Feb 10, 2023

தீட்டுக் கருத்தியலும், தொடை அறுப்பும்!

 


நான் 9ஆவது படிக்கும் போது வயதுக்கு வந்தேன்! 14-15 வயசு! 1990ஆ இருக்கும்.

எல்லா வீட்லையும் சொல்ற மாதிரி “தீட்டு”ன்னு தான் எங்க வீட்லையும் சொன்னாங்க! சடங்கெல்லாம் வச்சுக்கல! தனியா பால்கெனில படுக்க சொல்வாங்க! பாய், தலையனை எல்லாம் தனியா! (என் தோழிகளுக்கும் இதே நிலைமைதான்!)

 மேல பட்றாத, சாமி முன்னாடி வந்துடாத, சமையல்கட்டுக்கு வந்துடாத! சாமிக்கு மாலை போட்டவங்க முன்னாடி வந்துடாத… தலைக்கு தண்ணிய ஊத்து.. குளிக்கும் போது துணியெல்லாம் நனைச்சுடு! தீட்டு தீட்டு தீட்டு!

இதையெல்லாம் விடக் கொடுமை! உதிரப்போக்கை உறிஞ்சப் பயன்படுத்தும் துணி! ஆம்! தூமைத் துணி! எங்க காலத்துல துணிதாங்க! ஸ்டேஃப்ரீன்னு ஒண்ணு இருந்துச்சு.. விஸ்பர் அப்புறம் தான் வந்துச்சு! ஆனா அதெல்லாம் வாங்கித்தர அளவுக்கு விழிப்புணர்வும் இல்ல! செலவு பண்ன மனசில்ல! பிற்காலத்தில் அதற்கு மாறினேன்!

 அயலில ப்ராவால வர காயத்தை இயக்குனர் பதிவு பண்ணி இருந்தார். அதேமாதிரி தூமைத் துணியால பட்ட அவஸ்தைகளை இப்ப நினைச்சாலும் கண்ணுல ரத்தம் வருது!

 தூமைத் துணியை துவைச்சு துவைச்சு பயன்படுத்திக்கனும்.. வெளில தெரியுற மாதிரி காயப்போடக் கூடாது (அயலியில் இதும் உள்ளது)! அந்தத் துணி ரத்தம் உறிஞ்சு உறிஞ்சி எப்படி இருக்கும்! கரடுமுரடா… கத்தி மாதிரி தொடைகளை அறுக்கும்! மாசா மாசம் இப்படித்தான்! மாதவிடாய்னாலே பயம் தான் வரும்.. ஐயோ தொடையை அறுக்கப் போகுதே! நடக்க முடியாதே! இன்னொரு பக்கம் இடுப்பு வலி!

 தொடக்ககால மாதவிடாயில் உதிரம் கெட்டி கெட்டியாகவும் போகும்! அந்த துணி எப்படித் தாங்கும்? அதுலையும் பத்தாம் வகுப்புக்கு தயாராகுற பரீட்சை நேரத்துல… ப்பா இப்ப நினைச்சாலும் ரணமா இருக்கு!

 துணி எம்புட்டு ரத்தம் தாங்கும்.. பரீட்சை எழுதிட்டு இருக்கும் போது முழுசா ஈரமாகிடும்.. எந்திரிச்சு பேப்பர் வேற கேக்கனும். நான் படிச்சது Co-Ed! ரத்தக் கறை uniform ல படிஞ்சிருச்சுன்னு தெரியும்.. என்ன செய்றதுன்னு அழுகையா வரும். வேற வழியில்லாம எந்திரிச்சு பேப்பர் கேக்குறதும், துணியை மாத்திட்டு வரேன்னு போறதுமா இருந்திருக்கேன். அதுலையும் எங்க பள்ளிக்கூட கழிப்பறை இருக்கே… உள்ள போய்ட்டு உசுரோட வெளிய வரதே அதிர்ஷ்டம்.

இதுல துணி தொடை இடுக்குகளை அறுத்து அறுத்து.. தடிச்சு.. நடக்க முடியாம நடந்து! தேங்காய் எண்ணெயா தடவி… ஒரு வழியா பொறவு நாப்கினுக்கு மாற முடிஞ்சுது.

 அதேமாதிரி ஒரு கட்டத்துக்கு மேல! கல்லூரி படிக்க ஆரம்பிச்சப்புறம்.. அப்ப நான் பகுதி நேர வேலைக்கும் போக ஆரம்பிச்சுட்டேன்… ”என்னா இது நம்ம உடம்பை தீட்டு தீட்டுன்னு சொல்றாங்கன்னு ஒரு கோவம் வந்துச்சு! பெரியார்லாம் அப்ப தெரியாதுங்க! நான் தனியால்லாம் படுக்க முடியாது. என் படுக்கைல தான் படுப்பேன்னு “உள்ள வர ஆரம்பிச்சேன்”! ஆரம்பத்துல தனியா பாய்ல படுத்துக்கன்னு விட்டாங்க.. அப்புறம் அவங்களும் மொத்தமா விட்டுட்டாங்க! பாவம்! வீட்டாளுங்கள சொல்லி என்ன இருக்கு! அவங்களை அப்படித்தான மிரட்டி வச்சுருக்காங்க..

 பொம்பளைங்க உடம்பாலையும், மனசாலையும் எத்தனை வலியையும், அவமானங்களையும், கட்டுப்பாடுகளையும், பாகுபாட்டையும் தாங்கிக்கிட்டு இருக்கோம்! அதை உணர்ந்தப்புறம் வெளிய வந்து பேசுனா... முட்டாள் கூட்டமும், ஆணாதிக்கம், சாதி, மத வெறி புடிச்ச கூட்டமும் “நீ ஊர் பொறுக்கத்தான இப்படி பேசிட்டு திரியுறன்னும்”! அதுக்கும் ஆப்பு வைக்குற அளவுக்கு நம்ம தலைவருங்க நமக்கு கத்துக்கொடுத்திருக்காங்க!

 பார்ப்பன வெறுப்பு, கடவுள் மறுப்பு, ஆணாதிக்க சமூகம் ஒழியனுங்குற கோவம்லாம் இந்த மாதிரி “ஒதுக்கல்ல.. அவமானத்தால.. பாகுபாட்டுல” இருந்துதான் வந்துச்சு.. என் உடம்பை தீட்டு, அழுக்கு.. நீ வேறன்னு சொல்லி சொல்லி… உள்ள தேங்கிக் கிடந்த கோவம், கேள்விகளுக்கும், சமூகம் ஏன் இப்படி இருக்குங்குற காரணம் என்னங்குறதையும் பின்னாடி தெரிஞ்சுக்கிட்டேன். அதுக்கு நான் வசுமித்ரவுக்கு தான் நன்றி சொல்லனும்…

 பொம்பளையும், தலித்தும் ஒண்ணுதான்.. அதுலையும் உழைக்குற கூட்டம்தான் எல்லா கஷ்டங்களையும் அனுபவிக்குதுங்குற புரிதல் மார்க்சியம் படிச்சு வந்துச்சு.. அந்த புரிதல்ல நாம இயங்குனாலும் இங்க ஒரு சிலர் தங்களோட பிழைப்புக்காக நமக்கு பல முத்திரைகளை குத்துவாங்க! இன்னார் வலி இன்னாருக்கு தான் தெரியும்னு! ஆனா பாருங்க பொம்பளைங்க வலிய பெருசா பேசுனவங்கல்லாம் (பெரும்பாலும்) ஆம்பிளைங்க! அதே மாதிரி தான் எந்த ஒடுக்குமுறை குறித்தும் யாரும் உணர்ந்து empathize செய்ய முடியும்… உழைக்குற வர்க்கமா இருக்குறதால! இதுலையும் கூட வர்க்க உணர்வும் தானா வந்துடுறதுல்ல! அதுக்கும் இங்க அரசியல்மயப்படுத்த வேண்டி இருக்கு!

