Dec 21, 2021

பாலுணர்வு, இணை தேடல் மற்றும் காதல் உணர்வில் சில அவதானிப்புகள்

 பாலியல் வறட்சி மற்றும் பாலியல் தேவைகள் குறித்து பேசுகையில் பாலியல் உணர்வுகளைப் பொதுமைப்படுத்தப்படுகிறதா?

உணர்வுகளைப் பொதுமைப்படுத்தி அதற்கொரு பண்பாட்டு வரையறை கொடுத்து பொதுமைப்படுத்தக் கூடாது என்பதே இந்த உரையாடலின் அடிப்படை.

பாலியல் / பாலுறவு உணர்வுகள் மற்றும் தேவை குறித்து பேசுகையில் அது காமம் என்கிற தேவையை மட்டுமே சுட்டுவதில்லை!

இணை தேடல் என்கிற தேவையில் பல வகையான உணர்வுகள் செயல்படும் என்பது ஒன்றும் அறிய இயலாத சூத்திரமல்ல.

Sexual Attraction, Romantic Attraction, Companionship, Loneliness & Frustrations, Various Fetishs, Sexual / Romantic Fantasies, Power Play, Imitating, Peer Pressure, Societal Pressure to Prove the Sexual Power / Fertility, Sexuality Acceptance, Identity Crisis and much more.

அதாவது பாலியல் ஈர்ப்பு, “காதல்” ஈர்ப்பு, தோழமை மற்றும் ஆறுதல் தேவை, தனிமையினால் உண்டாகும் “ஆத்திரம்” அல்லது மனச் சோர்வு, பல்வேறு விதமான கவர்ச்சிகள் / வெறித்தனங்கள், பாலியல் / காதல் கற்பனைகள், அதிகார வேட்கை, போலச் செய்தல், சக அழுத்தம், பாலியல் சக்தியை நிரூபித்தல், பாலியல் தேர்வு சார்ந்த விமர்சனங்கள், இணை கிடைப்பதில் உள்ள தட்டுப்பாடுகள்.. அடையாளச் சிக்கல் இப்படியாக… மனம் உடல் இரண்டின் தேவையையும் உள்ளடக்கியே பேசுகிறேன்.

இது இப்படித்தான் இருக்கிறதா? உறுதியாக சொல்ல முடியுமா? என்றால் இப்படியும் இருக்கிறது. அனைத்துவிதமான பாலுறவு / மன உணர்வுகளுக்கும் இந்த சமூகத்தில்  இடம் இருக்க வேண்டும். அதை கையாள்வதற்கு பயிற்சிகள் வேண்டும். வடிகாலும் வேண்டும்.

ஒரு சில நபர்கள் அதீத காம வேட்கை கொண்டவர்களாக இருக்கலாம், ஒரு சிலருக்கு காம வேட்கை அதிகமாக இருக்கும் ஆனால் அவர்களால் காதல் வயப்படாமல் அல்லது மனதளவில் ஒன்றாமல் ஒருவரோடு உடலுறவு வைத்துக் கொள்ள இயலது. ஒரு சிலருக்கு பாலியல் ஈர்பே இல்லாமல் இருக்கும். பாலியல் ஈர்ப்பே ஏற்படாதவரை திருமணம் செய்து கொள்ள விருப்பமின்றி இருக்கலாம். ஆனால் அத்தகையவரை ஆணாக இருந்தால் – “மேட்டர் வேலை செய்யலையா” என்பார்கள், பெண்ணாக இருந்தால் “மலடியா”, வயசுக்கு வரலையா என்பார்கள். வயதுக்கு வராமல் இருந்தாலும் அது ஒன்றும் குற்றமில்லை. அது உடல்நிலை சார்ந்தது..

