Mar 21, 2011

கருவறையை சொற்கள் கொண்டு நிரப்பினர்



1
அந்தத் தெருவைக் கடக்கையில்
முத்தத்தின் ஈரம் காயத் துவங்கியிருந்தது
அக்கம்
நாசிக்கருகே கன்னம் இருப்பதை ஆசீர்வாதமாக கருதினேன்
பிரார்த்தனையின் ஈரத்திலிருந்து
அவளது எச்சில் மணத்தை நாசிக்குள் செலுத்தி
பாதுகாத்துக் கொண்டேன்.

பசி கொண்டெறியும் வயிற்றுக்கு
கனவுகள் இல்லாத நாளில்
சுவாசக் காற்றிலிருந்து பிரிதெடுக்கப்பட
அவளது வாசம் மீட்டுத்தர
காத்திருக்கிறேன்

வெற்றிடம் விழிப்பந்துகளை ஓங்கி உதைக்கிறது.

2
மாதிரிகளைச் செய்வதில் கைதேர்ந்தவள் மகள்
உடலற்ற பொருள்களுக்கு
உயிரும்
ஸ்பரிசமும்
எண்ணிக்கையிலடங்கா முத்தங்களையும்
வாரி வழங்கும்
அவளது விரல்கள்
என்
பித்தேறிய வரிகளை எச்சில் தொட்டு அழிக்கிறது
காலம்
கருவறைகளுக்கு
தூர வித்தியாசங்களை
பிரிவின் வன்மத்தைக் கற்றுக்கொடுத்துவிடுகிறது

காலம் குறிகளால் ஆனது
மைதுனம் செய்யத் தவறுவதில்லை
உறவுகள் அடிமைகளையே வணங்குகிறது
கூன்
வளைவுகளை மட்டுமே அனுமதிக்கும்

கண்களுக்கு
புவி ஈர்ப்பைக் காவலாய் வைத்துச் செல்லும்
விழிகள்
மண்ணில் நிலைக்கொண்டிருத்தல்
குறிகளுக்கு
சாதகமாய் இருக்கிறது
சாதகமானவைகளைத்தான் குறி அணைத்துக்கொள்கிறது

3
கேள்விக் குறி
முற்றுப்புள்ளியாய் குறுகும்போது
அக்கணத்தை திமிரியழுத்தியபடி
குறிகள் திரித்து விடுகின்றன
மகளின் சொற்களை


அந்தகக்கண்ணீர்
அமிலத் தன்மைக் கொண்டது
மழலைகள்
ஒருபோதும் அறிந்திருக்க வாய்ப்பில்லை

4
கருவறையைச்  சொற்கள் கொண்டு நிரப்பினர்
நீரூற்றி கழுவமுடியா கழிப்பிடம்
வாழ்தல் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தினர்
அச்சம் எண்ணற்ற குறிகளைக் கொண்டது

பொம்மைகளின் முன்
தோற்று
தளர்ந்து
தலைகவிழ்ந்து நின்றது முலைகள்
இதைச் சித்திரமாய் தீட்ட என் விரல்களை
இறைவனுக்குப் பிச்சையிடுகிறேன்
அது
எதிர்காலம் எனும் பிசாசை வரைந்து வைக்கிறது

ஓவியம் எல்லாவற்றையும் பிரதிபலிக்கிறது
கண்ணாடிகள் நொறுங்கக் காத்திருக்கிறேன்.

4 comments: