Feb 10, 2023

தீட்டுக் கருத்தியலும், தொடை அறுப்பும்!

 


நான் 9ஆவது படிக்கும் போது வயதுக்கு வந்தேன்! 14-15 வயசு! 1990ஆ இருக்கும்.

எல்லா வீட்லையும் சொல்ற மாதிரி “தீட்டு”ன்னு தான் எங்க வீட்லையும் சொன்னாங்க! சடங்கெல்லாம் வச்சுக்கல! தனியா பால்கெனில படுக்க சொல்வாங்க! பாய், தலையனை எல்லாம் தனியா! (என் தோழிகளுக்கும் இதே நிலைமைதான்!)

 மேல பட்றாத, சாமி முன்னாடி வந்துடாத, சமையல்கட்டுக்கு வந்துடாத! சாமிக்கு மாலை போட்டவங்க முன்னாடி வந்துடாத… தலைக்கு தண்ணிய ஊத்து.. குளிக்கும் போது துணியெல்லாம் நனைச்சுடு! தீட்டு தீட்டு தீட்டு!

இதையெல்லாம் விடக் கொடுமை! உதிரப்போக்கை உறிஞ்சப் பயன்படுத்தும் துணி! ஆம்! தூமைத் துணி! எங்க காலத்துல துணிதாங்க! ஸ்டேஃப்ரீன்னு ஒண்ணு இருந்துச்சு.. விஸ்பர் அப்புறம் தான் வந்துச்சு! ஆனா அதெல்லாம் வாங்கித்தர அளவுக்கு விழிப்புணர்வும் இல்ல! செலவு பண்ன மனசில்ல! பிற்காலத்தில் அதற்கு மாறினேன்!

 அயலில ப்ராவால வர காயத்தை இயக்குனர் பதிவு பண்ணி இருந்தார். அதேமாதிரி தூமைத் துணியால பட்ட அவஸ்தைகளை இப்ப நினைச்சாலும் கண்ணுல ரத்தம் வருது!

 தூமைத் துணியை துவைச்சு துவைச்சு பயன்படுத்திக்கனும்.. வெளில தெரியுற மாதிரி காயப்போடக் கூடாது (அயலியில் இதும் உள்ளது)! அந்தத் துணி ரத்தம் உறிஞ்சு உறிஞ்சி எப்படி இருக்கும்! கரடுமுரடா… கத்தி மாதிரி தொடைகளை அறுக்கும்! மாசா மாசம் இப்படித்தான்! மாதவிடாய்னாலே பயம் தான் வரும்.. ஐயோ தொடையை அறுக்கப் போகுதே! நடக்க முடியாதே! இன்னொரு பக்கம் இடுப்பு வலி!

 தொடக்ககால மாதவிடாயில் உதிரம் கெட்டி கெட்டியாகவும் போகும்! அந்த துணி எப்படித் தாங்கும்? அதுலையும் பத்தாம் வகுப்புக்கு தயாராகுற பரீட்சை நேரத்துல… ப்பா இப்ப நினைச்சாலும் ரணமா இருக்கு!

 துணி எம்புட்டு ரத்தம் தாங்கும்.. பரீட்சை எழுதிட்டு இருக்கும் போது முழுசா ஈரமாகிடும்.. எந்திரிச்சு பேப்பர் வேற கேக்கனும். நான் படிச்சது Co-Ed! ரத்தக் கறை uniform ல படிஞ்சிருச்சுன்னு தெரியும்.. என்ன செய்றதுன்னு அழுகையா வரும். வேற வழியில்லாம எந்திரிச்சு பேப்பர் கேக்குறதும், துணியை மாத்திட்டு வரேன்னு போறதுமா இருந்திருக்கேன். அதுலையும் எங்க பள்ளிக்கூட கழிப்பறை இருக்கே… உள்ள போய்ட்டு உசுரோட வெளிய வரதே அதிர்ஷ்டம்.