 கேள்விகளும்.. விழிப்புணர்வும் தான் ஒருத்தருக்கு அடையாளமா இருக்குமே ஒழிய.. (தங்களுக்கு புடிச்சவங்கள விமர்சனம் பண்றதாலையே) பொறப்பை வச்சு ஒருத்தரை ஓரம் கட்ட நினைக்குறதும் பார்ப்பனியம்தேன்!

 அயலி பலவிதமான உரையாடல்களை நிகழ்த்த வைக்கிறது!

 இணையத் தொடர்கள் வரிசையில் #அயலி நிச்சயம் ஒரு மைல்கல்!

 #ayaliwebseries #Ayali effect on society is hopeful ❤️

 

மகளே தாயுமானவள் ❤️

 


என் வாழ்நாளில் மிக முக்கியமான, பொக்கிஷம் என்று நான் கருதும் பதிவிது.

 என் மகள் வருணா எனக்கொரு புத்தகத்தையும், ஒரு பாடலையும் இன்று பரிசளித்தாள். அந்த புத்தகத்தின் பெயர்: நச்சியல்பான பெற்றோர்! தலைமுறை தலைமுறையாக பெற்றோரால் அடைந்த பாதிப்புகளைக் கடந்து உங்கள் வாழ்வை மீட்டெடுத்தல். (ஆங்கில தலைப்பின் மொழிபெயர்ப்பாக நான் கொடுத்துள்ளது).

 பாடல்:  #londonssong today  by Matt Hartke

 என்னது! நச்சியல்பான பெற்றோரா! என்று தலைப்பைப் பார்த்து அப்படியென்றால் ”நீ ஒரு நச்சுத்தன்மை வாய்ந்த தாயா” என்று நினைத்துவிடாதீர்கள்!

 இல்லை! நான் என் வாழ்வை மீட்டெடுக்க என் மகள் எனக்கு உதவுகிறாள்! தன் தாயின் துன்பகரமான வாழ்விற்கான (பகுதியளவு) காரணங்களை அறிந்த ஒரு மகள் அன்பையும், காயங்கள் ஆற்றும் அருமருந்தையும் தருகிறாள். இந்த புத்தகத்தை அவள் 3 முறை படித்துவிட்டாளாம்!

 நச்சியல்பான பிள்ளை வளர்ப்பு என்பது வளையம் போன்றது! பிற்போக்குத்தனமான சமூகத்தின் விளைவான ஒரு சங்கிலித் தொடர்.. நமது பெற்றோர் அதற்கு பலியாடு! அவர்களின் பெற்றோரும் அதற்கு பலியாடு!

 எனது குழந்தைப் பருவம் ஒரு கொடுங்கனவு! குடும்ப வன்முறை, உறவினரின் பாலியல் துன்புறுத்தல் என்று கொடுமைகளால் மட்டுமே நிறைந்தது. என் தாய் எந்த வகையிலும் நச்சியல்பானவள் அல்ல! பாவம்! அவளும் ஆணாதிக்க குடும்ப (வன்முறை) அமைப்பின் பலியாடே!

 மிகவும் மோசமான குழந்தைப் பருவ காலத்து பாதிப்பினால் நாமே அறியாமல் ஏதேதோ ரணங்கள், மன அழுத்தம், கவலைகள், மனப்பதற்றம் ஆகியவை நமக்குள் தேங்கிக் கிடக்கும். உரிய நேரத்தில் அதனை ஆற்றாது தவற விட்டுவிடுகிறோம்.  எனக்குள் சமீப காலமாக அவை மேலெழத் தொடங்கியுள்ளன! ஆம் அந்த நடுக்கத்தை அவ்வப்போது உடலில் உணர்கிறேன்! ஏனென்றால் அத்தனை காயங்களையும் மனம் மட்டுமல்ல உடலும் தான் தாங்கிக் கொள்கிறது!

 இது பற்றிய பேச்சு அத்தனை எளிமையானதல்ல!

 எங்கள் வாழ்க்கை குறித்து நானும் எனது மகளும் நிறைய பேசுவோம்! மன நலன் குறித்துப் பேச நாங்கள் தயங்குவதே இல்லை! எதையுமே பேசுவதை தவிர்ப்பதுமில்லை! ஏனென்றால், காயங்கள் ஆற்றும்! தலைகோதி தேற்றும் விரல்கள் அவளுக்கும் தேவைதானே! நிச்சயம் ஒவ்வொருவருக்கும் தேவை! ஆனால் இதையெல்லாம் பேசினால் நம்மை என்ன நினைப்பார்கள் என்கிற தயக்கம் அதற்கு தடை போடும்.

 எங்கள் வாழ்வை மீட்டெடுக்கும் செயல்முறையின் ஒரு பகுதியாகத்தான் என் மகள் எனக்கு இன்று இந்த புத்தகத்தையும், பாடலையும் பரிசளித்தாள். அந்த பாடல் ஒரு தந்தை தனது மகளுக்காக எழுதியது. அதைக் கேட்ட உடன் அவள் என்னைத்தான் அதில் கண்டதாக கூறினாள். இதை விடப் பேரானந்தம் என்ன இருக்க முடியும்?

 மகளே தாயுமானவள் ❤️

 இந்த புத்தகம் குறித்து படிக்கப் படிக்க பகிர்வேன்!

 உங்கள் தனிப்பட்ட வாழ்வையெல்லாம் ஏன் பகிர்கிறீர்கள் என்று யாரேனும் வருவீர்கள் எனில், உங்களுக்கு நான் சொல்வதெல்லாம் “தனிப்பட்டது என்று எதுவுமில்லை! அனைத்தும் அரசியல்மயமானதே! சமூகமயமாக்கல் என்பது புறத்தால் நிகழ்வது! அது அக பாதிப்பை ஏற்படுத்துகிறது! எனவே தனிமனித பாதிப்புகளுக்கு ஒரு பொதுத்தன்மை உண்டு. அதிலிருந்து மீளத் தவிக்கும் மனங்களின் துடிப்பு எனக்கு கேட்டுக்கொண்டே இருக்கிறது.

 அதோடு சக மனிதர்களின் வாழ்வை மேம்படுத்த இது ஓர் அறிவார்ந்த பகிர்வு!

 #kotravai shares love!

#momdaughterlove

Feb 8, 2023

வலுத்ததே வாழும் என்பது மனிதர்களுக்குப் பொருந்தாது

 


”வலுத்ததே வாழும் என்பது மனிதர்களுக்குப் பொருந்தாது” – கொற்றவை

ஒன்றை ஒன்று அடித்து வாழ்வது இயற்கையே என்று விலங்குகளை உதாரணமாகக் காட்டி மனிதர்கள் மற்ற மனிதர்களை ஏய்த்தும், சுரண்டியும் பிழைத்து வாழ்வதை பலர் நியாயபடுத்துகிறார்கள்.  இது மிகவும் தவறான ஒப்பீடு! தவறான நியாயவாதம்!

