Showing posts with label பா இரஞ்சித். Show all posts
Showing posts with label பா இரஞ்சித். Show all posts

May 31, 2021

நீலம் பண்பாட்டு மைய ஆதரவுவாதிகளின் தேர்ந்தெடுத்த பண்புவாதம்

 நீலம் பண்பாட்டு மையத்தின் கம்யூனிச காழ்ப்புணர்ச்சி மிக்க டிவீட்டிற்கு நேர்ந்த எதிர்வினைகளை ஒட்டி ஆங்காங்கே சில விளக்கங்கள் தரப்படுகின்றன. இரண்டு பதில்கள் என் கவனத்திற்கு வந்தன.

 1. கம்யூனிஸ்ட் கட்சியில் இட ஒதுக்கீடு கேட்பதே வேடிக்கையானது என்றும் அப்படிப் பார்த்தால் ஒன்றிய அரசில் 6 தலித்துகள் உள்ளனரே அவர்கள் தான் தலித் காவலர்களா என்று லாஜிக்காக மடக்கியும்; எத்தனை பேர் தோழர் டி.ராஜா பொதுச்செயலாளர் என்ற உயரிய பொறுப்பில் உள்ள சிபிஐ கட்சியில் இணைந்துள்ளனர் என்றும் அறச்சீற்றத்தோடு முடிவடைகிறது.

படித்துவிட்டு வந்த சிரிப்பை என்னால் அடக்க இயலவில்லை. காரணம்: இதே நபர் தான் இடதுசாரி கட்சிகளும் சாதியத்திலிருந்து தப்பவில்லையா என்ற கேள்விக்கு “இடதுசாரி கட்சிகள் தோன்றி 100 வருடம் நெருங்குகிறது. ஆனால் தலைமைப் பதிவில் எத்தனை பேர் (தலித்துகள்) உள்ளனர் என்னும் கேள்வி எனக்கும் உள்ளது” என்று பேசியிருக்கிறார். அவர் தான் இன்றைக்கு மேற்சொன்ன பதிலை கொடுக்கிறார்.

 இது காலம் செய்த மாயமா… இல்லை பதவி செய்த மாயமா தெரியவில்லை. ஆனால் மார்க்சியக் கட்சியில் இருந்து கொண்டு இவர் மார்க்சிய அடிப்படையில் சாதியப் பிரச்சினையை விளக்கி நான் கண்டதில்லை. சாதி ஒரு மன நோய் என்பதாகவே பேசிக் கொண்டிருப்பவர். மார்க்சியம் குறித்த எதிர்மறை எண்ணத்தை உருவாக்குவதில் இவர் பங்கு ஒன்றும் குறைவில்லை.

 2. இரண்டாவது விளக்கம்: அவர்கள் சொற்களில் தவறிருக்கலாம் கேள்வி நியாயமானதே என்று தொடங்கி… அதற்காக இப்படியா பழி வாங்கும் விதமாக தாக்குவீர்கள். ஜனநாயகம், தோழமை, பொதுவுடைமை பண்பு என்று நமக்கே வகுப்பெடுக்கிறார் ஒருவர். கான்ஸ்பிரசி தியரி, மதிப்பிழக்கம், சமூக நீக்கம் செய்யப் பார்க்கிறீர்களா.. ஐயகோ… என்று நீண்டு… உங்கள் எண்ணம் நிறைவேறாது என்று முடிகிறது.

 ஆஹா! என்னவொரு ஜனநாயகப் பண்பு. தேர்ந்தெடுத்த நியாயவாதம்!

அம்பேத்கரை விமர்சித்த ஒரே காரணத்திற்காக ரங்கநாயகம்மா, நான், வசுமித்ர மூவரும் தொடர்ந்து தாக்கப்பட்டபோது எங்கே போனது இந்த “போதனை”? எவ்வளவு ஆபாசமான, கொச்சையான தாக்குதல்கள். கொலை மிரட்டல்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் நடந்திராத அதிசயத்தை இவர்கள் எல்லாம் சேர்ந்து நிகழ்த்திக் காட்டினார்களே. சக கம்யூனிஸ்ட் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார்… யார் தலைமையில்? தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைமையில்…

 அப்போது இதே நீலம் பண்பாட்டு மையமும், பா. இரஞ்சித்தும் அதை கொண்டாடினார்கள். மாறி மாறி டீவீட் செய்து மகிழ்ந்தார்கள். கருத்து சுதந்திரம் பேசும் பா. இரஞ்சித் அதை நியாயப்படுத்தினார். இதுதான் ஜனநாயகமா? இது தான் தோழமைப் பண்பா? அல்லது இதுதான் அம்பேத்கரியமா?

கருத்தை கருத்தால் எதிர்கொள்ளுங்கள். தெரியவில்லை எனில் பண்புடன் விளக்குங்கள்… என்கிறார்களே இதை ஏன் அன்றைக்கு அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கவில்லை.

 

// தலித்துகளின் உரிமைகளுக்காகச் சமரசமற்ற காத்திரமான உரையாடலை நிகழ்த்தியவர் பாபாசாகேப் அம்பேத்கர்// மறுப்பதற்கே இல்லை. ஆனால், அதனோடு சேர்ந்து மார்க்சியம் குறித்தும், கம்யூனிஸ்டுகள் குறித்தும் ஒரு எதிர்மறை எண்ணத்தையும் உருவாக்கிவிட்டார் என்பதே துயரம்.

 

இன்றைக்கு ஒரு சில சமூக ஊடக பதிவிற்கே இந்தளவுக்கு துடித்துக் கொண்டு மறுப்பும், விளக்கமும் தெரிவிக்க வருகிறார்களே. தலித்துகள் உள்ளடங்கிய இந்திய பாட்டாளி வர்க்கம் மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள பாட்டாளி மக்களின் விடுதலைக்கான ஒரு தத்துவத்தை, அதை ஏற்றுக் கொண்டு உழைக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளை தொடர்ந்து சீண்டிக் கொண்டே இருப்பார்கள், வேடிக்கை பார்க்க வேண்டுமா?

 

கம்யூனிஸ்டுகள் தான் வன்முறையாளர்களாயிற்றே, சாத்வீகத்தில் நம்பிக்கையுடைய அம்பேத்கரிஸ்டுகள் ஏன் ஒரு கம்யூனிஸ்டுக்கு எதிராக சாதி வெறியன் என்று சதி செய்து சிறைக்கு தள்ளப் பார்த்தார்கள்?

ஆனால் காலம் காலமாக கம்யூனிஸ்டுகளை, மார்க்சிய தத்துவத்தை பழிக்கும் நபர்களிடம் கம்யூனிஸ்டுகள் பேசிக் கொண்டுதானே இருக்கிறோம், வழக்கா தொடுத்தோம்?

அதெப்படி அது தங்களுக்கு வந்தால் தலைவலி, அடுத்தவருக்கு இவர்களே செய்தால் அது அம்பேத்கரிய போராட்டமா?

பா. இரஞ்சித்திற்கோ அல்லது ஒரு சில அடையாள அரசியல் கும்பலுக்கோ வக்காலத்து வாங்கித் தான் இங்கு தலித்திய ஆதரவாளர் பட்டம் பெற வேண்டிய அவஸ்தை கம்யூனிஸ்டுகளுக்கு இல்லை.

 

பா. இரஞ்சித் விமர்சிக்கப்படுவது போல் தோழர் திருமாவளவன் ஏன் விமர்சிக்கப்படுவதில்லை என்னும் வேறுபாட்டை கண்டால், serving capitalism, NGO politics and only playing hate politics against BCs & Dravidian Parties & Communists என்பதன் பொருள் புரியும்.

