Showing posts with label ஆணாதிக்க இலக்கியம். Show all posts
Showing posts with label ஆணாதிக்க இலக்கியம். Show all posts

Jan 13, 2010

ஆணின் பெண் - பாகம் 3


தாயுரிமை தூக்கி எரியப்பட்டது பெண்ணினம் உலக வரலாற்று ரீதியில் பெற்ற தோல்வி ஆகும். ஆண் வீட்டிலும் ஆட்சியின் கடிவாளத்தைக் கைப்பற்றினான். பெண் இழிநிலைக்குத் தள்ளப்பட்டாள். அடிமைபடுத்தப்பட்டாள்; ஆணின் உடலின்ப வேட்கைக்குக் கருவியானாள், கேவலம் குழந்தைகளைப் பெறுகின்ற பொருளாகி விட்டாள் என்கிறார் மார்கன்.

மார்க்ஸ் அவர்கள் இதற்கு கூடுதலாக பின் வருமாறு தெரிவிக்கிறார்: "நவீன காலக் குடும்பம், அடிமை முறையை மட்டுமின்றி பண்ணையடிமை முறையையும் கரு அளவில் கொண்டிருக்கிறது ....இப்படிப்பட்ட குடும்ப வடிவம் இணை மணம் ஒருதார மணத்துக்கு மாறியதைக் காட்டுகிறது. மனைவியின் விசுவாசத்தை உறுதிப்படுத்துவதற்காக, குழந்தைகளின் தகப்பனார் இவர்தான் என்பதை உறுதி செய்வதற்காக ஆணின் முழுமையான அதிகாரத்தின் கீழ் பெண் வைக்கப்படுகிறாள்" என்கிறார். (இது கட்டாய விவசாய வேலை தொடர்புடையது)

இவ்வாறாக அரசியல், சுயநலம், அதிகாரம் ஆகிய பல காரணங்களால் பெண் ஆணுக்கு கீழ் என்ற அடக்குமுறை எண்ணத்தை பின் வந்த சந்ததியினருக்கு வழிமொழிந்திருக்கிறது வரலாறு. இதை இரு இனங்களும் அறியாமலே கற்ற ஒன்றாகிவிடுகிறது...

இதன் தொடர்ச்சியாக பெண் வெறும் காதல் துணையாகவும், காமத்துனையாகவும் திரைப்படங்கள் தன் பங்குக்கு சித்தரிக்கிறது. பெண் அழகு தேவதையாகவும், பார்த்த மாத்திரத்தில் விழும் ஆண் அவளை துரத்தி துரத்தி பித்து பிடித்த பாடல்களை பாடி அவன் வலைக்குள் விழ வைத்துவிடுகிறான். அத்துடன் திரைப்படம் முடிகிறது. காதல் சேர்கிறதா இல்லையா என்பதையே மையமாக வைத்தெடுக்கப்படும் திரைப்படங்கள், அவர்கள் திருமணம் செய்துகொண்டபின்னர் படும் அவஸ்தைகளையும், சந்திக்கும் மண உளைச்சல்களையும், முன்பு அவள் காலில் விழுந்து கெஞ்சிய ஆண் பிறகு எப்படி அவளை அடக்கி ஆள்கிறான் என்றோ தொடர்வதில்லை (வெகு சில படங்கள் 80 - 90 களில் இருக்கலாம்)..

திரைப்பட பாடல்கள் அணைத்திலும், பெண்ணின் அழகை அங்குலம் அங்குலமாக வர்ணித்து ஆண் கவிஞர்கள் பாடி வருகிறார்கள். பெண்ணுக்குண்டான அத்தனை உணர்ச்சிகளுக்கும் (தாய்ப்பாசம், தங்கைப்பாசம், இன்னும் பிற) அவர்களே முதலாளியாக நின்று பாடுகிறார்கள். அதையும் மீறி பெண் அத்துறையில் வந்துவிட்டால், அவள் அத்துறையை சார்ந்த ஆணின் பாலியல் தேவையை தீர்த்துப் பெற்றதாக கூறுவார்கள். உலகமெங்கிலும் ஆணுக்கு பணம், பெண்ணுக்கு உடல் இந்த தீர்மானம் தான் ஆணாதிக்கத்தின் மைய்ய நோக்கு. இதுவே பெண்களின் உறுப்புகளுக்கு எதிராக அவர்களை கட்டவிழ்த்துவிடுகிறது. விளைவு ஆண் வரலாறு, ஆண் மதம், ஆண் இலக்கியம், ஆண் அதிகாரம், ஆண் அரசியல், ஆண் சர்வாதிகாரம், ஆண் வன்முறை.

