Oct 24, 2020

தேனி மாவட்ட தமுஎகச குறித்து


இன்றைக்கு இந்துத்துவ கும்பல் தோழர் திருமாவளவனுக்கு என்ன செய்கிறதோ அதைத்தான் ‘தலித்தியவாதிகள்’ சிலர் எங்களுக்கு 4 வருடங்களாக செய்து வருகின்றனர். பா.ஜ.க கல்யாணுக்கு நிகராக ஆபாசமாகப் பேசியுள்ளனர்!

 தமுஎகச, சிபிஎம் போன்ற ‘கம்யூனிஸ்ட் அமைப்புகள்’ ‘பிரபலங்கள்’ என்றால் ஒரு நிலைப்பாடு மார்க்சியத்திற்காக வாதிடும் தோழர்கள் என்றால் வேறொரு நிலைப்பாடு எடுப்பதை காலம் பதிவு செய்திருக்கிறது. எப்படி, பெரியார், அம்பேத்கர், தற்போது தோழர் திருமா உட்பட சாதிய அதிகாரத்திற்கு அடங்கமறுத்து சீறி எழுகிறார்களோ அதேபோல் அடையாள அரசியல் கும்பல்களுக்கு எதிராக, மார்க்சியத்தை வீழ்த்த நினைக்கும் சீர்குலைவு முயற்சிகளுக்கு எதிராக நாங்களும் கிளர்ந்தெழுவோம் :)

 கீழுள்ள பதிவை எழுதியவர் Vasu Mithra

தமுஎகசவின் மதிப்புறு தலைவர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு,
அன்புடன் வசுமித்ர எழுதிக்கொள்வது.....

வணக்கம்.

தமுஎகசவின் மீதும் ஆதவன் தீட்சண்யா மீதும் ஜெயமோகன் வைத்த குற்றச்சாட்டுக்களும், அவ்வமைப்பின் மதிப்புறு தலைவராக நீங்கள் எழுதியதையும், படித்தேன். உங்கள் இருவரின் கடிதங்களிலும் எனது பெயர் இருப்பதால் இந்த விளக்கத்தைக் கொடுக்க நினைக்கிறேன். ஜெயமோகனுக்கு என்னைக் கவிஞர் என்று. தெரிந்திருக்கிறது நல்ல விசயம்தான். ஆனால் தாங்களோ என்னை முன்பின் தெரியாதவன், பார்த்திராதவன் போல் வசுமித்ர ‘என்பவர்’ என்று சுட்டும்போது உங்கள் மனம் எவ்வாறு செயல்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன்.

தமுஎகச என் மீது வழக்குத் தொடுத்தது என்று ஜெயமோகன் கேள்விப்பட்டது தவறுதான். ஆனால் அது குறித்து நீங்கள் எழுதியது இன்னமும் சிக்கலாக மாறுகிறது. தங்கள் அமைப்பு வழக்குத் தொடுக்கவில்லை என்பதைக் கம்பீரமாக அறிவிக்கும் நீங்கள், உங்களது கட்சியின் வெகுஜன அமைப்பான தீண்டாமை ஒழிப்பு முன்னணி வழக்குத் தொடுத்ததை ஏன் சொல்ல தயங்குகிறீர்கள். ஏதோ ஒரு அமைப்பு தொடுத்த வழக்கு போல் ஏன் கடந்து செல்ல நினைக்கிறீர்கள். கருத்துச் சுதந்திரத்துக்கு உங்கள் கட்சியின் வெகுஜன அமைப்பு மட்டும் விதிவிலக்கா?

நீங்கள் அவ்வமைப்பில் இருந்த 25 ஆண்டுகாலமாக தமுஎகச மட்டுமல்ல, சிபிஎம் கட்சியும் யார் மீதாவது தனிப்பட்ட வழக்கை, அதுவும் வன்கொடுமை வழக்கை பதிவு செய்திருக்கிறதா என்ன? பிள்ளை கொடுத்தாள் விளை கதைக்குப் பிறகு ஆதவன் அத்தகைய மிரட்டலை எங்கும் வைத்ததில்லை என்பதை எந்த வகையில் உறுதி செய்துகொண்டீர்கள். அப்படியெனில் அந்தக் கதை மீது அவர் வைத்த வன்கொடுமை வழக்கு மிரட்டல் சரியானதுதான் என்கிற தோற்றத்தையே உங்களது கடிதத்தில் பார்க்கமுடிகிறது. அவரது விமர்சனம் குறித்து இன்றைய தினம் கூட உங்கள் விமர்சனங்களை வைக்கத் தடுப்பது எது தமுஎகசவின் மதிப்புறு தலைவர் என்கிற பதவியா?

ரங்கநாயகம்மா புத்தகம் வந்ததும் ஆதவன் தீட்சண்யா அவதூறைத் தொடங்கி வைத்தார். மார்க்ஸ் அவசியம் என்கிற நூலை பீயிக்கு ஒப்பாகச் சொன்னதுடன். கொற்றவை மீது வன்கொடுமை வழக்கு என்கிற மிரட்டலையும் மறைமுகமாக விடுத்தார். அதன்பின் அவரது வகையாறக்கள் என்னையும், கொற்றவையையும் முகநூலில் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்குக் கீழாக வசைகளாலும் ஏளனங்களாலும் எதிர்கொண்டனர். அந்த வகையறாக்கள் யார் என்று நீங்கள் கேட்டால் பெயர்களோடு, அவர்கள் வைத்த வார்த்தைகளையும் ஆதாரமாக முன்வைக்க நான் தயாராக இருக்கிறேன். தமுஎகசவின் மதிப்புறு தலைவராக நீங்கள் அந்த வார்த்தைகளுக்குப் பொறுப்பெடுத்துக் கொள்வீர்களா. அப்படி இருந்தால் சொல்லுங்கள். அத்தனை வார்த்தைகளையும் முன்வைத்தே நான் உரையாடத் தயார்.

பாரதி புத்தகாலயப் பொறுப்பாளர்கள் முதல்கொண்டு 'ஏன் வாப்பா ஒரு ரௌடி இல்லை' என்பது போன்ற வார்த்தைகளால்தான் தங்களது மார்க்சிய அறிவை முன்வைத்தார்கள். இதில் தமுஎகச போராளிகள் சிலர் ‘வக்காலி’ என்றெல்லாம் எழுதி தமுஎகசவின் அறிவை பறைசாற்றினார்கள். அந்த வார்த்தைக்கு அர்த்தம் என்னவென்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

ஆதவன் தீட்சண்யா தனது சாதி அடையாள அரசியலைத்தான் தலித்தியம் என முன்வைப்பார். அதை அம்பேத்கரியமாக சித்தரித்து, அதனடிப்படையில் எவரின் மீதும் வசைகளையும் அவதூறுகளையும் எழுதுவார். வன்கொடுமை வழக்கு போட்டுவிடுவோம் என்கிற பயத்தில்தான் கொற்றவை கவனமாக எழுதியதாக சித்தரிக்கும் அளவுக்கு அவரது சாதிய வன்மம் தலைகாட்டியிருக்கிறது. இது கிட்டத்தட்ட வன்கொடுமை வழக்கை வைத்து மிரட்டுவோம் என்கிற மறைமுக மிரட்டலன்றி வேறென்ன. மார்க்ஸை முன்வைத்து அம்பேத்கரை விமர்சித்ததை, சாதியப் புரிதலின் அடிப்படையில் அவர் திரித்துப் பேசியதை எல்லாம் தாங்கள் அறியவில்லையா என்ன?

பிள்ளை கொடுத்தாள் விளை கதையில் ஆதவன் தீட்சண்யா போன்றவர்களின் பார்வையை முன்வைத்துத்தான் ரவிக்குமார் “தலித்துக்களுக்கு இலக்கியத்தை புரிந்துகொள்ளும் அறிவு கிடையாது, அவர்கள் சாதியைச் சொல்லி ‘பிளாக் மெயில்’ செய்யக் கூடியவர்கள்” என்பது போன்ற தவறான கருத்துக்கள் வலுப்படவே வழிவகுக்கும். அது நிச்சயமாக தலித்துகளுக்கு உதவக்கூடியதல்ல.” என்று எழுதினார். ஆனால் ஆதவன் தீட்சண்யா அதை இன்னமும் செய்து கொண்டுதான் இருக்கிறார். ரங்கநாயகம்மா நூல் விசயத்தில் கொற்றவை நோக்கி அவர் வைத்த கருத்தும் அதுதான். ஆதவன் அப்படிப் பேசியதில்லை என்று உறுதியாகக் கூறும் நீங்களே இதற்கும் விளக்கம் அளிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வளவு ஏன்? மார்க்சிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழுவில் பார்ப்பனர்கள் அதிகம் உள்ளார்கள் என்பதெல்லாம் கூட பொதுவெளியில் அவர் வைத்த விமர்சனங்கள்தான். இதனடிப்படையில் சிபிஎம் கட்சி பார்ப்பனக் கட்சி என்ற அவதூறுக்கு வலுச் சேர்க்கிறது. இதற்குக் கூட நீங்கள் எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை. தமுஎகசவில் இருப்பதால் ஒரு மார்க்சிஸ்ட் கட்சியை சாதிக் கட்சி எனச் சித்தரிக்கும் அவதூறுகளையெல்லாம் நீங்கள் ஏன் கடந்து செல்ல விளைகிறீர்கள் என்பதும் புரியவில்லை. தமுஎகசவை ஜெயமோகன் குறைச் சொல்லும்போது மட்டும் மதிப்புறு தலைவராக முன் வருகிறீர்களே ஏன்?