அம்பேத்கர் மீதும், தலித் மக்கள் விடுதலை மீதும் உண்மையான அக்கறை இருப்பதால் தான் இதுவரை கம்யூனிஸ்டுகள் பலர் இவர்களைப் போன்ற மேட்டுக்குடி தலித்துகளின் கம்யூனிச எதிர்ப்பு வன்மங்களை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் இனியும் அது நீடிக்காது.

 

இந்த பண்பாட்டு கும்பலோடு சேர்ந்து கொண்டு சி.பி.எம் மின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி செய்த வரலாற்று தவறை இனியாவது உணர வேண்டும். இப்போது உங்களை தொட்டதும் கூப்பாடு போடுகிறீர்கள் அல்லவா? இனியாவது ஏற்றுக்கொண்ட தத்துவத்திற்கு உண்மையாக நடக்குமாறு “தலித்திய அடையாள அரசியல்வாதிகளுக்கு” கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தட்டும்.

தலித்திய அடையாள அரசியல் செயல்படும் ஆபத்தை கண்டே 20 வருடங்களுக்கு முன் ரங்கநாயகம்மா அம்பேத்கரின் சிந்தனையை ஆய்வு செய்து விமர்சன நூல் எழுதினார். அதை நான் படித்தபோது அவசியம் கருதி மொழிபெயர்த்தேன். அன்று தொடங்கி இன்று வரை எங்களுக்கு எவ்வளவு துன்புறுத்தல்கள்? இணையவெளியில் இதை ஊக்குவித்து, அடுத்த நிலைக்கு கொண்டு சென்றவர்கள் யார்?

 

நடைமுறையில் கருப்பு, சிவப்பு, நீலம் என்று எல்லாரோடும் கைக் கோர்த்தே போராடுவோம். அதை யாரும் இங்கே உடைக்க நினைக்கவில்லை. அது முடியவும் முடியாது. ஆனால் தத்துவார்த்த அடிப்படையில் சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு / தலித் விடுதலைக்கான தீர்வு யாரிடம் உள்ளது என்ற விவாதம் வருகையில் இரக்கமின்றி, பூர்ஷுவா கருணைவாத சால்ஜாப்புகள் இன்றி விமர்சிக்க சிலர் உள்ளனர். அவர்களை நீங்கள் முதலில் கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ளுங்கள்.

 

கேள்வி கேட்டால் உங்கள் தத்துவத்தை முன் வைத்து பதில் சொல்லுங்கள். கருத்தை கருத்தால் எதிர்கொண்டு பழகுதல் தான் இடதுசாரிகளின் ஜனநாயகப் பண்பு. நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்களோ முதலில் அதை கொடுத்துப் பழகுங்கள். சமத்துவம் நாடும் நீங்கள் அனைவருக்கும் அதே கருத்து சுதந்திரத்தை நிலைநாட்டுங்கள்.

 

பி. கு: அது கருத்தா வசையா என்பதே விவாதமல்ல… ஏனென்றால் ரங்கநாயகம்மா குறித்து வந்த வசைகளின் தொகுப்பு ஏற்கனவே வசுமித்ரவின் அம்பேத்கரும் அவரது தம்மமும் நூலில் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த நூலும் வருகிறது. பொருமை காக்கவும்!

 

Jun 4, 2020

தலித் பேந்தர்ஸும் கம்யூனிச அரசியலும்



”எங்களுக்கு மார்க்ஸை ரொம்ப பிடிக்கும்! லெனினை ரொம்ப பிடிக்கும்! மார்க்சியத்தை நோக்கித் தான் நாங்கள் நகர்கிறோம்! ஆனால் இங்கிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தான் பிரச்சினை” என்று பூசி மெழுகுவார் பண்பாட்டு மைய முதலாளி மற்றும் தலித்திய மெண்டார்கள்! அதற்குப் பின்பாட்டுப் பாடுவார்கள் அவரது சாதி ரசிகர்கள்!

ஆந்திரத்திலும் இது போன்ற சமாளிப்புப் பேச்சுகள் நிறையவே இருந்தன! “தலித்தியம் பேசுபவர்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சினை என்றால் அவர்கள் ஏன் ஒரு கம்யூனிஸட் கட்சியைக் கட்டக் கூடாது” என்னும் ரங்கநாயகம்மாவின் கேள்வியை 4 வருடங்களுக்கு முன்பு வைத்திருந்தேன்! இதன் பொருள் என்ன? உங்களுக்கு உண்மையிலேயே முதலாளித்துவத்தை தகர்க்கும் எண்ணம் இருக்குமெனில் நீங்கள் சோஷலிசத்தை ஏற்பீர்கள் தானே!

உண்மையில் Black Panther partyஐப் போல் Dalit Panthers (கூகிளில் தேடுங்கள், அவர்கள் Ideology: Socialism, Anti-Casteism என்று வரும்!) ஒரு சோஷலிஸ்ட் அமைப்பாக இயங்கியது! சாதி அடையாள அரசியலை முன்னெடுக்க அந்த அமைப்பை உடைத்தார்கள். இந்த வரலாற்றுத் தொடர்போடு தான் நான் அந்த கேள்வியை தமிழ்நாட்டில் வைத்தேன்.

ஆனால் புலி வெறுப்பரசியல் (விமர்சன அரசியல் அல்ல), நையாண்டி இலக்கியம் செய்யும் சோபா சக்தி என்பவன் அதை வைத்து பெரிய அறிவாளி போல் ஒரு நக்கல் செய்தான், என்னவென்று “தனிக் குவளை! தனிக் கோயில்! தனிச் சுடுகாடு! தனி மார்க்சியம்! " இவ்வளவுதான் அவனது தாராளவாத-தர்க்கவாத அறிவு!
மார்க்சிய தத்துவத்திற்கோ, சாதி ஒழிப்பிற்கோ குறைந்தது அம்பேத்கரிய சிந்தனைகளை வளர்த்தெடுப்பதற்கோ அம்பேத்கரியர்கள் என்று சொல்லிக் கொள்ளும் தலித் அல்லாத பின் நவீனத்துவ பிழைப்புவாதிகள் செய்தது என்ன?

Fred Hampton எவ்வளவு தெளிவாக, “அவர்கள் என்னை உங்கள் எதிரி என சித்தரிக்கிறார்கள்” என்கிறார். அதுபோல் இங்கு தலித்திய பண்பாட்டு மைய முதலாளிகள் / மெண்டார்கள் எப்போதாவது பேசியுள்ளார்களா! ”உழைப்புச் சுரண்டலுக்காக பார்ப்பனியமும், தனி உடைமை வர்க்கமும் சாதி என்னும் ஒரு அமைப்பின் மூலம் உங்களையும் என்னையும் பிரித்துவைத்திருக்கிறது. உழைக்கும் வர்க்கமான நம்மை பிரித்து வைக்க நடந்த ஒரு பிரிவினைவாத சமூக-பொருளாதார-அரசியல் ஏற்பாடு இது. (உன்மையில் சிலர் முதலாளி(கள்! உழைக்கும் வர்க்கமாக இருந்தால் அப்படி பேசி ஒருங்கிணைப்பார்கள்) வர்க்கமாக ஒன்றிணைந்து அதனை நாம் முறியடிக்க வேண்டும்.