(சிறு குறிப்பு: கட்டுரைகளில் நான் குறிப்பிட்ட மார்க்ஸ், எங்கெல்ஸ் இவர்களின் தத்துவத்தை பின்பற்றுபவர்கள் கூட ஆணாதிக்கத்திற்கு விதிவிலக்கல்ல)

ஆணின் பெண் - பாகம் 2


நான் படித்த, கேட்ட பண்டைய இலக்கியங்களில் பெரும்பாலும் இல்லை முடிவாகவே சொல்லலாம் பெண் எப்பொழுதும் உணர்ச்சியை மட்டும் உணர்கிற வெளிப்படுத்துகிற ஒரு பிராணியாகவே சித்தரிக்கப்படுகிறாள். பெண்ணைப்பற்றி வரும் ஆண் சிந்தனைகள் [ இதில் சாபக்கேடு என்பது சக பெண்ணே இந்த ஆண்களின் வார்த்தைகளை நம்பி அவளும் அப்படியே எழுதத்தொடங்கியதுதான் ] அவள் அழகியலை வர்ணிப்பதாகவும், காதலன் பிரிவால் விரகதாபத்தின் உச்சியில் அவளும், அவளுக்கு ஒரு தோழியும் அறைகூவல் விடுவதாகவுமே உள்ளது. இதிலும் அழகு என்பது ஆண்களின் காமத்தை பேணுகிற ஒன்று மட்டுமே. ஏதோ ஓரிடத்தில் மட்டுமே அவளின் வீரம் (அதுவும் ஆண், பெண் தன்னை ஆண்டுவிடக்கூடாதென்ற நோக்கத்தில் கருணைக் கொள்கையை முன்வைத்து) குறித்து பேசுகின்றனர். மேலும் புராணங்கள், பதிவிரதைக் கதைகள் எல்லாம் பெண் மேற்கொள்ளவேண்டிய சகிப்புத்தன்மைகளை பட்டியலிடுகிறது. அவ்வாறு அவள் நடக்கும் பட்சத்தில் அவள் பத்தினித் தெய்வமாகிறாள். ஆண்களுக்கு கட்டுப்பட்ட தெய்வம். இல்லையேல் பிடாரி.

ஒரு முனையில் அழகியலை வர்ணித்து பெண்ணுக்கு ஆடை, ஆபரணங்கள் , அலங்காரங்கள் இவற்றின் மேல் மோகம் வரவழைத்தும், மறுமுனையில் ஒழுக்கம், பத்தினித்தன்மை ஆகிய அர்த்தமற்ற கூற்றுகளை அரங்கேற்றி அவள் தெய்வீகத்தன்மைக்கு உயரும் மோகத்தையும் சிறிது சிறிதாக ஏற்றியுள்ளர்கள் ஆண்கள். அழகியல் வர்ணிப்புகள் எல்லாமே ஓர் ஆணின் கண்களுக்கு விருந்தாக எவ்வாறெல்லாம் அவள் காட்சியளிக்க வேண்டும் எனும் விதியாக உள்ளதை நாம் அறியா வண்ணம் திறம்பட வகுத்துள்ளனர். அந்த கருத்து ஊசி ஏற்றிய விஷ மருந்து ஆண்டாண்டு காலமாய் பெண் மரபணுக்குள் புகுந்துகொண்டு, அணுக்களையே மாற்றியமைக்கும் வல்லமைப்பெற்று திகழ்கிறது.

