Showing posts with label #Vasumithra. Show all posts
Showing posts with label #Vasumithra. Show all posts

Mar 10, 2024

கொஞ்சம் மார்க்சியத் தத்துவம் படிங்க பாஸ்

 

முத்தையா படத்தில் நடித்தால் சாதி வெறி, சாதியக் கூட்டணி!

புதிய புரட்சியாளர்கள் கண்டுபிடிப்பு!

படத்துல நடிச்ச அத்தனை பேரோட சாதியையும்

தோண்டி எடுத்தீங்களாப்பு!

திமிரு புடிச்ச அப்பனை எதிர்க்குற அப்பன் படம்

சாதியப் பெருமை பேசுச்சாப்பு!

சரி! முத்தையா சாதியைத் தோண்டிட்டீங்க

இதுக்கு முன்னாடி சசிக்குமார வச்சி நோண்டிட்டு இருந்தீங்க

அவரோ நந்தன்னு ஒரு படத்துல நடிக்கிறாரு

அவரு எடுத்த அசுரவதம் படம் பீடோஃபீல் பத்தினது

அதுல வசு பீடோஃபிலா நடிச்சிருந்தாரு.. அதுவும் சாதி வெறியா

இல்லை அம்பேத்கரை, அயோத்திதாசரை எல்லாம் விமர்சனம் செய்றதால

நிஜத்துலையும் அவரு அப்படின்னு சொல்லுவீங்களா?

 

விருமன் படத்துல நாயகன் கார்த்தி

அப்ப அவரும் முத்தையாவோட சாதி வெறி கூட்டணியாப்பு!

சரி அவரைக் கூட விடுங்க

மோடிஜிய போட்டு வாங்குற பிரகாஷ் ராஜ் தானப்போய் அப்பனா நடிச்சிருக்காரு

அப்ப அவரும் சாதி வெறியனாப்பு!

 

 உங்க வன்மத்துக்கு ஒரு அளவு வேணாமாப்பு

அம்பேத்கரைப் புகழ்ந்தா சாதிய தோண்ட மாட்டீங்க

விமரசனம் பண்ணா  ஆணாதிக்க சிந்தனை எப்படி வளர்க்கப்படுதுன்னு

பேசுற பதிவுல கூட வன்மத்துல வந்து  லந்து பண்ணுவீங்க!

 

 எல்லாம் போக ஒரு கூலி உழைப்பாளியா இருக்குற

ஒருத்தர்க்கு என்ன அதிகாரம் இருக்கும்

உச்சத்தில் இருக்கும் கதாநாயகனா இருக்குற

ஒருத்தருக்கு என்ன அதிகாரம் இருக்கும்

சமூகத்திற்கு தவறான கருத்தை சொல்லும் கதாப்பாத்திரங்களை,

கருத்துகளை சொல்லக் கூடாது என்று மறுக்கும் அதிகாரம்

யாருக்கு இருக்கும்னெல்லாம் ஒரு படிநிலை புரிதல் எல்லாம் வேணும்

அதுக்கு மார்க்சியம் படிச்சிருக்கோணும்

வாய் இருக்குன்னு பொலிட்டிகல் கரெக்ட்னெஸ் பேசாம

ஓரமாப் போய் மார்க்சியத்தைப் படிங்க!

 

சவீதா அம்பேத்கரின் சாதியை வைத்து அவர் தான்

அம்பேத்கரை கொன்றார் என்று பேசியவர்களுக்கும்

உங்களைப் போன்றவர்களுக்கும் ஒரு வேறுபாடுமில்ல..

அதையும் வசு ஒரு பதிவாப் போட்டாரே படிக்கலையா!

 

எல்லாத்தையும் படிச்சுப்போட்டு,

அம்பேத்கர் மீது வைத்த விம்ரசனத்துக்கு

கருத்துரீதியா அறிவார்ந்த உரையாடலை முன்வைங்க

சின்னப்புள்ளத்தனமா உருட்டாதீங்க!

 

என்னோட ப்ளாக்ல இந்த அரதப் பழசான எல்லா கேள்விகளுக்கும்

பதில் சொல்லி இருக்கேன். அதையாச்சும் தேடிப் படிங்கப்பு!


#வசுமித்ர எழுதிய புத்தகங்கள் :) panuval.com/vasumithra மொத ரெண்டு புத்தகங்கள் தான் ஒரு குரூப்போட வன்மத்துக்குக் காரணம் 😂 அவர் முகநூல் பக்கமா போனீங்கன்னா இன்னும் நிறைய இருக்கு! அங்க வசை பாடிட்டு நேர்ல தோழர் உங்களை, வசுவல்லாம் மறுக்க முடியுமான்னு வந்து பேசுனவங்கல்லாம் உண்டு


விருமன் படத்துல மோடிஜிய போட்டு வாங்குற பிரகாஷ் ராஜ் தானப்போய் அப்பனா நடிச்சிருக்காரு அப்ப அவரும் சாதி வெறியனாப்பு! விடுதலை நாயகன் சூரி நடிச்சிருக்காரு! தயாரிப்பு சூர்யா! அப்ப சூர்யாக்கும் சாதி வெறியாப்பு! உங்க வன்ம கக்கலை நிறுத்தித் தொலைங்க! பதில் சொல்லி அலுத்துப் போச்சு

 

 

Jun 13, 2020

மத மாற்றமும் தூய்மைவாதச் சிக்கலும்
















//நம்முடைய நல்வாழ்வை விழைந்து, நம் இன்பத்தை நாடி, கருணையுடன் எவ்வகையான கணவர்க்கு நம்மை நம் பெற்றோர் மணமுடித்துக் கொடுப்பினும், அவர்பால் அன்புடைமையின் விளைவாய், முன் எழுந்து, பின் உறங்குவோராய், விரும்பி உழைப்போராய், கோருபவற்றை இன்சொற்களால் இனிமையாய் கோருபவராய் இருத்தல் வேண்டும். குழந்தைகளே! இவ்வாறு உம்மை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.// - அம்பேத்கரின் புத்தர்!

#வசுமித்ர எழுதிய அம்பேத்கரறிதல் கவிதைகளும், #அம்பேத்கரும்_அவரது_தம்மமும் நூல் முன்னுரையும் எப்படி அம்பேத்கரின் துயரை, அவரின் மதிப்பை, அம்பேத்கர் மீதான சாதிய சமூக வன்மத்தை பதிவு செய்கிறதோ அதே போல் தான் வசுவின் நூல் அம்பேத்கரின் மத நம்பிக்கையை கேள்வி எழுப்புகிறது. சாதி ஒழிப்பிற்கான தீர்வாக பௌத்தத்தை முன்வைக்கும் போக்கில் அம்பேத்கர் புத்தரை கடவுளாக்கும் நிலைக்கு சென்று பகுத்தறிவை கைவிட்டு தூய்மைவாதப் பிடியில், சொல்லப்போனால் பார்ப்பனியத்திற்கு நிகரான தூய்மைவாதப் பிடியில் சிக்கிக் கொண்டார் என்பதை முன் வைக்கிறது. மதவாத ஒழுக்கவாதமும் ஆணாதிக்கமும் பிரிக்கவியலாதவை! அதன் விளைவாக அம்பேத்கரின் புத்தர் மூலமாக நமக்கு அதுவும் தென்படுகிறது..

