Showing posts with label திருமணம். Show all posts
Showing posts with label திருமணம். Show all posts

Oct 6, 2013

உடல், காதல், காமம் மற்றும் சில தீண்டப்படாதச் சொற்கள்:

முந்தைய காலத்தில் ஒருவருக்கு குழந்தை பிறந்துவிட்டால் உழைப்பதற்கு இரண்டு கைகள் கூடுதலாக  கிடைத்ததாகப் பெறுமை கொள்வார்களாம். உடல் என்பதை உழைப்பதற்கான கருவி, கொண்டாடப்பட வேண்டிய ஒன்றென்பது உலகாயத பார்வையாக இருக்க, கடவுள் நம்பிக்கையோ உடல் என்பது கர்ம வினை, பாவத்தின் விளைச்சல், பிரம்மத்தின் திருவிளையாடல் என்ற பேச்சை முன்வைப்பதோடு, உடலை அசுத்தமானதாக பறைசாற்றுகிறது.  சுத்தம் எனும் கருத்து உடலின் வெளிப்புற தன்மையை சுட்டுகிறது. மேலும் அது ’அகம்’ என்ற ஒன்றாகவும் பிரிக்கப்பட்டு ‘அகச் சுத்தம்’ என்பதை வலியுறுத்தித்  திணிக்கிறது.  இது மேலும் தீவிரமடைந்து உடலிலிருந்து உழைப்பைப் பிரித்து அதை ஈனமாக சித்தரித்து, அதை பெண்ணுடலாக, சாதியுடலாக மாற்றி உடல் பற்றிய வரையரையை உருவாக்கியது. 

குரங்கிலிருந்து மனித இனம் பரிணமிக்க உழைப்பே அடிப்படை. இயற்கையை மனிதன் தன்வயப்படுத்தியது உடலுழைப்பைக் கொண்டே. இயற்கையோடு மானுட உடலும் ஒன்றோடொன்று உறவாடியபடி உழைத்த பொழுதிருந்த செழுமையும், ஆரோக்கியமும் பறிக்கப்பட்டுவிட்டது.நவீன கண்டுபிடிப்புகளால் மூளை உழைப்பு அதிகரித்து வரும் சூழலில், உடல் என்பது இயந்திரத்தனமாக மாறிவருகிறது. அப்போதும் இப்போதும் பெண் உடலும், ஒடுக்கப்பட்ட இன மக்களின் உடலுமே ’உற்பத்தி’, ’லாபம்’, ’அதிகாரம்’ எனும் காரணங்களுக்காக சுரண்டப்படும் ஒன்றாய் இருந்து வருகிறது.

மூளையை பயன்படுத்தி, மூடிய அறைக்குள் இருந்து கொண்டு பணி புரிபவர்களின் வருவாய் லட்சக் கணக்கில், கோடிக் கணக்கில் இருக்க, தட்ப வெட்ப சூழல்களுக்கப்பால் தன் உடலை கருவியாகக் கொண்டு உழைக்கும் ஒருவருக்கு கிடைக்கும் தின வருவாய் அதிக பட்சம் முன்னூறு ரூபாய். உயிர் வாழ்வதற்கு தேவைப்படும் உழைப்பு என்பதைத் தாண்டி உழைப்பதற்காகவே உடலை சுமக்கும் நிலை. இந்நிலையில் விரும்பிய உழைப்பை செலுத்தி, விரும்பிய வகையில் உடலை பராமரிக்கவும், கொண்டாடவும் நமக்கு சுதந்திரம் இருக்கிறதா என்பது கேள்வியாக இருக்கிறது.

தனி மனித சுதந்திரம் என்பது அதிகார வர்க்கத்தின் அகராதிக்கு உட்பட்ட ஒன்றாகவும், அவர்கள் பரப்பும் கருத்துரைகளாகவும் தான் இருக்கிறது. உடல் சுதந்திரம் என்று பேசும்பொழுது, குறிப்பாக ஒரு பெண் பேசும் பொழுது அது பாலியல் சுதந்திரம் என்பதாகத்தான் புரிந்துகொள்ளப்படுகிறது. (பெண்) உடலுக்கு உடலுறவு ஒன்றே இன்பம் தரக்கூடியது எனும் திணிக்கப்பட்ட ஆணாதிக்கச் சிந்தனையின் விளைவே இது. அதிகார வர்க்கமானது உடலை இரண்டு முரண்களுக்குள் வைத்து கட்டுப்படுத்துகிறது. ஒன்று உழைப்பை சுரண்டுவதற்கான உடல் பற்றிய இழிவான சிந்தனைகள்.  இது எல்லோருக்குமானது. மற்றொன்று இழிவென்று சொல்லப்பட்டதையே இன்பம் என்று சுதந்திரத்தின் பெயரால் வியாபாரமாக்கப்பட்ட சுதந்திரம். இது ஒரு குறிப்பிட்ட சிலருக்கானது.  இந்த முரண்களிலிருந்து எழும் தாழ்வு மனப்பானமை, போட்டி மனப்பன்மை உடலோடு உடலை மோதவிடுகிறது. உணவு உண்ண, மலம் கழிக்க, உடலுறவு கொள்ள உடலுழைப்பை செலுத்தியே ஆகவேண்டும். எத்தனை அதிநவீன இயந்திரங்களை கண்டுபிடித்தாலும் இம்மூன்று செயலுக்காக மனிதர் உழைத்தே ஆகவேண்டும்.  நிலைமை பொதுவாயிருக்க அரசும் மதமும் மனித உடல்களை பாலினம், வர்க்கம், சாதி, மதம், இனம் எனும் அடிப்படையில் பிளவுபடுத்துகிறது. எந்த உடலை எவர் ஆள்வது, எவர் சுரண்டுவது என்பதற்கான திட்டங்களை அது வடிவமைக்கிறது.

உடல் உழைப்பு மற்றும் உழைப்புச் சக்தியை கைப்பற்றி, அவ்வுடல்களை பணப்பரிமாற்றமாக மாற்றுகிறது. பரிமாற்றத்திற்கு அடிப்படையாய் ஒழுக்கவாத கருத்தாக்கங்கள மூலதனமாகக் கொண்டு முதலாளித்துவத்துவமும், மதவாத கோட்பாடுகளும் உடலை, புலன்களை அடக்கி ஆள்கிறது.  அவ்வகையில் புலன்களின் இயல்பான உணர்ச்சிகள் கூட மறுத்தலிக்கப்பட்டு, சுய அனுபவத்தை தாண்டிய ஒரு அறிவு நிலைக்குள் வைத்து கண்காணிக்கப்படுகிறது. கண்காணிக்கப்படும் உணர்ச்சிகளில் முதன்மையாக இருப்பது காதல் மற்றும் காமம். 

காதலும் (ஈர்ப்பு), காமமும் உயிரியற்கை. ஆனால் பண்டைய காலம் தொட்டு பல்வேறு வகையான கருத்தியல்கள் இவ்விரண்டை சுற்றி ஏற்றிவைக்கப்பட்டிருக்கின்றன. காதல் என்பதற்கான விளக்கத்திலிருந்து உடல் உறவுக்கான விளக்கப்படங்கள் வரை இறையியலுக்கு நிகராக ஒரு மாயை கலந்த மிகையுணர்ச்சியுடன் கையாளப்படுகிறது.  ’காதல்’ என்ற பதம் ஒரு குறிப்பிட்ட வகையான ஈர்ப்பு உணர்ச்சி. இவ்வுணர்ச்சியை உயர்த்திப் பிடிக்கவும், நியாயப்படுத்தவும் கொடுக்கப்பட்ட ஒரு சொல்ஆண் பெண் அல்லது ஒரே பாலினத்தவர் இப்படி யாராக இருந்தாலும் ஒருவருக்கு மற்றொருவர் மீது ஓர் விருப்பம், ஈர்ப்பு என்பது பல்வேறு காரணங்களால் தோன்றுகிறது. குறிப்பாக, பதின் பருவ வயதில் இது தொடங்கி விடுகிறது. குழந்தைப் பருவத்தில் ஆண், பெண் நட்பு கண்காணிக்கப்படுவதில்லை. எல்லாவகையான தொடுதல் சுதந்திரத்தோடும் அந்த உறவு சாத்தியப்படுகிறது. அந்த பருவத்தில் பால் உறுப்பில் காணபப்டும் வேறுபாடுகளை குழந்தைகள் பேசிக்கொள்வதில்லை என்று நாம் உறுதிபடக் கூறிவிட முடியாது.  குழந்தைப் பருவத்தில் தொடுதல், கட்டி அணைத்தல், முத்தம் கொடுத்துக் கொள்ளுதல் என்பதை, அன்பின் வெளிப்பாடாகவே பெற்றோரும், இச்சமூகமம் கருதுகிறது. பெண் பருவம் எய்திய பின்னர் சில விதிமுறைகள் அவளுக்கு விதிக்கப்படுகிறது, பெண்ணுடல் சார்ந்த தன்மையிலிருந்து இவ்விதி எழுகிறது. விளைவுகளைக் கருதி வைக்கப்படும் இவ்விதியில் உடல் சார்ந்த கல்வியோ, அறிவுரைகளோ வழங்கப்படாமல் ‘புனிதம்’, ‘அகத் தூய்மை’, ‘கற்பு’ எனும் கருத்தாக்கத்தால் முன்வைக்கப்படுகிறது. 

புனைவு, இலக்கியங்கள் தொடங்கி திரைப்படங்கள் வரை பருவ மாற்ற உணர்வுகளை, எதிர் பால் ஈர்ப்பை சுவாரசியமான, வியாபாரப் பொருளாக கையாண்டிருப்பதின் விளைவாக உடலின் வெளிப்பாடான இருவகை உணர்ச்சியில் ஒன்றான ‘ஈர்ப்பு’ காதல் என்று புனிதப்படுத்தப்பட்டும், ’செயல்முறை’ என்பது முறையற்ற காமம் என்றும் இழிவு படுத்தப்பட்டும் கையாளப்படுகிறது.  தொடுதல் என்பது உயிரினத்தின் இன்றியமையாத வெளிப்பாட்டுக் கருவி. மனித உயிரினத்தில் குறிபிட்ட வயதிற்கு பின்னர் அது விதிகளுக்குள்ளாகிறது.  அதுவரை அனுபவித்து வந்த மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு அனுபவம் உடலுக்கு மறுத்தலிக்கப்படுகிறது.  தொடுதல், அரவணைத்தல், ஆகிய வெளிப்பாடுகள் மகிழ்ச்சி தருவதோடு மட்டுமல்லாமல், ஒரு பாதுகாப்புணர்வை, உறவின் வெம்மையை வெளிப்படுத்தக்ககூடியது. இது போன்ற சமிக்ஞைகளை புறம் தள்ளிவிட்டு எதிர்பால் உடல்களின் பௌதிக செயல்பாடுகளை (மதவாதிகள், ஊடகங்கள் பயன்படுத்தும் சொல் ‘கேவலம் உடல் இச்சை) மட்டும் கணக்கில் கொள்கிறது கண்காணிப்பு அரசியல்.  பருவம் எய்திய இரு எதிர்பால் உடல்களின் (சமீப காலங்களில் ஓர்பால் உறவு கொள்பவர்களாக இருக்கக்கூடும் எனும் கண்காணிப்பும் இப்பொழுது நடக்கிறது) எல்லாவிதமான உடல் மொழியையும் காமம் என்பதற்குள் சுருக்கிக் காண்பதை ஆணாதிக்க தாக்கம் என்றுதான் சொல்லவேண்டும்.

இந்த ஒடுக்குமுறையிலிருந்து தப்பித்துக்கொள்ள சம்பந்தப்பட்ட இரு உடல்களுக்கு ஒருவித சமூக அங்கீகாரம் பெற்ற உறவுமுறை தேவைப்படுகிறது. உடல்களுக்கு அவ்வங்கிகாரம் வேண்டி ‘காதல்’ என்ற ஒன்றை பற்றிக்கொள்வதைத் தவிர வேறு சாத்தியம் இருப்பதாகத் தெரியவில்லை.  ஒருவர் மீது ஏற்படும் ஈர்ப்பு, அதன் தொடர்ச்சியான பேச்சு, பழக்கம், தோழமை என்பது ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது, அவரோடு தொடர்ந்து பேசுவது, கூடவே இருப்பது, எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வது ஒரு மகிழ்வைத் தருவதாக உணரும்பொழுது இன்னும் நெருக்கம் அதிகமாகிறது. அவ்வப்போது தொட்டுக் கொள்வது, கட்டி அணைத்துக் கொள்வது என்று அன்பை வெளிப்படுத்த துவங்கும்போது, கூடவே ஒரு குற்ற உணர்வு தலைதூக்குவதை பெரும்பாலானவர்கள் ஒப்புக்கொள்ளக் கூடும். சமூகம் விதித்திருக்கும்  ‘கற்பு’ சார்ந்த விதிமுறைகளால் பீடிக்கப்பட்டிருக்கும் பெற்றோர்கள் மகன் மகள்களைக் கண்காணிப்பதும், சமூகம் என்கிற ஒரு அதிகார வர்க்கத்தின் கண்காணிப்பும், அதன் விளைவுகளால் வரும் குற்ற உணர்வும் அடுத்த கட்டம் நோக்கி தள்ளும் பொழுது அவர்களின் ‘உறவைத் தக்கவைத்துக் கொள்ளும்’ போராட்டத்தில் ‘காதல்’ என்ற அடையாளம் உள் நுழைந்துவிடுகிறது.