தலித் இளைஞர்களே நமக்கு எதிரி உழைப்புச் சுரண்டல் அடிப்படையிலான நிலவுடைமை, முதலாளித்துவம் மற்றும் அதற்கு துணை நிற்கும் இந்துத்துவ பார்ப்பனிய மதம். நம்மைப் போலவே அனைத்து சாதிகளிலும் உள்ள உழைக்கும் சகோதர, சகோதரிகள் சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைக்கும் உள்ளாகின்றனர்!
நமது பொது எதிரி நிலவுடைமையும், முதலாளித்துவமும் அதனை தகர்ப்போம், சோஷலிசத்தை நிறுவ பாட்டாளி வர்க்கப் புரட்சிப் பாதையில் பயணிப்போம்” என்று முழங்கினால் குறைந்தபட்சம் இடைநிலை சாதிகளில் உள்ள உழைக்கும் வர்க்கத்திற்கும், தலித் உழைக்கும் வர்க்கத்திற்கும் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்தவும், பார்ப்பனிய அதிகார வர்க்கத்திற்கு அது அச்சுறுத்தலாகவும் அமைந்திருக்கும்!

தலித் பேந்தர்ஸ் இயக்கம் தொடக்கத்தில் இப்படித்தான் இயங்கியது. ஜிக்னேஷ் மேவானி போன்றோர் இந்த சிந்தனையைக் கொண்டுள்ளவர்கள்! அவரிடம் நட்பு பாராட்டும் தமிழ்நாட்டு தலித்திய லாபியிஸ்டுகள் அம்பேத்கரிடம் இருந்துதான் எதையும் கற்கவில்லை, குறைந்தது ஜிக்னேஷிடம் இருந்தாவது கற்கலாம்! ஆனால் மார்க்சியத்திற்கு எதிரான மேட்டுக்குடி தலித்திய அறிவுஜீவிகள் / முதலாளிகள் இதை செய்வதில்லை!

தமிழர்களாக ஒன்றுபடுங்கள் என்று சொன்னால் கூட, அதற்கும் ஒரு நையாண்டி! திராவிட வெறுப்பு, தமிழ்தேசிய வெறுப்பு, மார்க்சிய வெறுப்பு! முதலாளித்துவ, தாராளவாத ஆதரவு – இதுவே இந்த சிறிய கூட்டத்தின் அரசியல் கொள்கை!
மார்க்சியத்திற்கு எதிரான இந்த சிறிய கூட்டத்தை எதிர்ப்பதை ஒட்டுமொத்த தலித்துகளுக்கும் எதிரானதாக, தலித் அறிவுஜீவிகளையே நிராகரிப்பதாக எவரேனும் கருதினால் அதற்கு நாங்கள் பொறுப்பாக இயலாது!

இப்படிப்பட்டவர்கள் போலியான சாதி ஒழிப்பு பேசுகிறார்கள், அதற்கு அம்பேத்கரையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று பல வகைகளில் ஆன்ந்த் டெல்டும்ப்டே உட்பட பலர் விமர்சித்துவிட்டார்கள். (டெல்டும்ப்டேவை இவர்களால் சாதி வெறியர் என்று சொல்ல இயலாது!) ஆனால் இந்த முதலாளித்துவ ஆதரவு மேட்டுக்குடிகளிடம் எந்த மாற்றமும் நிகழவில்லை.

சாதியப் பிரச்சினை மற்றும் தலித் மக்களின் நிலை குறித்து மைய அரசியல் நீரோட்டத்தில் கவனத்தை ஏற்படுத்தி, பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்திய அம்பேத்கரால் கூட பொருள்முதல்வாதப் பார்வை இல்லாமல் போனதால் சாதி ஒழிப்பிற்கு தீர்வு கொடுக்க இயலாமல் போனது என்று மார்க்சிய ஆய்வறிஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். இதில் என்ன அவதூறு! ஆனால் அவரை முன் வைத்து சிறு கூட்டமான முதலாளித்துவ அறிவுஜீவிகள் எதிர்புரட்சி சக்திகள் போல் இயங்குவதால் தான் நாம் அம்பேத்கரிடம் சாதி ஒழிப்பிற்கான தீர்வு உள்ளதா என்னும் திறனாய்வை தமிழ்நாட்டில் முன் வைக்க நேர்ந்தது! அது எதிர்கொள்ளப்பட்ட விதம் அடுத்தடுத்த விமர்சனங்களுக்கும், விவாதங்களுக்கும், ஆதாரபூர்வமான பதிவுகளுக்கும் இட்டுச் சென்றது! அவ்வளவே!



Apr 27, 2019

நான் சாதி வெறி பிடித்தவளாகவே இருந்துவிட்டுப் போகிறேன்!