இதுல துணி தொடை இடுக்குகளை அறுத்து அறுத்து.. தடிச்சு.. நடக்க முடியாம நடந்து! தேங்காய் எண்ணெயா தடவி… ஒரு வழியா பொறவு நாப்கினுக்கு மாற முடிஞ்சுது.

 அதேமாதிரி ஒரு கட்டத்துக்கு மேல! கல்லூரி படிக்க ஆரம்பிச்சப்புறம்.. அப்ப நான் பகுதி நேர வேலைக்கும் போக ஆரம்பிச்சுட்டேன்… ”என்னா இது நம்ம உடம்பை தீட்டு தீட்டுன்னு சொல்றாங்கன்னு ஒரு கோவம் வந்துச்சு! பெரியார்லாம் அப்ப தெரியாதுங்க! நான் தனியால்லாம் படுக்க முடியாது. என் படுக்கைல தான் படுப்பேன்னு “உள்ள வர ஆரம்பிச்சேன்”! ஆரம்பத்துல தனியா பாய்ல படுத்துக்கன்னு விட்டாங்க.. அப்புறம் அவங்களும் மொத்தமா விட்டுட்டாங்க! பாவம்! வீட்டாளுங்கள சொல்லி என்ன இருக்கு! அவங்களை அப்படித்தான மிரட்டி வச்சுருக்காங்க..

 பொம்பளைங்க உடம்பாலையும், மனசாலையும் எத்தனை வலியையும், அவமானங்களையும், கட்டுப்பாடுகளையும், பாகுபாட்டையும் தாங்கிக்கிட்டு இருக்கோம்! அதை உணர்ந்தப்புறம் வெளிய வந்து பேசுனா... முட்டாள் கூட்டமும், ஆணாதிக்கம், சாதி, மத வெறி புடிச்ச கூட்டமும் “நீ ஊர் பொறுக்கத்தான இப்படி பேசிட்டு திரியுறன்னும்”! அதுக்கும் ஆப்பு வைக்குற அளவுக்கு நம்ம தலைவருங்க நமக்கு கத்துக்கொடுத்திருக்காங்க!

 பார்ப்பன வெறுப்பு, கடவுள் மறுப்பு, ஆணாதிக்க சமூகம் ஒழியனுங்குற கோவம்லாம் இந்த மாதிரி “ஒதுக்கல்ல.. அவமானத்தால.. பாகுபாட்டுல” இருந்துதான் வந்துச்சு.. என் உடம்பை தீட்டு, அழுக்கு.. நீ வேறன்னு சொல்லி சொல்லி… உள்ள தேங்கிக் கிடந்த கோவம், கேள்விகளுக்கும், சமூகம் ஏன் இப்படி இருக்குங்குற காரணம் என்னங்குறதையும் பின்னாடி தெரிஞ்சுக்கிட்டேன். அதுக்கு நான் வசுமித்ரவுக்கு தான் நன்றி சொல்லனும்…

 பொம்பளையும், தலித்தும் ஒண்ணுதான்.. அதுலையும் உழைக்குற கூட்டம்தான் எல்லா கஷ்டங்களையும் அனுபவிக்குதுங்குற புரிதல் மார்க்சியம் படிச்சு வந்துச்சு.. அந்த புரிதல்ல நாம இயங்குனாலும் இங்க ஒரு சிலர் தங்களோட பிழைப்புக்காக நமக்கு பல முத்திரைகளை குத்துவாங்க! இன்னார் வலி இன்னாருக்கு தான் தெரியும்னு! ஆனா பாருங்க பொம்பளைங்க வலிய பெருசா பேசுனவங்கல்லாம் (பெரும்பாலும்) ஆம்பிளைங்க! அதே மாதிரி தான் எந்த ஒடுக்குமுறை குறித்தும் யாரும் உணர்ந்து empathize செய்ய முடியும்… உழைக்குற வர்க்கமா இருக்குறதால! இதுலையும் கூட வர்க்க உணர்வும் தானா வந்துடுறதுல்ல! அதுக்கும் இங்க அரசியல்மயப்படுத்த வேண்டி இருக்கு!