இதைக் கண்டு கோபப்படுவதை விட வருந்த வேண்டியுள்ளது! சாதியமைப்பால் அவமதிப்பிற்கும், விலக்கலுக்கும், கொடுமைகளுக்கும் உள்ளாகும் ஆன்மா தன்னை “அழுக்கானவன்’, “தீண்டத்தகாதவன்” என்று ஒதுக்கி அவன் வாழ்நிலையையே கேள்விக்கு உள்ளாக்கும் போது, உன்னைவிட நான் தூய்மையானவன் தான் என்று மெய்ப்பிக்கும் கொந்தளிப்பு ஏற்படும்… அது தன்னை அவமதிக்கும் மதத்திற்கு எதிரான ஒரு புதியதோர் தூய்மையான மதத்தை கலகமாக, தீர்வாக முன்வைக்க முற்படும். அம்பேத்கர் கைக் கொண்டதும் அதுவே!

ஆணாதிக்கத்திற்கு ஆண் வெறுப்பு எப்படி தீர்வாகாதோ அதேபோல் ஒரு மத வெறுப்பிற்கு (மதப் பிரச்சினைக்கு) இன்னொரு மதம் மாற்றாகாது! ஏனென்றால் வர்க்கப் பகைமைகளுக்கு இணக்கம் காண முடியாததன் விளைவாக எப்படி அரசு தோன்றுகிறதோ, அதேபோல் அவர்களுக்குரிய கருத்தியல் பிரச்சாரக் கருவியாக, ஒடுக்குமுறை கருவியாக மதங்கள் தோன்றுகின்றன. மதம் என்பது என்றைக்கும் ஆளும் வர்க்க உருவாக்கமே! ஆளும் வர்க்கத் தேவையே! உழைக்கும் வர்கத் தேவையன்று!

மேலும், சாதியை ஒழிக்க மதமாற்றம் தீர்வல்ல! அது கலகமும் அல்ல! புரட்சியும் அல்ல என்னும் கசக்கும் உண்மையை நாம் சீரணித்தே ஆக வேண்டும்! மதம் பற்றிய மார்க்சியப் பார்வை மட்டுமின்றி யதார்த்ததில் மதங்கள் என்ன செய்கின்றன என்பதை கணக்கில் கொண்டாவது பௌத்த அம்பேத்கரியர்கள் இதை உனர முற்பட வேண்டும். பௌத்தம் தோன்றிய அன்றைய காலச் சூழல், அதன் வர்க்கச் சார்பு, அது இயங்கிய விதம் அனைத்தையும் கணக்கில் கொண்டு பார்க்கையில் தெளிவு ஏற்படும்…



Dec 22, 2018

தடை செய்யப்பட்ட புத்தகம் கவிதை நூல்


பதிவு 1:

இவனிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! 
இதயமில்லாதவர்கள் இவனிடம் மிக மி்க எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!
காணாமல் போன உங்களின் இதயம்
இவனது கவிதைகளால்
பிசுபிசுக்கும் ஈரத்தோடு உங்கள் முன் 
தலை குனிந்து நிற்பதை உங்களால் தடுக்கவே இயலாது!
இவனிடம் நான் அஞ்சி ஓடக் காரணமும் அதுவே!

சொல்வாளால் வசு நிகழ்த்தும் அறுவை சிகிச்சை வலி மிகுந்ததே.... ஆனால் நோய் குணமாகும்!
புதுப்பிறப்பெடுக்கும் மனிதர்களிடத்தில் கைமாறும் அந்த வாளின் முதல் பலி அவனாகத்தான் இருப்பான்!

அதுவே அவனது இடதான வெற்றி!

காத்திருக்கிறேன் காத்திரமான இந்த கவிதை நூலுக்காக 😍

தடை செய்யப்பட்டப் புத்தகம் - வசுமித்ரவின் நான்காவது கவிதை நூல்! சிந்தன் வெளியீடாக வரப்போகிறது. மட்டற்ற மகிழ்ச்சி. Chinthan Books - சிந்தன் புக்ஸ்
வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில்!
அட்டை ஓவிய வடிவமைப்பு என்றென்றும் எங்கள் அன்பிற்குரிய ஓவியர் மணிவண்ணன்.
நூல் வடிவமைப்பு அன்பிற்குரிய ஜீவமணி

- கொற்றவை

பதிவு 2:
#வசுமித்ர வின் நான்காவது கவிதை நூல் “தடை செய்யப்பட்ட புத்தகம்” புத்தகத் திருவிழாவை ஒட்டி வெளியீடு..
முன்னுரை: தோழர் அ.சி. விஜிதரன் ❤️ பொதுவுடைமை அரசியல் இணைத்த காதல் ஜோடிகள் இவர்கள் 
“மௌனம் என்பது சாவுக்குச் சமம்.
எதுவும் பேசாவிட்டாலும் சாகப்போகிறீர்கள்;
பேசினாலும் சாகத்தான் போகிறீர்கள்.
எனவே பேசிவிட்டுச் செத்துப் போங்கள்.”
- தஹார் ஜாவூட் டின் வரிகள் விதைக்க விரும்பும் கலை உணர்வும் பொறுப்புமே வசுவின் கவிதைகள்!
அதனால் “மொழியை கடவுளெனத் துதிக்காமல், நாயைப் போல் ஏவிவிடவேண்டும்.
அவ்வளவே.” என்கிறான் வசுமித்ர
மிகல் காந்தள் முன்னுரையிலிருந்து சில வரிகள்:
கவிஞன் அதிகாரத்துக்கு எதிரி….
ஒற்றை வரி, அறுக்கப்படும் ஆடுகள் பக்கம் நின்று, குரல்கள் வெட்டப்பட்டு குருதி தெறித்து விழும் கொலைக்களத்தின் நின்று பலிவாங்கப்படும் பரமாத்மாக்களை உடைத்தெறிய ஆடுகளை முன் செல்லச் சொல்லும் வேலைதான் தனது என உறுமுகிறது.
பாடுகளை பாடுவது பாடல் அல்ல, முட்டிகளில் நின்று பாடுகளைக் காட்டிப் பரலோகம் கெஞ்சுவோரை, பிதாக்கள் முன் எழுந்து நின்று பீடத்தையே உடைத்தெறிய வார்த்தைகளை ஏவி விட வேண்டும். அதுதான் பாட்டு.
அரசியலற்ற கலை ஒரு முழுப்பொய். இப்படிப் பல பொய்களைக் குப்பையாய், உற்பத்தியாக்கிய பல இலக்கிய பிதாக்கள் இருக்கின்றனர். ஆனால் கலை என்பது அதிகாரத்தை உடைக்க கை ஓங்கும் போது ஏந்தும் சுத்தியலாக இருக்க வேண்டும். அதுவே கலை. அவ்வளவே எனது புரிதல்.
ஓங்கும் சுத்தியல்தான் இந்தப் புத்தகம்.
கவிதைகளைப் பற்றி நான் ஒன்றும் சொல்லத் தேவையில்லை. உற்பத்தியான வார்த்தைகள் அனைத்தும், மூலமான அனைத்திற்கும் முன் நிறுத்தப்பட்ட துப்பாக்கிகள். விசையை அழுத்துவோர்க்கு அதன் வேகம் புரியும். அதன் தாக்கம் தெரியும். செவிப்பறைகள் அதிர, பெரும் ஒலிகளும் கேட்கும். கவனம்!
- கொற்றவை