இதுமட்டுமல்லாது இன்னும் சில உளவியல் கூறுகளை ஆண், பெண் உறவில் அவதானிக்க முடியும். உடல் உறவு என்பது வேட்கையாக இல்லாமல் இருந்தாலும், சிறு சிறு உடல் மொழி வெளிப்பாடுகளுக்கும் நியாயம் கற்பிக்க வேண்டி, அதற்கு ஒரு ‘புனிதத் தன்மை’ வேண்டி ‘காதல்’ எனும் அடையாளம் தேவைப்படுகிறது.  ’அழகு’ அதற்கான அங்கிகாரம், பாராட்டு இவைகளுக்காக ஏங்கும் அல்லது அது கிடைக்கும் பொழுது மகிழும் மனமானது, அவ்வயதில் ‘காதல்’ என்பதை ஓர் கிடைத்தற்கரிய பேறாக, சாதனையாக, வாழ்வின் அத்தியாவசியப் பொருளாக கருதும் வகையில் மனங்களில் ஊடுருவுகிறது. பெண்ணாய் இருந்தால் தன்னால் ஒரு ஆணை கவர முடியுமா முடியாதா என்று தத்தளிக்கிறது, ஆணாய் இருந்தால் பெண்ணின் கவனத்தை நாடுகிறது. ஈர்ப்பு கொண்ட ஒருவரை தக்கவைத்துக் கொள்ள நினைப்பதை ஒருவகையில் கிடைத்த அங்கீகாரத்தை தக்கவைத்துக் கொள்ளும் செயலாக எடுத்துக்கொள்ளலாம். பொருளாதார ரீதியில் பின் தங்கியிருக்கும் நபர்களுக்கு, ’சமூகம் வரையறுத்திருக்கும் நிறம், உடல் அளவு, அழகு, தகுதி’ எனும் இத்தகைய ’அளவுரு’க்களில் குறைபாடுடையவராக தன்னைப் பொறுத்திப்பார்க்கும் நபர்களுக்கு ‘எதிர் பால்’ உறவு அல்லது தனக்கென ஒரு ‘உறவு’ அமைவது ’தன்முனைப்பாற்றலை’ (egoism) ஆற்றுப்படுத்துகிறது.  அதன் தொடர்ச்சியாக ஏற்படும் மனவெழுச்சியை, தற்பெருமையை இழக்க அந்நபர்கள் தயாராயிருப்பதில்லை, குறிப்பாக ஆண். அதன் தொடர்ச்சியாக ஏற்படும் உடமை உணர்வு அவ்வுறவில் தாக்கம் செலுத்தத் துவங்குகிறது.

ஏற்கனவே ஆண் பெண் உறவு பற்றிய கருத்தாடல்கள், கண்காணிப்புகள், ‘கற்பு’ சிந்தனைகள் ஆகியவை ’தயார் ஆயுதமாக’ கிடைக்க, இயற்கை வெளிப்பாடான ஈர்ப்பு உணர்வு, அதை ஆற்றுப்படுத்தும் உடல் மொழி வெளிப்பாடுகள் இறுகி இறுகி ’காதல்’ என்று உருவெடுத்து ஒரு ‘புனிதத் தன்மை’க்குள் பொய்மையாகச் சுருங்கிவிடுகிறது.  பெண்ணுக்கு இது கிட்டத்தட்ட ‘பால்ய விவாக’த்திற்கு நிகரான விலங்காக அமைந்து விடுகிறது.  ஆணுக்கு அது தன் ‘ஆண்மை’ சார்ந்த சவாலாகிவிடுகிறது. தன் ‘காதலை’ ஏற்க மறுக்கும் பெண்ணை அமிலம் ஊற்றி மிரட்டும் அளவுக்கு இந்த ஆண்மை உணர்வு ஆட்கொள்கிறது. (தான் காதலிக்கும் பெண்ணின் வீட்டில் நவீன ஒட்டுக் கேட்கும் கருவிகளைப் பொறுத்தி அப்பெண்ணுக்கும், அவளது பெற்றோருக்கும் அச்சுறுத்தல் விடுத்த நிகழ்வுகளும் இப்பொழுது நடந்தேறிவருகிறது.இதில் உள்ள கண்காணிப்பு அம்சத்தையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்.)

பெண்கள் மத்தியில் இது வேறு விதமாக செயல்படுகிறது, சிறுவயதிலிருந்தே அவள் ‘பெண்மையுடன்’ ஆணை சார்ந்திருக்குமாறே வளர்க்கப்படுவதால், ’காதல்’ கொள்ளும் பருவத்திலும் அவள் மனதளவில் ‘மனைவி’ என்ற பாத்திரத்தை கடைபிடிக்கத் துவங்குகிறாள், ஆண் ‘கணவனாக’ அவளை வெளியில் அழைத்துச் செல்வது, அவளுக்காக செலவு செய்வது என்று ‘ஆண்மையை’ கட்டிக் காத்துக் கொள்கிறான். (அவ்வளவும் பெற்றோரின் பணத்தில் நடந்தாலும்). அப்படி செலவு செய்யக்கூடிய ஒருவனையே சில பெண்கள் நாடுவதென்பதும் சமூகத்தில் ஒரு உயர்வு நிலையில் வாழ்பவர்களுக்கு கிடைக்கும் மதிப்பின் விளைவே. தனக்கு கிடைத்திருக்கும் ‘ஆள்’ ’பணம் படைத்தவன்’ என்று மார்தட்டிக்கொள்ளும் தற்பெருமை உணர்வு. அது தொடர்ச்சியாக நடக்கும்பொழுது அவனது ‘அன்பிற்கு’ ஈடாக தன் உடலை கொடுப்பது எனும் முடிவுக்குப் பெண் வந்துவிடுகிறாள். மேட்டுக்குடி பெண்ணாய் இருப்பின் தற்காலத்திய குழப்பவாத ’முற்போக்கு’ சிந்தனைகள் அவள் உதவிக்கு வந்துவிடும்.  சமூகத்தின் ’அழகு’ வரையரைகளினால் தாழ்வு  மனப்பான்மையில் உழலும் ஆண் ‘அழகான’ பெண்ணைக் கவர, தக்கவைத்துக்கொள்ள பணத்தை பயன்படுத்துவதையும் காணமுடிகிறது.  சாதாரண உடல் ஈர்ப்பும் அதற்குத் தேவைப்படும் வழிகாட்டலும், மறுக்கப்படும் சுதந்திரமும் இரு உடல்களை இத்தகைய சிக்கல்களில் கொண்டுவந்து விடுகிறது. 

மறுபுறம் சமூக வரையரையினால் ‘காதல்’ பற்றிய புரிதலை வளர்த்துக் கொள்ளும் நபர்கள் அது முறிந்துவிடும் பொழுது தற்கொலையை நாடுகின்றனர். அங்கு தனது உடலுக்கு நேரும் தோல்வியை உடல் கொண்டே பழிதீர்த்துக்கொள்ளும் மனநிலை ஓங்குகிறது. ‘உறவு முறிவு’ என்பது பெறும் அவமானத்துக்குரிய விசயமாக கருதும் அளவுக்கு ‘காதல்’ மிகையுணர்ச்சி நிறைந்ததாக உருவேற்றப்பட்டிருக்கிறது. திரைப்படங்கள், மற்றும் எண்ணற்ற ஊடகங்கள் இதில் பெரும் பங்கு வகிக்கின்றன.  திருமண முறிவைக் காட்டிலும் ‘காதல்’ முறிவுகள் பெரும் ‘புனித’ அளவீடுகளால் அளக்கப்படுகின்றன. அதனால் நிகழும் தற்கொலைகளும் அதிகமாக இருக்கின்றது. ( அந்தத் தற்கொலையும் புனிதமான ஒன்றாக இங்கு கற்பிக்கப் படுவதை வைத்து இதன் தன்மையை உணரலாம்)

மனதில் ஒருவனை நினைத்துவிட்டால் அம்மனதில் மற்றொருவனை நினைப்பதென்பது வேசைத்தனம் என்று மீண்டும் மீண்டும் ஓதப்படும் கருத்தானது, அச்சிறு வயதிலேயே ஆணின் எத்தககைய வன்முறைகளையும், விதிமுறைகளையும் சகித்துக் கொள்ள வேண்டும் எனும் கருத்தை பெண்கள் மீது திணிக்கிறது.  ஆண்களுக்கு இது கற்பு சார்ந்த விசயமாக இருப்பதைக் காட்டிலும் ‘ஆண்மை’ சார்ந்த பிரச்சனையாக இருக்கிறது. தற்காலத்தில் இதெல்லாம் சர்வசாதாரணமாகி விட்டது என்று சொல்வது சில மேட்டுக்குடிக் ‘காதல்’களை மட்டும் கணக்கில் கொள்வதாகும். 
ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பின்னர் ஒருவருக்கு மற்றொருவர் உறவு தேவைப்படுகிறது. இது தவிர்க்கவியலாத ஒன்றாக இருப்பதை பெற்றோர் நினைவில் கொண்டு தங்கள் பிள்ளைகளை கையாள்வதும், அவர்களுக்கு வழிகாட்டுவதும் அவசியமாகிறது. நிச்சயம் அவர்களும் அத்தகைய உணர்வுகளை கடந்து வந்திருப்பர். உடல் தேவைகளை இயற்கையான உணர்வுகளாக புரிந்து கொண்டால் மட்டுமே பிள்ளைகளுக்கு சரியாக வழிகாட்ட முடியும். மத கருத்தாடல்களை போற்றி ‘கற்பு’, ‘தூய்மை’, ‘புனிதம்’, ‘பெண்மை’ ‘பெண்’ என்று பரிதவிப்பார்களானால் அதெல்லாம் வெறும் கட்டுக்கதை என்று அறிவைக் கொண்டு தர்க்கம் செய்து வென்று விடுவதொன்றும் சிரமமல்ல.   

காதலுக்கும், காமத்திற்கும் பெரிய வேறுபாடு இருப்பதாக கருதுவது தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்வதாகக்கூடும். அது மனம் என்று கற்பிக்கப்பட்ட ஒன்றை தர்க்கம் செய்து ஏமாற்ற உதவுமே அன்றி உயிரியல் பூர்வ உண்மையாக இருக்க வாய்ப்பில்லை.  ’பாலியல் செயல்பாடுகளுக்கு உரிமம் அளிக்கப்பட்ட’ ஒன்றாக காதலை கருதுவது தவறாகிவிடாது. (It’s just license to touch & feed the desire to sex).  இதில் விவாதிப்பதற்கு என்ன இருக்கிறது என்று தோன்றலாம், கண்டிப்பாக இருக்கிறது. ‘காதல்’ என்பது ஒரு அதிசயப் பொருளாக, புனிதப் பொருளாக, ‘திரைப்பட விற்பனைப் பொருளாக’ இருப்பதால் அது பற்றிய கட்டுடைப்புகள் தொடர்ந்து அவசியமாகிறது.
 
’ஈர்ப்பு’ உணர்ச்சி உயிரியர்க்கை என்று புரிந்து கொள்வதும், அதை திறம்பட கையாள்வது பற்றிய பாலியல் கல்வியும், பெண்ணுள் ஆளுமையை வளர்க்கும் பெண்ணியக் கல்வியும் தேவைப்படுகிறது. சில பள்ளிகள் பாலியல் கல்வி அளிக்கப்படுகிறது என்றாலும், இன்னும் முழுவீச்சில் அது முன்னெடுக்கபப்டவில்லை.  உயிரியர்க்கை என்று பேசுவதால், விருப்பம் போன்று காமத்தை துய்க்கும் சுதந்திரம் வேண்டியோ அல்லது அதைக் கட்டுப்படுத்த வேண்டியோ இக்கட்டுரை எழுதப்படவில்லை. உயிரியர்க்கையை எப்படி கையாள்வது எனும் அறிவும், அதற்குப் பின்னணியில் செயல்படும் ஆணாதிக்க சமூகம் திணித்திருக்கும் உளவியலை அறிந்துகொள்ளமுற்படுவதும் தேவை என்று வலியுறுத்துவதே இதன் நோக்கம்.  அதன் மூலம் காதலின் பரிசாக கிட்டும் கலப்பு திருமணங்களை எதிர்த்து ‘காதலர்களை’ எரிக்கும் அளவுக்கு செல்லும் வெறியர்களை ’புனிதக் கேடு’, ‘ஊருக்கு அழிவு’, ‘சாதிக் கேடு’ என்று கருதி சமூகம் சகித்துக் கொள்ளவேண்டிய அவசியமில்லை.