மேலாக ஜெயமோகனுக்கு கடிதம் எழுதியவர் தேனியில் நடந்த கூட்டத்தில் எஸ்வி.ராஜதுரையை நான் அவதூறு செய்ததாக தவறாகப் புரிந்து கொண்டுள்ளார். அப்படி அவதூறு செய்தால் ராஜதுரை சும்மா இருப்பாரா என்று அவரையே கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். கூட்டத்தில் நான் பேசியதற்கு வீடியோ ஆதாரம் எனது முகநூல் பக்கத்திலேயே உள்ளது. ராஜதுரையை மார்க்சிய அறிஞர் இல்லை எனச் சொல்வது தமுஎகசவுக்கு அவதூறாகத் தெரிந்தால் அது அவர்களது மார்க்சிய அறிவு அவ்வளவே. அவதூறுக்கும், வசைக்கும், அறிவார்ந்த விமர்சனத்துக்கும் தமுஎகசவில் இடமில்லை என்பதை அந்தக் கூட்டத்திலேயே உணர்ந்துகொண்டேன்.

இவ்வளவு ஏன், ராஜதுரை முன்னிலையில் நான் வைத்த விமர்சனத்தை அதே மேடையில் ராஜதுரை திரித்துத்தான் பேசினார். ‘ராஜதுரை மார்க்சிய அறிஞர் அல்ல’ என்ற எனது விமர்சனத்தை ‘நான் ராஜதுரையை மார்க்சிஸ்ட் அல்ல என்று சொன்னதாக தனது மனம் போக்கில் பேசினார். விளைவு ஆதவனது வகையாறாக்கள் முகநூலில் என் மீதும் கொற்றவை மீதும் வசைகளை வைத்தனர்.

மேடையிலையே என்னை மனநோயாளி என்றெல்லாம் பேசும் ஆதவன் தீட்சண்யா தமுஎகசவின் தலைவர் பொறுப்பில் இருப்பதால் அவை ஆய்வு வார்த்தைகள் என்று மதிக்கப்படுமா? இதுகுறித்து தாங்கள் இன்று வரை பேசியதே இல்லையே ஏன்? இப்பொழுதும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி போட்ட வழக்கை தமுஎகச போட்டது என்று ஜெயமோகன் எழுதியதும், ஆகா! கிடைத்தது ஒரு பாயிண்ட் என்றுதான் எழுத வந்திருக்கிறீர்களே தவிர இதுவரை ஆதவன் தீட்சண்யா வைத்த அவதூறுகளுக்கும், வசைகளுக்கும் நீங்கள் எந்த இடத்திலும் பதில் சொல்லியதில்லை. உங்கள் அமைப்பைச் சேர்ந்தவர் எது சொன்னாலும் வேதவாக்கு என்று நம்புவதெல்லாம் எதன் அடிப்படையில்?

சம்பந்தப்பட்ட தேனிக் கூட்டத்தில், நீங்கள் என்னிடம் சொன்னது ‘தம்பி இங்க உன் கருத்துக்கும் சப்போர்ட் இருக்குப்பா நீ சொன்ன கருத்தைத்தான் தி.சு.நடராசனும் சொன்னார் என்று என்னிடம் சொன்னீர்களே. அப்படியென்றால் தோழர் நடராசன் ராஜதுரை மீது வைத்தது அவதூறா? தோழர் தி.சு.நடராஜனிடம் இதைக் குறித்து நான் பேசினேன்.

எல்லாம் போக கூட்டம் முடிந்து அவர் வெளியே வந்த போது கூட ராஜதுரையிடம் நான் பல விசயங்கள் குறித்துப் பேசினேன். அவரை அவதூறு செய்திருந்தால் அத்தகைய உரையாடல் எங்களுக்குள் சாத்தியமாயிருக்காது. எனக்கு அவர் முத்தமும் கொடுத்திருக்க மாட்டார். அந்த முத்தமும் அவதூறு முத்தமாகத்தான் ஆதவனது வகையாறாக்களால் ஏசப்பட்டது.

கூட்டம் முடிந்தபின் தோழர் சீருடையானிடம் கூட பேசினேன். ராஜதுரையை எந்தவகையில் மார்க்சிய அறிஞர் என்று அழைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் செம்மலரின் ஒரு கட்டுரை படித்தேன் அதன் மூலம் அவரை மார்க்சிய அறிஞர் என்று சொன்னோம் என்றார். அதே செம்மலரில்தானே தோழர் தோதாத்ரி அவரை திரிபுவாதி என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் என்று கூற அதற்குப் பதில் அவரிடம் எதுவும் இல்லை. இதற்கெல்லாம் மேலாக கூட்டம் தொடங்கும் முன்பாகவே எனது கேள்விகளைக் குறித்து தோழர் சு.வெங்கடேசனிடம் சொன்னேன். அவரும் பேசுங்கள் என்றார். ஆனால் ராஜதுரையை லோக குருவாக நினைத்து அந்த மண்டபத்தில் ஆதவன் தீட்சண்யா செய்த ஆர்ப்பாட்டங்களை நீங்கள் பார்க்கவில்லையா என்ன? ஆதவன் மேடையில் ரங்கநாயகம்மா குறித்தும் என்னைக் குறித்தும் பேசியபோது, பேசுனதையே எதுக்குப்பா பேசிக்கிட்டு என்று நீங்கள் அங்கு எரிச்சல் அடைந்ததாக சக தோழர்களும் சொன்னார்கள்.

ஆதவன் தீட்சண்யா சாதி அடையாள அரசியலையே தனது முற்போக்கு முகமாக காட்டுபவர். அவரது எழுத்துக்களை வாசிக்கும் யாரும் இதை உணர்ந்து கொள்ள முடியும். நீங்கள் இலக்கியவாதி வேறு. “அடித்தால் திருப்பியடி என்ற ஆவேச முழக்கமெல்லாம் சுவற்றில் எழுதப்படும் வெற்று வாசகங்களாக தேய்ந்து தலித்துகள் எப்போதுதான் சுயமரியாதையோடு வாழத்தொடங்குவது என்பது பற்றி மீசையை முறுக்கி போஸ் கொடுப்பதிலேயே பொழுதைக் கழிக்கும் பிற தலித் தலைவர்கள்” என்றெல்லாம் எழுதுவது அவரது வாடிக்கை. இது ஒரு உதாரணத்துக்குத்தான். அவரது சாதி அடையாள அரசியலின் வார்த்தைகளையும் வசவுகளையும் தொகுத்தால் அதுவே தனித் தொகுப்பாக மாறும்.

தீண்டமை ஒழிப்பு முன்னணி குறித்து உங்களுக்கு தெரியாதென்றே எடுத்துக்கொண்டு இந்தக் கடிதத்தின் வாயிலாக ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். கருத்துச் சுதந்திரம் குறித்தான வரையறைகள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். எனது வார்த்தைகளைத் திரித்து என்னை மிரட்டுவதற்காக தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்கிற ஒரு அமைப்பே என் மேல் சாதி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் என்னைக் கைது செய்யுமாறு புகார் தொடுத்தது ஏன்? வழக்கிற்கான முகாந்திரமாக நான் என்ன சொல்லி உள்ளேன் அவர்கள் என்னவிதமாகத் திரித்துள்ளனர் என்பதை உங்கள் அமைப்பில் உள்ளவர்களோடு கேட்டு நீங்கள் விவாதிக்கத் தயாரா?

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வெகுஜன அமைப்பான கலை இலக்கியப் பெருமன்றம் அவ்வழக்குக்கு எதிரான தங்களது கருத்தை முன்வைத்ததையும் நீங்கள் அறியவில்லை அப்படித்தானே? உங்கள் கருத்துச் சுதந்திரம் பெருமாள் முருகனோடு முடிந்து விட்டது என்றால் அது உங்கள் கருத்துச் சுதந்திரம். எனக்கு அப்படி அல்ல.

அம்பேத்கரும் அவரது தம்மமும் நூல் வெளியான ஓரிரு நாட்களிலேயே எனக்கு முகநூலில் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. அது குறித்தான எதிர்வினையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் முன்வைத்தும் பேசியது.

மிரட்டல்களுக்கு இணையான வசைகளையும், அவதூறுகளையும் ஆதவன் தீட்சண்யா வகையறாக்கள் வைத்திருக்கிறார்கள். அதற்கும் மேலாக என் மீது, சிபிஎம்மின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி எனது கருத்தையே திரித்து வன்கொடுமை வழக்குச் சட்டத்தின் மூலமாக என்னைக் கைது செய்யத் துடிக்கிறது. கருத்துச் சுதந்திரமென்றால் என்ன என்று நீங்கள் பொதுவெளியில் மற்றவர்களுக்கு வகுப்பு எடுக்கும் முன் தாங்கள் சார்ந்திருக்கும் அமைப்புகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்.

என் மீதான தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் வழக்கை எதிர்கொள்வதற்கான அறிவை எனக்கு மார்க்சியம் வழங்கியுள்ளது. அதை எதிர்கொள்வேன். அதே சமயம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி என் மீது போட்ட வழக்கு குறித்தான உங்களது கருத்துச் சுதந்திர வியாக்கியானங்களை அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். அவ்வளவே.