Aug 10, 2017

நித்ரா.... வசுமித்ர

நித்ரா
சொல்லத் திணறுகிறதெனக்கு
நீ
என் பேரரசி
பேரழகி
மார்க்ஸைக் காதலிப்பது போல்
உன்னைக் காதலிக்கிறேன்
உன்னை காதலிப்பேன்
இதில் உண்மை கொஞ்சம் அதிகமென்று மார்க்ஸுக்கும் தெரியும்
காதல் விவகாரத்தில் மார்க்ஸ் பொய்களை அனுமதிப்பாரில்லையா
நீயும் அப்படியே
என் கண்ணே…
நிச்சயம் நான் ஆணல்ல
நீ பெண்ணுமல்ல
இருபத்தியொன்றாம் நூற்றாண்டின்
சிம்மாசனத்திம் அமர்ந்திருக்கும்
முதலாளித்துவத்தின் கீழ்
அடிமை ஜீவிதத்தில் பிழைத்திருக்கும் இரு உடல்கள்
மார்க்ஸ்க்குத் தெரியும்
முதலாளித்துவமானது உணர்ச்சிகரமான
குடும்பத்தின் முகத்திரையை கிழித்தெறியுமென
நாம் அறிவோம்
வா…
மார்க்ஸைக் காதலிப்பதென்பது
நம்மை நாமே மனிதர்களாய் உணர்வதுதான்
காதலிப்போம்
மார்க்சின் பெயரால்
நிபந்தனையற்று
செல்லமே
நாம் காதலிப்போம்
ரோக் டால்டன் சொன்னது உனக்குத் தெரியும்
கம்யூனிசம் என்பது தலைவலி
குணப்படுத்த ஆஸ்பிரின் மாத்திரை போதும்
சூரியன் அளவான ஆஸ்பிரின்
தலைவலிகளுக்கு மருந்து தயாரிக்கும் மார்க்ஸைப் பார்
வைத்தியனைப் போலவா இருக்கிறான்
நிச்சயம் இல்லை
யுத்தக் களத்தில்
எந்த அச்சமும் இல்லாது
நம்முடன் கைகோர்த்து நிற்கும் அவன் முகத்தைப் பார்
நம் குழந்தையும்
தகப்பனும் அவன்தான்
புன்னகைக்கும் அவனது முகத்தில் நான் இக்கணம் ஜென்னியைப் பார்க்கிறேன்
தாய்மை
அவனது ஆண் மார்பில் முலைகளைக் கொணருகிறது
உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்.

Oct 11, 2016

இதுவரை வசுமித்ரவுக்குக் கிடைத்துள்ள பட்டங்கள்

தமிழ்நாட்டில் அறிவுச்சூழல் எத்தகைய தரத்தில் இருக்கிறது என்பதற்கு சமீப கால ‘அவதூறுகளே’ சாட்சி. அனைத்து ‘விமர்சனங்களிலும்’ அறிவார்ந்த பார்வைகள் இருக்கிறதோ இல்லையோ, தனிப்பட்ட தாக்குதல்களுக்கும், அவதூறுகளுக்கும், இன்னும் சொல்லப் போனால் முட்டாள்தனமானப் பேச்சுகளுக்கும் பஞ்சமே இல்லை.