’காதல்’ உறவில் ஏற்படும் பாலுணர்வு வேட்கை எவ்வாறு கையாளப்படுகிறது என்று பார்க்கையில் பெரும்பாலும் அதற்கு வடிகால் தேடி ‘காதலர்கள்’ தங்கள் வசதிக்கேற்ப இடங்களை நாடிச் செல்கின்றனர். ‘புனிதமாக’ துவங்கும் காதலில் சில நாட்களிலேயே உடல் தேவைகள் ஊடுருவிடுவதை ‘புனிதவான்கள்’ எப்படி பகுப்பாராய்கின்றனர். அதற்கு மத ரீதியான கட்டுப்பாடுகளை ‘அகம்’ ‘புறம்’ என்று பேசி பூசி மெழுகுகின்றனரே ஒழிய அதை இயல்பூக்க அடிப்படையில் பகுத்தாராய்வதில்லை.  மனதை அடக்கியாள்வதைப் பற்றிய பிதற்றல்கள் நடைமுறையில் எத்தகைய பயனையும் அளிப்பதில்லை மாறாக மன உளைச்சல்களையே அதிகரிக்கிறது.  இயல்பூக்கம் என்று புரிந்து கொண்டு ஒவ்வொரு பெற்றோரும் அவர்கள் பிள்ளைகளுக்கு அத்தகைய உணர்வுகளுக்கு வடிகால் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதல்ல வாதம், ஆனால் குறைந்தபட்சம் அத்தகைய உணர்வுகள் இயற்கையான ஒன்று என்று விளக்கும் பொழுது தனக்கு ஏற்படும் பரவச உணர்வை கையாளவும், அப்பரவசம் கிட்டாத போது மனமுடைவதற்கு ஒன்றுமில்லை என்பதை புரிந்து கொள்ள உதவும். ‘புனிதக் கேடு, கற்புக் கேடு’ என்று எதுவுமில்லை என்ற புரிதல் எழும்போது ஆண், பெண் உறவு இன்னும் ஆரோக்கியமாக வளரும் வாய்ப்பிருக்கிறது. தோழமையோடு பழகும் இருவர் தங்களை சமூகத்தின் பார்வைக்காக ‘காதலர்கள்’ என்று அறிவித்துக் கொள்வதும், உடைமைப் பொருளாக ஒருவரை ஒருவர் கருதிக் கொள்வதும் நேராமல் தவிர்க்கலாம். பாலியல் கல்வி மூலம் ‘சுய இன்பம்’ பற்றிய குற்ற உணர்வு போக்கப்பட்டுவிட்டால் பாலியல் தேவைக்காக எதிர்பாலை சுரண்டும், ஏமாற்றும் போக்கு குறையலாம்.  மேலும் குழந்தைகள், பெண்கள் வன்புணர்வு, உடல் சிதைப்பு, கொலை ஆகியவை இந்த குற்றவுணர்வை போக்குவதன் மூலம் குறையலாம்.  அத்தோடு, ஒரு முதிர்ச்சியான மனநிலையில் தனக்குப் பொருத்தமான வாழ்க்கைத் துணையை தேடும் நிதானமும் கிட்டும்.

பெற்றோரும், சமூகமும் ‘இராணுவ அதிகாரிகளாக’ செயல்படுவது ஒரு எல்லை என்றால் ’சுதந்திரம்’ என்ற பெயரில் எல்லாவற்றையும் கேள்வியின்றி அனுமதிக்கும் மனநிலை மற்றொருபுறம். கேள்வியின்றி அனுமதிக்கும் ‘சுதந்திர’ உறவைக் காட்டிலும் கேள்வி கேட்டாலும் அதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளும் உறவே இன்று அவசியமாகிறது. அது முற்றிலும் வெளிப்படைத்தனமையை அறிவுபூர்வமாக அனுமதிக்கும் உறவாக இருப்பது பயனளிக்கும். இது பெற்றோர் பிள்ளை உறவுகளில் மட்டுமின்றி, சமூகத்தின் எல்லா வகை உறவுகளுக்கும் பொருந்தும். சமூகமே காமம் என்ற உணர்வை கட்டுப்படுத்த வேண்டிய ஒன்றாக பார்ப்பதில் இருந்து ‘கையாளப் படவேண்டிய’ உணர்வாக பார்ப்பது அவசியம்.  

உடல் வேட்கைக்கு வடிகால் தேடிச் செல்வதைப் பற்றி மேற்சொன்னப் பத்தியில் குறிப்பிட்டதை சற்று விரிவுபடுத்திப் பார்ப்போம்.  ‘காதலர்கள்’ தங்களது உணர்வுகளை பொதுவெளியில் வெளிப்படுத்துவது பற்றி  பல்வேறு கருத்துக்கள் நிலவுகிறது. ஆபாசமாக நடந்து கொள்கிறார்கள் என்பது ஒரு சாராரின் குற்றச் சாட்டு, அது அவர்களது சுதந்திரம் என்பது மற்றொரு சாராரின் கருத்து. இரண்டையும் உரையாடலுக்கு உட்படுத்துவோம்:

எவ்வகையில் உயிரியற்கை செயல்பாடுகள் ஆபாசம் எனப்படுகிறது. எவருக்கு அது ஆபாசம். நாய்களைப் போல் நடந்து கொள்கின்றனர் என்று சொல்லப்படுகிறது.  நாய்களை நாம் கண்காணிப்பது நாய்களுக்குத் தெரியாது, அது அதைப் பற்றி அவைக் கவலைப்படுவதும் இல்லை. ஒரு அறிவு கூட இருப்பதால் பகுத்தாராய வேண்டும், பண்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்போர் இந்த பகுத்தாராயும் திறனை பெரும்பாலும் உடலுறவு, பெண் நடத்தை சார்ந்த விசயங்களுக்குப் பொருத்திப் பார்ப்பதோடு நிறுத்திவிடுகின்றனர். தனிச்சொத்து பேணுதல், பொருள் சேர்ப்பதற்காக செய்து கொள்ளும் சமரசம், சமூகத்தில் நிலவும் படிநிலை பாகுபாடு, சாதிய பாகுபாடு, லஞ்ச லாவண்யம், சர்வாதிகாரப் போக்கு ஆகியவற்றில் எத்தகைய பண்பையும், பகுத்தறிதலையும் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக ‘உடலை’ விற்பனைப் பொருளாக பயன்படுத்தும் திரைத் துறை, ஊடகத் துறையினருக்கு ஏன் அத்தகைய ‘பண்பு’ பொருந்துவதில்லை. முறையற்ற உடலுறவு ‘புனிதக் கேடு’ என்போர் முறையுடன் உறவு கொள்ளும் முறையை ஏற்படுத்திக் கொள்வதற்கு முன்னர் இருந்த சமூக அமைப்பை அறிந்திருக்கவில்லையோ எனும் ஐயம் ஏற்படுகிறது. 

ஒரு கடவுள் கோட்பாட்டிற்கும், தந்தை வழிச் சமூகத்திற்கும் மாறும் காலகட்டத்திலிருந்துதான் ’உறவு’ பற்றிய பல்வேறு வகையான சமூக கருத்தாக்க மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஒருவகையில் ஒடுக்குமுறை மாற்றங்கள் என்று சொல்லலாம்.  ஆடையின் தோற்றம் நிர்வானத்தை ஆபாசமாக்கியது போல், தந்தைக் கடவுள் கோட்பாடு உயிரியர்க்கை உணர்வுகளை ஆபாசம் என்கிறது.  அவ்வளவே. காலத்திற்கேற்ப ஏற்படுத்திக் கொள்ளும் சமூக முறைமைகள் ஒரு வசதிக்காகவேயன்றி அதுவே காலம் முழுமைக்குமான சட்டமாகி விடமுடியாது. மேலும் அப்படி அமைக்கப்படும் முறைமைகள் குறித்தான குறை நிறைகளை உரையாடலுக்கு உட்படுத்துவது தர்க்கபூர்வமான அனுகுமுறையாகக் கருதாமல் ‘புனிதக் கேடு’, ‘சீர் கேடு’ எனக் கருதுவது ஆணாதிக்க மதக் கருத்தாக்கத்தில் ஊறிப் போனதன் விளைவு.

காதலின் வரலாற்றோடு காதல் எனும் உணர்வில் வேதியலின் செயல் மற்றும் உடற்கூறியல் ஆகியவற்றை டயன் அக்கர்மென் விளக்குகிறார்.  காதல் இயற்கையானது, மனவெழுச்சி தரக்கூடியது என்கிறார். அப்படி இயற்கையான காதலுணர்வு மூளையின் ஒரு பகுதியில் ஏற்படும் காயத்தினால் வேதியல் மாற்றத்திற்கு ஆளாவதைக் குறிப்பிடுவதோடு, பொருளாதாரச் செழுமை அல்லது இன்மை எப்படி காதல் உணர்வில் தாக்கம் செலுத்துகிறது என்றும் விளக்குகிறார். ஜான் எனும் 35 வயது நபருக்கு மூளையில் தீங்கு விளைவிக்கும் கட்டி அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்படுகிறது. அதற்குப் பிறகு அவருடைய ஆளுமைப் பண்பு முற்றிலும் மாறிவிடுகிறது.  மீண்டும் அவரைப் பரிசோதித்துப் பார்த்ததில் அவருடைய மூளையின் மேற்புறப் பகுதியில் முன்புறம் உள்ள சாம்பல் நிறப் பகுதி சிதைந்திருப்பதை கண்டறிந்தனர்.  அது ஒரு மனவெழுச்சித் தொழிற்சாலையாக இருந்திருக்கவேண்டும்.  மனவெழுச்சி கொடுக்ககூடிய பாலியல் சார்ந்த ஸ்லைடுகள், வன்முறை நிகழ்வுகள், இதர நிகழ்வுகள் என எவற்றுக்கும் ஜான் எவ்வித சைகையையும் வெளிப்படுத்தவில்லை. பூந்தோட்டமும், கொலைக்களமும் அவருக்கு ஒன்றுபோல் தோன்றியிருக்கிறது.  மனிதத்தன்மையற்று போனார். அதாவது மனிதத்தன்மையுடன் இருப்பது என்பது மனவெழுச்சியுடன் இருப்பதாகும், ஒழுங்காக காதல் உள்ளிட்ட பல வகையான மனவெழுச்சிகளால் தாக்கப்படும் ஒரு உடலைப் பெற்றிருப்பது என்பதாகும்.

மற்றொரு உதாரணத்தில் அவர் ஆப்பிரிக்க ஈக் இன மக்களைப் பற்றிய டெர்ன்புல்லின் கள ஆய்வுத் தகவல்களைக் கொண்டு பொருளாதார சூழல் மனிதர்களில் காதல் உணர்வை, நற்பண்புகளை பறித்துக் கொண்டுவிடுகிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். எல்லாப் பழங்குடி இனத்தவரைப் போல் களித்து வாழ்ந்திருந்த ஈக் இன மக்களின் மனங்கள் காதல் உணர்வை இழந்து நின்ற காலம் உருவெடுத்திருந்தது. உகாண்டா அரசு அவர்கள் வேட்டையாடிய ஒரு பகுதியில் வேட்டையாடுவதற்கு தடை விதித்த பின்னர் அம்மகளுடைய பொருளாதார நிலைமை சிதைவுறுகிறது.  மூன்று தலைமுறைகள் கடும் வறட்சிக்கும், பட்டினிக்கும் பிறகு ஈக் இனத்தவர்கள் எதிர்ப்பு மனப்பான்மை உள்ளவர்களாகவும், சுய நலமுள்ளவர்களாகவும், அற்பத்தனம் உள்ளவர்களாகவும் ஆனார்கள் என்கிறார். மேலும், “அவர்கள் காதலையும் (*இங்கு காதல் எனப்படுவது உடலுறவு கொள்வதைக் குறிக்கிறது), மற்ற நற்பண்பியல்களுடன் தொலைத்து விட்டனர்.  ஏனெனில் அதை அவர்கள் வழங்க இயலாத நிலையில் இருந்தனர்.  அது பொருளாதாரம் சார்ந்ததாக இருந்தது. அவர்கள் விழித்திருக்கும் ஒவ்வொரு விநாடியையும் அவர்களது கழிவறையில் உட்கார்ந்து கொண்டும், பாலியில் உறவு கொண்டும் (மிகவும் அரிதான செய்கை) உணவுக்கு வானத்தை உற்றுநோக்கிக் கொண்டும் செலவிட்டனர்”.  ஒருவருக்கொருவர் கைமைதுனம் செய்துகொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் கூட அதில் முழுமுற்றான இன்பத்தை பெறமுடியாமல் இருப்பதை கண்ட அவர் சொல்வது “அவர்கள் உணவு கிடைக்க அடையாளங்கள் உள்ளனவா என்று வேறு வேறு திசையைப் பார்த்துக் கொண்டிருந்தனர்” என்கிறார்.