நான் சாதி வெறி பிடித்தவளாகவே இருந்துவிட்டுப் போகிறேன்!
‘புகழ் மிக்க’ தலித்தியவாதிகள் அல்லது இடது தாராளவாதிகளாக தங்களை முன்னிறுத்திக் கொள்வோர், சாதியப் பிரச்சினை குறித்து பேசும்போதெல்லாம் நான் எனது விமர்சனங்களை வைத்து வருகிறேன். சமூகத்தின் கட்டுமானம் குறித்தும், சாதியப் பிரச்சினை குறித்தும், சாதி ஒழிப்பு குறித்தும் இவர்கள் கொண்டிருக்கும் பார்வையில் சில போதாமைகள் உள்ளன என்பதே அதற்கு காரணம்..
மனித சமூக உறவுகள் பற்றிய புரிதலில் உள்ள குறைபாடு அது. அதனை விஞ்ஞான பூர்வமாக விளக்கும் தத்துவம் மார்க்சியம்.
தலித்தியவாதிகளுக்கு மார்க்சியம் குறித்த தவறான புரிதலானது அம்பேத்கரிடமிருந்து தொடங்குகிறது. ஒடுக்கப்படுவதின் வலியிலிருந்து கண்டால் மட்டுமே அது புரியும் என்பதே இவர்களின் வாதம்! மீண்டும் மீண்டும் சொல்கிறேன் ஒரு பெண்ணாக ஒடுக்கப்படுவதின் வலியை உணர்வதில் உங்களை விட நான் எந்த விதத்திலும் குறைந்தவளாக இருக்க முடியாது! ஏனென்றால் நாம் இருவருமே உடல் ரீதியாக கொடுமைகளுக்கு உள்ளாகிறோம்.
அதற்கான விடையை தேடிய போதே எனக்கு மார்க்சியம் விடிவெள்ளியாக அமைந்தது.
அதனை தொடர்ந்த செயல்பாடுகளினூடாக நான் அடையாள அரசியலின் ஒரு பிரிவாக தலித்திய பிரிவினைவாத அரசியலை சிலர் முன்னெடுப்பதை காண நேர்ந்தது. அவர்கள் மார்க்சிய வெறுப்பை கொண்டிருந்தனர். எந்நேரமும் கம்யூனிஸ்டுகளை பழித்தனர். கம்யூனிஸ்டுகளின் தியாகங்களைக் கூட பொருட்படுத்தவில்லை. அதனால் கம்யூனிஸ்டுகளுக்கோ எனக்கோ எந்த அவமானமும், இழப்புமில்லை. ஆனால் இழப்பு அவர்கள் யாருக்காக போராடுவதாக முன் வைக்கிறார்களோ அவர்களுக்குத்தான். ஆம் உழைக்கும் வர்க்கத்திற்கே இழப்பு!
ஆகவே அவர்கள் எங்கிருந்து இத்தகைய தவறான மார்க்சிய வெறுப்பை கற்றார்கள் என்று ஆய்ந்தபோது, அது அம்பேத்கரில் தொடங்கி, ராஜா காலே என்று வளர்ந்து இன்று தாழ்த்தப்பட்டோரில் ஒரு குறிப்பிட்ட சாதி ஆதிக்க அரசியல் தலைமையின் கீழ் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர முடிந்தது. ஆகவே சாதியப் பிரச்சினைக்கான தீர்வாக இத்தகைய அடையாள அரசியல்வாதிகள் (பெரும்பாலும் இவர்கள் குட்டி பூர்ஷுவா மனநிலை உடையவர்கள், முதலாளித்துவ எதிர்ப்போ, தனியுடைமை ஒழிப்போ இவர்களுக்கு பிரதானம் அல்ல! அம்பேத்கரை முன்வைத்து தலைகீழ் சாதியவாத அரசியலை பிழைப்புவாதமாக மேற்கொண்டு உழைக்கும் வர்க்க அணிதிரட்டலுக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறார்கள் (அறிந்தும் அறியாமலும்).
இத்தகைய சூழலில் நான் அம்பேத்கர் போதாது என்னும் நூலை மொழிபெயர்த்தேன். நான் ஏற்கனவே எனது சிறு குறிப்புகளில் கூறியுள்ளது போல் அதில் மொழிபெயர்ப்பு சிக்கல்களும், மொழிபெயர்ப்பு தவறுகளும் உள்ளன (கருத்துரீதியாக அல்ல). அதனை ஒவ்வொருவரும் சுட்டிக் காட்டுகையில் நான் விளக்கம் கொடுத்துள்ளேன். ரங்கநாயகம்மாவும் கொடுத்துள்ளார். (உ.ம். lower, upper – மேல், கீழ் vs Deppressed class – தாழ்த்தப்பட்ட மக்கள்…. இப்படியாக).
மொழிபெயர்ப்பு தவறுகளுக்கு நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன். ஆனால் எனது விமர்சனத்தில் நான் உறுதியாகவே உள்ளேன். சாதி ஒழிப்பிற்கு அம்பேத்கரிடம் தீர்வு இல்லை! அவர் முன்வைப்பது சீர்திருத்தங்களை உள்ளடக்கிய சட்டவாதம். அதன் எல்லை குறிப்பிட்ட அளவேயானது. அது ஏன் தீர்வை தராது என்பதை புரிந்துகொள்ள முதலில் மார்க்சியத்தை கற்றிருக்க வேண்டும்.
அதன் பின்னர் மார்க்சியத்தில் தீர்வு இல்லை எனில் அதனை ஆதாரங்களுடன் மெய்ப்பித்து, ‘அம்பேத்கரியத்தை’ முன் வைத்து இந்த சமூகத்தின் ஏற்றதாழ்வுகளுக்கும், வறுமைக்கும், ஒடுக்குமுறைக்கும், குறிப்பாக உழைப்பு பிரிவினைக்கும் எது காரணம் என்று விளக்க வேண்டும். அதனை எப்படி ஒழிப்பது, புதியதோர் உலகத்தை எப்படி படைப்பது என்பதை வேலைத்திட்டத்துடன் முன் வைக்க வேண்டும்.
சாதி என்றால் என்ன? அதன் அடிப்படை என்ன? அது எப்படி உருவானது? எப்படி வளர்ந்தது? சாதியப் பாகுபாடு எந்தெந்த தளங்களில் எல்லாம் வேலை செய்கிறது. அதன் தொடக்கம் எப்படி இருந்தது, தற்போதைக்கு அது எப்படி தகவமைந்துள்ளது? அது எதனால் நிகழ்ந்தது? (அம்பேத்கர் விளக்கியிருக்கிறார், அதன் மீதான விமர்சனங்களும் ஏராளமாக உள்ளன. நான் சொல்வது தற்போதைய தலித்திய அறிவுஜீவிகள், திரைத்துறை ‘புகழ்மிக்க’ அண்ணன்கள் விளக்க வேண்டும்.
அம்பேத்கர் நவீன இந்தியாவின் தந்தை என்கிறார்கள். மகிழ்ச்சி! நவீன இந்தியா என்றால் என்ன?
ஒருவர் பிச்சைக்காரனாகவும் மற்றொருவர் கோடீஸ்வரனாகவும் இருப்பது நவீன இந்தியா! இதை வடிவமைத்தவர் அம்பேத்கரா? சாதியக் கொடுமைகளும், மாட்டுக் கறி உண்பதற்கும் தடை விதிக்கும் பாசிச அரசு இருப்பதே நவீன இந்தியா! இதை வடிவமைத்தவர் அம்பேத்கரா?
பெண்கள் மீது எத்தகைய பாலியல் வன்கொடுமைகள் நிகழ்கின்றன… குடும்ப வன்முறைகள் நிகழ்கின்றன! இதுதான் நவீன இந்தியாவின் நிலை! இதை வடிவமைத்தவர் அம்பேத்கரா?
இந்துத்துவ பார்ப்பன வெறியும், முதலாளித்துவ அராஜகமும் நிலவும் சுரண்டல் மிக்க இந்தியாவின் தந்தை என்று அம்பேத்கரை சொல்வது உண்மையில் நாம் அவரை அவமதிப்பதற்கு சமம்.
அப்படியென்றால் ஏன் அம்பேத்கரை இப்படி பூதாகரமாக உயர்த்திப் பிடித்து கடவுள் தன்மைக்கு மாற்றுகிறார்கள்?
இது அவர்களின் சுயசாதி பற்றிலிருந்து மேற்கொள்ளப்படும் உணர்ச்சிகரமான, பிழைப்புவாத அரசியல் என்பதைத் தாண்டி வேறெப்படி வரையறுப்பது? இது நட்பு முரண்பாடே ஆகும்! சிலர் முதலாளித்துவத்தின் கைகூலிகளாக அறிந்து செய்கின்றனர். சிலர் அறியாமையின் காரணமாக தங்களுக்கான தலைவரும் மீட்பரும் வேண்டி இத்தகைய உணர்ச்சிகரமான அரசியலுக்கு ஒத்து ஊதுகிறார்கள்.
எனக்கு மார்க்சியம் தெரியாமல் போகட்டும், நான் சாதி வெறி பிடித்தவளாகவே கூட இருந்துவிட்டுப் போகிறேன். மார்க்சியத்தில் தீர்வில்லாமல் கூட போகட்டும். ஆனால் சாதி ஒழிப்பிற்கும், (குறிப்பாக இடைநிலை சாதிகளை சாதி வெறியிலிருந்து எப்படி மீட்பது? தாழ்த்தப்பட்ட மக்கள் தலித்துகளாக அணிதிரட்டப்பட்டால், அவர்களை எந்த அடையாளத்தின் கீழ் அணிதிரட்டுவது?) வறுமை ஒழிப்பிற்கும், பெண் விடுதலைக்கும், மாற்றுப் பாலினர் மற்றும் இதர ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலைக்கும், தேசிய இன சிக்கலுக்கும் சரியான வழிகாட்டுதலை வழங்கக்கூடிய தத்துவம் எது? இவை பற்றி விஞ்ஞானபூர்வ உலக கண்ணோட்டத்தை வழங்கக் கூடியவர் யார்?
பிரச்சினையின் ஆணி வேரை சுருக்கமாக முன்வைத்து, அதற்கான தீர்வையும் வேலைத்திட்டத்தையும் முன் வைக்க முடியுமா அவர்களால்?
அப்படி வைப்பார்கள் எனில், நான் எனது விமர்சனங்களை கைவிட்டு அவர்களின் 'தத்துவத்தையும்’, வேலைத்திட்டத்தையும் சேர்த்து பிரச்சாரம் செய்ய தொடங்குவேன்.