இந்த இணையவெளி ஏற்படுத்தும் மாயை ஒவ்வொருவரையும் எப்படியெல்லாம் ‘மாற்றுகிறது’ என்பதைக் காணும்போது சற்று அதிர்ச்சிகரமாகவும் இருக்கிறது. பண்பையும், உண்மையையும் அது விழுங்கிவிட்டது என்பதற்கப்பால், (இடதுசாரிகள்’ என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்பவர்களிடம்) தத்துவத்தைக் கூட குழிதோண்டி புதைத்துவிடும் அளவுக்கு இந்த முகநூலானது ஓர் அடையாள நெருக்கடியை ஏற்படுத்துகிறது!
சில மாதங்களுக்கு முன்புவரை இந்த நோய் இலக்கிய உலகை மட்டுமே பீடித்திருந்தது. தற்போது அது ஒரு சில ‘இடதுசாரி’களையும் தாக்கியிருக்கிறது.
இலக்கிய உலகின் ‘விமர்சன’ப் போக்கு
1. ஓர் இலக்கியக் கூட்டம் முடிவடைந்த பின்னர், அது தொடர்பானப் பதிவுகள் முகநூலில் தொடர்ந்தது. அப்படி ஒரு விவாதத்தில் நேசமித்ரன் என்பவருக்கு வசுமித்ர சில கேள்விகள் வைத்ததும் தொடங்கியது தாக்குதல்கள்.
அவர் வசுமித்ரவுக்கு அளித்த பட்டங்கள்: ப்ளாட்ஃபார்ம் டிக்கெட்டுக்குப் பின்னாடி இருக்கிற ஆங்கிலத்தைக் கூட படிக்கத் தெரியாதவர், ரவுடி, அடித்துவிடுவார் என்பதாக. அதிலும் உச்சபட்சமாக, அதுநாள்வரை வசுமித்ரதான் எனது கவிதை மேம்படவு, தான் அடைந்த உச்சத்திற்கும் வழிகாட்டி என்றெல்லாம் என்னிடமே சிலாகித்த அவருக்கு திடீரென்று வசுமித்ர ரமேஷ் பிரேதனைக் காப்பியடிப்பவராகிப் போனார்.
இதன் தொடர்ச்சியகக் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல், வசுமித்ர மட்டும் உத்தமனா, குடிப்பதில்லையா என்றெல்லாம் சீறிவிட்டு, பொண்டாட்டியைப் போட்டு அடிக்கிறார் என்று ‘மிகுந்த நாகரீகத்தோடு’ ‘விமர்சனங்களை’ எழுதினார். ஆனால், இதுவரை நான் கேட்ட எந்தக் கேள்விக்கும் அவர் பதில் சொல்லவில்லை. இந்த ’மோதல்’ வசுமித்ரவின் எழுத்து சார்ந்து வந்ததல்ல. தேனியில் கூட்டம் ஏற்பாடு செய்தவர்கள் குறித்து நேசமித்ரன் வைத்த புகார்களுக்கு பதிலளிக்கச் சென்று, அதாவது தன் நண்பனுக்காகப் பேசச் சென்று வசுமித்ர பெற்ற பட்டங்கள் இவை. ஆனால், இன்று அந்த நண்பர் தன்னைக் கேவலமாகப் பேசிய அந்த நேசமித்ரனோடு ‘மிகுந்த நட்பில்’தான் இருக்கிறார்! ஓர் இலக்கிய இதழ் நடத்தினால் போதும், நட்பாவது மண்ணாங்கட்டியாவது!
2. எங்கள் குடும்பத்தில் ஒருவராகக் கூடிப் பழகி, பின்பு ஒரு பதிவிற்கு எதிர்கருத்து தெரிவித்ததாலேயே வசுமித்ரவுக்கு ‘சாதிவெறியர்’ பட்டம் கொடுத்தவர் பேய்க்காமன் என்பவர். பேய்க்காமன் எனும் பெயரை அவருக்கு வைத்ததே வசுமித்ரதான், அவர் இயற்பெயர் விஜயபாஸ்கர். (தலித் சாதியைச் சேர்ந்தவர்). எங்கள் திருமணத்தைக் கூட அவருடைய பொறுப்பில்தான் நடத்தினோம்.
இதில் நகைச்சுவை என்னவென்றால், இன்று தமுஎகச ‘தொண்டர் படை’ எஸ்விஆருக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு வருவதுபோல் அன்று தமிழ்ச்செல்வன் குறித்து பேய்க்காமன் எழுதிய அவதூறுக்கு எந்தப் படையும் வரவில்லை. வசுமித்ர மட்டுமே நண்பன் என்ற முறையில் பேய்க்காமனைத் தொடர்பு கொண்டு தவறாக எழுதியிருக்கிறார் என்று சொன்னதோடு, சில எதிர்கருத்துகளையும் வைத்தார். தொலைபேசியில் ‘அப்படியா வசு, சரி வசு’ என்றெல்லாம் பேசிவிட்டு, அடுத்த நொடி, முகநூலில் தமிழ்ச்செல்வனைப் பேசினால் வசுமித்ராவுக்கு ‘ஏன் பொங்குது’ என்று ஆரம்பித்து ‘சாதி வெறி’ என்று தனது சாதியை முன்வைத்து முத்திரை குத்திவிட்டு ஓடிவிட்டார். அவருக்கு நான் வைத்த கேள்விகள் இன்றும் அப்படியே இருக்கிறது.
சில மாதங்கள் கழித்து என்னுடையக் கட்டுரை ஒன்று சிறப்பாக இருப்பதாக எனக்கு குறுஞ்செய்தி அனுப்பினார்! நான் பதில் ஏதும் அளிக்கவில்லை! எனக்கிருந்த ஒரே கேள்வி, வசுமித்ர சாதிவெறியர், அவர் மனைவி ‘முற்போக்காளர்’! (பெண் என்பதாலா?)
3. விக்ரமாதித்தன், தேவதச்சன் இருவரை விமர்சித்து வசுமித்ர ஒரு பதிவை தனது வலைப்பூவில் எழுதினார். அதற்கும் இலக்கிய உலகில் ஒரே புலம்பல்! இங்கு எல்லாமே வழிபாட்டு மனநிலைதான் இருக்கும் போல! விமர்சனத்திற்கு துளியும் இடமில்லாத ஒரு சமூகமாக சில ’அறிவுஜீவிகள் / இலக்கியவாதிகள்’ மாற்றிவருகின்றனர். இப்போது அந்தப் பட்டியலில் சில இடதுசாரி அமைப்புகளின் உறுப்பினர்களும் சேர்ந்திருக்கிறார்கள்.
புத்தகக் கண்காட்சியில் வசுமித்ர ஓர் அரங்கில் உட்கார்ந்திருந்தபோது, ஒரு ‘கவிஞர், எழுத்தாளர்’ ‘அவங்களை எல்லாம் விமர்சிக்கிற! நீ என்ன பெரிய ஆளா’ என்று தானாக வம்பிழுத்து, (அப்போது அவர் குடித்திருந்தார்) மிகவும் அநாகரீகமாகப் பேசி, உணர்ச்சியைத் தூண்டிவிட்டபடியே இருந்திருக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் வசு அவரைத் தள்ளிவிட, அங்கு ஒரு சலசலப்பு ஏற்பட்டது!
ஆனால், அச்சம்பவம் குறித்து பதிவுகள் எழுதிய ‘இரு பெரும் ஆளுமைகளில்’! ஒருவர், இந்த இலக்கியவாதிகள் ஏன் இப்படிக் குடித்துவிட்டு பொதுவெளியில் கலாட்டா செய்கிறார்கள் என்று பொத்தாம் பொதுவாக தனது கற்பனையிலிருந்து எழுதினார்.