சிறுகுறிப்பு;

ஆதவன் தீட்சண்யா வகையாறா என்பது தவறாக இருந்தால் எஸ்.வி.ராஜதுரை வகையறாக்கள் என்றுகூடப் புரிந்துகொள்ளலாம். ஏனெனில் எஸ்.வி.இராஜதுரை ‘ சிபிஎம் கட்சியின் தேசியச் செயலாளரான, பிரகாஷ் காரட்டுக்கு அரசியல் அரிச்சுவடி கூட தெரியாதெனச் சொல்லியவர். பாரதிய ஜனதாவுக்கும், சிபிஎம்முக்கும் வேறுபாடுகள் இல்லை எனச் சொன்னவர். அனைத்திற்கும் மேலாக அம்பேத்கருக்கு ஏபிசிடி மார்க்சியம்தான் தெரியும் என்றவர். அதற்கு இன்றுவரை சிபிஎம் எந்தப் பதிலும், விளக்கமும் கொடுக்கவில்லை. ஆனால், உங்களது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அவருக்கு தேனி மாவட்டத்தில் மார்க்சிய அறிஞர் பட்டம் கொடுத்தது. இது குறித்து சிபிஎம் கட்சியின் அன்றைய மாநிலச் செயலாளராக இருந்த தோழர் ராமகிருஷ்ணனுக்கு பகிரங்கமாக கடிதம் கூட எழுதியுள்ளேன். அதையும் அறிந்திருக்க மாட்டீர்கள். இணைப்பைத் தந்திருக்கிறேன். படித்துப் பாருங்கள்.

https://makalneya.blogspot.com/2017/10/blog-post_29.html?m=0

மேலதிக குறிப்பு:

தேனி மாவட்ட தமுஎகச குறித்து அதன் மதிப்புறு தலைவராக இருக்கும் உங்களை விட நான் கொஞ்சம் நன்கறிவேன் என்பதைப் பணிவுடன் சொல்லிக்கொள்கிறேன்.

தேனி மாவட்ட தமுஎகசவில் தலைவர்களாக, செயலாளர்களாக, உறுப்பினர்களாக இருப்பவர்கள், இருந்தவர்களில் பெரும்பாலோர் அவரவர்கள் சார்ந்த சாதிச் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். நீங்களோ முற்போக்கு என்ற பெயரில் சாதியை ஒழிப்போம் என்பதை அமைப்பின் விதியாக வைக்க, உங்களது உறுப்பினர்களோ அதை வெற்றுக்கோஷமாக புன்னகையுடன் கடந்து செல்கிறார்கள்.

தேனி மாவட்ட தமுஎகசவின் இலக்கியப் பெருந்தூண்களாக நீங்கள் கருதும் தோழர்! ம.காமுத்துரை உட்பட சாதிச் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இவ்வளவு ஏன்? தேனி மாவட்ட சிபிஎம் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் கூட சாதிச் சங்க உறுப்பினராக இருக்கிறார். இது தகவல் அல்ல. உண்மையை உள்ளபடியே இலக்கியவாதிக்குரிய மனநிலையோடு காமுத்துரைதான் தெரியப்படுத்தினார்.

சாதிச் சங்கத்தில் உறுப்பினராக இருப்பது குறித்து அவரது மனம் குற்றவுணர்ச்சி கொள்கிறது. அத்தகைய குற்றவுணர்ச்சிக்கும், சாதிச் சங்கத்தில் இருப்பது அவமானம் என்பதற்குமான அந்த குற்றவுணர்ச்சியை மிக மோசமாக வளர்த்துவிட்டது அடியேன்தான். அதை அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். சாதிச் சங்கத்தில் இருந்துகொண்டே தமுஎகசவை வளர்க்கும் நபர்களின் நீண்ட பட்டியல் வெளிவரும். அதில் உங்கள் அமைப்பின் விருதுபெற்றவர்கள் கூட இருக்கலாம்.

அடைவதற்கோர் பொன்னுலகம் இருக்கிறது’ என்ற மார்க்சின் வார்த்தைகள், தேனி மாவட்ட தமுஎகசவைப் பொறுத்தவரை ‘அடைவதற்கோர் சாதிச் சங்கம் இருக்கிறது’ என்பதாகத்தான் இருக்கிறது. மற்ற மாவட்டங்களில் எப்படியோ? நீங்களோ, தீண்டாமை ஒழிப்பு முன்னணியோ, அல்லது சிபிஎம் கட்சியோ இதை உடனடியாக கவனத்தில் கொண்டு, பேரிடர் பணியாக கருதி இதை முடித்து வையுங்கள். மத அமைப்புகளிலும் உங்களது உறுப்பினர்கள் இருக்கலாம். கவனியுங்கள்.

தமுஎகசவின் முற்போக்குப் போர் எப்பவும் முன்னணியில் நிற்க வேண்டும். அதன் இலக்கிய வளம்! தமிழகத்துக்கு அவசியம். அன்றாடத் தேவைகளில் ஒன்று. இதுநாள் வரை இலக்கியத்தில் அது ஆற்றிய பணிகளை இது போன்ற செயல்கள் பின்னுக்கு இழுத்துவிடக் கூடாது என்பதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தமுஎகச வாழ்க! வளர்க! தமுஎகச நாமம் வாழ்க.

சாதியை ஒழிப்போம், தீண்டாமையை ஒழிப்போம் என்ற கோஷங்களுக்கு, குறைந்தபட்ச முன்நிபந்தனை சாதிச் சங்கத்தில் இருந்து வெளியேறுவதே. செய்யுமா தமுஎகச? செய்யுமா தீண்டாமை ஒழிப்பு முன்னணி? செய்வீர்களா தமுஎகசவின் மதிப்புறு தலைவர் தமிழ்ச்செல்வன் அவர்களே...செய்வீர்களா!

பிரியத்திற்குரிய தம்பியும் தோழனுமாகிய
வசுமித்ர

 

 

Oct 23, 2020

மனு தர்மம் என்பது ஆபாசம்!

மனு தர்மம் எங்கே நடைமுறையில் இருக்கிறது? 1000, 2000 வருடங்களுக்கு முன்பாக எவனோ ஒருவன் எழுதிய சட்டத்தைப் பற்றி இப்போது பேச என்ன இருக்கிறது? அது சட்டமாக உள்ளதா? அதை நாம் பின்பற்றுகிறோமா? நாம் இப்போது பின்பற்றுவது இந்திய அரசமைப்புச் சட்டம் என்று சுமந்த் ராமன், ரங்கராஜ் பாண்டே போன்ற ‘பார்ப்பன ஊதுகுழல்கள் கேட்கின்றனர்.  ‘சாமர்த்தியமாக கேள்வி எழுப்புவதாக நினைக்கின்றனர்…

மனுதர்மத்தில் கூறப்பட்டுள்ள ஒவ்வொன்றும் இந்தியர்களின் மண்டையில் ஊறிப் போய் இருப்பதால் தான் பெண்களும், தலித்துகளும் ‘கீழ்நிலையில்’ தள்ளப்பட்டு, அவமதிப்புகளுக்கும், வன்கொடுமைக்கும் உள்ளாகின்றனர்.  

பார்ப்பனர்கள் வீட்டில் இன்றைக்கும் பெண் உடலை தீட்டு என்று சொல்லி 3 நாள் தள்ளி வைக்கும் பழக்கம் இருக்கிறது. அது அப்படியே மற்ற சாதி இந்துக்களையும் தொற்றிக் கொண்டது. வேலைக்குப் போகும் பெண் வேசி, பெண் என்பவள் சிரித்தே மயக்குவாள் என்பது தொடங்கி பெண் பற்றிய ஒவ்வொரு எண்ணத்திலும் மனு போதனை இன்னமும் ஆழ வேறூன்றி இருக்கிறது.

மனு தர்மம் இன்றைக்கு எங்கே இருக்கிறது என்கிறார்களே? சாதி இன்றைக்கு இல்லையா? சாதி மாறி திருமணம் செய்வது குறித்து மனுவில் என்ன உள்ளது? சூத்திர சாதி ஆண் பெண் குறித்து என்ன சொல்கிறது? பெண்ணுக்கான ஒழுக்க விதிகளாக என்ன சொல்கிறது? குழந்தை பிறக்காத பெண்ணுக்கு எப்படிப்பட்ட ‘அற்புதமான’ தீர்வைச் சொல்கிறது?

“Devra…sapinda………” – 9/58. On failure to produce offspring with her husband, she may obtain offspring by cohabitation with her brother-in-law [devar] or with some other relative [sapinda] on her in-law’s side.

இதெல்லாம் ஆபாசம் இல்லையா? கலாச்சார சீர்கேடு இல்லையா?

அரசமைப்புச் சட்டத்தைத் தானே பின்பற்றுகிறோம் என்கிறார்களே? அரசமைப்புச் சட்டம் என்பது புதிதாக மாறிய சமூக நலனுக்காக உருவானதொரு ‘முற்போக்கு’ வடிவமைப்பு அவ்வளவுதான். அது காலத்தின் தேவை! பழைய நிலவுடைமைச் சட்டங்களை அப்படியே பயன்படுத்த இயலாது என்கிற முதலாளித்துவ சமூக அதிகாரித்தின் தேவைக்காக அது ‘ஜனநயாகமாக’ வடிவமைக்கப்பட்டது.  ஆனால் இந்திய இந்து மத நூல்களின் போதனை தான் இந்திய இந்து பண்பாடு. ஒவ்வொரு நாட்டிற்கும், அந்த நாட்டின் ஆளும் மதநூல்களே ‘வேதம்’. இதை யாரும் மறுக்க இயலாது. எல்லா மத நூல்களும் பெண்களை கேவலமாகத் தான் சித்தரிக்கின்றன.

