Feb 21, 2010

Few Thoughts

உங்கள் மனம் குளிர, உங்களை மகிழ்விக்க, உங்களை பொருட்படுத்த...நான் என் முகத்தை மாற்ற இயலாது...நல்லவள் எனும் பெயர், கற்பிதங்களின் படி நடக்கும் என் பொய்மைக்கு கிடைக்கலாம். நிஜத்தில் நான் கர்வி எனும் பெயர் எடுக்க விரும்புகிறேன்.

பெரும்பான்மையைப் போன்ற பிரதியாய் ஒருவர் இல்லையேல்..அவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக விதிக்கிறது சமூக கட்டமைப்பு....... "


எழுதப்பட்டவை வரலாராகிறது...மற்றையது நிஜங்களாகிறது....

அப்பாவின் கனவு..மகளின் லட்சியம்...
கணவனின் கனவு...மனைவிக்கு அந்தஸ்த்து...
பெண்ணின் கனவு...இடுகாட்டின் விளைச்சல்....

மற்றவர்கள் கற்பித்ததால் போதும் என்று நினனத்து அடங்கியபின்னரும்..உள்ளே ஏதோ ஒரு அரூபமான அழுத்தம் தோன்றுகிறதே, எனக்கு அந்த உணர்வு போதாமை....போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற கூற்றை உலகின் மிக ஆபாசமான வார்த்தை என்பேன் நான்...

நீங்கள் கிசுகிசுக்களை பேசிக்கொண்டிருக்கிறீர்கள்... நாங்கள் அன்பைப் பரிமார்க்கொண்டிருக்கிறோம்... எங்கள் அன்பை நாங்கள் சிம்மாசனத்தில் ஏற்றினோம் உங்களுக்கு படுக்கை அறை தெரிகிறது... எங்கள் உடல்களை பங்கு போடுவதில் எங்களுக்குப் பிரச்சனை இல்லை... உங்கள் கற்பனைப் புனர்ச்சிகளுக்கு நாங்கள் வெளியேற்றம் செய்ய இயலாது...


என்னைப் பற்றி முழுக் கதையும் தெரிந்த பின், என்னைக் கட்டாயமாக நீங்கள் வெறுப்பீர்கள். அப்படி வெறுக்கவில்லை என்றால் நீங்கள் முட்டாள். அதையும் மீறி நீங்கள் புத்திசாலி என்றால்..நீங்கள் இந்த சமுதாயத்திடம் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்று அர்த்தம்..

Feb 14, 2010

ஆண்களின் பெருந்தன்மையும், வீசும் பச்சை மாமிச வாடையும்.



’ எங்களுக்கு எஜமானர்களாய் இருப்பது உங்கள் நலனுக்கு ஏற்றதாய் இருக்கலாம்; ஆனால் உங்களுக்கு அடிமைகளாய் இருப்பது எங்களுக்கு எப்படி நல்லதாய் இருக்கமுடியும்?

தூசிடைடிஸ்


ஆணின் கரங்களால் பெண்களின் குரல்வளையை இறுகப் பிடித்திருப்பதே வரலாறு.

அரசியல், இலக்கியம் முதற்கொண்டு இன்னபிற துறைகள் அனைத்திலும் ஆண் பெண்ணை நோக்கிக் கசியவிடும் ஆண்களின் பெருந்தன்மையில் வீசும் பச்சை மாமிச வாடை குடலைப் புரட்டுகிறது.

