Showing posts with label Pa Ranjith. Show all posts
Showing posts with label Pa Ranjith. Show all posts

Aug 18, 2024

தங்கலான் திரை விமர்சனம்

 தங்கலான் தமிழ் சினிமாவின் ஜொலிக்கும் தங்கமே!

விடுதலை அரசியலை கலை நயத்துடன் படைப்பாக்கியதில் மின்னும் தங்கலான்!

தங்கலான் ஒரு திரைப்படமாக, கலையாக, கட்டிப் போடும் ஊடக அனுபவமாக சமூக பொருளாதார அரசியலாக என்று பல பரிமாணங்களில் எனைக் கவர்ந்தது.

திரைப்படம் காணும் முன் நான் விமர்சனங்களைப் படிப்பதை தவிர்ப்பேன். இருப்பினும் தங்கலான் குறித்து எதிர்மறை விமர்சனங்களையே TIMELINEஇல் அதிகம் காண முடிந்தது. இன்னும் கூடுதலாக வரலாற்று தரவுகளை முன் வைத்து நடந்த dissection பதிவுகளையும் காண முடிந்தது. படம் பார்த்து முடித்தவுடன் “படம் நல்லாதான இருக்கு, எதுக்கு வேற மாதிரி பேசிக்கிறாங்க” என்று தான் தோன்றியது.

வரலாற்றில் உழைக்கும் மக்களுக்கு* என்ன நடந்திருக்கிறது என்பதை வரலாறும் புனைவுமாக ஒரு புதிய வகை genre ஆக தனித்துவமானதொரு படைப்பு.

அடிமைப்பட்ட வரலாற்றையும், விடுதலைப் போராட்டத்தையும் சொல்லிவிட்டு, தங்கம் தேடிச் செல்லும் Expedition என்னும் சாகசப் பயணமாக முதல் பாதியிலும், வாழ்வா சாவா போராட்டமாகிப் போகும் இரண்டாம் பாதியாகவும், இறுதியில் எது விடுதலை, எது உண்மையான செல்வம், எது மகிழ்ச்சி என்று அகம்-புறம் போராட்டமாகவும் இழைக்கப்பட்டு ஒரு பேரனுபவமாக அமைகிறது தங்கலான்.

இப்படியாக உழைக்கும் கூட்டம் அடிமையாக்கப்படுவதில் இந்திய சமூகத்திற்கே உரிய சாதிய ரீதியான உழைப்புப் பிரிவினை எப்படி வலு சேர்க்கிறது என்பதை நுணுக்கமான திரைக்கதை வழி பதிவு செய்கிறார்கள். அந்த காலகட்டத்தில் இருந்த மத எதிர்ப்பு கலக சீர்திருத்த போக்குகள் குறித்த பதிவுகளும் ஈர்க்கின்றன. இதையெல்லாம் ஒன்றாகக் கோர்த்து ‘ஜனரஞ்சகமாக’ கொடுப்பதுதான் கலை என்னும் போது, பா.இரஞ்சித் தங்கலான் மூலமாக பாராட்டுக்குறிய கலைஞனாகவும் மிளிர்கிறார்.

அடிமைப்பட்டுக் கிடக்கும் கூட்டம் விடுதலைக்கான வழியை எப்படி வேண்டுமானாலும் தேடும். தங்கலான் குறிப்பிட்ட வழியில் தன் இனத்திற்கு விடுதலை வாங்கித்தர நினைக்கிறான். அதற்காக அவன் வெள்ளைக்கார துரையோடு ஒரு சாகசப் பயணம் மேற்கொள்கிறான். அந்த சாகசப் பயணத்தில் அவன் எடுத்துக்கொள்ளும் TASK என்ன? அதில் அவன் எதிர்கொள்பவை என்ன, இறுதியில் விடுதலை கிடைத்ததா? எதிலிருந்து விடுதலை தேவைப்படுகிறது அல்லது விடுதலை எப்படி சாத்தியப்படும் என்று எடுத்துரைப்பதற்கு மிகவும் கடினமானதொரு தத்துவத்தை கலவையான genreகளில் திரைப்படமாக்கி இருப்பது புதியதொரு அனுபவத்தைத் தருகிறது.

குறிப்பிட்ட சிலரிடம் செல்வம் எப்படி குவிகிறது என்பதை மார்க்சியம் ஆதி மூலதனத் திரட்டல் என்று விளக்குகிறது. அதே போல் தங்கலானிலும் மிராசுதார் வரும்போது விக்ரம் பேசும் வசனங்கள், அவர்களின் நிலங்கள் எரிக்கப்பட்டு உழைக்கும் அடிமைகளாக்கப்படுதல் போன்ற பதிவுகளின் மூலம், அந்த பாடமே படமாக்கப்பட்டதாக நான் காண்கிறேன். பா. இரஞ்சித்-தமிழ்ப் பிரபா கூட்டனி அதை அப்படித்தான் எழுதினார்களா எனக்கு தெரியாது. ஆனால் எப்படிப்பட்ட ஆண்டான் அடிமை (அபகரிப்பு) வரலாற்றை பேசினாலும், சமூக அமைப்பின் பரிணாம வளர்ச்சியை மார்க்சியம் விளக்கியுள்ளதோடு என்னால் தொடர்புபடுத்தாமல் இருக்க இயலாது. ஒருவகையில் கருத்து முதல்வாதமாக அடிமை வரலாற்றை பேசிக்கொண்டிராமல் பொருளாயத அடிப்படையில் தான் எல்லாமே நடந்தது என்று வாக்குமூலம் கொடுப்பது போன்றதொரு உணர்வு. மகிழ்ச்சி 😊

பெண் தன் ரத்தத்தைக் கொடுத்தேனும் நிலத்தைக் காக்கும் தேவதை, ஆனால் அவளை சூனியக்காரி என்று முத்திரை குத்திய வரலாறு என பல் வேறு விசயங்கள் குறியீடாக படம் நெடுக இழையோடுகிறது. வழக்கமாக கதாநாயகன் பரிசுத்தவானாக இருப்பான், ஆனால் இதில் நாயகன் தங்கத்திற்கு ஆசைப்படுகிறான், அதற்காக எந்த எல்லைக்கும் செல்கிறான். இனத்தின் விடுதலைக்காகவே என்றாலும், இறுதியில் அவன் எதற்காகப் பணிக்கப்பட்டான் எப்படி மாறிப்போனான் என்கிற தொன்மத்தின் தொடர்ச்சியான சுயம் உணர்தல் நிகழ்கிறது. பொருளாயத நிலைமைகளே மனிதர்களின் உணர்வுநிலைகளைத் தீர்மானிக்கிறது என்கிற மார்க்சிய அரிச்சுவடிக்கு இதுவும் ஒரு உதாரணம். இப்படி தங்கலானில் படமாகவும், பாடமாகவும் ரசிக்கத்தக்க அம்சங்கள் நிறையவே உள்ளன.

AVATAR - பூர்வகுடி மக்களின் நிலங்களை, வளங்களைக் கையகப்படுத்த நடக்கும் அட்டூழியங்களை (காலனியாக்கம், ஏகாதிபத்தியம்) நவீனமும் தொன்மமும் கலந்து பேசியது. சமூக அரசியல் நாடகமாக, நாட்டுப்புற கதைகளின் வழி மூதாதையர் மண் காக்க நடத்திய போராட்டங்களை மாய யதார்த்த கதையாடலாக ஒரு பரவச அனுபவத்தை, கொடுத்தது. அதே நேரம் ‘அந்நியர்கள்’ உழைக்கும் மக்கள், பூர்வகுடிகள் மேல் தொடுக்கும் போராட்டங்கள், இயற்கையோடு ஒன்றி வாழ்தலே உண்மையான மகிழ்ச்சி என்கிற பாடத்தையும் எடுத்தது. தங்கலான் எனக்கு அதற்கு நிகரானதொரு தமிழ் படைப்பாகவே தெரிகிறது.