உதாரணமாக இரண்டு வகையினரை எடுத்துக் கொண்டால், இருவரும் ஒருவருக்கு ஒருத்தர் என்னும் வரையறைக்குள் பொருந்தாதவர் என்றும் வைத்துக் கொள்வோம். முந்தையவர் யாரோடு வேண்டுமானாலும் உடலுறவுக்கு தயாராக இருப்பார் ஆனால் சமூகத்தின் கட்டுப்பாடுகளால் இணை கிடைப்பதில் சிக்கல்கள் இருக்கும். இரண்டாம் நபருக்கு எமோஷனல் தேவை அதிகமாக இருக்கிறது. தன் மனநிலைக்கு பொருந்தக் கூடிய நபரோடு மட்டுமே அவரால் மன ரீதியாக உடல் ரீதியாக ஒன்ற முடியும். அதேவேளை ஒரு நபரோடு மட்டுமே அத்தகைய எமோஷனல் பாண்டிங் ஏற்படும் என்று சொல்வதற்கில்லை. பலரோடு எமோஷனல் பாண்டிங் ஏற்பட்ட நபர் அனைவரோடும் உடலுறவு வைத்துக் கொள்ளக் கூடியவர் என்றும் சொல்வதற்கில்லை. இரு தரப்பிற்குமே எப்போது பார்த்தாலும் “வேட்கை” கொண்டு “இரை” வேட்டையாடுபவர்களும் அல்ல! ஆனால் இவர்களின் தேவை சமூக வரையறைக்கு உட்பட்டதல்ல.

பாலியல் கற்பனைகள் அதிகமாக கொண்டவர்கள் எனில் - இணை இருப்பின் ஒருவேளை அதை புரிந்துகொள்ளும் பக்குவம் உள்ளவர்களெனில் பரஸ்பரம் பேசி, விவாதித்து ஏற்புடையவற்றை நடைமுறைப்படுத்தி விருப்பமற்றவற்றை ஒதுக்கி இன்பம் காணலாம். ஆனால் தம் பாலியல் தேவைகளை இணைகளிடம் வெளிப்படையாக பேச இடம் இருக்கிறதா? குறிப்பாக பெண்கள் தங்களுக்கு இன்பம் தரக் கூடியது எது என்று தம் காதலனிடமோ, கணவனிடமோ பேச இயலுமா? சிறு விகிதத்தினர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் கூட ஆண் ஈகோ என்பது உள்ளார்ந்து இருக்கிறது. பெண்ணை நிறைவடையச் செய்ய முடியவில்லை எனில், ஒரு கட்டத்தில் அதை அந்தப் பெண் கராராக வெளிப்படுத்தி வேறு துணையை தேட விரும்புகையில் அது கோவமாக மாறி.. அதுவரை முற்போக்காக இருந்த நபர் அந்தப் பெண்ணை “உனக்கெல்லாம் எவ்ளோ செஞ்சாலும் பத்தாதா” என்பார். பாலியல் நிறைவு சார்ந்து நிராகரிக்கப்படுகையில் ஆண் மனம் எந்த “எல்லைக்கும்” செல்லும்

இது உடலுறவு விசயத்தில் மட்டுமல்ல… எமோஷனல் தேவைக்கும் பொருந்தும். ஒவ்வொருவரின் உணர்ச்சி மற்றும் உணர்வுகளும் மாறுபடும். தன் மனதிற்கு எது சந்தோஷம் தரும். எதைப் பேசினால் பரவசம் வரும். அன்பை, காதலை, காமத்தை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு மனிதருக்கு மனிதர் மாறுபடும். ஆனால் அதையெல்லாம் பேசுவதற்குரிய முதிர்ச்சி / பயிற்சி எதுவும் கற்றுத்தரப்படுவதில்லை. பேச வாய்ப்புமில்லை. 

அதேபோல் “நிராகரிப்பை” எதிர்கொள்வதற்குரிய தயாரிப்புகளும் நடைபெறுவதில்லை. உறவை முறித்துக் கொள்ள விரும்புவது என்பது Compatibility issue – பொருத்தம் சார்ந்த விசயமே ஒழிய அது எந்த வகையிலும் தோல்வியோ, தாழ்வானதோ இல்லை என்பது கற்றுக் கொடுக்கப்படுகிறதா? ஒரு பெண் விட்டு சென்றுவிட்டால் ஆண் எதிர்கொள்ளும் அவமானங்கள், சக அழுத்தம் ஆகியவை  சேர்ந்தே பழி வாங்கும் மனநிலைக்கு அவனை தள்ளுகிறது. அதைத் தவிர உணர்ச்சிகர சார்பு, காதல் பற்றிய புனிதங்கள்….