பா இரஞ்சித்தின் உழைப்புப் பிரிவினை பற்றிய கருத்து தொடர்பாக

 


தனியுடைமையின் அடிப்படையிலான உற்பத்தி முறைக்கு ஏற்ற உழைப்புப் பிரிவினை தான் எல்லாவித ஏற்றத்தாழ்வுகளுக்கும் அடிப்படை. அதுதான் உற்பத்தி உறவுகள் - வர்க்கப் பிரிவினை எனப்படுகிறது. இதை கூறினால் இந்த கம்யூனிஸ்டுகளுக்கு சாதியப் பிரச்சினை குறித்து புரிதல் இல்லை என்பார்கள். சரி கம்யூனிஸ்டுகளுக்கு சாதி இல்லைஅதனால அவங்க சொன்னா கேட் வேண்டாம்மார்க்ஸ் இந்தியாவில் பிறக்கவில்லை.. (அதனால் அவருக்கும் சாதி இல்லை) அதனால் அவர் சொன்னாலும் கேட்க வேண்டாம்.

இப்போது தோழர் பா. இரஞ்சித் மார்க்சியம் எடுத்துரைக்கும் உழைப்புப் பிரிவினையை அடியொட்டி ஒன்றை கூறியிருக்கிறார். (அம்பேத்கர் அவர்கள் உழைப்புப் பிரிவினையை பேசியிருந்தாலும், அவர் உழைப்பாளர் பிரிவினை என்பதை வேறுபடுத்தி பார்த்து, அது சாதிஅது வேறு என்னும் வகையில் ஆய்வு செய்து, அதற்கான தீர்வுகளை முன் வைத்ததில் சில தவறுகளும், போதாமையும் இருக்கிறது என்பதே எங்களது வாதம்இதை அவதூறு என்பவர்கள்அதற்காக எனக்கு சாதி வெறி சாயம் பூசுபவர்கள்  அறிவார்ந்த விவாதங்களில் ஈடபட அறியாதவர்கள்அவ்வளவே). இரஞ்சித் சொல்வதன் அடிப்படையை எப்படி கண்டடைவது. வியாக்கியானம் சரிவிடை எங்கே…. அதற்குதான் மார்க்சியம் அவசியத் தேவை! (நான் மொழிபெயர்த்த நூல்களை வாங்கிப் படித்து என்னை கோடீஸ்வரியாக்கி விட வேண்டாம். மற்ற மார்க்சிய நூல்களை படித்துப் பார்க்கவும்.)

வரலாறு பற்றிய கருத்துமுதல்வாத கண்ணோட்டத்தைப் பொதுவாகவும், ஜெர்மானியின் பின்-ஹெகலிய தத்துவத்தைக் குறிப்பாகவும் விமர்சிக்கும்போது மார்க்ஸும், எங்கெல்ஸும் (1845-46: 63) இந்தியாவில் நிலவும் பக்குவற்ற உழைப்புப் பிரிவினையானது அரசு மற்றும் மத நிறுவனங்களால் சாதியமைப்பாக உருவெடுக்க வகை செய்தது என்றனர்.  சாதியமைப்புதான் பக்குவமற்ற அந்த உழைப்புப் பிரிவினையை ஏற்படுத்தியது என்னும் கருத்துமுதல்வாத நம்பிக்கையை அவர்கள் விமர்சனம் செய்தனர்3 .  இவ்வாறாக மார்க்ஸைப் பொறுத்தவரை (1846:158), சாதியப் படிநிலை ஆட்சி என்பதும் குறிப்பிட்ட வகையான உழைப்புப் பிரிவினையே4. வேறு சொற்களில் சொல்வதானால், “உழைப்புப் பிரிவினையே சாதியை உருவாக்கியது” (மார்க்ஸ் 1846-47: 114). இருப்பினும், இந்தக் குறிப்பிட்ட உழைப்புப் பிரிவினை பரம்பரை உரிமை’ என்னும் வகையில் உள்ளது (மார்க்ஸ் 1853b: 497)5.

மார்க்ஸைப் பொறுத்தவரை (1867:321), முந்தைய சமுதாயங்கள் தொழில்களைப் பரம்பரையாக்கி, சாதிகளாக அவற்றை உறைந்து இறுகச் செய்யும்’ (இந்தியாவைப் போல்) அல்லது கைவினைச் சங்கங்களாக சமைந்து கெட்டிப்படச் செய்யும் (எகிப்தைப் போல்) போக்கைக் கொண்டிருந்தன6. சாதியமைப்பின் கீழ் குறிப்பிட்ட தீர்மானகரமான சட்டதிட்டங்களுக்குஏற்ப உழைப்புப் பிரிவினை நிலவியது என்கிறார் மார்க்ஸ். இந்த சட்டங்களை சட்டம் இயற்றுபவர் நிறுவவில்லைஎன்றவர், கூடுதலாக, பொருளாயத அடிப்படையிலேயே இந்நிலைமைகள் தோன்றின என்றும், அவை சட்ட நிலைக்கு உயர்த்தப்பட்டன என்றும் கூறுகிறார்7.  பின்னர் அந்த சட்டமானது தொழிலை ஒரு மரபார்ந்த உரிமையாக்கி, சாதியமைப்பாக நிலைநாட்டப்படுகின்றன8. மார்க்ஸைப் பொறுத்தவரை, சமூகமானது குறிப்பிட்டளவு வளர்ச்சியை எட்டிய பின்னரே சாதிகள் மரபு வழியிலான சட்டநிலையை எட்டியது9.

https://saavinudhadugal.blogspot.com/2017/08/blog-post.html

சாதியமைப்பு பற்றிய மார்க்ஸின் கருத்துரு*:


(சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்: தொடரும் விவாதம், பக். 211)

********


சில குறிப்பிட்ட அசுத்தமான பழக்கங்களால் உறவாடுவதற்கு தகுதியற்றவர்களாக தாழ்த்தப்பட்ட மக்கள் கருதப்படுகிறார்கள். இதுவே ’மேல்’ சாதியினர் சுமத்தும் குற்றம். அதாவது அவர்கள் இறந்த விலங்கின் இறைச்சி உண்ணுகிறார்கள், அதனால் அவர்கள் அசுத்தமானவர்கள்... [ஆனால்], கொலாபா மற்றும் ரத்னகிரி மாவட்டங்களில் ஒட்டுமொத்த மஹர் சாதியும், இறந்த விலங்கின் இறைச்சியை உண்ணும் பழக்கத்தைக் கைவிட்டுவிட்டது, ஆனால் அவர்களின் துன்பமும், சமூக ஒடுக்குமுறையும் தொடரத்தான் செய்கிறது. அதைப் பேசக்கூட முடியாது. அவர்கள் மீதுபொருளாதாரத் தடை மற்றும் சமூக ஒதுக்கலும் நிகழ்கிறது. காலம் காலமாக அவர்கள் பயிரிட்டு வந்த நிலங்கள் சாதி இந்து நிலப்பிரபுக்களால் பறிக்கப்பட்டுவிட்டன. மீண்டும் அசுத்தப் பணிக்கு அவர்கள் திரும்ப வேண்டும் என்பதற்காக எல்லாவிதமான சமூக, பொருளாதார நெருக்கடிகளும் அவர்கள் மீது தொடுக்கப்படுகின்றன” (அம்பேத்கர், தொகுதி 2, பக். 484).

இந்தத் தகவல்கள் உணர்த்துவது என்ன? அது இரண்டுவிதமானச் சூழலை விளக்குகிறது:

(1) உற்பத்தி சாதனம் இல்லாததால்வறுமை’.

(2) ‘சாதிஎன்னும் வடிவத்திலானஉழைப்புப் பிரிவினையால் நிலவும்தீண்டாமை’.