தங்கலான் படைப்பாளிகளுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், உசுரையேக் கொடுத்து நடித்திருக்கும் நடிகர்களுக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும், படைப்பிற்கு உயிர்ப்பூட்டும் இசையமைத்துள்ள GV Prakash அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

#Thangalaan #ThangalaanReview 

Sep 11, 2022

சாதி வெறி சாதி வெறி என்று கூவிக்கொண்டு திரிபவர்களுக்கு

 ரங்கநாயகம்மா அம்பேத்கரை மார்க்சியக் கண்ணோட்டத்தில் விமர்சிக்கும் ஒரு புத்தகத்தை தான் எழுதியுள்ளாரா? கொற்றவையாகிய நானும் அதை மட்டும் தான் மொழிபெயர்த்துள்ளேனா?

இராமாயணம் விஷ விருட்சம், இதுதான் மகாபாரதம், வேதங்களில் என்ன இருக்கிறது என்று அனைத்தையும் மார்க்சிய கண்ணோட்டத்தில் விமர்சித்துள்ளார்.

இதுதவிர குழந்தைகளுக்கான பொருளாதாரம், மார்க்சின் மூலதனத்திற்கு அறிமுகம். இந்திய தத்துவங்கள் கபிலர் தொடர்ங்கி மார்க்ஸ் ஏங்கல்ஸ் வரை ஒவ்வொருவரின் தத்துவங்களையும் அறிமுகம் செய்கிறார். இதுதவிர நிறைய புத்தகங்கள், கட்டுரைகள்!

அம்பேத்கர் சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு சொல்லும் ஆய்வில் மார்க்சியத்தை எதிர்மறையாக சித்தரிக்கிறார். ஒரு மார்க்சியர் அதற்கு எதிர்வினையாற்றியுள்ளார். காலச் சூழலில் நான் கண்ட கள அரசியலின் விளைவாக அந்த புத்தகத்தை நான் மொழிபெயர்த்தேன். ஆனால் புத்தகம் வந்த நாள் முதல் இங்கே அரங்கேறிய அராஜகமும், தாக்குதல்களும், அவதூறுகளும், ஆபாசப் பேச்சுகளும் கொஞ்ச நஞ்சமல்ல! மனம் துவண்டு போவதும், மீண்டு எழுவதுமாக இந்த 5,6 வருடங்கள் கழிந்தன. மேலும் மேலும் பலமாகத் தான் எழுகிறேனே ஒழிய, சாய்க்க இயலாது. மார்க்சியம் அந்த அறிவுத் தெளிவையும், துணிவையும் வழங்கி உள்ளது.

ரங்கநாயகம்மாவின் இராமாயணம் ஒரு விச விருட்சம் நூலையும் நான் மொழிபெயர்த்து வருகிறேன். அக்கப்போர்களின் காரணமாக மிகவும் தாமதமாகிறது.

குழந்தைகளுக்கான பொருளாதாரக் கல்வி மொழிபெயர்ப்பு முடிந்து வடிவமைப்பு காரணமாக முடங்கி, தற்போது வெளிவரும் நிலையில் இருக்கிறது!

உரையாடல்னு போட்டுட்டு கமெண்ட்ஸ க்ளோஸ் பண்ணிடுறோமாம்! இவங்க தரப்பு மட்டும் எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டிருக்காங்க போல!

5 வருடங்களாக சமூக ஊடக தளத்தில் வைக்கப்பட்ட ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளோம். அதனை தொகுத்து வந்த நூல் தான் சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும் தொடரும் விவாதம்! சாதி, வர்க்கம், கம்யூனிஸ்ட் கட்சி இயக்கங்கள் செய்த சரி என்ன, தவறு என்ன? பெரியார் அம்பேத்கர் பங்களிப்பு என்ன, சாதி ஒழிப்பிற்கான சோஷலிஸ்ட் வேலைத் திட்டம் என்று எல்லாவற்றுக்கும் பதில் உள்ளது. ஆனால் இந்த புத்தகம் பற்றி வாயே திறக்கவில்லை அந்த அராஜக கும்பல்.

தலைப்பில் அம்பேத்கர் போதாது என்று உள்ளது.

எப்படி நீ எங்க தலைவர விமர்சிக்கலாம் என்று சாதிக் கட்சிகளில் எப்படி கொந்தளிப்பார்களோ, அப்படித்தான் இவர்களும் கொந்தளித்துக் கொண்டு மிகவும் மோசமாக பேசினார்கள். பேசி வருகிறார்கள். இதையெல்லாம் எவ்வளவோ பார்த்துட்டோம்.

கண்டபடி பேசியும் பொருமையாகவே பதில் சொல்லி வந்தும், ஏதோ ஒரு கணத்தில் அவர்கள் பாணியில் இறங்கி பதில் சொன்ன உடன் வழக்கும் தொடுத்தார்கள். ஒரு stationல மட்டும் இல்ல, பல ஊர்களில் புகார் கொடுத்தார்கள் வசுமித்ர மீது. இதுதான் இவர்கள் உரையாடல் நடத்தும் இலட்சணம்.

சிபிஎம்மை வைத்தே வழக்கு போட வைத்தது தான் இவர்கள் சாமர்த்தியம் ஏனென்றால் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியே இவங்கள ஏத்துக்கல என்ற உணர்வை ஏற்படுத்துவது. அதன் மூலம் எங்களை போலிகள் என்று கட்டமைப்பது! இந்த அரசியல் எல்லாம் சாதாரண மக்களுக்கு புரியாது!  ஆனால் அது தவறு என்று இன்னொரு கம்யூனிஸ்ட் கட்சியின் கலை இலக்கிய அமைப்பு அறிக்கை வெளியிட்டது!  கருத்துச் சுதந்திரம், உரையாடல் என்று பேச இந்த பிரிவுக்கு தகுதி இருக்கிறத?

உணர்ச்சிகரமான பேச்சுகள் மூலம் தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இவர்களின் ரசிகர்களும் ரசிக மனோபாவத்தில் வன்மத்தைக் கொட்டிக் கொண்டிருப்பார்கள். சாதிக்கட்சி தொண்டர்கள் போல்!

இவர்களை தூண்டி விட்டவர்களுக்கெல்லாம் அப்பவே பதில் சொல்லியாச்சு! அந்த தூண்டுகோல்கள் யாரும் நேரில் பார்த்தால் உரையாட வருவதே இல்லை! அடுத்தடுத்து வசுமித்ரவும் 2 புத்தகங்கள் போட்டு உரையாடிக் கொண்டே தான் இருக்கிறார். அவர் முகநூலில் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டே தான் இருக்கிறார். ஆபாசமாக பேசுபவர்களையும் பொருட்படுத்தி.. நானாவது முடக்கிவிட்டு போய்விடுவேன்.

ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம், உரையாடல்னு பேசுனா மட்டும் போதாது, அதை கடைபிடிக்கனும்! “அடையாளச் சிக்கல்” அனுமதிக்காது! அதிலிருந்து மீள்வதற்கு வர்க்க உணர்வைப் பெற வேண்டும். அதற்கு மார்க்சியம் அவசியம் தேவை!

ஒண்ணு மார்க்சியத்த படிங்க.. இல்லையா 5 வருஷமா எழுதிப் போட்டிருக்குறதை எல்லாம் தேடிப் படிங்க..

அடுத்தும் புத்தகங்கள் வந்துட்டே தான் இருக்கும்! என்ன முத்திரை வேணா குத்துங்க.. வழக்கு கூட தொடுத்துக்கோங்க.. முதலாளித்துவ அடையாள அரசியலுக்கு எதிரான எங்கள் போர் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

டிவிட்டர்ல உக்காந்த நக்கல் அடிச்சுட்டிருக்கவங்களையெல்லாம் பொருட்படுத்தி பதில் சொன்னாதான் உரையாடல்னு எந்த சட்டம் சொல்லுது. உங்க தலைவர்கள் அப்படிதான் எல்லாருக்கும் பதில் சொல்லிட்டு இருக்காங்களா? உங்க immaturityku ஒரு அளவே இல்லையா.

