Aug 21, 2014

மதுரை சம்பவம்


மே 11,2013 – அன்று புனைவு நடத்திய இலக்கியக் கூட்டத்திற்காக நான், வசுமித்ர மற்றும் ஆதிரன் ஆகியோர் மதுரை சென்றிருந்தோம். பல அறியப்பட்ட எழுத்தாளர்கள் நிறைந்த அரங்காய் இருந்தது அது. ஸ்வாதி சா. முகிலும் இருந்தார். கூட்டம் நிறைவடைந்த உடன் சக்தி ஜோதியிடம் விடை பெற்று, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் செந்தியிடமும் விடைபெற்று, அங்கு வந்திருந்த நண்பர்களிடமும் பேசி மகிழ்ந்து புத்தகங்கள் வாங்கிவிட்டுக் கிளம்ப எத்தனித்தோம். அப்போது சுவாதியும் கிளம்பிக் கொண்டிருந்தார். சரி இவ்வளவு தூரம் வந்துவிட்டோமே மதுரையில் காண வேண்டிய ஏதாவது ஒரு இடத்துக்கு சென்று விட்டுப் போகலாமே என்று யோசனை சொன்னேன். வசுமித்ர கள்ளழகர் கோவிலை பார்த்ததில்லை என்ற காரணத்தாலும் அது செல்லும் வழி என்பதாலும் அங்கு செல்லலாம் என்று முடிவெடுத்து சுவாதியையும் அழைத்துக் கொண்டு கிளம்பினோம்.

போகும் வழியில் நிறைய பேச்சு, பாட்டு என்று மகிழ்வானதொரு பயணம். கோவில் இருக்கும் அந்த மலைப் பிரதேசம் மனம் கவர்வதாகவே இருந்தது. நடை சாத்தியிருந்தது. ஆனால் மண்டபத்தில் இருந்த சிலைகளைப் பற்றி பேசிவிட்டு, அங்கிருந்த படிகளில் அமர்ந்து சுக்கு காப்பி குடித்துவிட்டு கிளம்பினோம் கோவில் வாசலுக்கு வந்தோம். கள்ளழகர் திருவிழாக் காலமாக இருந்ததால் நிறைய கடைகள், மக்கள் கூட்டம் மற்றும் காவலர்கள் இருந்தனர். வாசலுக்கு வரும்போது ஆதிரனும் வசுவும் முன்னே சென்று விட்டனர். நானும் சுவாதியும் மாங்காய், நெல்லிக்காய் விற்கும் கடையை நோக்கிச் சென்றோம். மாங்காய் பத்தைகளை வாங்கியபடி இடப்புறம் திரும்பினேன், அப்போது ஒரு பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த நபர் மிகுந்த திமிரோடும், பெருமிதத்தோடும் என்னைக் கைகாட்டி அழைத்தவாரு “ஹலோ ரொம்ப சூப்பரா இருக்க” என்றான். சுவாதி மாங்காய் கடையைல் மற்ற தின்பண்டங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். கோபமும் எரிச்சலும் பொங்க “என் புருஷன் முன்னாடிதான் போறான், தைரியமிருந்தா அவரைக் கூப்பிட்டு சொல்லேன்” என்றேன். “ம் கூப்பிடு கூப்பிடு” என்றவாரு பைக்கில் சென்று கொண்டே இருந்தான். 

ஒரு நிமிடம் கடுப்பில் நின்ற நான் அவனது அந்த ஆணாதிக்கத் திமிரை சகித்துக்கொள்ள முடியாமல் வெறி பிடித்தது போல் “டேய் நில்றா” என்று கத்தியபடி அந்த பைக்கைத் துறத்திக் கொண்டு ஓடத் தொடங்கினேன். நான் துறத்துவதை கண்ணாடி வழியாக பார்த்த ‘பைக் ஓட்டுனர்’ வண்டியை வேகமாக முடக்க, எனக்கு வந்த ஆத்திரத்தில் என் கைப்பியை, கையிலிருந்த பர்சை என சரமாரியாக எரிந்தேன். அவர்கள் போய்க்கொண்டே இருந்தனர். நான் துரத்த மக்கள் கூட்டம் ஒன்றும் புரியாமல் பார்க்க.. சூழல் மாறியது. வேகமாக ஓட்டிய அவன் ஒரு காவலர் மீது மோதுவது போல் சென்று சரிந்து நிறுத்த, காவலர் அவனைத் திட்டிவிட்டு “ஒழுங்கா போங்கடா” என்று சொல்ல, அவர்கள் வண்டியை எடுத்து கிளம்பும் வேளை “சார் அவங்களைப் புடிங்க அவங்களைப் புடிங்க” என்று நான் கத்தினேன்.

