May 26, 2011

துயரத்தை அழிக்க முடியாத ஒரு சொல்லுக்காக காத்திருக்கிறேன்



கண்ணீரின் மொழியை கண்டுகொள்கிறது கவிதை
கண்கள் பனிக்காத நாட்களில்
கவிதை உரையாட மறுக்கிறது

ஒரு துளி நீர்
இறுகிய கன்னங்களை கழுவிச் செல்லாத வேளையில்
கவிதை துக்கப்படுவதை
பார்த்துக் கொண்டிருக்கிறேன்

மன்னித்து சிரிக்கும் மகளின் கண்ணீர்
ஊழியின் உரிமையாளர்கள்
ஆதிவாசிகள்
முதலாளிகளின் இறுக பொத்திய கைகள்
கால் வயிற்று கஞ்சிக்கு
சில அங்குல
கால வளையத்துக்கள்
நுழைந்து வெளிவரும் முகம் கழுவாத சிறுமி
அவளருகில்
தார் சாலைக்கு தன்
முதிர்ந்த பாதங்களால் நிழல் தரும்
முதியவரின் புன்னகை பூத்த முகம்
தற்கொலைகள் நிணைவூட்டும்
இரக்கமற்ற மனிதர்கள்

எழுதுவதற்கு
இன்னும் இருக்க
கவிதை
அறையை விட்டு வெளி வர மறுக்கிறது

வேண்டியதெல்லாம்
கரிப்புச் சுவைகூடிய நீர்
நீரில் கலந்திருக்கும் உப்பின் சாரத்தை
சில வேளைகளில்
சுமக்க மறுத்துவிடுகிறது வரிகள்

ஆத்மாவிலிருந்து கசியும்
உப்பு நீர்
நிறமற்ற நீரின் ஓட்டத்திலிருந்தே
பிறக்கிறது
கவிதைக்கான
எனது வரிகள்
துயரத்தை
அழிக்க முடியாத
ஒரு சொல்லுக்காக காத்திருக்கிறேன்

தவித்து
விம்மலோடு
பெயர்ந்து விழும்
சொல்லொன்றில்

கண்ணீரின் மொழியை கண்டுகொள்கிறது
கவிதை.


குடிகார கணவனின் கொடுமைகளை பொறுக்க முடியாத எல்லையில் நின்று மரணத்தை அணைத்துக்கொண்ட சங்கீதா எனும் சல்மாவுக்காக……….அவள் அனாதையாக விட்டுச் சென்ற அவளது 4 பிளைகளுக்காக………..