Showing posts with label அம்பேத்கர். Show all posts
Showing posts with label அம்பேத்கர். Show all posts

Oct 31, 2021

கம்யூனிஸ்ட் யார் என்று டி.என்.ஏ டெஸ்டிங் லேப் நடத்துபவர்களின் கவனத்திற்கு

 


முத்துராமலிங்கத் தேவர் சாதியத் தலைவரா? அவரை ஒற்றை சிமிழிற்குள் அடைக்கப் பார்கிறீர்களே! அவரை படித்திருக்கிறீர்களா? அவரின் வரலாற்றுப் பாத்திரம் தெரியுமா? மொட்டையாக அணுகுறீர்களே நீங்களெல்லாம் ஒரு கம்யூனிஸ்டா!? (இப்படி கேட்பது மார்க்சியவாதிகள்)

சரியான கேள்விதான்!

 ஆனால் இதே நிலைப்பாட்டை அம்பேத்கரை விமர்சிக்கையில் ஏன் இவர்களால் வைக்க இயலவில்லை!

 தேவரை மட்டுமல்ல எவர் ஒருவரையும் மார்க்சியக் கண்ணோட்டத்தில் அவரின் வரலாற்று பாத்திரம் என்ன என்பதை வரலாற்று பொருள்முதல்வாதப் பார்வையில் தான் அணுக வேண்டும்! தேவரைப் பற்றிய திறனாய்வு செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை! சாதி ஒழிப்பின் அடையாளமாக அவர் இல்லை! 

 பெரியாரையும் அம்பேத்கரையும் அப்படி அணுகினால் இங்கு நடப்பது என்ன?

 இவர்கள் இருவரை மட்டும் குறிப்பாக ஏன் பேசுகிறோம்? ஏனென்றால் சாதி ஒழிப்பிற்கு அவர்களிடம் தான் தீர்வு உள்ளது என்று மீண்டும் மீண்டும் முன் வைக்கிறார்கள்.

 அவர்களை முன் வைத்து சாதியை ஒழிக்க மார்க்சியத்தில் தீர்வில்லை! கம்யூனிஸ்டுகளுக்கு இந்த மண் புரியவில்லை! அவர்களுக்கு சாதி ஒழிப்பில் அக்கறை இல்லை! என்ன பெரிதாக செய்துவிட்டார்கள் கம்யூனிஸ்டுகள் போன்ற வாதங்களை வைப்பது யார்? பெரியாரிஸ்டுகள், அம்பேத்கரிஸ்டுகள் (பலரின்) இந்த சாடலுக்கு யார் காரணம்? இந்த வெறுப்பை அல்லது தவறான புரிதலை ஏற்படுத்துவதில் அந்த தலைவர்களின் பங்கு என்ன? யாரை விமர்சித்தாலும் வந்து பாடம் நடத்தும் “மார்க்சிய நடுநிலைவாதிகள்” இதுகுறித்து என்ன அறிவிக்கை வைத்திருக்கிறார்கள்?

 தேவரின் வரலாற்றுப் பாத்திரம் இருக்கட்டும்! தேவர் ஜெயந்தியின் வரலாற்று நிகழ்காலம் என்ன? அதன் பொருத்தப்பாடு என்ன? அதன் தேவை என்ன? அது அவசியா? இல்லையா போன்ற கேள்விகளையும் கேட்கலாமே?

நாங்கள் எடுத்துக் கொண்ட ஆய்வு சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு யாரிடம் உள்ளது என்பதுதானே! அதற்கு தீர்வு உள்ளதாக கூறியது அம்பேத்கர்! புத்தரா கார்ல் மார்க்ஸா என்ற ஒப்பீட்டை செய்தவர். பௌத்த மதமாற்றம் சாதியை ஒழிக்கும் என்கின்ற பிரச்சாரத்தையெல்லாம் நீங்களும் தானே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?

 இந்த பின்னணியில் அம்பேத்கரின் சிந்தனைகளை திறனாய்வு செய்யத் தொடங்கினோம்! அதனை இங்கே எப்படி எதிர்கொண்டார்கள்?

மீண்டும் சொல்கிறேன், தலித் அறிவுஜீவிகள், அம்பேத்கரின் அபிமானிகள் (தலித்துகள்) கோபம் கொள்வதை, வசைபாடுவதை, வழக்கு தொடுப்பதை புரிந்துகொள்கிறோம்! ஆனால் வசுமித்ர மீது வழக்கு தொடுத்தது சிபிஎம் – அதன் பிரிவான தீண்டாமை ஒழிப்பு முன்னணி! இவர்களைப் பார்த்து நீங்கள் ஒரு கம்யூனிஸ்டா? இது ஒரு கம்யூனிஸ்ட் அமைப்பா என்று கேட்டீர்களா?

 குறைந்தபட்சம் பொதுவெளியில் அத்தகைய பாசிச நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தீர்களா? அமைப்பு பாசத்தில் எங்களுக்கு பாடம் நடத்துகிறீர்கள்! கற்றுக்கொள்ள தயாராகவே இருக்கிறோம்! ஆனால் இதே அரசியல் நேர்மை உங்கள் அமைப்பை நோக்கியும், மார்க்சிய தத்துவம் மீதும்.. எல்லாவற்றுக்கும் மேல் உழைக்கும் வர்க்க விடுதலை மீதும் இருக்கட்டும்!

 உங்களுக்கு மட்டுமே எல்லாம் இருக்கிறதா?” – நாங்கள் அப்படி மார் தட்டிக்கொள்வதில்லை!

 எங்கள் கேள்விகள் தேவரை எப்படி மதிப்பிடுவது என்பது பற்றி அல்ல சிபிஎம்மில் (ஒரு சிலரிடம்) காணப்படும் பாசாங்கு / சால்ஜாப்பு / இரட்டை வேடம் / அடையாள அரசியல் மற்றும் தனி நபர் வன்மம் பற்றியது! கருத்துச் சுதந்திரத்தை போட்டு நசுக்கிய மிக மோசமான ஒரு செயலுக்கு அமைப்பு காட்டும் கள்ள மௌனம் பற்றியது.

 சாதி ஒழிப்பிற்கு அம்பேத்கரிடம், பெரியாரிடம் தீர்வு உள்ளதா என்பது குறித்து இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஏன் வெளிப்படையாக கராரான மதிப்பீட்டை வைக்க தயங்குகின்றன. அம்பேத்கர் மார்க்ஸ் தொடரும் உரையாடல் என்கிற பெயரில் வைக்கப்படும் ”உரையாடல்கள்” குறித்த திறனாய்வு என்ன?

 இவற்றை பற்றி கேள்வி கேட்டாலே எங்களை வசைபாடுவதும், சாதிய முத்திரை குத்துவதும், ஆபாசமாக கமெண்ட் செய்வதும், வழக்கு தொடுத்து மிரட்டப் பார்ப்பதும் சரியா? குறிப்பாக கம்யூனிஸ்டுகள் இதை செய்யலாமா என்னும் கேள்வியை முதலில் அவர்களை நோக்கி எழுப்புங்கள். திறனாய்வுக்கான எதிர்வினைகள் எப்படி இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு பாடம் நடத்துங்கள்.

 நீங்கள் ஒரு கம்யூனிஸ்டே இல்லை என்று முகநூல் டி.என்.ஏ டெஸ்டிங் லேப் நடத்துவதற்கு பதில் மார்க்சியக் கண்ணோட்டத்தில் சாதியப் பிரச்சினையை எப்படி அணுகுவது! பெரியார், அம்பேத்கர், அயோத்திதாச பண்டிதர் உள்ளிட்ட முன்வைக்கப்படும் சாதி ஒழிப்பு “ஐகான்கள்” பற்றிய திறனாய்வையும் செய்யலாம்.

 இதை செய்யாதவர்களுக்கு எங்களை கேள்வி கேட்க எந்த அதிகாரமும் இல்லை! பதில் சொல்ல வேண்டிய அவசியமும் எனக்கில்லை!

 

Oct 23, 2021

மார்க்சியமும் - அம்பேத்கரும்! ஜெய் பீம் என முழங்கும் கம்யூனிஸ்டுகளின் கவனத்திற்கு