அம்பேத்கர் விமர்சனம் மட்டும் தான் நான் எழுதியும், பேசியும் உள்ளேனா? பெண்கள் விடுதலை, இஸ்லாமியர் மீதான அடக்குமுறை, சிஏஏ, அரசின், முதலாளித்துவத்தின், சாதி ஆதிக்கம், ஆணவக்கொலை என்று  எத்தனையோ பிரச்சினைகள் குறித்துப் பேசிக் கொண்டு தான இருக்கேன். அப்ப சாதிவெறியரா தெரியல போல!

முத்தையா படத்த  பாராட்டுறனாம், உயர்த்திப் பிடிக்குறனாம். எங்க உயர்த்திப் பிடிச்சிருக்கேன். வசு நடிச்சதுக்கு வாழ்த்து சொல்லி ஒரு டிவீட் .. பிறக்கு அப்பா மகன் பகைய பேசிருக்குன்னு ஒரு டீவீட் பண்ணதுக்கு இம்புட்டு குதிப்பு! ஆனா சு.வெங்கடேசன் அதே மேடைல, ஆடியோ ரிலீஸ்ல கலந்துகிட்டாரு. சூர்யா அடுத்து அவரோடு ஏதோ படம் பண்ணப் போறதா சொல்றாரு… அப்ப சு. வெங்கடேசனும் சாதி வெறியரா?

முத்தையா படத்த மட்டும் தான் பாராட்டுறேனா? உங்க அல்பத்தனத்துக்கு அளவே இல்லையா? ஊரே பாராட்டிய சுழல் பற்றிய எனது பார்வை வேறாக இருந்தது. ஏன் இன்னைக்கு ரஞ்சித்துக்கு ஆதரவா பேசிட்டு இருக்குற லெனின் பாரதியோட மேற்குத் தொடர்ச்சி மலைய எப்படி தூக்கிட்டு சுத்துனோம். கம்யூனிஸ்ட்களை தப்பா காட்டிருக்க என்று அவரை எதிர்த்தபோது, “சுயவிமர்சனமா” எடுத்துக்குவோம் தோழர்னு சொன்னதும் இந்த கொற்றவை தான்! வரலாறு தெரியாம எதையாச்சும் உருட்டிட்டு திரியுறது!

காலா படம் வந்த போது தாக்குதல் தொடுத்தவர்களுக்கு எதிராக பேசியவர்களில் நானும் ஒருவர். அதற்காக ரஞ்சித்தின் அரசியல் மற்றும் இடதுசாரி அரசியல் பார்வை பற்றிய விமரசனத்தை வைக்கவே கூடாது என்பது என்ன மாதிரியான கருத்து சுதந்திரம்? பாராட்டும் போது நாங்க நட்பு, விமர்சனம் பண்ணா சாதி வெறியர்! காமெடியா இல்ல! ரஞ்சித் தான் ஒட்டுமொத்த தலித்துகளின் பிரதிநிதியா என்ன?

தலித் மக்களுக்கு எதிராக எங்கே பதிவு செய்திருக்கிறோம். தத்துவார்த்த விவாத தளத்தில் அறிவுஜீவியான அம்பேத்கரை அறிவுத் தளத்தில் அவரது கண்ணோட்டங்கள், ஆய்வுகளைத் தானே விமர்சிக்கிறோம்! தத்துவார்த்த விவாதங்கள் எப்படி நடக்கும் என்று ஒன்று தெரிந்திருந்தால் அதை எப்படி அனுக வேண்டும் என்று தெரியும். உலகாயதம் என்கிற நூலையாவது வாங்கிப் படியுங்கள். மேலும் அம்பேத்கரை நாங்கள் மட்டும் தான் விமர்சித்துள்ளோமா? இதுகாரும் வந்துள்ள நூல்களைத் தேடிப் படியுங்கள்.

அவ்வளவு ஏன், என்னோட ரெண்டாவது புக்கையாச்சும் படிச்சுட்டு பதில் சொல்லுங்களேன்!

சீதா ராமம் படத்த பாராட்டிட்டேனாம், உடனே நான் ஆர்.எஸ்.எஸ், சாதிவெறி! அந்த போஸ்டுக்கு கீழையே ஒரு ஸ்க்ரீன் ஷாட் ஷேர் பண்ணிருக்கேன் அதை தேடிப் பாருங்க.. நான் ஒரு படத்துல  சில விசயங்களை வேற மாதிரி பார்க்குறேன். ஒருவேளை சில விசயங்கள நான் பார்க்கத் தவறி இருந்தா சுட்டிக் காட்டுனா கத்துக்கப் போறேன்.. உடனே ஓடி வரது ஒரு ரப்பர் ஸ்டாம்ப தூக்கிட்டு! ஏன்னா இவங்களுக்கு இவங்க அடையாளத்த நிறுவிட்டே இருக்க யாரையாச்சும் திட்டிட்டே இருக்கனும்! குறிப்பா இவங்க அரசியல அம்பலப்படுத்துறவங்கள துடைத்தழிக்கனும்.. சாதிவெறி கட்சிகள் போல், இந்தப் பக்கமும் ஒரு கூட்டம் அப்படித்தான் இருக்கு!

தோழர் திருமா கேட்ட மாதிரி “அப்ப யாரோட தான்யா வேலை செய்யப் போறீங்க”

-            

 அறிவுபூர்வமாக எதிர்கொள்ளாமல் சாதியரீதியாக தாக்குதல் தொடுக்கும் நபர்களைப் பார்த்து உங்களுக்குத்தான் சாதியபுத்தி இருக்கிறது என்கிறார். இதை Reverse Casteism என்பார்கள். நீங்கள் செய்வதும் இதுதான்! ஆனால் அது காலாவதியாகிப் போன எதிர்வினைகீறல் விழுந்த ரெக்கார்ட்! – 5 வருஷ பதிவுகள தேடிப் படிங்க!

 ஆதவன் தீட்சண்யாவின் பதிவுக்கு எதிர்வினை

http://saavinudhadugal.blogspot.com/2016/08/blog-post.html

புத்தகத்தின் கருத்தைத் தவிர மற்ற அனைத்தையும் ஆராயந்தார்கள்https://www.facebook.com/Kotravai.N/posts/pfbid02z69rxUURAK5rcvfKUsiwHx4ummXCxH1Aa92fEM8iAEvw8MpVjx4g87hkVsyc2gicl

 இராமாயணம் ஒரு விஷ விருட்சம் - ரங்கநாயகம்மா

 http://saavinudhadugal.blogspot.com/2020/03/blog-post_28.html

https://www.facebook.com/Kotravai.N/posts/pfbid02itVyaLVrSDhrb4Tihe5WRxZy2U5MSvd44Bz2vdEKin7PPiMgd4gHAUg791DiQXrFl

 

 

Apr 27, 2019

நான் சாதி வெறி பிடித்தவளாகவே இருந்துவிட்டுப் போகிறேன்!