இந்தியாவில் இந்து மதம் ஆளும் மதமாக இருக்கிறது. அதன் பிற்போக்குத்தனத்தால் நாம் இந்து மத நூல்களை எதிர்க்க வேண்டியுள்ளது. அரசியல் பிழைப்புவாதிகளுக்கு அது பதட்டத்தை அளிக்கிறது. உடனே முட்டாள்தனமாக மடக்கும் கேள்விகளைக் கேட்கின்றனர்.

நிலவும் அரசமைப்புச் சட்டத்தை அப்படியே பின்பற்றுகிறீர்களா என்ன? கல்விக் கொள்கை தொடங்கி தொழிலாளர் சட்டம் வரை அனைத்துமே ஆளும் வர்க்கத் தேவைக்காக மாற்றியமைக்கப்படுகிறதே. அப்படியென்றால் எந்த அரசமைப்புச் சட்டம் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள்?

2000 வருடங்களுக்கு முன்புள்ளதை இப்போது யார் பின்பற்றுகிறார்கள் என்கிறீர்களே! அப்படியென்றால் முன்னர் இருந்தானா இல்லையா என்றே தெரியாத இராமன் என்பவனின் ‘நாமத்தை’ ஏன் உச்சரித்துக் கொண்டே இருக்கிறீர்கள்?

இராமனின் இராஜ்ஜியத்தை அமைப்போம் என்று ஏன் கொக்கறிக்கிறீர்கள்?

இராமன் பிறந்த இடம் என்று இந்து வெறி பிடித்த அரசியலில் ஏன் ஈடுபடுகிறீர்கள்? ஏன் பாபர் மசூதியை இடித்தீர்கள்?

ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி ஏன் கொலை வெறியாட்டம் ஆடுகிறீர்கள்?

கட்டிய மனைவியை சந்தேகித்து தீயில் இறங்கச் செய்த இராம இராஜ்ஜியம் எந்த பெண்ணுக்குத் தேவை?

எப்போதோ புனையப்பட்ட இராமாயணம், மகாபாரதத்தை ஏன் இன்னும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறீர்கள்?

ஒரு கொள்ளை நோயால் ஊரே துன்புற்றுக் கிடக்க, நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் நடை பயணமாக சொந்த ஊருக்கு செல்ல அல்லாடி மடிய, நீங்கள் மகாபாரதம் கண்டு களிக்கும் செய்திகளைப் போட்டுக் கொண்டிருந்தீர்களே… வெட்கமாக இல்லை?

மனுவாதம் எங்கே இருக்கிறது என்று பாண்டே கேட்கையில், கேள்வி கேட்பவரால் ஏன் பதில் சொல்ல இயலவில்லை?

உங்களை போன்ற, கல்யான் போன்ற பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் ஜால்ராக்களிடம் இன்னும் மனுவாதம் உயிர்ப்புடன் உள்ளதே என்று எதிர் கேள்வி கேட்க இயலாதா? சாதி வெறி பிடித்து, பிராமண வெறி பிடித்து, இந்து வெறி பிடித்து இருக்கும் ஒவ்வொருவரிடமும் மனு தர்மம் தான் உள்ளது என்று சொல்ல இயலாதா?

மத நூலில் உள்ளதன் அடிப்படையில் தோழர் திருமாவளவன் பேசியதைத் திரித்து இந்து பெண்களை ஆபாசமாகப் பேசினார் என்று பொய் பரப்புரை செய்வதிலேயே தெரிகிறது இந்து சனாதன தர்மம் எப்படி பொய் புரட்டானது என்பது.

இந்து மத நூல்கள் பெண்களை ஆபாசமாகச் சித்தரிக்கிறது என்றால் அதனை மறுக்க, ஒழிக்க நடவடிக்கை எடுப்பதை விடுத்து வழக்கு போடுவது ஏன்? முற்போக்காளர்களிடம் அவ்வளவு அச்சமா?

திருமாவளவனை தொடர்ந்து ஆபாசமாகப் பேசி வரும் கல்யாண் மீதுதான் வழக்கு தொடுக்க வேண்டும்.

குஷ்பு போன்ற பா.ஜ.க பெண்கள் சமூக சேவை செய்ய அக்கட்சியில் இணைந்ததாகச் சொல்கிறீர்களே… அது எந்த சமூகத்திற்கான சேவை மேடம்? பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளின் போது ‘இந்து வெறியர்கள்’ எப்படி நடந்துகொள்கிறார்கள்.. ஒரு குழந்தை வல்லுறவு செய்யப்பட்டதைக் கூட சாதி அரசியல் என்று சொல்லி ‘போராட்டம்’ நடத்துகிறார்களே.. அத்தகையதொரு கட்சியில் சேர்ந்ததும் இல்லாமல் வக்காலத்து வேறு வாங்குகிறீர்களே..

நான் காங்கிரசு மேடையில் மனசாட்சி இல்லாமல் பேசினேன் என்கிறீர்களே… இப்போது மட்டும் மனசாட்சி வந்துவிட்டதா?

உண்மையில் மனசாட்சி உள்ள எவரும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி போன்ற அமைப்புகளில் சேர்வார்களா?

நீங்கள் ஒரு பெண், அதோடு உங்கள் மதத்தினருக்கு, தலித்துகளுக்கு இந்தியாவில் நிலை என்ன? எனவே மனசாட்சி குறித்துப் பேச உங்களுக்குத் தகுதி இல்லை…

தோழர் திருமாவளவன் மீது போடப்பட்டிருக்கும் வழக்கு பொய் வழக்கு என்பதற்கு கீழே ஆதாரங்கள் உள்ளன. நீங்கள் எல்லாம் ஆங்கிலத்தில் தானே படிப்பீர்கள்… எனவே ஆங்கிலத்திலேயே கொடுக்கிறேன்…

எனவே தோழர் திருமா மீது போடப்பட்டிருக்கும் பொய் வழக்கைத் திரும்பப் பெறச் சொல்லி முதலில் மனசாட்சியுடன் குரல் கொடுங்கள்..

ஆதாரம்: http://nirmukta.com/2011/08/27/the-status-of-women-as-depicted-by-manu-in-the-manusmriti/ 

#RejectManu #I_Stand_with_Thirumavalavan

Oct 11, 2020

ஆணாதிக்க சமூகம் ஆண்களுக்கும் கேடானது! எப்படி?

 


உடலியல் அறிவியலை மறுத்து ஆணுக்கான பாலின அடையாளத்தை ஆதிக்க கருத்தியலுக்காக, உழைப்புச் சுரண்டலுக்காக உருவாக்கியது. அதனால் ஆண்மையை நிரூபி, ஆண்மையுடன் இரு, ஆண்மையுடன் பொருளீட்டு, ஆண்மையுடன் போர் செய், ஆண்மையுடன் நடந்துகொள் என்கிற கட்டளைகள் மூலம் ஆண்களைப் பாலியல்ரீதியாக துன்புறுத்துகிறது.

பொருள் ஈட்டிப் பராமரிக்கும் குடும்பச் சுமையை முழுமுற்றாக ஆணின் தலையில் ஏற்றுகிறது. பெண்களைப் பாதுகாக்க முடியாத சமூகப் பொறுப்பைத் தட்டிக் கழித்து பெண்களைப் பாதுகாக்க இயலாதவன் ஆண் மகன் இல்லை என்கிறது. செல்வத்திற்காகவும், வளத்திற்காகவும் தனி நபர்கள் சிலரின் வேட்கைக்கான போரில் வீரத்தின் பெயரால், நாட்டுப் பற்றின் பெயரால் ஆண்களை இராணுவப் பணி என்று பலியிடுகிறது. (தற்போது பெண்களையும் தான்).

விருப்பம் இருக்கிறதோ இல்லையோ திருமணம் செய்துகொள்ளச் சொல்கிறது. குழந்தைப் பெற்றுக்கொள்ளச் சொல்கிறது. குழந்தைப் பேரின்மையை பெருத்த அவமானமாக பறைசாற்றுகிறது. (பெண்களை மலடி, ஆண்களை மலடன்). அதன் மூலம் தம்பதிகளை fertility centres நோக்கி ஒடச் செய்து, தனி நபர்கள் செல்வத்தில் கொழிக்க வழி செய்கிறது. இன்னொரு பக்கம் பெண் உடலை பரிசோதனைக் கூடமாகவும் ஆக்குகிறது.

ஆணாதிக்க சமூகமானது - குழந்தையை ‘சிறந்த’ முறையில் வளர்ப்பவன் என்றால் இருப்பதிலேயே ‘உயர்வான’ பள்ளியில் சேர்க்க வேண்டும், சாத்தியமற்ற வசதிகளைச் செய்து தர வேண்டும், சொத்து சேர்க்க வேண்டும் என்கிற அந்தஸ்துசார் அழுத்தத்தை குடும்ப அமைப்பின் வாயிலாக ஏற்படுத்துகிறது.