இப்படி ஒவ்வொறு “வகை” குறித்தும் விரிவாக பேசலாம்! ஆனால் சமூகத்தின் அறிவியல் தன்மையற்ற  “ஒழுக்க” வரையறைக்குள் வராதவர்களின் “செக்ஸ்மோ” (Sexual & Emotional needs – am jus trying to coin a term here!)  தேவைகளை வெளிப்படுத்துகையில் சமூகமோ, இணையோ எப்படி அதை எதிர்கொள்கின்றனர்? அருவருப்பு, பயம், கண்டிப்பு, அவமானப்படுத்துதல், நீ ”நார்மலா இல்ல”, ஏன் இப்படி வெறி புடிச்சு அலையுற, நீ சைக்கோ என்பதாக எதிர்கொள்ளும்..

எல்லாரையும் இஷ்டத்துக்கு விட்டா சமூகம் தாங்குமா? நாகரீகம்னு ஒண்ணு இருக்கா இல்லையா, மிருகங்க மாதிரி நடந்துக்குறது மனுஷத் தன்மையா?

மிருகங்கள் பல இணைகளோடு சேர்வது மிருகத்திற்கு இழிவானதல்ல. அது மனிதப் பார்வையில் தான் இழிவானதாக இருக்கிறது! அது இயல்பூக்கத்துடன் வாழ்கிறது.  மனிதர்கள் நாகரீகம், பண்பாடு என்று வரையறுத்துக் கொண்டு மற்றவரை “ஜட்ஜ்” செய்வதை, கட்டுப்படுத்துவதையே வேலையாக வைத்திருக்கிறார்கள்.

ஆதியில் ஒருவருக்கு ஒருத்தி என்கிற பண்பாடு நிலவியதா? ம்ம் அது காட்டுமிராண்டி காலம்.. அதே மாதிரி இப்ப வாழனுமா? ஒழுக்கவான்களே ஒருதார மணமுறை / தற்போது நிலவும் ஆண் தலைமையிலான குடும்ப அமைப்பு உருவானது ஏன்? எப்படி என்பதை படித்தறியுங்கள்! அறிவியல் கண்ணோட்டத்தோடு எழுதப்பட்ட நூல்கள்! மானுடவியல் நூல்கள்! மார்க்சியக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட நூல்கள் சமூகத்தின் தோற்றம், வளர்ச்சி மற்றும் இயங்குதன்மை குறித்த தெளிவைத் தரும்.

மேலும் தற்போது மட்டும் எல்லாரும் ஒருவருக்கு ஒருத்தர் என்று தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா? திருட்டுத்தனமாக நடப்பதால் தான் பெண்களுக்கு அது ஆபத்தானதாக போய் முடிகிறது. அல்லது கொலை, தற்கொலையில் போய் முடிகிறது. பாலியலை மட்டுமல்ல குடும்ப அமைப்பையும் ஜனநாயகப்படுத்தும் தேவை உள்ளது.

உறவுத் தேவைகளில் மேலும் சில அவதானிப்புகளை குறிப்பிடுகிறேன். பேச்சுத் துணை (குறிப்பிட்ட நபர் மீது ஈர்பு ஏற்பட்டு அவரோடு பேசிக் கொண்டிருந்தால் போதும் என்கிற உணர்வு – அதிலும் கூட நேரில் பார்க்க தயக்கம் இருப்பது, ஃபோனில் மட்டுமே பேசினால் போதும் என்பது, ஃபோன் பேச பிடிக்காது “டெக்ஸ்டிங்க்” மட்டுமே வேண்டுவது என்று வகைகள் உண்டு), ஹேங் அவுட் – அதாவது ஊர் சுற்ற தோழமை, உணர்ச்சிகர பிடிப்பற்ற வகையில் கம்பானியன்ஷிப் தேவைப்படுதல், குரலால் ஈர்க்கப்படுதல், உடல் வாசனையால் ஈர்க்கப்படுதல், சிரிப்பால், நிறத்தால், முடியின் தன்மையால் (உ.ம். சுருட்டை முடி அல்லது நீண்ட கூந்தல்), உடல் வடிவத்தால் ஈர்க்கப்படுதல், அறிவால் ஈர்க்கப்படுதல் (SapioSexual) என்று மனித செக்ஸ்மோ தேவைகள் மாறுபடுகின்றன.