இந்தியாவில் பெண்ணை அடிமைப்படுத்தியதில், பார்ப்பனியர்களின் பங்கு பெரிதும் உள்ளதாக நான் காண்கிறேன். (கடவுளின் பெயரால் மொத்த மக்கள் இனத்தையும் அடிமைப் படுத்திய பேருள்ளம் கொண்டவர்களாயிற்றே அவர்கள்). பெண்ணை தனிக் கடவுளாக வழிபாட்டு வந்த காலத்தில் (கொற்றவை), அவளை ஆண் கடவுளின் மனைவியாக கதைகள் புனைந்து, ஆடவும் பாடவும் கணவனின் காலடி பிடித்து சேவை செய்யவும், அவன் கோபம் கொண்டு சபிக்கும் பொழுது சாப விமோசனம் கேட்டு மன்றாடவும் வைத்து பெண்ணின் நிலையை இழிவாக விதித்தனர். பின்பு உழைப்புக்கு அஞ்சி, சோற்றுக்கு வழி வேண்டி கோவில்களை நிறுவி அங்கே பெண் தெய்வ சிலைகளை ததும்பும் முலைகளையும், வடிவமான இடையும் வைத்து வடித்து அப்பாவி மக்களுக்கு வக்கிரத்தை கடவுளின் பெயரால் அறிமுகம் செய்தனர்.

ஒவ்வொரு சாங்கியங்களாக தோற்றுவித்து, அதற்கு பின் பெரும் தத்துவங்கள் இருப்பதாக பொய் கூறி, கயமைகளைக் கற்பித்து அற்பமாக வயிற்றை கழுவிவந்த இவர்கள், ஒவ்வொரு ஆணுக்குள்ளும் புராணங்களில் கூறியுள்ளது போல் தன் மனைவி பெரும் சகிப்புத்தன்மை உள்ளவள்ளக, பதிபக்தியுடன் அடிமையாக திகழவேண்டும் எனும் பேராசையை அறியாமையை பயன்படுத்தி, அரசுகளை கையில் போட்டுக்கொண்டு விதைத்தனர்.

ஓர் ஆண், அவன் அடையப்போகும் பெண்ணுக்கு இப்படியெல்லாம் விதிகள் வைத்துவிட்டு, அவன் புணர்ச்சி அரிப்புக்கு தாசி குல மரபை அதிகார போக்குக்கொண்டு நிறுவி அனுபவித்து வந்திருக்கிறான், கடவுளின் பெயரால். இங்கு பெண்ணுக்கெதிரான எல்லா அநியாயங்களும் கடவுளின் பெயராலேயே நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்பதை நான் காண்கிறேன். படுக்கைக்கு ஒத்துழைப்பவளை தேவதை என்றும், மறுப்பவளை தேவடியாள் என்றும் பட்டங்கள் சூட்டி மகிழ்ந்து வருகின்றனர் நம் உடன்பிறப்புகள்.

பெண்களை அனுபவிக்கவும், அடிமைபடுத்தவும், அவமானப்படுத்தவும் ஆண்கள் அவள் உறுப்பையே கையில் எடுக்கும் துற்பக்கியத்திற்கு ஆளாகியுள்ளர்கள். எதை அவர்கள் சாதனையாக கருதினார்களோ அதுவே அவர்களுக்கெதிராய் திரும்பும் காலம் நெருங்கிகொண்டிருக்கிறது.

ஆணின் பெண் - பாகம் 1

பெண் உறுப்பைப்பற்றி, பெண் எழுதக்கூடாது என்ற ஆணின் அதிகாரத்தை முன் வைத்து...

பல்லாயிரம் வருடங்களாக பெண்களை கவர்ச்சிப் பொருளாகவும், புணர்ச்சித் துணையாகவும் , வீட்டு வேலைக்காரியாகவும் இன்ன பிற அடிமையாகவும் நடத்துவதற்கு ஏதுவாக இலக்கியங்கள், புராணக்கதைகள், ஒழுக்ககூறுகள், பெண் கடவுள் தன்மை என்று வரைந்து, பல பல வழிகளில் அவள் பிறப்பின் உண்மை அறியா வண்ணம் ஓர் மாயைக்குள் புதைக்கப்பட்டிருப்பதை அவளே அறியா வண்ணம் மிகவும் சாமர்த்தியமாக புனைந்திருக்கிறார்கள். இந்த மாயையின் பரிதாப கட்டம் என்னவென்றால், இப்புனைப்புகளை கண்டுகொண்டுவிட்டதாக ஒருவள் அறைகூவல் விடும் பொழுது, பெண்களே அதை எதிர்க்கவும், பேசும் பெண்ணின் மீது கல் எரிந்து கொல்லவும் கூட இந்த ஆணாதிக்க சமுதாயம் அவள் மூளையை, அவளே அறியாமல் சலவை செய்து வைத்திருப்பது தான்.