 அம்பேத்கருடன் தோழர் ஏவின் மனோ காணும் அகநேர்காணல்

-------------------------------------------------------------
முன்குறிப்பு:இந்த அக நேர்காணல் கற்பனையானதென்றோ,அண்ணல் அம்பேத்கர் சொல்லாத வார்த்தைகளை இட்டுக்கட்டி சொல்கிறேன் என்றோ படிப்பவர்கள் நினைத்து விடவேண்டாம்.அம்பேத்கர் தனது வாழ்நாளில் பேசியதும்,எழுதியதுமான 37 தொகுதி நூல்களை ஆதாரமாகக் கொண்டே இந்த உரையாடலை அல்லது அகநேர்காணலை தொகுத்துள்ளேன்.
கேள்விகள் என்னுடையவை போலவே; பதில்கள் அண்ணல் அம்பேத்கருடையது.வாருங்கள் நேர்காணலுக்குள் செல்வோம்.முன்னதாக,
புத்தர்:நான் மறைந்த பின்னர் ஆனந்த சன்ன என்ற பிக்குவுக்கு பிரம்மதண்டம்
(அதாவது கடுமையான தண்டம்) விதிக்க வேண்டும்
ஆனந்தா: சுவாமீ, என்னவிதமான கடுந்தண்டனையை விதிப்போம்,
புத்தர்: ஆனந்த,பிக்கு என்னதான் விரும்பியதைச் சொல்லட்டும். மற்ற பிக்குகள் அவரோடு பேசவுங்கூடாது, அவருக்கு ஆலோசனை கூறவுங் கூடாது. அவருக்காகப் பரிந்து பேசவுங்கூடாது.
-புத்தபகவானின் இறுதிவார்த்தைகள்.
*******
1:கம்யூனிஸ்டுகள் நடத்தும் தொழிலாளர் இயக்கத்தைப் பற்றி உங்கள் கருத்தென்ன?.நீங்கள் அவர்களுடன் இணைந்து செயல்படும் வாய்ப்புள்ளதா?.
நான் அதில் சேரும் சாத்தியக் கூறே இல்லை. நான் அவர்களின் பரம்பரை எதிரி.கம்யூனிஸ்டுகள் என்பவர்கள் தொழிலாளர்களைத் தங்களுடைய அரசியல் நோக்கத்திற்காக சுரண்டுபவர்கள்.
*******
2:மார்க்சிய மூல நூல்களைப் படித்திருக்கிறீர்களா?.
எல்லாக் கம்யூனிஸ்ட் தலைவர்களும் சேர்ந்து எத்தனை புத்தகங்கள் படித்திருப்பார்களோ அவற்றை விட நான் அதிகம் படித்திருக்கிறேன்.அவர்கள் எப்போதுமே எந்தப் பிரச்சினைக்கும் செயல்பூர்வமான அணுகு முறையை மேற்கொண்டதில்லை.
********
3:கம்யூனிஸ்டுகளின் தொழிற்சங்கங்கள் குறித்து உங்கள் கருத்தென்ன?.
அவர்கள் (கம்யூனிஸ்டுகள்) அர்த்தமுள்ளவர்கள்தான்.ஆனால், தவறான வழிகாட்டுதலில் இயங்குபவர்கள்.அவர்களை விட தொழிலாளி வர்கத்துக்கு பேரழிவைக் கொண்டு வந்தவர்கள் வேறு எவரும் இல்லை.இன்று தொழிலாளி வர்கத்தின் முதுகெலும்பு உடைக்கப்படுகிறது.
முதலாளிகளின் கை மேலோங்கியிருக்கிறது.
பொது மக்களுக்கும் தொழிலாளி வர்க்கத்துக்கும் நெருங்கிய நட்பும் இல்லை.இவற்றுக்கெல்லாம் காரணம் இந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் தான்.தாங்கள் ஒரு காலத்தில் வென்றெடுத்த அதிகாரத்தை இவர்கள் தவறாக பயன்படுத்தி வருகிறார்கள்.இவர்கள் வேலையே தொழிலாளர்களிடையே அதிருப்தியை வளர்ப்பதுதான்.அதிருப்திதான் புரட்சியைத் தூண்டும்,புரட்சியின் மூலம் தொழிலாளி வர்க்க கட்சியை நிறுவ முடியும் என்றெல்லாம் இவர்கள் கணக்கு போடுகிறார்கள்.இதற்காகவே இந்த அதிருப்தி பிரச்சாரத்தை முடுக்கிவிட்டு பிளவு,சிதறல் இவற்றையே ஒரு அமைப்பு அலையாக தொடர்ந்து விளைவித்து வருகிறார்கள்.
இவர்கள் தொழிலாளர்கள் மீது திணிக்கும் தொடர் வேலை நிறுத்தங்களுக்கு என்ன அர்த்தம்?.இது சிதறுதலை திட்டமிட்டு செயல்படுத்தும் ஒரு முயற்சிதானே?.வெற்றிகரமான புரட்சிக்கு அதிருப்தி மட்டுமே போதாது.அரசியல் சமூகஉரிமைக்கான நியாயம்,அவசியம்,முக்கியத்துவம் ஆகியவை பற்றிய உண்மையான நம்பிக்கை இருந்தால் மட்டுமே வெற்றிகரமான புரட்சி சாத்தியமாகும்.ஒரு புரட்சிகர மார்க்சிஸ்ட் வேலைநிறுத்தம் நடத்தலே வேலை என்று அலைய மாட்டான்.புரட்சிகர சிண்டிகலிஸ்டுகளின் காலங்களில் அப்படித்தான் நடந்தது.வேலை நிறுத்தத்தை மார்க்சிஸ்டுகள் ஒரு புரட்சிகர நடவடிக்கையாக எப்போதுமே தீர்மானித்துக் கொண்டதில்லை.எல்லா வழிகளுமே அடைக்கப்பட்ட பிறகுதான் இறுதி புகலிடமாக வேலைநிறுத்தம் கையாளப்பட வேண்டும் என்பதே மார்க்சியம்.
இந்த உண்மைகளை கம்யூனிஸ்டுகள் காற்றில் பறக்க விட்டு விட்டார்கள்.தொழிலாளர்களிடையே அதிருப்தியை உருவாக்கத் தங்களுக்கு கிடைத்த தெய்வீக சாதனமாக வேலை நிறுத்தங்களை ஒவ்வொரு கட்டத்திலும் திணித்தார்கள்.இதனால் அதிருப்தி வளர்ந்ததோ இல்லையோ அவர்களுக்கு ஆற்றலும் அதிகாரமும் தந்த தொழிற்சங்க இயக்கமே உருத்தெரியாமல் சிதைந்து வருகிறது.இன்றைய தினம் அவர்கள் தெருவுக்கு வந்துவிட்டார்கள்.
முதலாளித்துவ அமைப்புகளில் புகலிடம் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
பொருளற்ற செயல்கள் அப்படித்தானே முடிய வேண்டும்?. இன்றைய கம்யூனிஸ்டு எப்படி இருக்கிறான்?.சுற்றுவட்டத்தில் மாபெரும் தீ விபத்தை உண்டாக்குவதற்கான வெடிகுண்டை எறிந்த ஒருவன் தன் சொந்த வீட்டையும் சேர்த்து எரித்துவிட்ட நிலையில் இருக்கிறான்.
********
4:கம்யூனிஸ்டுகள் ஆட்சியதிகாரத்திற்கு வந்தால் என்ன நடக்குமென்று எதிர்பார்க்கிறீர்கள்?.
இந்த நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயகம் தோற்றுப்போனால்- நான் குறிப்பிட்ட காரணங்களால் அது தோற்றுத்தான் போகும்- அதன் விளைவாக கலகம்,அராஜகம்,கம்யூனிசம் தோன்றும்.வாரிசு வழி அதிகாரத்தை மக்கள் சகித்து கொள்ள மாட்டார்கள் என்று ஆட்சியிலுள்ளவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் இந்தநாடு அழிந்தே போகும்.கம்யூனிசம் இங்கு வரலாம்.ரஷ்யா நமது நாட்டில் மேலாண்மை பெற்று தனிமனித சுதந்திரத்தை நசுக்கி,நமது சுதந்திரத்தையும் ஒழித்து விடும்.
மேலும் “சமத்துவ அந்தஸ்து பெறும் தங்கள் முயற்சியில் தாழ்த்தப்பட்டோர் ஏமாற்றமடைந்தால் அவர்கள் கம்யூனிச அமைப்பு முறையை விரும்பக்கூடும்; அப்போது நாட்டின் கதி அதோ கதியாகிவிடும்”
********
5:பொருள்முதல்வாத தத்துவமான மார்க்சியத்திற்கு மாற்றாக நீங்கள் எதை பரிந்துரைக்கிறீர்கள்?.
கம்யூனிசத்திற்குப் பதிலளிக்க முடியாத எந்த மதமும் நிலைத்திருக்க முடியாது.கம்யூனிசத்திற்கு மாற்றாக இருக்கும் தகுதி படைத்த ஒரே மதம் புத்த மதம்தான்.
*******
6:தற்போதைய சூழலில் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தல் தரும் விஷயமாக எதை பார்க்கிறீர்கள்?.
உலகை அழிக்கும் குறிப்பாக அதன் தென்கிழக்கு ஆசியப் பகுதியைப் பாதிக்கும் மூன்றாவது அம்சம் ஒன்றும் உள்ளது.காரல் மார்க்சும் அவர் ஈன்றெடுத்த கம்யூனிசமும்தான் அந்த மூன்றாவது அம்சம்.இதன் தாக்கம் கடுமையாக உள்ளது. மார்க்சியமும்,கம்யூனிசமும் சமயசார்பற்ற விவகாரங்கள் சம்பந்தப்பட்டவை.இவை அனைத்து நாடுகளின் சமய சார்பு அமைப்பின் அடித்தளத்தையே ஆட்டம் காண செய்துள்ளன.
*******
7. அரசியலமைப்புச் சட்டத்தை எழுதிய அனுபவம் எப்படி இருந்தது?
என்னிடம் பலர் எப்போதும் சொல்கிறார்கள்; “ஓ, நீங்கள்தான் அரசியலமைப்புச் சட்டத்தின் கர்த்தாவாயிற்றே” என்று.எனது பதில் இதுதான்: “நான் கூலிக்கு எழுதுபவனாக இருந்தேன். நான் எதைச் செய்ய வேண்டும் என்று எனக்குச் சொல்லப்பட்டதோ அவற்றை என் சித்தத்தில் மிகவும் எதிரான முறையில் செய்தேன்”.
*******
8:கார்ல் மார்க்ஸ் 'மதம் மனிதனுக்கு அபின் போன்றது' என்கிறார்.மதத்தைப் பற்றி தங்கள் கருத்தென்ன?.
ஷோஷலிஸ்டுகளும் கம்யூனிஸ்டுகளும் சொல்வது போல மதமே தேவையில்லை என்று நான் நம்பவில்லை.மனிதனுக்கு மதம் கண்டிப்பாகத் தேவை. நீதி, தர்ம சாஸ்திரங்களைப் போல மனிதகுலத்தை எந்த அரசாங்கமும் பாதுகாக்கவோ, ஒழுங்குபடுத்தவோ இயலாது.
மனித குலம் முன்னேறுவதற்கு மதம் முற்றிலும் இன்றியமையாதது.காரல் மார்க்சைப் படித்த பிறகு சமய மறுப்பாளர் குழு ஒன்று உருவாயிற்று என்பதை நான் அறிவேன்.சமயம்,மதம் பயனற்றது,வீணானது என்பது அவர்களது கருத்து.அவர்கள் மதத்துக்கு முக்கியத்துவம் தருவதில்லை அதனை மதிப்பதில்லை.காலையில் அவர்கள் காலையுணவு உண்பார்கள்.அதில் ரொட்டி,பாலோடு வெண்ணெய்,கோழி இறைச்சி முதலியவை இருக்கும்.பின்னர் மதியம் முழுச்சாப்பாடு,ஆழ்ந்த தூக்கம்;அடுத்து திரைப்படங்கள் பார்த்தல், இத்தியாதி.இதுதான் அவர்களது வாழ்க்கைக் கோட்பாடு.இவைதான் நடைமுறை திட்டம்.
