Showing posts with label Katturaigal. Show all posts
Showing posts with label Katturaigal. Show all posts

Dec 11, 2012

ஒலிக்காத இளவேனில் – கவிதை நூல் அறிமுகம்.




இதயம் ஒரு துப்பாக்கிக் குண்டுக்காக ஏங்குகிறது
தொண்டையோ ஒரு கத்திக்காக ஏங்குகிறது
ஆன்மாவோ பனிச்சுவர்களிடையே நடுங்குகிறது
அது ஒருபோதும் பனியிலிருந்து தப்ப முடியாது.

-      ம்யாக்கோவ்ஸ்கி


பனியை இங்கு கொலைக்களமாக ம்யாக்கோவ்ஸ்கி ஏன் விரித்தான். தற்சாவும் விருப்பதிற்கிணங்காத முறையில் நிகழும்போது கவிக்கு சொல்ல இறுதியாக என்ன வார்த்தைகள் மிஞ்சும், கவியின் இறுதியுணர்ச்சி எதைச் சொல்லும். கையகல இருப்புகளுக்காகவா இத்தனை அழித்தொழிப்பு. இங்கு உண்மையில் கவிதைகளுக்கு என்ன இடம் இருக்கப் போகிறது. கவிதை மானுடமனத்தை இயற்கையாக ஆண்டுகொண்டிருக்கிறது என்பதற்கு சாட்சியாக கவிதை மட்டுமே இருக்கிறது ஆனால் போர்க்களத்தில் கவிதை பாடிக்கொண்டிருக்க முடியாது எனச் சொன்ன லூ சூனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மனிதர்கள் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளுவதில் பேராவலோடு இருக்கும் காலகட்டத்தில்தான் நாம் பிறந்திருக்கிறோம். வெற்றிபெற்றவர்களின் ஆங்காரக் கூச்சலிடையே தோல்வியுற்றவர்களின் கசந்த அழுகைகள் மறந்துவிடுகின்றன. அவைகள் முணுமுணுப்பது கவிதைகளின் வாயிலாகத்தான். அக்கவிதைகளை வரிகளை வைத்து எடைபோடமுடியாது என காலம் தன் இருப்பை வைத்துச் சொல்லுகிறது. அக்காலமோ அகால உணர்ச்சியை முன் வைக்கிறது. அகாலத்தின் துயர்களைச் சொல்லியபடி எனக்குத் தெரிந்து வெளிவந்திருக்கும் கவிதைத் தொகுதிகள் என மரணத்துள் வாழ்வோம், பெயரிடாத நட்சத்திரங்கள், இப்பொழுது ஒலிக்காத இளவேனில். இம்மூன்று தொகுதிகளின் தலைப்பே வீழ்ந்து கொண்டிருக்கும் ஆன்மாவின் குரலாகவே ஒலித்துக்கொண்டிருக்கிறது.

கண்ணுக்கெதிரே பறிபோகும் நிலமும் உடலும், உடல் சார் உளமும் கருகும்போது சொல்லமுடியாதவர்களின் குரலாய் ஒலிக்கிறது இக்கவிதைகள். உள்ளபடியே கொஞ்சம் அழுத்திச் சொல்ல வேண்டுமானால் கவிதைகள் கூறும் இலக்கண அல்லது இலக்கிய விதிகளை சற்றுப் புறந்தள்ளிவிட்டுத்தான் இத்தொகுதியை வாசிக்க முடியும். வாசிக்க வேண்டும் இது வேண்டுகோளே. அஞ்சிச் சாகும் மக்கள் இறக்கும்போது எழுதவோ சொல்லவோ ஒரு வார்த்தை எப்பொழுதும் இருக்கத்தான் செய்கிறது. சில மரணங்கள் சில மனிதர்களுக்கு வாழ்வின் ஆசுவாசத்தை ஏன் தருகிறது என்ற மானுட உளவியலையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். தீராத்துயர். மனிதர்களை மனித இருப்புக்களுக்காய் கொலை செய்வதை எந்த மன அமைப்பு விரும்புகிறது.

கவிதை என்பதை மனநிலை என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா. மனம் திறந்து நமது உணர்வுகளை வாய்மொழியாக பேசுவதற்கும் அதை அச்சில் ஏற்றுவதற்குமான எந்த இடைவெளியில் உணர்வுகள் கவிதையாகின்றன. ஓசையும் ஓசையின்மையும் அதை சாத்தியப்படுத்துகிறதா? வடிவமா அல்லது கவிதை எழுதுதல் என்பது ஒரு அறிவார்த்த வெளிப்பாடு, ரசனை, படைப்பு கலை என்கிற பூடகங்கள் ஒருவரை கவிதை எழுதத் தூண்டுகிறதா.

மானுட வரலாற்றில் தோன்றிய முதல் கவிதை எதுவாக இருக்கும். காலம் காலமாக அது குழந்தை என்ற பதிலையே கொண்டிருக்கும் என்று தோன்றுகிறது. ஒரு சிறந்த ஓவியத்தை, கண்களை ஈர்க்கும் தோற்றம், சிறந்த கட்டிடக் கலையை வெளிப்படுத்தும் கட்டிடம், இவ்வளவு ஏன் ஒரு சிறந்த கதை, உரைநடை கூட மனம் கவரும் விதத்தில் இருந்தால் கவிதை போல் இருக்கிறது என்கிறோம்.

ஆக கவிதை என்பதற்கான விளக்கமாய் அது கொடுக்கும் அனுபவமே பிரதானமாய் இருக்கிறது வடிவமல்ல என்பது தெளிவு. அந்த அனுபவத்தை சொற்செறிவுடன், சொற்சிக்கனத்துடன் சொல்வதற்கேற்ற வடிவமாக உரைநடையல்லாத வடிவம் அமைகிறது. தற்போதைய காலகட்டத்தில் உரைநடைக் கவிதைகளும் வந்துள்ளன. கவிதை என்பது ரசனை சார்ந்த ஒன்றாக கருதப்பட்டாலும் ஒரு கவிதை உடனடியாக நம்மைக் கவர்வதும், மற்றொன்று பிடிக்காமல் போவதற்கும் அது தரும் அனுபவமே காரணமாக இருக்கிறது.

எதிலிருந்து கவிதை, அனுபவத்தைத் தருகிறது. நமது தேர்வு, விருப்பங்கள், இலட்சியத் தேடல்கள் அதன் உட்கூறுகளாக இருக்கின்றன. உ.ம் படைப்பை தூய இலக்கியம் என்று கருதுபவர்களின் பிரதானத் தேர்வாக காதல், காமம், உடலியல் இன்பம், மொழிப் பயன்பாடு ஆகியவை இருக்கிறது.  கூடுதலாக சமூகம் பற்றிய இவர்களது அக்கறை இரக்க பாவனை கொண்டதாக இருப்பதால் அத்தகைய வியாக்கியானங்களை, இரக்க பாவனைகளை சமூகக் கவிதையாகக் கருதும் போக்கு நிலவுகிறது. இந்த தேர்வானது அவநம்பிக்கை, அயர்ச்சி, இயலாமை, வெறுமை என்பதாக நீள்கிறது.

கலை மக்களைப் பேசவேண்டும் என்று கருதுவோரின் தேர்வாக அரசியல், சமூக மாற்றம் இவற்றை முன் வைக்கும் புரட்சிகர கவிதைகள், விடுதலை முழக்கங்கள், அழித்தொழிப்பிற்கெதிரான கலகக் குரல்கள் ஆகியவை பிரதானத் தேர்வாக இருக்கின்றது.  அதிகாரத்திற்கெதிரான விமர்சனங்கள், மாற்றம் குறித்த நம்பிக்கைகள், அணி சேர்தல் என்பதை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கும் கவிதகள் இப்பிரிவினரை ஈர்க்கிறது. இங்கு ’நான்’ என்பது
‘நாம்’ என்பதாகவே அமைகிறது.

இந்த இரண்டு வகையினரின் கூட்டுக்கலவையாக இருக்கிறது பெண் கவிதைகள். பெண் உடல் என்பது சமூக உடலேயாகும். சமூகம் நிர்ணயித்திருக்கும் உடலையே அவள் சுமந்துகொண்டிருக்கிறாள். அவளது உடலே அவளுக்கு அந்நியமான ஒன்றாக கட்டமைக்கப்பட்ட சூழலில் அவள் முதலில் பிரதிகளில் இருந்து தன் உடலை மீட்பது பிரதானமாகிப் போனது. பெண் உடலை ரசிப்பதற்கான ரசனை அளவீடுகள் பெண் பற்றிய கவிதை எழுத்தலுக்கு ஒரு கோனார் உரையை கொடுத்திருக்கிறது. பெண்களுக்கு ஆண்கள் பற்றிய அத்தகைய உரைகள் வழங்கப்படவில்லை, அப்படி அவள் வர்ணிக்கும் உரிமையும் அவளுக்கு கிடையாது. அதையும் மீறி அவள் எழுதினால் அவள் ‘காம வெறி’ பிடித்தவள். சமூகம், அரசியல் வெளிகளை அறிந்து கொள்ளும் வாய்ப்புகளும் அடைக்கப்பட்டிருக்க அவள் தனது பாடல்களாக, கவிதைகளாக தனது வெளியாக உடலைத் தேர்வு செய்யும் நிலையை வரலாறு ஏற்படுத்தியது. அதனோடு அவள் அன்றாட வாழ்வில் குடும்ப அமைப்பிற்குள் எதிர்கொள்ளும் வன்முறைகள், பொதுவெளியில் எதிர்கொள்ளும் பாலியல் அத்துமீறல்கள், தொடர் ஒடுக்குமுறைகள், போரினால் உடல் சிதைக்கப்படும் சூழல் ஆகியவை பெண் எழுதுவதற்கான தேவையை உருவாக்கியது.