கூடுதலாக தாய் மீது, தந்தை மீது காமுறுதல் (மகன், மகள் மீது) – எனக்கு என் அம்மாவப் பார்த்தா ஆசை வருது என்று சொல்கிற மகன்கள், எனக்கு என் மகள பார்த்தா ஆசை வருது என்று சொல்லக் கூடிய அப்பாக்களை நான் கண்டிருக்கிறேன். பாலியல் தேவை சார்ந்த ஒரு பதிவிற்கு டிவிட்டரில் ஒருவர் – Pls voice to Normalize Incest அதாவது இரத்த உறவில் சகோதர சகோதரி காதல் / காமம் கொள்வது! என்று தொடர்ந்து வேண்டுதல் வைத்துக் கொண்டே இருந்தார்.

கூடுதலாக ஃபீடோஃபீல் என்று சொல்லத்தக்க குழந்தைகள் மீதான ஈர்ப்பு (இது ஒரு மனப் பிறழ்வு என்றும், போதை வஸ்துகள் பயன்படுத்துபவர்களாக இருப்பார்கள், மன அழுத்தம் ஒரு காரணமாக இருக்கலாம், முறிந்த குடும்பங்களில் வளர்ந்திருக்கலாம், சிறு வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருக்கலாம் என்று காரணங்கள் சொல்லப்படுகிறது). எதுவாக இருந்தாலும் இது மிகப் பெரிய பிரச்சினை. குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குகிறது. எதுவாகினும் இவர்களுக்கான “மன நல மருத்துவம்” தேவைப்படுகிறதல்லவா? அதை விடுத்து அவர்களை “வெறியர்கள்” என்று வகைப்படுத்தி அடித்துக் கொல்ல வேண்டும், தூக்கில் தொங்க விட வேண்டும் என்று சொல்வது பயனளிக்குமா? இவர்களுக்கு உரிய கவனிப்பை கொடுக்கவில்லை எனில் இவர்கள் வெளியேத் தெரியாத வேட்டையாடிகளாகிப் போவார்கள்  அல்லவா?

இதையெல்லாம் பேசினால் “ச்சே இப்படியுமா மனுஷங்க இருப்பாங்க” என்கிற எதிர்வினைகள் தான் வரும்.

இது சரியா தவறா என்கிற “ஒற்றை” நிலைப்பாட்டிற்குள் வருவது தான் ஆபத்து! டைவர்சிட்டி என்பதை உணர்வுகளுக்கும் கொடுக்க வேண்டும். “மாறுபட்ட” உணர்வுகளை குறைந்தபட்சம் பேசும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும். அதன் பிறகு அதற்கு வடிகால் அமைத்துக் கொடுத்தல் என்பது “அறிவியல்பூர்வமாக” இருக்க வேண்டுமே ஒழிய “ஒற்றை அதிகாரக் கட்டமைப்பில்” இருந்து ஒதுக்குதலாக, மறுத்தலாக இருக்கக் கூடாது!

உளவியல்  ஆலோசனைகளைப் பெறச் சொல்கிறோம்! ஆனால் அது அனைவர்க்கும் வாய்க்கப் பெறுகிறதா? பொருளாதார சூழலும், இரத்தம் உறிஞ்சும் உழைப்பு நேரமும் அதற்கு இடம் கொடுக்கிறதா? எத்தனை உளவியல் மையங்கள் உள்ளன? உளவியல் துறையில் “வலதுசாரி பிற்போக்குத்தனங்கள்” இல்லை என்று சொல்லிவிட முடியுமா?

பாலியல் துன்புறுத்தல்கள், பாலுறவு வன்முறை என்பது பெண்களுக்கு மட்டும் ஏற்படுவதில்லை!

சமீபத்தில் ஒரு ஆண் இன்னொரு ஆணால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதை பகிர்ந்து கொண்டார். செக்ஸ் டாய்ஸ் புகைப்படங்களை அனுப்புவது. நிர்வாணப் புகைப்படங்கள் அனுப்புவது, தனியாக இருக்கையில் பாலுறுப்பில் கை வைத்தது ஆகியவை தன்னை பாதித்ததாக சொல்கிறார். அந்த நபர் பல ஆண்களிடம் மட்டுமின்றி சிறுவர்களிடமும் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாகவும் ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் பேசத் தயங்குவதாகவும் கூறினார்.  