மேற்கூறிய உதாரணங்களில் ஒன்று புறச் சூழலால் நிகழ்ந்த விளைவு, மற்றொன்று நரம்பு மண்டலத்தில் ஏற்பட்ட காயத்தினால் வந்த விளைவு. இதோடு ஊட்டச்சத்துக் குறைவும் மூளை வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சத்துக் குறைபாடுள்ளவர்களுக்கு காதல் உணர்வு எத்தகைய மனவெழுச்சியை ஏற்படுத்தும் என்பது இங்கு கேள்விக்குறியதாய் இருக்கிறது. சோமாலிய மக்களுக்கு காதலை அனுபவிக்கும் அகச் சூழலும் இல்லை, புறச் சூழலும் இல்லை என்பதை நாம் நினைவு கூறலாம்.   “ஒரு பழங்குடி இனத்தவரிடையே காதல் இவ்வளவு சீக்கிரம் அழிந்து போகும் என்றால் அது அத்தியாவசியமானது அல்ல” என்கிறார் அக்கர்மென். இச்சூழலில் புனிதத்தன்மை கேள்விக்குள்ளாகிறது. “பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்ற ஔவையார் கூற்று இங்கு ஆராயத்தக்கது. இந்தியாவில் இந்த புனிதப் பித்து சகித்துக் கொள்ள முடியாத நிலையை எட்டியதில் சாதியத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. பசு மூத்திரத்தைக் கூட புனிதம் என்று சொல்லி நம்மை அருந்தச் செய்யும் திறன் மிக்க ‘புரோகிதர்கள்’ நம்மிடையே இருக்கின்றனர்.

“காதல் என்பதும் பரிணாம வளர்ச்சியின் ஓர் அங்கமே. காதல் உணர்வு (மனவெழுச்சி) மேலெழும்போது உயிர் மறு-உற்பத்திக்கான அடித்தளமாய் உடலுறவுக்கான இச்சை தூண்டப்படுகிறது. சந்ததிகள் பெருகுவதை உணர்ந்த ஆதிகால மனிதர்கள் அதை ஓர் உயிரியல் கட்டளையாக உணர்திருக்கின்றனர்.  ”அந்த வழித்தோன்றல்கள் காதலிக்கும் ஆற்றலை மரபு வழியில்  பெறுகிறார்கள்.  காலப்போக்கில் காதலிக்கும் எண்ணம் நம்முடைய மரபணுத்திரள் அமைப்பு முறையின் ஒரு பாகமாகிவிடுகிறது. அதன் பிறகு அது எண்ணம், நாட்டம் அல்லது வெகுமதி என்ற அளவில் இல்லாமல் மிகவும் ஆழமாகப் பதிக்கப்பட்டு, வாழ்க்கையில் நம்முடைய ஒவ்வொரு முயற்சிக்கும் துணைபுரிவதாய் அமைகிறது. மனிதர்கள் மனவெழுச்சியுடன் துணிகர முயற்சிகளை மேற்கொள்ளும் முதலாளிகளாக ஆகிறார்கள்” எனும் அக்கர்மென் மேலும் சொல்வது தனக்கு பிடித்தமான ஒருவரை காணும்போது இதயத்துடிப்பு அதிகரிக்கிறது என்றும் அதனால் தான் இதயத்தை காதலின் இடமாக கருதத்தோன்றுகிறது என்றும் கூறுகிறார்.

காமம் என்பது இழிவான ஒன்றாக பார்க்கப்படுகிறது, அதே வேளை காதல் இதயத்தில் இருப்பதாக கருதப்படுகிறது. வேடிக்கை என்னவென்றால் இரண்டும் ஒரே உடலின் மூலமே உணரப்படுகிறது.  “மனம் மூளையை மட்டும் இடமாகக் கொண்டிருக்கவில்லை, அது உடலெங்கும் முடிவில்லாத நாளமில்லா சுரப்பிகள், நொதியங்கள் கொண்ட குழுவுடன் பயணிக்கிறது. இதயத்தை அறுவை சிகிச்சை செய்துப் பார்த்தால் காதல் எங்கிருக்கிறது என்பதற்கான தடயம் ஏதும் இருப்பதில்லை”. (அக்கர்மென்)
காதலில் எழுவதும் மனவெழுச்சிதான், காமத்தில் ஏற்படுவதும் மனவெழுச்சிதான். இவ்வுச்சம் (Orgasm) சிலருக்கு பிடித்த உணவை சாப்பிட்டவுடன் ஏற்படுகிறது, சிலருக்கு பிடித்த இசையைக் கேட்டவுடன் ஏற்படுகிறது. தொலைபேசியில் எப்பொழுதும் பேசிக்கொண்டிருப்பதில் என்று பல்வேறு நிலையில் உச்சத்தை ஒருவர் அடையக்கூடும்.  இவையெல்லாம் புறசுழலின் உதவியோடு ஒரு உடலில் ஏற்படும் மனவெழுச்சி. இதையெல்லாம் ஆபாசம் என்று கருதாத சமூகம் உடலுறவு கொள்ளும்பொழுது அங்கு இரு உடல்கள் உறவு கொள்வதை ஆபாசம் என்கிறது. சாதீய (இனக்) கலப்பு நேர்ந்து விடக்கூடாது, சொத்து கை மாறிவிடக்கூடாது என்பதன்றி இதற்கு வலு சேர்க்கும் காரணம் எதுவுமில்லை.

சுரண்டல்வாத அதிகார மையமாக உருவான மதம் எனும் நிறுவனம் சதா சர்வ காலமும் காமத்தைப் புனிதக் கேடு என்கிறது. அந்நிறுவனமானது முதலாளி வர்க்கத்திற்கும், (முன்னர் நிலப்பிரபுத்துவ வர்க்கத்திற்கு) அரசுக்கும், மக்களுக்கும் இணக்கம் காண முடியாத ஏற்பாடுகளை செவ்வனே செய்கிறது. இம்மூன்று அதிகார வர்க்கத்தினருக்கும் உழைப்பதற்கும், விசுவாசத்திற்கும் மனித உடல் தேவைப்படுகிறது, அது அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை மட்டுமே அவர்கள் அதிகார வர்க்கமாய் இருக்க முடியும் என்பதை அறிந்து வைத்திருக்கின்றனர். அதை உழைக்கும் மக்கள் அறிந்து கொள்ள முடியாத வகையில் அவர்கள் அறிவு நிலைகள் மழுங்கடிக்கப்படுகின்றது.

எதுவும் பலிக்கவில்லையென்றால் துறவு எனும் ஆயுதத்தைக் கையில் எடுக்கின்றனர். ’துறவை’ புனிதமாக எவ்வளவு பேசினாலும், அத்தகைய துறவை மேற்கொள்ளும் உடல், உடல் உறவிலிருந்துதான் பிறந்தது என்பதை மறுக்க முடியுமா. குழந்தையாக இருக்கும் போது ஆராதிக்கப்படும் உடலானது, பருவ வயதெட்டியவுடன், பொருள் ஈட்டும் வயது வந்தவுடன் பல்முனை தாக்குதல்களுக்கு உள்ளாகிறது. அந்த உடலைக் குறிவைத்து பலரும் தங்களது கருத்தாக்க அம்புகளைத் தொடுக்கின்றனர். ஒவ்வொரு உடலும் சமூக உற்பத்தித் தேவையின் மூலதனம் என்பதே இதற்கு காரணம்.

தாய் வழிச் சமூக மரபில், உலகயாத மரபில் துறவு எனும் கருத்தாக்கம் இருந்திருக்கிறதா என்பது கேள்வியாக இருக்கிறது. தந்தைக் கடவுள் கோட்பாடு வந்த பின்னரே இக்கருத்து தோன்றியிருப்பதாகத் தெரிகிறது. பெண்களின் பல்முனைத் திறனால், மறு-உற்பத்தி திறனால் பொறாமை கொண்ட ஆண் சமூகமானது தாழ்வு மனப்பான்மையிலிருந்து தங்களை மீட்டுக்கொள்ளவும், பெண்களிடமிருந்த அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ளவும், சமூகத்தில் தங்களது அதிகாரங்களை நிலை நிறுத்திக் கொள்ளவுமாக ‘துறவை’ தோற்றுவித்திருக்கிறது என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது. இது இரு பலன்களை அவர்களுக்கு கொடுத்தது. ஒன்று பெண்களின் மீது ஆண்களுக்கான கட்டுப்பாடில்லாத அதிகாரம். மற்றொன்று சமூகத்தின் மீதான அதிகாரம். பெண்களின் மீதான அதிகாரம் அவர்களின் மறு-உற்பத்தி சக்தி, அத்தோடு தொடர்புடைய உழைப்புச் சக்தியைக் கட்டுக்குள் வைப்பதாக அமைகிறது. மற்றொன்று சமூகத்தின் மீது அதிகாரம் செய்யும் பலத்தை அவர்களுக்களித்தது.

ஒரு குழந்தை ஆரோக்கியமாக வளர்வதற்கு தொடுதல், கட்டியணைத்தல், முத்தமிடுதல் அவசியம் என்று ஆய்வுகள் சொல்கின்றன, அது ஒரு பாதுகாப்புணர்வை தரக்கூடியது, அதனால் குழந்தை மகிழ்ச்சியுடன் வளர்கிறது, அத்தகைய தொடுதல் இன்றி வளரும் குழந்தைகள் பல்வேறு குறைபாடுகளுடன் வளர்கிறது. எலிகள், குரங்குகள் மற்றும் மனிதர்களிடம் நடத்திய ஆய்வில் தடவிக் கொடுக்கப்பட்டு காதலிக்கப்பட்டவை இயற்கையான வளர்ச்சியைப் பெறுகின்றன அல்லாதவை முடக்கப்பட்டவர்களாக இருக்கின்றன என்று அக்கர்மென் குறிப்பிடுகிறார். 

விலங்குகளும் தங்களுக்குள் ஈர்ப்பு கொள்வதை காமம் என்று விளிக்கும் மனிதச் சொற்கள், மனிதனின் ஈர்ப்பை காதல் என்கிறது. மனிதர்கள் தாங்கள் செய்யும் செயல்கள் தெய்வீகத் தன்மை, புனிதத் தன்மை நிறைந்ததாக கற்பனை செய்துகொள்வதன் மூலம் தான் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு இருப்பதாக கருதிக்கொள்ள போராடுகின்றனர். இது இருப்பு சார் பிரச்சனை, அந்த அடையாளச் சிக்கலிலிருந்தே அறிவின் வீழ்ச்சி துவங்குகிறது.  இந்த அடையாளச் சிக்கலைப் பூர்த்தி செய்ய அதிகார வர்க்கம் பல்வேறு சிந்தனைகளை உட்புகுத்துகிறது. அதில் முதன்மை பெறுவதே காதலும், காமமும். 
காதலின் வேதியல்தன்மையில் பங்களிக்கும் சில சுரபிகள் பற்றி இப்போது காண்போம்.  துத்தநாகம் ஒருவகையான பாலுணர்வூக்கி எனக் கண்டறியப்பட்டிருக்கிறது அதேபோல் ஜின் செங். துத்தநாக குறைபாட்டால், குறைவான விந்தணுவின் எண்ணிக்கை குறைபாடு ஏற்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் பார்ப்பனர்கள் ‘மடி, ஆச்சாரம், பத்து’ என்று வெறுத்து ஒதுக்கும் வெங்காயத்திலும், பூண்டிலும் அதிக பாலுணர்வூக்கிகள் இருக்கிறது.

“சுவிப்ட்ஸ்’ எனப்படும் பறவை உணவு, யுனாகி என்னும் விலாங்கு மீன், சாக்லேட்ட்கள், வாசனைப்பொருட்கள், இசை, எக்ஸ்ப்ரஸோ காபி, ஒட்டகத்தின் பால், ஆண்குறி வடிவிலான பழங்கள், தண்ணீர் விட்டான் கொடி, கறுப்பு அவரை, ஆர்ட்டிசோக்ஸ் எனப்படும் முள் நிறைந்த தண்டுச் செடி, முதலையின் விந்து இப்படி எண்ணற்ற பொருள்கள் பாலுணர்வூக்கிகளாக கண்டறியப்பட்டிருக்கிறது. காதலுக்கு மிக நெருக்கமான ஒன்று ‘சாக்லேட்’, சாக்லேட்டுகள், மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டும் மென்மையான, நாம் காதல் வயப்பட்டிருக்கும்போது உடல் இயற்கையாக உற்பத்தி செய்யும் “ஆம்பிட்டமைன்” போன்ற மருந்துப் பொருள்களைக் கொண்டிருக்கின்றன. மோண்ட்சுமா என்னும் அரசன் அறுநூறு பெண்களைக் கொண்ட அவனது அந்தப்புரத்திற்குப் போவதற்கு முன், அவனுடைய வீரியத்தை அதிகப்படுத்திக் கொள்வதற்காக ஐம்பது கோப்பைகள் சாக்லேட்டை அருந்தினான் என்று ஒரு தகவலைப் பகிர்கிறார் அக்கர்மென். பெண்களுக்கான ஒரு விருப்புப் பொருளாய் சாக்க்லேட் சந்தைப்படுத்தப்படுவதன் காரணத்தை தொடர்ப்புபடுத்திப் பார்ப்போமானால் ஒரு பெண்ணை காதல் வயப்படுத்த, அல்லது உறவு கொள்ளும் மனவெழுச்சியை தூண்ட அது வசிய  மருந்து போல் செயல்படுகிறது என்றால் அது மிகையல்ல.