இது வெறும் ரசனை வெளிப்பாடாகவோ, அறிவார்த்த பறைசாற்றலாகவோ, அந்நியப்பட்டுப்போகும் தூய இலக்கியமாகவோ இல்லாமல் சமூகப் பண்பாட்டுப் பிரதிபலிப்பாக இருப்பதற்கு அவளது அனுபவமே காரணம். இங்கு தேர்வு என்பது சாத்தியமில்லாமல், அனுபவமே பெண் எழுத்தை தீர்மானிக்கிறது. ஆக பெண்கள் இயல்பிலேயே புரட்சிகர எழுத்துக்களை, சிந்தனைகளை உள்ளடக்கமாகக் கொண்ட எழுத்துக்களை படைக்கும் சாத்தியங்கள் அதிகமாக இருக்கிறது. அடிப்படைத் தேவைகளுக்கும், தனது இருப்பிற்குமான போராட்டங்கள் நடத்தி சற்று முன்னேறிவிட்ட பிறகு மேட்டுக்குடி  பெண் உரிமை சிந்தனையானது உடலியல் இன்பங்களைப் பேசுதல், காமத் துயர்களைப் பேசுதல் விரகதாபம், பெண் சுய இன்பம் என்கிற அளவில் திசைதிருப்பப்பட்டுள்ளது. இதில் அவர்கள் காண மறுப்பதாக நான் காண்பது பெண் உடல் என்பது உடலியல் இன்பங்களில் மட்டுமல்லாது இன்னும் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாகிறது என்பதே அது. பெண் உடல் என்பதை பெண் விடுதலை அரசியலாக மாற்றும் வல்லமை எழுத்திற்கு உண்டு.

பாலியல் பேதமின்றி அனைவரும் வர்க்க அடிப்படையில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகிறோம் என்பது உண்மை, ஆனால் இனவாத அடிப்படையில் ஒரு இனமானது தொடர்ந்து ஒடுக்குமுறைகளுக்கு இலக்காகிய கொடூரம் நாம் வாழும் காலத்தில் இலங்கையில் அரங்கேறியது. சிங்கள இராணுவத்தினரால் பெண்கள் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு சிதைக்கப்பட்டது அந்த இனவாதத்தின் உச்சபட்ச காட்டுமிராண்டித்தனம். அந்த மண்ணில் பிறந்து சித்திரவதைகளை அனுபவித்து மடிந்து போனவர்கள் ஆயிரக்கணக்கானோர், சிலர் வேறு நாடுகளுக்கு குடிபெயர்ந்தனர், சிலர் அகதி முகாம்களில் மேலும் சித்திரவதைகளை அனுபவித்து வருகின்றனர். அம்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை, துரோகங்களை பலரும் தங்களின் படைப்புகள் வாயிலாக பதிவு செய்துள்ளனர். அநீதிகள், துரோகங்கள் மட்டுமல்லாது அவர்களின் வாழ்வுகளிலும் பல்வேறு உணர்ச்சிகள், அனுபங்கள், நிகழ்வுகள் இருக்கும் என்பதை கவிதை வடிவில் எடுத்துரைக்கும் மற்றோர் படைப்பு ஒலிக்காத இளவேனில்.

இலங்கைத் தமிழர்களுக்கு இருக்கும் ஒரு பெரும் கொடை அந்த மண் தனது மொழியை பெரும் வளத்துடன், அழித்தொழிப்புகளிடையே காத்து வந்திருக்கிறது என்பதுதான். மொழி அழிக்கப்பட்டால் இனமே அழிந்து போகும் என்பதை உலகறியும். மொழியின் அடிப்படையில் அழிக்கப்படும் தங்கள் உயிரையும், உடமையையும் காக்க நடந்துவரும் போராட்டங்கள் துயர் மிகுந்த பாடல். இந்த மொழிப்போரின் கோரப் பிடிகளிலிருந்து தப்பித்து புலம் பெயர்ந்து தங்கள் தாய் மண்ணை சுதந்திரமாகக் காவும் அந்த ஒரு கணத்திற்காக பரிதவிக்கும் உள்ளங்களின் வடிகாலாக விட்டுவைக்கப்பட்டிருப்பது எழுத்து மட்டுமே என்றால் அது மிகையல்ல.

தலித் உடலும், பெண் உடலும் ஒன்று என்பார்கள். ஆனால் போர்களினால் அலைகழிக்கப்படும் உடல்கள் மீது நிகழும் ஒடுக்குமுறை மற்ற எல்லாவற்றையும் விட முற்றிலும் மாறுபட்டது.  குறிப்பாக பெண் உடல்கள். சிறுவர்களின் உடல்கள். எல்லாப் போர்களிலும் முதலில் சிதைவுறுவது பெண் உடல்களே. ஏகாதிபத்திய பீரங்கிகள் நிலங்களைக் குறிவைத்து தொடுக்கும் குண்டுகளையும் விட மிகவும் கொடூரமான குண்டுகள் இராணுவத்தினரின் குறிகள். அவைகள் ப்ளாஸ்டிக் குறிகள். அந்தக் குறிகள் துளைப்பது யோனிகளை அல்ல, ஒரு தேசத்தின், ஒரு இனத்தின் தன்மானத்தை. ஒவ்வொரு போரும் இதையே உணர்த்துகிறது.

ஒலிக்காத இளவேனில் 17 புலம்பெயர் இலங்கைத் தமிழ் பெண்கள் எழுதிய கவிதைத் தொகுப்பு. தான்யா, பிரதீபா கனகா, தில்லைநாதன் ஆகியோர் கவிதைகளை தொகுத்துள்ளனர். வடலி பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது.

எந்த ஒரு படைப்பும் ஆதரமாய் ஒரு தேவையைக் கொண்டிருக்கிறது. ஒலிக்காத இளவேனிலுக்கு தம்மண்ணிலிருந்து விரட்டப்பட்ட துன்பியலையும், தம் மண்ணில் நசுக்கப்படும் குரல்வளைகளுக்கு பதில் குரலாகவும் இருப்பதே அத்தேவை.

ஒலிக்காத இளவேனில் என தலைப்பு தொடங்கி உள்ளே கவிகள் எழுதியிருக்கும் கவிதைகளின் பெரும்பாலான தலைப்புகள் அனைத்தும் நிச்சயமற்ற வாழ்வின் அலைச்சல்களைக் கதறியபடியே சொல்கிறது,

 நிச்சயமற்ற வாழ்விற்கு பழக்கப்பட்டவர்கள்
எதற்காகவும் காத்திருப்பதை விரும்புவதில்லை
என்று ரேவதி பேசுகையில்
எவருக்காகவும் காத்திருப்பதில்லை- காலம்
விரைந்துகொண்டேயிருக்கிறது

என தன் வரிகளை கனத்த இயலாமையுடன் முன் வைக்கிறார் நிவேதா

கனவுகள் மாத்திரம்
காற்றில் அலைகின்றன
என் கவிதைகளைப் போல என தன்னையே முன் வைத்து நகர்ந்து
ஏதோ ஒரு
காய்கறிக் கடையில்
எங்கேனும் ஒரு
வீதி மருங்கில்
எப்போதாவது தொலைபேசியில்
முடிவற்ற
துர்வாடையாய்
நம் தலைக்கு மேல்
நிரம்பி வழியும்
நரகங்கள்
பற்றிப் பேசலாம்


இத்தகைய எளிய வரிகள் விதிக்கப்படாத சாவைத் தலைக்குமேல் சுமந்து கொண்டு அன்றாட நரகத்தைப் பேச அழைக்கின்றன. சாவைப் போலொரு பேச்சென இக்கவிதையைச் சொல்லலாம்.

திணிக்கப்பட்ட காலை
திணிக்கப்பட்ட எழுத்து
திணிக்கப்பட்ட ரசனை
திணிக்கப்பட்ட குறி

என உலகியங்கும் கொடூரத்தை முன்வைத்து நகர்ந்திருக்கிறார். ஆழியாளின் கவிதை தொடர்ந்து பிணங்களின் தோற்றவுருக்களை விவரித்து அவைகள் பலிதீர்க்கப்பட்டதற்கான கருத்தியல்களை எழுதிச் செல்லுகிறார். முக்கியமாய்

மரணவெளியில் மறைக்கப்பட்டு
வாழ்விக்கப்படும் பெண்கள் நாங்கள்
எனும் இரு வரிகள் தரும் துயரம் மீளமுடியாத உணர்ச்சியைத் தருகிறது.

இத்தொகுதியில் எழுதியிருக்கும் தமிழினி, சரண்யா,வசந்தி கவிதைகள் இத்தொகுதிக்குள் ஒலிக்கும் துர்மரணத்தை முன் வைத்தே பேசுகின்றன. புலம்பல்கள் கவிதையா எனக் கேட்டால் அதுவும் என்னைப் பொறுத்த வரையில் காலத்தையே சுட்டிக்காட்டுப் பேசுகிறது என்பேன். சரண்யா எழுதியபடி..

ஆண்களால் கொல்லப்பட்ட உடம்பு
பொய்களால் கொல்லப்பட்ட மனசு

இவ்வரிகள் அதற்கு சாட்சியாக்குகின்றன.

மொனிக்கா, துர்க்கா, மைதிலி இவர்களும் தங்களது இயலாமைகளை கவிதைகளென முன்வைத்திருக்கிறார்கள்.


நீங்கள் எச்சரித்தது போலவும் இல்லாமலும்
ஆனாலும் வாழ்வேன்!
என் எல்லாக்
காயங்களிலிருந்தும்
உடைவுகளிலிருந்தும்
நோவுகளிலிருந்தும்
ஆத்திரங்களிலிருந்தும்
ஏமாற்றங்களிலிருந்தும்…

என வரும் வரிகள் நேரடியாக ஆள்வோரின் ஆணைகளுக்கு தங்கள் பதில்களைத் தந்துவிடுகின்றன. இந்திரா, தர்சினி, தான்யா, பிரதீபா,கற்பகம் யசோதரா,ரெஜி,ஆகியோரின் கவிதைகளும் சாவின் விரும்பவியலா மணத்தைக் கடத்துகின்றன.