இந்த இரண்டு நிலைமைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. இருந்தாலும் முடிந்தவரை அவற்றை நாம் தனித்தனியே புரிந்து கொள்ள வேண்டும்.

        (1) வறுமை: தீண்டப்படாதோர், நிலத்தையோ, உற்பத்தி சாதனத்தையோ உடைமையாகக் கொண்டிருக்கவில்லை. அப்படியே இருந்தாலும், அது சொற்பமான அளவே. மற்ற ’கீழ்’ சாதி மக்களுக்கு, மற்றும் சில ’மேல்’ சாதி மக்களுக்கும் இந்நிலை பொருந்தும். பெருமளவிலான உற்பத்திச் சாதனம் ’மேல்’ சாதியின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. துல்லியமாக, அதுவே அச்சாதியினரின் ஆயுதம்.

        (2) தீண்டாமை: விவசாயம் மட்டுமல்லாது, தெருவைச் சுத்தம் செய்தல், மலம் அள்ளுவது, இறந்த விலங்குகளைப் புதைப்பது, கழிப்பறையைச் சுத்தம் செய்வது ஆகிய பணிகளும் தீண்டப்படாதோரின் பணிகள். சமூகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் தேவையான மிகவும் அடிப்படைப் பணிகள் இவை. விவசாயம் தொடர்பான பணிகள் தீண்டப்படாதோர் மற்றும் சூத்திரர்களுக்கானவை. ஆனால், துப்புரவுப் பணி தீண்டப்படாதோருக்கு மட்டுமேயானது. துப்புரவுப் பணிகளால்தான் தீண்டாமை நிலவுகிறது என்று சொல்ல முடியாதென்றாலும், ‘தீண்டப்படாதோரே அசுத்தப் பணிகளைச் செய்கின்றனர்என்று சொல்லலாம். இதன் மூலம் நாம் வறுமை மற்றும் துப்புரவுப் பணி என்பதை தீண்டப்படாதோர் மத்தியில் மட்டுமே காண்கிறோம். இதற்குத் தீர்வுதான் என்ன?

        உழைப்புச் சுரண்டலால்வறுமைதோன்றுகிறது, எனவே உழைப்புச் சுரண்டலை ஒழிப்பதே அதற்கான தீர்வு.  சமூகத்தின் ஒவ்வொரு நபரும் உழைக்க வேண்டும். உழைப்பைச் செலுத்தாத ஒரு வர்க்கம் கூட இருக்ககூடாது என்பதே இதன் பொருள். தீண்டப்படாதோர் மட்டுமே துப்புரவுப் பணிகளைச் செய்ய நேர்வதால், கூலி முறையை ஒழிப்பதும், சுரண்டலுக்கான உறவுகளிலிருந்து எழுந்த உழைப்புப் பிரிவினையை ஒழிப்பதுமே அதற்கு தீர்வு. இதன் பொருள், ஒரு குறிப்பிட்ட பிரிவுக்கு மட்டும் துப்புரவுப் பணிகள் ஒதுக்கப்படக்கூடாது. ஒவ்வொரு ஆணும், பெண்ணும் அதைத் தன் கடமையென்று செய்ய வேண்டும். இவ்வாறாக, நாம் பழைய உழைப்புப் பிரிவினை முறையை மாற்ற வேண்டும். 

          நாம் மற்ற ’கீழ்’சாதியினரை எடுத்துக் கொண்டாலும் அவர்களிலும் இதே பிரச்சினை நிலவுகிறது: (1) வறுமை மற்றும் (2) உடல் உழைப்புக்கு மட்டுமே ஆளாதல். வறுமை என்பது உழைப்புச் சுரண்டலின் விளைவு. உடலுழைப்புக்கு மட்டுமே உள்ளாதல் என்பது பழைய உழைப்புப் பிரிவினையின் விளைவு. இங்கும், நமக்கு அதே தீர்வுதான் வழி.

          உற்பத்தி சாதனத்தின் பொருளாதாரப் பெயர்சொத்து. இது நிலம் மற்றும் இதர வளங்களைக் குறிக்கிறது.

          சாராம்சத்தில் சொத்து இரு வகைப்படும்: 1. தன் சொந்த உழைப்பை அடிப்படையாகக் கொண்ட சொத்து; 2. சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட சொத்து.

          (1) தன் சொந்த உழைப்பினால் கிட்டிய சொத்து: உதாரணத்திற்கு, ஒரு குடும்பத்திடம் 4 ஏக்கர் விவசாய நிலமிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நிலமிருப்பதாலேயே பயிர் விளைவதில்லை. அதற்குப் பல வகையான உழைப்பைச் செலுத்த வேண்டும். நிலத்தில் பயிர்விளைவிக்க அக்குடும்பத்தில் உள்ள ஆணும் பெண்ணும் பலவிதமான உழைப்பைச் செலுத்துகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் கிடைத்த பயிரின் ஒரு பகுதியை விற்று, மற்றவர்களிடமிருந்து தமது வாழ்விற்குத் தேவையான பொருட்களை வாங்கி வாழ்கிறார்கள் என்றால், அவர்கள் தங்கள் சொந்த உழைப்பில் வாழ்கிறார்கள் என்று பொருள்.  இங்கு, மற்றஉழைப்பாளிகளைபணிக்கமர்த்தும் அவசியம் வரவில்லை. அதனால் இங்குஎஜமானர், உழைப்பாளிஉறவு இல்லை. இந்தக் குடும்பத்திற்கு 100 ஏக்கர் நிலங்கள் சொந்தமாக இருப்பின், தங்களுடைய சொந்த உழைப்பைக் கொண்டு ஒட்டு மொத்த நிலத்தையும் அக்குடும்பத்தால் உழ முடியாது. வேறு சொற்களில் சொல்வதானல், ஒவ்வொரு குடும்பமும் தம்மால் உழைக்கக்கூடிய அளவுக்கான உற்பத்தி சாதனங்களை மட்டுமே உடைமையாகக் கொண்டிருக்க வேண்டும். தன்னுடைய உழைப்பின் ஒரு பகுதி மற்றவற்களுக்குச் செல்லவில்லையென்றால், ஒருவர்ஏழ்மையில்வாழும் நிலை ஏற்படாது. அதேபோல், மற்றவரின் உழைப்பின் பகுதி தமக்குக் கிடைக்கவில்லையென்றால் ஒருவர்செல்வத்தைப்பெற முடியாது. ஒவ்வொரு மனிதரும் தமது சொந்த உழைப்பால் வாழும் அமைப்பில் ஏழ்மையோ, செல்வமோ நிலவாது என்பதே இதன் பொருள். அத்தகையச் சூழலில், வாழ்க்கை இயல்பாக இருக்கும் ஏனென்றால், வாழ்வின் தேவைகள் நிறைவேறப்பட்டு அங்கு தட்டுப்பாடோ, கூடுதலோ இருக்காது. எல்லாக் குடும்பங்களும் இதேபோல் வாழ்கின்றன என்று எடுத்துக் கொண்டால், எவரும் எஜமானரும் இல்லை, உழைப்பாளரும் இல்லை. எல்லா மனிதர்களும்சமஉழைப்பு உறவில் வாழ்வர். ஒவ்வொரு மனிதரும் / குடும்பமும் தனித்தனியாக வாழும் சமூகம்தனிநபர் உற்பத்தியாளர்களின் சமூகம்’. அது, ‘தனி நபர் உற்பத்தியாளர்களின் சொத்துடைமை அமைப்புஎன்றாகும். 