இயற்கையில் ஒவ்வொன்றும் மாறுபட்டது! மனிதர்கள் விலங்கினின்று மாறுபட்டவர்கள். விலங்கு போல் நடந்துகொள்ளாதே என்றும், விலங்கே அப்படித்தானே அடித்து வாழ்கிறது என்றும் தேவைக்கேற்ப மனிதர்கள் நியாயங்களை கற்பித்துக்கொள்கிறார்கள்.

ஆம்! விலங்கு அடித்து உண்டு வாழ்கிறது ஏனென்றால் அதற்கு உழைக்கத் தெரியாது! சிந்திக்கத் தெரியாது! உழைப்பும், இயற்கையை தன் வயப்படுத்திக்கொள்ள பொருள் தேவையின் அடிப்படையிலான மனித சமூக சிந்தனை இயக்கமும், அதன் விளைவாக அவர்கள் உண்டாக்கும் உழைப்புக் கருவி உள்ளிட்ட பொருட்களும், ஒழுங்கமைக்கும் ஏற்பாடுகளும் தான் அனைத்து உயிரினங்களில் இருந்தும் மனிதனை வேறுபடுத்துகிறது.

ஆக! மனிதர்கள் உழைக்கத் தெரிந்தவர்கள்! அந்த உழைப்பு என்பது இயற்கையை பயன்படுத்திக்கொள்வதன் மூலம் நிகழ்கிறது. இயற்கை என்பது பொதுச் சொத்து! அதை சில தனி மனிதர்கள் ”மூலதனம்” என்னும் பெயரில் கையகப்படுத்திக்கொண்டு மற்ற மனிதர்களை உழைக்கச் செய்து, அந்த உழைப்பின் பலனை அபகரித்து வாழ்கின்றனர். விலங்குகள் தம் பசிக்கு இயற்கையை சார்ந்திருக்கும் முறையிலிருந்து மாறி மனிதர்கள் உழைப்பு மற்றும் சிந்தனை மூலம் வெகுவாக முன்னேறிவிட்டார்கள்.

உழைப்பு என்பது கூட்டுச் சமூக செயல்பாடு. அதன் பலன்களும் கூட்டாகத்தான் பிரித்தாளப்பட வேண்டுமே ஒழிய “இருக்குறவன் ஆள்றான்! அனுபவிக்குறான்” என்று வியாக்கியானம் செய்து நம்மை அத்தகைய சுரண்டலை ஏற்றுக்கொள்ள பழக்கிவிட்டார்கள்!

“ஒருத்தண்ட இருக்குறது ஏன் அடுத்தவன் கிட்ட இல்ல” என்று சிந்திப்பதில் தான் சமூக நீதியின் தொடக்கப்புள்ளி அடங்கியுள்ளது! சொத்து / வளம் / மூலதனம் / உற்பத்திக் கருவிகள் அதன் மீதான அதிகாரம் எப்படி ஒரு சிலருக்கு வாய்க்கப் பெற்றது என்பதையெல்லாம் புரிந்துகொள்ள #மார்க்சியம் படிங்க.

புலினா மானை வேட்டையாடத்தாம்லே செய்யும்” னு எவனாச்சும் / எவளாச்சும் சொன்னா – “எலே அது புலிலே… நீ மனுசன்… உனக்குத்தான் உழைச்சு சாப்புட கை, கால் இருக்குல” என்பதே பதில்…

”கடுமையா உழைச்சு தான வாழ்றோம், ஆனா என்னத்தக் கண்டோம்! அடிச்சு புடுங்கித் திங்குறவனெல்லாம் நல்லாருக்கான்!” என்று நொந்துகொள்வோமெனில்… அந்த அநியாயத்தை நிறுத்த வேண்டுமே அல்லாது, விலங்கோடு ஒப்பிட்டு நியாயப்படுத்துவது அறிவுடைமை ஆகாது.

இதுல வேற பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கும் புலி, மானுன்னு கிளம்பி வராய்ங்க! “புலிக்கும் உனக்கும் என்னவே சம்பந்தம்”! புலி வாழ்ற மாதிரியா நீ வாழ்ற?

இதெல்லாம் விளங்கனும்னா குறைந்தபட்சம் இந்த புத்தகத்தையாச்சும் வாசிக்கவும்: "மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்திரம்" - எங்கெல்ஸ்

அதிகாரம், வல்லுறவு, சுரண்டல் இவற்றையெல்லாம் எதிர்க்கத்தான் மனிதனுக்கு அறிவு தேவை, மேற்சொன்ன முட்டாள் உதாரணங்களை சொல்லி அநீதிகளை நியாயப்படுத்துபவர்கள் மனிதர்களே அல்ல!

 

Jan 26, 2023

சங்கிகளின் உளறல்களுக்கு பதில் 1

 


1.    கலைஞர் இப்படி பேசியது உண்மையா என்று எனக்கு தெரியாது! உண்மையாக இருக்கும் பட்சத்தில் இது தவறு! ஆணாதிக்கப் பேச்சுதான். அரசியலில் எதிரிகளை தாக்குகிறேன் என்று ஆணாதிக்கத் திமிரோடு பேசறதுதான கெத்துன்னு எல்லா ”மைய” கட்சிகளும் நினைக்குறாங்க! முதலில் நான் திமுக ஆளுமில்லை என்பதை தெளிவுபடுத்திக்கொள்ளவும்!

 

திமுக ஆதரவு என்பது தற்போதைய மதவாத ஃபாசிச பா.ஜ.க. / அதிமுக கூட்டணிக்கு எதிராக தேவைப்படும் சமூக ஜனநாயக ஆதரவு என்னும் அளவில்தான்! இதுதான் கம்யூனிஸ்டுகளின் அணுகுமுறை! கூட்டணிக்கு காரணமும் அதுவே!

 

2.    கலைஞர் மட்டுமில்லை கார்ல் மார்க்ஸே தவறாக பேசினால் தவறு என்று விமர்சிக்கும் #துணிவும் #நேர்மையும் எங்க கிட்ட இருக்கு! உங்க தலைவர் அண்னாமலை தொடங்கி மோடிஜியின் தவறுகளை விமர்சிக்கும் துணிவும் நேர்மையும் உங்க கிட்ட இருக்கா?  


        மேற்சொன்ன துணுக்கை பற்றி விசாரித்த போது அது பொய் செய்தி என்றும் இந்திரா காந்திக்கு அன்று அடிபடவே இல்லை என்றும் தோழர் அருண் தெளிவுபடுத்தியுள்ளார்.


 


Now Sanghis have to provide the proof

nn

       பெரியார், அம்பேத்கர் போதாமைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளின் சில அணுகுமுறைகள் குறித்த விமர்சனப் பேச்செல்லாம் பார்க்குறதில்ல போல! என்னை தற்காக்கும் பேச்சல்ல இது! மார்க்சியம் என்பதே விமர்சனத்தின் மூலம் இயங்குவதுதான்! அதுபற்றி தெரியாமல் வடை சுடக் கூடாது!

 அவ்வளவு அரசியல் நேர்மை உள்ளவங்க நீங்கன்னா முதல்ல உங்க தலைவரை விமர்சனம் பண்ணி எழுதுங்க!