மதம் ஏழைகளுக்கு அவசியமானது. மதம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவசியமானது. ஒரு மனிதன் நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டுதான் வாழ்கிறான். வாழ்க்கையின் ஆணிவேர், அடிவேர் நம்பிக்கையில்தான் பொதிந்துள்ளது. இந்த நம்பிக்கை இழக்கப்படுமானால் வாழ்க்கை என்ன ஆவது? மதம் நம்பிக்கையை அளிக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, ஏழை எளிய மக்களுக்கு ஒரு செய்தியைக் கூறுகிறது- பயப்படாதீர்கள், வாழ்க்கை நம்பிக்கை அளிப்பதாகவே இருக்கும், இது உறுதி என்று - இதனால்தான் ஏழைகளும் அடக்கி ஒடுக்கப்பட்டவர்களும் மதத்தை அரவணைத்துக்கொண்டிருக்கின்றனர்...
எனது சித்தாந்தத்தின் ஆணிவேர் மதத்தின் வேரூன்றியிருக்கிறதே தவிர அரசியல் விஞ்ஞானத்தில் அல்ல. எனது மாபெரும் குருவான புத்தரின் போதனைகளிலிருந்தே இவற்றை நான் பெற்றேன்.
********
9.பௌத்த மதமாற்றத்தில் தங்களது சொந்த சாதியைச் சேர்ந்த மஹர் சாதியினரிடத்தில் மட்டும் கலந்தாலோசிக்கவும், அவர்களை மட்டும் மதமாற்றம் செய்யவும் நீங்கள் நினைத்தது ஏன்?.
மகர்களுக்கான தனி மாநாடு கூட்டக் காரணம்.பிற வகுப்புகளை இதில் சேர்க்காததால் அவர்களுக்கு எதுவும் இழப்பில்லை. அவர்களுக்கு மதம் மாற விருப்பம் இல்லையே; எனவே இந்த மாநாட்டில் தங்களையும் சேர்க்கவில்லையே என்று அவர்கள் வருந்த நியாயமில்லை. அவர்கள் மதத்தை விட்டு நீங்க முடிவு செய்திருந்தால், இந்த மாநாட்டில் கலந்துகொள்ள முடியாமல் போன காரணத்தினால் அவர்கள் தங்கள் முடிவை மாற்றிக்கொள்ள போவதில்லை. மகர்களைப் போலவே தீண்டத்தகாத மற்ற மதத்தைச் சார்ந்தவர்களும் தங்கள் தங்கள் மாநாடுகளைக் கூட்டவும், எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ளவும் எந்தத் தடையும் இல்லை. அப்படி கூட்டுங்கள் என்றுதான் நான் சொல்லுவேன். என் திறமைக்கேற்ற அளவில் என்னாலான உதவிகளும் செய்வேன்.
*******
10:கம்யூனிஸ்டுகளுக்கு நீங்கள் சொல்ல விரும்புவதென்ன?.
கார்ல் மார்க்ஸ்சால் கவரப்பட்டிருப்பவர்களுக்கு ஒன்று சொல்லுகிறேன்.தர்மசக்கர பரவர்தன சுத்தத்தை படியுங்கள்.அதில் புத்தர் என்ன சொல்லுகிறார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.இந்தப் பிரச்சினையில் நீங்கள் போதிய அளவு திருப்தியடைவீர்கள்.புத்தர் தமது மதத்துக்கான அடித்தளத்தை கடவுள் மீதோ அல்லது ஆன்மா மீதோ அல்லது இவைபோன்ற வேறு எந்த இயல்நிலை கடந்தவற்றின் மீதோ இடவில்லை.மக்களின் துன்ப துயரங்களின் மீதே அவர் தலையாய முக்கிய கவனம் செலுத்தினார்.எனவே மார்க்சியம் அல்லது கம்யூனிசத்தை பொறுத்த வரையில் பௌத்தம் அதனை போதிய அளவில் பெற்றுள்ளது.மார்க்ஸ் சொன்னதை புத்தர், மார்க்ஸ் பிறப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னார்.
********
11:புத்தரையும்,கார்ல் மார்க்ஸையும் ஒப்பிட்டு கட்டுரை எழுத வேண்டிய தேவை எங்கிருந்து பிறந்தது?.
நான் அரசியல் துறை மாணாக்கனாக இருந்துள்ளேன்.பொருளாதாரத் துறை மாணவனாக இருந்துள்ளேன்.
பொருளாதாரத் துறை பேராசிரியராக இருந்துள்ளேன்.கார்ல் மார்க்ஸையும் கம்யூனிசத்தையும் பற்றி ஆராய்வதில் நான் நிறைய நேரத்தை செலவிட்டுள்ளேன்.அதே சமயம் புத்தரின் தம்மத்தை படிப்பதிலும் பெரிதும் ஆழ்ந்து ஈடுபட்டுள்ளேன்.இரண்டையும் ஒப்பிட்டு பார்த்த பிறகு, ஒரு திட்டவட்டமான தீர்மானமான முடிவுக்கு வந்தேன்.உலகை இன்று ஒரு மாபெரும் பிரச்சினை எதிர்நோக்குகிறது.உலகில் 'துக்கம்' நிலவுகிறது.அந்த துக்கம் அகற்றப்பட வேண்டும் என்பதே அந்தப் பிரச்சினை.இதற்கு புத்தர் தெரிவித்துள்ள யோசனைகள்தான்,பரிகாரங்கள்தான் மிகவும் பாதுகாப்பானது, ஆரோக்கியமானது.இதுவே சிறந்தது என்ற திட்டவட்டமான முடிவுக்கு வந்தேன்.
*******
12.நீங்கள் முன்வைத்த இந்துமசோதா சட்டத்தின் புரட்சிகர அம்சம் என்ன?
இந்துச் சட்ட மசோதாவை தீவிரமானது என்றோ புரட்சிகரமானது என்றோ வர்ணிக்க முடியாது. முன்னேற்றத்திற்கான புதிய வழிமுறைகளை அனுமதிக்கிற இந்த மசோதா பழமைவாத நடைமுறைகளை எதிர்க்கவில்லை……
எந்த அடிப்படையில் சட்ட மசோதா வரையப்பட்டிருக்கிறது என்பதைப் பொருத்தவரை, இந்து சாஸ்திரங்கள், ஸ்மிருதிகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அவை திருத்தப்பட்டுள்ளன. சொத்துரிமைக்கு வகை செய்வது தயாபாக் முறை. ப்ரித்தீஸ்வரன்யா அடிப்படையில் குழந்தை, தந்தையின் ஜாதியைப் பெறுகிறது. கௌடில்ய, பராஷரா ஸ்மிருதிகள் விவாகரத்துக்கு ஆதரவு தருகின்றன. ப்ருஹஸ்பதி ஸ்மிருதி பெண்களுக்கு சொத்துரிமை வழங்குகிறது……
இந்த மசோதாவின் எந்தவொரு பகுதியாவது ஸ்மிருதிகளின் அடிப்படையில் அமையவில்லை என்று யாராவது எனக்குக் காட்ட முடியுமா?.....
********
13. இஸ்லாமியர்கள் குறித்து உங்களது கருத்துக்கள் என்ன?
பாகிஸ்தானிலோ அல்லது ஹைதராபாத்திலோ இருக்கும் தாழ்த்தப்பட்ட இன மக்கள் முஸ்லீம்கள் அல்லது முஸ்லீம் லீக்கின் மீது நம்பிக்கை வைப்பது அவர்களுக்கு பெருங்கேட்டைத்தான் விளைவிக்கும். இந்துக்களை வெறுப்பதனாலேயே முஸ்லீம்களை நண்பர்களாக பாவிப்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பழக்கமாகிவிட்டது. இது ஒரு தவறான கண்ணோட்டமாகும்.
தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதரவை முஸ்லீம்கள் வேண்டுகிறார்கள். ஆனால் அவர்கள் தங்களின் ஆதரவைத் தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு தருவதே இல்லை. எப்பொழுதுமே ஜின்னா இரட்டை வேடம் போட்டு வருகிறார். அவருக்குத் தேவைப்படுகிறபோது தாழ்த்தப்பட்ட இன மக்கள் தனிப்பிரிவினர் என மிக அழுத்தமாகச் சொல்வார். அவருக்குத் தேவைப்படாத போது அவர்கள் இந்துக்கள் என்று அதே அழுத்தத்தோடு கூறுவார். முஸ்லீம்களும், முஸ்லீம் லீக்கும் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் முஸ்லீம்களை ஆளும் வர்க்கமாக்கிவிட வேண்டும் என்னும் வெறியில் இருப்பதால் தாழ்த்தப்பட்ட இன மக்களின் கோரிக்கைகளுக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கவே மாட்டார்கள். இதை நான் என் அனுபவத்திலிருந்து கூறுகிறேன்.....
இந்திய ராணுவத்தில் முஸ்லீம்களின் செல்வாக்கை குறைத்து, விரோத சக்திகளை வெளியேற்றிவிட வேண்டும். நமது பூமியை நாம் காப்பாற்றுவோம். இந்தியாவில் முஸ்லீம் சாம்ராஜ்யத்தை பாகிஸ்தான் விரிவுபடுத்தி விடும் என்று தவறான கருத்துக் கொண்டிருக்க வேண்டாம். இந்துக்கள் அதை மண்ணைக் கவ்வச் செய்வார்கள். சாதி இந்துக்களிடம் சில பிரச்சினைகளில் நான் சண்டையிடுகிறேன் என்பது உண்மைதான், ஆனால் நமது பூமியைக் காப்பாற்றுவதற்காக நான் எனது உயிரையும் கொடுப்பேன் என்று உங்கள் முன் சத்தியம் செய்கிறேன்……
********
14.சட்டத்தைப் பற்றி உங்களது அறிவுரை என்ன?
சட்டம் சமயசார்பற்றது; எவரும் அதை மீறலாம்; ஆனால் சகோதாரத்துவம் அல்லது சமயம் புனிதமானது; எல்லோரும் அதற்கு மதிப்பும் மரியாதையும் தரவேண்டும்.
********
15.சூத்திரர்கள் - சத்ரியர்கள் பற்றிய ஆய்வு குறித்து உங்களது முடிவு என்ன?
சூரிய வம்சத்தைச் சேர்ந்த சத்திரியர்கள் பராக்கிரமிக்கவர்கள். சந்திர வம்சத்தைச் சேர்ந்த சத்திரியர்களோ இயல்பாகவே மனோதிடமற்றவர்கள், தன்மானமில்லாதவர்கள்.
சந்திர வம்சத்தைச் சேர்ந்த சத்திரியர்கள் கல்வி கற்பதில் அவ்வளவாக நாட்டமில்லாதவர்கள். சூரிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள் அப்படியல்ல. அவர்கள் அறிவு வளத்தில், கல்வி கேள்விகளில் பிராமணர்களுக்கு சமதையானவர்களாக, இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கும் மேம்பட்டவர்களாக இருந்தனர்.
சூத்திரரர்களும் ஆரியர்களே. சூத்திரர்கள் சத்திரிய வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். பழங்கால ஆரிய சமுதாயத்தினரின் மிகச்சிறந்த சக்திவாய்ந்த மன்னர்களில் சிலர் சூத்திரர்களாக இருந்தனர் என்பதால் சூத்திரர்களும் சத்திரியர்களின் ஒரு முக்கிய வர்க்கத்தினராக இருந்தனர்.
*******
16.இறுதியாக,மார்க்சியத்தைப் பற்றிய உங்களது மதிப்பீடு என்னவென்று தெரிந்து கொள்ளலாமா?.
மார்க்சியம் ஒரு பன்றித் தத்துவம்.
********
ஜெய்பீம் என முழங்கும் கம்யூனிஸ்டுகளின் கவனத்திற்கு