கவிதை புரியாமல் போய்விடுமோ என்கிற ஒரு அகப் போராட்டத்தை கவிஞர்கள் நிகழ்த்திய வண்ணம் இருக்கிறார்கள். அதனால் கவிதை முடிந்த பின்பு சில பின் வரிகளை உடைத்து போட்டு அதை விளக்கு முயற்சி நடைபெறும். அதற்கு ஒரு உதாரணம்:

அகமெங்கும் பொழியும் முன்பனிக்கால மந்தாரங்கள் நிவேதிதாவின் கவிதை

.............
.................

இனியெதற்கு என் தயவு
முலைகளே பேசட்டும்..........
கழுத்தை நெரிக்கும்
“ஆம்பிளை’த்தனங்களைப் பற்றி
கால்களைப் பிணைக்கும்
யுத்தச் சங்கிலியைப் பற்றி...
இன்னமும்,அந்தரத்தில் அலைவு7ண்டிருக்கும்
என் எப்போதைக்குமான
கனவுகளைப் பற்றி....

இனியெதற்கு என் தயவு
முலைகளே பேசட்டும்..........

நிவேதாவின் இந்த வரிகளைலேயே கவிதை முடிந்து விடுவதாக நான் கருதுகிறேன். முலைகள் என்ன பேச வேண்டுமோ அதை வாசகர் மனம் உணரும், பின்வரும் விளக்கங்கள் கவிதை அனுபவத்தை சற்று தொந்தரவு செய்கிறது. வாசகர் அடையக்கூடிய இதுபோன்ற சிறு அனுபவக் குறிப்புகளுக்கப்பால் ஆணாதிக்கத்தை கூறு போட்டு எடுத்துரைப்பதில் இத்தொகுதியின்  அனைத்து கவிஞர்களின் கவிதை மொழியும், படிமங்களும் குறிப்பிடத்தக்கவை.

தொகுதி முழுக்க இறைஞ்சும் வார்த்தைகள், தசைகளை இறுக்கும் வார்த்தைகள் என எங்கும் நிறைந்திருக்கின்றன. தொகுதியிலுள்ள பெயர்களை எடுத்துவிட்டால் அனைத்தும் ஒரே கவிஞருடையதோ எனத் தோன்றும் அளவிற்கு அது நம்மைக் கொண்டுவிடுகிறது. போரின் வாதையைச் சொல்ல வந்த கவிதைகளில் இலக்கிய நயம் தேடிப் பயணிப்பதில் எனக்கு எப்பொழுதும் உவப்பில்லை. எல்லோருக்கும் இழப்பில் சொல்ல இருக்கும் ஒரு சொல்லை கவிஞர்கள் மட்டும்தான் எழுதவேண்டுமென்பதில்லை. எழுதப்படிக்கத் தெரியாத ஒரு ஆன்மாவுக்கு கல்வியால் ஆகப்போவது ஏதுமில்லை. ஏனெனில் அனைத்தும் பட்டித்தவர்களே ஆயுதத்தைத் தூக்குவதோடு அதற்குப் போதுமான கருத்தியலையும் எழுதுகிறார்கள். ஈவிரக்கமற்ற முதலாளிக்கு கவிதைகளால் ஒரு பயனும் இல்லை. பணத்தையும் பேரத்தையும் தவிர ஆள்வோர்களுக்கு கவிதையால் என்ன பயன். அவர்கள் நம்மை எழுத வைக்கிறார்கள். எழுத்து மாற்றத்தைக் கொண்டுவரும். அதற்கு கவிதைகள் சாட்சி. அல்லற்றபட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றோ..............

(இம்மாத உயிர் எழுத்து இதழில் வெளிவந்திருக்கும் கட்டுரை)

Nov 15, 2012

பெண்களும் சுற்றுலாவும் – ஒரு பெண்ணியப் பார்வை.




பெண்களுக்கு வாளைக் காட்டிலும் பேனா
ஒரு முக்கிய அனுகூலத்தைக் கொண்டதாயிருக்கிறது.

                                                                           -       ரோஸ்லிண்ட் மைல்ஸ்

சுற்றுலா  என்பது மனதிற்கு மகிழ்வைத்  தரக்கூடிய ஒன்று, குடும்பத்தோடு  நண்பர்களோடு கூடிச் சுற்றி இன்புற்று களித்திருக்க ஒரு தருணமாக சுற்றுலா அமைகிறது.  சுற்றுலாக்களில் பல் வேறு வகைக்கள் உள்ளன, பண்டைய வரலாற்றுச் சின்னங்களை மட்டுமே காண்பதற்கான் பாரம்பரியச் சுற்றுலா (Heritage tour), கோயில் தளங்களுக்கு செல்லும் பக்திச் சுற்றுலா (pilgrimage tour), காடுகளுக்குள் பயணித்து விலங்குகளைக் காணும் சுற்றுலா (wild life tour), மலையேற்றம், பங்கி  ஜம்பிங் போன்ற சாகசங்களுக்கான சுற்றுலா (adventure tour) என்று மனமகிழ் சுற்றுலாக்கள் நிறைய உள்ளன.

உலகமயமாக்கலின்  விளைவாக மனமகிழ் சுற்றுலாக்களுக்கப்பால் மூன்றாம் உலக நாடுகளைக் குறி வைத்து இப்போது மருத்துவ சுற்றுலா, தொழிற்சாலை சுற்றுலா எனும் பெயரால் வணிக சுற்றுலாக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சமீப காலங்களில் எகோ-டூரிசம் எனும் பெயரில் இயற்கையை மாசுபடுத்தாத முறைகளில் அமைக்கப்பட்ட சுற்றுலா தளங்கள், பயண முறைகள் எனும் சுற்றுலாக்கள் தோன்றியுள்ளன.  உண்மையில் அது அப்படித்தான என்பதைப் பின்னர் பார்ப்போம். 

சுற்றுலாவுக்கும்  பெண்களுக்குமான தொடர்பு  எத்தகையது? வேலை வாய்ப்பு, மேலாண்மை, புதிய திட்டங்கள் இவைகளில் பெண்கள் இடம் பெறும் விகிதாச்சாரப் பிரச்சனையோடு இதில் பெண்களின் பங்கு  முடிந்து விடுகிறதா? மேற்சொன்னவற்றை சிறப்பாக செய்வதற்கான கல்வியை  கற்று தேர்ந்து வேலை வாய்ப்பைப் பெற்று பணி செய்து பதிவு  உயர்வுகள் பெற்று, விருதுகள்  பெற்று பரிமளிப்பதோடு அது  நிறைவடைகிறதா.

பொதுவாக, நமது கல்வி முறை நமக்கு தகவல்களை வழங்குகிறது ஆனால் அறிவை  அல்ல, சமூக பொறுப்புணர்வை  வளர்த்தெடுக்கும் அறிவை  அவை வழங்குவதில்லை, குறிப்பாக  ஏற்றத் தாழ்வுகளால் பாதிக்கப்படும் மக்கள் சமூகத்திற்கான மேம்பாடு குறித்து அவை பேசுவதேயில்லை. அது வழங்கும் சமூக சிந்தனையானது கரிசனம். இரக்கப் படுவதற்கும் பிச்சை போடுவதற்கும் சொல்லித் தரும் கல்வி என்றால் அது மிகையல்ல. அதன் விளைவு அங்கலாய்ப்பு, சமரசம். இப்படிபட்ட பொது கட்டமைப்பிலிருந்து விடுபட்டு சமூகத்தின் யதார்த்த நிலைகளை ஆய்ந்து, குறைபாடுகளைக் களைந்து மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான உண்மைக்கல்வி வழங்கும் கல்விக் கூடங்கள் வெகு சில.

சமூக  யதார்த்தங்களை பல்வேறு  கண்ணோட்டங்களிலிருந்து  ஆய்வு செய்யலாம். நிலவும்  கண்ணோட்டத்திலிருந்து ஆய்வு  செய்வதற்கும், பெண்ணியக்  கண்ணோட்டத்திலிருந்து ஆய்வு  செய்வதற்கும் உள்ள வேறுபாடுகள்  என்ன.  பால் அடையாளத்தின் அடிப்படையில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை திறனாய்ந்து, பெண் விடுதலைச் சிந்தனைக்கு வழிவகுப்பது, பெண்களை ஒரு இயக்கமாக ஒருங்கிணைப்பது என்று பெண்ணியத்தைப் புரிநிது கொள்ளலாம். சமூக நிகழ்வுகள் ஒவ்வொன்றிலும் பெண்ணுக்கு சம உரிமை கிடைக்கிறது, அவளுக்கான பாத்திரம் என்ன, இடம் என்ன எனும் கேள்விகளின் ஊடாக ஒரு நிகழ்வினால் பெண் பயனடைகிறாளா, சுரண்டப்படுகிறாளா என்பதை கண்டறிவது மிக மிக அவசியம். ஏனென்றால் பெண்ணை ஒடுக்குவதன் மூலம், பெண்ணுக்கு உரிமையை மறுப்பதன் மூலம் பின் தங்கியிருக்கப்போவது பெண் மட்டுமல்ல, சமூகமும் தான். அந்த விடுதலைப் போராட்டத்தில் உயர்வுவாதத்தை வைக்காமல், சுதந்திரம் என்பதை தனித்த ஒரு பொருளாக காணாமல் ஏற்றத் தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்காக பங்களிக்கும் வகையில் பெண் இனத்தை மீட்டு, அவளையும் இணைத்து, சமத்துவதற்காக போராடுவதும்சாதி, மதம், பால், இனம், உடல், அறிவு என்ற பாகுபாடில்லாத  சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதற்கான  முயற்சியை எடுப்பது பெண்ணியம்.