 

3.    காயத்ரி மேடம் சக்தி யாத்திரை போய் நீதி கேக்குற அளவுக்குல்ல இருக்கு உங்க கட்சில பெண்களோட நிலைமை! ஐஸ்வர்யா ஒரு பெண்ணாக அவர் கருத்தை கூறினால் அதற்கு எப்பேற்பட்ட ஆபாச பேச்சுகளை பேசுகிறீர்கள்? அவரது தொழிலை கூத்தாடி, நடிக்குற வேலைய மட்டும் பாரு, எங்களுக்கு ஆலோசனை சொல்லாத என்று பேசுமளவுக்கு உங்கள் ஆதரவாளர்கள் திமிர் பிடித்து இருக்கிறார்கள் என்றால், உங்கள் கட்சி நடிகர் நடிகைகளை ஏன் பிரச்சாரத்திற்கு அழைக்கிறது?  ஸ்மிருதி இரானி நடிகை தானே? அவர் ஏன் பதிவியில் இருக்கிறார் என்று கேட்கலாமா?

 4.    ஒரு குறிப்பிட்ட தொழிலை கேவலமாக பேசுவதென்பது பார்ப்பனிய புத்தி! அந்த வழி வந்தவர்கள் அப்படித்தானே இருப்பீர்கள்!

 5.    அடுத்ததாக, மசூதில பெண்களை உள்ள விடல இதை ஏன் கேக்க மாட்றீங்க? இதுவும அரதப் பழசான கேள்வி! பல முறை பதில் சொல்லியாச்சு இந்துமத வெறியர்களே!

 ஜனநாயக சக்திகளின் முதல் எதிர்ப்பென்பது அந்தந்த நாட்டின் ஆளும் வர்க்க அதிகார மையங்களை நோக்கித்தான்! இந்த நாட்டில் அது இந்து மதம், பார்ப்பனியம் என்று இருக்கிறது! இஸ்லாமிய, கிறித்தவ, யூத நாடுகளில் அந்தந்த மதங்கள் அதிகார்த்தில் இருக்கையில், அந்தந்த மதங்களில் ‘பிறந்ததாக’ இருப்பவர்கள் முதலில் தங்கள் மத அதிகாரத்தை தான் கேள்வி கேட்க வேண்டும். அதுதான் ஜனநாயகம்! ஏனென்றால் அந்தந்த நாடுகளில் ஆட்சியில் இருக்கும் மதங்களைத் தவிர மற்றவை ‘சிறுபான்மையினர்’ அவர்கள் மீதான ஒடுக்குமுறையை கேள்வி கேட்பது தான் சமூக நீதி!

 ஆளும் வர்க்க ஒடுக்குமுறையை எதிர்ப்பதே அறம்!  

 அதேவேளை மதம் என்று வரும்போது ஒரு மதத்தினர் இன்னோர் மதத்தை தாக்கிப் பேசுவது மதக் கலவரத்திற்கே வழிவகுக்கும். சட்டரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும், சமூக நீதி அரசியல் ரீதியாகவும் அதை செய்வது தவறு மட்டுமின்றி… சமத்துவ அரசியல் புரிதலற்ற ஆர்வக்கோளாறு நடுநிலைவாதம்!  கடவுள் மறுப்பாளர்கள் ஒட்டுமொத்தமாக மதம் என்பதே ஒடுக்குமுறை கருவிதான் என்று பேசுவதையும் சேர்த்து படிங்க!

 அந்தந்த மதங்களில் நிலவும் ஒடுக்குமுறையை அந்தந்த மதத்தினரே எதிர்த்து வருவதை படிப்பதில்லையா நீங்கள்? நாட்டு நடப்பு தெரியாதா?

 

சட்டை போடாம வெளிய வருவேன், ஜட்டி போடாம வெளிய வருவேன் என்று வாய் சவடால் விடும் நேரம்…. ஹிஜாப் தொடங்கி கல்வி கற்க தடை என்பது வரை இஸ்லாமியப் பெண்கள் நடத்தி வரும் போராட்டங்கள் குறித்து தேடிப் படிங்கள்!  கார் ஓட்டக் கூடாது என்று சவுதியில் நிலவிய தடைக்கு எதிராக நடந்த போராட்டங்கள் குறித்து படிக்கவும்!

 

அதேபோல் இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேல் ஜனநாயக சக்திகள் நடத்திய போராட்டங்கள் குறித்துப் படிக்கவும்.

 

சமூக ஜனநாயகம் என்பது மானுட நேசம்! ஒடுக்கப்படும் மக்கள் பக்கம் நிற்பதே நீதி! மத வெறி, சாதி வெறி, ஆணாதிக்க வெறி, பண வெறி, அதிகார வெறி உள்ளவர்களுக்கு அவை தம் கட்சியை, அரசியலை இருப்பை வளர்க்கத் தேவைப்படும் “கொள்கைகள்”!

 

உன் வீட்ல குப்பைய வச்சிருக்கியேன்னு கேட்டா! பக்கத்து வீடு கூட தான் நாறுதுன்னு பேச எதுக்கு அறிவு?

கம்யூனிஸ்ட் அமைப்புகள்ல விமர்சனம், சுய விமர்சனம் என்னும் அணுகுமுறை, ஜனநாயகம் எல்லாம் உண்டு! கட்சித் தலைவராக இருந்தாலும் உட்கட்சி கூட்டங்களில் / அல்லது கட்சியில் இல்லை என்றால் தோழர் நீங்கள் இந்த விசயத்தில் இப்படி பேசியது தவறு என்று தோழமையோடு விவாதிக்கும் ஜனநாயக போக்கு உண்டு! சக கம்யூனிஸ்ட் அமைப்பு குறித்து இன்னொரு கம்யுனிஸ்ட் அமைப்பு எழுதும் விமர்சன நூல்களும் உண்டு! மீண்டும் கேட்கிறேன் உங்கள் தலைவரை, அமைப்பை விமர்சிக்கும் துணிவு உங்க கிட்ட இருக்கா? 

விமர்சிக்கும் அளவுக்கு எந்த தவறுமே உங்கள் தரப்பில் இல்லை என்பீர்கள் எனில் இனிமேல் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்குமில்லை! 

உங்கள் அரசியல் பிழைப்பிற்காக நீங்கள் உளறுவதை உளறுங்கள், காலமும் மக்களும் தீர்ப்பளிப்பார்கள்! அறமற்றவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை! 

 


Dec 7, 2022

ஒரு கம்யூனிஸ்டா இருந்துக்கிட்டு ...

ஒரு கம்யூனிஸ்டா இருந்துக்கிட்டு:

நீ எப்படி அந்த படத்துல  நடிச்ச

இந்த படத்தோட போஸ்டர ஷேர் பண்ற

மாலுக்கு போய் காஸ்ட்லி ஷாப்பிங் பண்றியே

(இவைங்க தான் கவுண்டர்ல பில் பண்ணாய்ங்க)

எப்படி அந்த ”blah blah blah”

மார்க்ஸ் மனசு வருத்தப்படுவாராம்!

மார்க்ஸைப் படிச்சிருந்தா இப்படி பொறணி பேச மாட்டீங்க! கேக்குற எவனாச்சும் கம்யூனிஸ்டான்னா அதுவும் இல்ல! கேக்குறவைங்க என்ன வேலை செய்றானுங்கன்னு பார்த்தா அவனுங்களும் ஒண்ணு அரசு நிறுவனத்துல இருப்பாய்ங்க, முதலாளித்துவ நிறுவனம் அல்லது சுய தொழில் செய்வாங்க, அல்லது NGO, அரசியல் கட்சி ;) 

”அந்த படத்துல  ஹீரோயின அப்டி காட்டுனாங்க.. நீ எப்படி அதை ஷேர் பண்ற”... டேய் மாய்ங்காய்களா.. அந்த நாயகன்  lustfullaa ஒரு பொண்ணை பார்க்குறான்னா. அவன் கண்ணோட்டத்துல அப்படித்தான காட்டுவாங்க! அதுக்கும் மேல படத்தை  பத்தி விமர்சனம் இருந்தா பொதுவெளில எழுது! அடுத்தவங்க படிச்சு தெரிஞ்சுக்கட்டும்!