ஆர்வமூட்டும் மற்றொரு தகவலையும் அவர் பகிர்கிறார் “பாலுணர்வு தூண்டும் பொருள் வளர்ப்போர் இருவார இதழில்” (The Aphrodisiac Growers Quarterly) வந்த கட்டுரையொன்றில் இலக்கியங்களில் ஐநூறுக்கும் மேற்பட்ட வன்புணர்வுக் காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றில் 98 விழுக்காடு அவை நிகழ்வதற்கு முன்னல் பாலுணர்வினைத் தூண்டும் உணவுகளை உண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது.
“இரண்டு தனிஆளுமைத் திறன் வாய்ந்த நபர்கள் சந்திப்பது இரண்டு வேதியல் பொருள்கள் தொடர்பு கொள்வது போன்றது” என்று காரல் யுங் கூறியுள்ளார். இரண்டு நபர்கள் ஒருவருக்கொருவர் கவர்ச்சியாக இருக்கக்கண்டால், அவர்களுடைய உடல்கள் திடீரென வழியும் PEA (பினிலெத்தாலமைன்) என்னும் நரம்பு திசுக்களுக்கிடையே செய்தியனுப்பும் நுண்துகள்களால் நடுங்குகின்றன.  ஆம்பிட்டாமைன் போன்ற ஒரு வேதியல் பொருளான பினிலெத்தாலமைன் மூளையை சொடுக்கி மயக்கமான ஒரு ஆர்வ நிலைக்கு உட்படுத்துவதால், காதலர்கள் ஒரு நல்ல நிலையை உணரவும், புத்துணர்ச்சி பெறவும், நம்பிக்கை உள்ளவர்களாகவும், சக்தியூட்டப்பட்டவர்களாகவும், இரவு முழுவதும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதில் மகிழ்ச்சியும் அல்லது முடிவில்லாது பல மணி நேரங்கள் காதல் உறவில் ஈடுபடுபவர்களாகவும் இருக்கிறார்கள். ஏனெனில் உடலின் இயல்பான வேகமும்கூட அதற்கு அடிமையாக்கக்கூடிய ஒரு பழக்கமாக இருக்கிறது.  (மருத்துவர் ஷாலினி)

சிலவேளைகளில் வேதியல் பசியால் தூண்டப்பட்டு மனித மனம் பொருத்தமில்லாத துணைவர்களைத் தேர்ந்தெடுக்கும் நிலைக்கு ஆளாகிறது. அதைத் தொடரும் ஏமாற்றமானது உறவு முறிவுக்கு இட்டுச் செல்கிறது. ஆனால் அதை எதிர்கொள்ளத் தெரியாமல் காதல் பற்றிய புனித வசனங்களை திரைப்படங்களின் பாதிப்பினால், சமூக நெருக்கடியால் பேசிக்கொண்டு ஒருவரை ஒருவர் அழிக்கும் செயலுக்கோ அல்லது சுய அழிப்புக்கோ செல்லும் நிலை ஏற்படுகிறது.  முதல் ஈர்ப்பு எனும் கவர்ச்சி பதின்பருவ வயதிலேயே ஏற்பட்டுவிடுகிறது, அது தன் ஆளுமை பற்றிய ஒரு மாயையில் உழல உதவுகிறது.  ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள நிறைய செய்திகள், அனுபவங்கள் இருக்கையில் அருகாமை என்பது ஒரு ஆர்வமூட்டும் உணர்வை ஏற்படுத்துகிறது (இங்கு எண்டார்பின் எனும் சுரபி வேலை செய்கிறது), அதைத் தொடர்ந்து ஒரு நம்பிக்கை வளர்ந்து தனது பிற்பகுதி வாழ்க்கைக்கான துணையாக அவரைக் கருதும் உணர்வு மேலோங்குகிறது. அதன் பிறகு அதற்கேயுறிய சோதனை முயற்சிகள், உறவின் மீது கட்டளைகள் என்று வளர்கிறது. நடைமுறையில் சில நடவடிக்கைகள் நெருடல்களை ஏற்படுத்தும்போது அது தன் ஆளுமைக்கான வீழ்ச்சியாக கருதப்படுகிறதே ஒழிய இரண்டு உயிர்கள், இரண்டு அனுபவங்கள், இரண்டு சிந்தனை சக்திகள் ஏதோ சில காரணங்களால் இணையமுடியாத நிலையாக கருதப்படுவதில்லை.  மாயாவாத புனித கதையாடல்கள், தன்முனைப்பாற்றல்கள் குறுக்கிட்டுவிடுகின்றன.  (எப்படிப்பட்ட வேதியல் பசி இருப்பினும் மூளையானது தனக்கான உடல் தேர்வில் கவனத்துடன் இருக்கிறது. கருப்பு உடல்கள், ‘அழகற்றது’ என்று சொல்லபப்டும் குறியீட்டின் கீழ் வரும் உடல்கள், ஏழையின் உடல்கள், மாற்றுச் சாதி உடல்கள் இவற்றுக்கு சமூகத்தில் கிடைக்கும் வரவேற்பு எத்தகையது. )

ஒரு காதல் உறவு முறிந்து மற்றொரு காதல் உறவு துவங்குவதும் இத்தகைய வேதியல் சுழற்சியே. இழந்த பரவசங்களை, மனவெழுச்சிகளை கண்டடையும் வேட்கை. அதைத் தேடி செல்லவில்லையென்றாலும், அத்தகைய ஒரு நபரை காணும்போது இயல்பூக்கமாக அது அமைந்துவிடுகிறது. மனவெழுச்சி சார்ந்த இவ்வுணர்வில், ஒவ்வொருவரும் வாழ்க்கை முழுவதற்குமான ஒரு பிணைப்பினை ஏற்படுத்திக் கொள்ள, உண்மையான ஒரு காதலைத் தொடர்ந்து தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.  காதலில் ஈடுபடும் இருவரும் ஒருவரை ஒருவர் உடமையாக்கிக் கொள்ள முயல்கிறார்களே ஒழிய தோழமையோடு சம உரிமைகளை பகிர்ந்து கொள்வதில்லை. காதல் என்று சொன்னாலும் அங்கும் செயல்படுவது குடும்ப உறவின் கணவன் மனைவி தாக்கமே. ஆண் மேலானவன், பொருளீட்டி பென்ணை பராமரிப்பவன் எனும் அதிகாரப்போக்கே காதல் உறவிலும் செயல்படுகிறது.  ஆண்களும் பெண்களும் ஒரே வாக்கியத்தைப் பேசும்போதுகூட, அவர்கள் முற்றிலும் வேறுபட்ட பொருளை அதன் மூலம் குறிப்பிடுகிறார்கள் என்று டிபோரா டேனன் “நீ புரிந்து கொள்ளவில்லை” (You Just Don’t Understand) என்ற தனது நூலில் கேளிக்கையாக கூறியிருப்பதாக மேற்கோள் காட்டுகிறார் டயன் அக்கர்மென். 

சுருக்கமாக சொல்வதானால் காதல் என்பது தனியே தோன்றும் ஒரு உணர்ச்சியல்ல. அது ஒரு வகையான இயல்பூக்கம் சார்ந்த உயிரியல் கட்டளை என்ற அறிவியல் பூர்வ அனுகுமுறை உறவுகளை கையாள்வதில் அவசியமாகிறது.  ஊடகங்கள், திரைப்படங்கள், விளம்பரங்கள் எடுத்துரைக்கும் ‘காதல் மாயை’யிலிருந்து விடுபட்டு நமக்கான உணர்வை, உறவுத் தேடலில் நமக்கான விதிமுறைகளை நம் சொந்த அனுபவத்திலிருந்து வகுத்துக்கொள்வதன் மூலம் உறவுகளை செழுமைப் படுத்திக் கொள்ள முடியும்.


இங்கு ஒரு விசயத்தை அழுத்தம் கொடுத்து சொல்ல வேண்டியுள்ளது. இப்போது நாம் துய்க்கும் காதலானது, நுகர்வுக் காதல்.  இலக்கியம், முதலாளிகள், திரைப்படங்கள், வெகுஜன ஊடகங்கள், இவைகள் கற்றுக் கொடுக்கும் காதலை சுரணையற்ற பண்டங்களாக அப்படியே ஏற்றுக் கொள்கிறோம். ஒரு பெண்ணை எங்கு தொட வேண்டும், என்ன வார்த்தைகளைச் சொல்லிக் கவர வேண்டும், என்ன பரிசுப் பொருள் கொடுக்க வேண்டும், எப்படி உடல் உறவை தொடங்க வேண்டும் என்று எல்லாவற்றையும் சொல்லிக் கொடுக்கிறார்கள். சுதந்திரம் எனும் சொல்லை கொச்சை சொல்லாக, பொறுப்பற்ற செயல்பாடுகளாக மாற்றுவதில் இந்த ஆணாதிக்க அதிகார மையங்கள் வெற்றி பெற்றுள்ளன.  இன்னும் சொல்லப் போனால் ஒவ்வொரு பெண் உடல் மீதும் கட்டுப்பாடு செலுத்துவது, அவளை நுகர்வது அவளது காதலரோ, கணவரோ அல்ல  முதலாளிகள், ஊடகங்கள்.


நன்றி: குறளி

Jun 6, 2010

திருமணங்களும் சந்தோஷங்களும்.




"திருமணமான பெண்களுக்குரிய சந்தோஷம் ஓர் ஆணின் சந்தோஷமாகவே விதிக்கப்படுகிறது...."

ஓர் உயிர் இந்த பூமியில் பிறக்கும்பொழுது அது பெண்ணாய் இருப்பின் அவளைச் சுற்றி பல ஆண் எஜமானர்கள் பல்வேறு கட்டளைகளுடன் காத்திருக்கிறார்கள். குழந்தைப் பருவத்திலேயே அவளுக்கு, பெண்மைக்குரிய கட்டளைகள் ஆரம்பம் ஆகிறது. ஆண்களுக்கு கீழ் படியும் தன்மையை வலியுறுத்தியும் அல்லது ஆணின் காமப்பார்வையிலிருந்து அவளை தற்காத்துக்கொள்ளும் பொருட்டும் மட்டுமே எல்லா வழிக்காட்டுதலும், விதிகளும் உள்ளது.

குழந்தையாய் அவள் விளையாடும் பொருள்களிலிருந்து வளர்ந்து அவள் ஒரு தாயான பின்பும் கூட பெண்ணுக்கு உகந்த பொருள் எது, சந்தோஷங்கள் எவை, கடமைகள் எவை, பாசப்பிணைப்புகளின் நடத்தை விதி என எல்லாம், ஆணின் செயல்பாடுகளுக்கு எந்த குறுக்கீடும், தொந்தரவும் ஏற்படாத வண்ணம் வரையப்பட்டுள்ளது. ஆண்டாண்டு காலமாய் ஒரு குழந்தை, தான் கண் விழிக்கும் போதெல்லாம் தாய் தோசை சுட்டுக்கொடிருப்பதைத் தான் பார்க்க நேரிடுகிறது. மறைமுகமாக, தன்னுள் பெண்மைக்குரிய கடமைகள் இவை இவை என அது உள்வாங்கிக் கொள்கிறது. தனக்கான விளையாட்டுப்பொருளாய் சமையலறை சாதனங்கள், பொம்மைகளை அலங்கரிக்கும் விளையாட்டுப் பொருள்கள் என வாங்கிக்கொண்டு தன் தாயைப் போலவே சமைப்பது, பொம்மைகளை தயார் செய்து பள்ளிக்கு அனுப்புதல்..தாயின் இன்ன பிற அன்றாட செயல்களை பொம்மைகள் வைத்து விளையாடி பழகிக்கொள்கிறது. மற்றொரு புறத்தில் ஆண் குழந்தை தந்தையை வழிகாட்டியாய் கொண்டு சாகச விளையாட்டுகள், இயந்திர பொம்மைகள் என்று விளையாடி, தான் ஆண் என்பதற்கான முத்திரையையை நிறுவத் தொடங்குகிறது.



இப்படி மழலையிலேயே அந்நியமாக்கப்பட்டு வளரும் பெண் பிள்ளைகள் பிற்காலத்தில் தன் இருப்பு பற்றிய நிலை என்னவென்று புரியாமல் ஆணைச் சார்ந்துதான் தனக்கு அங்கீகாரமும், அவனோடு ஒத்து வாழ்தலே தன் பிறப்பின் பயன் எனவும் உணர்த்தப்படுகிறாள். அதே மனநிலையோடு திருமணத்திற்கு உடன் படுத்தப்படுகிறாள், எழுதப்படாத அடிமை சாசனத்தில் கையெழுத்திடுகிறாள். அதுவரையில் தந்தையின் கணவுகளுக்காக உடல் சுமக்கும் பெண்ணினம் பிறகு கணவனின் அந்தஸ்த்தை நிலைநாட்டும், பேணிக்காக்கும் பொருட்டு தன் உடலை மாற்றி அமைக்கிறது. எப்பொழுதும் அது தன் உள்ளக் குரலை 'ஒலி வடிகட்டி' செய்தே வைத்திருக்கிறது.


