண் வெறுப்பில் பலர் அவதூறு செய்ததாக செய்திகள் வெளியாகின! ஆணாதிக்க வன்மம் அத்தனை கொடூரமானது.
இதுவும் உடை விஷயமும் ஒன்றா? பெண் உடல், நடத்தை, கலாச்சார விதிமுறைகளைத் தனித்தனியாகப் பிரித்து பார்ப்பது பொது புத்தி. எந்த ஒரு Control, debate, orders, rules & regulations ஐயும் எந்த மனநிலையிலிருந்து விவாதிக்கப்படுகிறது என்பதை ஒட்டுமொத்த சமூக மனநிலை மற்றும் அதிகாரப் படிநிலையில் இருந்தும், வரலாற்று நிலையில் இருந்துமே காண வேண்டும். அதுதான் பொதுச் சமூகப் பார்வைக்கும், முற்போக்குச் சித்தாந்தம் பயின்றோருக்குமான வேறுபாடு. ஒடுக்கப்படுவோர் திமிரி எழுவதை பொதுச் சமூகத்தால் பொறுத்துக்கொள்ள இயலாது. “இப்பல்லாம் இவளுக, அவனுக” என்று புலம்பிக் கொண்டே இருக்கும்!
உற்பத்திச் சாதனங்கள் மாறுவது போல், நாகரீகம், கலாச்சாரம் உள்ளிட்ட விஷயாங்களும் உற்பத்தி முறைக்கு ஏற்றவாறு மாறுகின்றன. ஆண்கள் மாறுவது போல் தான் பெண்களும் fashionஐ மாற்றிக்கொள்கின்றனர். ஆனால் பெண்கள் (தலித்துகள், ஒடுக்கப்படுவோர் ) மாறுவதை சமூகம் ஏற்காது. பெண்ணின் உடலமைப்பு வேறு என்று அதற்கு ஈயம் பூசினாலும், அடிப்படையில் அது பெண் உடலின் சில பாகங்களை பாலியல் பண்டமாகக் கருதும் ஆண் சமூகப் பார்வையே! பெண் உடல் அவளுக்குரிய ஆணுக்கு மட்டுமே சொந்தம் எனவே அவள் அனைத்தையும் மூடி வைக்க வேண்டும். அதுவே புனிதம், நாகரீகம், அதற்கு கட்டுப்படாத பெண் திமிர் பிடித்தவள், அரைவேக்காட்டு பெண்ணியம் பேசுபவள்!
மிக்ஸி விஷயத்தில் - வீட்டு வேலை என்பது பெண்களின் கடமையாக இருக்கும் குடும்ப அமைப்பில், அம்மிக்கல்லை விட மிக்சி பெண் உழைப்பை எளிமைப்படுத்துகிறது. அதிலும் இரட்டை உழைப்பு செலுத்தும் பெண்களுக்கு நவீன இயந்திரங்கள் பெரும் வரம் என்று முற்போக்குவாதிகள் காண்பர். ஆனால் பழமைவாதிகளும், ஆணாதிக்கவாதிகளும் மேற்சொன்ன புலம்பலை வைப்பதோடு, பலரது வீட்டில் அம்மியில் அரைத்து சமைக்க வேண்டும் என்பது ‘அன்புக் கட்டளையாக’ நிலவும். பெண்களும் அதை பெருமையாக கருதும் அறியாமையில் இருப்பார்கள். அதை உணர்த்தும் பெண்களை அந்த அறியாப் பெண்கள் வசை பாடவும் செய்வார்கள். ஆணாதிக்க சமூகத்தின் வெற்றி அதுவே!
ஒருவேளை மருத்துவ குணங்கள் அம்மிக் கல்லில் இருக்குமாயின், வாருங்கள் இருவரும் சேர்ந்து கெட்டிச் சட்டினி அரைப்போம் என்று “பெண்ணியவாதிகள்” கூறினால், பொறுக்குமா ஆண் சமூகம், அடங்காப்பிடிராரி, பொம்பளையா அவ என்று ஏசுமல்லவா, அதுபோல் தான் இந்த உடை விஷயமும். (வீட்டு வேலையைப் பகிர்ந்து கொள்ளும் ஆண்கலைப் பற்றி நான் இங்கு பேசவில்லை!)