நான் நடிச்ச படத்துல என் நடிப்பை பத்தி வேணா விமர்சிக்கலாம்! grrrrrr

கூலிக்கு வேலை செய்றவங்க கிட்ட நீ ஏன் அந்த வேலைக்கு போன  இந்த வேலைக்கு போனன்னு கேக்குற உரிமை எந்த பயலுக்கும் இல்ல! (மார்க்சியம் தரும் தெளவுப்போய்!). 

ஏற்கனவே பதில் சொல்லிருக்கேன்.. அரசாங்கத்துல வேலை பார்த்துக்கிட்டே தான் தொழிற்சங்கம் அமைச்சு போராடுறோம்! முதலாளிகிட்ட கூலி வாங்கிட்டே தான் முதலாளித்துவத்துக்கு எதிரா போராடுறோம்!

நான் மட்டும் தனியா ஒரு கிரகத்த கட்டிக்கிட்டு வாழமுடியாது! கம்யூனிஸ்டுங்குறதால எவனும் எனக்கு ஓசில எதும் தரப் போறதும் கிடையாது.. சொல்லப்போனா கம்யூனிஸ்ட்னு இவ்ளோ தீவிரமா பேசுறதால வேலை கிடைக்காம போறதுதான் மிச்சம்! அப்ப கிடைக்குற வேலைய செஞ்சுதாண்டா பொழைக்கனும் என் சிப்ஸு! அதுலையும் சீக்காகிப்படுத்தா ஆஸ்பத்ரி செலவு மட்டும் அம்புட்டு ஆகுது! கடன் வேற கழுத்தை நெறிக்குது! 

 மார்க்சியம் படிச்சிருந்தா கூலி உழைப்புனா என்ன, கூலி உழைப்பாளர்களின் உரிமைனா என்ன, மார்க்சியத்தின் அடைப்படை என்ன, அமைப்புக்குள்ள இருந்துக்கிட்டே போராடுறதுன்னா என்ன … சமூக அமைப்புனா என்ன.. புரட்சினா என்ன.. அதுக்கு முன் நிபந்தனைனா என்னன்னு தெரியும்!

தனிமனித சாகசத்துக்கும் மார்க்சியத்துக்கும் சம்பந்தம் இல்ல ஓய்! இருக்குற சமூக அமைப்புல (உற்பத்தி முறை, உழைப்பு உறவு) இதுல எல்லாம் என்ன பிரச்சினை, அதிகார ஒடுக்குமுறைனா என்ன, சுரண்டல்னா என்னன்னு மக்களுக்கு தொடர்ந்து எடுத்து சொல்லி… அநீதிய அவங்களுக்கு புரியவச்சு… மக்கள ஒண்ணு திரட்டி உற்பத்தி முறைய மாத்த களம் இறங்க வைக்குறதுதான் ஒரு கம்யூனிஸ்டோட வேலை! அதை செய்றதுக்கு தான் கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கு…. அந்த சித்தாந்த பரப்புரை செய்றதும் மற்றும் கம்யூனிஸ்ட்களோட ஏன் சேரனும்னு சொல்ற ஒரு சின்ன வேலைய நான் எடுத்துக்கிட்டேன்… அதுவும் எனக்கு அதுல தீர்வு இருக்குன்னு தோணுறதால… நான் அதை உயர்த்திப் பிடிக்குறேன்.  தங்களுடைய வாழ்க்கைய, உயிரை பணையம் வச்சு களத்துல உழைக்குற கம்யூனிஸ்டுங்க பணியளவுக்கு இது இல்லைன்னு நானே சொல்லுவேன்! ஆனா அவங்க செய்ற களப்பணிக்கு பின்னாடி இருக்குற நண்மையை புரிய வச்சு, ஆதரவு திரட்டித் தர முடியுமான்னு பார்க்குறேன்! காவி வேட்டி கட்டிக்கிட்டு ’பஞ்சப் பராரி’ மாதிரி திரியுறவனெல்லாம் உண்மையா சமூகத்துக்கு உழைக்கிறாங்கன்னு நினைக்குறதே மதவாத பார்வை! அதனால தான் அவைங்க காவிய உடுத்திக்கிட்டு ஊரை கொள்ளையடிச்சுட்டு திரியுறானுங்க! மார்க்சியங்குறது அது இல்ல!  It is not self-deprivation! 

லாபத்தை அடிப்படையாகக் கொண்ட  உழைப்புச் சுரண்டல் கூடிய தனியுடமை உற்பத்தி முறை ஒழிக்கப்படனும், பொதுவுடைமை உற்பத்தி முறைய நிறுவனும் அதுதான் எல்லா பிரச்சினைக்கும் தீர்வுன்னு பேசுறதுக்காக … துறவு வாழ்க்கை வாழ சொல்லி மார்க்ஸ் எங்கல்ஸ் சொல்லல…. போய் மார்க்சியம் படிங்க! புள்ள குட்டிங்கள படிக்க வைங்க!

”ஒரு கம்யூனிஸ்டா இருந்துக்கிட்டு” என்று கேட்கும் எல்லார் கிட்டையும் எவ்வளவு அறச்சீற்றம்! Political correctness! ப்பா என்ன ஒரு சித்தாந்த தெளிவு! நாளைய விடுதலை இவங்களால தான் சாத்தியப்படப் போகுது! அவ்ளோ தூய ஆத்மாக்கள்! நமக்கு காவி கட்டிப் பார்க்காம ஓய மாட்டாங்க!

என் திமிர் தான் என்னை வாழ வைக்குதுன்னு சொல்லிருக்கேன்ல!

என் உழைப்புல நான் வாழ்றேங்குற திமிரும் அதில் அடக்கம்!

உழைப்புத் தத்துவத்த மதவாத ஒழுக்கக் கோட்பாடா நீங்க வேணா பாருங்க! எனக்கு அந்த அவஸ்தை இல்ல!


Nov 17, 2022

பெண்ணியம் என்பது ஆண் வெறுப்பா?

 


பெண் ஒடுக்கப்படுகிறாள், சமமாக நடத்தப்படவில்லை, அவள் உடலுக்கு இங்கு பாதுகாப்பில்லை என்பது வெளிப்படையானது என்றாலும் அது முந்தைய காலம், தற்போது இல்லை என்று சிலரும், சில ஆண்கள் கெட்டவர்கள், சைக்கோக்கள் வேண்டுமானால் அப்படி நடந்துகொள்ளலாம் என்று சிலரும், பெண்கள்தான் தற்போது ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்று சிலரும் வாதிடுகிறார்கள். இன்னொரு சாரார் இயற்கைக்கு எதிராக பேசாதீர்கள்! ஆணும் பெண்ணும் வேறு வேறு தான், எப்படி சமமாக முடியும் என்கிறார்கள்! மாறுபட்டவர்கள் என்பதற்காக ஒடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. இந்த உலகம் மாறுபட்டவர்களுக்கானதே!