Jun 4, 2021

நான் ஒரு பகவானைப் படைக்கிறேன்.

நான் ஒரு பகவானைப் (இறைத் தூதரை / புனிதாத்மாவை / புரட்சியாளரை) படைக்கிறேன். அவருடைய வாழ்க்கை வரலாற்று நூல்கள் (மத நூல்கள்) அடிப்படையில் நானே எழுதுகிறேன் (தொகுக்கிறேன்).

என்ன நோக்கமாக இருக்க முடியும்? - அவர் இப்படியெல்லாம் வாழ்ந்தார்… இந்தந்த கொள்கைகளைக் கொண்டிருந்தார் எனவே நான் அவரை என் விடிவெள்ளியாக கருதுகிறேன். அவரின் போதனைகளை விடுதலைத் தத்துவமாக, புரட்சிகர சிந்தனையாக முன் வைக்கிறேன்.என்’ மக்களின் விடுதலைக்கான பாதையாக அதை வழிமொழிகிறேன் என்பது தானே நோக்கமாக இருக்க முடியும்?

நிற்க!

இப்படி நான் தொகுக்கையில் அந்த பகவான் ஏன் துறவறம் எய்தினார் என்று வரலாற்றில் கூறப்பட்டுள்ளது வாய்ப்பில்லை (முற்போக்கானதாக இல்லை) என்று எனக்கு தோன்ற நான் அக்காரணங்களை மாற்றி எழுதி புரட்சிகரமாக மாற்றுகிறேன்!

பின்னர் ஓரிடத்தில் அந்த புனிதாத்மாவின் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு குறித்த பண்பு நலன்களை எழுதுகிறேன். அப்போது, ” தன் மகன் துறவறம் சென்றால் இராஜ்ஜியத்தை யார் ஆள்வது என்னும் கவலையில் அவரை தடுப்பதற்காக நூற்றுக்கணக்கான பெண்களை அந்தப்புரத்தில் “இறக்கி” அந்த ‘ஆண்’ மகனை மயக்கி ‘சிற்றின்பத்தில்’ ஆழ்துமாறு பணித்தார்” என்று எழுதி… அந்த பெண்களும் மிகுந்த ஈடுபாட்டோட்டு அதனை செய்தனர்…

ஆண்டுக்கணக்கில் இந்த ‘வசிய’ வேட்டை நடந்தது என்று எழுதுகிறேன் (சாரி தொகுக்கிறேன்). எழுதி விட்டு இறுதியில் குலகுருவோ அல்லது யாரோ வந்து கேட்கிறார்கள் “பெண்களை நாடுதல் இயற்கையானது தானே என்கிறார். .அதற்கு அந்த புனிதாத்மா " தாங்கள் பெண்களை நேயத்துடன் அணுக வேண்டும் என்பீர்களாயின் , பண்பான நேயம் பற்றி நானறிவேன்" என்று பதிலடி கொடுத்தார் என்று எழுதி “ஆஹா எப்படிப்பட்ட பண்பாளன்’ இவனல்லவோ ஒழுக்கவாதி! பாருங்கள் இவன் பெண்களை எப்படி மதிக்கிறான் என்றெல்லாம் புகழ்ந்துரைத்து அவரை வரலாற்று நாயகனாக முன்னிறுத்துகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது மற்ற மத நூல்களில் உள்ள ஆணாதிக்க நரித்தனங்களை கட்டுடைக்கும் ஒருவர் எனது புனிதாத்மா குறித்து ஆய்வு செய்கிறார். அப்போது மேற்சொன்ன வர்ண்ணனைகளைப் படித்து விட்டு அவருக்கு ஒரு கேள்வி எழுகிறது “ஏதேதோ துயரங்களை, அநீதிகளைக் கண்டு பொறுக்க முடியாமல் துறவறம் மேற்கொண்ட அந்த புனிதாத்மா அடிமைப் பெண்களை இப்படி பாலியல் பண்டமாக ஏவியது குறித்து ஏன் எந்த கேள்வியும் எழுப்பவில்லை?” சரி அதை “தொகுத்த” எம் தலைவி! ஏன் அதை அந்த கதாப்பாத்திரம் வழியாக போதிக்கவில்லை?

ஆண்டுக்கணக்கில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு அமைச்சர் வந்து கேட்கையில் “எனக்கு பண்புடன் நேசிக்கத் தெரியும்” என்கிறாரே? அதற்கும் மேல அந்த பெண்கள் ஏன் இப்படி செய்கிறார்கள்? இளமை போய்விட்டால் பெண்களுக்கு என்ன மதிப்பிருக்கிறது என்பதாக வருந்தினார் என்றும் எழுதினால் எப்படி இருக்கும்?

உண்மையில் அந்த புனிதாத்மா சமத்துவவாதியாக இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும் என்று ஒரு பெண்ணியவாதி / மார்க்சியவாதி எதிர்பார்ப்பார்? குறைந்தபட்சம் அந்நூலை கட்டுடைப்பார்.

ஆணைப் புனிதவானாக காட்டுவதற்காக பெண்களை பாலியல் பண்டமாக்கி நடமாட விட்டு, அவர்களின் முயற்சி தோல்வி அடைந்தது.. ஏனென்றால் என்னுடய ‘நாயகன்’ ஒழுக்கவான். மனதைக் கட்டுப்படுத்த தெரிந்தவன் என்று நிறுவும் ஆணாதிக்க மனம் என்று திறனாய்வு செய்யக் கூடாதா?

கண்டிப்பாக முற்போக்கு மனங்கள் இதை வரவேற்கும். ஆஹா என்னவொரு ஆய்வு என்று மெய்சிலிர்க்கும்… அத்தகைய விமர்சனத்தை வைப்பது யார் என்பதைப் பொறுத்து! விமர்சிக்கப்படுபவர் யார் என்பதைப் பொறுத்தும்! 😉

சுயசாதி பற்றுடன் தம் தலைவரை அனுகுபவர்களுக்கு தம் தலைவர் இப்படி தூய்மைவாதப் பார்வையோடு தம் புனிதாத்மாவைப் படைத்திருக்கிறாரே… அதற்குள் இப்படி ஒரு “மதவாத”, “பார்ப்பனியத்திற்கு நிகரான புனிதவாத”, “ஆணாதிக்க” மனம் செயல்பட்டிருக்கிறதா என்பதை ஏற்றுக்கொள்வது சிரமமாகத் தான் இருக்கும்… என்ன செய்வது!

கூடுதலாக பெண்கள் அப்படி உலவ விடப்படுவது குறித்த வரலாற்று வளர்ச்சி பற்றி மார்க்சியம் நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும். தாய்வழிச் சமூகம் உடையத் தொடங்கும் காலம், இனக் குழுக்கள் மெல்ல அழியும் காலம். ஆணாதிக்கம் மேலோங்கும் காலம், அரசு உருவாகும் காலம், பார்ப்பனிய ஒழுக்கவாத, மதவாத குலகுருக்கள் உள் நுழைதல், மன்னருக்கு அவர்கள் “முக்கியமானவர்களாக” மாறுதல், அதிகாரம் செலுத்துதல் என்று எவ்வளவோ விசயங்களை நாம் ஒரு தொன்ம நூலில் / புனிதாத்மாக்களின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து திறனாய்வு செய்ய முடியும்.

அதற்கு மார்க்சியம் வழிகாட்டும்!

இல்லையெனில் மார்க்சியக் கண்ணோட்டத்தில் செய்யப்படும் ஆய்வுகளை திறந்த மனதுடன் அணுக வேண்டும். சுயசாதி பற்றும், ரசிக மனோபாவமும், பரிதாப உணர்வும் அதை தடுக்குமே ஆனால் அது அறிவு மறுப்புவாதம். மதம் அப்படித்தான் நகர்த்தும். முற்போக்கு சாயம் பூசப்பட்ட மதமானாலும் அது கருத்துமுதல்வாதமே. அதனை முன்மொழியும் ‘தலைவர் / தலைவி’களின் எழுத்துகளில் (தொகுப்புகளில்) உள்ள கோளாறும் அதுவே.

மதத்தின் தோற்றம் மற்றும் அதன் உள்ளார்ந்த கேடு என்ன என்பதை அறியவும் மார்க்சியம் வழிகாட்டும். எல்லா மதங்களும் ஏதோ ஒரு நாட்டில் வன்முறையையும், அழித்தொழிப்பும் மேற்கொள்கிறது என்பதை நாம் கண்டுகொண்டுதான் இருக்கிறோம்.

இந்த அடிப்படையில் தான் உழைக்கும் வர்க்கத்தின் ஒரு பகுதியான ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களுக்கு விடுதலை தத்துவம் என்று போதிக்கப்படும் தொகுப்பு எழுத்துகளும் விமர்சிக்கப்படுகின்றன. எழுதியவரும் விமர்சிக்கப்படுகிறார்!

அவரை விமர்சிச்சீங்களா இவரை விமர்சிச்சீங்களாங்குற கேள்விக்கு 5 வருஷமா பதில் சொல்லியாச்சு... போய் அதையாச்சும் படிங்க!

 

Jun 13, 2020

மத மாற்றமும் தூய்மைவாதச் சிக்கலும்
















//நம்முடைய நல்வாழ்வை விழைந்து, நம் இன்பத்தை நாடி, கருணையுடன் எவ்வகையான கணவர்க்கு நம்மை நம் பெற்றோர் மணமுடித்துக் கொடுப்பினும், அவர்பால் அன்புடைமையின் விளைவாய், முன் எழுந்து, பின் உறங்குவோராய், விரும்பி உழைப்போராய், கோருபவற்றை இன்சொற்களால் இனிமையாய் கோருபவராய் இருத்தல் வேண்டும். குழந்தைகளே! இவ்வாறு உம்மை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.// - அம்பேத்கரின் புத்தர்!

#வசுமித்ர எழுதிய அம்பேத்கரறிதல் கவிதைகளும், #அம்பேத்கரும்_அவரது_தம்மமும் நூல் முன்னுரையும் எப்படி அம்பேத்கரின் துயரை, அவரின் மதிப்பை, அம்பேத்கர் மீதான சாதிய சமூக வன்மத்தை பதிவு செய்கிறதோ அதே போல் தான் வசுவின் நூல் அம்பேத்கரின் மத நம்பிக்கையை கேள்வி எழுப்புகிறது. சாதி ஒழிப்பிற்கான தீர்வாக பௌத்தத்தை முன்வைக்கும் போக்கில் அம்பேத்கர் புத்தரை கடவுளாக்கும் நிலைக்கு சென்று பகுத்தறிவை கைவிட்டு தூய்மைவாதப் பிடியில், சொல்லப்போனால் பார்ப்பனியத்திற்கு நிகரான தூய்மைவாதப் பிடியில் சிக்கிக் கொண்டார் என்பதை முன் வைக்கிறது. மதவாத ஒழுக்கவாதமும் ஆணாதிக்கமும் பிரிக்கவியலாதவை! அதன் விளைவாக அம்பேத்கரின் புத்தர் மூலமாக நமக்கு அதுவும் தென்படுகிறது..