 கேள்விகளும்.. விழிப்புணர்வும் தான் ஒருத்தருக்கு அடையாளமா இருக்குமே ஒழிய.. (தங்களுக்கு புடிச்சவங்கள விமர்சனம் பண்றதாலையே) பொறப்பை வச்சு ஒருத்தரை ஓரம் கட்ட நினைக்குறதும் பார்ப்பனியம்தேன்!

 அயலி பலவிதமான உரையாடல்களை நிகழ்த்த வைக்கிறது!

 இணையத் தொடர்கள் வரிசையில் #அயலி நிச்சயம் ஒரு மைல்கல்!

 #ayaliwebseries #Ayali effect on society is hopeful ❤️

 

மகளே தாயுமானவள் ❤️

 


என் வாழ்நாளில் மிக முக்கியமான, பொக்கிஷம் என்று நான் கருதும் பதிவிது.

 என் மகள் வருணா எனக்கொரு புத்தகத்தையும், ஒரு பாடலையும் இன்று பரிசளித்தாள். அந்த புத்தகத்தின் பெயர்: நச்சியல்பான பெற்றோர்! தலைமுறை தலைமுறையாக பெற்றோரால் அடைந்த பாதிப்புகளைக் கடந்து உங்கள் வாழ்வை மீட்டெடுத்தல். (ஆங்கில தலைப்பின் மொழிபெயர்ப்பாக நான் கொடுத்துள்ளது).

 பாடல்:  #londonssong today  by Matt Hartke

 என்னது! நச்சியல்பான பெற்றோரா! என்று தலைப்பைப் பார்த்து அப்படியென்றால் ”நீ ஒரு நச்சுத்தன்மை வாய்ந்த தாயா” என்று நினைத்துவிடாதீர்கள்!

 இல்லை! நான் என் வாழ்வை மீட்டெடுக்க என் மகள் எனக்கு உதவுகிறாள்! தன் தாயின் துன்பகரமான வாழ்விற்கான (பகுதியளவு) காரணங்களை அறிந்த ஒரு மகள் அன்பையும், காயங்கள் ஆற்றும் அருமருந்தையும் தருகிறாள். இந்த புத்தகத்தை அவள் 3 முறை படித்துவிட்டாளாம்!

 நச்சியல்பான பிள்ளை வளர்ப்பு என்பது வளையம் போன்றது! பிற்போக்குத்தனமான சமூகத்தின் விளைவான ஒரு சங்கிலித் தொடர்.. நமது பெற்றோர் அதற்கு பலியாடு! அவர்களின் பெற்றோரும் அதற்கு பலியாடு!

 எனது குழந்தைப் பருவம் ஒரு கொடுங்கனவு! குடும்ப வன்முறை, உறவினரின் பாலியல் துன்புறுத்தல் என்று கொடுமைகளால் மட்டுமே நிறைந்தது. என் தாய் எந்த வகையிலும் நச்சியல்பானவள் அல்ல! பாவம்! அவளும் ஆணாதிக்க குடும்ப (வன்முறை) அமைப்பின் பலியாடே!

 மிகவும் மோசமான குழந்தைப் பருவ காலத்து பாதிப்பினால் நாமே அறியாமல் ஏதேதோ ரணங்கள், மன அழுத்தம், கவலைகள், மனப்பதற்றம் ஆகியவை நமக்குள் தேங்கிக் கிடக்கும். உரிய நேரத்தில் அதனை ஆற்றாது தவற விட்டுவிடுகிறோம்.  எனக்குள் சமீப காலமாக அவை மேலெழத் தொடங்கியுள்ளன! ஆம் அந்த நடுக்கத்தை அவ்வப்போது உடலில் உணர்கிறேன்! ஏனென்றால் அத்தனை காயங்களையும் மனம் மட்டுமல்ல உடலும் தான் தாங்கிக் கொள்கிறது!