நான் சாதி வெறி பிடித்தவளாகவே இருந்துவிட்டுப் போகிறேன்!
‘புகழ் மிக்க’ தலித்தியவாதிகள் அல்லது இடது தாராளவாதிகளாக தங்களை முன்னிறுத்திக் கொள்வோர், சாதியப் பிரச்சினை குறித்து பேசும்போதெல்லாம் நான் எனது விமர்சனங்களை வைத்து வருகிறேன். சமூகத்தின் கட்டுமானம் குறித்தும், சாதியப் பிரச்சினை குறித்தும், சாதி ஒழிப்பு குறித்தும் இவர்கள் கொண்டிருக்கும் பார்வையில் சில போதாமைகள் உள்ளன என்பதே அதற்கு காரணம்..
மனித சமூக உறவுகள் பற்றிய புரிதலில் உள்ள குறைபாடு அது. அதனை விஞ்ஞான பூர்வமாக விளக்கும் தத்துவம் மார்க்சியம்.
தலித்தியவாதிகளுக்கு மார்க்சியம் குறித்த தவறான புரிதலானது அம்பேத்கரிடமிருந்து தொடங்குகிறது. ஒடுக்கப்படுவதின் வலியிலிருந்து கண்டால் மட்டுமே அது புரியும் என்பதே இவர்களின் வாதம்! மீண்டும் மீண்டும் சொல்கிறேன் ஒரு பெண்ணாக ஒடுக்கப்படுவதின் வலியை உணர்வதில் உங்களை விட நான் எந்த விதத்திலும் குறைந்தவளாக இருக்க முடியாது! ஏனென்றால் நாம் இருவருமே உடல் ரீதியாக கொடுமைகளுக்கு உள்ளாகிறோம்.
அதற்கான விடையை தேடிய போதே எனக்கு மார்க்சியம் விடிவெள்ளியாக அமைந்தது.
அதனை தொடர்ந்த செயல்பாடுகளினூடாக நான் அடையாள அரசியலின் ஒரு பிரிவாக தலித்திய பிரிவினைவாத அரசியலை சிலர் முன்னெடுப்பதை காண நேர்ந்தது. அவர்கள் மார்க்சிய வெறுப்பை கொண்டிருந்தனர். எந்நேரமும் கம்யூனிஸ்டுகளை பழித்தனர். கம்யூனிஸ்டுகளின் தியாகங்களைக் கூட பொருட்படுத்தவில்லை. அதனால் கம்யூனிஸ்டுகளுக்கோ எனக்கோ எந்த அவமானமும், இழப்புமில்லை. ஆனால் இழப்பு அவர்கள் யாருக்காக போராடுவதாக முன் வைக்கிறார்களோ அவர்களுக்குத்தான். ஆம் உழைக்கும் வர்க்கத்திற்கே இழப்பு!
ஆகவே அவர்கள் எங்கிருந்து இத்தகைய தவறான மார்க்சிய வெறுப்பை கற்றார்கள் என்று ஆய்ந்தபோது, அது அம்பேத்கரில் தொடங்கி, ராஜா காலே என்று வளர்ந்து இன்று தாழ்த்தப்பட்டோரில் ஒரு குறிப்பிட்ட சாதி ஆதிக்க அரசியல் தலைமையின் கீழ் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர முடிந்தது. ஆகவே சாதியப் பிரச்சினைக்கான தீர்வாக இத்தகைய அடையாள அரசியல்வாதிகள் (பெரும்பாலும் இவர்கள் குட்டி பூர்ஷுவா மனநிலை உடையவர்கள், முதலாளித்துவ எதிர்ப்போ, தனியுடைமை ஒழிப்போ இவர்களுக்கு பிரதானம் அல்ல! அம்பேத்கரை முன்வைத்து தலைகீழ் சாதியவாத அரசியலை பிழைப்புவாதமாக மேற்கொண்டு உழைக்கும் வர்க்க அணிதிரட்டலுக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறார்கள் (அறிந்தும் அறியாமலும்).
இத்தகைய சூழலில் நான் அம்பேத்கர் போதாது என்னும் நூலை மொழிபெயர்த்தேன். நான் ஏற்கனவே எனது சிறு குறிப்புகளில் கூறியுள்ளது போல் அதில் மொழிபெயர்ப்பு சிக்கல்களும், மொழிபெயர்ப்பு தவறுகளும் உள்ளன (கருத்துரீதியாக அல்ல). அதனை ஒவ்வொருவரும் சுட்டிக் காட்டுகையில் நான் விளக்கம் கொடுத்துள்ளேன். ரங்கநாயகம்மாவும் கொடுத்துள்ளார். (உ.ம். lower, upper – மேல், கீழ் vs Deppressed class – தாழ்த்தப்பட்ட மக்கள்…. இப்படியாக).
மொழிபெயர்ப்பு தவறுகளுக்கு நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன். ஆனால் எனது விமர்சனத்தில் நான் உறுதியாகவே உள்ளேன். சாதி ஒழிப்பிற்கு அம்பேத்கரிடம் தீர்வு இல்லை! அவர் முன்வைப்பது சீர்திருத்தங்களை உள்ளடக்கிய சட்டவாதம். அதன் எல்லை குறிப்பிட்ட அளவேயானது. அது ஏன் தீர்வை தராது என்பதை புரிந்துகொள்ள முதலில் மார்க்சியத்தை கற்றிருக்க வேண்டும்.
அதன் பின்னர் மார்க்சியத்தில் தீர்வு இல்லை எனில் அதனை ஆதாரங்களுடன் மெய்ப்பித்து, ‘அம்பேத்கரியத்தை’ முன் வைத்து இந்த சமூகத்தின் ஏற்றதாழ்வுகளுக்கும், வறுமைக்கும், ஒடுக்குமுறைக்கும், குறிப்பாக உழைப்பு பிரிவினைக்கும் எது காரணம் என்று விளக்க வேண்டும். அதனை எப்படி ஒழிப்பது, புதியதோர் உலகத்தை எப்படி படைப்பது என்பதை வேலைத்திட்டத்துடன் முன் வைக்க வேண்டும்.
சாதி என்றால் என்ன? அதன் அடிப்படை என்ன? அது எப்படி உருவானது? எப்படி வளர்ந்தது? சாதியப் பாகுபாடு எந்தெந்த தளங்களில் எல்லாம் வேலை செய்கிறது. அதன் தொடக்கம் எப்படி இருந்தது, தற்போதைக்கு அது எப்படி தகவமைந்துள்ளது? அது எதனால் நிகழ்ந்தது? (அம்பேத்கர் விளக்கியிருக்கிறார், அதன் மீதான விமர்சனங்களும் ஏராளமாக உள்ளன. நான் சொல்வது தற்போதைய தலித்திய அறிவுஜீவிகள், திரைத்துறை ‘புகழ்மிக்க’ அண்ணன்கள் விளக்க வேண்டும்.
அம்பேத்கர் நவீன இந்தியாவின் தந்தை என்கிறார்கள். மகிழ்ச்சி! நவீன இந்தியா என்றால் என்ன?
ஒருவர் பிச்சைக்காரனாகவும் மற்றொருவர் கோடீஸ்வரனாகவும் இருப்பது நவீன இந்தியா! இதை வடிவமைத்தவர் அம்பேத்கரா? சாதியக் கொடுமைகளும், மாட்டுக் கறி உண்பதற்கும் தடை விதிக்கும் பாசிச அரசு இருப்பதே நவீன இந்தியா! இதை வடிவமைத்தவர் அம்பேத்கரா?
பெண்கள் மீது எத்தகைய பாலியல் வன்கொடுமைகள் நிகழ்கின்றன… குடும்ப வன்முறைகள் நிகழ்கின்றன! இதுதான் நவீன இந்தியாவின் நிலை! இதை வடிவமைத்தவர் அம்பேத்கரா?
இந்துத்துவ பார்ப்பன வெறியும், முதலாளித்துவ அராஜகமும் நிலவும் சுரண்டல் மிக்க இந்தியாவின் தந்தை என்று அம்பேத்கரை சொல்வது உண்மையில் நாம் அவரை அவமதிப்பதற்கு சமம்.
அப்படியென்றால் ஏன் அம்பேத்கரை இப்படி பூதாகரமாக உயர்த்திப் பிடித்து கடவுள் தன்மைக்கு மாற்றுகிறார்கள்?
இது அவர்களின் சுயசாதி பற்றிலிருந்து மேற்கொள்ளப்படும் உணர்ச்சிகரமான, பிழைப்புவாத அரசியல் என்பதைத் தாண்டி வேறெப்படி வரையறுப்பது? இது நட்பு முரண்பாடே ஆகும்! சிலர் முதலாளித்துவத்தின் கைகூலிகளாக அறிந்து செய்கின்றனர். சிலர் அறியாமையின் காரணமாக தங்களுக்கான தலைவரும் மீட்பரும் வேண்டி இத்தகைய உணர்ச்சிகரமான அரசியலுக்கு ஒத்து ஊதுகிறார்கள்.
எனக்கு மார்க்சியம் தெரியாமல் போகட்டும், நான் சாதி வெறி பிடித்தவளாகவே கூட இருந்துவிட்டுப் போகிறேன். மார்க்சியத்தில் தீர்வில்லாமல் கூட போகட்டும். ஆனால் சாதி ஒழிப்பிற்கும், (குறிப்பாக இடைநிலை சாதிகளை சாதி வெறியிலிருந்து எப்படி மீட்பது? தாழ்த்தப்பட்ட மக்கள் தலித்துகளாக அணிதிரட்டப்பட்டால், அவர்களை எந்த அடையாளத்தின் கீழ் அணிதிரட்டுவது?) வறுமை ஒழிப்பிற்கும், பெண் விடுதலைக்கும், மாற்றுப் பாலினர் மற்றும் இதர ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலைக்கும், தேசிய இன சிக்கலுக்கும் சரியான வழிகாட்டுதலை வழங்கக்கூடிய தத்துவம் எது? இவை பற்றி விஞ்ஞானபூர்வ உலக கண்ணோட்டத்தை வழங்கக் கூடியவர் யார்?
பிரச்சினையின் ஆணி வேரை சுருக்கமாக முன்வைத்து, அதற்கான தீர்வையும் வேலைத்திட்டத்தையும் முன் வைக்க முடியுமா அவர்களால்?
அப்படி வைப்பார்கள் எனில், நான் எனது விமர்சனங்களை கைவிட்டு அவர்களின் 'தத்துவத்தையும்’, வேலைத்திட்டத்தையும் சேர்த்து பிரச்சாரம் செய்ய தொடங்குவேன்.