தனக்குகந்த கைப்பாவைகளாய், ரசனை வக்கிரத்துக்கு இரையாய் இருக்க பெண்களின் அழகை வர்ணித்து பாடும் ஆண்களின் பேரன்பு வெள்ளம் சாக்கடை நீராய் தேங்கி நிற்கிறது. சுயம் இழந்து, கவிழ்ந்து போக ஆபரணங்களை சூட்டி, அலங்காரம் செய்து வலம் வரும் தேவ கன்னிகளாய் ஆண்கள் தங்கள் கனாக்களில் பல ஊடகங்கள் கொண்டு உலவ விட்டு குளிர் காயும் அவர்களின் கயமை திக்கெட்டிலும் பரவி நிற்கிறது.என் அருமைத் தோழிகளே .... நான் மன்றாடி கேட்டுக்கொள்வதெல்லாம் அழகியல் நாற்றத்தில் நம்மை தோய்த்தெடுக்கும் ஆணின் கருத்தமைவுகள் எல்லாவற்றையும் சந்தேகப்படுங்கள் என்பதுதான். உங்கள் சிந்தனைகள், செயல்பாடுகள், நடை, உடை பாவனைகள் அனைத்தையும் கேள்விக்குள்ளாக்குங்கள். ரம்பை, ஊர்வசி, சீதை [இதில் கண்ணகி கூட விதிவிலக்கல்ல அவளுக்கு ஆண் அமைத்துக் கொடுத்தது கற்பின் அழகியல்] முதல் இன்றைய நடிகைகள் வரை எல்லாப் பெண்களும், பெண் கதாப்பாத்திரங்களும் ஆண்களால் அல்லது ஆண் கற்பிதங்களுக்கு அடிமையாகிப்போன பெண்களால்

தோற்றுவிக்கப்பட்டவை.பெண்ணை, பெண்ணின் அழகியலை வர்ணிக்கும் ஆண் சொற்களும்,ஆண் பாடல்களும் ,ஆண் தனக்கான பெண் எவ்வாறு இருக்க வேண்டும் என்று விரும்பும் ,நினைக்கும் கட்டளையிடும் செயலின் பிரதிபலிப்பு. தனக்கான பெண், தன் ஆளுகைக்கு உட்பட்ட பெண் இந்த அதிகாரத்தை ஒற்றையாய் வைத்து அது வரலாறு தொடங்கி , இன்னபிற அனைத்தும் ஆண்தன்மை கொண்டனவாகவே இருக்கிறது. இதே கூற்றையே இலக்கியத்திலும் ஏற்றி, புனித சேறு பூசி, பெண்கள் முகத்தில் காலம் காலமாக சந்தனமென ஏமாற்றி தடவி வருகிறார்கள்.

ஒரு காலத்தில் பெண்களுக்கு கல்வி கிட்டாமல் செய்து அவளை அடிமையாய் வைத்திருக்க கடவுள்,கற்பு, பண்பாடு, ஒழுக்கம், பத்தினித் தன்மை [வேலைக்குப் போகும் பெண்கள் கற்பிழந்தவர்கள் என சுப்பிரமணி [ சங்கராச்சாரியர் ] அறிவிப்பு செய்ததும் அதை கேட்டுக்கொண்டு பெண்கள் நின்றதையும் நினைவில் கொள்க.] எனும் கற்பனை மூலம் பல புனைவுகளை மேற்கொண்ட ஆண் இனம், பெண்களும் கல்வி கற்க ஆரம்பித்தவுடன் அவளை வீழ்த்த அழகியல் போதையை சந்தையில் பரப்பியது.ஆண்களின் உள்ளாடை முதல், கட்டிட கம்பிகள் போன்ற பொருள் வரை [கழிப்பறை பீங்கான் உட்பட...ஆண்களுக்கு அது வராது போல] எதையும் விற்க பெண்களை 'மாடல்களாய்' உபயோகித்து மக்களை விலை பேசும் 'திறந்த விபச்சாரத்தை' செய்து வருகிறது முதலாளிகள் உலகம். ஊடகங்களின் 'மாதிரிப்' பெண்கள் அனைவரும் அழகையும், உடலையும்