சிறந்த – உயர்ந்த என்கிற வார்த்தை ஜாலங்கள் தனி நபர்கள் சிலர் (பெரு முதலாளிகள்) சொத்து சேர்பதற்கான ஏற்பாடுகளே. குடும்பம் வாயிலாக அதை நடைமுறைப்படுத்த தோன்றிய அமைப்பே தந்தை தலைமையிலான குடும்ப அமைப்பு.

உ.ம் – அடிப்படை உரிமையான கல்வியை தனியார்மயமாக்கி சாமானியருக்கு கல்வியை எட்டாக் கனியாக்கி வைத்திருக்கிறது. அந்தக் கல்வியும் கூட உழைக்கும் கூலிகளை உருவாக்கும் ஒரு பட்டறை மட்டுமே. அதைக் கூட இலவசமாக வழங்க மறுத்து செல்வந்திர்களின் நலனுக்காக ’தரம்’ என்கிற பெயரில் தனியார்மயமாக்கி வைத்துள்ளது.

தரத்தை’ உறுதி செய்ய முடியாத அரசுகள் நமக்கெதற்கு? யாரோ ஒருவர் செல்வம் சேர்க்க நாம் உழைத்துக் கொட்ட வேண்டுமா என்கிற கேள்விகள் ஆணாதிக்கவாதிகளுக்கு ஏற்படுவதில்லை. அவர்கள் கவலையெல்லாம் பெண்ணின் உடை, நடத்தை, #கலாச்சார சீர்கேடு அவ்வளவே!

சமூக சீர்கேடு, பொருளாதார சீர்கேடு, சாதியச் சீர்கேடு, இராணுவத்தின் அராஜகம் குறித்தெல்லாம் கவலையே இல்லை! குறிப்பாக பெண்களை வல்லுறவு செய்து அராஜகம் செய்கிறார்களே – அதற்கும் பெண்கள் உடைதான் காரணமா?

 


Sep 15, 2020

நான் அறிந்த சூர்யா!

 




1993களில் சரவணனாக நான் பார்த்த இளைஞன் நடிகர் சூர்யாவாக பரிணமித்து இன்றைக்கு சமூக நீதிக்காக குரல் கொடுக்கும் கலகக் குரலாக வளர்ந்து நிற்பது கண்டு வியப்பும் மகிழ்ச்சியும் அடைகிறேன். காலம் காலமாக அமைப்புகளில் இயங்கும் நபர்கள் அதிகாரத்தைக் கேள்வி கேட்பது நடந்தாலும், உயிர் தியாகங்கள் செய்தாலும் நடிகர் (அல்லது பிரபலம்) ஒருவர் கேட்கும் கேள்வி அதிகார மையங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. இன்னொரு பக்கம் ஆட்சியைப் பிடிக்க அலைபாயும் சில கட்சிகளின் ‘ஆதரவாளர்களுக்கு’ பொறாமையை ஏற்படுத்துகிறது. இது மிகவும் சிறுபிள்ளைத்தனமான மனநிலை.

உண்மையான போராளிகளுக்கு ‘லைம் லைட்டை’ யார் அள்ளிக் கொண்டு போகிறார்கள் என்கிற கவலை இல்லை. அவர்களுக்குத் தேவை அதிகாரத்தை எதிர்க்கும் தங்களின் போராட்டங்களுக்கு வலுவான குரல்களும், ஆதரவுகளுமே. அந்த வகையில் சூர்யா (ஜோதிகா, கார்த்தி உள்ளிட்டோர்) போன்றோரின் குரல் மிகவும் முக்கியமானது. பலமானதும் கூட. ஏனெனில் அது பெருவாரியான மக்களிடையே நல்ல / சரியான சிந்தனையை / அரசியலைக் கொண்டு சேர்க்க உதவுகிறது. அதிகார மையங்களுக்கு அதுதான் பீதியைக் கிளப்புகிறது. சூர்யா தாக்குதலுக்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாகிறார். கூடுதலாக அவரின் உள்நோக்கம், வெளி நோக்கம், ஃபவுண்டேஷன், சாதி எல்லாம் தோண்டி எடுக்கப்படுகிறது.

சூர்யாவாக இருந்தாலும், யாராக இருந்தாலும் அவர்களின் தவறான செயல்பாடுகள் ஆதாரபூர்வமாக வெளியாகாதவரை அவர்களின் பேச்சும், செயல்பாடும் மட்டுமே கவனத்திற்குரியது. தவறு தெரியவரும்போது அதுகுறித்து கேள்வி எழுப்பிக்கொள்ளலாம். அதுவரை அவர் கேட்கும் கேள்விகளுக்கு அதிகார மையங்கள் பதில் சொல்லட்டும்.

நான் அறிந்த சூர்யா!

லயோலா கல்லூரியில் நான் விஸ்காம் படிக்கையில் அவர் பி.காம் படித்தார். (1992-1995). மிகவும் ‘சாது’. எனக்கு அவர் நண்பர் எல்லாம் இல்லை. சிவக்குமார் மகன் என்கிற ஒரு பிரபல்யத்தால் கவனிப்போம். அவ்வளவே.

பட்டப்படிப்பு முடிந்து ஒரு நண்பர்கள் குழுவோடு தொலைக்காட்சி தொடர் ஒன்றில் வின்சண்ட் செல்வா அவர்களிடம் உதவி இயக்குனராக நான் பணியாற்றிய போது நண்பர்களைக் காண அவ்வப்போது சரவணன் அங்கே வருவார். எதிரில் பார்த்தால் “ஹாய் நிம்மி” என்று சிரித்துவிட்டுப் போவார். பழக்கம் இல்லை எனிலும் அறிமுகம் இருப்பதற்கே அந்த மரியாதையைத் தருவார். சில வருடங்கள் கழித்து 2009இல் ஒரு பொது இடத்தில் பார்த்தபோதும் அதே “ஹாய் நிம்மி எப்படி இருக்க” என்னும் அன்பான விசாரிப்பு மாறவில்லை.

1999இல் ஓவியர் ஒருவருடன் எனக்கு திருமணம் முடிந்தது. 2000இல் என் மகள் பிறந்தாள். அவளும் ஓவியக் கலையில் நாட்டம் கொண்டு குழந்தை பருவத்திலேயே கண்காட்சிகள் வைப்பது, ஓவியப் போட்டிகளில் பங்கெடுப்பது என்றிருந்தாள். 2006ஆம் ஆண்டு குழந்தைகள் தினத்தன்று அவளுடைய முதல் தனி ஓவியக் கண்காட்சிக்கு திட்டமிட்டோம். அக்‌ஷரா ஹாசன், சுப்புலட்சுமி ஆகியோரை கண்காட்சியைத் தொடங்கி வைக்க அழைத்திருந்தோம். ஓவியம் தொடர்பாக வருணாவின் தந்தை நடிகர் சூர்யாவை, அவரது தந்தையை அவ்வப்போது சந்திப்பது உண்டு. வருணாவின் ஓவியக் கண்காட்சியில் முடிந்தால் கலந்து கொண்டு வாழ்த்துமாறு சிறப்பு அழைப்பு விடுத்திருந்தோம். நிகழ்ச்சி தொடங்கியபோதும் கூட அவர் வருவாரா என்னும் ஐயமே எனக்கு இருந்தது .
காரணமும் இருக்கிறது. ஏனென்றால் உடன் படித்த, நல்ல பழக்கம் உள்ள ‘பிரபல நடிகர்’ ஒருவரே நம்மை யாரோ போல் பார்த்து தவிர்க்க நினைத்த சூழலில், பழக்கமே இல்லாத ஒருவர் இத்தனை பிரபலமாக இருக்கிறாரே வருவாரா என்னும் சந்தேகம்!

சூர்யா விதிவிலக்கானவர். மரியாதை தெரிந்தவர்! நிகழ்ச்சி தொடங்கும் முன் சரியாக வந்து நின்றார். குழந்தையின் திறன் கண்டு அவ்வளவு மகிழ்ச்சி அவர் முகத்தில். அக்‌ஷரா, சுப்பு, யுவன் சங்கர் ராஜா, பவதாரிணி யுகி சேது, கௌதமி என்று அனைவரும் அப்படித்தான் இருந்தார்கள்.

வருணா எல்லோர் முன்பாகவும் நேரலையாக ஓவியம் வரைந்து காட்டினாள். சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் வருணாவை வாழ்த்தி ஊக்குவித்தார்கள். கூடுதலாக சூர்யா அதை அருகில் அமர்ந்து ரசித்து அந்த கோடுகளுக்குப் பின் இருக்கும் குழந்தையின் மனதை கேட்டு தெரிந்து கொண்டார். பின்னர் கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் ஓவியங்களைப் பார்வையிட்டவர் திடீரென ஒரு ஓவியத் தொகுப்பைக் காட்டி “இதை எனக்குக் கொடுப்பியா வருணா” என்க என் மகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. பாக்கெட்டில் இருந்து 10,000 எடுத்துக் கொடுத்து ”இந்த ஓவியம் எனக்கு தான் சரியா” என்று வாங்கிக் கொண்டு “இந்த பணத்துல சாக்லெட்ஸ் வாங்கி சாப்பிடாம ஆர்ட் மெட்டீரியல்ஸ் வாங்கி இன்னும் நிறைய ஓவியம் வரையனும்” என்று கொடுத்துவிட்டு, ஒவ்வொரு ஓவியத்தைப் பற்றியும் அவளிடம் கேள்வி எழுப்பினார். வருணாவை எங்கே பார்த்தாலும் “என்னா ஆரிட்ஸ்டு” என்று மாறாத அன்போடு அழைப்பவர். கார்த்தியும் அப்படியே என்பதை வருணா கூற நான் கேட்டுள்ளேன்.