          இந்த எல்லாத் தனிநபர்களும் தங்களுடைய தனிச்சொத்துக்களை ஒன்றிணைத்து, முன்னர் போலவே உழைத்தால் அதுகூட்டு உற்பத்தியாளர்களின்சமூகமாகும். வேறு சொற்களில் சொல்வதானால், அது கூட்டு உற்பத்தியாளர்களின் அமைப்பு.

          எல்லா நபர்களும் உழைப்பதால்தனிநபர் உற்பத்தி சொத்துடைமை அமைப்பிலோ அல்லது, கூட்டு உற்பத்தி சொத்துடைமை அமைப்பிலோ உழைப்புச் சுரண்டல் இருக்காது. ஒரு தனிநபர்கூட ஏழ்மையில் வாழும் நிலை ஏற்படாது. எஜமானர், உழைப்பாளி என்னும் சமமற்ற உழைப்புசார் உறவு (உற்பத்தி உறவு) நிலவாது. (அல்லது ஏற்றத்தாழ்வுடன் கூடிய உற்பத்தி உறவுகள் நிலவாது).

          (2) உழைப்புச் சுரண்டலினால் நிலவும் சொத்துடமை அமைப்பு:  இது முதலில் சொன்ன அமைப்பிலிருந்து முற்றிலும் மாறானது. இதைப் புரிந்துகொள்ள, முதலில் சொன்ன அமைப்பைத் தலைகீழாகப் போட்டால் போதுமானது. இந்த சொத்துடைமை அமைப்பில், ஒரு சிறுபான்மைக் கூட்டம் சொத்துடைமையின் பெயரால் நிலத்தையும், மற்ற உற்பத்தி சாதனங்களையும் கொண்டிருக்கும். பெரும்பான்மை நபர்களுக்கு சொத்திருக்காது. உற்பத்தி சாதனங்கள் தாமாக பொருளை உற்பத்தி செய்யாது. அந்த உற்பத்தி சாதனத்தைக் கொண்டு பலவிதமான உழைப்பைச் செலுத்தினாலே வாழ்க்கைக்குத் தேவையான பொருளீட்ட முடியும். ஆனால் இந்த அமைப்பில், உற்பத்திச் சாதனங்களைக் கொண்டிருப்போர் உழைப்பைச் செலுத்துவதில்லை. அவர்கள் எஜமானர்களாகி, உற்பத்தி சாதனங்களற்றோரை, உழைப்பாளிகளாகப் பணிக்கமர்த்துகின்றனர். அதன் பிறகு நடப்பதென்ன என்பது வெட்டவெளிச்சம். உழைப்பாளிகளின் பெருமளவிலான உழைப்பு எஜமானர் வர்க்கத்திற்கு செல்கிறது. இப்படித்தான் அந்த வர்க்கம் வாழ்கிறது. இது உழைப்புச் சுரண்டலின்றி வேறில்லை. இது பலவித அடையாளங்களின் கீழ் நடக்கிறது: ‘நிலத்திற்கு வாடகை’, ‘சொத்துக்கு’ ‘வட்டிமற்றும்இலாபம்’. ஒட்டுமொத்த சுரண்டலின் இரகசியமும், இந்த மூன்று வருவாயில் ஒளிந்திருக்கிறது: வாடகை, வட்டி மற்றும் இலாபம்.  இந்த வருவாய் மூலங்கள் ஒருவருடைய சொந்த உழைப்பால் கிட்டுவதில்லை. இந்த சொத்துடைமை முறையில், உழைக்கும் வர்க்கத்திற்கு வறுமையும், எஜமானர் வர்க்கத்திற்குச் செல்வமும் வாழ்க்கை நிலைமைகளின் அங்கங்களாகின்றன.

          இந்தச் சொத்துக்கள் அடிமை உடைமையாளர்களின் சொத்து என்பதாகவோ, முதலாளிகளின் சொத்து என்பதாகவோ, அல்லது இதே பண்புகளோடு வேறு பெயர்களைக் கொண்டதாலோ நிலவுகின்றது.

          மனித சமூகத்தின் பண்டையக் காலத்தை விட்டுவிட்டுப் பார்த்தால், இன்றுவரை நிலவும் வரலாறு முழுக்க சுரண்டல் உறவின் பல வடிவங்களையே கொண்டிருக்கிறது.

          சாதியமைப்பைஎடுத்துக் கொண்டாலும், தீண்டப்படாதோரும், சூத்திரர்களும் ’மேல்’ சாதியினருக்குப் பணி செய்யும் உழைப்பாளிகள். இந்தப் பிரிவு செலுத்தும் உழைப்பு முழுவதும் உடலுழைப்பே. ’மேல்’ சாதியின் ஒரு பிரிவு உடலுழைப்பைச் செலுத்தாமல், மூளை உழைப்பைச் செலுத்துகிறது. ’கீழ்’ சாதியினருக்கு மூளை உழைப்பைச் செலுத்தி பிழைக்கும் வாய்பு இல்லை.

          இதுவே அவர்களின் நிலைமை. இந்த நிலைமைகளை நாம்வறுமை’, ‘சாதிப் பாகுபாடுஎன்று பகுத்துக் காண வேண்டும்.

          வறுமைக்கானத் தீர்வுஉழைப்புச் சுரண்டலைஒழிப்பது. எல்லா மனிதரும் உழைத்து வாழ வேண்டும். சுரண்டலின் விளைவால் ஈட்டும் சொத்துடைமை அமைப்பை ஒழிக்க வேண்டும். ‘சாதியப் பாகுபாட்டிற்கானதீர்வு, சுரண்டல் நிறைந்த உழைப்புப் பிரிவினையை மாற்றி அமைக்க வேண்டும்.  ஒவ்வொரு நபரும் ஒரு குறிப்பிட்ட அளவு உடலுழைப்பையும் (அசுத்தப் பணிகள் உட்பட), குறிப்பிட்ட அளவு மூளை உழைப்பையும் செலுத்தி வாழ வேண்டும். சாதிக் கலப்புத் திருமணம் போன்ற சில மேல்மட்ட மாற்றங்களும் இந்த மாற்றத்தின் ஒரு பகுதியே.

          தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு மற்றும் வறுமை ஒழிப்பு போன்ற எல்லாப் பிரச்சினைகளையும் அம்பேத்கர் விவாதித்தார். மேலும், ‘மதம்என்பதை மனித சமூகத்தின் ஒரு இலக்காக அவர் சேர்த்துக் கொண்டார். இனி வரும் அத்தியாயங்களில் இந்தப் பிரச்சினைகளை நாம் ஆய்வு செய்ய வேண்டும்.

…. (சாதியப் பிரச்சினைக்கான தீர்வு: புத்தர் போதாது, அம்பேத்கரும் போதாது! மார்க்ஸ் அவசியத் தேவை, பக். 152 – 155)

இந்தச் சொற்களுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்தப் பொருளாதாரத்திற்கும் இரண்டு பொருள் உள்ளது. உழைப்புச் சுரண்டலை மேற்கொள்வதற்கான எல்லாவிதமான பொருளாதார உரிமைகளையும், ஒத்த உறவுகளையும் அங்கீகரிப்பதே முதல் வகையான பொருளாதாரம். அதுவே முதலாளித்துவப் பொருளாதாரம் அல்லது பூர்ஷுவா பொருளாதாரம். அதற்கு எதிரான பொருளாதாரமே இந்த உழைப்புச் சுரண்டலை எதிர்க்கிறது, பூர்ஷுவா பொருளாதாரத்தை நிராகரிக்கிறது. அதுவே மார்க்ஸியப் பொருளாதாரம் அல்லது கம்யூனிசப் பொருளாதாரம். 