இதைக் கண்டு கோபப்படுவதை விட வருந்த வேண்டியுள்ளது! சாதியமைப்பால் அவமதிப்பிற்கும், விலக்கலுக்கும், கொடுமைகளுக்கும் உள்ளாகும் ஆன்மா தன்னை “அழுக்கானவன்’, “தீண்டத்தகாதவன்” என்று ஒதுக்கி அவன் வாழ்நிலையையே கேள்விக்கு உள்ளாக்கும் போது, உன்னைவிட நான் தூய்மையானவன் தான் என்று மெய்ப்பிக்கும் கொந்தளிப்பு ஏற்படும்… அது தன்னை அவமதிக்கும் மதத்திற்கு எதிரான ஒரு புதியதோர் தூய்மையான மதத்தை கலகமாக, தீர்வாக முன்வைக்க முற்படும். அம்பேத்கர் கைக் கொண்டதும் அதுவே!

ஆணாதிக்கத்திற்கு ஆண் வெறுப்பு எப்படி தீர்வாகாதோ அதேபோல் ஒரு மத வெறுப்பிற்கு (மதப் பிரச்சினைக்கு) இன்னொரு மதம் மாற்றாகாது! ஏனென்றால் வர்க்கப் பகைமைகளுக்கு இணக்கம் காண முடியாததன் விளைவாக எப்படி அரசு தோன்றுகிறதோ, அதேபோல் அவர்களுக்குரிய கருத்தியல் பிரச்சாரக் கருவியாக, ஒடுக்குமுறை கருவியாக மதங்கள் தோன்றுகின்றன. மதம் என்பது என்றைக்கும் ஆளும் வர்க்க உருவாக்கமே! ஆளும் வர்க்கத் தேவையே! உழைக்கும் வர்கத் தேவையன்று!

மேலும், சாதியை ஒழிக்க மதமாற்றம் தீர்வல்ல! அது கலகமும் அல்ல! புரட்சியும் அல்ல என்னும் கசக்கும் உண்மையை நாம் சீரணித்தே ஆக வேண்டும்! மதம் பற்றிய மார்க்சியப் பார்வை மட்டுமின்றி யதார்த்ததில் மதங்கள் என்ன செய்கின்றன என்பதை கணக்கில் கொண்டாவது பௌத்த அம்பேத்கரியர்கள் இதை உனர முற்பட வேண்டும். பௌத்தம் தோன்றிய அன்றைய காலச் சூழல், அதன் வர்க்கச் சார்பு, அது இயங்கிய விதம் அனைத்தையும் கணக்கில் கொண்டு பார்க்கையில் தெளிவு ஏற்படும்…



Jul 12, 2019

ஆய்வு நூலா? வசைகளின் தொகுப்பா?


ஜூலை6 அன்று ‘நூல்வெளி’ பகுதியில் அம்பேத்கரின் சாதிய ஆய்வுகள் குறித்த ரங்கநாயகம்மாவின் நூலையும் அதை மறுத்து மதிவண்ணன் எழுதிய நூலையும் பற்றிய விமர்சன அறிமுகத்தைப் படித்தேன். செல்வ புவியரசன் சொல்லியிருப்பதுபோல அம்பேத்கரின் சாதி குறித்த பார்வையில் உள்ள போதாமைகளை ரங்கநாயகம்மா நிறுவ முயலவில்லை. நிறுவியேவிட்டார்.
செல்வ புவியரசன், அம்பேத்கரின் ஓரிரு மேற்கோள்களை எடுத்து அவர் மார்க்ஸியத்தை வெறுக்கவில்லை அல்லது மார்க்ஸை ஏற்றுக்கொண்டார் என்ற சித்திரத்தை வழங்க முடியுமெனில், அதேபோல் பல நூறு மேற்கோள்கள் கொண்டு அம்பேத்கர் எவ்வாறு மார்க்ஸியம் குறித்தும், புரட்சி குறித்தும் காழ்ப்புணர்ச்சியோடு பேசியுள்ளார் என்பதையும் நிரூபிக்க முடியும்.
அம்பேத்கருக்குத் தெரிந்தது ஏபிசிடி மார்க்சியம்தான் என எஸ்.வி.ராஜதுரை சுட்டிக்காட்டியதிலிருந்து அம்பேத்கருக்கு மார்க்ஸியம் சம்பந்தமான புத்தகங்கள் கிடைக்கவில்லை என அருணன் சொல்லியது முதற்கொண்டு டெல்டும்டே வரையில் அம்பேத்கருக்கு மார்க்ஸியம் பற்றிய புரிதல்கள் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக இருக்க, அம்பேத்கரின் தலையில் மார்க்ஸியப் புத்தகங்களைக் கட்டிச் சுமக்கவிடுகிறார் மதிவண்ணன்.
ஒட்டுமொத்தமாக, ரங்கநாயகம்மாவையும், கொற்றவையையும் திட்டுவதற்கு ஒரு நூலை எழுதி, அதை ஆங்காங்கு அம்பேத்கர் எழுதிய வார்த்தைகளால் வெட்டி ஒட்டி நிரப்பிவிட்டால், அது ஆய்வு நூல் தகுதியை அடைந்துவிட முடியுமா என்பதை செல்வ புவியரசன் விளக்க வேண்டும்.
மற்றபடி டுபாக்கூர் மற்றும் ஒரிஜினல் ஆய்வுகளை ஆய்வாளர்களும், வாசகர்களும் சமப்ந்தப்பட்ட நூல்களை வாசிக்கும்போது உணர்ந்துகொள்வார்கள். சுருக்கமாகச் சொன்னால், மதிவண்ணனின் நூல் ஒரு வசைக் குப்பை. பெண்களின் மீதான அருவருப்பு மற்றும் மத துவேஷத்தோடு இருப்பதுடன் அது அம்பேத்கருக்கே முரணான நூல்.
நன்றி - #வசுமித்ர (இன்றைய இந்து தமிழில் எதிர்வினை வெளியிடப்பட்டுள்ளது)

Jul 6, 2019

மார்க்சியர்களை தரம் பிரிக்க முதலில் மார்க்சியம் அறிந்திருக்க வேண்டும்

உலகம் தோன்றியது எப்படி என்று தொடங்கி… சமூகத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து அல்லது மனித சமூக வாழ்நிலைமைகள் குறித்து இங்கு பலரும் (தலைவர்களும்) வியாக்கியானம் செய்துள்ளனர். ஆய்வுகள் மேற்கொண்டு தரவுகளை தந்துள்ளனர். சில பல (தத்துவார்த்த) கண்டுபிடிப்புகளும் உண்டு.
சமூகத்தில் நிலவும் அநீதிகளுக்கெதிராக எண்ணற்றோர் கிளர்ந்தெழுந்துள்ளனர். சிலர் சீர்திருத்தங்களை முன் வைத்துள்ளனர். சிலர் புரட்சியில் ஈடுபட்டு பெரும் மாற்றங்களை கொண்டுவந்துள்ளனர். ஆனால் தத்துவார்த்த அடிப்படையில், சமூக விஞ்ஞானமாக எல்லா பிரச்சினைகளுக்குமான ஆணி வேரை அதாவது காரண காரியங்களை, அதாவது சமூகத்தின் இயக்க விதியை வரலாற்று வளர்ச்சியிலிருந்து, அதாவது அதன் உள் முரண்பாடு மற்றும் மாறும் தன்மைகளோடு எது சமூகத்தின் அடித்தளமாக விளங்குகிறது என்று விளக்கியவர் கார்ல் மார்க்ஸ் (எங்கல்ஸ், லெனின் இப்படியாக).
மார்க்சியம் என்பது வெறும் பொருளாதாரமல்ல... பொருளாதாரக் கண்ணோட்டம் மட்டுமல்ல. அது வெறும் பொருளாதார பிரச்சினைகளை மட்டும் அலசவில்லை. மனிதர்கள் சமூகமாக வாழத்தொடங்கிய வரலாற்று நிலைமைகள் தொடங்கி, அதன் வளர்ச்சிப் போக்கு, இயக்கப் போக்கு என்று கடந்த கால நிலைமைகள் மட்டுமின்றி எதிர்கால நன்மை மிகு சமூக அமைப்பிற்கான வேலைத்திட்டத்தையும் (தீர்வையும்) வழங்குவது மார்க்சியம்.
மார்க்சியம் என்பது வெறும் தத்துவமல்ல, வெறும் பொருளாதாரமல்ல, கற்பனாவாத பொதுவுடைமை பிதற்றலும் அல்ல.
மார்க்சியம் என்பது ஓர் உலகக் கண்ணோட்டம் - இயற்கையின் தோற்றத்தோடும், வளர்ச்சியோடும், இயக்கப் போக்கோடும் மட்டுமின்றி மனித உறவுகள் (அதாவது கூட்டுச் சமூக வாழ்வு) மற்றும் சமூக அமைப்பு, அதன் உள்ளார்ந்த விதிமுறைகள், சமூக வளர்ச்சி, இயக்கப் போக்கு ஆகியவற்றை ஆய்ந்தறிந்து, தொகுத்து, ஒரு வரைபடம் போல், அறிவியல் கண்டுபிடிப்புகளின் விதியைப் போல் நிறுவும் சூத்திரம் (உன்மையில் இந்த சொற்கள் போதவில்லை).
மார்க்சியம் என்பது ஓர் உலகப் பொதுமறை என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா? தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான சோஷலிசம் ஆகிய மூன்று கூறுகளைக் கொண்டது. இதை அடிப்படையாகக் கொண்டு எந்த நாட்டு நிலைமைகளையும், உழைக்கும் வர்க்கப் பிரச்சினைகளையும் ஆய்வு செய்ய முடியும்.
மேலும் மார்க்சியம் என்பது வெறும் பொருளாதாரக் கண்ணோட்டம் என்று கூறுவது மார்க்ஸை (மார்க்சியத்தை) கொச்சைப்படுத்துவதற்கு சமம்.. அல்லது மார்க்சியம் அறியாத பேச்சு! மார்க்ஸ் விளக்கும் அரசியல் பொருளாதாரம் என்பது சமூகத்தின் கட்டுமானம் குறித்தது – அது அடிக்கட்டுமானம், மேற்கட்டுமானம் என்று சமூகத்தின் அனைத்து இயக்க இயந்திரங்கள் (பண்பாடு உள்ளிட்ட) பற்றியும் உள்ளடக்கியது.
பொருளாதாரம் என்றால் ஏதோ பணப் பரிவர்த்தனை, சில கூட்டல் கழித்தல், ஐந்தாண்டு நலத் திட்டம், வரிவிதிப்பு இப்படியான புரிதலில் மார்க்சியத்தை வெறும் பொருளாதாரம் என்று கூறுவது அபத்தம்.
சமூக கண்ணோட்டம் என்று ஒன்று தனித்ததாக இங்கு இல்லை…. ஒவ்வொரு வரலாற்று கட்டத்திலும் நிலவும் உற்பத்தி முறைகளின் அடிப்படையில்தான் ஒரு சமூக கண்ணோட்டம் உருவாகும்… அது அடுத்த உற்பத்தி முறையில் தொடரும், நீர்த்து போகும், எச்ச சொச்சம் இருக்கும், அடுத்து அதுவே முரண்பட்டு மாறும்… அதாவது உற்பத்தி உறவுகளில் ஏற்படும் முரண்பாடுகள் காரணமாக உற்பத்தி முறையில் மாற்றம் ஏற்பட்டு சமூக-அரசியல்-பண்பாடு- பொருளாதார கட்டுமானம் எல்லாம் மாறும்….
இப்படியாக சமூக கண்ணோட்டம் என்பதை வரலாற்று வளர்ச்சியிலிருந்து காணக் கற்றுக்கொடுப்பதுதான் மார்க்சியக் கண்ணோட்டம்… அதுவே அதன் தத்துவார்த்தப் பார்வை… அதனுள் அடங்கியிருப்பது அரசியல் பொருளாதாரம். மேலும் சமூக கண்ணோட்டம் என்பதை புரிந்துகொள்வதில் மார்க்சியம் ஒரு தனித்துவமான சிந்தனையை நமக்களிக்கிறது – ஆளும் வர்க்க கருத்தியலே ஆளப்படும் வர்க்கங்களின் கருத்தியல் என்பதாகும்… மார்க்சியம் கற்ற ஒருவர் இந்த தத்துவ, அரசியல் பொருளாதார பார்வையிலிருந்தே எந்த ஒரு நிலைமையையும், பிரச்சினையையும் ஆய்வு செய்யவார்.
மார்க்சியக் கண்ணோட்டத்தில் வைக்கப்படும் விமர்சனங்களையும் இந்த கண்ணோட்டத்திலிருந்தே அணுக வேண்டும். அதைவிடுத்து நடுநிலைமையோடோ அல்லது பரிதாப உணர்விலிருந்தோ அல்லது தங்களின் அடையாள உணர்விலிருந்தோ… தங்களது தலைவர் என்கிற பக்கச் சார்பிலிருந்தோ அல்லது மிதவாத, தாராளவாத புரிதல்களிலிருந்தோ அணுகுவது விமர்சனத்தின் மீதான முழுமையான விமர்சனமாகாது.
அத்தகைய விமர்சனத்தின் மீதான விமர்சகரானவர் ‘ஒர்ஜினலா’ ‘டுபாக்கூரா’ என்று கண்டுபிடிக்க குறைந்தபட்சம் இந்த புரிதலாவது வேண்டும்.