இக்கண்ணோட்டத்தின் படி நாம் எவ்வாறு சுற்றுலாவை அணுகுவது.  சுற்றுலா என்பதில் அடிப்படையாக இருப்பது நிலம். கேளிக்கை எனும் தொழிற்முறையாக இருந்தாலும் சரி, மருத்துவ சுற்றுலாவாக இருந்தாலும் சரி. உலக வங்கி, ஐ.எம்.எஃப் போன்ற நிறுவனங்களின் உதவியோடு நவீன காலனியாக்க செயல் திட்டமாக மற்ற நாடுகளின் வளங்களைக் கொள்ளையடிக்கும் ஒரு ஏற்பாடே சுற்றுலா.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குட்டலூர்  இதற்கு சிறந்த உதாரணம். புலி பாதுகாப்பு எனும் பெயரில்  உலக வங்கியின் பெரும் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படுகிறது.  இதனால் ஆதிவாசிகளும், குறு விவசாயிகளும் நிலங்களை இழந்து நிற்கின்றனர். பல்லாயிரக்கணக்கான சுற்றுலாவாசிகள் எகோ டூரிசம்எனும் பெயரில் இந்த காடுகளுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். 1 புலிகளின் பெயரால், பசுமை திட்டம்  எனும் பெயரால் நிலத்தின் பூர்வ குடிகளை அப்புறப்படுத்தி வாழ்வாதாரத்தை குலைக்கும் ஒரு செயலுக்கு பச்சை சாயம் பூசும் பெயர் எகோ டூரிசம்’.  இதில் பெண்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர். நிலத்துக்கும் பெண்ணுக்குமான தொடர்பு மிக நெருக்கமானது, ஆனால் நிலத்திற்கு இருக்கும் மதிப்பு பெண்ணுக்கு இருப்பதில்லை. விவசாயமும் அழிந்து வருகிறது. அதை கண்டுபிடித்த பெண்ணும் அழிக்கப் படுகிறாள். உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். வாழ்வாதார நிலங்கள் பறிக்கப்பட்டு, வேலை வாய்ப்பும் கிடைக்காத சூழல் ஏற்படும் போது அங்கு இறையாவது பெண்கள், கூடுதலாக குழந்தைகள். ஆம் அவள் விலை மகளாகிறாள். எகோ டூரிசம் மட்டும் தான் இதை செய்கிறதென்றில்லை. ஆசியா முழுமையிலும் (உலகம் முழுமையிலும் என்று சொல்லலாம்) பாலியல் தொழில் என்பது சுற்றுலா தளங்கள் மூலம் ஊற்றி வளர்க்கப்படுகிறது. அதற்கு செக்ஸ் டூரிசம்என்றும் பெயர் இருக்கிறது. தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளே முதலில் இந்த சுற்றுலாவை அறிமுகப்படுத்தியது. பாலியல் தொழிலை நாம் ஒழுக்கவாதத்தின் அடிப்படையில் மறுக்கவில்லை, சுதந்திர தேர்வென்பது வேறு, தொழிற்முறை என்பது வேறு.  மனிதர் என்ற நிலையிலிருந்து தரவிறக்கம் செய்து அவர்கள் பண்டங்களாக்கப் படுகின்றனர். 2தொழில் என்று வந்தாலே அங்கு சுரண்டல், தரகு, அடிமை முறை எல்லாம் வந்து விடுகிறது.  பாலியல் தொழிலுக்காக பல்லாயிரம் கணக்கான பெண்கள் கடத்தப்படுகிறார்கள்.

நம்படியாத தகவல் ஒன்று உள்ளது. சுற்றுலா பயணி சற்று நீண்ட காலம்  தங்குபவராய் இருந்தால்  ’திருமணம்எனும் பெயரில்  இந்த சதை வியாபாரத்தை குறைந்த  விலைக்கு பேசி முடிக்கின்றனர். அத்தகைய ஆண்களுக்கு அவர் ஊரிலேயே திருமணம் முடிந்திருக்கும். எத்தனையோ பெண்கள் இதனால் கருவுற்று கணவனோடு செல்லவும்  முடியாமல் , துன்புறுகின்றனர். 3

இதில் இன்னும் அதிகமாக பாதிக்கப்படுவது  குழந்தைகள், ஆண் பெண் என்ற பாகுபாடில்லாமல் சிறுவர்கள் இதில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்தியாவில் கோவளம், கோவா பகுதிகள் இப்பாதக செயல்களில் ஈடுபடுகின்றன. ஃபீடோஃபில்  க்ளப்புகள்’ அமைத்து சர்வதேச  இணைப்பு இதில் தீவிரமாக ஈடுபடுகிறது.  4

அதேபோல் சுற்றுலாத் தளங்களில் சூதாட்டம், கஞ்சா, குடி ஆகியவை கோலோச்சுகிறது. இப்பழக்கங்களாலும் பாதிக்கப்படுவது அப்பாவிப் பெண்கள், குழந்தைகள். பாலியல் நோய் தொற்று ஏற்படுகிறது. சில வேளைகளில் அது உயிர் பறிக்கும் ஒன்றாக வடிவம் எடுக்கிறது.  ஒவ்வொரு நாட்டின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு சுற்றுலா தளங்களில் பாலியல் தொழிலின் வடிவங்கள் மாறுபடுகின்றன நடன பார்கள், நடன காட்சிகள், நிர்வாண கிளப்புகள், பாலியல் உறவு கொள்வதை கன்னாடி வழியாக காண்பதற்கான இடங்கள் என்று செயல்பட்டு வருகின்றன. பாலே நடனம், பெல்லி நடனம் எனும் பெயரால் பெண்கள் பாலியல் பண்டமாக்கப்படுகிறார்கள். பாலியல் தொழிலில் பணம் கிடைக்கிறது என்பதற்காக அவர்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள் அதிகம். 

பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல்  சுரண்டல் மட்டுமல்லாது உழைப்பு  சுரண்டலும் சுற்றுலா சுற்றுலாத்தளப் பணிகளில் நடைபெறுகிறது. இத்துறையில் பெண்களே அதிகம் பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள். அவர்களுக்கு வழங்கப்படும் பணிகள் பெரும்பாலும் உடலுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருக்கிறது. அதில் ஒரு வகை அவளது வெளித் தோற்றத்தைக் கொண்டு ஆண் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பது, மகிழ்விப்பது என்பதாகும். இரண்டாவது சுத்தம் செய்யும் பணி. இந்த சுத்தம் செய்யும் பணியில் சாதிய ரீதியாக தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பெண்களையே ஈடுபடுத்துகிறார்கள். அவர்கள் மீது பாலியல் துன்புறுத்தலும் நடைபெறுகிறது. ஆண்களை விட பெண்கள் இப்பணிகளில் 10 முதல் 15 சதவிகிதம் குறைவான சம்பளத்தையே பெருவதாக சுற்றுலாவில் பெண்கள் எனும் உலக அறிக்கைச் சொல்கிறது.  லத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன் தீவுகளுக்கான ஐ.நா பெண் இயக்குனர் கிளாடிஸ் அக்கோஸ்டா சுற்றுலாத் துறையில் பெண்களின் பங்களிப்பு கண்ணுக்குத் தெரியாமல் இருக்கிறது என்கிறார். மேலும் கரிபியன் தீவில், 84% சம்பளமற்ற குடும்ப உழைப்பு பெண்களால் மட்டுமே செலுத்தப்படுகிறது. சுற்றுலாவில் பாலியல் சமத்துவத்தை ஊக்குவிக்க இவ்விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.என்கிறார்.

பாலியல் சுரண்டல்கள், உழைப்புச் சுரண்டல்கள் ஒருபுறம் இருக்க நாம் ஏற்கணவே சொன்னது போல் சுற்றுலாவின் பெயரால் நிலச் சுரண்டல் குறித்து காண்போம்.

மிகவும் சமீபத்திய உதாரணம் –  முல்லைப் பெரியார் அணை பிரச்சனை: அணை பலவீனமாகிவிட்டது, நில  அதிர்வு ஏற்பட்டால் இடிந்து விழும் என்று கட்டவிழ்த்துவிடப்பட்ட பொய்களுக்குப் பின் இருப்பது நிலச் சுரண்டல், தொழிற்முறை முதலீடுகள். அணையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சில முதலாளிகள் ரிசார்ட்அமைப்பதற்காக நிலங்களை வாங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. அணையின் நீர்மட்டத்தைக் குறைப்பதின் மூலம் இரண்டு விதமான ஆதாயங்கள் குறிவைக்கப்படுகின்றன. 1. ரிசார்ட்டுகளைக் கட்டித் தொழில் செய்வது. [ரிசார்ட்டுகள் பாலியல் தொழிற்கூடமே). 2. வருடம் பூராவும் தொடர்ந்து வர்த்தக ரீதியில், மானியத்துடன் மின்சாரம் தயாரித்து லாபமடைவது. தமிழ்நாட்டிற்கு அப்பாலும் நிறைய உதாரணங்கள் இருக்கின்றன.

பெரும்பாலும்  சுற்றுலாத் தளங்கள் கடலோரப் பகுதிகளில் அமைக்கப்படுகின்றன. நகர வாழ்வில் தன்னைத் தொலைத்தவர்களுக்கு, நீர் என்பதை குப்பிகளில் காண்பவர்களுக்கு அமைதியான, நீர் பொழியும் தளங்கள் கவர்ச்சிக்குறியவை. ஆகையால் இவ்விடங்களைக் குறி வைத்து கடலோரப் பகுதிகள் சூறையாடப்படுகின்றன. கடலோரப் பகுதியில் வாழும் மீனவ மக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள். படகு சுற்றுலா எனும் பெயரில் கணக்கிலடங்காத எண்ணிக்கையில் படகு உலா நடைபெறுகிறது. இதிலிருந்து வெளியேறும் டீசல் மாசு கடல் வளத்தை, நீர் வளத்தை, காடுகளின் வளத்தை சிதைப்பதை நாம் கவனத்தில் கொள்கிறோமா. ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் தொங்கும், ஆனால் இவ்விடங்களில் வீசப்படும் கழிவுகள் மீண்டும் கடலுக்குள் தானே செல்கிறது. கடல் வளம் பாதிக்கும் போது மீன் பிடி தொழிலும் பாதிக்கப்படுகிறது.