இக்கேள்விகளுக்கு 10 வருடங்களாக பதில் கூறி வந்தாலும், புதிதாக முளைத்துள்ள பெண் வெறுப்பாளர்கள் (Rightwing Misogynists / ignorants) எப்படி எதையும் படித்தறிவதில்லையோ, இதையும் படிப்பதில்லை. சமூகப் பிரச்சினைகள் பலதும் குறித்து பேசி இருந்தாலும், இத்தகைய “ஆம்பிளை” கண்களுக்கு எனது புகைப்படமும், பாலியல் ஒடுக்குமுறை குறித்த பதிவுகள் மட்டுமே தெரிகிறது! பாவம்!

விசயத்துக்கு வருகிறேன்!

சமூகத்தில் நிலவும் பல ஏற்றத்தாழ்வுகள் குறித்த விழிப்புணர்வு உள்ள அளவுக்கு பெண் ஒடுக்குமுறை குறித்த விழிப்புணர்வு இல்லை. குறிப்பாக பெண்களில் பலருக்கும் அது பற்றிய விழிப்புணர்வு இல்லை. நிலவும் ‘பண்பாடு’ சரியானதுதான், அதுதான் இயற்கை, நல்லது, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பெண்களும் நம்புகிறார்கள். இதுதான் ஆணாதிக்க சமூகத்தின் வெற்றி.  

முதலில் சில தெளிவுரைகள்:

·      பெண்ணியம் என்பது ஆண் வெறுப்பல்ல!

·      பெண்ணியம் என்பது பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்று புனையப்படும் கட்டுக்கதை அல்ல!

·      பெண்ணியம் என்பது ‘பாலியல் சுதந்திரம்’ மட்டும் தொடர்பானது அல்ல! (அதுவும் அடக்கம். அது எதன் அடிப்படையில் என்பதற்கும் போதுமான உரையாடல்கள் உள்ளன).

·      பெண்ணியம் என்பது ஆணைப் போன்று குடிப்பது, புகை பிடிப்பது, உள்ளிட்ட ‘உரிமைகளைக்’ கோறுவதும் அல்ல!  உடல்நலன் என்று வருகையில் அது அனைவர்க்கும் தீங்கானதே!

·      மகளிரியல் என்பது ஆண்களின் நலனையும் உள்ளடக்கியதே! ஆண் பெண் சமத்துவமில்லாத துன்பகரமான வாழ்விலிருந்து ஆண்களையும் விடுவிப்பது அதன் தேவையாக உள்ளது.

பெண்ணியம் அல்லது மகளிரியல் என்பது பெண் என்னும் பாலின அடிப்படையில் விதிக்கப்படும் நடத்தை விதிகளை கேள்விக்கு உட்படுத்துவது, ஏன் அந்த பாகுபாடு உருவானது என்பதை வரலாற்றுபூர்வமாக எடுத்துரைப்பது, பாலின பாகுபாட்டை ஒழிப்பதற்காக வேலை செய்வது. மகளிரியல் சிந்தனையில் பல கண்ணோட்டங்கள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் இடையில் ஐக்கியம், முரன்பாடுகளும் உள்ளன. பொதுவாக பெண் ஒடுக்குமுறையை அங்கீகரித்துப் பேசும் கண்ணோட்டங்கள் இருப்பினும் உழைக்கும் வர்க்கக் கண்ணோட்டம் கொண்டது சோஷலிசப் பெண்ணியம். மார்க்சிய சித்தாந்தம் அதன் வழிகாட்டி.

மிக எளிமையாக சொல்ல வேண்டுமெனில், ஒரு பெண் முதலாளியாவதை, நாடாள்வதையெல்லாம் பெண்ணின் சாதனையாக கொண்டாடுவது பெண்ணியமாக இருந்தாலும், ஒடுக்கப்படும் பெண் இனத்தின் இந்த வளர்ச்சியை பாராட்டும் அதேவேளை, அந்த பெண்களின் வர்க்கத் தன்மையை, அவர்கள் யாரின் பிரதிநிதிகளாக செயல்படுவார்கள் என்பதை விமர்சனத்திற்கு உட்படுத்துவது சோஷலிசப் பெண்ணியம். பெண் விடுதலை பேசுவோரில் பெரும்பாலும் இது கலவையாகவும் வெளிப்படும். அனைத்திலும் முழுமுற்றானது என்று எதுவுமில்லை. நட்புமுரண்பாடு, பகை முரண்பாடு என்பது புரிய, வாசிப்பு தேவைப்படுகிறது.

ஆண் பெண் இருவருமே வர்க்கரீதியாக ஒடுக்கப்படுகிறார்கள். மகளிர் விடுதலை என்பது உழைக்கும் வர்க்க விடுதலையோடு தொடர்புடையது. தனியுடைமை தகர்ப்போடு தொடர்புடையது என்று ஏற்றுக்கொள்வதுதான் சோஷலிசப் பெண்ணியம்! இதை நமக்கு வழங்குவது மார்க்சியக் கண்ணோட்டம். மார்க்சிய சித்தாந்தத்தைப் படிப்பது அதன் முன்நிபந்தனை. மூன்றாம் பாலினமோ - பாலினம், வர்க்கம், இருத்தலியல் என அனைத்திற்காகவும் போராட வேண்டியுள்ளது என்பதையும் சேர்த்தே பேசுகிறோம்! இருமைக்குள் (நான்) எதையும் அடக்குவதில்லை!

பெண்ணியவாதிகள் பெண் விடுதலைக்காக மட்டும் போராடுவதோடு நிறுத்திக்கொள்வதில்லை! ஆனால் அதிலும் சாதி, வர்க்க,இன, மொழி, மத ரீதியான பிளவுகள் காரணமாக பெண் உரிமை பேசுவோரில் பலவிதமான போக்குகளைக் காண முடியும்.

நம் கண்ணுக்குத் தெரியாத நுண் உயிரிகளைக் காண எப்படி ஒரு  நுண்நோக்கி தேவைப்படுகிறதோ, அதுபோலத்தான் சமூக ஒடுக்குமுறைகளைக் காண ஒரு நுண்நோக்கி (microscope) தேவைப்படுகிறது. பல சித்தாந்தங்கள் அத்தகைய நுண்நோக்கிகளாக உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒரு வர்க்கத் தன்மை உண்டு.

பொதுவாக வலதுசாரி, இடதுசாரி என்ற பிரிவுகள் இருந்தாலும்.  உழைக்கும் வர்க்கப் பார்வையற்ற முற்போக்கு சிந்தனை என்னும் ஒரு பிரிவும் உண்டு. அதேபோல் வலதுசாரி எதிர்ப்பு / பார்ப்பன எதிர்ப்பு மனநிலை கொண்டவர்களாக சிலர் இருப்பார்கள், ஆனால் ஆணாதிக்கம், வர்க்கம் பற்றிய புரிதல் இவர்களுக்கு இருக்காது. அல்லது பாதி புரிதலோடு இருப்பார்கள். இவர்களில் பலர் ஒடுக்கப்படும் தரப்பின் பக்கம் இருந்து பேசினாலும், சில ஒடுக்குமுறைகளை அங்கீகரிக்க மாட்டார்கள். அல்லது குறிப்பிட்ட வழிமுறைகளில் அதை கையாளக் கூடாது என்று அவரவர் கண்ணோட்டத்தில் பேசுவார்கள். அதற்கும் வர்க்கத் தன்மையே காரணம்!  அல்லது அறியாமையாகவும் இருக்கலாம்.