மார்க்சியர்களை தரம் பிரிக்க முதலில் மார்க்சியம் அறிந்திருக்க வேண்டும். அதனோடு முதலாளித்துவ பேராசையும், அதிகாரப் பசியும் இல்லாதிருக்க வேண்டும்!

Apr 27, 2019

பா இரஞ்சித்தின் உழைப்புப் பிரிவினை பற்றிய கருத்து தொடர்பாக

 


தனியுடைமையின் அடிப்படையிலான உற்பத்தி முறைக்கு ஏற்ற உழைப்புப் பிரிவினை தான் எல்லாவித ஏற்றத்தாழ்வுகளுக்கும் அடிப்படை. அதுதான் உற்பத்தி உறவுகள் - வர்க்கப் பிரிவினை எனப்படுகிறது. இதை கூறினால் இந்த கம்யூனிஸ்டுகளுக்கு சாதியப் பிரச்சினை குறித்து புரிதல் இல்லை என்பார்கள். சரி கம்யூனிஸ்டுகளுக்கு சாதி இல்லைஅதனால அவங்க சொன்னா கேட் வேண்டாம்மார்க்ஸ் இந்தியாவில் பிறக்கவில்லை.. (அதனால் அவருக்கும் சாதி இல்லை) அதனால் அவர் சொன்னாலும் கேட்க வேண்டாம்.

இப்போது தோழர் பா. இரஞ்சித் மார்க்சியம் எடுத்துரைக்கும் உழைப்புப் பிரிவினையை அடியொட்டி ஒன்றை கூறியிருக்கிறார். (அம்பேத்கர் அவர்கள் உழைப்புப் பிரிவினையை பேசியிருந்தாலும், அவர் உழைப்பாளர் பிரிவினை என்பதை வேறுபடுத்தி பார்த்து, அது சாதிஅது வேறு என்னும் வகையில் ஆய்வு செய்து, அதற்கான தீர்வுகளை முன் வைத்ததில் சில தவறுகளும், போதாமையும் இருக்கிறது என்பதே எங்களது வாதம்இதை அவதூறு என்பவர்கள்அதற்காக எனக்கு சாதி வெறி சாயம் பூசுபவர்கள்  அறிவார்ந்த விவாதங்களில் ஈடபட அறியாதவர்கள்அவ்வளவே). இரஞ்சித் சொல்வதன் அடிப்படையை எப்படி கண்டடைவது. வியாக்கியானம் சரிவிடை எங்கே…. அதற்குதான் மார்க்சியம் அவசியத் தேவை! (நான் மொழிபெயர்த்த நூல்களை வாங்கிப் படித்து என்னை கோடீஸ்வரியாக்கி விட வேண்டாம். மற்ற மார்க்சிய நூல்களை படித்துப் பார்க்கவும்.)

வரலாறு பற்றிய கருத்துமுதல்வாத கண்ணோட்டத்தைப் பொதுவாகவும், ஜெர்மானியின் பின்-ஹெகலிய தத்துவத்தைக் குறிப்பாகவும் விமர்சிக்கும்போது மார்க்ஸும், எங்கெல்ஸும் (1845-46: 63) இந்தியாவில் நிலவும் பக்குவற்ற உழைப்புப் பிரிவினையானது அரசு மற்றும் மத நிறுவனங்களால் சாதியமைப்பாக உருவெடுக்க வகை செய்தது என்றனர்.  சாதியமைப்புதான் பக்குவமற்ற அந்த உழைப்புப் பிரிவினையை ஏற்படுத்தியது என்னும் கருத்துமுதல்வாத நம்பிக்கையை அவர்கள் விமர்சனம் செய்தனர்3 .  இவ்வாறாக மார்க்ஸைப் பொறுத்தவரை (1846:158), சாதியப் படிநிலை ஆட்சி என்பதும் குறிப்பிட்ட வகையான உழைப்புப் பிரிவினையே4. வேறு சொற்களில் சொல்வதானால், “உழைப்புப் பிரிவினையே சாதியை உருவாக்கியது” (மார்க்ஸ் 1846-47: 114). இருப்பினும், இந்தக் குறிப்பிட்ட உழைப்புப் பிரிவினை பரம்பரை உரிமை’ என்னும் வகையில் உள்ளது (மார்க்ஸ் 1853b: 497)5.

மார்க்ஸைப் பொறுத்தவரை (1867:321), முந்தைய சமுதாயங்கள் தொழில்களைப் பரம்பரையாக்கி, சாதிகளாக அவற்றை உறைந்து இறுகச் செய்யும்’ (இந்தியாவைப் போல்) அல்லது கைவினைச் சங்கங்களாக சமைந்து கெட்டிப்படச் செய்யும் (எகிப்தைப் போல்) போக்கைக் கொண்டிருந்தன6. சாதியமைப்பின் கீழ் குறிப்பிட்ட தீர்மானகரமான சட்டதிட்டங்களுக்குஏற்ப உழைப்புப் பிரிவினை நிலவியது என்கிறார் மார்க்ஸ். இந்த சட்டங்களை சட்டம் இயற்றுபவர் நிறுவவில்லைஎன்றவர், கூடுதலாக, பொருளாயத அடிப்படையிலேயே இந்நிலைமைகள் தோன்றின என்றும், அவை சட்ட நிலைக்கு உயர்த்தப்பட்டன என்றும் கூறுகிறார்7.  பின்னர் அந்த சட்டமானது தொழிலை ஒரு மரபார்ந்த உரிமையாக்கி, சாதியமைப்பாக நிலைநாட்டப்படுகின்றன8. மார்க்ஸைப் பொறுத்தவரை, சமூகமானது குறிப்பிட்டளவு வளர்ச்சியை எட்டிய பின்னரே சாதிகள் மரபு வழியிலான சட்டநிலையை எட்டியது9.

https://saavinudhadugal.blogspot.com/2017/08/blog-post.html

சாதியமைப்பு பற்றிய மார்க்ஸின் கருத்துரு*:


(சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்: தொடரும் விவாதம், பக். 211)

********


சில குறிப்பிட்ட அசுத்தமான பழக்கங்களால் உறவாடுவதற்கு தகுதியற்றவர்களாக தாழ்த்தப்பட்ட மக்கள் கருதப்படுகிறார்கள். இதுவே ’மேல்’ சாதியினர் சுமத்தும் குற்றம். அதாவது அவர்கள் இறந்த விலங்கின் இறைச்சி உண்ணுகிறார்கள், அதனால் அவர்கள் அசுத்தமானவர்கள்... [ஆனால்], கொலாபா மற்றும் ரத்னகிரி மாவட்டங்களில் ஒட்டுமொத்த மஹர் சாதியும், இறந்த விலங்கின் இறைச்சியை உண்ணும் பழக்கத்தைக் கைவிட்டுவிட்டது, ஆனால் அவர்களின் துன்பமும், சமூக ஒடுக்குமுறையும் தொடரத்தான் செய்கிறது. அதைப் பேசக்கூட முடியாது. அவர்கள் மீதுபொருளாதாரத் தடை மற்றும் சமூக ஒதுக்கலும் நிகழ்கிறது. காலம் காலமாக அவர்கள் பயிரிட்டு வந்த நிலங்கள் சாதி இந்து நிலப்பிரபுக்களால் பறிக்கப்பட்டுவிட்டன. மீண்டும் அசுத்தப் பணிக்கு அவர்கள் திரும்ப வேண்டும் என்பதற்காக எல்லாவிதமான சமூக, பொருளாதார நெருக்கடிகளும் அவர்கள் மீது தொடுக்கப்படுகின்றன” (அம்பேத்கர், தொகுதி 2, பக். 484).

இந்தத் தகவல்கள் உணர்த்துவது என்ன? அது இரண்டுவிதமானச் சூழலை விளக்குகிறது:

(1) உற்பத்தி சாதனம் இல்லாததால்வறுமை’.

(2) ‘சாதிஎன்னும் வடிவத்திலானஉழைப்புப் பிரிவினையால் நிலவும்தீண்டாமை’.

இந்த இரண்டு நிலைமைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. இருந்தாலும் முடிந்தவரை அவற்றை நாம் தனித்தனியே புரிந்து கொள்ள வேண்டும்.

        (1) வறுமை: தீண்டப்படாதோர், நிலத்தையோ, உற்பத்தி சாதனத்தையோ உடைமையாகக் கொண்டிருக்கவில்லை. அப்படியே இருந்தாலும், அது சொற்பமான அளவே. மற்ற ’கீழ்’ சாதி மக்களுக்கு, மற்றும் சில ’மேல்’ சாதி மக்களுக்கும் இந்நிலை பொருந்தும். பெருமளவிலான உற்பத்திச் சாதனம் ’மேல்’ சாதியின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. துல்லியமாக, அதுவே அச்சாதியினரின் ஆயுதம்.