பா இரஞ்சித்தின் உழைப்புப் பிரிவினை பற்றிய கருத்து தொடர்பாக

 


தனியுடைமையின் அடிப்படையிலான உற்பத்தி முறைக்கு ஏற்ற உழைப்புப் பிரிவினை தான் எல்லாவித ஏற்றத்தாழ்வுகளுக்கும் அடிப்படை. அதுதான் உற்பத்தி உறவுகள் - வர்க்கப் பிரிவினை எனப்படுகிறது. இதை கூறினால் இந்த கம்யூனிஸ்டுகளுக்கு சாதியப் பிரச்சினை குறித்து புரிதல் இல்லை என்பார்கள். சரி கம்யூனிஸ்டுகளுக்கு சாதி இல்லைஅதனால அவங்க சொன்னா கேட் வேண்டாம்மார்க்ஸ் இந்தியாவில் பிறக்கவில்லை.. (அதனால் அவருக்கும் சாதி இல்லை) அதனால் அவர் சொன்னாலும் கேட்க வேண்டாம்.

இப்போது தோழர் பா. இரஞ்சித் மார்க்சியம் எடுத்துரைக்கும் உழைப்புப் பிரிவினையை அடியொட்டி ஒன்றை கூறியிருக்கிறார். (அம்பேத்கர் அவர்கள் உழைப்புப் பிரிவினையை பேசியிருந்தாலும், அவர் உழைப்பாளர் பிரிவினை என்பதை வேறுபடுத்தி பார்த்து, அது சாதிஅது வேறு என்னும் வகையில் ஆய்வு செய்து, அதற்கான தீர்வுகளை முன் வைத்ததில் சில தவறுகளும், போதாமையும் இருக்கிறது என்பதே எங்களது வாதம்இதை அவதூறு என்பவர்கள்அதற்காக எனக்கு சாதி வெறி சாயம் பூசுபவர்கள்  அறிவார்ந்த விவாதங்களில் ஈடபட அறியாதவர்கள்அவ்வளவே). இரஞ்சித் சொல்வதன் அடிப்படையை எப்படி கண்டடைவது. வியாக்கியானம் சரிவிடை எங்கே…. அதற்குதான் மார்க்சியம் அவசியத் தேவை! (நான் மொழிபெயர்த்த நூல்களை வாங்கிப் படித்து என்னை கோடீஸ்வரியாக்கி விட வேண்டாம். மற்ற மார்க்சிய நூல்களை படித்துப் பார்க்கவும்.)

வரலாறு பற்றிய கருத்துமுதல்வாத கண்ணோட்டத்தைப் பொதுவாகவும், ஜெர்மானியின் பின்-ஹெகலிய தத்துவத்தைக் குறிப்பாகவும் விமர்சிக்கும்போது மார்க்ஸும், எங்கெல்ஸும் (1845-46: 63) இந்தியாவில் நிலவும் பக்குவற்ற உழைப்புப் பிரிவினையானது அரசு மற்றும் மத நிறுவனங்களால் சாதியமைப்பாக உருவெடுக்க வகை செய்தது என்றனர்.  சாதியமைப்புதான் பக்குவமற்ற அந்த உழைப்புப் பிரிவினையை ஏற்படுத்தியது என்னும் கருத்துமுதல்வாத நம்பிக்கையை அவர்கள் விமர்சனம் செய்தனர்3 .  இவ்வாறாக மார்க்ஸைப் பொறுத்தவரை (1846:158), சாதியப் படிநிலை ஆட்சி என்பதும் குறிப்பிட்ட வகையான உழைப்புப் பிரிவினையே4. வேறு சொற்களில் சொல்வதானால், “உழைப்புப் பிரிவினையே சாதியை உருவாக்கியது” (மார்க்ஸ் 1846-47: 114). இருப்பினும், இந்தக் குறிப்பிட்ட உழைப்புப் பிரிவினை பரம்பரை உரிமை’ என்னும் வகையில் உள்ளது (மார்க்ஸ் 1853b: 497)5.

மார்க்ஸைப் பொறுத்தவரை (1867:321), முந்தைய சமுதாயங்கள் தொழில்களைப் பரம்பரையாக்கி, சாதிகளாக அவற்றை உறைந்து இறுகச் செய்யும்’ (இந்தியாவைப் போல்) அல்லது கைவினைச் சங்கங்களாக சமைந்து கெட்டிப்படச் செய்யும் (எகிப்தைப் போல்) போக்கைக் கொண்டிருந்தன6. சாதியமைப்பின் கீழ் குறிப்பிட்ட தீர்மானகரமான சட்டதிட்டங்களுக்குஏற்ப உழைப்புப் பிரிவினை நிலவியது என்கிறார் மார்க்ஸ். இந்த சட்டங்களை சட்டம் இயற்றுபவர் நிறுவவில்லைஎன்றவர், கூடுதலாக, பொருளாயத அடிப்படையிலேயே இந்நிலைமைகள் தோன்றின என்றும், அவை சட்ட நிலைக்கு உயர்த்தப்பட்டன என்றும் கூறுகிறார்7.  பின்னர் அந்த சட்டமானது தொழிலை ஒரு மரபார்ந்த உரிமையாக்கி, சாதியமைப்பாக நிலைநாட்டப்படுகின்றன8. மார்க்ஸைப் பொறுத்தவரை, சமூகமானது குறிப்பிட்டளவு வளர்ச்சியை எட்டிய பின்னரே சாதிகள் மரபு வழியிலான சட்டநிலையை எட்டியது9.

https://saavinudhadugal.blogspot.com/2017/08/blog-post.html

சாதியமைப்பு பற்றிய மார்க்ஸின் கருத்துரு*:


(சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்: தொடரும் விவாதம், பக். 211)

********


சில குறிப்பிட்ட அசுத்தமான பழக்கங்களால் உறவாடுவதற்கு தகுதியற்றவர்களாக தாழ்த்தப்பட்ட மக்கள் கருதப்படுகிறார்கள். இதுவே ’மேல்’ சாதியினர் சுமத்தும் குற்றம். அதாவது அவர்கள் இறந்த விலங்கின் இறைச்சி உண்ணுகிறார்கள், அதனால் அவர்கள் அசுத்தமானவர்கள்... [ஆனால்], கொலாபா மற்றும் ரத்னகிரி மாவட்டங்களில் ஒட்டுமொத்த மஹர் சாதியும், இறந்த விலங்கின் இறைச்சியை உண்ணும் பழக்கத்தைக் கைவிட்டுவிட்டது, ஆனால் அவர்களின் துன்பமும், சமூக ஒடுக்குமுறையும் தொடரத்தான் செய்கிறது. அதைப் பேசக்கூட முடியாது. அவர்கள் மீதுபொருளாதாரத் தடை மற்றும் சமூக ஒதுக்கலும் நிகழ்கிறது. காலம் காலமாக அவர்கள் பயிரிட்டு வந்த நிலங்கள் சாதி இந்து நிலப்பிரபுக்களால் பறிக்கப்பட்டுவிட்டன. மீண்டும் அசுத்தப் பணிக்கு அவர்கள் திரும்ப வேண்டும் என்பதற்காக எல்லாவிதமான சமூக, பொருளாதார நெருக்கடிகளும் அவர்கள் மீது தொடுக்கப்படுகின்றன” (அம்பேத்கர், தொகுதி 2, பக். 484).

