Apr 5, 2019

நான் ஏன் ஒரு கம்யூனிஸ்ட் – நீங்களும் ஏன் ஒரு கம்யூனிஸ்டாக இருக்க வேண்டும்!



நான் ஏன் ஒரு கம்யூனிஸ்ட்நீங்களும் ஏன் ஒரு கம்யூனிஸ்டாக இருக்க வேண்டும்!
- ஹெலென் ரேசர், குவார்ட்ஸ்

சுருக்கமாக சொல்வதெனில், வரலாற்றில் பரவலாக படிக்கப்பட்ட பனுவலாகிய கம்யூனிஸ்ட் அறிக்கையின் சுருக்கமான முன்னுரையிலேயே கம்யூனிசம் என்பது தீமையோ அல்லது வெகுளித்தனமானதோ அல்ல, அனைவரின் நண்மைக்கான ஒரு வரலாற்று காலகட்டம் என்று போதுமான (தங்கள் தாடியளவுக்கு அடர்த்தியாகவே) விளக்கங்களை மார்க்ஸும் எங்கல்ஸும் கொடுத்துள்ளார்கள். 1848 இல் கம்யூனிசம் என்னும்பூதம்பற்றி பயம்கொண்ட ஐரோப்பிய பேச்சுகளுக்கு உடனடியாக ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று அவர்கள் வேண்டினார்கள். ஆயினும், அரை நூற்றாண்டுகள் கழித்தும், கம்யூனிசம் குறித்த அந்த பதட்டமான கிசுகிசுக்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

மார்க்ஸ் வேண்டுமானால் உலகின் மிகுந்த செல்வாக்குடைய சிந்தனையாளராக இருக்கலாம், ஆனால் மேற்குலகில் அவருடைய சிந்தனைகள் அரிதாகவே படிப்பிக்கப்படுகின்றன. இன்றைய காலகட்டத்தில் மார்க்ஸ் குறித்து நமக்கு குறைவான அறிதலே இருந்தாலும் பெர்லின் சுவரானது தூசியென நொறுங்கி வீழ்ந்தது போல் அவருடைய சிந்தனைகளும் தவிடுபொடியாகி விட்டதாக இங்கே ஒரு நம்பிக்கை நிலவுகின்றதுஆனால், அப்படி ஏதும் நொறுங்கிவிடவில்லை. அந்த சுவரில் கம்யூனிசம் இருந்திருக்கவில்லை. போதாக்குறைக்கு, இன்றைக்கும் பொருந்தக்கூடிய - குறிப்பாக பொருளாதார வீழ்ச்சி பலராலும் உணரப்பட்டிருக்கிற இந்த காலத்தில் - சிந்தனைகள் கம்யூனிசத்தில் உள்ள.

கம்யூனிசம் என்பது சமூக ஒருங்கமைப்பிற்கான ஓர் அமைப்பு முறையாகும். இதுவரை அது அதன் உண்மையான பொருளில் நடைமுறைப்படுத்தப்படவுமில்லை, தற்போதைய நிலையில் கம்யூனிசம் என்றால் என்னவென்று சரியாக விளக்கப்படவுமில்லை. இருந்தாலும் அது சிலருக்கு அச்சத்தைக் கொடுக்கிறது, சிலருக்கு அது ஏளனமாக இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக கம்யூனிசம் உணர்த்துவது என்னவென்பது பற்றிய அக்கறையின்மை உலகளாவிய அளவில் நிலவுகிறது.

மார்க்ஸை நீங்களாகவே படிக்கலாம், நிச்சயம் முடியும். அதன் மூலம், கம்யூனிசம் என்பது ஏதோ கனமான அசுரனிலிருந்து படைக்கப்பட்டதல்ல மாறாக எதிர்கால சமூக பரிணாம வளர்ச்சி பற்றிய ஆய்வு, சிக்கலான பகுத்தறிவு நிறைந்த அனுகுமுறையிலிருந்து அது உருவானது என்பது விளங்கும். அதன் அம்சங்கள் பலவும் பழமைவாதிகளுக்கும் உவப்பானதாகவே இருக்கும். இது ஒருபுறமிருக்க, ) மார்க்ஸைப் படிப்பது மிகவும் கடினம் ) முதலாளிகளுக்கு ஓய்வு ஒழிச்சல் இல்லாது இலாபம் சம்பாதித்துக் கொடுப்பதில் மூழ்கியிருப்பதால், ஏதேனும் சுருக்கவுரை இருந்தால் கொடுங்களேன் என்னும் நிலைதான் நிலவுகிறது.