        (2) தீண்டாமை: விவசாயம் மட்டுமல்லாது, தெருவைச் சுத்தம் செய்தல், மலம் அள்ளுவது, இறந்த விலங்குகளைப் புதைப்பது, கழிப்பறையைச் சுத்தம் செய்வது ஆகிய பணிகளும் தீண்டப்படாதோரின் பணிகள். சமூகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் தேவையான மிகவும் அடிப்படைப் பணிகள் இவை. விவசாயம் தொடர்பான பணிகள் தீண்டப்படாதோர் மற்றும் சூத்திரர்களுக்கானவை. ஆனால், துப்புரவுப் பணி தீண்டப்படாதோருக்கு மட்டுமேயானது. துப்புரவுப் பணிகளால்தான் தீண்டாமை நிலவுகிறது என்று சொல்ல முடியாதென்றாலும், ‘தீண்டப்படாதோரே அசுத்தப் பணிகளைச் செய்கின்றனர்என்று சொல்லலாம். இதன் மூலம் நாம் வறுமை மற்றும் துப்புரவுப் பணி என்பதை தீண்டப்படாதோர் மத்தியில் மட்டுமே காண்கிறோம். இதற்குத் தீர்வுதான் என்ன?

        உழைப்புச் சுரண்டலால்வறுமைதோன்றுகிறது, எனவே உழைப்புச் சுரண்டலை ஒழிப்பதே அதற்கான தீர்வு.  சமூகத்தின் ஒவ்வொரு நபரும் உழைக்க வேண்டும். உழைப்பைச் செலுத்தாத ஒரு வர்க்கம் கூட இருக்ககூடாது என்பதே இதன் பொருள். தீண்டப்படாதோர் மட்டுமே துப்புரவுப் பணிகளைச் செய்ய நேர்வதால், கூலி முறையை ஒழிப்பதும், சுரண்டலுக்கான உறவுகளிலிருந்து எழுந்த உழைப்புப் பிரிவினையை ஒழிப்பதுமே அதற்கு தீர்வு. இதன் பொருள், ஒரு குறிப்பிட்ட பிரிவுக்கு மட்டும் துப்புரவுப் பணிகள் ஒதுக்கப்படக்கூடாது. ஒவ்வொரு ஆணும், பெண்ணும் அதைத் தன் கடமையென்று செய்ய வேண்டும். இவ்வாறாக, நாம் பழைய உழைப்புப் பிரிவினை முறையை மாற்ற வேண்டும். 

          நாம் மற்ற ’கீழ்’சாதியினரை எடுத்துக் கொண்டாலும் அவர்களிலும் இதே பிரச்சினை நிலவுகிறது: (1) வறுமை மற்றும் (2) உடல் உழைப்புக்கு மட்டுமே ஆளாதல். வறுமை என்பது உழைப்புச் சுரண்டலின் விளைவு. உடலுழைப்புக்கு மட்டுமே உள்ளாதல் என்பது பழைய உழைப்புப் பிரிவினையின் விளைவு. இங்கும், நமக்கு அதே தீர்வுதான் வழி.

          உற்பத்தி சாதனத்தின் பொருளாதாரப் பெயர்சொத்து. இது நிலம் மற்றும் இதர வளங்களைக் குறிக்கிறது.

          சாராம்சத்தில் சொத்து இரு வகைப்படும்: 1. தன் சொந்த உழைப்பை அடிப்படையாகக் கொண்ட சொத்து; 2. சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட சொத்து.

          (1) தன் சொந்த உழைப்பினால் கிட்டிய சொத்து: உதாரணத்திற்கு, ஒரு குடும்பத்திடம் 4 ஏக்கர் விவசாய நிலமிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நிலமிருப்பதாலேயே பயிர் விளைவதில்லை. அதற்குப் பல வகையான உழைப்பைச் செலுத்த வேண்டும். நிலத்தில் பயிர்விளைவிக்க அக்குடும்பத்தில் உள்ள ஆணும் பெண்ணும் பலவிதமான உழைப்பைச் செலுத்துகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் கிடைத்த பயிரின் ஒரு பகுதியை விற்று, மற்றவர்களிடமிருந்து தமது வாழ்விற்குத் தேவையான பொருட்களை வாங்கி வாழ்கிறார்கள் என்றால், அவர்கள் தங்கள் சொந்த உழைப்பில் வாழ்கிறார்கள் என்று பொருள்.  இங்கு, மற்றஉழைப்பாளிகளைபணிக்கமர்த்தும் அவசியம் வரவில்லை. அதனால் இங்குஎஜமானர், உழைப்பாளிஉறவு இல்லை. இந்தக் குடும்பத்திற்கு 100 ஏக்கர் நிலங்கள் சொந்தமாக இருப்பின், தங்களுடைய சொந்த உழைப்பைக் கொண்டு ஒட்டு மொத்த நிலத்தையும் அக்குடும்பத்தால் உழ முடியாது. வேறு சொற்களில் சொல்வதானல், ஒவ்வொரு குடும்பமும் தம்மால் உழைக்கக்கூடிய அளவுக்கான உற்பத்தி சாதனங்களை மட்டுமே உடைமையாகக் கொண்டிருக்க வேண்டும். தன்னுடைய உழைப்பின் ஒரு பகுதி மற்றவற்களுக்குச் செல்லவில்லையென்றால், ஒருவர்ஏழ்மையில்வாழும் நிலை ஏற்படாது. அதேபோல், மற்றவரின் உழைப்பின் பகுதி தமக்குக் கிடைக்கவில்லையென்றால் ஒருவர்செல்வத்தைப்பெற முடியாது. ஒவ்வொரு மனிதரும் தமது சொந்த உழைப்பால் வாழும் அமைப்பில் ஏழ்மையோ, செல்வமோ நிலவாது என்பதே இதன் பொருள். அத்தகையச் சூழலில், வாழ்க்கை இயல்பாக இருக்கும் ஏனென்றால், வாழ்வின் தேவைகள் நிறைவேறப்பட்டு அங்கு தட்டுப்பாடோ, கூடுதலோ இருக்காது. எல்லாக் குடும்பங்களும் இதேபோல் வாழ்கின்றன என்று எடுத்துக் கொண்டால், எவரும் எஜமானரும் இல்லை, உழைப்பாளரும் இல்லை. எல்லா மனிதர்களும்சமஉழைப்பு உறவில் வாழ்வர். ஒவ்வொரு மனிதரும் / குடும்பமும் தனித்தனியாக வாழும் சமூகம்தனிநபர் உற்பத்தியாளர்களின் சமூகம்’. அது, ‘தனி நபர் உற்பத்தியாளர்களின் சொத்துடைமை அமைப்புஎன்றாகும். 

          இந்த எல்லாத் தனிநபர்களும் தங்களுடைய தனிச்சொத்துக்களை ஒன்றிணைத்து, முன்னர் போலவே உழைத்தால் அதுகூட்டு உற்பத்தியாளர்களின்சமூகமாகும். வேறு சொற்களில் சொல்வதானால், அது கூட்டு உற்பத்தியாளர்களின் அமைப்பு.

          எல்லா நபர்களும் உழைப்பதால்தனிநபர் உற்பத்தி சொத்துடைமை அமைப்பிலோ அல்லது, கூட்டு உற்பத்தி சொத்துடைமை அமைப்பிலோ உழைப்புச் சுரண்டல் இருக்காது. ஒரு தனிநபர்கூட ஏழ்மையில் வாழும் நிலை ஏற்படாது. எஜமானர், உழைப்பாளி என்னும் சமமற்ற உழைப்புசார் உறவு (உற்பத்தி உறவு) நிலவாது. (அல்லது ஏற்றத்தாழ்வுடன் கூடிய உற்பத்தி உறவுகள் நிலவாது).

          (2) உழைப்புச் சுரண்டலினால் நிலவும் சொத்துடமை அமைப்பு:  இது முதலில் சொன்ன அமைப்பிலிருந்து முற்றிலும் மாறானது. இதைப் புரிந்துகொள்ள, முதலில் சொன்ன அமைப்பைத் தலைகீழாகப் போட்டால் போதுமானது. இந்த சொத்துடைமை அமைப்பில், ஒரு சிறுபான்மைக் கூட்டம் சொத்துடைமையின் பெயரால் நிலத்தையும், மற்ற உற்பத்தி சாதனங்களையும் கொண்டிருக்கும். பெரும்பான்மை நபர்களுக்கு சொத்திருக்காது. உற்பத்தி சாதனங்கள் தாமாக பொருளை உற்பத்தி செய்யாது. அந்த உற்பத்தி சாதனத்தைக் கொண்டு பலவிதமான உழைப்பைச் செலுத்தினாலே வாழ்க்கைக்குத் தேவையான பொருளீட்ட முடியும். ஆனால் இந்த அமைப்பில், உற்பத்திச் சாதனங்களைக் கொண்டிருப்போர் உழைப்பைச் செலுத்துவதில்லை. அவர்கள் எஜமானர்களாகி, உற்பத்தி சாதனங்களற்றோரை, உழைப்பாளிகளாகப் பணிக்கமர்த்துகின்றனர். அதன் பிறகு நடப்பதென்ன என்பது வெட்டவெளிச்சம். உழைப்பாளிகளின் பெருமளவிலான உழைப்பு எஜமானர் வர்க்கத்திற்கு செல்கிறது. இப்படித்தான் அந்த வர்க்கம் வாழ்கிறது. இது உழைப்புச் சுரண்டலின்றி வேறில்லை. இது பலவித அடையாளங்களின் கீழ் நடக்கிறது: ‘நிலத்திற்கு வாடகை’, ‘சொத்துக்கு’ ‘வட்டிமற்றும்இலாபம்’. ஒட்டுமொத்த சுரண்டலின் இரகசியமும், இந்த மூன்று வருவாயில் ஒளிந்திருக்கிறது: வாடகை, வட்டி மற்றும் இலாபம்.  இந்த வருவாய் மூலங்கள் ஒருவருடைய சொந்த உழைப்பால் கிட்டுவதில்லை. இந்த சொத்துடைமை முறையில், உழைக்கும் வர்க்கத்திற்கு வறுமையும், எஜமானர் வர்க்கத்திற்குச் செல்வமும் வாழ்க்கை நிலைமைகளின் அங்கங்களாகின்றன.

          இந்தச் சொத்துக்கள் அடிமை உடைமையாளர்களின் சொத்து என்பதாகவோ, முதலாளிகளின் சொத்து என்பதாகவோ, அல்லது இதே பண்புகளோடு வேறு பெயர்களைக் கொண்டதாலோ நிலவுகின்றது.

          மனித சமூகத்தின் பண்டையக் காலத்தை விட்டுவிட்டுப் பார்த்தால், இன்றுவரை நிலவும் வரலாறு முழுக்க சுரண்டல் உறவின் பல வடிவங்களையே கொண்டிருக்கிறது.