மனமகிழ் சுற்றுலா மட்டுமல்லாது, தொழிற்முறை சுற்றுலா திட்டங்களும் கடல் பகுதியையே மையமாகக் கொள்கின்றன. அந்நிய பெருமுதலாளிகளுக்காக  இங்கு சிறப்பு பொருளாதார  மண்டலங்கள் அமைக்கப்படுகிறது.  பெருமுதலாளிகளின் மூலதனத்திற்கு  எந்த சிக்கலும் ஏற்படாதிருக்க  உலக வர்த்தக நிறுவனத்தின் கீழ் காட் ஒப்பந்தம் , எஃப்.டி.ஏ  ஒப்பந்தங்கள் போடப்பட்டு பூர்வகுடிகளின் நிலங்கள், தொழிலாளர்களின் குடியிருப்புப் பகுதிகள் தாரைவார்க்கப்படுகிறது. இந்த SEZ களில் இந்திய சட்டங்கள் தொழிலாளர் சட்டங்கள் பொருந்தாது, பாலியல் அத்துமீறல் நடந்தால் கூட அதை விசாரிக்கும் உரிமை இங்கிருக்கும் நீதி மன்றங்களுக்கு இல்லை. அதுமட்டுமல்லாது பொது சொத்தான மின்சாரம், நீர் எல்லாம் இலவசமாக அல்லது மானியமாக வழங்கப்படுகிறது. இதன் தேவைக்காகத்தான் கூடங்குளம் போன்ற ஆபத்து நிறைந்த உற்பத்தி முறைகளை அரசு நிறுவுகிறது.  இன்று நாடு முழுவதும் நடந்து வரும் பூர்வகுடிகளின் போராட்டம் நிலத்திற்காகவே, அதில் பெண்களின்  பங்கு அளப்பறியது. 

வளங்களைச் சுரண்டுவதோடு தனியார் மய சுற்றுலாக்கள் மனிதர்களை காட்சிப் பொருளாக்கும் கொடுமையும் அரங்கேறுகிறது. இதுவும் ஆதிவாசிகளை குறிவைத்து நிகழ்கின்றன. அந்தமான் நிகோபாரில் ஜாரவாஸ் ஆதிவாசிகளைக் காட்சிப் பொருளாக்கியதைக் கண்டித்து உச்ச நீதி மன்றம் அவர்கள் வாழும் சுற்றுப் பகுதியில் வணிக செயல்பாடுகளுக்கு தடை விதித்துள்ளது. ஜாரவா பூர்வகுடிகள் இனம் அழிந்து வருகின்றது. 300 மட்டுமே எஞ்சியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தது  சூழலியல் மாற்றம், உலக வெப்பமாதல் சுற்றுலா தளங்களில்  எறியப்படும் கழிவுகளிலிருந்து வெளியேறும் மாசு சுற்றுச் சூழலை மாசுபடுத்துகிறது. எகோ டூரிசம் என்பதே கட்டுக்  கதை, ஏனென்றால் அந்த பகுதிகளுக்குச் செல்வதற்கும் விமானத்தில்  தான் செல்கின்றனர். அதிலிருந்து  வெளியேறும் கார்பன் டையாக்ஸைட் ஓசோன் மண்டலத்தை தாக்குவதை இல்லை என்று சொல்ல முடியுமாஅந்த தளங்களில் எரியப்படும் கழிவு, பயன்படுத்தப்படும் அளவுக்கதிகமான தண்ணிர், இயற்கையின் பெயரால் விற்கப்படும் பொருட்களின் விலை என்று எத்தனை சுரண்டல்கள் நிகழ்கின்றன. அந்த பொருட்களை தயாரிப்பதில் மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள்ளப்பட்டது என்று நம்மால் உறுதியாக சொல்ல முடியுமா? 34 டிகிரி செல்சியசுக்கு மேலாக ஏறும் ஒவ்வொரு செல்சியஸ் வெப்பத்தினாலும் அரிசி, சோளம், கோதுமை போன்ற வெப்பமண்டலப் பகுதிகளில் விளையும் பயிர்களின் அளவில் 10% வீழ்ச்சியடைகிறது என்கிறது ஒரு புள்ளி விபரம். சுற்றுலாத் தளங்களின் பெருக்கத்தால் நிலங்கள் அழிவதோடு, அறிய மிருகங்கள் பறவைகள் அழிகின்றன.  கடற்கரை மாசுபடுவதால் 58% பவழப்பாறைகள் அழிவின் விளிம்பில் உள்ளது. பவளப்பாறை என்பது பூகம்பத்திலிருந்து காக்கும் தன்மை கொண்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் . எகோ டூரிசப் பகுதிகளில் புவி வெப்பமடைவதில்லையா? கடற்கரையை மக்கள் மாசுபடுத்துவதில்லையா?
அத்தளங்களில் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டப் பொருட்களைக் கொண்டு சில கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அது தவிர சிறு சிறு விசயங்கள் அழகியல் ஊட்டப்பட்டு பசுமையாக காட்சியளிக்கும். ஆனால் இதுவும் ஒரு வியாபார உத்தியே அன்றி, உண்மையான அக்கறை என்று சொல்லிவிட முடியாது.

இப்படி சுற்றுலாத் துறை என்பது பெண்களை நேரடியாகப் பாலியல் தொழிலுக்கு உட்படுத்தி சுரண்டுவதோடு மட்டுமல்லாமல், அவளது உழைப்பிற்கு குறைந்த கூலி தருகிறது, உடல் உழைப்பு சார்ந்த பணிகளில் அதிகமாக அவளைச் சுரண்டுகிறது என்பதோடு வாழ்வாதாரங்களைப் பறித்து அங்கும் பெண்களைக், குழந்தைகளை மறைமுறகமாகச் சுரண்டுகிறது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் பெண்கள், குழந்தைகள் கல்வி கற்பது இயலாத ஒன்றாகும். கல்வியில் முன்னேறாத போது உயரிய பணிகள் அவர்களுக்கு மறுக்கப்படுகின்றது. அவர்கள் குறைந்த சம்பளத்திற்கு உழைக்கும் கூலிகளாக மீண்டும் முதலாளிகளுக்கே பயன்படுகின்றனர்.

குறிப்பு:

1, 2, 3, 4 - கே.பி சசி அவர்கள் எழுதி இன்னும் வெளிவராத கட்டுரையிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

(புதிய கோடங்கி இம்மாத இதழில் வெளிவந்துள்ள கட்டுரை. உலக சுற்றுலா தினத்தன்று அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் ஆற்றிய உரையின் செழுமைபடுத்தப்பட்ட வடிவம்.)


வீட்டுப் பராமரிப்பு செய்யும் மனைவிகளுக்குச் சம்பளம்



வீட்டுப் பராமரிப்பு செய்யும் மனைவிகளுக்குச் சம்பளம்
கருத்துரை
ரங்கநாயக்கம்மா
தமிழாக்கம் கொற்றவை


மனைவிகளுக்குச் சம்பளம் அல்லது வெகுமானம்! ஏனென்றால் அவர்கள் வீட்டு வேலை செய்கிறார்கள்! பெண்களை நிரந்தரமாக வீட்டு வேலை செய்யப் பணிக்கப்பட்டவர்கள் என்று முடிவுகட்ட நினைக்கிறதா அரசாங்கம்? இந்த பிரச்சனைக்கு  சரியான தீர்வைக் காணும் முன் நாம் நம்மைச் சிலக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும். கணவன் மனைவிக்கு சம்பளம் கொடுக்க கடமைப்பட்டவரானால், மனைவியும் கணவனுக்குச் சம்பளம் கொடுக்கலாமா? ‘கணவன்மார்களுக்கு எதற்கு சம்பளம் கொடுக்க வேண்டும்?’ என்று நீங்கள் வியப்பு கொள்கிறீர்களா, மேலும் படியுங்கள்!

மனைவி செய்யும் வீட்டுப் பராமரிப்பை கணவன் ஒன்றும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லைஅதற்கு பதில் அவர் குடும்பம் முழுமைக்குமானவாழ்வுத் தேவையைபூர்த்தி செய்கிறார். உழைப்புப் பிரிவினை ஏன் தொடங்கியது, ‘வீட்டு வேலை என்பது பெண்களுக்கும்’ ‘வெளி வேலை என்பது ஆண்களுக்கும்என்று எவ்வாறு முடிவு செய்யப்பட்டது எனும் வரலாற்று காரணிகளுக்குள் நாம் இப்போது செல்ல வேண்டாம்வரலாற்று நடைமுறை என்னவாக இருந்தாலும், அதே வேலைப் பிரிவினை இப்போதும் தொடர்கிறதுஅது சிறிய உடல் உழைப்பானாலும் சரி, மருத்துவர் போன்ற அறிவார்த்த பெரிய உழைப்பானாலும் சரரி, வெளியில் செய்யும் வேலைக்கப்பால் பெண்கள்தான் வீட்டு வேலையும் செய்ய வேண்டும். (பெரும் வருமானம் கொண்ட பெண்கள் வீட்டு வேலைக்கு ஆள் வைத்துக் கொள்கிறார்கள். அவர்களை இப்போதைக்கு ஒதுக்கி விடுவோம். வெளியில் வேலைக்கும் செல்வதில்லை, வீட்டு வேலை முழுவதையும் தாங்களாகவே செய்யும் பெண்களைப் பற்றி பார்ப்போம்).