நம்மிடையே குறிப்பிடத்தக்க சோஷலிச மற்றும் கம்யூனிச சிந்தனையாளர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் தங்களை மார்க்சியர்கள் என்றே அழைத்துக்கொள்கிறார்கள். ஏனென்றால், அந்தப் ஆளின் எழுத்துகளைகுறிப்பாக மூலதனம் என்னும் மூன்று தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டு எழுதுகிறார்கள், அல்லவா? அதனால் தான்! ஆனால் நீங்கள் தான் நேரமில்லாதிருக்கிறீர்களே. மூலதனமோ நீளமானது, தொகுதி இரண்டை படிக்கும்போதே உறக்கம் வந்துவிடும், என்ன செய்வது?
மார்க்ஸ் தேவை! ஆனால் அவரை படிக்க நேரமில்லையே என்போருக்காக நாம் துரிதமாக ஒன்றை செய்வோம். உலகை மாற்றுவதற்கு முன்பாக நாம் சில உபதலைப்புகளைக் கொண்டு மார்க்ஸை அறிய முயற்சிப்போம். 

கம்யூனிசம், சோஷலிசம் மற்றும் தாராளவாதம் (லிபரலிசம்) என்றால் என்ன?
சரி, சில சொல்லாடல்களுக்கான விளக்கங்களை முதலில் பார்ப்போம். இதோ: சோஷலிசம், கம்யூனிசம், தாராளவாதம் இவை மூன்றும் ஒன்றல்ல. அமெரிக்காவை மீண்டும் மகத்தனதாக்குவோம் போன்ற வாசகங்களைக் கொண்ட கைப்பைகளில் இருந்து மாற்று-வலது கூட்டத்தினர் (“பெண்ணியவாதிகள்,”, “சமூக நீதிக்கான போராளிகள்,” “பனித்திவலைகல் சிலரும் அடக்கம்) கண்ட குப்பைகளை வீசி எறிந்தாலும் இப்பதங்கள் வெவ்வேறு பொருள் கொண்டவை. அவர்கள்தாராளவாதியைகம்யூனிஸ்டுக்கு நிகராக கண்டாலும், அவை முற்றிலும் வெவ்வேறான சிந்தனை வகைகளாகும்.

மோசமான தனிநபர் ஒழுங்கீனங்களின் விளைவாகவே சமூகத்தில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பதே தாராளவாதிகள், முற்போக்கு அல்லது பழமைவாதப் பிரிவினரின் பார்வையாகும். உதாரணமாக அமெரிக்க அதிபருக்கான வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் சிறுபான்மைகளுக்கெதிரான சகிப்புத்தன்மையற்ற தன்மையே அமெரிக்காவின் மிகப்பெரிய பிரச்சினை என்கிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்போ, சிறுபான்மையினருக்கு தனிச்சலுகை அளிப்பதே அமெரிக்காவின் மிகப்பெரிய பிரச்சினை என்கிறார்.
மேற்சொன்ன அந்த இரண்டு கருத்துகளும் கம்யூனிஸ்டுகளுக்கு ஏற்புடையதல்ல. சிறுபான்மையினர் ஒடுக்குமுறை என்பது உண்மையாகவே பெரும் பிரச்சினைகொடுமையானதும் கூடஆனால் அதற்கு மக்களின் மோசமான பண்புகள் தான் மூலக் காரணம் என்று அவர்கள் காணமாட்டார்கள். மாறாக, நமது வாழ்வாதாரத்திற்கான ஏற்பாடாக நிலவும்உற்பத்தி முறைதான் இதற்கு காரணம். தற்போதைய காலகட்டத்தில் அது  முதலாளித்துவம் என்னும் அமைப்பாக இருக்கிறது என்பதே அவர்களின் சித்தாந்தமாகும். கம்யூனிசம் என்பது முதலாளித்துவம் மற்றும் அதன் விளைவான பிரச்சினைகள், சமூக மற்றும் பண்பாட்டு வேறுபாடுகள் என அனைத்தையும் பற்றிய விமர்சனம் மட்டுமின்றி மாற்று மருந்தும் கூட.