சாதி, மதம், பாலினம், இனம், மொழி, திறன் இத்தியாதி அடிப்படையில் ஒடுக்கப்படுவதை – ஒடுக்குமுறை என்பது போல்

அதனோடு சேர்ந்து உழைப்புச் சுரண்டல் என்று ஒன்று நிலவுகிறது – அதனை சுரண்டல் என்கிறோம். வர்க்க முரண்பாடு!

பெண் / பாலின  அடிப்படையில் ஒடுக்கப்படுவது ஆணாதிக்கம் எனப்படுகிறது. அது தந்தை தலைமையிலான குடும்ப அமைப்பின் தோற்றத்தோடு தொடர்புடையது. அதோடு தனியுடைமை – அதாவது தனிச்சொத்து சேர்க்கும் அமைப்பும் உருவானது இரண்டும் சேர்த்தே இந்த சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளுக்கும், சீரழிவுகளுக்கும் காரணம் என்பதுதான் மார்க்சிய விளக்கம். வர்க்க முரண்பாடு அடித்தளம்! படிநிலைகள் அதற்கு தேவைப்படும் ஏற்பாடு. ஒடுக்குமுறை என்பது அதன் கருவி என்று இதனை புரிந்துகொள்ளலாம்.

மனிதம் போற்றுவோம் என்போர், குறைந்தபட்சம் இவற்றையெல்லாம் படிக்க வேண்டும். ஆனால் நிலவும் சமூக அமைப்பின் சமூகமயமாக்கலில் ஊறி, திளைத்து போனவர்கள், அதிகாரப் பசி கொண்டவர்கள், மேலாண்மை சுகம் கண்டவர்களால் இதை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள இயலாது. யாருடைய ஏற்பிற்காகவும் சமூக மாற்றம் காத்திருப்பதில்லை.

ஒடுக்கப்படும் எதுவும் வெடித்துக் கிளம்புவதும், முரண்பாடுகளை களைந்தெறிய மாற்று ஏற்பாடுகளை உருவாக்குவதும் அறிவியல் ரீதியான இயக்கம். மார்க்சியம் அதையும் உணர்த்துகிறது. மார்க்சியம் படிங்க.

பெண்ணியம் என்பது ஆண் வெறுப்பும் அல்ல, பாலியல் பித்துமல்ல! அப்படி முத்திரை குத்துவதன் மூலம் பெண் விடுதலை இயக்கத்தில் பெண்கள் ஒருங்கிணைவதை தடுக்க முனையும்  வெறுப்பு அரசியல் பிரச்சாரம். Slut Shaming is its immediate weapon! but activists have seen worst than this! Nothing shall stop the movement of the oppressed. 


image courtesy: https://www.thequint.com/neon/gender/a-guide-to-feminism-for-men-everyone-anyone-can-be-a-feminist#11#read-more

related articles: https://saavinudhadugal.blogspot.com/2011/07/1.html (written in 2011!)

https://saavinudhadugal.blogspot.com/2020/06/blog-post_19.html

இந்த பொருள் தொடர்பாக பல நூல்களும், கட்டுரைகளையும் பலரும் எழுதியுள்ளனர். படித்தறியவும். 

Oct 28, 2022

தொடரும் ஆபாச தாக்குதல்கள்

 


ஆணாதிக்கம் எங்கே இருக்கிறது என்று கேட்கும் அறிவிலிகளுக்கு!

இந்த சமூகத்தில் பெண்களின் நிலை என்ன என்று சிந்தியுங்கள். ஆணாதிக்கம் என்றால் என்ன என்று பேசிய காணொளி உள்ளது. அதையும் பாருங்கள்.

ஆணாதிக்கம் என்றால் என்ன

சிசுகொலை, வரதட்சனை, குடும்ப வன்முறை தொடங்கி பாலியல் வன்கொடுமை வரை அனைத்திற்கும் அதிகாரம் வழங்கியிருப்பது ஆணாதிக்க சமூக அமைப்பே ஆகும்!

ஆண் மேலானவன்.. பெண் கீழானவள் என்று பாலின அடிப்படையில் எழுதா விதி நிலவுகிறது. இது ஆண் பெண் மாற்றுப்பாலினம் என அனைவரையும் கட்டுப்படுத்துகிறது.

தற்போதைய உதாரணம் ஒன்றை சொல்கிறேன்!

சின்மயா வித்யாலயா வன்கொடுமைக்கு எதிராக நான் பேசிய காணொளி இணையத்தில் வலம் வந்த பிறகு என் மீதான பாலியல்ரீதியான  verbal abuse, slut shaming எல்லாம் அதிகரித்துவிட்டது. Nobraday பிரச்சாரத்திற்குப் பின், குறிப்பாக behindwoodsக்கு பேட்டி அளித்த அன்று மாலை இது அடுத்த கட்ட தாக்குதலுக்கு சென்றுள்ளது!

எனது அலைபேசி எண்ணை டிவிட்டரில் பகிர தொடங்கியுள்ளனர். ஒருவரா.. ஒரு கூட்டமா தெரியவில்லை! திடீரென எனக்கு தெரியாத எண்களில் இருந்து hi என்று மெசேஜ் வரத் தொடங்கியது.. அழைப்புகளும்! பொதுவாக தெரியாத எண்களை நான் எடுப்பதே இல்லை!

Msg வந்த எண்ணிற்கு யார் நீங்கள் என்று கேட்டால்.. பெயரை சொல்லி நீங்க யாரு என்றார்கள். அதிர்ச்சியானது.. யாருன்னே தெரியாம எப்படி மெசேஜ் பண்றீங்க.. எனது எண் எப்படி கிடைத்தது என்று திட்டிவிட்டு ப்ளாக் செய்தேன். அலுவலகத்தில் இருக்கையில் அடுத்தடுத்து மெசேஜ்.. அழைப்புகள்.. கட் செய்தாலும் தொடர்ந்து கால் வந்தது. பின் ஒரு அழைப்பை எடுத்து “யார் நீ.. என் எண் எப்படி கிடைச்சுது என்றேன்.. எங்கு பார்த்தேன் என்று அவன் சொல்ல “ஏண்டா ஒரு பொண்ணோட நம்பர எவனாச்சும் லீக் பண்ணா உடனே அலைஞ்சுக்கிட்டு ஃபோன் பண்ணுவீங்களா.. உங்க வீட்ல பொண்ணுங்க இல்லையா… “ என்று திட்டி வைத்து விட்டு.. இது எப்படி நடந்திருக்கும் என்று யோசித்தேன்.. ஓரிரு நண்பர்களிடம் பேசினேன்.. எப்படி எண்  பகிரப்படுகிறது என்று guess செய்தேன்… பார்ன் அல்லது பாலியல் அழைப்பிற்கான தளங்களில் எனது எண்ணை பகிர்ந்திருக்கிறார்கள்… வக்கிரம் பிடித்தவர்கள்..

 நேருக்கு நேர் மோதி அறிவால் எதிர்கொள்ள முடியாத கோழைகள்! ஆம்பிளை என்னும் திமிர்.. பெண்ணாகவும் இருக்கலாம்.. தெரியவில்லை! ஐடியை ரிப்போர்ட் செய்தாலும் தினம் பல ஃபேக் அகௌண்ட் தொடங்கி இதே வேலையை செய்கிறார்கள்.  ஆனால் இவர்களால் நாட்டை சீர்கெடுக்கும் அதிகார வர்க்கத்தையோ.. ஆட்சியில் இருக்கும் ஆட்சியாளர்களையோ எதிர்த்து ஏதேனும் செய்ய இயலுமா?  நஞ்சு நஞ்சைத்தானே ஆராதிக்கும்! 

