Feb 22, 2015

அன்புக்குரிய ரகுராம் ராஜன் அவர்களே, நீங்கள் அணிந்த (அரதப்பழசான) அந்த ‘தொப்பி’ துர்நாற்றம் வீசுகிறது….


திரு. ரகுராம் ராஜனின் ‘சிந்தனைகள்’ நிச்சயமாக விவாதிக்கப்பட வேண்டியவை, கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியவையும்கூட. அவருடைய குறிப்பிட்ட இந்த உரையானது பொருளாதாரத் துறைக்குறிய சொல் விளையாட்டே, மேலும் அதில் அறம், ஜனநாயகம், தர்மம் (இந்து தர்மமா?) போன்ற சில மசாலாப் பொருட்களைத் தூவியிருக்கிறார் அவ்வளவுதான். அதன் மூலம் அவர் முதலாளித்துவத்திற்கும், தனியுடமைக்குமே வக்காலத்து வாங்குகிறார். (விரிவாக எழுத வேண்டும்)


அரசாங்கச் செயல்பாடுகளை ஜனநாயகபூர்வமாக்குவதன் மூலமும் சில பொருளாதார சீர்திருத்தங்கள் மூலமும் ”எல்லாம் சரியாகிவிடும்” என்றொரு பொய் நம்பிக்கையை முதலாளி வர்க்கத்திற்கு ஆதரவாக நடுத்தர வர்க்க மக்களுக்கு கொடுக்க முயல்கிறார்.

அவருடைய கருத்துகள் அவர் முன்வைக்கும் ஜனநாயக பொறுப்புடமை, சமத்துவமான பங்கீடு போன்றவற்றிற்கு முரணாகவே இருக்கின்றன. ஏனென்றால், அவர் ‘நல்லாட்சியை’ முன்மொழிகிறார் (ஜனநாயக பொறுப்புடமை போன்ற சொற்களால் பூசி மெழுகி). இவ்வாறாக, அவர் நேரடியாக அரசுக்கெதிராக, முதலாளிகளுக்கு எதிராகப் பேசுவதை தவிர்த்து, அதே சமயம் தன்னை ஒரு ஜனநாயகவாதியாகவும், சமத்துவம் நாடுபவராகவும் காட்டிக்கொள்ள விழைகிறார். அத்தோடு மார்க்சியத்தையும் தவறாக சித்தரிக்கிறார். அவருடைய அந்த உரையில் அரசு பற்றிய பேச்சே இல்லை, ஆனால் வர்க்க முரண்பாட்டை ஒப்புக்கொள்கிறார், இது முரணாகத் தோன்றவில்லையா?

அவர் சொல்கிறார், “அரசின் மரபார்ந்த மூன்று கருவிகளான – நிர்வாகம், நீதித்துறை, சட்டமன்றம் ஆகியவை ஒன்றுக்கொன்று சமநிலைகாக்கத் தேவை என்ற உள்ளார்ந்த கூற்றை எளிமையாக முன்வைக்கிறார். அரசாங்கம் என்பது ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தும்போது வாழ்வையும், சொத்துரிமையையும் பாதுகாக்கும் முதன்மைப் பணி செய்யும் வெறும் “இரவுநேர மெய்க்காப்பாளன்’ எனும் தீவிரபோக்குடைய சுதந்திரவாதிகளின் கருத்துகளுக்கும் அதேபோல், வர்க்க முரண்பாடு முடிவுக்கு வரும்போது அரசாங்கம் மறைந்து போகும் எனும் தீவிரப் போக்குடைய மார்க்சியர்களின் (மார்க்சியர்கள் தீவிரப்போக்குடையவர்கள் (தீவிரவாதிகள் எனும் பொருளில்) என்று பொதுமைப்படுத்துவது கண்டிக்கத்தக்கது) கண்ணோட்டத்திற்கும் நேரெதிராக முன்வைக்கிறார்.  ஹண்டிங்க்டனைப் போலவே ஃபுக்குயாமாவும், வளரும் நாடுகளில் பலமான, (அழுத்தம் பலமான) அரசாங்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார்.

முதலில், கார்ல் மார்க்ஸோ, எங்கல்ஸோ அல்லது லெனின், மாவோ போன்ற புரட்சியாளர்களோ “அரசாங்கம் மறைந்துபோகும்” என்று எங்கேயும் சொல்லவில்லை. கார்ல் மார்க்ஸ் சொன்னது “அரசு உலர்ந்து உதிர்ந்து போகும்” என்பதே.

இதை பொருளாதார அடிப்படையில், (அழுத்தம் பொருளாதார அடிப்படையில்), லெனின் அரசும் புரட்சியும் எனும் நூலில் விளக்கியிருக்கிறார். மார்க்ஸ் மேலும் கூறியதாவது: “…முதலாளித்துவ சமுதாயத்துக்கும் கம்யூனிச சமுதாயத்துக்கும் இடையில் ஒன்று மற்றொன்றாய் புரட்சிகர மாற்றமடையும் கட்டம் உள்ளது.  இதற்கு இணையாய் அரசியல் இடைக்கால கட்டமும் ஒன்று உள்ளது.  இந்த இடைக்காலத்தில் அரசு பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரச் சர்வாதிகாரமாகவே அன்றி வேறு எதுவாகவும் இருக்க முடியாது…”

இதை முன்வைத்து லெனின் சொல்வது:” ‘அரசு உலர்ந்து உதிர்கிறது’ என்னும் தொடர் நன்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் இத்தொடர் இந்நிகழ்ச்சிப் போக்கின் படிப்படியாய் நடந்தேறும் தன்மை, தன்னியல்பாய்த் தானே நடந்தேறும் தன்மை ஆகிய இரண்டையும் குறிப்பிடுவதாய் உள்ளது.”