பெண் உடலை hyper sexualize செய்யும் வணிகத்தையும் நான் பேசவில்லை! தனிப்பட்ட சுதந்திரத்தை, தேர்வை வியாக்கியானம் செய்யும் நிகழ்வுகளை மட்டுமே பேசுகிறேன்!
அந்த பாகம் 2 படத்தில் பெண் குட்டை உடை அணிந்து வந்ததற்கு பாடம் உரைக்கும் விதமாக அப்பா ஒரு உடை அணிந்து வந்து பாடம் எடுப்பார். அவரது கண்ணோட்டதை வெளிப்படுத்தும் வரை நமக்குப் பிரச்சினை இல்லை, ஆனால் அதனால் அந்த பெண் அழுவது போல் காட்டுவது (she has been taught a lesson) தான் நமக்குப் பிரச்சினை! முதலில் எங்கு எப்படி உடுத்த வேண்டும் என்கிற அறிவு கூட இல்லாதவர்கள் என்கிற முத்திரை! எங்க உலகம், உங்க உலகம் என்கிற பெயரில் பெற்றோர் பாவப் பட்டவர், விட்டுக்கொடுகாத் தயாராக இருப்பாவர் போல் காட்டி, பெண் உரிமைப் பேசும் பெண்ணை அராஜகவாதி போல் காட்டியது!
அப்பா பேசிய உடன் அந்த பெண் “ஏம்பா எனக்கு சுடிதார் கொடுக்கணும்னாலோ இல்லை என் உடை பத்தி ஏதும் பேசனும்னாலோ நீங்களே வந்து என் கிட்ட பேசி இருக்கலாமே, என்று ஒரு உரையாடலை நிகழ்த்தி, மேற்சொன்ன நாகரீக மாற்றம், தனிப்பட்ட தேர்வு, வசதி போன்று இருவரும் பேசி ஒரு புரிதலுக்கு வந்திருந்தால் அது நடுநிலை வாதம், ஆனால் ஆண் சமூகத்தின் கைத்தட்டல் பெறும் வண்ணம் பெண்ணைக் “கும்மும்” விதமாக எடுத்துவிட்டு “வெற்றி விழா” மேடையில் அதை நியாயப்படுத்த ஒரு திணவு வேண்டும்.
பெண் உரிமைப் பிரச்சினை என்பது வெறும் உடை, உடல் சுதந்திரப் போராட்டம் மட்டுமல்ல, நாங்கள் அதை விடப் பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம், பேசுகிறோம், போராடுகிறோம். உங்களுக்கு கிடைக்கும் அந்த மிகப் பெரிய வெளியை எங்களது ஒடுக்கப்பட்ட நிலை குறித்துப் பேச நீங்கள் பயன்படுத்தலாம்! அதை விடுத்து மீண்டும் மீண்டும் எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுகிறீர்கள். (பாகம் 1இல் கூட தாய்மை சார்ந்த விவாதத்தில் எனக்கு விமர்சனம் இருந்தது, அதை அவரிடம் பேசிய நினைவு உள்ளது). அத்தகைய “தீ” பிரவத்தான் செய்யும்! அதானலேயே அது அறிவொளி ஆகி விடாது! பெண்களின் சுதந்திரத்தை சாம்பலாக்கும் தீயாகத்தான் எஞ்சும். ஒட்டுமொத்தமாக பெண்ணியம், மற்றும் பெண் உரிமைப் போராட்டங்களையே கேலி கிண்டலுக்கு உள்ளாக்கும் ஆயுதமாகிப் போகிறது. உங்களுக்கெல்லாம் மனசாட்சி இல்லையா?
நீங்கள் ஆண்களை கும்முகிறீர்களா அல்லது பெண்களை கும்முகிறீர்களா என்பதல்ல பிரச்சினை! அது என்ன விளைவை ஏற்படுத்துகிறது என்பதுதான் பிரச்சினை! அதன் விளைவு யாரை பாதிக்கிறது என்பதும் பிரச்சினை!
No comments:
Post a Comment