திருமண வாழ்க்கை தரும் சந்தோஷங்களாக அவளுக்கு கற்பிக்கப்படுவது கெட்ட பழக்கம் இல்லாத கணவர் (அதாவது குடி, புகை பழக்கம் அல்லாதவர்), வசதியாக வாழ பெரிய வீடு, தோளுக்கும், கழுத்திற்கும் இடைவெளியே தெரியாத அளவுக்கு நகைகள், பட்டுப் புடவைகள், கார்..இப்படி வசதிகள் நிறைந்த வாழ்க்கை. இவற்றை பெற்றுத் தரும் கணவன் கடவுளுக்கு நிகரானவன் (ஆம் அங்கேயும் பெண் கடவுள்களின் நிலையில் பெரிய வேற்றுமை இல்லை). தன் கணவனின் அந்தஸ்த்தை சித்தரிக்கும் ஒரு விளம்பரப் பலகையாக மனைவிகள் உலா வருவார்கள், அவருக்கு பெற்றெடுத்த குழந்தைகளை அவர் பெயரை காப்பாற்றும் எதிர்காலத்திற்கான முதலீடாய் பார்த்துப் பார்த்து வளர்ப்பார்கள். அதுவே தன் வாழ்க்கையின் பேராக எண்ணி பூரித்து கடமை உணர்ச்சி பொங்க உருகிக்கொண்டிருப்பார்கள்.


இது போன்ற பெண்கள் எப்பொழுதாவது தன் இருப்பு பற்றிய கேள்விகள் எழுப்பியிருப்பார்களா என்று தெரியவில்லை. அப்படி தனக்கென்று ஒரு இருப்பு இருக்ககூடும் என்ற உண்மையைக் கூட அறிந்திருக்க வாய்ப்பில்லை. தான் ஏன் எப்போதும் ஆணைச் சார்ந்தே தன் இருப்பை நிலை நாட்டிக் கொள்ளவேண்டியுள்ளது என்று கேள்வி எழுந்தபோதுதான் பதில் கிடைத்தது. ஒரு ஆணின் சந்தோஷமே பெண்ணின் சந்தோஷமாகவும், ஆணின் லட்சியங்களே பெண்ணின் லட்சியமாகவும் ( குறிப்பாக திருமணத்திற்கு பின் ) கட்டமைக்கப்பட்டிருப்பதை உணரமுடிந்தது.

ஆம் குடும்பம் என்ற ஒன்றை அமைத்துக்கொண்டவுடன் ஒரு ஆண் தன் தலையில் தானே கிரீடம் ஏற்றிக்கொள்கிறான். இன்னாருக்கு மகனாக அறியப்பட்டிருக்கும் ஆணுக்கு, தான் என்ற அடையாளம் மிக அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. அதுவும் பொருளாதார நிலைப்பாடு சார்ந்தே இருக்கிறது. திருமணம் செய்துக் கொள்கிறான். குடும்பத்திற்காக உழைக்கிறேன் என்று கூறிக்கொண்டு தனக்கான முத்திரையை பதிக்கும் செயல்களை துவங்குகிறான். அதற்கு சம்பளமற்ற காரியதரிசியாக மனைவியைப் பயன்படுத்துகிறான். மனைவியும் ஆஹா என் கணவர் எவ்வளவு உழைக்கிறார் என்று பெருமை பாடிக்கொண்டு அவனுக்கான அத்தனை பணிவிடைகளையும் செய்கிறாள். சில இல்லங்களில் அவளும் வேலைக்கு சென்று பொருள் ஈட்டுகிறாள். அப்பொழுதும் கணவனுக்கு மட்டுமே சலுகைகள் உள்ளது. நேரம் காலமின்றி அவர் வீடு திரும்பலாம், வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளலாம். தொழிலதிபராய் இருந்தால் வீடென்ற ஒன்றை மொத்தமாக மனைவியின் பொறுப்பில் விட்டுவிட்டு, வணிகம் பேசிக்கொண்டே திரியலாம் நட்சத்திர ஓட்டல்களில். மனைவிக்கு லஞ்சமாய் நகைகள், உயர்ரக கார், வருடாந்திர சுற்றுப்பயணம் என கிள்ளிக்கொடுத்துவிட்டு மீண்டும் வேலை நிமித்தமாக ஊர் சுற்றலாம். கணவர்கள் தன் கீழ் பணிபுரியும் பெண்களை படுக்கைக்கு அழைக்கலாம், கள்ள உறவு வைத்துக்கொள்ளலாம். அவ்வப்போது பார்ட்டிகளுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் மனைவியை அழைத்துக்கொண்டு போகலாம்.

நீங்களும் அவர் பெருமைகளை பறை சாற்ற நன்கு அலங்காரம் செய்துக் கொண்டு போவீர்கள். அவருக்கு கிடைக்கும் பெயரை உங்கள் அடையாளமாக எண்ணி மகிழ்வீர்கள். நம் கணவர் நமக்காக எவ்வளவு செய்கிறார் என்று எலும்புத்துண்டை மென்றுக்கொண்டிருப்பீர்கள்; நீங்கள் நாயாக மாற்றப்பட்டதுதெரியாமல்.

மனைவிகளே நீங்கள் மனைவிகளாய் இருப்பது உங்களுக்கு உகந்ததாக இருக்குமாறு ஆண் முதலாளிகள் கலாச்சாரத்தின் பெயர் கொண்டு நிறுவியிருக்கிறார்கள். அந்நிறுவனத்தில் முதலாளிக்குரிய கடமைகளை அவரே ஏற்றுக்கொண்டு, தொழிலாளிக்குரிய கடமைகளை பேருள்ளம் கொண்டு உங்களுக்கு கொடுக்கிறார்கள். உங்களின் கடமைகளை நீங்கள் ஆற்றும் பொருட்டு உங்களுக்கு கூலி அந்தஸ்த்து எனும் பெயரில் வழங்கப்படுகிறது. நீங்களும் அதை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறீர்கள், உங்களுக்கான உன்மையான சந்தோஷம் என்னவென்றறியாமல். அப்படி நீங்கள் உங்களுக்கான அடையாளத்தைக் கண்டு கொண்டீர்களானால் (இந்த ஆணுலகில் அதுவே மிக அரிதான ஒன்று), அதற்காக நீங்கள் உழைக்கத் துவங்கும் பொழுது, கணவரின் பேரன்பு வெளிப்படும். உங்களைக் கட்டி அணைத்து முத்தங்களாய் பொழிவார், அம்முத்தங்கள் என்றும் இல்லாதவாறு கூர்மைக் கொண்டதாக இருக்கும். சொற்களால் ஆன முத்தம் அல்லவா, அப்படித்தான் இருக்கும்.


நான் எனைக் கண்டுக்கொண்டேன் என்று உண்மையை நிதர்சனமாக போட்டுடைப்பீர்கள். 'நீ' என்ற ஒன்று சாத்தியமில்லை என்பார் கணவர். நான் குடும்பத்துக்காகவே என்னை அர்பணித்துக்கொன்டு மாடாய் உழைக்கிறேன், நன்றி இல்லாமல் நடந்துக் கொள்ளாதே என்பார். ஆம் அவர் உழைப்பு குடும்பத்துக்காக, உங்கள் உழைப்பு உங்கள் உடல் திமிருக்காக மனைவிகளே. நீங்கள் உங்கள் விருப்பங்களை அவ்வப்போது அவர் காதில் போட்டுக்கொண்டே இருப்பீர்கள், அவரும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்பார். ஒரு நாள் பொறுமை இழந்து, படுக்கை அறையில் 'வேலை நிறுத்தம்' செய்வீர்கள் அப்பொழுதுதான் இழப்பு நோட்டம் பெறும். நிறுவனத்தில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தால் முதலாளி தான் தரும் கூலி, சலுகைகள் இவற்றை கணக்கு வைத்து பேசுவது போல், குடும்பத் தலைவரான முதலாளி மனைவித் தொழிலாளியிடம் கணக்குகள் வைப்பார் "நான் என்ன குறை வைத்தேன் உனக்கு, நீ கேட்ட எல்லாம் செய்தேனே, அதை வாங்கித் தந்தேன், இதை வாங்கித் தந்தேன் என்பார், நான் சம்பாதிக்கும் அணைத்தும் உனக்கும் நம் குடும்பத்துக்கும் தானே" என்பார்.

இதில் கவனிக்கப்பட வேண்டியது கணக்கு அணைத்தும் பொருளும், பொருளாதாரமும் சார்ந்தே இருப்பது. பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்ய எத்தனிக்கும் கணவர்கள் ஏன் ஓர் உறவுக்கு அடிப்படைத் தேவையான அன்பு, அக்கறை, சமத்துவம், காதல் சார்ந்த விருப்பங்கள் இவற்றின் தேவையையும், அதில் உள்ள குறைகளையும் பொருட்படுத்துவதில்லை. தனக்கு பெருமைத் தரக்கூடிய பொருள்களை ஈட்டி அதை மனைவியின் சந்தோஷமாய் கற்பித்து தன்னை உயர்த்திக்கொள்ளவும், தன் வாரிசை தன் பெயர் சொல்ல வளர்த்தெடுக்கவும் தான் ஆண்களுக்கு மனைவிகள் தேவைப்படுகிறார்கள். ஒரு போதும் அவள் துணைவியாக இருக்க முடிவதில்லை. மனைவியாக இருப்பதால் தான் கடமை உணர்வு மிக்கவளாக அவள் செயல்பட வேண்டியுள்ளது. துணைவியாக (Life Partner) கணவர் நினைத்தாரானால், கூட்டு முடிவுகள் எடுக்கப்படும். ஒவ்வொரு விஷயத்தையும் சேர்ந்தே முடிவெடுப்பார்கள். பொருளை முதன்மைபடுத்தாது, கணவன் மனைவியின் அருகாமையை உன்மையில் விரும்புவதாயின் வயிற்றுப்பாட்டிற்கு சிறிதும், அடிப்படை தேவைகளுக்கும் மட்டுமே பொருள் ஈட்டினால் போதுமே இதை மனைவியிடம் பேசி 8 முதல் 10 மணி நேர உழைப்பு போக மீதமுள்ள நேரத்தை மனைவியுடனும், பிள்ளைகளுடனும் செலவிடலாமே. அதுவல்லாது, தன் பேராசையை, பணம் மற்றும் புகழ் வெறியை குடும்ப நலன் என்று சாயம் பூசி மனைவியின் விருப்பு வெறுப்பு அறியாது, தன் பேராசையை அவள் மேல் திணித்து அதற்கு அவளையும் பயன் படுத்திக்கொள்ளும் மனப்போக்கே இங்குள்ள பெரும்பான்மையான கணவன்மார்களுக்கு இருக்கிறது. மனைவியும் வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் சுதந்திரத்தைக் கொடுத்துள்ளோமே என்று கணவர்கள் கூறுகிறார்கள்.

அது சுதந்திரம் சார்ந்த விஷயமாக என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது. பொருளாதாரத்தை பெருக்கிக்கொள்ளும் ஒரு செயலே மனைவியும் வேலைக்குச் செல்வது. எவ்வளவு பொறுப்புகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் இடையில் அவள் வேலை செய்ய வேண்டியுள்ளது. அலுவலகப் பணியின் பெயர் சொல்லி ஆண்கள் எடுத்துக்கொள்ளும் அத்தனை சுதந்திரத்தையும் பெண்கள் எடுத்துக்கொள்ள முடிவதில்லை. சுதந்திரம் என்ற பெயரில் அவளுக்கு கிடைப்பது மனச் சோர்வு மட்டுமே. சில குடும்பங்களில் பெண்களின் ஆதிக்கம் ஓங்கி இருக்கும், அங்கேயும் பொருளாதாரம் சார்ந்தே அந்த நிலை இருக்கக்கூடும். இருவரும் சமம் என்ற நிலையில் கணவன் மனவி உறவு அமைவது அபூர்வமே.

ஒருவேளை மனைவிக்கும் பெரும் பொருளாசை இருக்குமாயின், அதற்கும் ஆண்கள் பெண்களை பொருளாசைக் காட்டி அவளை அடிமைப்படுத்த ஆதியில் போட்ட விதையே காரணம். எப்படி முதலாளிகளின் சாதுர்யங்கள் அவர்களுக்கெதிராகவே திரும்பிவிடுகிறதோ, அதுபோல் ஆண் சமுதாயம் தோற்றுவித்த பொருள்சார்ந்த சமுதாய அங்கீகாரத் தேவையின் அரிப்பு தொடக்கத்தில் சொரிந்து கொடுக்கும் பொழுது சுகமாகத்தான் இருந்தது. நாளடைவில் புரையோடிப்போன ரணமாகி, மருத்துவம் செய்ய முடியாத அளவுக்கு கைவிடப்பட்ட நிலைக்கு வந்துள்ளது. இதில் ஆண்களும் சிக்கித் தவிப்பது பரிதாபமே.