தாராளவாதிகள் முதலாளித்துவத்தை மனிதத் தன்மைபடுத்த முடியும் என்று நம்புகிறார்கள். முதலாளித்துவம் என்பது கெட்டவர்கள் முதலாளிகளாக இருப்பதால் மட்டுமே தீமையாகிறது என்பன போன்ற வாதங்களை நியாயப்படுத்தசலுகைசார் முதலாளியம்” (க்ரானி காப்பிட்டலிசம்) போன்ற சொற்பதங்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் ஒரு சோஷலிஸ்டிற்கு இது ஐயத்திற்குரியதாகும். கம்யூனிஸ்டுக்கோ இது ஏற்புடையதே அல்ல. வேறு சொற்களில் சொல்வதானால், ஒரு சில அழுகிய ஆப்பிள்களால் அன்றைய சரக்கு வழங்கல் கெட்டுப்போனது என்பார்கள். ஆனால் கம்யூனிஸ்டோ அந்த ஒட்டுமொத்த சரக்குமே அழுகியதுதான் என்பவர்கள்.

ஒரு கம்யூனிஸ்ட் சோஷலிஸ்டாக இருப்பார், ஆனால் ஒரு சோஷலிஸ்ட் கம்யூனிஸ்டாக இருக்க வேண்டியதில்லை. சோஷலிசம் என்பது முதலாளித்துவத்தை தொடர்ந்தும், கம்யூனிசத்திற்கு முன்னேறுவதற்கும் இடையிலான ஒரு வரலாற்று காலகட்டம் என்று நம்புபவர்கள் கம்யூனிஸ்டுகள். சோஷலிசம் என்னும்போது அங்கு அரசானது முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ அனைத்து சொத்துகளின் முதலாளியாக இருக்கும் ஓர் அமைப்பாகும். கம்யூனிசம் என்பது அனைத்து உடைமைகளும் கூட்டு உரிமையாக இருக்கும் நிலைமையாகும். ஒரு சோஷலிஸ்டானவர் நிலைமையை சற்றே நெம்பி சரி செய்வதோடு நிறைவடையக் கூடும். உதாரணமாக, கண்டிக்கத்தக்க வகையில் நடந்துகொள்ளும் நிதிமூலதன வங்கிகள் அரசு நலத்திட்டத்தில் முதல் பயனாளிகளாக இருக்க முடியாது என்னும் சிறு சிறு சீர்திருத்தங்களே அவர்களுக்குப் போதுமானதாக இருக்கும்.
ஒரு கம்யூனிஸ்ட்டின் தேவையோ இன்னும் அதிகமானது. அவர்களுக்குத் தேவை தனியுடைமை ஒழிப்பு! அரசோ அல்லது தனிப்பட்ட நிறுவனங்களோ, குடிமக்களோ யாருக்கும் தனிச்சொத்துரிமை கூடாது. ஒட்டுமொத்தமாக அரசு தேவையற்ற நிலையையும், மனிதர்கள் தம்மைத் தாமே கூட்டாக நிர்வகித்துக் கொள்ளும் நிலையையும் உருவாக்குவதே ஒரு கம்யூனிஸ்டின் தேவை.

கம்யூனிசத்திற்கான பாதை

நம்முடைய பல சிந்தனைகளுக்கும், வாழ்க்கை அனுபவங்களுக்கும் உற்பத்தி முறைதான் தொடக்கப்புள்ளி என்ற தனது வாதத்தை முன்வைத்து மார்க்ஸ் காலத்தால் நம்மை பின்னுக்கு அழைத்துச் சென்று வரலாற்றுபூர்வமாக விளக்குகிறார். “இதுநாள் வரையில் நிலவி வந்துள்ள சமுதாயத்தின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும்.” என்பது மார்க்ஸின் பிரபலமான அவதானிப்பாகும். அதாவது, புதியகற்கால புரட்சி தொடங்கி ஒரு சிலரது போக வாழ்வானது பலரது உழைப்பின் பலனே ஆகும். இதுதான் நமது போராட்டம்.
அடிமைப் பொருளாதாரத்தில் நாம் அனைவரும் அடிமைகளே. நிலப்பிரபுத்துவ பொருளாதாரத்தில் நாம் அடிமைகள். முதலாளித்துவ பொருளாதாரத்தில் நாம் ஒரு சிறு முதலாளி வர்க்கத்தின் ஊழியர்கள் ஆனோம்.