நிகழ்ச்சி தொடர்பான பேட்டியில் அவர் கூறியது “நாம் குழந்தைகளின் திறன்களை ஊக்குவிக்க வேண்டும்” (We have to tap the potential of the kids) என்றார். குழந்தைகள் உலகோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்வது சூர்யாவின் இயல்புகளில் ஒன்று என்பதை நான் அன்று கண்டேன். பருவத்தே பயிர் செய் என்னும் வாக்குக்கு ஏற்ப குழந்தைகளின் திறனை இளம் வயதிலேயே கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும் என்கிற எண்ணம்தான் குழந்தைகளுக்கு கல்வி வழங்கும் சேவை நோக்கி அவரை வழிநடத்தியிருக்க வேண்டும். (எனக்கு அவரோடு பழக்கம் இல்லை! 2010க்குப் பிறகு என் வாழ்க்கைப் பாதையை நான் மாற்றிக் கொண்டேன்!)

சூர்யா, கார்த்தியின் படங்களில் பெண்கள் சித்தரிப்பு தொடர்பாக நான் அவர்களை கடுமையாக விமர்சித்துள்ளேன். குறிப்பாக ஒரு விளம்பரம் தொடர்பாக நான் தொடர் பிரச்சாரமும் மேற்கொண்டேன். சூர்யா சமூக நீதி தொடர்பாகப் பேசுகையில் கூட இதில் கவனம் செலுத்தும் நீங்கள் சினிமாவில் பெண்களைப் பயன்படுத்தும் விதத்திலும் கவனம் செலுத்துங்கள் என்று பதிவு செய்துள்ளேன். சினிமாவில் பெண்கள் சித்தரிப்பு ஆணாதிக்க மனநிலையில் உள்ளதற்கு நாம் அவர்களை மட்டும் பொறுப்பாக்க இயலாது. எனினும், விமர்சனங்கள் மூலம் கவனத்தை ஈர்க்க முடியும். உயர்நிலையில் கதாநாயக அதிகாரம் இருப்பதால் உங்களால் முடியாதா என்கிற கேள்வியை எழுப்பி ஏதோ ஒரு மாற்றத்தை நிகழ்த்த முடியும் என்பதுதான் அந்த விமர்சனத்தின் நோக்கம். அதேவேளை தனிநபர்களாக அவர்களின் சமூக பங்களிப்புகளில் நியாயம் இருப்பின் அதனை வரவேற்கும் முதிர்ச்சியும், குறிவைத்துத் தாக்கப்பட்டால் ஆதரவு தெரிவிக்க வேண்டிய அவசியத்தையும் உணர்ந்தே இந்த பதிவை எழுதுகிறேன்.

மனிதர்களின் சிந்தனைகளும், செயல்பாடுகளும் காலப் போக்கில் மாறக் கூடியவை. வளர்ச்சி அடையக் கூடியவை. சூர்யாவின் வளர்ச்சியை திரைத்துறையிலும் சரி, சமூகத் தளத்திலும் சரி பாசாங்கற்ற உண்மையான பரிணாம வளர்ச்சியாகவே நான் காண்கிறேன்.

திரைத்துறை பிரபலங்கள் பெரும்பாலும் ஆளும் கட்சி “ஜால்ராக்களாக’ இருக்கையில் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க துணியும் பிரகாஷ் ராஜ் சூர்யா போன்ற “மைய நீரோட்ட பிரபல’ நடிகர்களின் குரல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவர்களின் நற்செயல்களை வரவேற்போம்… முரண்பாடுகள் தெரியுமெனில் விமர்சிப்போம்…. ஆனால் அரசியல் உள்நோக்கத்தோடு “வெறுப்பரசியல்’ செய்வதும், அவதூறு செய்வதும் மிகவும் அற்பத்தனமானது. அரசியல் முதிர்ச்சியுமன்று.

சூர்யாவின் அகரம் ஃபவுண்டேஷனில் படித்த குழந்தைகளின் நாடகத்தை ஒருமுறை காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பிரபல நடிகர்கள் தங்கள் ‘சேவைகளை’ ஏதேதோ வணிகத் துறைக்கும், சர்வதேச வலைப்பின்னல்களுக்கும் வழங்கிக் கொண்டிருக்க சூர்யா குழந்தைகளுக்குக் கல்வியைக் கொடுக்க நினைப்பதும், தொடர்ந்து அது தொடர்பாக பேசுவதும் வரவேற்கத்தக்கது. குறிப்பாக பா.ஜ.கவின் புதிய கல்விக் கொகை தொடர்பாக சூர்யா எழுப்பிய கேள்விகளும், விடுத்த அறைகூவலும் போற்றத்தக்கவை.

என் சமகாலத்தில் என்னுடன் படித்தவர்கள் ‘டாப் ஹீரோக்களாக’, திரைக் கலைஞர்களாக இருந்தும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று நான் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். அவர்களுக்கு மத்தியில் சூர்யா நிச்சயமாக ஒரு நிஜமான கதாநாயகனாகவே உயர்ந்து நிற்கிறார்.

Suriya Sivakumar சவால்களும், விமர்சனங்களும் ஒன்றும் உங்களுக்குப் புதிதல்ல. அதுதான் உங்களை வளர்த்துள்ளது… இனியும் வளர்க்கும்… தொடருங்கள் உங்கள் ஆயுத எழுத்தை! ஓங்கி ஒலிக்கட்டும் அநீதிக்கு எதிரான உங்கள் குரல்! வாழ்த்துகள் 😊

(http://artistvarunastudio.blogspot.com/…/…/my-2nd-show.html…

)

#TNStandWithSuriya

 


Sep 7, 2020

இந்த கம்யூனிஸ்டுங்க இன்னா பேசுறாங்கன்னே பிரில… மே!

 


ஆ.. ஊன்னா இந்த கம்யூனிஸ்டுங்க ‘இயக்கவியல் பொருள்முதல்வாதம்’னு பேசி மக்களை பயமுறுத்துறோமாம்! உழைக்கும் மக்களுக்குப் புரியுற மொழில பேசுறதில்லையாம்! பேசாம தான் இத்தனை புரட்சியும், இத்தனை உரிமைப் போராட்டங்களும், வெற்றியும் கிடைச்சுதா?

இதோ பாரு கொமாரு – புரியினும்னு நினைக்கிறவனுக்கு புரியுறதும்… புரிய வேணாம்னு நினைக்கிறவனுக்குப் புரியாமப் போறதும்… அரசியல்ல ரொம்ப சாதாரணமப்பா..

சரி! இயக்கவியல் பொருள்முதல்வாதம்னா இன்னா?

பொருள்ங்குறது சும்மா நிக்காது.. இயங்கிக்கிட்டே இருக்கு? இது பிரியுதா இல்லையா?

அதாவது – பொருள்னா என்ன – அது இருக்குதுன்னு சொல்லக்கூடிய தன்மைல - “உயிர்”னு வச்சுப்போம் இருக்கிற ஒண்ணு! அது சும்மா துண்டு துண்டு தூங்காம எப்பப் பார்த்தாலும் வேலை செஞ்சிக்கினே கீது!

அப்படி வேலை செய்றப்போ… அதாவது சுத்திக்கினே கீறப்போ, அசைஞ்சுக்கின்னே கீறப்போ – அதுக்குள்ள ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், சண்டை, “சேஞ்சு” எல்லாம் நடக்கும் – அதேமாதிரி வெளிலருந்து ஏதோ ஒண்ணு அதுகூட கலக்குறதும், அதனால அதுக்குள்ள லவ்வோ – ஜவ்வோ வரும்… அப்ப அந்த பொருளு தன்னோட “மாடலை” வுட்டுட்டு இன்னொரு “மாடலா” மாற வேண்டிய நிலைமை வரும்… ரூட்டு கிளியரா இருந்துச்சுன்னா சேர்ந்து இருக்கிறதும்… முட்டிக்கினா… புட்டுக்குறதுமா போயி… அதுலருந்து இன்னொரு டிசைன் உருவாகும்…

 மனுஷப்பய சமூகமும் அப்படித்தான் உருளுதுன்னு சொல்றதுதான் இயக்கவியல் பொருள்முதல்வாதம்!