குடும்பத்தில் உள்ள பாலின உறவுக்கு (கணவன் மனைவி உறவு) இரண்டு தன்மைகள் உண்டு (1) உழைப்புசார் உறவு (labour relations) மற்றும் (2) உடல் உறவு (physical relations). முதலில் நாம்உழைப்புசார் உறவைஆய்வு செய்வோம். சமையல், சுத்தம் செய்தல், குழந்தை பராமரிப்பு ஆகியவை வீட்டு வேலை என்பதில் அடக்கம்எல்லாவிதமான வீட்டுப் பணிக்கும்சமையல்என்பதை உருவகமாக எடுத்துக் கொள்வோம். மனைவி எல்லா வீட்டு வேலைகளையும் செய்கிறாள். மனைவி தயாரிக்கும் உணவு விற்பனைக்கில்லை. அவை சுய தேவைக்காக நுகரப்படுகிறதுமனைவியின் உழைப்பு பணமாக உருமாற்றம் பெறாததால் அது விற்பனையில் சேர்த்தி இல்லை, மனைவிக்குப் பணம் கிடைப்பதில்லை. (’வீட்டு வேலைஎன்பது சமூகத்தில் அன்றாடம் நிகழும்மொத்த உழைப்புஎன்றாலும் அது பணமாக மாறுவதில்லை.) மறுபுறம், கணவன் ஒரு எஜமானனுக்குப் பணி புரிகிறான்எதுவாகினும், அவனது உழைப்பு பொருளை உற்பத்தி செய்கிறது, அவனது எஜமானனிடமிருந்து தனது உழைப்பிற்கு அவன் சம்பளம் (பணம்) பெருகிறன். இதன் தொடர்ச்சியாக, வீட்டில் செலுத்தும் உழைப்பு பணமாக மாறுவதில்லை, அதை ஆண் செய்தாலும், அதேவேளைவெளி வேலைபணமாய் மாறுகிறது, அதை பெண் செய்தாலும்

கணவன் மனைவி மனித உயிரியில் சமம்தான். எல்லோரும் அவர் அவர் உழைப்பில் தான் வாழ வேண்டும்வீட்டுப் பராமரிப்பில் சில வாழ்வுச் சாதனங்கள் (means of subsistence) மாதாந்திர அடிப்படையில் தேவைப்படுகிறது, அதேவேளை சில வீட்டுப்பராமரிப்பு வேலைகளை செய்தேயாக வேண்டும்வாழ்வுச் சாதங்களைச் சம அளவில் கொடுப்பதென்பது கணவன் மனைவி இருவருக்குமான பொறுப்பு. அதேபோல் வீட்டுப் பராமரிப்பை சம அளவில் செலுத்த வேண்டும். ’சம அளவுஎன்று சொல்லும் போது அதை ஒரு அளவை கொண்டு அளக்க வேண்டும் என்பதல்ல, ஆனால் விசயத்தைப் புரிந்து கொள்ளசம அளவுஎன்பதை பயன்படுத்தியாக வேண்டும்குடும்பத்தை நிர்வகிக்கும் செலுவுக்கான பொருளை கணவன் உழைப்பில் ஈட்ட வேண்டும், வீட்டுப் பராமரிப்பு மனைவின் உழைப்பில் நடைபெற வேண்டும் என்பதே பல்லாண்டுகாலமாக நிலவி வரும் ஆண் பெண் இடையிலான வேலைப் பிரிவினை.  (வீட்டு வேலைக்கு பணியாளை வைத்துக் கொண்டால், கணவனின் உழைப்பிலிருந்து அதற்குரிய சம்பளம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அப்போது மனைவின் உழைப்பு குறைகிறது).

உழைப்பு சார் உறவில் எது முதன்மை நிலை, எது இரண்டாம் நிலை என்பதை வேறுபடுத்திக் காண்பது அவசியம்கணவன் மனைவிக்குள்ளாகவும்உழைப்பு சார்உறவு இருக்கிறது. எஜமானரிடம் கணவனின் உழைப்பு 8 மணி நேரம் என்றால், வீட்டில் மனைவியின் உழைப்பு நேரமும் 8 மணி நேரம் என்று இருந்தால் அநீதியில்லை. ஆனால் சமூக/வீட்டுக்குரிய உழைப்பில்தான் உண்மையான அநீதி நிலவுகிறது.

வீட்டு வேலையை செய்வதற்கான வாழ்வுச் சாதங்கள் முதலில் கணவனின் உழைப்பின் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும். ‘வீடுஎன்ற ஒன்று இருப்பதால் தான் அதை சுத்தம் செய்யும் தேவை ஏற்படுகிறது. அரிசி இருந்தால் தான் சமைக்க முடியும். துணிகள் இருக்கும் போது துவைத்தல் தொடர்கிறதுகணவனின் உழைப்பின் வாயிலாக வாழ்வுச் சாதங்கள்உறுதி செய்யப்படாமல் போனால் மனைவியால் தனது வேலையைச் செய்ய முடியாதுவேறு சொற்களில், மனைவியின் உழைப்புத் தேவைக்கானஉழைப்பு சாதனத்தைகணவனின் உழைப்பு பெற்று தருகிறதுஅந்த சாதங்களைக் கொண்டே மனைவி உழைப்பைச் செலுத்த முடிகிறதுஆனால் கணவனின் வேலையோ எஜமானனின் பணி இடத்தில் உள்ளஉழைப்புச் சாதனம்கொண்டு செய்யப்படுகிறது. (அந்த உழைப்புச் சாதங்கள் எஜமானனின் உழைப்பால் தோன்றியதில்லை என்பது வேறு விசயம்.) மனைவி வீட்டில் செய்யும் வேலையின் அடிப்படையில் வெளியில் கணவனின் உழைப்பு செலுத்தப்படுவதில்லை. மனைவி செய்யும் வீட்டு வேலையானது கணவனுக்கானஉழைப்புச் சாதனமாகமாறுவதில்லை. கணவன் மனைவியிடையே நிலவும் உழைப்புசார் உறவைப் பார்த்தோமேயானால், கணவனின் உழைப்பு என்பது முதன்மைக் காரணி, அதேவேளை கணவனின் உழைப்பைச் சார்ந்திருக்கும் மனைவியின் உழைப்பு இரண்டாம் காரணிஇதைப் புரிந்து கொள்வதில் ஜில்லியன் கணக்கில் தவறுகள் நிகழ்கின்றன.

அதில் ஒருவகையான தவறு: கணவன் வெளியில் உழைப்பு செலுத்துவது வீட்டில் மனைவி செலுத்தும் உழைப்பால் தான் நீடிக்கிறது என்றும், மனைவியின் உழைப்பு முதன்மைநிலை, கணவன் உழைப்பு இரண்டாம் நிலை என்றும் சிலர் விவாதம் செய்கின்றனர்இந்த விவாதத்தின் மீது நாம் ஒரு கேள்வியை எழுப்ப வேண்டும். அப்படியென்றால் மனிவியின் உழைப்பு நீடித்திருப்பதற்கான அடிப்படை என்ன? இன்றைக்கு வீட்டு வேலை செய்ய முடிவதற்கான ஆற்றல் நேற்றைய வாழ்வுச் சாதங்கள்பூர்த்தி செய்யப்பட்டதன் விளைவு.  அந்த தேவையை பூர்த்தி செய்தது கணவனின் உழைப்பு.  இதைவைத்துப் பார்க்கும் போது கணவனின் உழைப்பே மனைவியின் உழைப்புக்கு அடிப்படை. நாம் காலச்சக்கரத்தில் பின்னோக்கி நகர்ந்தோமானால், கணவன் மனைவி என்று உறவுமுறை அமையாத காலத்திற்கு செல்ல நேரும்.  அப்போது, ஒரு இளம் பெண்ணின் உழைப்பு ஆற்றல் அவளது தந்தையின் உழைப்பு பூர்த்தி செய்த வாழ்வாதாரத் தேவையாலும், தாய் செய்த வீட்டு வேலையின் விளைவாலும் கிடைத்திருக்கும். ஒரு இளம் ஆணின் விசயத்திலும் அதே தான் நடந்திருக்கும்.  அப்படியே அவர்களின் பெற்றோரின் உழைப்பு சார் உறவின் காரணத்தை தேடிச் சென்றோமானால், நாம் அவர்களின் பாட்டன் காலத்திற்கு செல்வோம். காலத்தின் முனைக்குச் சென்றாலும், நாம் ஆணி வேரைக் கண்டடைய முடியாது.

கணவன் மனைவி இடையே இருக்கும் உழைப்புச் சார் உறவை ஆய்வதற்கு இரண்டு வகையான உழைப்பு இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டால் போதும்.  கணவன் பூர்த்தி செய்யும் வாழ்வுச் சாதங்கள்என்பதே மனைவியின் உழைப்புகான உழைப்புச் சாதனம். இங்கு கணவனின் சூழல் மாறுபட்டது.  கணவன் தான் குடும்பத்தைப் பராமரிக்கிறான். மனைவி அந்த பராமரிப்பைச் சார்ந்து இருக்கிறாள். (பண்டைய பழங்குடிச் சமூகத்தில் பெண் தான் பராமரிப்பவளாக இருப்பாள், இங்கு அது பொருத்தமானதல்ல) நாகரீக மனித சமூகத்தில் ஆண் பெண் இருவருக்கும் இடையே நிலவுவது சமமற்ற வேலைப் பிரிவினை.   இதன் அடிப்படையில், ஆணை விட பெண்ணின் நிலை தாழ்ந்து இருக்கிறது.  ஆனால் இந்த அடிமை முறையில் எஜமானன் மிகை உழைப்பினாலோ அல்லது மிகை மதிப்பினாலோ லாபம் அடைவதில்லை. ஆனாலும் இது ஏற்றத்தாழ்வே.