பதறிய காவலர் வேகமாக ஒட்ட, மற்ற காவலர்களும் உஷாராகி அந்த பைக்கை மடக்கி நிறுத்தினர். கிட்டத்தட்ட 300, 400 காவலர்கள் அங்கு கூடியிருந்தனர். 50 பேர் அவர்களைச் சுற்றி நின்றிருந்தனர். சரமாரியாக அடி கொடுத்தனர். நான் ஓடிச் சென்றேன். பின்னால் எதுவும் புரியாமல் சுவாதி வந்து நின்றார். “என்னம்மா செயினை அத்துக்கிட்டு ஓடுனானா” என்றார் ஒரு காவலர். இல்லை சார் “கிண்டல் பண்ணிட்டு ஓடுறான்” என்றேன். காவலர்கள் மீண்டும் அடித்தனர். வண்டி ஓட்டியவனையும் அடிக்க, எனக்குப் பரிதாபமாகி விட்டது “சார் அவர் எந்த தப்பும் பண்ணல, இதோ இவந்தான் சூப்பரா இருக்கன்னு சொல்லி கிண்டல் பண்ணான்” என்று மற்றொருவனைக் அடையாளம் காட்டினேன். மீண்டும் நல்ல அடி விழுந்தது. அவன் கெஞ்சத் தொடங்கினான்.

உயர் அதிகாரி ஓடி வந்தார். என்ன நடந்தது என்று விசாரித்தார். தன் மேல் மோதுவது போல் வந்தது உட்பட நான் துறத்தி வந்தது, அவன் கிண்டல் செய்தது என எல்லாவற்றையும் சொன்னோம். உயர் அதிகாரியும் அவனை அடித்தார்.

“போதும் சார் விட்றுங்க” என்றேன். “ஏண்டா கோவிலுக்கு சாமி கும்பிட வர்றீங்களா, இல்ல இப்படி அயோக்கியத்தனம் பண்ண வர்றீங்களா” என்றார். “மன்னிச்சுடுங்க சார், தெரியாம” என்றான் அவன். “ஏங்க பொண்ணுங்கள இப்படித்தான் கிண்டல் பண்ணுவீங்களா” என்றேன். அவன் மருகினான். குடித்திருந்தான் என்பது தெரிந்தது. “குடிச்சிருந்தா கிண்டல் பண்ணுவீங்களோ” என்றேன். காவலர்களும் திட்டினர், எச்சரித்தனர். “சரி விட்றுங்க சார் போய்த் தொலையட்டும்” என்று சொல்லி விட்டு நானும் சுவாதியும் நகர்ந்தோம். மக்கள் கூட்டம் சூழ்ந்திருந்தது. அப்போதுதான் ஏதோ நடக்கிறதே என்று வசுவும் ஆதிரனும் நெருங்கி வந்து விசாரித்தனர். நடந்ததை சொல்லவும் வசுமித்ரவுக்கு கோபம் வந்துவிட்டது. காவலர்கள் பிடித்து எச்சரித்து அனுப்பிவிட்டார்கள் போதும் விட்டு விடுவோம் என்று சொல்லி நகர்ந்தபோது ஒரு பெண்மணி எனது டெபிட் கார்டுகளை அள்ளிக் கொண்டு ஓடி வந்தார்.

“என்னம்மா இப்படி துறத்திக்கிட்டு போன” என்க, நடந்ததை சொன்னேன். அப்போது அப்பெண்மனி, கீழ 1500 ரூபா கிட்ட கிடந்தது, ஒரு பொம்பள எடுத்துக்கிட்டு வந்துச்சு கொடுக்கலையாம்மா” என்றார். இல்லை என்றேன். “அந்தக் கடைல மத்த கார்டுகள எடுத்து வச்சாங்க பார்த்து வாங்கிக்கம்மா” என்று சொல்லி விட்டு சென்றார் அப்பெண்மனி. அவரால், என் டெபிட் கார்டு கிடைத்தது, இளநீர் கடைக்காரரால் மற்றொரு டெபிட் கார்டு கிடைத்தது. ஆனால் எனது பான் கார்ட் மற்றும் 1500 ரூபாய் பணம் தொலைந்து போனது.

சுவாதி நம்பமுடியாமல் திகைப்பில் இருந்தார். அன்று பார்த்து அந்த களேபரம் நடந்த நேரம் மணர் காற்று விசி, சூழலே ஒருவித வேகத்தோடும், பதட்டத்தோடும் இருந்தது.

எல்லாம் முடிந்து மதுரையை விட்டுக் கிளம்பினோம். பேசிக்கொண்டும் பாடல்கள் கேட்டுக் கொண்டும் தேனி வந்து சேர்ந்தோம்.


இன்று நினைத்தாலும் அந்த சம்பவம் எனக்கு ஒரு கனவு போலவே இருக்கிறது. ஆனால் அது இந்த ஆணாதிக்க சமூகத்தின் ஆண் மன யதார்த்தத்தைப் பிரதிபலித்த ஒரு நிஜ நிகழ்வு.


No comments:

Post a Comment