இந்தத் தகவல்கள் உணர்த்துவது என்ன? அது இரண்டுவிதமானச் சூழலை விளக்குகிறது:

(1) உற்பத்தி சாதனம் இல்லாததால்வறுமை’.

(2) ‘சாதிஎன்னும் வடிவத்திலானஉழைப்புப் பிரிவினையால் நிலவும்தீண்டாமை’.

இந்த இரண்டு நிலைமைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. இருந்தாலும் முடிந்தவரை அவற்றை நாம் தனித்தனியே புரிந்து கொள்ள வேண்டும்.

        (1) வறுமை: தீண்டப்படாதோர், நிலத்தையோ, உற்பத்தி சாதனத்தையோ உடைமையாகக் கொண்டிருக்கவில்லை. அப்படியே இருந்தாலும், அது சொற்பமான அளவே. மற்ற ’கீழ்’ சாதி மக்களுக்கு, மற்றும் சில ’மேல்’ சாதி மக்களுக்கும் இந்நிலை பொருந்தும். பெருமளவிலான உற்பத்திச் சாதனம் ’மேல்’ சாதியின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. துல்லியமாக, அதுவே அச்சாதியினரின் ஆயுதம்.

        (2) தீண்டாமை: விவசாயம் மட்டுமல்லாது, தெருவைச் சுத்தம் செய்தல், மலம் அள்ளுவது, இறந்த விலங்குகளைப் புதைப்பது, கழிப்பறையைச் சுத்தம் செய்வது ஆகிய பணிகளும் தீண்டப்படாதோரின் பணிகள். சமூகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் தேவையான மிகவும் அடிப்படைப் பணிகள் இவை. விவசாயம் தொடர்பான பணிகள் தீண்டப்படாதோர் மற்றும் சூத்திரர்களுக்கானவை. ஆனால், துப்புரவுப் பணி தீண்டப்படாதோருக்கு மட்டுமேயானது. துப்புரவுப் பணிகளால்தான் தீண்டாமை நிலவுகிறது என்று சொல்ல முடியாதென்றாலும், ‘தீண்டப்படாதோரே அசுத்தப் பணிகளைச் செய்கின்றனர்என்று சொல்லலாம். இதன் மூலம் நாம் வறுமை மற்றும் துப்புரவுப் பணி என்பதை தீண்டப்படாதோர் மத்தியில் மட்டுமே காண்கிறோம். இதற்குத் தீர்வுதான் என்ன?

        உழைப்புச் சுரண்டலால்வறுமைதோன்றுகிறது, எனவே உழைப்புச் சுரண்டலை ஒழிப்பதே அதற்கான தீர்வு.  சமூகத்தின் ஒவ்வொரு நபரும் உழைக்க வேண்டும். உழைப்பைச் செலுத்தாத ஒரு வர்க்கம் கூட இருக்ககூடாது என்பதே இதன் பொருள். தீண்டப்படாதோர் மட்டுமே துப்புரவுப் பணிகளைச் செய்ய நேர்வதால், கூலி முறையை ஒழிப்பதும், சுரண்டலுக்கான உறவுகளிலிருந்து எழுந்த உழைப்புப் பிரிவினையை ஒழிப்பதுமே அதற்கு தீர்வு. இதன் பொருள், ஒரு குறிப்பிட்ட பிரிவுக்கு மட்டும் துப்புரவுப் பணிகள் ஒதுக்கப்படக்கூடாது. ஒவ்வொரு ஆணும், பெண்ணும் அதைத் தன் கடமையென்று செய்ய வேண்டும். இவ்வாறாக, நாம் பழைய உழைப்புப் பிரிவினை முறையை மாற்ற வேண்டும். 

          நாம் மற்ற ’கீழ்’சாதியினரை எடுத்துக் கொண்டாலும் அவர்களிலும் இதே பிரச்சினை நிலவுகிறது: (1) வறுமை மற்றும் (2) உடல் உழைப்புக்கு மட்டுமே ஆளாதல். வறுமை என்பது உழைப்புச் சுரண்டலின் விளைவு. உடலுழைப்புக்கு மட்டுமே உள்ளாதல் என்பது பழைய உழைப்புப் பிரிவினையின் விளைவு. இங்கும், நமக்கு அதே தீர்வுதான் வழி.

          உற்பத்தி சாதனத்தின் பொருளாதாரப் பெயர்சொத்து. இது நிலம் மற்றும் இதர வளங்களைக் குறிக்கிறது.

          சாராம்சத்தில் சொத்து இரு வகைப்படும்: 1. தன் சொந்த உழைப்பை அடிப்படையாகக் கொண்ட சொத்து; 2. சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட சொத்து.

          (1) தன் சொந்த உழைப்பினால் கிட்டிய சொத்து: உதாரணத்திற்கு, ஒரு குடும்பத்திடம் 4 ஏக்கர் விவசாய நிலமிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நிலமிருப்பதாலேயே பயிர் விளைவதில்லை. அதற்குப் பல வகையான உழைப்பைச் செலுத்த வேண்டும். நிலத்தில் பயிர்விளைவிக்க அக்குடும்பத்தில் உள்ள ஆணும் பெண்ணும் பலவிதமான உழைப்பைச் செலுத்துகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் கிடைத்த பயிரின் ஒரு பகுதியை விற்று, மற்றவர்களிடமிருந்து தமது வாழ்விற்குத் தேவையான பொருட்களை வாங்கி வாழ்கிறார்கள் என்றால், அவர்கள் தங்கள் சொந்த உழைப்பில் வாழ்கிறார்கள் என்று பொருள்.  இங்கு, மற்றஉழைப்பாளிகளைபணிக்கமர்த்தும் அவசியம் வரவில்லை. அதனால் இங்குஎஜமானர், உழைப்பாளிஉறவு இல்லை. இந்தக் குடும்பத்திற்கு 100 ஏக்கர் நிலங்கள் சொந்தமாக இருப்பின், தங்களுடைய சொந்த உழைப்பைக் கொண்டு ஒட்டு மொத்த நிலத்தையும் அக்குடும்பத்தால் உழ முடியாது. வேறு சொற்களில் சொல்வதானல், ஒவ்வொரு குடும்பமும் தம்மால் உழைக்கக்கூடிய அளவுக்கான உற்பத்தி சாதனங்களை மட்டுமே உடைமையாகக் கொண்டிருக்க வேண்டும். தன்னுடைய உழைப்பின் ஒரு பகுதி மற்றவற்களுக்குச் செல்லவில்லையென்றால், ஒருவர்ஏழ்மையில்வாழும் நிலை ஏற்படாது. அதேபோல், மற்றவரின் உழைப்பின் பகுதி தமக்குக் கிடைக்கவில்லையென்றால் ஒருவர்செல்வத்தைப்பெற முடியாது. ஒவ்வொரு மனிதரும் தமது சொந்த உழைப்பால் வாழும் அமைப்பில் ஏழ்மையோ, செல்வமோ நிலவாது என்பதே இதன் பொருள். அத்தகையச் சூழலில், வாழ்க்கை இயல்பாக இருக்கும் ஏனென்றால், வாழ்வின் தேவைகள் நிறைவேறப்பட்டு அங்கு தட்டுப்பாடோ, கூடுதலோ இருக்காது. எல்லாக் குடும்பங்களும் இதேபோல் வாழ்கின்றன என்று எடுத்துக் கொண்டால், எவரும் எஜமானரும் இல்லை, உழைப்பாளரும் இல்லை. எல்லா மனிதர்களும்சமஉழைப்பு உறவில் வாழ்வர். ஒவ்வொரு மனிதரும் / குடும்பமும் தனித்தனியாக வாழும் சமூகம்தனிநபர் உற்பத்தியாளர்களின் சமூகம்’. அது, ‘தனி நபர் உற்பத்தியாளர்களின் சொத்துடைமை அமைப்புஎன்றாகும். 