 அதாவது கண்ணா! மனுஷப்பய அவனுக்குத் தேவையான “வேலைல” ஈடுபடுறான்ல… இதுல உனக்கு டவுட்டு கீதா… வேலை செஞ்சாதானப்பா வவுத்துக்கு சோறு.. தூங்க வூடு.. போட்டுக்க துணி இப்படில்லாம் தயார் பண்ண முடியும்.. (வேலைன்னா – உழைப்புன்னு சொல்லப்படுற அர்த்ததுல இல்ல.. சும்மா இல்லாம இயங்குனாதான் வாய்ல தோசை… அந்த மாதிரி)

 அப்படி எல்லாம் சேர்ந்து பொருள் தயாரிக்கிறப்ப… கூட்டாஞ் சோறுகிண்டைலன்னு வச்சுக்குவோம்- இது…. “இப்படி இருக்குது”, அது “அப்படி இருக்கிதுன்னு” பட்டி டிங்கரிங் பார்த்துட்டே இருப்பானுங்க… மனுஷப்பயலும் இயற்கைல ஒரு பொருள் தான அவனோட சிந்தனையும், இயக்குமும் கூட மத்த பொருள்மாதிரிதான் இருக்குன்னு மார்க்ஸ் எங்கல்ஸு லைட்டு அடிச்சு காட்டுனாங்க (அதுக்கு முன்னாடி ஹெகல்லாம் சொல்லிருந்தாலும் அதை சோக்கா சைன்ஸா நெத்தில அடிச்சா மாதிரி சொன்னாங்க)..

 இப்ப இந்த மனுஷப்பயலுக பட்டி டிங்கரிங் பார்க்குறதைத்தான் – ஒழுங்கமைச்சுக்கிறதைத்தான்– நாம சமூகம், பண்பாடு, அரசியல், அரசு, சட்டம் திட்டம்ன்னு சொல்றோம். ஆனா இதுக்கெல்லாம் பேஸ்மெண்ட் இன்னாது – அவனவன் வாழுறதுக்கு தேவைப்படுற “ஐடம்”களை தயாரிக்கிற அந்த வேலை… அந்த தேவை.. மனுஷனோட பொருள் தேவை தான் பஞ்சாயத்து தலைவரு/தலைவி!

 அப்ப அவனுங்க இன்னா பண்றானுங்கன்னா வேலைய சுளுவா முடிக்க… எதையாச்சும் கண்டுபுடிச்சிக்கினே இருக்கானுங்க… இருக்காளுங்க… அது இன்னா பண்ணுது வேலை செய்ற “மெதட்ட” சுளூவா ஆக்கி… கம்மியா வேலை செஞ்சாலும் முன்னாடி விட அதிகமா பொருள் கொடுக்குது… அப்புறம் வேற வேற தேவைக்காக ஒரு பய இன்னொரு பயனோட வூட்டாண்ட போயி சண்டை வலிக்க வேண்டியிருந்துச்சு…

 சண்டை வலிச்சு ஜெயிச்சவன் தோத்தவனை அடிமைப் படுத்துறான்… அவனை வச்சு வேலை வாங்குறான்… தேவைக்கு அதிகமா “டூல்ஸ்”னாலையும்… அடிமைங்க “உழைப்புனாலையும்” பொருள் கிடைக்குது… அதைத்தானய்யா உபரின்னு சொல்றோம்… அப்ப சொத்துன்னு ஒரு பூதம் மண்ணுக்குள்ளருந்து பூன்னு வந்துச்சு பாருங்க… அப்ப புடிச்சுது மனுஷ சமூகத்துக்கு சனியன்…

அதுவரைக்கும் ஒண்ணா வேலை செஞ்சு ஒண்ணா பிரிச்சு துண்ண மனுஷங்கள்ள கொஞ்சம் பேரு… உழைக்காம வாழுற ருசி கண்ட பூனைங்களா மாறுனாங்க..

 நான் ஆம்பளை.. நீ பொம்பள! நான் மேல நீ கீழ! நான் உசத்தி… நீ மட்டம்னு” ஒண்ணொன்னா அவுத்துவுட்டானுங்க…

 இங்க ஆரம்பிச்சுதுய்யா டிஷ்யூம் டிஷ்யூம் – அதைத்தேன் முரண்பாடுன்னு சொல்றோம்! பொருளுக்குள்ள இருக்கிற இயக்கவியலை இங்க கொண்டு வந்து உக்காரவச்சாங்க மார்க்ஸும் – எங்கல்ஸும்!

 அந்த காலத்துலருந்து இன்னைக்கு வரைக்கும் என்ன நடந்துச்சுன்னு “லிஸ்டு” போட்டு சொல்றாகல்ல அதைத்தேன் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் – வரலாற்று வளர்ச்சின்னு சொல்றோம்!

இப்ப விளங்குதாங்க!

 நியாயமா இருந்த ஒரு சமூகம் – வேலை – மனுஷப்பய உறவு இதெல்லாம் அநியாயமா மாறுச்சு… எதனால? ஒரு கூட்டம் பொருள் தயாரிக்கத் தேவையான “சாமானையெல்லாம்” தன்னோட கட்டுப்பாட்டுல வச்சுக்கினு மத்தவனை உழைக்க வச்சு பிழைச்சானுங்க… உழைப்பாளிங்களுக்கு அப்பல்லாம் கூலி கிடையாது… உயிரோட இருக்க கொஞ்சூண்டு கஞ்சி ஊத்துவானுங்க… இது ஆண்டான் அடிமை சமூகம்… அப்புறம் டிஷ்யூம் டிஷ்யூம் போட்டு மனுஷன் அடுத்த சமூகமா முன்னேறுனான்… அது நிலப்பிரபுத்துவ சமூகம்… பண்ணையார் விவசாயக் கூலி சமூகனு சிம்பிளா சொல்லிக்கலாம்!

 டிஷ்யூம் டிஷ்யூம் நடக்குறதை யாரும் தடுக்க முடியாது.. ஏன்னா முரண்பாடு இருந்தா மோதல் இருக்கத்தேன் செய்யுங்குது மார்க்சியம்… (ஜெய் இயக்கவியல் பொருள்முதல்வாதம்)

 இப்ப பண்ணையாருங்க அட்டகாசம் பண்ண பண்ண மக்களுக்கு கோவம் வருது… முரண்பாடு முத்துனதும்.. அடுத்த சமூகமா முதலாளித்துவ சமூகம் வருது… டிஷ்யூம் டிஷ்யூம் நடக்குறது ஒருபக்கம்னா… மனுஷன் தன்னோட தேவைக்காக – அதான் வேலைய சுளுவா முடிக்கிறதுக்காக ‘டூல்ஸ்.. மெஷினு” இதெல்லாம் வேற கண்டுபுடிச்சிக்கினே கீறான்ல… அது இன்னா பண்ணுதுன்னா – பொருள் தயாரிக்கிற “மாடலை” மாத்திக்கினே கீது! அது மாற மாற மனுஷப்பய உறவும் மாறுது… பண்பாடு மாறுது… அரசமைப்பு மாறுது எல்லாம் மாறுது… ஆனா எல்லாம் இட்லி… தோசைன்னு டிசைன்ல மாறுச்சே தவிர “மாவு என்னமோ ஒண்ணுதேன் தம்பி”ங்குற கதையா இருக்குது… இதையும் நம்ம மார்க்ஸப்பா சோக்கா சொல்றாருமே…

 அடுத்து இன்னா சொல்றாருன்னா ”இப்படியே ஒரு மனுஷன் இன்னொரு மனுஷனையும், இயற்கையையும் சுரண்டிக்கினு இருந்தா ரொம்ப நாள் தாங்காது” மறுபடியும் டிஷ்யூம் டிஷ்யூம் வரும்… ஏன்னா வேலை செஞ்சே சாவ வேண்டிய நிலைமைல இருக்கிற மனுஷனுக்கு வாழவே வழியில்லாம போகும்.. அதுக்கும் மேல மனுஷன்னா கொஞ்சம் மான ரோஷமும் இருக்கும்ல… அவங்க “உங்களை சும்மா வுட மாட்டாங்கடா பேமானிங்களா”ங்குறாரு…

 அதாவது மறுபடியும் முரண்பாடு முத்தி நீ அவங்ககிட்ட இருந்து புடுங்கின எல்லாத்தையும் மறுபடியும் அவங்க உன்கிட்டருந்து புடுங்குவாங்கடா… ஆமாம் புடுங்குவானுங்கடா! #சொத்து_வேணாம்_போடா #சுரண்டல்_வேணாம்_போடா

 இதுவரைக்கும் கிடைச்ச அனுபவத்துலருந்து சூடு பட்டதால நியாயமா எல்லாத்தையும் பொதுவுல வச்சா எல்லாரும் சோக்கா வாழலாம்னு ஒரு நிலைமைதான் வரும்னு சும்மா நச்சுன்னு சொல்லிவச்சிருக்காரு…

இன்னா இது புரியுற மாதிரி கீதா?

 நீயும் நானும் நல்லாருக்கனும்னு ரெண்டு பேரு சேர்ந்து இராப்பகலா படிச்சு, அங்க இங்கன்னு துரத்துனப்பவும் இதுக்கு முன்னாடி யார் இன்னா இன்னா சொன்னாங்க… இதுவரைக்கும் இன்னா நடந்துச்சு… இந்த மனுஷப்பய பொழைப்பு ஏன் இப்படி இருக்கு? எதைத் தின்னா பித்தம் தீரும்னு… ஓயாம ஆராய்ச்சி பண்ணி “இதுதான் பிரச்சினை… இதுக்கு இது இது காரணம்… இத இப்படி மாத்திக்கோ… நல்லாருப்பன்னு” சொல்றாங்க…

 அதை எந்த “மெதட்ல” ஆராய்ச்சி பண்ணாங்கன்னு தான்யா அந்த ரெண்டு ”டேர்ம்ஸ” திரும்ப திரும்ப சொல்றோம்! அதுவும் எதுக்கு எல்லாம் கடவுளோட “மிராக்கிள்”னு புருடா உட்டுக்குனு திரியுறானுங்களே முட்டாப் பசங்க அவனுங்களுக்கு எதிரா “டேய் இது சைன்ஸ்டா மாங்கா”ன்னு சொல்றதுக்குதேன்..

