Dec 28, 2016

சாதியப் பிரச்சினையும் அதற்கான தீர்மானங்களும்: ஒரு மார்க்சியக் கண்ணோட்டம்

- ஆய்வுக் குழு, அர்விந்த் மார்க்சியக் கல்வியகம்

- ‘சாதியப் பிரச்சினையும், மார்க்சியமும்’ என்னும் தலைப்பில் நடத்தப்பட்ட அரவிந்த் நினைவு அறக்கட்டளையின் நான்காம் கருத்தரங்கில் (12-16 மார்ச் 2013, சந்திகர்) சமர்ப்பிக்கப்பட்ட தலைமையுரை.

இந்திய சமூகத்தை சுரண்டலற்ற சமூகமாய் மாற்றுவதற்கான பாதையில் சாதியப் பிரச்சினையை ஒதுக்கிவிட்டு புரட்சிகர செயல்திட்டங்களை வடிவமைத்திட முடியாது. நனவுபூர்வமான நடவடிக்கைகள் மூலம் முதலில் சமூக-அரசியல் தளத்தில் சாதி அமைப்பை ஒழித்திட வேண்டும், அதன் பின்னரே பல்வேறு பிரிவு மக்களை புரட்சிகரமாக ஒருங்கிணைக்க முடியும் என்னும் வாதங்களை விவாதத்திற்கு அப்பாற்பட்ட வகையில் நிராகரிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. அதேபோல் பல்வேறு பிரிவு மக்களை புரட்சிகரமாக ஒருங்கிணப்பதும், புரட்சிகர நடைமுறையும் தொடங்கிவிட்டால் - அப்போக்கில் சாதியமைப்பு தாமாக ஒழிந்துவிடும் என்னும் வாதமும் தவறானது. ஆகவே இதுபோன்ற கேள்விகள் நம் விவாதங்களில் முக்கியப் பங்கு வகிக்கவில்லை. சாதிய அடிப்படையிலான எண்ணற்ற ஒடுக்குமுறைகளை குறிவைப்பதோடு மட்டுமல்லாமல் அவ்வொடுக்குமுறைகளின் கடத்துனர்களாகவும், தரகர்களாகவும் இருக்கும் நிறுவனங்களைக் குறிவைத்துத் தகர்த்து மக்களை அணி திரட்டினாலன்றி பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான ஆயத்த வழிமுறையானது முன்னேற முடியாது; சமூகப் பாகுபாட்டினால் துன்புறும் பல்வேறு வர்க்க மக்களை புரட்சிகரமாக ஒருங்கிணைப்பது சாத்தியமில்லை என்பதே எங்களது நம்பிக்கை.

அதேவேளை, புரட்சியை முன்னெடுக்கப் போகும் செயல்வீரர்கள் சாதியை ஒழித்திடுவதற்காக -நீண்டகாலம் பிடிக்கக்கூடியதென்றாலும் (நிச்சயமாக நீண்டகாலம் பிடிக்கும்)-வரலாற்றுப்பூர்வமான, விஞ்ஞானப்பூர்வமான, அறிவுப்பூர்வமான செயல்திட்டங்களை முன்வைக்க வேண்டும். பாட்டாளிவர்க்கத் தலைமையிலான அரசை நிறுவியபின்னர் உற்பத்தி உறவுகள் சோஷலிச முறையில் மாற்றும் நடைமுறையோடு கருத்தியல் மற்றும் கலாச்சார மட்டத்தில் புரட்சிகர நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அத்தோடு, சாதியமைப்பை முற்றிலுமாக ஒழித்திடும் வகையில் சோஷலிச முறையிலான சமூக-அரசியல்-கல்வி-கலாச்சார ஒருங்கிணைப்போடு படிப்படியாக முன்னேறும் நீடித்ததொரு நடைமுறையை அது கொண்டிருக்க வேண்டும் என்பது தெளிவு.

இந்த ஆய்வுக் கட்டுரையில் எங்களது திட்டங்கள் குறித்து விரிவாகக் காணவிருக்கிறோம். அதுமட்டுமின்றி, நிலவும் தவறான, முழுமையற்ற, மேம்போக்கான, குழப்பவாதம் நிறைந்த திட்டங்கள் பற்றிய எங்களது கண்ணோட்டத்தையும் நாங்கள் முன்வைக்கவிருக்கிறோம்.


(நூலிலிருந்து முன்னோட்டம்....)

No comments:

Post a Comment