
படித்து பெற வேண்டிய அறிவும், அனுபவமும், என் நடுத்தர வர்க்க வாழ்க்கை எனக்கு கொடுத்தது. அதன் வாயிலாக ஒரு தெளிவு ஏற்பட 33 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் அதற்கு முன்: பால் பேதமையின் பெயரிலும், கற்பு, பண்பு, கலாச்சாரம், ஒழுக்கம், பெண்மை இவற்றின் பெயராலும் இந்த சமூக சாத்தான் என்னை அடக்கி வைத்திருந்தது.
நானும் நீண்ட கூந்தல் வளர்த்து, பெரிய பொட்டு வைத்து, தலை நிறைய மல்லிப்பூ வைத்து, 6 மணிக்கு அல்வாவையும், அவரையும் எதிர்நோக்கி காத்திருக்க வளர்க்கப்பட்டேன். திருமணத்திற்கு முன்பு பெய் என்றால் பெய்கிறதா மழை என்று பல முறை ஒத்திகை பார்த்தேன். பெய்யாததால் குற்ற உணர்வால் பாதிக்கப்பட்டேன். (நல்ல வேளை மழை பெய்யவில்லை, பெய்திருந்தால் ஏதோ சித்து வேலை செய்துவிட்டேன் என்று கற்பை மறுபடி நிரூபிக்க தீயில் குதிக்க சொல்லியிருப்பார்கள்). பற்றாக்குறைக்கு அம்மன் திரைப்படங்கள் வேறு ...
அந்நாளைய குற்ற உணர்வு, பின்னாளில் ஏன் இப்படி? என்ற கேள்வியை என்னுள் எழுப்பிக் கொண்டே இருந்தது . பெண் தெய்வ வழிபாடு பற்றி நான் செய்த ஆராய்ச்சி, கடவுள் வழிபாடு எப்படி தோன்றியது, எப்படி உருவ வழிபாடாக மாறியது, பெண் ஏன் தெய்வமாக்கப்பட்டாள் என்ற உண்மையை போட்டு உடைத்தது. செய்யாத தவறுக்கு அகலிகை பெற்ற சாபம், நளாயினிக்கு நடந்த பதிவிரதை சோதனை, சீதை தீக்குளித்தது போன்ற கதைகள் பெண்ணை கற்பின் பெயரால் அடிமை ஆக்க புனையப்பட்டவை என்று புரியவைத்தது.
இன்னும் பல கொடுமைகள்
பெற்ற தந்தையே, மந்திரவாதியின் பேச்சைக்கேட்டு தன் இரண்டு மகள்களை கற்பழித்த போது, கண்ணன் பாஞ்சாலிக்கு புடவை கொடுப்பதிலும், துர்கை மகிஷனை வாதம் செய்வதிலும் ஆழ்ந்து விட்டதால், அக்குழந்தைகள் காவல் நிலையம் ஏறியதாக படித்தேன் . பின்பு ஒரு நாள் கன்னியாஸ்திரி ஒருவர் பாதிரியாரின் முத்த மகத்துவத்தை விளக்கி எழுதியப் புத்தகத்தைப் படித்த போது, ஆவியானவும் நேரில் வர மாட்டான் என்று புரிந்தது.
பெண்மைக்கடுத்து மதமும், அரசியலும் என்னை பாதித்தது. அந்நிய சக்திகளாக குதிரையில் வந்த குலத்தவரை எதிர்க்க மனோதிடம் வேண்டி பிரார்த்தனைக்காக உருவாக்கப்பட்ட கடவுள் உருவங்கள் பின்பு சுயநலத்திற்காக, சிறுபான்மையினரை அடக்கி ஆண்ட வரலாறு புலப்பட்டது. மனிதனே சக்தி வாய்ந்த படைப்பாளி என்ற நிதர்சனத்தை நிலை நாட்டியது. பின்னே, அவன் படைத்த பணமும், மதமும் தானே இன்று எல்லோரையும் ஆட்டிப்படைக்கிறது.
என் அனுபவங்கள், கேள்விகள், கோபங்கள், ரசனை இவைகளை நான் சந்தேகப்படவேண்டியிருக்கிறது.