திருமணம் மூலம் நாம் கூட்டு உறவுக்குள் நுழைகிறோமா அல்லது எதோ நிறுவனத்தில் ஒப்பந்த வேலை மேற்கொள்கிறோமா? பொறுப்புகளை பிரித்துக்கொள்கிறோம் என்ற பெயரில் எப்போதும் ஆண் தனக்கு வசதியான பொருளீட்டும் பொறுப்பை மட்டும் ஏன் எடுத்துக்கொள்கிறான்? உத்தியோகம் புருஷ லட்சணம்...இல்லையா அது மட்டுமே அவனுக்கு அங்கீகாரம் கொடுக்கும் என்பதால் தானே? உறவு சார்ந்த முறை என்றால் அங்கு காதல், பந்தம், நேரம் எல்லாம் அன்பை முதன்மைப் படுத்தி இருக்கவேன்டும், ஆனால் குடும்ப உறவுகள், லாப நோக்கோடு இயங்கும் நிறுவனங்களைப் போல் பொருளாதாரத்தை முதன்மைப்படுத்தியே அமைக்கப்படுகிறது (நல்ல உ.ம் - வரதட்சனை). அன்பை முதலீடாக கொள்ளும் குடும்பங்களில் பெரிதாக பொருள் ஈட்ட வேண்டியதில்லை என்று கணவன் மனைவி இருவருமே சேந்து முடிவெடுப்பார்கள். (இது இருவருக்கும் பொருந்தும், ஆனால் மனைவி பொருளாதரம் பெரிதில்லை என்று முடிவெடுக்கலாம் என்பது அவளுக்குத் தெரிவதில்லை) உழைப்பு போக மீத நேரத்தை வீட்டில் ஒருவருக்கொருவர் உதவியாக, சந்தோஷமாக செலவிடுவர்.

தன் பிள்ளைகள் ஊரிலேயே உயர்ந்த பள்ளிப்படிப்பு, மற்றும் உயர்ந்ததாக கருதப்படும் எதற்கும் அறிமுகப்படுத்தப்பட வேண்டியதில்லை என்று கூட்டாக முடிவு செய்வர். பிள்ளைகளுக்கு பணமீட்டும் வெறியை புகுத்தாமல் அனுபவத்தை முதலீடாக வழி மொழிவர்.அறிவை வளர்கும் பொறுப்பை ஆசிரியர்களிடம் தாரை வார்த்துக் கொடுக்கமல், தொடக்கம் முதல் வாழ்வின் பொருள் பொருள் மட்டுமன்று, வாழ்தல் என்று கற்றுக்கொடுப்பர். சுருங்கக் கூரின், கணவர்கள் A.T.M களாய் வாழாமல், மேன்மை மிகுந்த மனிதப் பிறப்பாய் வாழ்வர்.

ஆணுக்கு மனைவியாகிய பெண் எதற்கு அதுபோல் பெண்ணுக்கு கணவனாகியவன் எதற்கு என்ற அடிப்படைக் கேள்வி எழும் நிலை உருவாகி வருகிறது. பொருள் ஈட்டவும், உடல் இச்சையை போக்கிக்கொள்ளவும், வாரிசு வளர்க்கவும், இவற்றை செய்வதற்காக வாழ்க்கையைத் தொலைப்பதும்தான் திருமணங்கள் மூலம் கிடைக்கும் பயனாக உள்ளது. காதலிக்கும் பொழுது காணும் சுகம் ஏன் திருமணத்திற்கு பின் தொலைந்து விடுகிறது என்றால், மேற்கூறியது போல் தலைமைப் பொறுப்பை கணவன் என்ற பெயரில் ஆண் தன் தலையில் ஏற்றிக்கொண்டு சமுதாயத்தில் தனக்கொரு அங்கீகாரம் தேவை என்று பொருளாதரத்தின் பின்னும், புகழின் பின்னும் ஓடிக்கொண்டு, அன்பை அடகுவைத்துவிடுவதால்தான்.


மார்க்ஸ் கூறிய தொழிலாளர்களுக்கான கூற்றை பெண்களாகிய நாமும் மனதில் கொள்ள வேண்டும்....

ஆம்..தோழிகளே நாம் முதலாளிகளுக்காகவும் சேர்த்துத்தான் போராடுகிறோம்.

நம் வீட்டில் கிடக்கும் விலையுயர்ந்த டீ வி, சோபா அலங்காரப்பொருட்கள், கழுத்தில் மின்னும் நகைகள் என அனைத்தும் நம் அன்பை தின்று கொழுத்த மிருகங்கள். ஆம் தோழிகளே...... அம்மிருகத்திற்கு தலையைக்கொடுக்கும் கணவன் எனும் ஆணை பார்வையாளர் வரிசையில் இருந்து காணுவதை விட காப்பாற்றுவது கடமை.

Feb 14, 2010

ஆண்களின் பெருந்தன்மையும், வீசும் பச்சை மாமிச வாடையும்.



’ எங்களுக்கு எஜமானர்களாய் இருப்பது உங்கள் நலனுக்கு ஏற்றதாய் இருக்கலாம்; ஆனால் உங்களுக்கு அடிமைகளாய் இருப்பது எங்களுக்கு எப்படி நல்லதாய் இருக்கமுடியும்?

தூசிடைடிஸ்


ஆணின் கரங்களால் பெண்களின் குரல்வளையை இறுகப் பிடித்திருப்பதே வரலாறு.

அரசியல், இலக்கியம் முதற்கொண்டு இன்னபிற துறைகள் அனைத்திலும் ஆண் பெண்ணை நோக்கிக் கசியவிடும் ஆண்களின் பெருந்தன்மையில் வீசும் பச்சை மாமிச வாடை குடலைப் புரட்டுகிறது.

தனக்குகந்த கைப்பாவைகளாய், ரசனை வக்கிரத்துக்கு இரையாய் இருக்க பெண்களின் அழகை வர்ணித்து பாடும் ஆண்களின் பேரன்பு வெள்ளம் சாக்கடை நீராய் தேங்கி நிற்கிறது. சுயம் இழந்து, கவிழ்ந்து போக ஆபரணங்களை சூட்டி, அலங்காரம் செய்து வலம் வரும் தேவ கன்னிகளாய் ஆண்கள் தங்கள் கனாக்களில் பல ஊடகங்கள் கொண்டு உலவ விட்டு குளிர் காயும் அவர்களின் கயமை திக்கெட்டிலும் பரவி நிற்கிறது.என் அருமைத் தோழிகளே .... நான் மன்றாடி கேட்டுக்கொள்வதெல்லாம் அழகியல் நாற்றத்தில் நம்மை தோய்த்தெடுக்கும் ஆணின் கருத்தமைவுகள் எல்லாவற்றையும் சந்தேகப்படுங்கள் என்பதுதான். உங்கள் சிந்தனைகள், செயல்பாடுகள், நடை, உடை பாவனைகள் அனைத்தையும் கேள்விக்குள்ளாக்குங்கள். ரம்பை, ஊர்வசி, சீதை [இதில் கண்ணகி கூட விதிவிலக்கல்ல அவளுக்கு ஆண் அமைத்துக் கொடுத்தது கற்பின் அழகியல்] முதல் இன்றைய நடிகைகள் வரை எல்லாப் பெண்களும், பெண் கதாப்பாத்திரங்களும் ஆண்களால் அல்லது ஆண் கற்பிதங்களுக்கு அடிமையாகிப்போன பெண்களால்

தோற்றுவிக்கப்பட்டவை.பெண்ணை, பெண்ணின் அழகியலை வர்ணிக்கும் ஆண் சொற்களும்,ஆண் பாடல்களும் ,ஆண் தனக்கான பெண் எவ்வாறு இருக்க வேண்டும் என்று விரும்பும் ,நினைக்கும் கட்டளையிடும் செயலின் பிரதிபலிப்பு. தனக்கான பெண், தன் ஆளுகைக்கு உட்பட்ட பெண் இந்த அதிகாரத்தை ஒற்றையாய் வைத்து அது வரலாறு தொடங்கி , இன்னபிற அனைத்தும் ஆண்தன்மை கொண்டனவாகவே இருக்கிறது. இதே கூற்றையே இலக்கியத்திலும் ஏற்றி, புனித சேறு பூசி, பெண்கள் முகத்தில் காலம் காலமாக சந்தனமென ஏமாற்றி தடவி வருகிறார்கள்.

ஒரு காலத்தில் பெண்களுக்கு கல்வி கிட்டாமல் செய்து அவளை அடிமையாய் வைத்திருக்க கடவுள்,கற்பு, பண்பாடு, ஒழுக்கம், பத்தினித் தன்மை [வேலைக்குப் போகும் பெண்கள் கற்பிழந்தவர்கள் என சுப்பிரமணி [ சங்கராச்சாரியர் ] அறிவிப்பு செய்ததும் அதை கேட்டுக்கொண்டு பெண்கள் நின்றதையும் நினைவில் கொள்க.] எனும் கற்பனை மூலம் பல புனைவுகளை மேற்கொண்ட ஆண் இனம், பெண்களும் கல்வி கற்க ஆரம்பித்தவுடன் அவளை வீழ்த்த அழகியல் போதையை சந்தையில் பரப்பியது.ஆண்களின் உள்ளாடை முதல், கட்டிட கம்பிகள் போன்ற பொருள் வரை [கழிப்பறை பீங்கான் உட்பட...ஆண்களுக்கு அது வராது போல] எதையும் விற்க பெண்களை 'மாடல்களாய்' உபயோகித்து மக்களை விலை பேசும் 'திறந்த விபச்சாரத்தை' செய்து வருகிறது முதலாளிகள் உலகம். ஊடகங்களின் 'மாதிரிப்' பெண்கள் அனைவரும் அழகையும், உடலையும்

முன்னிருத்துபவர்களாகவே சித்தரிக்கப்படுகின்றனர். ஆணுக்கான வாசனை திரவம் கூட ஒரு பெண்ணை கவர்வதற்கான சாதனமாய் விளம்பரப்படுத்தப்படுகிறது. அவ்வாசனையில் தன் வசம் இழுக்கும் பெண்கள் அவன் புட்டத்தை கடிக்ககூட தயாராய் இருப்பதாக [ஆக்ஸ் சென்ட் ]ஆணின் பெண் என்ற கற்பனையை முன் வைத்து பெண் இயக்கப்படுகிறாள். பெண்ணுக்கு பிடித்தது, உகந்தது என இவர்கள் முன்வைப்பது அலங்காரப்பொருட்கள் மட்டுமே, நகைகள், புடவைகள் ஆடம்பரங்கள் மட்டுமே.ஆண் செய்யும் ஒவ்வொரு காரியமும், வாங்கும் ஒவ்வொரு பொருளும் பெண்ணை கவரவே எனவும் அவளை வீழ்த்துவதே வாழ்நாள் சாதனையாக ஆண் கருதவேண்டும் என்றும் ஆண் இனத்தையும் சேர்த்து இழிவு படுத்துகிறது விளம்பரங்கள். மற்றும், பல்வேறு ஊடகங்கள். பெண்ணுக்கோ தோலின் நிறத்தை மாற்றி அமைப்பதும், அலங்காரம் கொண்டு போட்டி போடுவதுமே வாழ்வியல் ஆதாரமாய் கற்பிக்கிறது மனசாட்சியற்ற முதலாளி வர்க்கம்.இதில் வருந்தத்தக்க ஒரு விஷயம் பெண்கள் தங்கள் உடலின் மேன்மை அறியாமல் அதை ஒரு பண்டமாய் நினைத்து சந்தையில் விற்பது. எல்லாவற்றிற்கும் 'தேவை' (demand) ஏற்படுத்தி சந்தையில் தள்ளிவிடும் முதலாளிகள், பெண் உடலுக்கான 'தேவையையும்' ஏற்படுத்தி தங்கள் வீட்டுப் பெண்களை போர்த்தி பூசை செய்து [இதுவும் ஒரு பெண் விரும்பத்தகாததே. இதை இன்னும் கொஞசம் ஆழமாக நோக்கினால் முதலாளி வீட்டுப் பெண்களும் திறந்த முதுகுடன் வலம் வருவதையும் தங்கள் உடலை பார்வைக்கு வைப்பதையும் காணலாம். இது ஒப்பு நோக்கில் விரிவாக ஆராய வேண்டிய விசயமே ]மற்ற பெண்களை உயிரற்ற பொம்மைகளாய் பயன்படுத்தி அவளுக்கு வேசி பட்டம் வாங்கித்தரும் சேவையை செய்து வருகிறார்கள்.