அடிமையுடைமை உற்பத்தி முறையில் அடிமைகள் தங்கள் உழைப்பினை எஜமானருக்கு கொடுக்க வேண்டும். மார்க்ஸ் இதனைஉபரி உழைப்பு (உபரி மதிப்பு)” என்கிறார். நிலப்பிரபுத்துவத்தின் கீழ், அடிமைகள் தோராயமாக 50%  உபரியை நிலப்பிரபுவிற்கு கொடுத்தனர். இன்றைய முதலாளித்துவத்தின் கீழ், நாம் நமது முதலாளிகளுக்கு தாராளமாக உபரியை கொடுக்கிறோம். ஓரிரு மணி நேரம் போதுமான உழைப்பிற்குப் பதில், முதலாளிகள் தரும் கூலிக்காக நாம் செலுத்தும் உழைப்பானது அவர்களுக்கு இலாபமாக மாறுகிறது. ஒரு தொழில் நட்டமடைந்துவிட்டால், அதாவது உழைப்பாளியிடமிருந்து கிடைக்கும் உபரியின் விளைவான இலாபம் குறைந்தால், அந்த தொழிலை நிறுத்திவிடுவார்கள்.

தொழிலதிபர்களை நல்வழிப்படுத்தினால் அவர்கள் நல்லவர்களாகிவிடுவார்கள், இந்த சுரண்டல் நிகழாது என்பது முற்போக்கு தாராளவாதிகளின் நம்பிக்கை. ஆனால் சுரண்டல் என்பது தவிர்க்கவியலாதது என்பதே கம்யூனிஸ்டுகளின் கண்ணோட்டம்.

உற்பத்தி முறையை விட தனிநபர் விருப்பங்களே சக்திவாய்ந்தது என்று நீங்கள் எண்ணலாம். கடுப்பில் இருக்கும் ஒரு கம்யூனிஸ்ட் இதற்கு பதிலாக நமது ஸ்மார்ட்போன்களில் பொருத்தப்படும் அரிதான உதிரி பாகங்களுக்காக சுரங்கத்தில் இறங்கி வேலை செய்யும் ஒரு காங்கோலிய குழந்தையின் புகைப்படத்தை உங்களுக்கு காண்பிப்பார். என்னவிதமான உறுதியான பயிற்சியும் அந்தக் குழந்தைக்கு உதவாது. அந்த குழந்தையின் வளர்ச்சியில் நமது உற்பத்தி முறை முக்கியப் பங்கு வகிக்கின்றது. முதலாளித்துவத்திற்கு மலிவான கூலியே தேவை. ஒரு கம்யூனிஸ்டுக்கு இந்த குழந்தை தொழிலாளிதான் முதலாளித்துவத்தின் உண்மை முகம். நல்லொழுக்கம் வேண்டுமென்றால், ஒரு தாராளவாதியைப் பொறுத்தவரைஅனைத்தும் என்னிலிருந்து தொடங்குகிறது.” ஆனால் ஒரு கம்யூனிஸ்டிற்கு அது உற்பத்தி முறையிலிருந்து தொடங்குகிறது.

உங்களுக்கு ஒரு இரகசியம் தெரியுமா? உண்மையில் மார்க்ஸிற்கு இந்த வரலாற்று காலகட்டத்தின் உற்பத்தி முறையாக இருக்கும் முதலாளித்துவம் ஈர்ப்புடையதாகவே இருந்தது.  தங்களுக்குரியதான இயந்திரங்களை கைப்பற்றுவது போல் தங்களுடைய உழைப்புச் சாதனங்களையும், பொருள்களையும் கூட பொதுவுடைமையாக்க (கூட்டிரிமை) உரிமை கோர வேண்டும் என்று எந்தளவுக்கு மார்க்ஸ் வலியுறுத்தினாரோ அந்தளவுக்கு முதலாளித்துவத்தை அவர் புகழ்ந்தார். அதனால் உண்டாகக் கூடிய மிகுதிகளை அவர் தொலை நோக்குடன் கண்டு, பெரும்பாலான அலுப்புதட்டும் வேலைகளை இயந்திரங்கள் பார்த்துக்கொள்ளும், புதுமையான கண்டுபிடிப்புகள் பெரும்பாலான பிரச்சினைகளைக் களையும் என்று கணித்தார்.