மற்றொருவரோ வசுமித்ர என்பவர் விரலை கடித்துவிட்டாராமே என்று எழுதினார்!
தோழர்களே! இதுதான் இங்கு நிலவும் ‘விமர்சன அரசியல்’!
4. அதேபோல் சம்பந்தமே இல்லாமல் லக்‌ஷ்மி சரவணக்குமார் என்பவர் என்னைப்பற்றி அவதூறாக ஒரு பதிவு எழுதினார். அதையும் நாங்கள் எப்படிக் கையாண்டோம் எனும் பதிவு எங்கள் தளங்களில் உள்ளது! ஆனால், தாமாக வந்து அவதூறைத் தொடங்கிவிட்டு, எந்த இலக்கியவாதியாவது எங்களைப் பற்றி ஏதேனும் எழுதினால், உடனே அங்கு ஆஜராகி கேவலமானப் பதிவுகளை எழுதுவதை தொடர்ந்துவந்தார். அதற்கு நான் என்ன பதிலடி கொடுத்தேன் என்பது எனது வலைப்பூவில் உள்ளது!
இவரும் தன்னுடைய அத்தகைய செயலுக்குக் கொடுத்த விளக்கம் ‘எவரோ ஒருவரின் தூண்டுதலுக்கு உள்ளாகி அப்படி செய்துவிட்டேன்’ என்று தனிப்பட்ட முறையில் சொல்லி மன்னிப்பு கேட்டுவிட்டு, பொதுவெளியில் வழக்கம் போல தனிப்பட்ட காழ்ப்புகளைத் தொடர்ந்து எழுதினார். அதற்கும் எதிர்வினைகளைப் பதிவு செய்தோம்.
5. இந்த இலக்கியவாதிகள் சிலர் ஏன் தமது ‘இலக்கிய வளர்ப்புத் தொண்டினை’ மற்றப் பெண்களிடமே காட்டுகின்றனர், ஏன் தமது மனைவிக்கு அத்தகைய ‘அறிவினை ஊட்டுவதில்லை’ என்று ஒரு கூட்டத்தில் கேள்வி எழுப்பியதற்காக, அபிலாஷ் சந்திரன் என்பவர் முகநூலில் ‘பொங்கி எழுந்தார்’. கற்பனைக் கதை என்கிற பெயரில், வசுமித்ரவுக்கு என் மீது சந்தேகம், எந்த ஆணும் என்னுடன் பேசுவதை அவன் விரும்புவதில்லை, அவனது நிழல்கூட என்னைக் கண்கானித்தபடியே இருக்கிறது என்று சரோஜாதேவி பத்திரிகைக்குக் கதை எழுதுவதுபோல் எழுதினார்.
அதற்கொரு ‘போராட்டத்தை’த் தொடுக்க வேண்டியதாயிற்று! (சம்பந்தப்பட்டவர் அதன் பிறகு மன்னிப்பு கேட்டார்)
6. இப்போது எஸ்விஆரை விமர்சித்ததும், தமுஎகச ‘தொண்டர் படை’ ஒன்று கிளம்பியிருக்கிறது பட்டங்களுடன் – ரவுடித்தனம், அராஜகம், வயசுக்கு மரியாதை கொடுக்காமல், படித்த திமிர், பொறுக்கி இப்படியாக… இதில் உச்சபட்ச கேவலம் என்னவென்றால், கூட்டத்தில் அடிக்கடி தண்ணீர் குடித்ததைக் கூட ‘ஆளுமைக் கோளாராக’ இழுத்துப் பிடித்து எழுதுவதென்பதுதான்! என்னவகையானப் பண்பு இது! ஒருவேளை இந்த பூர்ஷுவா அறிவுஜீவிகளுக்கு தாகமே எடுக்காதோ?
வசுமித்ர கேட்ட கேள்வி என்ன? முதலில் அவர் கேள்வி கேட்க அனுமதிக்கப்பட்டாரா? இவர்களாக ரஙக்நாயகம்மா நூல் குறித்து ஒரு விவாதத்தைத் தொடங்கிவிட்டு, அதற்கு நேரடியாகத் தொடர்புடைய வசு பதில் சொல்ல எழுந்தபோது, வசு அங்கு வந்திருப்பதைக் கண்டு ’அச்சமுற்ற’ ஆதவன் நேரம், காலம், இது ரங்கநாயகம்மா மேடையல்ல என்றெல்லாம் முதலில் வாய்ப்புத் தரவே மறுத்து, பின்னர் வசு பேசியிருக்கிறார். அதிலும் அவர் விருதுபற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை, நூல் பற்றிய எஸ்விஆரின் கருத்தோடு உடன்படவில்லை என்று சொல்லிவிட்டு ‘எஸ்விஆர்’ எப்படி மார்க்சிய அறிஞர் என்று மட்டுமே கேட்டிருக்கிறார். எஸ்.வி.ஆரை கம்யூனிஸ்டு இல்லை, மார்க்சிஸ்ட் இல்லை என்று வசு சொல்லவில்லை, மார்க்சிய அறிஞர் என்றால் மார்க்சியத் தத்துவத்தை வளர்தெடுக்க அதற்கென அறிவார்ந்த (Schoalrly contribution) பங்களிப்பு செய்திருக்க வேண்டும். எஸ்விஆரின் பங்களிப்பை வாசகர்களே படித்தறியலாம்! அது மார்க்சியத்தை வளர்க்க உதவக்கூடியதா, அல்லது திரிக்கவும், சிதைக்கவும் உதவக்கூடியதா என்பதையும் அறிந்துகொள்ளலாம்! ஆனால் இதற்கு மார்க்சியத்தை அறிந்திருப்பது அவசியம்!
என்னோடு உரையாடும் ஒவ்வொரு புரட்சிகர அமைப்புகளும் (இந்த மார்க்சிஸ்ட் கட்சி போல் அல்லாத) அதில் உள்ள தோழர்களும் எஸ்விஆர், வ. கீதா, அ. மார்க்ஸ், ரவிக்குமார் ஆகியோரை மார்க்சிய எதிர்ப்பாளர்கள் (anti-marxists) என்றுதான் எப்போதும் வசைபாடி வந்துள்ளார்கள். பொதுவெளியிலும் அத்தகையப் பதிவுகள் உள்ளன. ஆனால், இன்றைக்கு வசுமித்ர மட்டுமே எஸ்விஆரை அவதூறு செய்வதாக இவர்கள் திரிக்கிறார்கள். இத்தனைக்கும் வசுமித்ர எஸ்விஆரை மார்க்சிய எதிர்ப்பாளர் என்றுகூட சொல்லவில்லை. மார்க்சிய அறிஞர் என்றால் அதற்கான பங்களிப்பு என்ன என்றுதான் கேட்கிறார். மேலும் எஸ்வீஆர் எழுதிய ஃப்ராங்க்ஃபர்ட் மார்க்சியம், அந்நியமாதல், இருத்தலியமும் மார்க்சியமும் போன்ற நூல்கள் எதற்குப் பயன்படக்கூடியவை என்ற அடிப்படையில், இவர் ஒரு தலைமுறையை சீரழித்தவர் என்று பேசியிருக்கிறார். இதில் என்ன தவறு அல்லது பொறுக்கித்தனம் அல்லது சாதி வெறி?