ஒவ்வொரு பெண்ணும் குடும்பத்தின் ஆரம்பகால தோற்றம் குறித்து கற்க வேண்டும். பின்பு பெண் ஏன் அடிமை ஆனால் எனும் பெரியாரின் புத்தகத்தை கண்டிப்பாக வாசிக்க வேண்டும். பின்பு ஆண் பெண் உயிரியல், உளவியல் குறித்து ப்ராயிட், சிமோன் தே பொவ்வார் போன்றோரின் கூற்றுகளை படிக்க வேண்டும். இக்கல்வி பெண்ணுக்குரிய தாழ்வு நிலைகளை ஆண் சமூகம் எவ்வாறு கட்டமைத்திருக்கிறது என்று அறிய உதவும். இவற்றை உணர்ந்தவுடன் ஆணுக்கெதிராய் நாம் போர்க்களத்தில் குதிக்கவேண்டியதில்லை எனும் நிதானம் பிறக்கும். பண்டைய காலத்தில், அறிந்தே பெண்ணை அடிமையாக்கிய ஆணாதிக்கத்தை, அறியாமல் பின்பற்றிவரும் நம் சக இனமான ஆண்களுக்கு எடுத்துச்சொல்லும் பக்குவமும் , தன்னம்பிக்கை பிறக்கவும் இது போன்ற வாசிப்புகள் உதவும் என்று நான் கருதுகிறேன்.

உறுப்புகளும், கருப்பையும் மட்டுமே ஆணிடமிருந்து, பெண்ணை வேறுபடுத்திக்காட்டுகிறது. இயற்கை மிகவும் அழகாக ஒரு உயிருக்கு மற்றொரு உயிரை துணையாக படைத்துள்ளது. ஆதி காலத்தில் இவ்வுண்மைக்கு குறை ஏதுமின்றி, ஆண் பெண் பேதமின்றி வாழ்ந்துவந்ததாக பல்வேறு அறிஞர்கள் எழுதியுள்ளார்கள்.

எங்கல்ஸ் - குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் - தமிழில் நா. தர்மராஜன். இப்புத்தகத்தில் பாஹா பென்னின் கருத்தை குறிப்பிடுகிறார் ஆசிரியர்:
  1. தொடக்கத்தில் மனிதகுலம் வரைமுறையற்ற புணர்ச்சியில் ஈடுபட்டிருந்த நிலையில்தான் இருந்தது. இந்நிலைக்கு ஆசிரியர் பொதுமகளின் முறை (hetaerism) என்று பெயரிட்டுருக்கிறார்.
  2. இந்த வரைமுறையற்ற புணர்ச்சி காரணமாக யார் தந்தை என்று நிச்சயிக்க முடியவில்லை ஆகவே மரபு வழியைத் தாய்வழியாகவே - தாய் உரிமைப்படிதான் - கணக்கிட முடியும்.
(மேலும் ஒரு பெண் பிள்ளை பெறுவதற்கு, ஆண் தான் தான் காரணம் என்று அறியவே பல காலங்கள் ஆனதாக நான் படித்தது நினைவுக்கு வருகிறது)

3. எனவே தாய்மார்கள் என்ற முறையில், இளம் தலைமுறையினருடைய பெற்றோர்கள் என்று பெண்கள் மட்டுமே திட்டமாக உறுதிப்படுத்தப்பட முடிந்த காரணத்தால் அவர்கள் மிகவும் உயர்ந்த சலுகையுடனும், மரியாதையுடனும் நடத்தப்பட்டார்கள் என்கிறார். (gynaecocracy) (இது போன்ற வரலாற்றை நான் 'பெண் தெய்வ வழிப்பாடு' குறித்து ஆராய்ச்சி செய்த போதும் படித்திருக்கிறேன்)

4. ஒரு பெண் ஓர் ஆணுக்கு மட்டுமே உரியவள் என்கிற ஒரு தார மனத்துக்கு மாறிச் சென்ற நிலை ஆதிகால மதக் கட்டளையை மீறியதையே குறித்தது. இந்த மதக் கட்டளையை மீறியதற்கு கழுவாய் செய்தாக வேண்டும், அல்லது அதைப் பொறுத்துக் கொண்டு அனுமதி கொடுப்பதற்குப் பரிசம் தர வேண்டும், அதாவது அந்தப் பெண்ணைக் குறிப்பிட்ட காலத்துக்கு மற்ற ஆண்கள் துயிப்பதற்கு ஒப்படைக்கவேண்டும் என்று பாஹா பெயினின் சாட்சியங்களுடன் எங்கல்ஸ் குறிப்பிடுகிறார்.