 இது பற்றிய பேச்சு அத்தனை எளிமையானதல்ல!

 எங்கள் வாழ்க்கை குறித்து நானும் எனது மகளும் நிறைய பேசுவோம்! மன நலன் குறித்துப் பேச நாங்கள் தயங்குவதே இல்லை! எதையுமே பேசுவதை தவிர்ப்பதுமில்லை! ஏனென்றால், காயங்கள் ஆற்றும்! தலைகோதி தேற்றும் விரல்கள் அவளுக்கும் தேவைதானே! நிச்சயம் ஒவ்வொருவருக்கும் தேவை! ஆனால் இதையெல்லாம் பேசினால் நம்மை என்ன நினைப்பார்கள் என்கிற தயக்கம் அதற்கு தடை போடும்.

 எங்கள் வாழ்வை மீட்டெடுக்கும் செயல்முறையின் ஒரு பகுதியாகத்தான் என் மகள் எனக்கு இன்று இந்த புத்தகத்தையும், பாடலையும் பரிசளித்தாள். அந்த பாடல் ஒரு தந்தை தனது மகளுக்காக எழுதியது. அதைக் கேட்ட உடன் அவள் என்னைத்தான் அதில் கண்டதாக கூறினாள். இதை விடப் பேரானந்தம் என்ன இருக்க முடியும்?

 மகளே தாயுமானவள் ❤️

 இந்த புத்தகம் குறித்து படிக்கப் படிக்க பகிர்வேன்!

 உங்கள் தனிப்பட்ட வாழ்வையெல்லாம் ஏன் பகிர்கிறீர்கள் என்று யாரேனும் வருவீர்கள் எனில், உங்களுக்கு நான் சொல்வதெல்லாம் “தனிப்பட்டது என்று எதுவுமில்லை! அனைத்தும் அரசியல்மயமானதே! சமூகமயமாக்கல் என்பது புறத்தால் நிகழ்வது! அது அக பாதிப்பை ஏற்படுத்துகிறது! எனவே தனிமனித பாதிப்புகளுக்கு ஒரு பொதுத்தன்மை உண்டு. அதிலிருந்து மீளத் தவிக்கும் மனங்களின் துடிப்பு எனக்கு கேட்டுக்கொண்டே இருக்கிறது.

 அதோடு சக மனிதர்களின் வாழ்வை மேம்படுத்த இது ஓர் அறிவார்ந்த பகிர்வு!

 #kotravai shares love!

#momdaughterlove

Feb 8, 2023

வலுத்ததே வாழும் என்பது மனிதர்களுக்குப் பொருந்தாது

 


”வலுத்ததே வாழும் என்பது மனிதர்களுக்குப் பொருந்தாது” – கொற்றவை

ஒன்றை ஒன்று அடித்து வாழ்வது இயற்கையே என்று விலங்குகளை உதாரணமாகக் காட்டி மனிதர்கள் மற்ற மனிதர்களை ஏய்த்தும், சுரண்டியும் பிழைத்து வாழ்வதை பலர் நியாயபடுத்துகிறார்கள்.  இது மிகவும் தவறான ஒப்பீடு! தவறான நியாயவாதம்!

இயற்கையில் ஒவ்வொன்றும் மாறுபட்டது! மனிதர்கள் விலங்கினின்று மாறுபட்டவர்கள். விலங்கு போல் நடந்துகொள்ளாதே என்றும், விலங்கே அப்படித்தானே அடித்து வாழ்கிறது என்றும் தேவைக்கேற்ப மனிதர்கள் நியாயங்களை கற்பித்துக்கொள்கிறார்கள்.