ஒருவரை மார்க்சிய அறிஞரா என்று கேட்பதில் என்ன அராஜகம், மேதாவித்தனம்? இவர்களைப் போல் சதா சர்வ காலமும் ‘மூத்தவர்களுக்கும்’, ‘நண்பர்களுக்கும்’ துதிபாடிக் கொண்டே இருக்க வேண்டுமா? வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கோஷ்டி கானம் பாடிக்கொண்டு தம்முடைய சொந்த போட்டி, பொறாமைகள், வன்மத்தின் காரணமாக ‘கூலி உழைப்பை’க் கேவலப்படுத்தி, தனிப்பட்ட வாழ்க்கையைப் பேசி சீண்ட வேண்டுமா? தமக்கு லைக் போடுவதற்காக கும்பல் சேர்ப்பிற்காக வசைச் சொற்களை நிரப்பி அவதூறு செய்ய வேண்டுமா? இதுபோன்ற பேச்சுகள் ‘ஜனநாயகம்’, ‘நாகரீகமான பேச்சு’ ஆனால் ஒரு விமர்சனம் வைத்தால் ‘ரவுடி’, ‘திமிர்’, பொறுக்கி, ‘சீரியலுக்கு வசனம் எழுதும் கேவலப்பட்டவன்’, (இப்போது நடிப்புத் தொழில் செய்யும் கேவலம் வேறு சேர்ந்திருக்கிறது).
மார்க்சியத்தின் பெயராலும், முற்போக்கு அமைப்பு என்ற பெயரிலும் இவர்கள் செய்யும் இந்த கும்பல்வாத அராஜகத்திற்குப் பெயர் குண்டாயிசமே அன்றி மார்க்சியமல்ல என்று மட்டுமே சொல்ல முடியும்.
தோழர்களே! விமர்சனம் செய்தாலோ, கேள்வி கேட்டாலோ இந்த ‘முற்போக்கு குண்டர்கள்’ என்ன செய்வார்கள் என்பதை நீங்களே அவர்களது எழுத்துகளைப் படித்தறியலாம். இதுபோன்ற எந்த வகையான அவதூறுகளும், அவமானப்படுத்தல்களுக்கும் நாங்கள் சோர்வுறப் போவதில்லை!
காலம் கடந்து நிற்கப்போவது மக்களுக்கு அறிவூட்டக்கூடிய எழுத்துகளே அன்றி இதுபோன்ற கேவலப்பட்ட ‘அவதூறுகள்’ அல்ல! இப்படியெல்லாம் எழுதுவதன் மூலம் இந்த முகநூலில், தமது நட்பு வட்டத்தில் இவர்கள் ‘புரட்சியாளராக’ வலம் வர முடியும். ஆனால் சமூக மாற்றத்திற்குத் தேவைப்படும் அறிவு வளர்ச்சிக்கான பங்களிப்பு என்னவென்று பார்க்கும்போது ‘அற்பப் பதிவுகளே’ அதிகமாக மிஞ்சும்!
நாங்கள் என்ன தொழில் செய்கிறோம் என்பது வெளிப்படையாகத் தெரிவதாலேயே இவர்கள் தனிப்பட்ட தாக்குதலைத் தொடுக்க முடியும், இல்லையா! ஆனால், அமைப்புகளில் இருப்பவர்கள், பதிப்பகம் நடத்துபவர்கள், சில எழுத்தாளர்கள் என்ன தொழில் செய்கிறார்கள், எப்படி சம்பாதிக்கிறார்கள் (எஸ்விஆர் உட்பட) என்று எதுவும் பொதுவில் தெரியாததால், அவர்கள் ‘முழுநேர’ புரட்சியாளர்கள். அமைப்பில் அட்டெண்டஸ் போட்டுக்கொண்டு, போராட்டங்களில் கலந்துகொண்ட செல்ஃபிகளைப் பகிர்ந்துகொண்டு, எல்லாருடைய பக்கங்களிலும் தாமாக சென்று விருப்பக்குறி இட்டு, சிலபல கமெண்டுகளையும் எழுதிவிட்டால் போதும் சமூகத்திற்காகத் தம்மையே அர்ப்பணித்துக்கொண்டவர்கள்! தம்முடைய சொந்த அடையாளத்திற்காக அமைப்பைப் பயன்படுத்திக்கொள்வதைவிட உதிரிகளாக இருந்துகொண்டு தம் எல்லைக்கும், பொருளாதாரத்திற்கும் உட்பட்டு சில வேலைகளைச் செய்வது எவ்வளவவோ மேலானது.
உழைப்பாளிக்கு, கூலி உழைப்பு அடிமைகளாக இருப்பதைத் தவிர வேறு சாத்தியங்கள் இல்லாத ஒரு அமைப்பில், கிடைக்கும் வாய்ப்புகளைத்தான் ஒருவர் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதைக் கூட அறியாத முற்போக்கு குண்டர்களாக இவர்கள் இருப்பது தெளிவாகிறது! இன்னொரு விஷயம், மார்க்சியத்தைப் பேசுவது, பாட்டாளி வர்க்க அரசியலைப் பேசுவதென்பது ஏதோ ஒழுக்க நெறியல்ல, அது சமூகம் என்னவாக மாறவேண்டும் எனும் இலக்கை முன்வைத்து முன்னேறும் ஒரு அரசியல் தத்துவம் மற்றும் நடைமுறை வழிகாட்டி. ஆனால், இன்றைய நிலைமையில் ஒருவர் நிலவும் அமைப்புக்கு உட்பட்டே உழைத்து வாழ முடியும். தன்னைப் போல் மற்றவரும் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகிறார் என்பதையும் கணக்கில் கொண்டு எல்லாருக்கும் உழைப்புச் சுரண்டலில் இருந்து விடுதலை வேண்டும் என்பதால் மார்க்சியத்தைப் பேசுகிறோம். ஆனால் இவர்கள் பேசுவது முட்டாள்தனமான தூய்மைவாதம், அது ஒரு மதவாதக் கோட்பாடு! புறச்சூழலை கணக்கில் கொள்ளாத கருத்துமுதல்வாதம்.
‘படைப்பு’ (அல்லது வேலை) என்று வரும்பொழுது, அதன் மீது ஒருவருக்கு என்னவிதமான அதிகாரமும், சுதந்திரமும் இருக்கிறது என்பதைப் பொறுத்தே ஒருவரின் ‘அரசியலை’ விமர்சிக்க முடியும்! வசுமித்ர ஒரு சிலரைப் போல் ‘ஓனர்’ அல்ல, அவன் ஒரு கூலி உழைப்பாளி! கிடைக்கும் கூலிக்கு மாரடிக்கும் ஒரு பாட்டாளி! ஆனால், அந்தப் பாட்டாளி சம்பந்தப்பட்ட முதலாளிகளுக்கு விசுவாசமாக தனது அரசியலை சமரசம் செய்துகொண்டு, அம்முதலாளித்துவ நிறுவனங்களின் சுரண்டலுக்கு ஆதரவாகப் பேசினாலோ அல்லது அவர்களின் ‘சரக்கினை’த் தூக்கிப் பிடித்து எழுதினாலோ, புகழ்ந்துரைத்துக் கொண்டே ‘காக்காப் பிடிக்கும்’ வேலைகளைச் செய்தாலோ விமர்சிக்கலாம். (தான் பெற்ற விருது பற்றிய செய்தையைக் கூட பொதுவெளியில் பகிரக் கூடாது என்று சொல்லும் ‘பொறுக்கி’ அவன்!).
தொழிலை இழுத்து பேசி இவர்கள் தம்மை பிற்போக்குவாதிகள், கருத்துமுதல்வாதிகள், எல்லாவற்றுக்கும் மேல் தம் அடையாள நெருக்கடியின் காரணமாக, (தம்மை ஆதரித்து பேசாத சில அற்பக் காரணங்களுக்காக) தத்துவத்தைக் கூட விலை பேசுபவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்கள்.
இத்தகைய போக்குகளை ஊன்றிக் கவனிக்கும் போது இந்துத்துவப் பாசிஸ்டுகள், இந்துந்துவ குண்டர்களுக்கு இவர்களும் சற்றும் சளைத்தவர்களல்ல என்பதையேக் காண முடிகிறது.