ஒரு சமூகத்திற்கு வீட்டு வேலை, வெளி வேலை இரண்டும் அவசியம். இந்த வேலைகளின் தீவிரத்தை சற்று குறைக்கலாமே ஒழிய, அதை முற்றிலுமாக நாம் ஒழித்து விட முடியாது.  இந்த சமமற்ற வேலைப் பிரிவினையை சரி செய்ய, ஒரு மாறுதல் கொண்டு வரப்பட வேண்டும். அதன் மூலம் ஒருவர் மற்றொருவரை சார்ந்திருக்கும் நிலை இருக்காது.  அந்த மாறுதலானது ஆண், பெண் இருவருக்கும் வீட்டு வேலை, வெளி வேலை என்பதை சமமாக்க வேண்டும்.  இரண்டு பேருமே இரண்டு உழைப்பிலுருந்தும் வருமானம் பெற முடிவதாக இருக்க வேண்டும்.

கணவன் வீட்டில் வேலை செய்வதற்கு, அவன் வெளியில் செய்யும் வேலையின் நேரம் குறைக்கப்பட வேண்டும். மனைவி வெளியில் சென்று வேலை செய்ய அவளது வீட்டு வேலை நேரம் குறைக்கப்பட வேண்டும்.  ஒரு வேளை  கணவன், தன் எஜமானனிடம் “உங்களுக்கு என்னால் 8 மணி நேரம் வேலை செய்ய முடியாது. 5 மணி நேரம் மட்டுமே வேலை செய்வேன்” என்று சொன்னால் ஏற்றுக் கொள்வாரா எஜமானர்.  “அப்படியா, சரி, நீ விட்டிற்கே சென்று விடு. 8 மணி நேரமும் வீட்டிலேயே வேலை பார்க்கலாம்!” என்று சொல்வார்.  வெளியில் கணவனது வேலை நேரம் குறையாத வரை, அவன் வீட்டில் ஒரு துரும்பைக் கூட அசைக்க மாட்டான்.  மனைவி வெளியில் சென்று வேலை செய்ய இயலாது. அப்படியே செய்தாலும், வீட்டிலும் அவள் தான் வேலை செய்ய வேண்டும்.  எஜமானன் தொழிலாளி உறவில் மாற்றம் ஏற்பட்டால் ஒழிய, கணவன் மனைவி உறவில் மாற்றம் ஏற்படாது.

கணவன் மனைவிக்கு சம்பளம் தரவேண்டும் என்பதை ஒரு உரிமையாகப் பேசினால், எதற்காக அவன் கொடுக்க வேண்டும்.  வீட்டு வேலைகளில் பாதியக் கூட கணவன் செய்வதில்லை என்று வாதம் செய்தால், வாழ்வாதாரத் தேவையை மனைவி பாதியைக் கூட பூர்த்தி செய்யவில்லை என்பதால் மனைவியும் கணவனுக்கு சம்பளம் தர வேண்டாமா?

வழக்கமாக ஒரு நாள் தொடங்குகிறது, கனவன் வாழ்வாதாரத் தேவையை பூர்த்தி செய்வதற்கு மாற்றாக மனைவி பணம் கொடுக்க கடமைப் பட்டிருக்கிறாள். அதேபோல், மனைவி வீட்டு வேலை செய்வதற்காக கணவன் பணம் கொடுக்க கடமைப் பட்டிருக்கிறான். விடிந்தவுடன் யார், யாருக்கு முதலில் பணம் தர வேண்டும். கனவன் வாழ்வாதாரத் தேவையை பூர்த்தி செய்வதைக் கொண்டு தான் மனைவி வீட்டு வேலையைத் தொடங்குகிறாள், அதனால் மனைவி தான் முதலில் பணம் தர வேண்டும். அவள் எங்கிருந்து தருவாள்? அந்த சாதனங்களை அவள் கடனாகப் பெறவேண்டும். அதேபோல் மனைவி வீட்டு வேலையை முடித்தவுடன் கணவனும் அவளுக்குப் பணம் தர வேண்டும். ஆனால் மனைவி ஏற்கணவே சிறுது பணம் கணவனிடம் கடன் பட்டிருக்கிறாள். கணவன் தான் பணம் வைத்திருப்பதால் மனைவிக்கு பணம் கொடுத்து விடுகிறான், மனைவியும் வாழ்வாதாரத் தேவையை கணவனிடமிருந்து கடனாகப் பெற்றதை கொடுத்து கடனை அடைக்கிறாள்.

எல்லாவிதமான வீட்டு வேலையும் உடல் உழைப்பே. துடைப்பத்தில் தொடங்கி, வீட்டு வாடகை வரை எல்லா வாழ்வாதாரத் தேவையையும் கணக்கிட வேண்டும். அதேபோல் அரிசி, துனிமணி, குழந்தைகள் படிப்பு, சினிமாவுக்கு செல்லுதல், மனைவிக்கு, குழந்தைக்கு நகை வாங்கித் தருதல் இவை எல்லாவற்றிற்கும் ஆகும் செலவை மொத்தமாக கணக்கிட வேண்டும், அதிலிருந்து ஒரு நாளைக்குச் செலவாகும் செலவில் பாதியை கணக்கிட வேண்டும்.  அதேபோல் மனைவியும் தனது வீட்டு வேலையின் மதிப்பை கணக்கிட வேண்டும். கணவனும் உடல் உழைப்பாளியாக இருந்தால் மட்டுமே இருவரும் ஒருவருக்கொருவர் சமமாக கூலி கொடுத்துக் கொள்ள வேண்டும். கணவன் மூளை உழைப்பாளியாக இருந்தால், கணவன் பூர்த்தி செய்யும் வாழ்வாதாரத் தேவையின் மதிப்பின் அளவினால், மனைவியின் வீட்டு வேலை மதிப்பு குறைவாகவே இருக்கும்.  இதனடிப்படையில், கணவனுக்கு கடன்பட்டிருக்கும் பணத்தை மனைவியால் முழுமையாக திருப்பிக் கொடுக்க இயலாது. இதன் பொருள், மனைவி எப்போதும் கணவனுக்கு கடன் பட்டவளாகவே இருப்பள்.

இரட்டை உழைப்பு செலுத்தும் பெண்களின் வீட்டில், கணவனும் வீட்டு வேலை செய்வானா? அவன் செய்யவில்லை என்றால், மனைவி அவனிடம் உரிமையுடன் சம்பளம் கேட்க முடியாதா? கணவன் மனைவி இரண்டு பேரும் வேலை செய்யும் வீடுகளில் வீட்டுப் பணியாளர்கள் இருப்பர் (உடல் உழைப்பினால் வாழும் குடும்பங்களில் அல்ல).  அதனால் மனைவிக்கு வீட்டு வேலை குறைவாகத்தான் இருக்கும். வீட்டு வேலை செய்யாமல் கணவன் மனைவிக்கு சம்பளம் தரும் தீர்வைப் பரிசோதித்தால் அது கணவன்மார்களுக்கு வீட்டு வேலையிலிருந்து விலக்கு அளிக்கிறது. பழைய வேலைப் பிரிவினையை நிலைத்திருக்கச் செய்கிறது.

உடல் உறவைப் பொறுத்தவரை, அதை பணம் கொண்டு எளிதில் கணக்கிட்டுவிட முடியாது.  அது ஆண் பெண் இருவருக்கும் சம அளவு தேவை. இருந்தாலும், பண பரிவர்த்தனையாக இந்த விசயத்தைக் காணும் சில வக்கிர வாதங்களும் வைக்கப்படுகின்றன. அந்த விசயத்திற்காகவும், கணவன் மனைவிக்கு சம்பளம் தரவேண்டும் எனும் வகையிலான வாதமது. உடல் உறவு பண உறவாக மாறுமேயானால், அங்கு மனைவி விலைமகளாகவும், கணவன் கள்ளக் காலதலனாகவும் மாறுகிறான். அப்படி அது பண உறவாக மாறும்போது மனைவி ஏன் குடும்பக் கள்ளக் காதலனோடு மட்டும் நிறுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல் கணவனும் ஏன் வீட்டு விலை மகளிடம் மட்டும் பணம் செலவழிக்க வேண்டும். இந்த மாதிரியான விவாதங்கள் கேடு கெட்ட மூளைகளால் மட்டுமே வைக்க இயலும். அதன் மறுபெயர், பூர்ஷுவா வாதம்! இந்த விவாதத்தின் இலட்சியம் பணம். இவர்களுக்கு இயல்பான உணர்ச்சி, அன்பு, சுயமரியாதை ஆகியவை புரிவதில்லை. அதனால் அதை பொருட்படுத்தத் தேவை இல்லை.  இந்த விசயத்தில் உழைப்புசார் உறவை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும்.  அதுவே உண்மைப் பிரச்சனை.  இந்த வேலைப் பிரிவினை முறையில் மனைவி எப்போதும் கடனாளியாகவும், கணவன் கடன் கொடுப்பவராகவுமே இருக்கின்றனர். கணவன் கடன் பெறுவதில்லை.  ஒருவேளை மனைவிகளுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் எனும் உன்னத முயற்சிகளை அரசு எடுக்குமானால் (ஓட்டு வங்கியை குறி வைத்து), அது எங்கிருந்து இதற்கான பணத்தை பெறும்? அது கணவனின் சம்பளத்திலிருந்து எடுத்துக் கொடுக்க வேண்டும். தனது சம்பளத்தில் ஒரு பகுதியை இழக்க கணவன்மார்கள் தயாராக இருப்பார்களா?

தெலுங்கில் ஒரு சொலவடை உள்ளது, கம்பளியில் உட்கார்ந்து உண்ணும் போது உணவிலிருந்து தலைமுடியை பிரித்தெடுப்பது போல் என்று. இத்தீர்வுகள் அப்படித்தான் உள்ளது. வேலைவாய்ப்பு, சமத்துவத்திற்கான அவா, ஆண்கள் சிந்தனையில் மாற்றம், புரட்சிகர சிந்தனை இவையெல்லாம் இல்லாமல் போனால், இது பிச்சை அன்றி வேறில்லை.