முதலாளித்துவமானது தொடர் நெருக்கடிகளுக்கு காரணமாக இருக்கிறது என்று கம்யூனிஸ்டுகள் நம்புகின்றனர். காலப்போக்கில், இலாப விகிதம் வீழ்ச்சி அடையும். மார்க்சியக் கண்ணோட்டத்தின்படி, முதலாளித்துவமானது தற்போதைய உற்பத்தி முறையில் தான் இயங்கப்போகிறது, ஆகவே நாம் கம்யூனிசத்திற்கு முன்னேற தயாராவோம். ஏனென்றால், சில சுமாரான தீர்வுகளும் கிடைக்கும் என்ற நன்மையும் அதில் இருக்கத்தானே செய்கிறது.

கம்யூனிசம் எப்படி இருக்கும்

எச்சரிக்கை: இப்போது நான் சொல்லப்போவது உங்களுக்கு ஏமாற்றமளிக்கலாம்! கம்யூனிஸத்தை அடைய ராஜபாட்டை ஏதுமில்லை. மார்க்ஸின் வரலாற்று கண்ணோட்டத்தை எடுத்துக்கொண்டால், அது அடித்தளத்திற்கும் (உற்பத்தி முறை) மேற்கட்டுமானத்திற்கும் (சட்டம், பண்பாடு, அரசு இயந்திரங்கள், நம்முடைய அறநெறிகள் மற்றும் மனித சமூகத்தில் உள்ள அனைத்தும்) இடையிலான ஊடாட்டம். ஆகவே அடுத்த கட்டம் நம்மை எதை நோக்கி நகர்த்துகிறது என்பதை நாம் துல்லியமாக கணிக்க முடியாது. ஆனால் அங்கு எப்படி செல்ல முடியும் என்பது பற்றி நாம் பேச முடியும்.

எந்த ஒரு உற்பத்தி முறை மாற்றமும் அவ்வளவு எளிதாகவோ அல்லது உடனடியாகவோ நடந்துவிடவில்லை. ஐரோப்பாவில் நிலப்பிரபுத்துவத்திலிருந்து, முதலாளித்துவத்திற்கான மாற்றமானது டைட்டானிக் திரைப்பட இயக்குனரின் பதிப்பைக் காட்டிலும் நீளமானது. அது ஒரு பெரும் முன்னணிப்படை வீரர்களை தன்னகத்தே கொண்டிருந்தது: ஜான் லாக், ஆதம் ஸ்மித், டேவிட் ரிக்கார்தோ போன்ற அறிவுஜீவிகள் நவீன அரசுருவாக்கத் தலைவர்களுக்கும் அதன் பொருளாதார பங்காளிக்கும் பல ஆலோசனைகளை வழங்கினார்கள். செவ்வியல் பொருளாதாரத்தின் இந்த நட்சத்திரங்கள் அனைவரும் மார்க்ஸ் கல்வி கற்க தொடங்கும் முன்பே இறந்துவிட்டார்கள் என்பதை குறித்துக்கொள்ளுங்கள். ஆனாலும், அந்த சிந்தனைகள்தான் இன்றைக்கும் அந்த மோசமான நவதாராளவாத கொள்கைகளின் அடித்தளமாக இருக்கிறது. பலரின் வாழ்வு முன்கூட்டியே முடிவதற்கும், வெறுமையான அடிமைத்தன வாழ்விற்கும் அந்த சிந்தனைகளே காரணம். 

ஆனால் அதற்காக கம்யூனிஸ்ட் வரலாற்று கட்டத்திற்கு முன்நிபந்தனையான ஆதிகாரத்தை கைப்பற்றும் சோஷலிஸ்ட் கட்டம் என்பது ஏதோ சுற்றுலா செல்வது போல் எளிதானது என்று பொருள் இல்லை. செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் எல்லாம் நன்றாகவே தொடங்கியது. ஆனால் பின்னர் அது மூலோபாய, குருதி சிந்தா முறையில் தொடரவில்லை. எதிர்கால மாற்றம் ஒருவேளை அமைதியாக நடக்கலாம் – ஜனநாயகத் தேர்தல் என்று சொல்லப்படும் தேர்தல்களின் முடிவுகள் – மேற்கில் உண்மையான ஜனநாயகத் தேர்தலாக, முதலாளித்துவ வர்க்கத்தின் தலையீடற்ற முடிவுகளாக்க் கூட இருக்கலாம்.