 இப்படி இருக்கையில், மார்க்சியக் கோட்பாட்டை கற்பனாவாதம் அல்லது அராஜகவாதம் எனும் பொருள்தரும் வகையில் // அரசாங்கம் மறைந்து போகும் எனும் தீவிரப் போக்குடைய மார்க்சியர்களின்// என்று சொல்வது அறிவுநாணயமா? வரலாற்று நடைமுறையில், உற்பத்தி முறையின் வளர்ச்சி காரணமாக தோன்றிய வர்க்கம், வர்க்க முரண்பாடுகளின் விளைவே அரசு. ”வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதவை ஆனதன் விளைவாய்த் தோன்றியதே அரசு” என்கிறார் லெனின். அதாவது அரசு என்பது ஒரு ‘விளைவு’ அது ஒரு தனித்த அமைப்பு அல்ல. இந்த அடிப்படியில்தான் கார்ல் மார்க்சும், மார்க்சியர்களும் அரசு உலர்ந்து உதிரும் என்கின்றனர், மறைந்துபோகும் என்பதில்லை, அதுவும் அரசாங்கம் என்பது அரசின் இயந்திரம், அது ஒரு நிர்வாக இயந்திரம். (நீதித்துறை, அரசாங்கம் (சட்டமன்றம்), இராணுவம் ஆகியவை அரசு இயந்திரங்கள்)

திரு. ராஜனின் சிந்தனையின் சாரமானது ‘சீர்திருத்தவாதம்’, ஆனால், ஒரு குறிப்பிட்ட பொருளாதார முறையின் விளைவாய் நேர்ந்த வர்க்கப் பகைமைகளின் விளைவாக அரசு என்பது இருக்கும்பொழுது, அதன் இயந்திரங்களான நீதித்துறை (சட்டத்தின் ஆட்சி!!!) மற்றும் சட்டமன்றம் (அரசாங்கம்) எப்படி ஜனநாயகபூர்வ பொறுப்புடைமையை உறுதி செய்ய முடியும்?  மேலும், இன்றைக்கு தரகு முதலாளித்துவம், எகாதிபத்தியம், (நவ) தாராளவாதம், உலகமயமாக்கல், நிதி மூலதனம் ஆகிய முதலாளித்துவ ஆக்கிரமிப்பு கருவிகளுக்கான தரகர்களாக அரசு மாறிவிட்ட நிலையில் உள்நாட்டளவில் அரசாங்கம் என்பது எந்தளவுக்கான சுதந்திரமான, ஜனநாயகமான அமைப்பாக இருக்க முடியும்? மேலும், முதலாளித்துவத்தின் இலக்கே இலாபமாக – மூலதனக் குவிப்பாக – தனியுடைமையாக – செல்வக் குவிப்பாக இருக்கையில், அதன் பாதுகாவலரான அரசானது, சமத்துவப் பங்கீட்டை எவ்வகையில் உறுதி செய்ய முடியும், அதை முதலாளித்துவம் எப்படி சகித்துக்கொள்ளும், எப்படி அனுமதிக்கும்?


எல்லாவற்றிற்கும் மேலாக, முதலாளித்துவத்தின் கீழ் (நிலப்பிரப்புத்துவத்திலும்)  உழைப்புப் பிரிவினை என்பது அராஜகவாதமாகவும், அதன் இயங்குமுறையானது சர்வாதிகாரமாகவும் இருக்கையில், அதன் பாதுகாவலரான அரசும் அதே ‘சட்டத்தின் ஆட்சியை’த் தானே கொண்டிருக்கும், ஜனநாயகத்திற்கும், ஜனநாயக பொறுப்புடைமைக்கும் எங்கே அங்கு இடமிருக்கிறது?

அதனினும் கொடுமையானது, “சாதி அமைப்பே உழைப்புப் பிரிவினைக்கு வழிவகுத்தது” எனும் ராஜனின் வாதம், இது முற்றிலும் வரலாற்றுக்குப் புறம்பானது, (சாதியின் தோற்றம் குறித்து இதுதான் காரணம் என இன்னும் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை, ஆனால் உற்பத்தி முறை, உற்பத்தி உறவுகளின் அடிப்படையில் ஒரு உற்பத்தி நிகழ்முறை எவ்வகையான சட்டங்களையும், விதிமுறைகளையும் உருவாக்கும் என மார்க்ஸ் கூறுகிறார், சாதியையும் அவர் அதன்படியே விளக்குகிறார்).

வரலாற்றுக்குப் புறம்பான அனுகுமுறை, தர்மத்தில் நம்பிக்கை, தனியுடைமைக்கு வக்காலத்து – ஒருவேளை ராஜன் எதிர்காலத்தில் பிரதம மந்திரி வேட்பாளராகப் போட்டியிட பயிற்ச்சி எடுத்து வருகிறாரோ?

அன்புக்குரிய ரகுராம் ராஜன் அவர்களே, நீங்கள் அணிந்த (அரதப்பழசான) அந்த ‘தொப்பி’ துர்நாற்றம் வீசுகிறது….

 உரை: http://scroll.in/article/708502/Full-Text:-When-Raghuram-Rajan-took-off-his-hat-as-RBI-governor-and-tore-into-'strong-governments',-invoking-Hitler,-Emergency-et-al

No comments:

Post a Comment