Sep 22, 2016

ஜெய் மார்க்ஸ்!!!!!

கீழேயுள்ள ஈஸ்வரயிய கொச்சைப் பொருள்முதல்வாத அனுமானவாதத்தின்படி, வளர்ச்சியடைந்த நகர்புறங்களில் சாதி என்பது வெறும் கருத்தியல் மட்டத்தில் மட்டுமே செயல்படுகிறது, அது உற்பத்தி உறவுகளின் ஒரு பகுதியாக தன்னை தகவமைத்துக் கொள்ளவில்லை. இது எத்தனை அபத்தமான, மார்க்சின் உருவாக்கத்தை (formulation) அப்படியே கொச்சையாக (literal explanation) பொருள் கூறுவதாகிறது என்று இப்போது பார்ப்போம்.
இந்தியாவில் சாதியமைப்பு என்பது உழைப்புச் சக்திகளை படிநிலை அமைப்பாக வகைப்படுத்தும் மதரீதியான (இந்துத்துவம்) சட்ட வடிவமாக உள்ளது. உழைப்புப் பிரிவினைக்கு அது ஒரு கோட்பாட்டை, சட்ட வடிவத்தை வழங்கியுள்ளது. அதன்படி, துப்புறவுப் பணிகள் / கீழ்நிலை உடல் உழைப்புப் பணிகள் தலித் சாதிகளுக்கு (கீழ்நிலை சாதிகள்) மட்டுமே ஒதுக்கப்படுகிறது.
இந்தியாவில் முதலாளித்துவம் தோன்றி வெற்றிகரமாக வளர்ந்துகொண்டு வரும் இந்நாளைய நிலையில் கூட இந்த உழைப்புப் பிரிவினையை நாம் காண முடியும். அதாவது முதலாளித்துவ தன்மைகள் தோன்றிவிட்ட காலத்திலும் கூட சாதி என்பது உற்பத்தி நடைமுறையில்-(உற்பத்தி சக்திகளுக்கிடையில்) பகுதி அளவில் பிணைந்திருப்பதைக் காண முடிகிறது. உபரியை அதிகரிக்க, மூலதனத் திரட்டலை பெருக்க முதலாளித்துவத்திற்கு (தனியுடைமை அடிப்படையிலான எந்த ஒரு உற்பத்தி முறைக்கும்) மலிவான உழைப்புச் சக்தி தேவை. அதற்கு சாதியமைப்பு ஏற்றதொரு ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலுக்கு ஏதுவான சட்டதிட்டங்களைக் கொண்டிருக்கிறது.
ஆகவே, பகுதி அளவில் ஜனநாயகமாகவும், பகுதியளவில் அதனை தன் உற்பத்தி நடைமுறையோடும் இணைத்தே முதலாளித்துவ உற்பத்தியமைப்பும், வளர்ச்சியும் செயல்படுகிறது (இன்றைய நிலையில்). உதாரணமாக, உற்பத்தியில் – பொருள் தயாரிப்பு (product-manufacturing) மற்றும் விநியோகம் என்று வரும்போது, தொழிலின் அடிப்படையில், அது அனைத்து சாதியினருக்கும் தனது பொருளை சந்தைப்படுத்தும் விதமாக சாதியை மறுத்தும் / நெகிழ்த்தியும் செயல்படுகிறது.
அதாவது சர்க்கரை உற்பத்தித் தொழில் என்று எடுத்துக்கொள்வோம் – அந்த சர்க்கரையை தயாரிக்கத் தேவையான கச்சாப் பொருளைப் பெறுவதிலும், சர்க்கரையை விநியோகிப்பதிலும் முதலாளித்துவமானது சாதியைக் கடந்து அனைவரிடமும் தனது பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறது. ஆனால் உழைப்புச் சக்தியை அமர்த்துவதில் அது குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே மேல்நிலைப் பணிகளை வழங்குகிறது, ஆலையில் துப்புறவுப் பணிகள் அல்லது கீழ்நிலைப் பணிகளில் பெரும்பாலும் தலித்துகளே இருக்கிறார்கள்.
பின்தங்கிய முதலாளித்துவ நாடுகளில், நிலவுடமை உற்பத்தி முறையின் கூறுகள் இன்னமும் ஒடுக்குமுறை வடிவங்களாக இருக்கும் ஒரு நாட்டில், உற்பத்திக் கருவிகளின் (உற்பத்தி சாதனங்களின்) வளர்ச்சி மிகவும் மெதுவாகவே நடக்கும். சாதியமைப்பின் வேறூன்றிய நடைமுறையானது (வெறும் கருத்தியல் நிலையில் மட்டுமல்லாது) முடிந்தவரை உற்பத்தி சக்திகள் மற்றும் உற்பத்தி சாதனங்களுக்கிடையிலான உள் முரண்பாட்டிலிருந்து ஏற்படக்கூடிய உற்பத்திச் சாதனங்களின் வளர்ச்சியைத் தள்ளிப்போட்டுக் கொண்டே வரும்.
துப்புரவுப் பணிகளில் இன்னமும் இயந்திரங்களைக் கொண்டுவராதிருப்பது, இதற்கொரு சிறந்த உதாரணம். இந்த தாமதத்திற்கு ஒரு வகையில் வேலைவாய்ப்பின்மையால் அந்த சாதியினர் மத்தியில் ஏற்படக்கூடிய பாதுகாப்பின்மை உணர்வின் காரணமாகவும், மாற்று பொருளாதார திட்டங்கள் இல்லாதது எந்தளவுக்குக் காரணமோ அதையும்விட சாதி அடிப்படையிலான உழைப்புப் பிரிவினையானது முதலாளித்துவச் சுரண்டலுக்கு மிக மிக ஏதுவாக இருப்பதும் ஒரு காரணம்.
இதையெல்லாம் வரலாற்று பொருள்முதல்வாதப் பார்வை இல்லாமல், இந்திய சமூகத்தின் உள்முரண்பாடுகள் அமுங்கி இருப்பதற்கான காரணங்களைக் கணக்கில் கொள்ளாமல் வெறுமனே இயந்திரத்தனமாக கோணார் உரை எழுதுவது போல் “வளர்ச்சியடைந்த நகர்புறங்களில் முதலாளித்துவத் தன்மைகள் தோன்றிய இடங்களில் சாதியப் போராட்டம், ஒரு கருத்தியல் போராட்டமாக, அதாவது பொருளாயத (material)உள்ளடக்கத்திலிருந்து விடுபட்டும் சிந்தனையில் சாதியம் செயற்படும் போது இங்குச் சித்தாந்தப் போராட்டமாக நடத்தப்பட வேண்டும்.” என்று சொல்வது எத்தனை அபத்தமானது; நடைமுறையிலிருந்து விலகி வெறும் ஏட்டுச் சுரைக்காய் வியாக்கியானமாக, கருத்துநிலை ‘ஆசீர்வாதமாக’ மட்டுமே எஞ்சுகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
முதலாளித்துவம் முழுவதுமாக வளர்ச்சி பெரும் வகையில் முன்னேறும் கட்டத்தில் மட்டுமே உற்பத்திச் சாதனங்களின் வளர்ச்சி தீவிரமாக ஏற்படும். இந்திய நிலைமையில் சாதியமைப்பு அதுவரை பகுதியளவில் (பகுதியளவில் என்பதற்கு அழுத்தம் அதிகம்) அடிக்கட்டுமானத்தில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். ஆகவே முதலாளித்துவ தன்மைகள் தோன்றிய இடங்களில் சாதி பொருளாயத அடித்தளமாகவும் (பகுதியளவில்) இருக்கும் என்பதை நாம் காணமுடிகிறது.