சிமோன் தே பொவ்வார் அவர்கள் தன் புத்தகத்தில் - மனிதர்கள் நாடோடிகளாக வாழ்ந்தபோது பெண்கள் கருவுற்ற காலத்தில், வேட்டைக்குச் செல்வதும், இடம் பெயர்தலும் கடினமாக இருந்த காரணத்தால் வாழ்க்கை வசதிமுறைக்காக (மனமுவந்து) பணிகளை பகிர்ந்துகொண்டதாகவும் (பாலியியல் வேற்றுமையும், அடிமைத்தனமும் ஏதுமின்றி), அதுவே பின்பு ஆண்கள் வெளியில் சென்று பொருள் ஈட்டும் உரிமைப்பெற்றவராகவும், பெண்கள் வீட்டை பேணும் அடிமையாகவும் மாற்றியமைக்கப்பட்டதாக குறிப்பிடுகிறார்.

பின்பு ஆண்டான் அடிமை, நிலப் பிரபுத்துவம், மன்னராட்சி, அரசமைப்பு என்று குழு மேலாண்மை முறை அதிகாரத்தின் கைக்கு மாறி வரும் பொழுது திருமணம், குடும்பம் ஆகிய வாழ்வியல் முறை சொத்துக்களை தக்கவைத்துக்கொள்ளும் உள்நோக்கோடு மாற்றியமைக்கப்பட்டன. இம்மாற்றங்களுக்கேற்ப பெண்களை தயார் படுத்த தந்தை வழி சமுதாயம் தோற்றுவிக்கப்பட்டு, பெண்கள் தங்களை பலகீனமானவர்களாகவும் ஆண்களுக்கு சேவகர்களாகவும், புணர்ச்சித்துணையாகவும் ஆக்கப்படுகிறாள். உலகம் மிக எளிதாக ஆண்களின் உலகமாக அவர்களின் சிந்தனையாக மாறுகிறது. படைத்த, படைக்கப்பட்ட எல்லாம் பெண்ணுக்கு அடிமைக்கோலமாகவே ஆணுலகம் புனைந்தது . இலக்கியமும் விதிவிலக்கல்ல. அவள் பெண்ணுறுப்பை புனிதப்படுத்தும் போர்வையில், அதையே அவளுக்கெதிராக திருப்பி ஏவி விட்டிருக்கிறார்கள். தனிமனிதப் பேராசை, பின்பு கூட்டு விதியாக மாறி அதிகாரத்தின் துணையோடு கட்டமைப்பாக மருவி நிற்கிறது. ஒரு கருத்தானது லட்சம் பேரைப் பற்றுகையில் அது பொருளாக மாறுகிறது என்ற மார்க்சின் கூற்றை நாம் இக்கணத்தில் நினைத்தாலும் பெரும்பான்மை எப்பொழுதும் சரியான முடிவையே எடுக்கும் என்பதை நாம் நம்பக்கூடாதென்ற லெனினின் மேற்கோளையும் நாம் மறக்கமுடியாது.

பல மணமுறை எண்ணற்ற ஆண்டுகளாய் வழக்கிலிருந்து வந்துள்ளது, மக்கள் தொகை பெருக்கமும், வாழ்வியல் மாற்றங்களும்,ஆணின் உளவியல் காரணமாய் பொறாமைக் குணமும் ஒரு தார முறையை ஒரு மாற்றாக பரிந்துரைத்திருக்ககூடும், பின்பு பல அரசியல் காரணங்களால் ஒழுக்க விதிகள் புகுத்தப்பட்டு இன்று அது உச்ச நிலையை அடைந்து, மூச்சு திணறிக்கொண்டிருக்கிறது.