Oct 31, 2021

கம்யூனிஸ்ட் யார் என்று டி.என்.ஏ டெஸ்டிங் லேப் நடத்துபவர்களின் கவனத்திற்கு

 


முத்துராமலிங்கத் தேவர் சாதியத் தலைவரா? அவரை ஒற்றை சிமிழிற்குள் அடைக்கப் பார்கிறீர்களே! அவரை படித்திருக்கிறீர்களா? அவரின் வரலாற்றுப் பாத்திரம் தெரியுமா? மொட்டையாக அணுகுறீர்களே நீங்களெல்லாம் ஒரு கம்யூனிஸ்டா!? (இப்படி கேட்பது மார்க்சியவாதிகள்)

சரியான கேள்விதான்!

 ஆனால் இதே நிலைப்பாட்டை அம்பேத்கரை விமர்சிக்கையில் ஏன் இவர்களால் வைக்க இயலவில்லை!

 தேவரை மட்டுமல்ல எவர் ஒருவரையும் மார்க்சியக் கண்ணோட்டத்தில் அவரின் வரலாற்று பாத்திரம் என்ன என்பதை வரலாற்று பொருள்முதல்வாதப் பார்வையில் தான் அணுக வேண்டும்! தேவரைப் பற்றிய திறனாய்வு செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை! சாதி ஒழிப்பின் அடையாளமாக அவர் இல்லை! 

 பெரியாரையும் அம்பேத்கரையும் அப்படி அணுகினால் இங்கு நடப்பது என்ன?

 இவர்கள் இருவரை மட்டும் குறிப்பாக ஏன் பேசுகிறோம்? ஏனென்றால் சாதி ஒழிப்பிற்கு அவர்களிடம் தான் தீர்வு உள்ளது என்று மீண்டும் மீண்டும் முன் வைக்கிறார்கள்.

 அவர்களை முன் வைத்து சாதியை ஒழிக்க மார்க்சியத்தில் தீர்வில்லை! கம்யூனிஸ்டுகளுக்கு இந்த மண் புரியவில்லை! அவர்களுக்கு சாதி ஒழிப்பில் அக்கறை இல்லை! என்ன பெரிதாக செய்துவிட்டார்கள் கம்யூனிஸ்டுகள் போன்ற வாதங்களை வைப்பது யார்? பெரியாரிஸ்டுகள், அம்பேத்கரிஸ்டுகள் (பலரின்) இந்த சாடலுக்கு யார் காரணம்? இந்த வெறுப்பை அல்லது தவறான புரிதலை ஏற்படுத்துவதில் அந்த தலைவர்களின் பங்கு என்ன? யாரை விமர்சித்தாலும் வந்து பாடம் நடத்தும் “மார்க்சிய நடுநிலைவாதிகள்” இதுகுறித்து என்ன அறிவிக்கை வைத்திருக்கிறார்கள்?

 தேவரின் வரலாற்றுப் பாத்திரம் இருக்கட்டும்! தேவர் ஜெயந்தியின் வரலாற்று நிகழ்காலம் என்ன? அதன் பொருத்தப்பாடு என்ன? அதன் தேவை என்ன? அது அவசியா? இல்லையா போன்ற கேள்விகளையும் கேட்கலாமே?

நாங்கள் எடுத்துக் கொண்ட ஆய்வு சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு யாரிடம் உள்ளது என்பதுதானே! அதற்கு தீர்வு உள்ளதாக கூறியது அம்பேத்கர்! புத்தரா கார்ல் மார்க்ஸா என்ற ஒப்பீட்டை செய்தவர். பௌத்த மதமாற்றம் சாதியை ஒழிக்கும் என்கின்ற பிரச்சாரத்தையெல்லாம் நீங்களும் தானே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?

 இந்த பின்னணியில் அம்பேத்கரின் சிந்தனைகளை திறனாய்வு செய்யத் தொடங்கினோம்! அதனை இங்கே எப்படி எதிர்கொண்டார்கள்?

