Showing posts with label தாய் மகள் கவிதை. Show all posts
Showing posts with label தாய் மகள் கவிதை. Show all posts

May 26, 2012

இடமுடியா முத்தங்கள் கடவுள் போன்றது




முத்தங்களை விழுங்கும்
வலி எத்தகையது
என்பதை அறிய மாட்டீர்கள்
நீங்கள்

அந்நியமாகிப் போன கருவறையின்
வழியாக
குருதியென வழிந்தோடுகிறது
அம்முத்தங்கள்

இடமுடியா முத்தங்கள்
கடவுள் போன்றது
புகைப்பட உதடுகள்
உறிஞ்சுகிறது
ஈரமற்ற முத்தங்களை

பாரம் தாளாமல்
மன்றாடுகிறது விழித்திரை

கடந்த கால நினைவுகளும்
அவளது புகைப்படங்களும்
அவ்வப்போது அவளது தொலைபேசி
அழைப்பும்
மரணத்தை தள்ளிப்போடுகின்றன

உயிரறுத்து கிடக்கும் வேளையில்
புதையுங்கள்
என்னை
அவளது கருவறையில்

Mar 21, 2011

கருவறையை சொற்கள் கொண்டு நிரப்பினர்



1
அந்தத் தெருவைக் கடக்கையில்
முத்தத்தின் ஈரம் காயத் துவங்கியிருந்தது
அக்கம்
நாசிக்கருகே கன்னம் இருப்பதை ஆசீர்வாதமாக கருதினேன்
பிரார்த்தனையின் ஈரத்திலிருந்து
அவளது எச்சில் மணத்தை நாசிக்குள் செலுத்தி
பாதுகாத்துக் கொண்டேன்.

பசி கொண்டெறியும் வயிற்றுக்கு
கனவுகள் இல்லாத நாளில்
சுவாசக் காற்றிலிருந்து பிரிதெடுக்கப்பட
அவளது வாசம் மீட்டுத்தர
காத்திருக்கிறேன்

வெற்றிடம் விழிப்பந்துகளை ஓங்கி உதைக்கிறது.

2
மாதிரிகளைச் செய்வதில் கைதேர்ந்தவள் மகள்
உடலற்ற பொருள்களுக்கு
உயிரும்
ஸ்பரிசமும்
எண்ணிக்கையிலடங்கா முத்தங்களையும்
வாரி வழங்கும்
அவளது விரல்கள்
என்
பித்தேறிய வரிகளை எச்சில் தொட்டு அழிக்கிறது
காலம்
கருவறைகளுக்கு
தூர வித்தியாசங்களை
பிரிவின் வன்மத்தைக் கற்றுக்கொடுத்துவிடுகிறது

காலம் குறிகளால் ஆனது
மைதுனம் செய்யத் தவறுவதில்லை
உறவுகள் அடிமைகளையே வணங்குகிறது
கூன்
வளைவுகளை மட்டுமே அனுமதிக்கும்

கண்களுக்கு
புவி ஈர்ப்பைக் காவலாய் வைத்துச் செல்லும்
விழிகள்
மண்ணில் நிலைக்கொண்டிருத்தல்
குறிகளுக்கு
சாதகமாய் இருக்கிறது
சாதகமானவைகளைத்தான் குறி அணைத்துக்கொள்கிறது

3
கேள்விக் குறி
முற்றுப்புள்ளியாய் குறுகும்போது
அக்கணத்தை திமிரியழுத்தியபடி
குறிகள் திரித்து விடுகின்றன
மகளின் சொற்களை


அந்தகக்கண்ணீர்
அமிலத் தன்மைக் கொண்டது
மழலைகள்
ஒருபோதும் அறிந்திருக்க வாய்ப்பில்லை

4
கருவறையைச்  சொற்கள் கொண்டு நிரப்பினர்
நீரூற்றி கழுவமுடியா கழிப்பிடம்
வாழ்தல் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தினர்
அச்சம் எண்ணற்ற குறிகளைக் கொண்டது

பொம்மைகளின் முன்
தோற்று
தளர்ந்து
தலைகவிழ்ந்து நின்றது முலைகள்
இதைச் சித்திரமாய் தீட்ட என் விரல்களை
இறைவனுக்குப் பிச்சையிடுகிறேன்
அது
எதிர்காலம் எனும் பிசாசை வரைந்து வைக்கிறது

ஓவியம் எல்லாவற்றையும் பிரதிபலிக்கிறது
கண்ணாடிகள் நொறுங்கக் காத்திருக்கிறேன்.

Jan 12, 2011

கருப்பையின் கதவுகளை தட்டுகிறாள் மகள்



குழந்தையின் குரலொன்று கேட்கிறது சில இரவுகளில்
இழப்பின் சாயலைக் கொண்டிருக்கிறது அவ்விரவுகள்
உடுத்தி வருகிறது பிரசவக் கோடுகளை

ஓலத்தின் இசைக் குறிப்பு
தொலைந்து விட்டது
அயர்சியுற்ற கைகளை பார்வைக்கு வைத்திருக்கிறேன்

கருப்பையின் கதவுகளை தட்டுகிறாள் மகள்
தொலைதூரத்தில் புதைந்துபோன கைகளை
மீட்பதற்கில்லை

தும்பிகள் கூட்டமாய் பறந்து போகும் காட்டில்
தொப்புள் கொடியின் வாடை பிடித்து
தப்பித்து செல்கையில்
வனமெங்கும்
அவளது முகம்
அவளது சிரிப்பு
அவளது மழலைச் சொற்கள்

பேய்கள் மூளை நரம்புகளை பங்கிட்டு உண்கிறது
ஆழியின் பெருத்த அலைகள்
முட்டிச் செல்கிறது எலும்புகளை

மரணத்தை பற்றிய அனுபவம் இருக்கவில்ல
பிணங்களின் அறிமுகம் உண்டு