ஆம்! விலங்கு அடித்து உண்டு வாழ்கிறது ஏனென்றால் அதற்கு உழைக்கத் தெரியாது! சிந்திக்கத் தெரியாது! உழைப்பும், இயற்கையை தன் வயப்படுத்திக்கொள்ள பொருள் தேவையின் அடிப்படையிலான மனித சமூக சிந்தனை இயக்கமும், அதன் விளைவாக அவர்கள் உண்டாக்கும் உழைப்புக் கருவி உள்ளிட்ட பொருட்களும், ஒழுங்கமைக்கும் ஏற்பாடுகளும் தான் அனைத்து உயிரினங்களில் இருந்தும் மனிதனை வேறுபடுத்துகிறது.

ஆக! மனிதர்கள் உழைக்கத் தெரிந்தவர்கள்! அந்த உழைப்பு என்பது இயற்கையை பயன்படுத்திக்கொள்வதன் மூலம் நிகழ்கிறது. இயற்கை என்பது பொதுச் சொத்து! அதை சில தனி மனிதர்கள் ”மூலதனம்” என்னும் பெயரில் கையகப்படுத்திக்கொண்டு மற்ற மனிதர்களை உழைக்கச் செய்து, அந்த உழைப்பின் பலனை அபகரித்து வாழ்கின்றனர். விலங்குகள் தம் பசிக்கு இயற்கையை சார்ந்திருக்கும் முறையிலிருந்து மாறி மனிதர்கள் உழைப்பு மற்றும் சிந்தனை மூலம் வெகுவாக முன்னேறிவிட்டார்கள்.

உழைப்பு என்பது கூட்டுச் சமூக செயல்பாடு. அதன் பலன்களும் கூட்டாகத்தான் பிரித்தாளப்பட வேண்டுமே ஒழிய “இருக்குறவன் ஆள்றான்! அனுபவிக்குறான்” என்று வியாக்கியானம் செய்து நம்மை அத்தகைய சுரண்டலை ஏற்றுக்கொள்ள பழக்கிவிட்டார்கள்!

“ஒருத்தண்ட இருக்குறது ஏன் அடுத்தவன் கிட்ட இல்ல” என்று சிந்திப்பதில் தான் சமூக நீதியின் தொடக்கப்புள்ளி அடங்கியுள்ளது! சொத்து / வளம் / மூலதனம் / உற்பத்திக் கருவிகள் அதன் மீதான அதிகாரம் எப்படி ஒரு சிலருக்கு வாய்க்கப் பெற்றது என்பதையெல்லாம் புரிந்துகொள்ள #மார்க்சியம் படிங்க.

புலினா மானை வேட்டையாடத்தாம்லே செய்யும்” னு எவனாச்சும் / எவளாச்சும் சொன்னா – “எலே அது புலிலே… நீ மனுசன்… உனக்குத்தான் உழைச்சு சாப்புட கை, கால் இருக்குல” என்பதே பதில்…

”கடுமையா உழைச்சு தான வாழ்றோம், ஆனா என்னத்தக் கண்டோம்! அடிச்சு புடுங்கித் திங்குறவனெல்லாம் நல்லாருக்கான்!” என்று நொந்துகொள்வோமெனில்… அந்த அநியாயத்தை நிறுத்த வேண்டுமே அல்லாது, விலங்கோடு ஒப்பிட்டு நியாயப்படுத்துவது அறிவுடைமை ஆகாது.

இதுல வேற பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கும் புலி, மானுன்னு கிளம்பி வராய்ங்க! “புலிக்கும் உனக்கும் என்னவே சம்பந்தம்”! புலி வாழ்ற மாதிரியா நீ வாழ்ற?

இதெல்லாம் விளங்கனும்னா குறைந்தபட்சம் இந்த புத்தகத்தையாச்சும் வாசிக்கவும்: "மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்திரம்" - எங்கெல்ஸ்

அதிகாரம், வல்லுறவு, சுரண்டல் இவற்றையெல்லாம் எதிர்க்கத்தான் மனிதனுக்கு அறிவு தேவை, மேற்சொன்ன முட்டாள் உதாரணங்களை சொல்லி அநீதிகளை நியாயப்படுத்துபவர்கள் மனிதர்களே அல்ல!