இதையே இன்னும் கொஞ்சம் விரிவாக்கினால் முதலாளியம் எவ்வாறு தன் உடலை அழுக வைத்துக் கொண்டிருக்கிறது என்பது புரியும். மார்க்ஸ் கூறியதைப்போல முதாளித்துவம் அனைத்து உறவுகளையும் பணப்பட்டுவாடாகவே பார்க்கிறது. அது குடும்பத்தின் உணர்ச்சிகரமான முகத்திரையை கிழித்துவிட்டது. .

ஆண்டாண்டு காலமாய் ஆணினத்தின் பாலியல் வேட்கைகளை பெண்ணியல்புகலாய் சொல்லிவந்து, இன்று பெண்கள் தங்கள் அழகை, அங்கங்களை முன்வைத்தால்தான் தங்கள் நிலைப்பாட்டை உறுதிசெய்துகொள்ள முடியும் என நினைக்குமாறு நிச்சயித்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறது ஆணினம்.

உடலை புனிதப்படுத்தி,ஒழுக்க நெறிகளுக்கு தசைகளை இரையாக்கி,பனத்திற்கு திறந்துபோட வைத்து ஆண்களை விலை பேச வைக்கும் நோக்கோடு பெண்ணுடல் முன்வைக்கப்படுகிறது. இதை அறியா பெண்கள் உடலை பிரதானப்படுத்துவதை முற்போக்கான செயலாகவும் சுதந்திரமான ஒன்றாகவும் கருதுகிறார்கள், பத்தினித்தனம் எப்படி ஆணுக்கு பெருமை சேர்க்கிறதோ அதேயளவில் திறந்து போடுதலும் அவன் விருப்பத்திற்குரியதே.

என் நிர்வாணம் எனக்கு மதிப்பிற்குரியதாய் உள்ளது. விரும்பும்போது, விரும்பும் இடத்தில் நான் மட்டுமே கட்டளை இடக்கூடிய விதிகளுக்குட்பட்டு என் உடலை வெளிப்படுத்துவேன். என் சௌகரியத்திற்காக உடைகளைக் கூட்டவும் குறைக்கவும் எனக்கு சுதந்திரம் உண்டு. என் உடலை ஆளும் சர்வாதிகாரியாக நான் மட்டுமே இருப்பேன் என பெண்கள் அறிவிக்கவேண்டும். உடலை மாமிசத்துண்டாக மட்டுமே பாவிக்கும் ஆணின் பாலியல் வேட்க்கைக்காக அவிழ்த்துப்போட நம் உடலை முன் வைப்பதில்லை என்ற எண்ணம் பெண்களுக்கு வரவேண்டும். உடலை பொக்கிஷமாக கருதவேண்டும்.

பெண்கள் தங்களுக்கு விருப்பமான உடைகளை அணியும் சுதந்திரத்தை அவர்களே எடுக்கவேண்டும். தன் தசைகளை விலைக்கு முன்னிருத்தாமல் சுதந்திரத்திற்காக முன்னிருத்தலாம். முடிந்தால் ஒரு உதாரணத்துக்காக தங்கள் அழகை அப்படியே விட்டுவிடலாம், புருவங்களை மழிக்காமல், பூச்சுக்கள் இல்லாமல். எவ்வித அலங்காரமும் இல்லாது வெளியிடங்களுக்கு சென்று வாருங்கள், உங்கள் பின் வரும் ஆண்களின் எண்ணிக்கை குறைவதைக் காணலாம். அவன் எதிர்பார்ப்புக்கும் வர்ணனைக்கும் உகந்த பொருளாக நீங்கள் இல்லையென்றால் வர்ணனைப் பாடல்களாவது குறையும்.

ஆடை அலங்காரத்தின் உபயோகம் இரண்டுவகைகளில் ஒரு பெண்ணுக்கு உதவுகிறது. முதலாவது பாலின வேட்கைக்கு உகந்த பொருளாக தோற்றம் தருவது, இரண்டு கணவனின் சமூக படிநிலையைப் பிறருக்கு புரியவைப்பது. இவ்விரு தோற்றமும் வழக்கம் போல பெண்ணைப் பிறர் சார்ந்த உயிராகவே நிறுத்த உதவுகின்றன. பெண் ஆடை அணிவதன் நோக்கம் பிறருக்கு தன்னைக் காட்டிக்கொள்வதின் மூலம் தன் இருப்பு நிலையை உறுதிப்படுத்திக்கொள்ள என விளக்குகிறார் சிமோன்.

பெண்ணுக்கு வாழ்நாள் தேவை ஆணின் அருகாமையே, ஆணின்றி பெண்ணால் தன்னிச்சையாக இயங்கமுடியாது என்பதன் ஒரு தொடர்ச்சியாகவே நான் திருமண உறவையும் காண்கிறேன். அதை பெண் நம்பி, பின்பற்றி ஒழுகவே கலாச்சாரம் பண்பாடு என ஆண்கள் வகுத்த வாய்க்கால் ஓடுகிறது. திருமணம் ஒன்றே பெண்ணுக்கு பாதுகாப்பைத் தர வல்லது என நிறுவப்பட்டு அவள் குடும்ப உறவில் ஈடுபடவும், ஆணுக்காக வாரிசைச் சுமக்கவும், அவன் தரும் வசதி வாய்ப்புக்காக நிரந்தர விபச்சாரியாக வயது கழிந்ததும் தாய்மைப் படிமத்தைத் தூக்குச் சுமக்கவும் ஆளாகிறாள். ஆனால் பாலியல் வன்முறைகள் அனைத்தையும் ஆணே செய்கிறான். ஆணுக்கு பெண்ணின் துணை ஒவ்வொருகாலத்தும் தேவைப் படுகிறது, தேவை என்று சொல்வதைவிட இட்ட வேலையைச் செய்ய ஒரு ஏவலாள் என சொல்வது சரியானது. அவளை அனுபவித்துக்கொண்டே இருக்க பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி, பெண்களுக்கு சுதந்திரமற்ற பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கி தன் விருப்பங்களைக் கொண்டாடி வருகிறது ஆணினம்.

ஆண்களின் மாபெரும் வெற்றி அவன் ஆதிக்க கருத்துகளை பெண்களே முன் வந்து தானே விரும்பி ஏற்றுக்கொள்ளவைத்ததுதான். என் கடன் பணி செய்து கிடப்பதே என பெண்களைச் சொல்லவைத்ததும், அவள் மகிழ்ச்சி அதுதான் என அவளையே பின் பற்ற வைத்ததும்தான்.

[ கலாச்சார புரச்சிக் காலகட்டத்தில் சீனாவில் ஒரு விடுகதை பரவியிருந்தது.

ஒருதடவை தலைவர் மாஓ பிரதமர் சூவிடமும் சேனாதிபதி சூ தேயிடமும், ஒரு பூனையைக் கொண்டு எப்படி மனம் விரும்பி மிளகாயைத் தின்ன வைக்கமுடியும் என்று கேட்டார். மிளகாய்க்கு இனிப்புத் தடவி ஊட்டினால் பூனை தின்று விடும் என்றார் சூ. பூனையின் வாயைக் குறட்டினால் பிளந்து பிடித்துக்கொண்டு, அதன் தொண்டைக்குள் மிளகாயைத் திணித்துவிட்டால் பூனை விழுங்கிவிடும் என்றார் தே. பூனை மனம் விரும்பி மிளகாயைத் தின்ன வேண்டும் அல்லவா? ஆகவே இருவரின் பதில்களும் மாஓவுக்கு நிறைவளிக்கவில்லை. உங்கள் பதில் என்ன என்று அவர்கள் மாஓவிடம் கேட்டார்கள். ஒரு மிளகாயை முறித்துப் பூனையின் பின்புறத்தில் உராஞ்சி விடவேண்டும். எரிவு தாங்காது பூனை உடம்பை வளைத்து அதன் பின் புறத்தை நக்குநக்கென்று நக்கும், உறைப்பை நக்கிப் பழகிவிடும். அப்புறம் அது மிளகாயை மனம் விரும்பித் தின்னத்தொடங்கிவிடும் என்றார் மாஒ!.]

பெண்ணின் தாழ்வு நிலையை இன்னொரு பெண் சுட்டிக்காட்டினால் அப்பெண்னை முதலில் தாக்குவது ஆணல்ல இன்னொரு பெண்தான். தனது தேடல்களை பயன்படுத்தி உண்மைகளைக் கண்டறியும் பெண் ஆணின் சதிகளைக் கட்டவிழ்க்கும் போது அவள் கோருவதாக ஆண்கள் சொல்வது, பாலியல் சுதந்திரம், பல பேருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள விழியும் விருப்பம். ஆணின் கலாச்சார பயம் இதை மட்டுமே கூறும். அவன் மனைவியும் , மகளும் ஒரு பெண்கள்தான் அவர்களும் அதைப் பேசும் வாய்ப்பு இருக்கிறதல்லவா. இருக்கட்டும்.

பெண்கள் ஆம் என்று சொல்வதற்குள்ள சுதந்திரம், இல்லை என்று சொல்வதிற்கில்லை.

Dec 3, 2009

என்னைப்பற்றி


படித்து பெற வேண்டிய அறிவும், அனுபவமும், என் நடுத்தர வர்க்க வாழ்க்கை எனக்கு கொடுத்தது. அதன் வாயிலாக ஒரு தெளிவு ஏற்பட 33 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் அதற்கு முன்: பால் பேதமையின் பெயரிலும், கற்பு, பண்பு, கலாச்சாரம், ஒழுக்கம், பெண்மை இவற்றின் பெயராலும் இந்த சமூக சாத்தான் என்னை அடக்கி வைத்திருந்தது.


நானும் நீண்ட கூந்தல் வளர்த்து, பெரிய பொட்டு வைத்து, தலை நிறைய மல்லிப்பூ வைத்து, 6 மணிக்கு அல்வாவையும், அவரையும் எதிர்நோக்கி காத்திருக்க வளர்க்கப்பட்டேன். திருமணத்திற்கு முன்பு பெய் என்றால் பெய்கிறதா மழை என்று பல முறை ஒத்திகை பார்த்தேன். பெய்யாததால் குற்ற உணர்வால் பாதிக்கப்பட்டேன். (நல்ல வேளை மழை பெய்யவில்லை, பெய்திருந்தால் ஏதோ சித்து வேலை செய்துவிட்டேன் என்று கற்பை மறுபடி நிரூபிக்க தீயில் குதிக்க சொல்லியிருப்பார்கள்). பற்றாக்குறைக்கு அம்மன் திரைப்படங்கள் வேறு ...

அந்நாளைய குற்ற உணர்வு, பின்னாளில் ஏன் இப்படி? என்ற கேள்வியை என்னுள் எழுப்பிக் கொண்டே இருந்தது . பெண் தெய்வ வழிபாடு பற்றி நான் செய்த ஆராய்ச்சி, கடவுள் வழிபாடு எப்படி தோன்றியது, எப்படி உருவ வழிபாடாக மாறியது, பெண் ஏன் தெய்வமாக்கப்பட்டாள் என்ற உண்மையை போட்டு உடைத்தது. செய்யாத தவறுக்கு அகலிகை பெற்ற சாபம், நளாயினிக்கு நடந்த பதிவிரதை சோதனை, சீதை தீக்குளித்தது போன்ற கதைகள் பெண்ணை கற்பின் பெயரால் அடிமை ஆக்க புனையப்பட்டவை என்று புரியவைத்தது.

இன்னும் பல கொடுமைகள்

பெற்ற தந்தையே, மந்திரவாதியின் பேச்சைக்கேட்டு தன் இரண்டு மகள்களை கற்பழித்த போது, கண்ணன் பாஞ்சாலிக்கு புடவை கொடுப்பதிலும், துர்கை மகிஷனை வாதம் செய்வதிலும் ஆழ்ந்து விட்டதால், அக்குழந்தைகள் காவல் நிலையம் ஏறியதாக படித்தேன் . பின்பு ஒரு நாள் கன்னியாஸ்திரி ஒருவர் பாதிரியாரின் முத்த மகத்துவத்தை விளக்கி எழுதியப் புத்தகத்தைப் படித்த போது, ஆவியானவும் நேரில் வர மாட்டான் என்று புரிந்தது.

பெண்மைக்கடுத்து மதமும், அரசியலும் என்னை பாதித்தது. அந்நிய சக்திகளாக குதிரையில் வந்த குலத்தவரை எதிர்க்க மனோதிடம் வேண்டி பிரார்த்தனைக்காக உருவாக்கப்பட்ட கடவுள் உருவங்கள் பின்பு சுயநலத்திற்காக, சிறுபான்மையினரை அடக்கி ஆண்ட வரலாறு புலப்பட்டது. மனிதனே சக்தி வாய்ந்த படைப்பாளி என்ற நிதர்சனத்தை நிலை நாட்டியது. பின்னே, அவன் படைத்த பணமும், மதமும் தானே இன்று எல்லோரையும் ஆட்டிப்படைக்கிறது.

என் அனுபவங்கள், கேள்விகள், கோபங்கள், ரசனை இவைகளை நான் சந்தேகப்படவேண்டியிருக்கிறது.