முன்னிருத்துபவர்களாகவே சித்தரிக்கப்படுகின்றனர். ஆணுக்கான வாசனை திரவம் கூட ஒரு பெண்ணை கவர்வதற்கான சாதனமாய் விளம்பரப்படுத்தப்படுகிறது. அவ்வாசனையில் தன் வசம் இழுக்கும் பெண்கள் அவன் புட்டத்தை கடிக்ககூட தயாராய் இருப்பதாக [ஆக்ஸ் சென்ட் ]ஆணின் பெண் என்ற கற்பனையை முன் வைத்து பெண் இயக்கப்படுகிறாள். பெண்ணுக்கு பிடித்தது, உகந்தது என இவர்கள் முன்வைப்பது அலங்காரப்பொருட்கள் மட்டுமே, நகைகள், புடவைகள் ஆடம்பரங்கள் மட்டுமே.ஆண் செய்யும் ஒவ்வொரு காரியமும், வாங்கும் ஒவ்வொரு பொருளும் பெண்ணை கவரவே எனவும் அவளை வீழ்த்துவதே வாழ்நாள் சாதனையாக ஆண் கருதவேண்டும் என்றும் ஆண் இனத்தையும் சேர்த்து இழிவு படுத்துகிறது விளம்பரங்கள். மற்றும், பல்வேறு ஊடகங்கள். பெண்ணுக்கோ தோலின் நிறத்தை மாற்றி அமைப்பதும், அலங்காரம் கொண்டு போட்டி போடுவதுமே வாழ்வியல் ஆதாரமாய் கற்பிக்கிறது மனசாட்சியற்ற முதலாளி வர்க்கம்.இதில் வருந்தத்தக்க ஒரு விஷயம் பெண்கள் தங்கள் உடலின் மேன்மை அறியாமல் அதை ஒரு பண்டமாய் நினைத்து சந்தையில் விற்பது. எல்லாவற்றிற்கும் 'தேவை' (demand) ஏற்படுத்தி சந்தையில் தள்ளிவிடும் முதலாளிகள், பெண் உடலுக்கான 'தேவையையும்' ஏற்படுத்தி தங்கள் வீட்டுப் பெண்களை போர்த்தி பூசை செய்து [இதுவும் ஒரு பெண் விரும்பத்தகாததே. இதை இன்னும் கொஞசம் ஆழமாக நோக்கினால் முதலாளி வீட்டுப் பெண்களும் திறந்த முதுகுடன் வலம் வருவதையும் தங்கள் உடலை பார்வைக்கு வைப்பதையும் காணலாம். இது ஒப்பு நோக்கில் விரிவாக ஆராய வேண்டிய விசயமே ]மற்ற பெண்களை உயிரற்ற பொம்மைகளாய் பயன்படுத்தி அவளுக்கு வேசி பட்டம் வாங்கித்தரும் சேவையை செய்து வருகிறார்கள்.

இதையே இன்னும் கொஞ்சம் விரிவாக்கினால் முதலாளியம் எவ்வாறு தன் உடலை அழுக வைத்துக் கொண்டிருக்கிறது என்பது புரியும். மார்க்ஸ் கூறியதைப்போல முதாளித்துவம் அனைத்து உறவுகளையும் பணப்பட்டுவாடாகவே பார்க்கிறது. அது குடும்பத்தின் உணர்ச்சிகரமான முகத்திரையை கிழித்துவிட்டது. .

ஆண்டாண்டு காலமாய் ஆணினத்தின் பாலியல் வேட்கைகளை பெண்ணியல்புகலாய் சொல்லிவந்து, இன்று பெண்கள் தங்கள் அழகை, அங்கங்களை முன்வைத்தால்தான் தங்கள் நிலைப்பாட்டை உறுதிசெய்துகொள்ள முடியும் என நினைக்குமாறு நிச்சயித்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறது ஆணினம்.

உடலை புனிதப்படுத்தி,ஒழுக்க நெறிகளுக்கு தசைகளை இரையாக்கி,பனத்திற்கு திறந்துபோட வைத்து ஆண்களை விலை பேச வைக்கும் நோக்கோடு பெண்ணுடல் முன்வைக்கப்படுகிறது. இதை அறியா பெண்கள் உடலை பிரதானப்படுத்துவதை முற்போக்கான செயலாகவும் சுதந்திரமான ஒன்றாகவும் கருதுகிறார்கள், பத்தினித்தனம் எப்படி ஆணுக்கு பெருமை சேர்க்கிறதோ அதேயளவில் திறந்து போடுதலும் அவன் விருப்பத்திற்குரியதே.