          இந்த எல்லாத் தனிநபர்களும் தங்களுடைய தனிச்சொத்துக்களை ஒன்றிணைத்து, முன்னர் போலவே உழைத்தால் அதுகூட்டு உற்பத்தியாளர்களின்சமூகமாகும். வேறு சொற்களில் சொல்வதானால், அது கூட்டு உற்பத்தியாளர்களின் அமைப்பு.

          எல்லா நபர்களும் உழைப்பதால்தனிநபர் உற்பத்தி சொத்துடைமை அமைப்பிலோ அல்லது, கூட்டு உற்பத்தி சொத்துடைமை அமைப்பிலோ உழைப்புச் சுரண்டல் இருக்காது. ஒரு தனிநபர்கூட ஏழ்மையில் வாழும் நிலை ஏற்படாது. எஜமானர், உழைப்பாளி என்னும் சமமற்ற உழைப்புசார் உறவு (உற்பத்தி உறவு) நிலவாது. (அல்லது ஏற்றத்தாழ்வுடன் கூடிய உற்பத்தி உறவுகள் நிலவாது).

          (2) உழைப்புச் சுரண்டலினால் நிலவும் சொத்துடமை அமைப்பு:  இது முதலில் சொன்ன அமைப்பிலிருந்து முற்றிலும் மாறானது. இதைப் புரிந்துகொள்ள, முதலில் சொன்ன அமைப்பைத் தலைகீழாகப் போட்டால் போதுமானது. இந்த சொத்துடைமை அமைப்பில், ஒரு சிறுபான்மைக் கூட்டம் சொத்துடைமையின் பெயரால் நிலத்தையும், மற்ற உற்பத்தி சாதனங்களையும் கொண்டிருக்கும். பெரும்பான்மை நபர்களுக்கு சொத்திருக்காது. உற்பத்தி சாதனங்கள் தாமாக பொருளை உற்பத்தி செய்யாது. அந்த உற்பத்தி சாதனத்தைக் கொண்டு பலவிதமான உழைப்பைச் செலுத்தினாலே வாழ்க்கைக்குத் தேவையான பொருளீட்ட முடியும். ஆனால் இந்த அமைப்பில், உற்பத்திச் சாதனங்களைக் கொண்டிருப்போர் உழைப்பைச் செலுத்துவதில்லை. அவர்கள் எஜமானர்களாகி, உற்பத்தி சாதனங்களற்றோரை, உழைப்பாளிகளாகப் பணிக்கமர்த்துகின்றனர். அதன் பிறகு நடப்பதென்ன என்பது வெட்டவெளிச்சம். உழைப்பாளிகளின் பெருமளவிலான உழைப்பு எஜமானர் வர்க்கத்திற்கு செல்கிறது. இப்படித்தான் அந்த வர்க்கம் வாழ்கிறது. இது உழைப்புச் சுரண்டலின்றி வேறில்லை. இது பலவித அடையாளங்களின் கீழ் நடக்கிறது: ‘நிலத்திற்கு வாடகை’, ‘சொத்துக்கு’ ‘வட்டிமற்றும்இலாபம்’. ஒட்டுமொத்த சுரண்டலின் இரகசியமும், இந்த மூன்று வருவாயில் ஒளிந்திருக்கிறது: வாடகை, வட்டி மற்றும் இலாபம்.  இந்த வருவாய் மூலங்கள் ஒருவருடைய சொந்த உழைப்பால் கிட்டுவதில்லை. இந்த சொத்துடைமை முறையில், உழைக்கும் வர்க்கத்திற்கு வறுமையும், எஜமானர் வர்க்கத்திற்குச் செல்வமும் வாழ்க்கை நிலைமைகளின் அங்கங்களாகின்றன.

          இந்தச் சொத்துக்கள் அடிமை உடைமையாளர்களின் சொத்து என்பதாகவோ, முதலாளிகளின் சொத்து என்பதாகவோ, அல்லது இதே பண்புகளோடு வேறு பெயர்களைக் கொண்டதாலோ நிலவுகின்றது.

          மனித சமூகத்தின் பண்டையக் காலத்தை விட்டுவிட்டுப் பார்த்தால், இன்றுவரை நிலவும் வரலாறு முழுக்க சுரண்டல் உறவின் பல வடிவங்களையே கொண்டிருக்கிறது.

          சாதியமைப்பைஎடுத்துக் கொண்டாலும், தீண்டப்படாதோரும், சூத்திரர்களும் ’மேல்’ சாதியினருக்குப் பணி செய்யும் உழைப்பாளிகள். இந்தப் பிரிவு செலுத்தும் உழைப்பு முழுவதும் உடலுழைப்பே. ’மேல்’ சாதியின் ஒரு பிரிவு உடலுழைப்பைச் செலுத்தாமல், மூளை உழைப்பைச் செலுத்துகிறது. ’கீழ்’ சாதியினருக்கு மூளை உழைப்பைச் செலுத்தி பிழைக்கும் வாய்பு இல்லை.

          இதுவே அவர்களின் நிலைமை. இந்த நிலைமைகளை நாம்வறுமை’, ‘சாதிப் பாகுபாடுஎன்று பகுத்துக் காண வேண்டும்.

          வறுமைக்கானத் தீர்வுஉழைப்புச் சுரண்டலைஒழிப்பது. எல்லா மனிதரும் உழைத்து வாழ வேண்டும். சுரண்டலின் விளைவால் ஈட்டும் சொத்துடைமை அமைப்பை ஒழிக்க வேண்டும். ‘சாதியப் பாகுபாட்டிற்கானதீர்வு, சுரண்டல் நிறைந்த உழைப்புப் பிரிவினையை மாற்றி அமைக்க வேண்டும்.  ஒவ்வொரு நபரும் ஒரு குறிப்பிட்ட அளவு உடலுழைப்பையும் (அசுத்தப் பணிகள் உட்பட), குறிப்பிட்ட அளவு மூளை உழைப்பையும் செலுத்தி வாழ வேண்டும். சாதிக் கலப்புத் திருமணம் போன்ற சில மேல்மட்ட மாற்றங்களும் இந்த மாற்றத்தின் ஒரு பகுதியே.

          தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு மற்றும் வறுமை ஒழிப்பு போன்ற எல்லாப் பிரச்சினைகளையும் அம்பேத்கர் விவாதித்தார். மேலும், ‘மதம்என்பதை மனித சமூகத்தின் ஒரு இலக்காக அவர் சேர்த்துக் கொண்டார். இனி வரும் அத்தியாயங்களில் இந்தப் பிரச்சினைகளை நாம் ஆய்வு செய்ய வேண்டும்.

…. (சாதியப் பிரச்சினைக்கான தீர்வு: புத்தர் போதாது, அம்பேத்கரும் போதாது! மார்க்ஸ் அவசியத் தேவை, பக். 152 – 155)

இந்தச் சொற்களுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்தப் பொருளாதாரத்திற்கும் இரண்டு பொருள் உள்ளது. உழைப்புச் சுரண்டலை மேற்கொள்வதற்கான எல்லாவிதமான பொருளாதார உரிமைகளையும், ஒத்த உறவுகளையும் அங்கீகரிப்பதே முதல் வகையான பொருளாதாரம். அதுவே முதலாளித்துவப் பொருளாதாரம் அல்லது பூர்ஷுவா பொருளாதாரம். அதற்கு எதிரான பொருளாதாரமே இந்த உழைப்புச் சுரண்டலை எதிர்க்கிறது, பூர்ஷுவா பொருளாதாரத்தை நிராகரிக்கிறது. அதுவே மார்க்ஸியப் பொருளாதாரம் அல்லது கம்யூனிசப் பொருளாதாரம். 