மீண்டும் சொல்கிறேன், தலித் அறிவுஜீவிகள், அம்பேத்கரின் அபிமானிகள் (தலித்துகள்) கோபம் கொள்வதை, வசைபாடுவதை, வழக்கு தொடுப்பதை புரிந்துகொள்கிறோம்! ஆனால் வசுமித்ர மீது வழக்கு தொடுத்தது சிபிஎம் – அதன் பிரிவான தீண்டாமை ஒழிப்பு முன்னணி! இவர்களைப் பார்த்து நீங்கள் ஒரு கம்யூனிஸ்டா? இது ஒரு கம்யூனிஸ்ட் அமைப்பா என்று கேட்டீர்களா?

 குறைந்தபட்சம் பொதுவெளியில் அத்தகைய பாசிச நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தீர்களா? அமைப்பு பாசத்தில் எங்களுக்கு பாடம் நடத்துகிறீர்கள்! கற்றுக்கொள்ள தயாராகவே இருக்கிறோம்! ஆனால் இதே அரசியல் நேர்மை உங்கள் அமைப்பை நோக்கியும், மார்க்சிய தத்துவம் மீதும்.. எல்லாவற்றுக்கும் மேல் உழைக்கும் வர்க்க விடுதலை மீதும் இருக்கட்டும்!

 உங்களுக்கு மட்டுமே எல்லாம் இருக்கிறதா?” – நாங்கள் அப்படி மார் தட்டிக்கொள்வதில்லை!

 எங்கள் கேள்விகள் தேவரை எப்படி மதிப்பிடுவது என்பது பற்றி அல்ல சிபிஎம்மில் (ஒரு சிலரிடம்) காணப்படும் பாசாங்கு / சால்ஜாப்பு / இரட்டை வேடம் / அடையாள அரசியல் மற்றும் தனி நபர் வன்மம் பற்றியது! கருத்துச் சுதந்திரத்தை போட்டு நசுக்கிய மிக மோசமான ஒரு செயலுக்கு அமைப்பு காட்டும் கள்ள மௌனம் பற்றியது.

 சாதி ஒழிப்பிற்கு அம்பேத்கரிடம், பெரியாரிடம் தீர்வு உள்ளதா என்பது குறித்து இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஏன் வெளிப்படையாக கராரான மதிப்பீட்டை வைக்க தயங்குகின்றன. அம்பேத்கர் மார்க்ஸ் தொடரும் உரையாடல் என்கிற பெயரில் வைக்கப்படும் ”உரையாடல்கள்” குறித்த திறனாய்வு என்ன?

 இவற்றை பற்றி கேள்வி கேட்டாலே எங்களை வசைபாடுவதும், சாதிய முத்திரை குத்துவதும், ஆபாசமாக கமெண்ட் செய்வதும், வழக்கு தொடுத்து மிரட்டப் பார்ப்பதும் சரியா? குறிப்பாக கம்யூனிஸ்டுகள் இதை செய்யலாமா என்னும் கேள்வியை முதலில் அவர்களை நோக்கி எழுப்புங்கள். திறனாய்வுக்கான எதிர்வினைகள் எப்படி இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு பாடம் நடத்துங்கள்.

 நீங்கள் ஒரு கம்யூனிஸ்டே இல்லை என்று முகநூல் டி.என்.ஏ டெஸ்டிங் லேப் நடத்துவதற்கு பதில் மார்க்சியக் கண்ணோட்டத்தில் சாதியப் பிரச்சினையை எப்படி அணுகுவது! பெரியார், அம்பேத்கர், அயோத்திதாச பண்டிதர் உள்ளிட்ட முன்வைக்கப்படும் சாதி ஒழிப்பு “ஐகான்கள்” பற்றிய திறனாய்வையும் செய்யலாம்.

 இதை செய்யாதவர்களுக்கு எங்களை கேள்வி கேட்க எந்த அதிகாரமும் இல்லை! பதில் சொல்ல வேண்டிய அவசியமும் எனக்கில்லை!

 

No comments:

Post a Comment