என் நிர்வாணம் எனக்கு மதிப்பிற்குரியதாய் உள்ளது. விரும்பும்போது, விரும்பும் இடத்தில் நான் மட்டுமே கட்டளை இடக்கூடிய விதிகளுக்குட்பட்டு என் உடலை வெளிப்படுத்துவேன். என் சௌகரியத்திற்காக உடைகளைக் கூட்டவும் குறைக்கவும் எனக்கு சுதந்திரம் உண்டு. என் உடலை ஆளும் சர்வாதிகாரியாக நான் மட்டுமே இருப்பேன் என பெண்கள் அறிவிக்கவேண்டும். உடலை மாமிசத்துண்டாக மட்டுமே பாவிக்கும் ஆணின் பாலியல் வேட்க்கைக்காக அவிழ்த்துப்போட நம் உடலை முன் வைப்பதில்லை என்ற எண்ணம் பெண்களுக்கு வரவேண்டும். உடலை பொக்கிஷமாக கருதவேண்டும்.

பெண்கள் தங்களுக்கு விருப்பமான உடைகளை அணியும் சுதந்திரத்தை அவர்களே எடுக்கவேண்டும். தன் தசைகளை விலைக்கு முன்னிருத்தாமல் சுதந்திரத்திற்காக முன்னிருத்தலாம். முடிந்தால் ஒரு உதாரணத்துக்காக தங்கள் அழகை அப்படியே விட்டுவிடலாம், புருவங்களை மழிக்காமல், பூச்சுக்கள் இல்லாமல். எவ்வித அலங்காரமும் இல்லாது வெளியிடங்களுக்கு சென்று வாருங்கள், உங்கள் பின் வரும் ஆண்களின் எண்ணிக்கை குறைவதைக் காணலாம். அவன் எதிர்பார்ப்புக்கும் வர்ணனைக்கும் உகந்த பொருளாக நீங்கள் இல்லையென்றால் வர்ணனைப் பாடல்களாவது குறையும்.

ஆடை அலங்காரத்தின் உபயோகம் இரண்டுவகைகளில் ஒரு பெண்ணுக்கு உதவுகிறது. முதலாவது பாலின வேட்கைக்கு உகந்த பொருளாக தோற்றம் தருவது, இரண்டு கணவனின் சமூக படிநிலையைப் பிறருக்கு புரியவைப்பது. இவ்விரு தோற்றமும் வழக்கம் போல பெண்ணைப் பிறர் சார்ந்த உயிராகவே நிறுத்த உதவுகின்றன. பெண் ஆடை அணிவதன் நோக்கம் பிறருக்கு தன்னைக் காட்டிக்கொள்வதின் மூலம் தன் இருப்பு நிலையை உறுதிப்படுத்திக்கொள்ள என விளக்குகிறார் சிமோன்.

