Nov 30, 2010

அவர்கள் அப்படித்தான்....



சந்தோஷங்களின் வனத்தில்
துக்கத்தின் கால்தடம் மட்டுமே தெரிவதை
காணும் விழிகள் கொண்டிருந்தேன்

ஆகாயப் பூக்கள் அள்ளித் தெளிக்கும் பசுமைகள்
ஓவியத்தில் சிவப்பு நிறத்தை ஊற்றின

சந்திரன் கருணையோடு நீரைப் பொழிகிறான்
அது வரப்புகளின் வழியே உடலை தர தர வென்று இழுத்துச் செல்கிறது

லிங்கங்களின் கூர்மை உடலை
மறத்துப்போகச் செய்யும் ஆற்றல் கொண்டிருந்ததை
தசைகள் அன்று தான் உணர்ந்தது

தாமரைக் குறிகள் தங்க கோதுமைகளை ஈனும் கால்களுக்கிடையில்
விலங்கினைப் பூட்டிக்கொள்ள சொல்லி காற்றில்
பின்
வாங்கியது காலம்

கையூட்டாய் கிடைத்த வாழ்க்கை
மெத்தையில் முடக்கியது அடையாளத்தை
அதன் பஞ்சுகளுக்கிடையில் ஒளிந்து கிடந்தது 
இறுகிப்போன கண்ணீர் துளிகள்

முலைகளை சுவைத்த வாய்
முத்தங்களை விழுங்கியதில்லை..