          உழைப்புச் சுரண்டலை ஒழிப்பதற்கும், சமத்துவத்தை ஈட்டவும் மார்க்ஸியப் பொருளாதாரம் மூன்று விசயங்களை முதன்மையாகத் தருகிறது.

1)       ஆண் பெண் உள்ளிட்ட அனைத்து நபர்களும் உழைக்க வேண்டும். அவர்களுடைய உழைப்பே அவர்களின் வாழ்வாதாரத்திற்குப் பொருள் ஈட்டித்தர வேண்டும்.
          2)       வருமானத்தை ஈட்டித்தரும் வாடகை, வட்டி, இலாபம் மற்றும் சுரண்டல்வாதச் சொத்துரிமை ஆகியவற்றை ஒழிக்க வேண்டும்.
          3)       ஒரு நபர் உடல் உழைப்பையும், மற்றவர் மூளை உழைப்பையும் செலுத்தும் சுரண்டல்வாத உழைப்புப் பிரிவினையை ஒழிக்க வேண்டும். எல்லா ஆண்களும், பெண்களும் குறிப்பிட்ட அளவு உடல் உழைப்பு, குறிப்பிட்ட அளவு மூளை உழைப்பு செலுத்தும் புதிய வகை உழைப்புப் பிரிவினையை நிறுவ வேண்டும்.

          இந்த மாற்றங்கள் நிகழ்ந்தால் மட்டுமே, உழைப்புசார் சுரண்டல்வாத உறவுகள் சமமான உழைப்புசார் உறவுகளாகும் (உற்பத்தி உறவுகளாகும்). சுரண்டல்வாதச் சமூகம் ஒரு புதிய தன்மை கொண்ட சமூகமாக மாறும்.

          மார்க்சியம் குறித்த அறைகுறை ஞானம் உடையவர்களே அது முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் உறவு பற்றி மட்டும் பேசுகிறது, பெண்கள் உட்பட சமூகத்தின் மற்ற பிரிவுகள் குறித்துப் பேசவில்லை என்று கருதுகின்றனர். ஆனால் அது முற்றிலும் தவறானது.

          அடிமைச் சமூகக் காலத்திலிருந்து வரலாற்றில் நாம் எந்தக் காலத்தை எடுத்துக் கொண்டாலும், சமூகம் பல வர்க்கங்களாக, உட்பிரிவுகளாக பிளவுபட்டிருப்பதைக் காண முடியும்.  ஆனால் அந்த வர்க்கங்களும், உட்பிரிவுகளும் அடிப்படையில் இரண்டு வர்க்கங்களாகச் சுருங்கி நிற்கும், அவை: உழைக்கும் வர்க்கம், உழைக்காத வர்க்கம். மூன்றாவதாக ஒரு வர்க்கம் ஒரு பகுதி தனது உழைப்பிலும், ஒரு பகுதி சுரண்டலிலும் வாழ்ந்தாலும், அந்த உட்-பிரிவுகளில் ஒரு பகுதியை நாம் உழைக்கும் வர்க்கமெனவும், ஒரு பகுதியை உழைக்காத வர்க்கம் எனவும் வகுத்துக் கொள்ளலாம். மொத்தத்தில் ஒட்டுமொத்த மக்கள் தொகையும் - ஆண், பெண் மற்றும் முதியவர் அனைவரும் இந்த இரண்டு வர்க்கத்தின் கீழ் வருபவரே. இந்த இரண்டு வர்க்கம் பற்றிய குறிப்பு ஒட்டு மொத்த சமூகத்தையும் குறிப்பதாகும்.

          எஜமானர் என்ற சொல்லை நாம் பயன்படுத்தினால், அவர் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் அந்த பதத்தின் கீழ் வருவர். உழைப்பாளர் என்ற சொல்லை பயன்படுத்தினால், அவர் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் அந்த பதத்தின் கீழ் வருவர். இந்த இரண்டும் சேர்ந்து முழுச் சமூகமாகிறது.

           உற்பத்தி ஈட்டும் உழைப்பு, உற்பத்தி ஈட்டாத உழைப்பு மற்றும் குடும்ப உழைப்பு என்று வெவ்வேறு வகையான உழைப்புசார் உறவுகள் இந்த சமூகத்தில் பின்னிப் பிணைந்திருக்கின்றன.

          ஆண், பெண், இளைஞர் என எல்லாரும் ஏதோ ஒரு வர்க்கம் அல்லது ஒரு வர்க்கப் பிரிவின் கீழே வருவர். உழைப்புசார் உறவில் ஒருவர் பெறும் இடமும், வாழ்வாதாரத்திற்கான அவரது பொருளீட்டும் முறையும் வர்க்கத்தில் அல்லது பிரிவில் அவரது இடத்தைத் தீர்மானிக்கிறது.

          பிச்சைக்காரர்கள், சிறைக் கைதிகள், அனாதை ஆசிரமத்தில் வசிப்போர், மத நிறுவன ஊழியர்கள், ரௌடிகள் போன்றோரும் தங்களது வருமான ஆதாரத்தைப் பொறுத்து ஒரு ஏதோ ஒரு வர்க்கத்தின் கீழ் வருவர். இந்த உதாரணங்களில், மத நிறுவனங்களில் வாழ்வோர் தவிர மற்ற அனைவரும் தொழிலாளர் வர்க்கத்தைச் சார்ந்தவர்கள். விலை மாதர்களும் ஒரு தொழில் செய்து வாழ்கின்றனர் என்றாலும், அதை உழைப்பு என்று சொல்ல முடியாது. விலைமாதர்கள், ரௌடிகள் உழைப்பாளிகள் அல்லர்.

          இந்த உழைப்புசார் உறவுகள் (உற்பத்தி உறவுகள்) அனைத்தையும் நாம் புரிந்து கொண்டால், சமூகத்தின் ஒட்டுமொத்த மக்கள் குறித்தும் மார்க்சியம் பேசுகிறது என்பது விளங்கும். 

(சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு: புத்தர் போதாது! அம்பேத்கர் போதாது! மார்க்ஸ் அவசியத் தேவை, பக். 189 – 190)

சிறு குறிப்பு: இந்நூல் தான் நான் மொழிபெயர்த்த முதல் நூல். ஆகவே மொழிபெயர்ப்புக்கு நேர்மையாக இருப்பது என்னும் புரிதலின் காரணமாக lower, upper என்பதை அப்படியே மேல், கீழ் என்று மொழிபெயர்த்திருந்தேன் (Oppressed, Depressed என்றால் மட்டுமே ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என்று பொருள். அம்பேத்கர் அவர்களின் எழுத்துகளை மொழிபெயர்த்திருப்பவர்களும் இத்தகைய தவறுகளை செய்துள்ளனர்). பின்னர் தோழர் அரங்க. குணசேகரன் அவர்கள் அது தவறு என்பதை சுட்டிக்காட்டி, குறைந்தபட்சம் அடைப்புகுறிகளுக்குள் நீங்கள் போட்டிருக்கலாம் என்றார். ஆனால் அதற்குள் நூல் வெளி வந்துவிட்டது.

ஆகவே இப்போது நான் அதையே மேற்கோள் காட்டியிருப்பதால் மொழிபெயர்ப்பை மாற்றுவது நேர்மையாக இருக்காது. ஆனால் அது அதிகாரச் சொற்கள் என்பதால் அடைப்புக்குறியை மட்டும் சேர்த்துள்ளேன்.

மொழிபெயர்ப்பு தவறுக்காக மன்னிப்பு வேண்டுகிறேன்.