          சாதியமைப்பைஎடுத்துக் கொண்டாலும், தீண்டப்படாதோரும், சூத்திரர்களும் ’மேல்’ சாதியினருக்குப் பணி செய்யும் உழைப்பாளிகள். இந்தப் பிரிவு செலுத்தும் உழைப்பு முழுவதும் உடலுழைப்பே. ’மேல்’ சாதியின் ஒரு பிரிவு உடலுழைப்பைச் செலுத்தாமல், மூளை உழைப்பைச் செலுத்துகிறது. ’கீழ்’ சாதியினருக்கு மூளை உழைப்பைச் செலுத்தி பிழைக்கும் வாய்பு இல்லை.

          இதுவே அவர்களின் நிலைமை. இந்த நிலைமைகளை நாம்வறுமை’, ‘சாதிப் பாகுபாடுஎன்று பகுத்துக் காண வேண்டும்.

          வறுமைக்கானத் தீர்வுஉழைப்புச் சுரண்டலைஒழிப்பது. எல்லா மனிதரும் உழைத்து வாழ வேண்டும். சுரண்டலின் விளைவால் ஈட்டும் சொத்துடைமை அமைப்பை ஒழிக்க வேண்டும். ‘சாதியப் பாகுபாட்டிற்கானதீர்வு, சுரண்டல் நிறைந்த உழைப்புப் பிரிவினையை மாற்றி அமைக்க வேண்டும்.  ஒவ்வொரு நபரும் ஒரு குறிப்பிட்ட அளவு உடலுழைப்பையும் (அசுத்தப் பணிகள் உட்பட), குறிப்பிட்ட அளவு மூளை உழைப்பையும் செலுத்தி வாழ வேண்டும். சாதிக் கலப்புத் திருமணம் போன்ற சில மேல்மட்ட மாற்றங்களும் இந்த மாற்றத்தின் ஒரு பகுதியே.

          தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு மற்றும் வறுமை ஒழிப்பு போன்ற எல்லாப் பிரச்சினைகளையும் அம்பேத்கர் விவாதித்தார். மேலும், ‘மதம்என்பதை மனித சமூகத்தின் ஒரு இலக்காக அவர் சேர்த்துக் கொண்டார். இனி வரும் அத்தியாயங்களில் இந்தப் பிரச்சினைகளை நாம் ஆய்வு செய்ய வேண்டும்.

…. (சாதியப் பிரச்சினைக்கான தீர்வு: புத்தர் போதாது, அம்பேத்கரும் போதாது! மார்க்ஸ் அவசியத் தேவை, பக். 152 – 155)

இந்தச் சொற்களுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்தப் பொருளாதாரத்திற்கும் இரண்டு பொருள் உள்ளது. உழைப்புச் சுரண்டலை மேற்கொள்வதற்கான எல்லாவிதமான பொருளாதார உரிமைகளையும், ஒத்த உறவுகளையும் அங்கீகரிப்பதே முதல் வகையான பொருளாதாரம். அதுவே முதலாளித்துவப் பொருளாதாரம் அல்லது பூர்ஷுவா பொருளாதாரம். அதற்கு எதிரான பொருளாதாரமே இந்த உழைப்புச் சுரண்டலை எதிர்க்கிறது, பூர்ஷுவா பொருளாதாரத்தை நிராகரிக்கிறது. அதுவே மார்க்ஸியப் பொருளாதாரம் அல்லது கம்யூனிசப் பொருளாதாரம். 

          உழைப்புச் சுரண்டலை ஒழிப்பதற்கும், சமத்துவத்தை ஈட்டவும் மார்க்ஸியப் பொருளாதாரம் மூன்று விசயங்களை முதன்மையாகத் தருகிறது.

1)       ஆண் பெண் உள்ளிட்ட அனைத்து நபர்களும் உழைக்க வேண்டும். அவர்களுடைய உழைப்பே அவர்களின் வாழ்வாதாரத்திற்குப் பொருள் ஈட்டித்தர வேண்டும்.
          2)       வருமானத்தை ஈட்டித்தரும் வாடகை, வட்டி, இலாபம் மற்றும் சுரண்டல்வாதச் சொத்துரிமை ஆகியவற்றை ஒழிக்க வேண்டும்.
          3)       ஒரு நபர் உடல் உழைப்பையும், மற்றவர் மூளை உழைப்பையும் செலுத்தும் சுரண்டல்வாத உழைப்புப் பிரிவினையை ஒழிக்க வேண்டும். எல்லா ஆண்களும், பெண்களும் குறிப்பிட்ட அளவு உடல் உழைப்பு, குறிப்பிட்ட அளவு மூளை உழைப்பு செலுத்தும் புதிய வகை உழைப்புப் பிரிவினையை நிறுவ வேண்டும்.

          இந்த மாற்றங்கள் நிகழ்ந்தால் மட்டுமே, உழைப்புசார் சுரண்டல்வாத உறவுகள் சமமான உழைப்புசார் உறவுகளாகும் (உற்பத்தி உறவுகளாகும்). சுரண்டல்வாதச் சமூகம் ஒரு புதிய தன்மை கொண்ட சமூகமாக மாறும்.

          மார்க்சியம் குறித்த அறைகுறை ஞானம் உடையவர்களே அது முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் உறவு பற்றி மட்டும் பேசுகிறது, பெண்கள் உட்பட சமூகத்தின் மற்ற பிரிவுகள் குறித்துப் பேசவில்லை என்று கருதுகின்றனர். ஆனால் அது முற்றிலும் தவறானது.

          அடிமைச் சமூகக் காலத்திலிருந்து வரலாற்றில் நாம் எந்தக் காலத்தை எடுத்துக் கொண்டாலும், சமூகம் பல வர்க்கங்களாக, உட்பிரிவுகளாக பிளவுபட்டிருப்பதைக் காண முடியும்.  ஆனால் அந்த வர்க்கங்களும், உட்பிரிவுகளும் அடிப்படையில் இரண்டு வர்க்கங்களாகச் சுருங்கி நிற்கும், அவை: உழைக்கும் வர்க்கம், உழைக்காத வர்க்கம். மூன்றாவதாக ஒரு வர்க்கம் ஒரு பகுதி தனது உழைப்பிலும், ஒரு பகுதி சுரண்டலிலும் வாழ்ந்தாலும், அந்த உட்-பிரிவுகளில் ஒரு பகுதியை நாம் உழைக்கும் வர்க்கமெனவும், ஒரு பகுதியை உழைக்காத வர்க்கம் எனவும் வகுத்துக் கொள்ளலாம். மொத்தத்தில் ஒட்டுமொத்த மக்கள் தொகையும் - ஆண், பெண் மற்றும் முதியவர் அனைவரும் இந்த இரண்டு வர்க்கத்தின் கீழ் வருபவரே. இந்த இரண்டு வர்க்கம் பற்றிய குறிப்பு ஒட்டு மொத்த சமூகத்தையும் குறிப்பதாகும்.

          எஜமானர் என்ற சொல்லை நாம் பயன்படுத்தினால், அவர் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் அந்த பதத்தின் கீழ் வருவர். உழைப்பாளர் என்ற சொல்லை பயன்படுத்தினால், அவர் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் அந்த பதத்தின் கீழ் வருவர். இந்த இரண்டும் சேர்ந்து முழுச் சமூகமாகிறது.

           உற்பத்தி ஈட்டும் உழைப்பு, உற்பத்தி ஈட்டாத உழைப்பு மற்றும் குடும்ப உழைப்பு என்று வெவ்வேறு வகையான உழைப்புசார் உறவுகள் இந்த சமூகத்தில் பின்னிப் பிணைந்திருக்கின்றன.

          ஆண், பெண், இளைஞர் என எல்லாரும் ஏதோ ஒரு வர்க்கம் அல்லது ஒரு வர்க்கப் பிரிவின் கீழே வருவர். உழைப்புசார் உறவில் ஒருவர் பெறும் இடமும், வாழ்வாதாரத்திற்கான அவரது பொருளீட்டும் முறையும் வர்க்கத்தில் அல்லது பிரிவில் அவரது இடத்தைத் தீர்மானிக்கிறது.

          பிச்சைக்காரர்கள், சிறைக் கைதிகள், அனாதை ஆசிரமத்தில் வசிப்போர், மத நிறுவன ஊழியர்கள், ரௌடிகள் போன்றோரும் தங்களது வருமான ஆதாரத்தைப் பொறுத்து ஒரு ஏதோ ஒரு வர்க்கத்தின் கீழ் வருவர். இந்த உதாரணங்களில், மத நிறுவனங்களில் வாழ்வோர் தவிர மற்ற அனைவரும் தொழிலாளர் வர்க்கத்தைச் சார்ந்தவர்கள். விலை மாதர்களும் ஒரு தொழில் செய்து வாழ்கின்றனர் என்றாலும், அதை உழைப்பு என்று சொல்ல முடியாது. விலைமாதர்கள், ரௌடிகள் உழைப்பாளிகள் அல்லர்.

          இந்த உழைப்புசார் உறவுகள் (உற்பத்தி உறவுகள்) அனைத்தையும் நாம் புரிந்து கொண்டால், சமூகத்தின் ஒட்டுமொத்த மக்கள் குறித்தும் மார்க்சியம் பேசுகிறது என்பது விளங்கும். 

(சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு: புத்தர் போதாது! அம்பேத்கர் போதாது! மார்க்ஸ் அவசியத் தேவை, பக். 189 – 190)

சிறு குறிப்பு: இந்நூல் தான் நான் மொழிபெயர்த்த முதல் நூல். ஆகவே மொழிபெயர்ப்புக்கு நேர்மையாக இருப்பது என்னும் புரிதலின் காரணமாக lower, upper என்பதை அப்படியே மேல், கீழ் என்று மொழிபெயர்த்திருந்தேன் (Oppressed, Depressed என்றால் மட்டுமே ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என்று பொருள். அம்பேத்கர் அவர்களின் எழுத்துகளை மொழிபெயர்த்திருப்பவர்களும் இத்தகைய தவறுகளை செய்துள்ளனர்). பின்னர் தோழர் அரங்க. குணசேகரன் அவர்கள் அது தவறு என்பதை சுட்டிக்காட்டி, குறைந்தபட்சம் அடைப்புகுறிகளுக்குள் நீங்கள் போட்டிருக்கலாம் என்றார். ஆனால் அதற்குள் நூல் வெளி வந்துவிட்டது.

ஆகவே இப்போது நான் அதையே மேற்கோள் காட்டியிருப்பதால் மொழிபெயர்ப்பை மாற்றுவது நேர்மையாக இருக்காது. ஆனால் அது அதிகாரச் சொற்கள் என்பதால் அடைப்புக்குறியை மட்டும் சேர்த்துள்ளேன்.

மொழிபெயர்ப்பு தவறுக்காக மன்னிப்பு வேண்டுகிறேன்.