அதேபோல் “முதலாளித்துவம் அனைத்துத் துறைகளில் வளர்ச்சியடையும் போது சாதியம் உள்ளடக்கத்திற்கான வடிவமாகக் காணப்படாமல், மீதமிச்சமாக உதிர வேண்டிய நிலையாக மாறிவிடும். அந்நிலையில் கருத்தியல் போராட்டமாக நடத்தப்பட்டுச் சாதியம் உலர்ந்து மறையும்.” என்று ஈஸ்வரன் மொட்டையாகச் சொல்லும்போது, அதை உற்பத்தி நடைமுறையின் உதாரணங்கள் எதையும் முன்வைத்து விரிவாக விளக்காமல் போவதால், அவருடைய ஏட்டுச் சுரைக்காய் சிறுகுறிப்புகள் ஏற்படுத்தும் புரிதல் என்னவெனில்: முதலாளித்துவம் வந்துவிட்டால் சாதி மறைந்துவிடும், உலர்ந்து உதிர்ந்து விடும்; அதுவரை நீங்கள் கைக்கட்டி வாய்ப்பொத்தி வேடிக்கை பாருங்கள். மேடை போட்டுக்கொண்டு சாதி வெறும் கருத்தியல், கருத்தியல், கருத்தியல் என்று சொல்லிக் கொண்டு மார்க்ஸின் மேற்கோள்களைச் சுட்டிக் காட்டி ‘கருத்தியலுக்கு எதிரான’ அறச்சீற்றமற்ற வகையில், மென்மையாகப் பேச்சுவார்த்தை நடத்துங்கள்.
வர்க்கப் போராட்டம் என்றால் என்ன, சுரண்டல் என்றால் என்ன, சுரண்டலை எப்படி உழைக்கும் வர்க்கத்திற்குப் புரியும் வகையில் விளங்க வைப்பது, அந்த மக்களின் வாழ்க்கை நடைமுறையிலிருந்து, குறிப்பாக அவர்களின் நிலைக்கு பிரதான ஒடுக்குமுறை வடிவமாக இருக்கும் உழைப்புப் பிரிவினையை எப்படிப் புரியவைப்பது? உழைக்கும் வர்க்கத்தை ஒருங்கமைக்கத் தடையாக இருக்கும் அடையாள அரசியலை, மார்க்சியம் குறித்த தவறான (அம்மக்களின்) தலைவர்களின் வழிகாட்டுதல்களை எப்படி தவறென்று புரியவைப்பது இதையெல்லாம் அவரிடம் கேட்டுவிடாதீர்கள். மேற்கோள்களுக்கு அப்பாற்பட்டு நடைமுறையிலிருந்து விளக்கி எழுத மார்க்ஸ், எங்கல்ஸ் நூல்கள் இப்போது இல்லையே. தெரிந்தால் சொல்லிவிட மாட்டாரா!
“முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் சாதிய அடிப்படையிலானதல்ல” – சமூக வளர்ச்சியானது புராதனப் பழங்குடிகள் காலத்திலிருந்து வளர்ச்சியடைந்து முதலாளித்துவ காலத்திற்கு வரும்வரையில் உற்பத்தி நடைமுறையின் போக்கில், உற்பத்தி உறவுகள் பரிணாமம் பெற்று வளர்கிறது, மாறுகிறது. அந்த வகையில் குறிப்பிட்ட உழைப்புப் பிரிவினை (இந்தியாவில் சாதியமைப்பின் செல்வாக்குக்கு உட்பட்ட) உற்பத்தி உறவுகளின் அடிப்படையாக இருக்காதெனினும், முழுமையான முதலாளித்துவ வளர்ச்சி ஏற்படும் வரை பகுதியளவில் அது அடிக்கட்டுமானத்திலும் செல்வாக்கு செலுத்தி அடிக்கட்டுமானத்தில் அரை நிலவுடைமையாகவும், அரைக் காலனியமாகவும் இருக்கிறது. இன்றைய நிலையில் முதலாளித்துவ உற்பத்தி உறவுகளில் சாதியமைப்பு எப்படி செயல்படுகிறது என்று மேலே பார்த்தோம்
கருத்தியல்கள் மேற்கட்டுமானம் என்றாலும், உற்பத்தி நடைமுறையில், சுழற்சியில் ஒரு கட்டம் வரை அடிக்கட்டுமானத்தில் செல்வாக்கு செலுத்தும். சாதியமைப்பு என்பது உழைப்புப் பிரிவினையை சட்டவடிவமாக்கியதால், இந்தியாவில் அதன் செல்வாக்கு மிக அதிகமாகவே இருக்கிறது (பொருளாயத அடிப்படையில்தான்) அதனால் மார்க்சின் உலர்ந்து உதிர்ந்து மறையும் என்பதை நாம் உங்கு இயந்திரத்தனமாகக் பொருள்கொடுக்கும் வகையில் எழுதுவதென்பது எத்தனை ஆபத்தானது, குழப்பம் ஏற்படுத்தக் கூடியது.
நடைமுறையோடு அதனை தெளிவாக விளக்காமல், ஆசீர்வாதம் செய்வது போல் “சாதி மறைந்து போகும்” என்று தப்பும் தவறுமாக உரை எழுதுவது யாருக்குப் பயன் தரும்.
மார்க்சின் சொற்களிலேயே சொல்வதானால், வியாக்கியானங்கள் நிறையவே இருக்கின்றன, பிரச்சினை என்னவென்றால் அதை மாற்றியமைப்பதுதான். முதலில் அதற்கு மார்க்சியத்தை சுரண்டல்வாத அமைப்பின் அனைத்து வகையினங்களையும் (categories) – உற்பத்தி உறவுகள், உழைப்புசார் உறவுகள், சொத்துறவுகள், பரிவர்த்தனை உறவுகள் என்று ஏற்றத் தாழ்வுக்கான அனைத்து வகையினங்களையும் - புரியும்படி சொல்லவேண்டும். சொல்லப்போனால் அறச்சீற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சொல்ல வேண்டும்.
இந்தப் போக்கில் உற்பத்தி உறவுகள் எனும் சொல்லையே தவிர்த்து ஒருவர் மார்க்சியத்தை விளக்கினாலோ அல்லது உற்பத்திச் சாதனங்களின் வளர்ச்சியினால் ஏற்படும் உள்முரண்பாடுகள் ஏதுமிருக்காது, பாட்டாளி வர்க்கம் உணர்வு பெற்றுவிட்டால் புரட்சி வெடித்துவிடும் என்று சொன்னாலோ அது தவறு என்று சொல்லலாம். ரங்கநாயகம்மா அப்படி எங்கேயும் சொல்லவில்லை, வர்க்கப் போராட்டம் என்பதை வெறுமென்று உழைப்புச் சுரண்டலை மட்டும் ஒழிப்பது என்பதோடு நிறுத்திக் கொள்ளவுமில்லை, தனியுடைமை அடிப்படையிலான உற்பத்தி சாதனங்களின் உடைமையையும் மாற்றி அமைக்க வேண்டும் என்றே கூறுகிறார்.
ஆனால் முழுமையாக ஒருவரின் எழுத்தைப் படித்து தொகுத்துப் பார்த்து அது தரும் விளக்கத்தை அறிவகந்தையும், அடையாள இருப்பு சார்ந்த உள்நோக்கமும் இன்றி படித்தோமானால் இதுபோன்ற திரிபு வேலைகளை செய்யாமல் தவிர்க்கலாம். முதலாளித்துவத்தின் வளர்ச்சியை அந்தந்த நாட்டின் உள்முரண்பாடு மற்றும் ஒடுக்குமுறை வடிவங்களை வைத்து நடைமுறையில் தொடர்புப்படுத்தி, ஆய்வுபூர்வமாக விளக்காமல், மார்க்சின் சொற்களை மட்டுமே எடுத்துப்போட்டு, கொச்சையான பொருள்முதல்வாத வியாக்கியானங்களை மட்டுமே ஏட்டறிவில் செய்யும் ஈஸ்வர நாமேதேய வகையறாக்களினால்தான் மார்க்சியம் என்பது வெறுமனே பொருளாதார நிர்ணயவாதம் என்று பலராலும் குற்றம் சாட்டப்படுகிறது.
தோழர்களே, நமக்கெல்லாம் ஈஸ்வர ஆசீர்வாதம் கிடைத்துவிட்டது, நாள்தோறும் மார்க்சின் மேற்கோள்களை ஜெபிக்கலாம். முதலாளித்துவம் வளர்ந்துவிட்டால் சாதி மறைந்துவிடும். அதன் பின்னர் நாம் வர்க்கப் போராட்டத்தைத் தொடுப்போம்.
ஜெய் மார்க்ஸ்!!!!!!!
மார்க்ஸே நமஹ!!! எங்கல்ஸ் அய்யாவுக்குத் தோத்திரம்!!! லெனின் இன்ஷா அல்லாஹ்!!!!
பாதி புத்த அட்ட தீவ் பாவ்!
மார்க்ஸே சரணம் கச்சாமி!!!