பெண்ணுக்கு வாழ்நாள் தேவை ஆணின் அருகாமையே, ஆணின்றி பெண்ணால் தன்னிச்சையாக இயங்கமுடியாது என்பதன் ஒரு தொடர்ச்சியாகவே நான் திருமண உறவையும் காண்கிறேன். அதை பெண் நம்பி, பின்பற்றி ஒழுகவே கலாச்சாரம் பண்பாடு என ஆண்கள் வகுத்த வாய்க்கால் ஓடுகிறது. திருமணம் ஒன்றே பெண்ணுக்கு பாதுகாப்பைத் தர வல்லது என நிறுவப்பட்டு அவள் குடும்ப உறவில் ஈடுபடவும், ஆணுக்காக வாரிசைச் சுமக்கவும், அவன் தரும் வசதி வாய்ப்புக்காக நிரந்தர விபச்சாரியாக வயது கழிந்ததும் தாய்மைப் படிமத்தைத் தூக்குச் சுமக்கவும் ஆளாகிறாள். ஆனால் பாலியல் வன்முறைகள் அனைத்தையும் ஆணே செய்கிறான். ஆணுக்கு பெண்ணின் துணை ஒவ்வொருகாலத்தும் தேவைப் படுகிறது, தேவை என்று சொல்வதைவிட இட்ட வேலையைச் செய்ய ஒரு ஏவலாள் என சொல்வது சரியானது. அவளை அனுபவித்துக்கொண்டே இருக்க பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி, பெண்களுக்கு சுதந்திரமற்ற பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கி தன் விருப்பங்களைக் கொண்டாடி வருகிறது ஆணினம்.

ஆண்களின் மாபெரும் வெற்றி அவன் ஆதிக்க கருத்துகளை பெண்களே முன் வந்து தானே விரும்பி ஏற்றுக்கொள்ளவைத்ததுதான். என் கடன் பணி செய்து கிடப்பதே என பெண்களைச் சொல்லவைத்ததும், அவள் மகிழ்ச்சி அதுதான் என அவளையே பின் பற்ற வைத்ததும்தான்.

[ கலாச்சார புரச்சிக் காலகட்டத்தில் சீனாவில் ஒரு விடுகதை பரவியிருந்தது.

ஒருதடவை தலைவர் மாஓ பிரதமர் சூவிடமும் சேனாதிபதி சூ தேயிடமும், ஒரு பூனையைக் கொண்டு எப்படி மனம் விரும்பி மிளகாயைத் தின்ன வைக்கமுடியும் என்று கேட்டார். மிளகாய்க்கு இனிப்புத் தடவி ஊட்டினால் பூனை தின்று விடும் என்றார் சூ. பூனையின் வாயைக் குறட்டினால் பிளந்து பிடித்துக்கொண்டு, அதன் தொண்டைக்குள் மிளகாயைத் திணித்துவிட்டால் பூனை விழுங்கிவிடும் என்றார் தே. பூனை மனம் விரும்பி மிளகாயைத் தின்ன வேண்டும் அல்லவா? ஆகவே இருவரின் பதில்களும் மாஓவுக்கு நிறைவளிக்கவில்லை. உங்கள் பதில் என்ன என்று அவர்கள் மாஓவிடம் கேட்டார்கள். ஒரு மிளகாயை முறித்துப் பூனையின் பின்புறத்தில் உராஞ்சி விடவேண்டும். எரிவு தாங்காது பூனை உடம்பை வளைத்து அதன் பின் புறத்தை நக்குநக்கென்று நக்கும், உறைப்பை நக்கிப் பழகிவிடும். அப்புறம் அது மிளகாயை மனம் விரும்பித் தின்னத்தொடங்கிவிடும் என்றார் மாஒ!.]

பெண்ணின் தாழ்வு நிலையை இன்னொரு பெண் சுட்டிக்காட்டினால் அப்பெண்னை முதலில் தாக்குவது ஆணல்ல இன்னொரு பெண்தான். தனது தேடல்களை பயன்படுத்தி உண்மைகளைக் கண்டறியும் பெண் ஆணின் சதிகளைக் கட்டவிழ்க்கும் போது அவள் கோருவதாக ஆண்கள் சொல்வது, பாலியல் சுதந்திரம், பல பேருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள விழியும் விருப்பம். ஆணின் கலாச்சார பயம் இதை மட்டுமே கூறும். அவன் மனைவியும் , மகளும் ஒரு பெண்கள்தான் அவர்களும் அதைப் பேசும் வாய்ப்பு இருக்கிறதல்லவா. இருக்கட்டும்.

பெண்கள் ஆம் என்று சொல்வதற்குள்ள சுதந்திரம், இல்லை என்று சொல்வதிற்கில்லை.