          உழைப்புச் சுரண்டலை ஒழிப்பதற்கும், சமத்துவத்தை ஈட்டவும் மார்க்ஸியப் பொருளாதாரம் மூன்று விசயங்களை முதன்மையாகத் தருகிறது.

1)       ஆண் பெண் உள்ளிட்ட அனைத்து நபர்களும் உழைக்க வேண்டும். அவர்களுடைய உழைப்பே அவர்களின் வாழ்வாதாரத்திற்குப் பொருள் ஈட்டித்தர வேண்டும்.
          2)       வருமானத்தை ஈட்டித்தரும் வாடகை, வட்டி, இலாபம் மற்றும் சுரண்டல்வாதச் சொத்துரிமை ஆகியவற்றை ஒழிக்க வேண்டும்.
          3)       ஒரு நபர் உடல் உழைப்பையும், மற்றவர் மூளை உழைப்பையும் செலுத்தும் சுரண்டல்வாத உழைப்புப் பிரிவினையை ஒழிக்க வேண்டும். எல்லா ஆண்களும், பெண்களும் குறிப்பிட்ட அளவு உடல் உழைப்பு, குறிப்பிட்ட அளவு மூளை உழைப்பு செலுத்தும் புதிய வகை உழைப்புப் பிரிவினையை நிறுவ வேண்டும்.

          இந்த மாற்றங்கள் நிகழ்ந்தால் மட்டுமே, உழைப்புசார் சுரண்டல்வாத உறவுகள் சமமான உழைப்புசார் உறவுகளாகும் (உற்பத்தி உறவுகளாகும்). சுரண்டல்வாதச் சமூகம் ஒரு புதிய தன்மை கொண்ட சமூகமாக மாறும்.

          மார்க்சியம் குறித்த அறைகுறை ஞானம் உடையவர்களே அது முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் உறவு பற்றி மட்டும் பேசுகிறது, பெண்கள் உட்பட சமூகத்தின் மற்ற பிரிவுகள் குறித்துப் பேசவில்லை என்று கருதுகின்றனர். ஆனால் அது முற்றிலும் தவறானது.

          அடிமைச் சமூகக் காலத்திலிருந்து வரலாற்றில் நாம் எந்தக் காலத்தை எடுத்துக் கொண்டாலும், சமூகம் பல வர்க்கங்களாக, உட்பிரிவுகளாக பிளவுபட்டிருப்பதைக் காண முடியும்.  ஆனால் அந்த வர்க்கங்களும், உட்பிரிவுகளும் அடிப்படையில் இரண்டு வர்க்கங்களாகச் சுருங்கி நிற்கும், அவை: உழைக்கும் வர்க்கம், உழைக்காத வர்க்கம். மூன்றாவதாக ஒரு வர்க்கம் ஒரு பகுதி தனது உழைப்பிலும், ஒரு பகுதி சுரண்டலிலும் வாழ்ந்தாலும், அந்த உட்-பிரிவுகளில் ஒரு பகுதியை நாம் உழைக்கும் வர்க்கமெனவும், ஒரு பகுதியை உழைக்காத வர்க்கம் எனவும் வகுத்துக் கொள்ளலாம். மொத்தத்தில் ஒட்டுமொத்த மக்கள் தொகையும் - ஆண், பெண் மற்றும் முதியவர் அனைவரும் இந்த இரண்டு வர்க்கத்தின் கீழ் வருபவரே. இந்த இரண்டு வர்க்கம் பற்றிய குறிப்பு ஒட்டு மொத்த சமூகத்தையும் குறிப்பதாகும்.

          எஜமானர் என்ற சொல்லை நாம் பயன்படுத்தினால், அவர் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் அந்த பதத்தின் கீழ் வருவர். உழைப்பாளர் என்ற சொல்லை பயன்படுத்தினால், அவர் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் அந்த பதத்தின் கீழ் வருவர். இந்த இரண்டும் சேர்ந்து முழுச் சமூகமாகிறது.

           உற்பத்தி ஈட்டும் உழைப்பு, உற்பத்தி ஈட்டாத உழைப்பு மற்றும் குடும்ப உழைப்பு என்று வெவ்வேறு வகையான உழைப்புசார் உறவுகள் இந்த சமூகத்தில் பின்னிப் பிணைந்திருக்கின்றன.

          ஆண், பெண், இளைஞர் என எல்லாரும் ஏதோ ஒரு வர்க்கம் அல்லது ஒரு வர்க்கப் பிரிவின் கீழே வருவர். உழைப்புசார் உறவில் ஒருவர் பெறும் இடமும், வாழ்வாதாரத்திற்கான அவரது பொருளீட்டும் முறையும் வர்க்கத்தில் அல்லது பிரிவில் அவரது இடத்தைத் தீர்மானிக்கிறது.

          பிச்சைக்காரர்கள், சிறைக் கைதிகள், அனாதை ஆசிரமத்தில் வசிப்போர், மத நிறுவன ஊழியர்கள், ரௌடிகள் போன்றோரும் தங்களது வருமான ஆதாரத்தைப் பொறுத்து ஒரு ஏதோ ஒரு வர்க்கத்தின் கீழ் வருவர். இந்த உதாரணங்களில், மத நிறுவனங்களில் வாழ்வோர் தவிர மற்ற அனைவரும் தொழிலாளர் வர்க்கத்தைச் சார்ந்தவர்கள். விலை மாதர்களும் ஒரு தொழில் செய்து வாழ்கின்றனர் என்றாலும், அதை உழைப்பு என்று சொல்ல முடியாது. விலைமாதர்கள், ரௌடிகள் உழைப்பாளிகள் அல்லர்.

          இந்த உழைப்புசார் உறவுகள் (உற்பத்தி உறவுகள்) அனைத்தையும் நாம் புரிந்து கொண்டால், சமூகத்தின் ஒட்டுமொத்த மக்கள் குறித்தும் மார்க்சியம் பேசுகிறது என்பது விளங்கும். 

(சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு: புத்தர் போதாது! அம்பேத்கர் போதாது! மார்க்ஸ் அவசியத் தேவை, பக். 189 – 190)

சிறு குறிப்பு: இந்நூல் தான் நான் மொழிபெயர்த்த முதல் நூல். ஆகவே மொழிபெயர்ப்புக்கு நேர்மையாக இருப்பது என்னும் புரிதலின் காரணமாக lower, upper என்பதை அப்படியே மேல், கீழ் என்று மொழிபெயர்த்திருந்தேன் (Oppressed, Depressed என்றால் மட்டுமே ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என்று பொருள். அம்பேத்கர் அவர்களின் எழுத்துகளை மொழிபெயர்த்திருப்பவர்களும் இத்தகைய தவறுகளை செய்துள்ளனர்). பின்னர் தோழர் அரங்க. குணசேகரன் அவர்கள் அது தவறு என்பதை சுட்டிக்காட்டி, குறைந்தபட்சம் அடைப்புகுறிகளுக்குள் நீங்கள் போட்டிருக்கலாம் என்றார். ஆனால் அதற்குள் நூல் வெளி வந்துவிட்டது.

ஆகவே இப்போது நான் அதையே மேற்கோள் காட்டியிருப்பதால் மொழிபெயர்ப்பை மாற்றுவது நேர்மையாக இருக்காது. ஆனால் அது அதிகாரச் சொற்கள் என்பதால் அடைப்புக்குறியை மட்டும் சேர்த்துள்ளேன்.

மொழிபெயர்ப்பு தவறுக்காக மன்னிப்பு வேண்டுகிறேன்.