அரசாங்கம் மனைவிகளுக்கு வெகுமானம் வழங்குவதாய் இருந்தால், அது தனது வருமானத்திலிருந்து தர வேண்டும்.  அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள், மாற்றுத் திறனாளிகள், இயலாமைக்கு தள்ளப்பட்டவர்களுக்காக செலவழிப்பது போல் அரசு செலவழிக்கட்டும்.  கணவன் மீது அந்த பொறுப்பை அரசு சுமத்தாதவரை பரவாயில்லை! அரசுக்கு எந்த உழைப்பையும் செலுத்தாமல், மனைவிகள் அரசிடம் இருந்து சம்பளம் வாங்கினால், அத்தகைய மனைவிகள் அனாதை-இல்லத்தரசிகளிக்கு ஒப்பானவர்கள்.  இல்லத்தரசிகளுக்கு மரியாதை நிமித்தமாக வெகுமானம் என்று அரசு கூறுமேயானால், அவர்கள் பெண்களுக்கு நிரந்தரமாக வீட்டு வேலையை ஒதுக்க நினைக்கிறதா? அதுதான் பெண்ணுக்கான சரியான மரியாதையா?

ஆண் ஆணுக்கும், பெண் பெண்ணுக்கும் கண்மூடித்தனமாக ஆதரவு தெரிவிப்பது சரியல்ல. நாம் உண்மையான நிலமைகளைக் காண வேண்டும்.  இப்போது நிலவும் ஆண் பெண் உறவு அதி சிறந்தது, தூய்மையானது என்றில்லையானாலும்கூட, அதற்குள் சம்பளம் என்ற ஒன்று நுழையுமானால் அது எஜமானன் தொழிலாளி மற்றும் விலை மகள், கள்ளக் காதலன்  உறவாகிப் போகும்.

குறிப்பு:

 பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வீட்டுப் பராமரிப்பு செய்யும் பெண்களுக்கான வரைவுச் சட்டம் ஒன்றை தயாரித்து  வருகிறது. வீட்டுப் பராமரிப்பைச் செய்யும் கணவன்மார்களின் சம்பளத்திலிருந்து 10 முதல் 20 சதவிகிதத்தை மனைவியின்  பெயரில் வங்கியில் சம்பளமாகப் போடவேண்டும் என்பதே அப்பரிந்துரை.  இந்த வரைவு பாராளுமன்றத்தில் இன்னும் 6 மாத காலத்தில் தாக்கல் செய்யப்படும் என்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கன மத்திய அமைச்சர் கிருஷ்னா தீரத் தெரிவித்துள்ளார்.

 மேலோட்டமாகப் பார்த்தால் இவ்வரைவு பெண்களுக்கு நலம் செய்யும் ஒரு பரிந்துரையாகத் தோன்றும். உண்மையில் இது அப்படியல்ல.  இல்லத்தரசிகளுக்கான அந்த சம்பளத்தை தரப்போவது கணவன்மார்கள். இதன் மூலம் வீட்டுப் பராமரிப்பு என்பது பெண்களுக்கானது எனும் கருத்தாக்கம் வழி மொழியப்படுவதோடு, கணவனாகிய குடும்பத் தலைவன் முதலாளியாகவும், மனைவி அடிமையாகவும் வீட்டு வேலையாளாகவும் கருதப்படுவாள். இது பெண்களின் சுயமரியாதையை குலைத்து, நிலப்பிரபுத்துவ தந்தைவழிச் சமூக வரையரையின் கீழ் பெண் / பெண்மை என்பதற்கான கடமைகளுக்கு அடி பணிந்து செல்வதை மட்டுமே நிறுவுகிறது. தன்னுடைய கடமைகளிலிருந்து விலகிச் செல்ல அரசு இத்தகைய பரிந்துரைகளை கண்துடைப்பாக கொண்டுவர முயல்கிறது. ஆணைச் சார்ந்து வாழ்வதிலிருந்து பெண்ணுக்கு விடுதலை அளிக்க பெண்களுக்கான வேலை வாய்ப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். இந்த பரிந்துரையை பல பெண்ணியலாளர்கள் எதிர்த்துள்ளனர். விரிவான விவாதங்கள் தொலைக்காட்சி ஊடகங்களின் வாயிலாக முன்னெடுக்கப்பட்டது. 

 மனைவி தன் கணவனிடம் வீட்டுப் பராமரிப்புச் செலவிற்கான ஊதியத்தைக் கோருவதற்குப் பதில் அரசானது பெண்களை உண்மையிலேயே மேம்படுத்தும் வகையில் வீட்டிற்கு வெளியே வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்திட வேண்டும் என்று மாயா ஜான் எழுதியுள்ளார். மேலும் அவர் சொல்வது,உண்மையில் இந்த வரைவில் உள்ள பிரச்சினை,  இதுதேவையற்றதோ  இழிவுபடுத்தும்   வகையில் இருப்பதோ அல்ல; வீட்டுப்பராமரிப்பு  பணி  மற்றும்  பெண்களின்  உழைப்பைச்   சுற்றிய  பொருளாதாரத்தைப்  பற்றி  தவறாகப்  புரிந்துகொண்டு  அறிவிக்கப்பட்டதே  இதிலுள்ளப்  பிரச்சினை.  பெண் தன் குடும்பத்தில் அவளது நிலையை மேம்படுத்துவதிலும் நாட்டின் பொருளாதாரத்தில் அவளது பங்களிப்பை அங்கீகரிப்பதிலும் இந்திய அரசு தீவிரமாக உள்ளதா என்பதும் இப்பொழுது கேள்விக்குரியதாவது தெளிவு என்கிறார். (மாயா ஜான் தில்லியில் வசிக்கும் சமூக ஆர்வலர், ஆய்வாளர்.)

 லிட்டில் மேகசின் நிறுவனர், ஆசிரியர் அந்தரா தேவ் சென்னும் இப்பரிந்துரை மீது தனது விமர்சனத்தை  பதிவு செய்துள்ளார்.  பெண்களுக்கு அதிகாரத்தில் பங்கு, முடிவெடுக்கும் உரிமை, கணவனின் சொத்துக்களில் சம பங்கு, கூட்டு வங்கிக் கணக்கு, பெண்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றை அக்கட்டுரையில் அவர் பரிந்துரைக்கிறார்.

 இப்படி ஒவ்வொரு பெண்ணியலாளர்களும்  இந்த சம்பளப் பரிந்துரை  மீது கருத்து தெரிவித்துள்ளனர். இவர்களில் ரங்கநாயகம்மா மார்க்சிய கோட்பாட்டுப் பார்வையோடு தனது விமர்சனத்தை  வைத்துள்ளார்.
  
ரங்கநாயகம்மா:

ஆந்திர பிரேதசம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பொம்மிடி எனும் கிராமத்தில் உள்ள தாடெபள்ளிகுடம் எனும் சிற்றூரில் 1939 இல் பிறந்தவர்.  அடிப்படையில் அவர் ஒரு நாவலாசிரியர், சிறு கதை எழுத்தாளர். இதுவரை 15 நாவல்கள், 70 சிறு கதைகள் மற்றும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். அவருடைய எழுத்துக்கள் பாலின சமத்துவத்தை வலியுறுத்துவதாக அமைந்திருக்கின்றன.

 அவரது வாழ்க்கைத் துணைவர்  பெயர் பாபுஜி. இருவரும் சேர்ந்து தங்களது சொந்த விருப்பத்தின்  பேரில் மார்க்சியம் கற்றனர். அதன் பிறகு பல மார்க்சியக்  கட்டுரைகள், நூல்களை எழுதியுள்ளார். மார்க்சின் மூலதனத்திற்கு  அறிமுகம் (An Introduction to Marxs Capital) எனும்  நூல் குறிப்பிடத்தக்கது. இது மூன்று பாகங்களாக வெளிவந்துள்ளது. அது தவிர சமமற்ற நிலையிலிருந்து சமமற்ற நிலைக்கு எனும் தலைப்பில் பூர்ஷுவா பெண்ணியம் குறித்து விமர்சனக் கட்டுரைகளை எழுதியுள்ளார். மார்க்சியத்திற்கு எதிரான ஹைதராபாத் பெண்ணிய வட்டம் வெளியிட்டிருந்த அலெக்சாண்ட்ரா கொலாண்டையின் ருசியக் கதையான மூன்று தலைமுறையின் காதல்கள் எனும் கதையினை எடுத்துக் கொண்டு அவ்விமர்சனக் கட்டுரைகளை எழுதினார் ரங்கநாயகம்மா. மேலும், லூயி மார்கன், ஃப்ரெட்ரிக் எங்கல்ஸ் மற்றும் லெனின் ஆகியோரின் கோட்பாட்டு உருவாக்கங்களை முன்வைத்து பூர்ஷுவா பெண்ணியம் என்பது பெண்களை ஒருவிதமான   சமமற்ற நிலையிலிருந்து மற்றொரு சமமற்ற நிலைக்கு கொண்டு செல்கிறது என்று நிறுவினார்.  மார்க்சியம் என்பது பாலின சமத்துவத்திற்கு எவ்வகையில் சரியான தீர்வை வழங்குகிறது என்பதை ஜானகி விமுக்தி (ஜானகியின் விடுதலை) எனும் தலைப்பில் மூன்று பகுதிகள் கொண்ட நாவலின் வாயிலாக எடுத்துரைக்கிறார்.

 மார்க்சிய நூல்கள் பெருவாரியாக  சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக்  கொண்டு அவர்கள் ஸ்வீட் ஹோம் (sweet home) என்கிற பதிப்பகத்தையும் நிறுவி நடத்தி வருகின்றனர். மிகக் குறைந்த விலையில் மார்க்சிய நூல்களை வெளியிட்டு வருகின்றனர். ரங்கநாயக்கமா தெலுங்கில் எழுதி, அதை பாபுஜி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறார்.

(உயிர் எழுத்து இதழில் இம்மாதம் வெளிவந்துள்ள கட்டுரை)