 மத்தபடி நம்ம மொழி என்னைக்கும் உழைக்கும் மக்கள் மொழிதேன்! அது அவுகளுக்கு புரிஞ்சுதேன் கம்யூனிஸ்டுங்க கூட லவ்வாகுறாங்க.. அது பொறுக்காத “வில்லனுங்க” இன்னா பண்றாங்க “மூட்டி வுடுறாங்க”…

 நீ இன்னாதான் கொளுத்திப் போட்டாலும்… சும்மா ஊதி அணைப்போம்ல! ஏன்னா நம்மகிட்ட சவுண்டா தத்துவம் கீது தம்பி!

பி.கு: இந்த மொழிப் பயன்பாடு எள்ளல் கண்ணோட்டத்தோடு பயன்படுத்தப்படவில்லை… இம்மொழி பாணி எனக்கு மிகவும் பிடித்த மொழி… பாமர மொழி என்னும் காதலுடன்….

 உழைக்கும் வர்க்க ஒற்றுமை வாழ்க! புரட்சி ஓங்குக!

 

Sep 6, 2020

சாதியா வர்க்கமா ஓர் இயக்குனரின் கேள்வி

 


ஒருமுறை என்னிடம் ஓர் இயக்குனர் கேட்டார் “எல்லாமே வர்க்கம்னு சொல்றீங்களே ஒரு வீட்ல - அதையும் தாழ்த்தப்பட்ட சாதின்னே வச்சுப்போம் - அண்ணன் ஐ.டி. கம்பெனில வேலை செய்றார், தம்பி மூட்டைத் தூக்கும் வேலை செய்றார். இவங்க எந்த வர்க்கம்னு எப்படி சொல்ல முடியும்? என்ன வர்க்க உணர்வு இருக்கும்? அதுவுமில்லாம சாதி அடிப்படையில படிச்சவனுக்கும் இங்க ஒரே நிலைமைதான… அப்ப சாதிதான எல்லாம்”

பதில்: “இரண்டு பேருமே உழைக்கும் வர்க்கம் தான். இருவரிடமும் தம் பிழைப்பிற்குத் தேவையான உற்பத்திச் சாதனங்கள் இல்லை. தம் பிழைப்பிற்காக இருவருமே முதலாளியைத்தான் சார்ந்திருக்கிறார்கள். 

இங்கே மூட்டைத் தூக்குபவரை மட்டுமே ”கூலி” என்பார்கள், ஆனால் சம்பளம் வாங்கிப் பிழைக்கும் அனைவருமே “கூலிகள்” தான். இருவரில் ஒருவர் மூளை உழைப்பாளி, இன்னொருவர் உடல் உழைப்பாளி! இருவருக்கும் வர்க்க உணர்வு தானாக வந்துவிடாது. அவர்களுக்குக் கிடைக்கும் அரசியல் வெளிச்சம் பொறுத்துதான் அது அமையும். ஆனால் உடல் உழைப்பாளிக்கு தன் மீதான உழைப்புச் சுரண்டல் எளிதாக விளங்கிவிடும். மூளை உழைப்பாளிக்குத் தாமதம் ஆகலாம் அல்லது மாறியும் அமையலாம். வர்க்க ரீதியாக ஒருவர் உடல் உழைப்பாளி - ஏழை, இன்னொருவர் நடுத்தர வர்க்கமாக அமையலாம். ஆனால் இருவருக்குள்ளும் உழைக்கும் வர்க்க உணர்வைத் தட்டி எழுப்புவதுதான் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு முன்நிபந்தனை. அதற்குத்தான் கம்யூனிஸ்ட் கட்சி!  வர்க்க ஒற்றுமை நேராமல் தடுக்கவே இங்கே இத்தனை பிரிவினைவாதப் போக்குகள் நிலவுகின்றன. கம்யூனிஸ்ட் கட்சிகளை உடைக்கும் முயற்சிகளும்!

படித்தும் சாதி மாறவில்லை! எங்களை சமமாகக் கருதவில்லை”  உண்மைதான்! ஏனென்றால் சாதி என்பது பண்பாட்டளவில் ஆதிக்கம் செலுத்துகிறது. வர்க்கப் படிநிலை அமைப்பிற்குத் தேவையான படிநிலைக்கு அது பார்ப்பனியம் என்னும் மதக்கொள்கை கொண்டு ஒரு சட்ட வடிவத்தையும், அங்கீகாரத்தையும் கொடுத்திருக்கிறது. அத்தகைய சமூகத்தில் உண்டாகும் கூட்டுச் சமூக உணர்வை புதியதோர் சமூக அமைப்புக் கொண்டு  மெல்ல மெல்லதான் மாற்ற இயலும். புதிய பண்பாட்டை அப்போதுதான் நிறுவ இயலும். அந்த பண்பாட்டமைப்பில் கல்வியும் தொடர் பிரச்சாரங்களும், சமத்துவமான உழைப்புசார் உறவுகளும் நிலவும். அப்போதுதான் முழுமையான மாற்றம் ஏற்படும்.  எதுவும் தனித்ததில்லை என்பதை இதிலிருந்தே நீங்கள் விளங்கிக் கொள்ளலாம்.

 பொருளாயத அடிப்படையில் போட்டிப் பொருளாதார அமைப்பு உழைப்பாளர்களுக்குள் போட்டியைத் தக்கவைக்க பல்வேறு அடையாளங்களைப் பயன்படுத்திக் கொள்கிறது. இரண்டு சாதிகளுக்குள் இந்த போட்டி நிலவுவது போல், வெறுப்பு நிலவுவது போல் ஆண் பெண் உழைப்பாளர்களிடமும் அதே மனநிலை நிலவுகிறது. பெண்களால் தான் தங்கள் வேலை வாய்ப்பு போகிறது என்று கருதும் ஆண்கள் பெண்கள் வேலைக்குப் போவதை விரும்புவதில்லை. அதேபோல் சாதிரீதியாக இடஒதுக்கீடுதான் தாழ்த்தப்படடவர்களுக்கு வாய்ப்பு வழங்குகிறது என்னும் தவறான புரிதலை பொருளாதார நிலைமையில் ஏற்படுத்தி வைத்திருக்கிறது. இந்த இரண்டும் அதாவது – சாதியப் படிநிலை மற்றும் வர்க்க முரண்பாடு இரண்டும் தான் அந்த தீண்டாமையைக் காக்கிறது. இந்து முஸ்லிம் வெறுப்பும் அதுபோலவே, வெள்ளை இன கறுப்பின வெறுப்பு அது போலவே, மொழிரீதியான பகைமையும் அது போன்றதே.

அதனால்தான் மீண்டும் மீண்டும் சொல்கிறோம் சாதியை – எந்த ஒரு முரண்பாட்டையும் - தனியாக ஒழிக்கவே இயலாது. அதனைத் தாங்கிப் பிடிக்கும் அடிக்கட்டுமானமான தனியுடைமை அடிப்படையிலான உற்பத்தி முறையை மாற்றி சொத்துறவுகளை ஒழித்து சமத்துவமான உழைப்புப் பிரிவினையை நிறுவ வேண்டும். உழைப்புச் சுரண்டலை ஒழிக்க வேண்டும்.

அதற்கு வர்க்கப் போராட்டமே தேவை. வர்க்கமாக ஒருங்கிணைக்க சாதியை முதலில் ஒழியுங்கள் என்றால் அதை ஒழிக்கவே வர்க்கமாக ஒன்றிணையச் சொல்கிறோம். நமக்குள் இருக்கும் முரண்பாடுகளை கூர்தீட்டும் ஆயுதம் “மூலதனம்”! அது தீட்டும் அடையாளங்களைக் கைவிட நாம் தானே முயற்சி செய்ய வேண்டும்? அதைவிடுத்து அரசியல் ரீதியாக, உழைப்பு ரீதியாக, வர்க்க ரீதியாக மேலெழுந்திருக்கும் சிலர் அந்த அடையாளங்களை உயர்த்திப் பிடித்து, இது சாத்தியமில்லை.. அது சாத்தியமில்லை என்று பிரச்சாரம் செய்வதன் நோக்கம் என்ன? ஒரு சிலருக்கு அது அறியாமை! ஆனால் அவர்களை வழிநடத்தும் தலைமைகள் அதைத் தெரிந்தே செய்கின்றனர்!

சமூக மட்டத்தில், சாதி மற்றும் இதர அடையாளங்கள் வர்க்க ஒற்றுமைக்கு எதிராக இருப்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு ஒடுக்கப்பட்டோருக்காக இயங்குவதாக சொல்லிக் கொள்ளும் சில - கட்சிகள்  / கலைஞர்கள் / அமைப்புகள் / எழுத்தாளர்கள் அவர்களின் ஜால்ராக் கூட்டங்கள் – என அனைவருக்கும் முக்கியப் பங்குண்டு. இதுவும் ஒரு குறிப்பிட்ட வர்க்க நலனிருந்து நிகழும் புற யதார்த்தம். அதையும் முறியடிக்கும் வழிமுறையை மார்க்சியம் வழங்குகிறது.