முதலாளித்துவம் நிறைய பொய்யான தொடக்கங்களைக் கொண்டிருந்தது. என்னைப் போன்ற தோழர்களின் பார்வையில், அது அதன் உண்மையான முடிவை இப்போது சகித்துக்கொண்டிருக்கிறது. வாக்காளர்கள் பல வழிகளில் அதன் பரிந்துரைகளை நிராகரிக்கிறார்கள், கடந்தகாலம் போன்ற பொற்காலத்தை உறுதி செய்வோம் என்று கட்டுக்கதைகளுடன் கூடிய வாக்குற்தி அளிப்பவர்களை தேர்ந்தெடுக்கிறார்கள் அல்லது ஸ்பெயின், கீரீஸ், ஸ்காட்லாந்து போன்று இதுவரை காணாததொரு எதிர்காலத்தை அமைத்திடுவதாய் கூறும் சோஷலிஸ்டுகள் அல்லது கம்யூனிஸ்டுகளை தேர்ந்தெடுக்கிறார்கள். கடந்த வாரம்தான், மார்க்ஸியரான ஜான் லூக் மெலெங்கான் என்னும் நபர் ஃப்ரென்ச்சு ஜனாதிபதி தேர்ந்தலின் முதல் சுற்றிலேயே 20% ஓட்டுகளை பெற்றிருந்தார்.
கம்யூனிச எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நமக்கு தெரியாது. ஆனால் நம்மால் ஒன்றை உற்தியாக சொல்ல முடியும், இந்த இயந்திரமயமாக்கல் காலம் நமக்கு ஓய்வு நேரங்களை சாத்தியமாக்குகிறது. நாம் அனைவரும் கூட்டாக இணைந்து இந்த கோளில் உள்ள அனைத்தையும் தக்கவைத்துக்கொள்வதற்கான வழிமுறைகளை உருவக்கியிருக்கிறோம் என்பதை அறிவோம். அதேவேளை இந்த மிகுதியான செல்வங்களை சுற்றுச்சூழலை அழித்தே உருவாக்கியிருக்கிறோம் என்பதும் தெரியும். பருவநிலை மாற்றங்களும், அணு ஆயுதங்களை தடுக்க முடியாதுமான நிலைமைகள், அனைத்தையும் கூட்டுடைமையாக நிர்வகிக்க முடியும் என்னும் கம்யூனிஸ்டின் நம்பிக்கையை குறைக்கிறது; இத்தகைய சர்வாதிகார அச்சுறுத்தல்கள் குறிப்பிட்ட அளவிலான சர்வாதிகார மேலாண்மையைக் கோருகின்றன. என்னைப் பொறுத்தவரை, ஒட்டுமொத்தமாக அரசை துடைத்தெரிதல் சாத்தியம் என்று ஒரு நேர்மையான கம்யூனிஸ்டால் இனியும் சொல்ல முடியாது – அத்தகைய அச்சுறுத்தல்களைக் களைய உண்மையான அதிகாரத்துவமும் தேவைப்படுகிறது.

ஆனால் அதற்காக நம்முடைய வாழ்வை தக்கவைத்துக்கொள்ள நமக்கு ஒரு தேசிய அரசு தேவையே இல்லை. இலாபத்திற்கான தேவையை விட அரசின் தேவை வேறேதுமில்லை. நம் அனைவருக்குமான நல்ல, ஆக்கப்பூர்வமான வாழ்வென்பது ஒரு புதிய, கூட்டுறவு முறையிலான உற்பத்தி முறையின் மூலமே சாத்தியம். குறைந்தபட்சம் அதுபற்றி தெரிந்துகொள்வதற்கான ஆர்வமாவது தேவைப்படுகிறது. நம்முடைய வருமானம் வீழ்ச்சி அடையும்போது கூட “ஜி.டி.பி உயர்கிறது” என்று கூச்சலிடம் பொருளாதார நிபுணர்களை நீங்கள் நம்புவதில்லை என்றால், ஒருவேளை உங்கள் ஓய்வு நேரத்தில் நீங்கள் கம்யூனிச பூதத்தை எதிர்கொள்ள நேரம் ஒதுக்கலாம்.


தமிழ் மொழிபெயர்ப்பு: கொற்றவை

No comments:

Post a Comment