தொடர்ந்து எனது புகைப்படங்களின் கீழ் ஆபாச பதிவு. One night stand, night stayவா.. அடுத்து எவன் சிக்குனானோ தெரியல.. பல சைச பார்த்தவ.. இப்படியாக தினம் வெவ்வேறு ஐடிக்களில் இருந்து .. எனக்கு மன உளைச்சல் தருவதாக அவர்களுக்கு நினைப்பு! ஆனால் இது எதுவும் என்னை மசுருக்கு கூட தொந்தரவு செய்யாது!

ரிப்போர்ட் செய்துவிட்டு, ப்ளாக் செய்துவிட்டு என் வேலையை பார்க்கிறேன்!

இதன் மூலம் இவர்கள் அடையும் இன்பம் என்ன என்று தான் என் மனதில் ஓடுகிறது.. இத்தகைய மனநிலைக்கு ஒருவர் ஆளாகிறார் என்றால் இவர்கள் சமூகத்திற்கு எவ்வளவு ஆபத்தானவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு உண்மையில் நல்ல உறவுகள் அமையுமா? வாழ்வில் எதை சாதிப்பார்கள்?

இந்த வக்கிரம் பிடித்தவர்களைப் பொறுத்தவரை.. இரவு தான் நான் காமலீலையில் ஈடுபடுவேன்.. அதுவும் ஹோட்டலில் தான்! ஏனென்றால் என் புகைப்படத்திற்குப் பின் ஒரு திரைச்சீலை தெரிகிறது!  பிறகு வீக்கெண்ட் அவுட்டிங்.. ரிசார்ட் ஸ்டே.. ஆண்டி சர்வீஸ்.. இவ்வளவுதான் இவர்களின் வக்கிர அறிவு! 

பாலியல் தொழிலை சட்டமே தவறில்லை என்றபின்.. ஹோட்டலில் தான் அந்த சேவையை வழங்க வேண்டுமா என்ன?

சரக்கு, பண்டம், பெண் உடல் மீதான பாலியல் சுரண்டல்.. பெண் உடலை பணத்திற்கு விற்பனை செய்வதை சட்டபூர்வமாக்கக் கூடாது என்று எதிர்க்கும் ஒரு பெண்ணாக, சுயமரியாதை அதிகம் கொண்டவளாக என்னால் பணத்திற்காக எனது உடலை விற்பனை செய்ய இயலாது!

ஒருவேளை காதல்வயப்படலாம்… ஆனால் ஆண்வெறுப்பு மனநிலைக்கு தள்ளும் ஆண்களை கடந்து வந்த பின் காதல் மாயையில் விழுமளவுக்கு தற்போது நானில்லை!

உடல் தேவை.. நடுவிரல் உள்ளது!  என்னை விட எனக்கு இன்பம் வழங்கிட யாரால் முடியும்? அறிவுத் தேடலில், சுயத்தைக் காப்பதில் உச்சம் அடையும் என் தேவை என்ன என்பதை புரிந்துகொள்ளுவது அத்தனை எளிதல்ல.. புரிந்துகொண்ட நபரோடு வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்கிறது!  

அதையும் மீறி ஒருவேளை என் மனதை யாரேனும் கவர்ந்தால்.. அது எனது உடல்.. எனது உரிமை! என்று செயல்படும் அறிவுத் தெளிவு எனக்கு உண்டு! யாரையும் துன்புறுத்தாமல் எனது செயல்பாடுகளை வைத்துக்கொள்ளும் அறமும் உண்டு! I am not only an intellectually independent woman but definitely a sexually independent woman!

சமூக அமைப்புருவாக்கம் மற்றும் அதன் கருத்தியல்கள் பற்றி அறிந்தவர்களை எந்த விதத்திலும் யாரும் முட்டாளாக்க இயலாது!

ஒரு பெண்ணை எல்லா நேரமும் பாலியல் ரீதியாக அவதூறு செய்வதும்.. அவளது புகைப்படத்தை  ஆபாச பக்கங்களில் போடுவதும்.. ஃபேக் ப்ரொஃபைல் மூலம் ஆண்களுக்கு அழைப்பு விடுப்பதும் எதனால் நடக்கிறது? ஆணாதிக்க வக்கிர சமூகத்தின் வளர்ப்பினால் நடக்கிறது!

ஒழுக்கமற்ற சமத்துவமற்ற சமூகம் தான் ஒழுக்கமற்ற, ஆதிக்க மனநிலை கொண்ட மனிதர்களை உருவாக்குகிறது!

வக்கிரம் பிடித்த சமூகம் தான் வக்கிர மனிதர்களை உருவாக்குகிறது!

இது ஒரு வக்கிரம் பிடித்த சமூகம்! அதன் விளைவுதான் இத்தகைய மனிதர்கள்!

இன்றைக்கு எனக்கு நேர்வது நாளை இன்னொரு பெண்ணுக்கு நேரும்!

சொல்ல இயலாது! என்னை துன்புறுத்தி மகிழ நினைக்கும் அந்த நபரின் பிள்ளைக்கோ, மனைவிக்கோ, சகோதரிகளுக்கோ கூட இத்தகைய துன்புறுத்தல்கள் நிகழலாம்!

என்னை போன்ற பெண்களுக்கு விழிப்புணர்வு இருப்பதால் அதை நாங்கள் கடந்து செல்கிறோம்! விழிப்புணர்வு இல்லாத பெண்களின் நிலை? பென்கள் அடங்கி வீட்டிற்குள்ளே இருங்கள்! ஆணாதிக்க கட்டுப்பாட்டிற்கு அடங்கி இருங்கள், சமூக வலைதலங்களில் ஏன் இருக்கிறீர்கள்…  என்பதுதானே பெரும்பாலரின் பதிலாக இருக்க முடியும்!

10 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு சமூகப் பிரச்சினைகள் குறித்து எழுதியும், பேசியும் வந்தாலும்.. எந்த  content கவனத்தைப் பெறுகிறது? அந்த வக்கிரவான்கள் பேசுகிறார்கள் “attention seeking” .. அந்த வக்கிர மண்டைகளுக்கு உடல் தொடர்பான பதிவுகள் தான் தென்படுகிறது! யாரிடம் பிரச்சினை உள்ளது?

பொம்பள பொம்பள என்று சொல்லி ஆண்களுக்கு அதிகாரம் வழங்கும் சமூகமே… விசத்தை பரப்புவது நீங்கள்.. களையெடுப்பது நாங்கள்.. அதில் அவ்வப்போது காயங்கள் ஏற்படத்தான் செய்கிறது. விஷச் செடியின் வீரியம் அப்படி! முடிந்தவரை  முற்போக்காளர்கள் அதை களைய முற்படுகிறார்கள். அதில் நீங்களும் கைகோர்க்கவில்லையெனில்.. நாளை உங்களின் பிள்ளைகளுக்கு இந்த சமூகம் மிகவும் ஆபத்தான, வக்கிரமான, கொடூரமான நிலைமைகளையே மீதம் வைத்திருக்கும்! ஏற்கனவே நாம் நம் மகள்களை பலிகொடுத்துக் கொண்டிருக்கிறோம்!

ஆணாதிக்கம் எங்கே இருக்கிறது என்று கேட்டுக்கொண்டே இருங்கள்! பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டது என்பதைப் போல்….