சட்டத்தில் சில “சுதந்திரங்கள்” வழங்கப்பட்டிருக்கலாம், ஆனால் சமூக அளவில் பண்பாடு என்னும் பெயரில் நிலவும் அடக்குமுறையால் சமூகம் கடுமையான பாலியல் சிக்கலில், பாலியல் வறட்சியில் சிக்கித் தவிக்கிறது. மற்ற அடக்குமுறைகளைப் போல் பாலியல் அடக்குமுறை என்பதும் மிகப் பெரிய பிரச்சினை என்பதை சமூகமும், அரசும் உணர வேண்டும். அதை கையாள்வதற்கான அறிவியல்பூர்வ நடவடிக்கைகளில் உடனடியாக இறங்க வேண்டும்.

மனிதர்களின் தேவைகள் பற்றிய உளவியலாளர்கள் வரையரையில்

1.   Biological and physiological needs - air, food, drink, shelter, warmth, sex, sleep, etc.

2.       Love and belongingness needs - friendship, intimacy, trust, and acceptance, receiving and giving affection and love. Affiliating, being part of a group (family, friends, work).

மற்ற தேவைகளோடு மேற்சொன்னவற்றையும் விவரிக்கிறார்கள். ஆனால் இதில் காதல், காமம், அன்பு மற்றும் உறவுத் தேவை என்பதற்கு போதிய முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. சொல்லப் போனால் மனிதர்களின் எந்தத் தேவையும் ஆளும் வர்க்கத்தின் நலனுக்காக நிலைத்திருப்பவையே! ஆளும் வர்க்கம் என்றால் தனிச் சொத்து சேர்த்து / சேர்க்க அதிகாரத்தில் இருக்கும் வர்க்கம். அந்த வர்க்கம் வரையறுத்துள்ளதே நாகரீகம்!

ஏற்றத்தாழ்வு, ஆணாதிக்கம், உழைப்புச் சுரண்டல் மற்றும் உணர்ச்சி சுரண்டல், பண்பாட்டு அதிகாரம், அடக்குமுறை, ஒடுக்குமுறை ஆகியவை அதன் அடித்தளம். பன்மைத்துவத்தை மறுத்து ஒடுபடித்தாக்குதல், அதிகாரக் குவிப்பு ஆகியவை அதன் குணாம்சங்கள். நாம் வளர்த்துக் கொண்டுள்ள சிந்தனைகள், கருத்துகள் அனைத்தும் அத்தகையதொரு ஆதிக்க கூட்டத்தின் போதனைகள். சொத்துடைமை வர்க்கத்தின் இருத்தலியல் தேவை மற்றும் பொருளாதாரத் தேவைகளில் இருந்தே நமது உணர்வுநிலைகள் கட்டமைக்கப்படுகின்றன. மதத்தின் பெயரால் அது பண்பாடு என்று நம்பவைக்கப்பட்டுள்ளது. அது அறிவியலுக்குப் புறம்பானது.

கூடுதலாக சொல்ல வேண்டுமெனில் பாலியல் “மனப் பிறழ்வுகள்”, “வக்கிரங்கள்”, பாலியல் குற்றங்கள் நடக்க அதுவே காரணம்… சுரண்டல் மிக்க  வாழ்வாதாரச் சூழ்நிலைகள்  எப்படி மற்ற குற்றங்களுக்கு காரணமாக இருக்கிறதோ, பாலியல் குற்றங்களுக்கும் காரணமாக இருக்கிறது. இது குறித்து பேசுவோர் “சமூகத்தை சீர் கெடுப்பவர்கள்”…

மீண்டும் சொல்கிறேன் பாலியலை ஜனநாயகப்படுத்துங்கள், வடிகால், அனுமதி ஆகிய பேச்சுகள் “பாலியல் அத்துமீறலை”, “கட்டாயப்படுத்தலை” ஆதரிக்கவில்லை..  

கலாச்சாரக் காவல் ஒழிப்பு மற்றும் பாலியலை ஜனநாயகப்படுத்துதல் என்றால் என்ன என்பது குறித்து .. தொடரும்…

 

#democratize_sex #GetScientific #sexualpoverty #பெண்களை_காத்திடுங்கள்

 

No comments:

Post a Comment