Apr 27, 2020

இலாபம் என்பதே மாபெரும் பொய்!



பல்வேறு காரணங்களால் இந்நூலை வெளிக்கொண்டு வருவதில் தாமதம். தற்போது ஊரடங்கு! இருப்பினும், முதலாளித்துவத்தின் வீழ்ச்சியால் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரச் சுமையை தொழிலாளர்கள் மீதும், ஏழை மக்கள் மீதும் சுமத்த முன்வைக்கப்படும் முதலாளித்துவ இலாப மைய்யவாதத்தை ஒட்டி அவசியமான சிறு பகுதியை மட்டும் இங்கே பகிர்கிறேன்.
53. ‘மூலதனம்’ என்பது மாபெரும் பொய்! – ரங்கநாயகம்மா, குழந்தைகளுக்கான பொருளாதாரக் கல்வி: மார்க்சின் மூலதனத்தை அடிப்படையாகக் கொண்ட பாடங்கள்.
54. இலாபம் யாருக்கு: மூலதனத்திற்கா முதலாளிக்கா?
மூலதனமே இலாபத்தை ஈட்டுகிறது என்பதுபோல் “மூலதனம் என்று ஒன்றை முதலீடு செய்தால், அது இலாபம் ஈட்ட வேண்டும்” என்று முதலாளித்துவ அறிவுஜீவிகள் சொல்கின்றனர். ஆனால், உண்மையில், மூலதனம் இலாபத்தைப் பெறுவதில்லை, முதலாளிதான் இலாபத்தைப் பெறுகிறார்!
‘மூலதனம் என்றால் என்ன? உற்பத்திச் சாதனங்கள் மற்றும் உழைப்பாளர்களின் பிழைப்பாதாரப் பொருட்கள். இந்த இரண்டும் சேர்ந்ததுதான் மூலதனம்.
ஒரு பொருளை உற்பத்தி செய்ய இரண்டு பொருட்கள் செலவாகிறது: (1) சிறிது உற்பத்திச் சாதனங்கள், (2) சிறிது புதிய உழைப்பு. யார் அந்தப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்களோ, அவர்கள் மீண்டும் அதே உழைப்பைச் செலுத்த வேண்டும், இல்லையேல் அந்தப் பொருளை மீண்டும் உற்பத்தி செய்ய முடியாது. யார் அந்தப் பொருட்களை வாங்குகிறார்களோ, அவர்கள் அதன் மொத்த மதிப்பையும் (மொத்த உழைப்பையும்) விலை கொடுத்து வாங்க வேண்டும். அப்பொழுதுதான், அதே மதிப்புடன் அந்தப் பொருளை மீண்டும் உற்பத்தி செய்ய முடியும்.
ஒரு பொருள் முதலாளியால் உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்பட்டால், அதன் மொத்த மதிப்பும் முதலாளிக்கே செல்கிறது. அந்த மதிப்பின் ஒரு பகுதி இலாபம். அது என்ன இலாபம்? இலாபம் என்ற ஒன்றை அவர் எடுக்கவில்லை என்றால், அந்தப் பொருளை மீண்டும் அவர் உற்பத்தி செய்ய முடியாதா?
ஒரு டன் எடையுள்ள துணியை உற்பத்தி செய்ய, 10 மதிப்பிலான ஒரு கத்தரிக்கோல் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு, தேய்மானம் அடைந்து விடுகிறது.(கத்தரிக்கோல் மட்டுமல்ல, இதர கருவிகளும் பயன்படுத்தப்படும். உதாரணத்திற்கு நாம் கத்தரிக்கோலை எடுத்துக்கொண்டோம். மற்ற கருவிகளுக்கும் இது பொருந்தும்.)கத்தரிக்கோலின் மதிப்பு 10. அது முழுவதும் தேய்ந்து விட்டது. அந்தக் கத்தரிக்கோலின் மதிப்பான 10 மட்டுமே சரக்கில் சேரும். அந்தச் சரக்கு விற்பனை ஆன பின்னர், கத்திரிக்கோலைப் பொறுத்தவரை, அதன் மதிப்பான 10 அப்படியே திரும்பி வந்துவிடும்.
கத்தரிக்கோலின் மதிப்பில் கூடுதலாக ஏதுமில்லை என்பதால், சரக்கு விற்றபின் கூடுதலாக ஏதும் வராது. 10 மதிப்பிலான மதிப்பைக் கொண்ட கத்தரிக்கோலைப் பயன்படுத்தி செய்த ஒரு பொருளில், அதற்கும் கூடுதலான மதிப்பு கிடைத்தால், அது கத்தரிக்கோலிலிருந்து வந்ததாகக் கருத முடியாது. ஒரு புதிய கத்தரிக்கோலை வாங்க, அந்தக் கூடுதல் மதிப்பு தேவையில்லை. பழைய மதிப்பிலேயே அதை மறு உற்பத்தி செய்ய முடியும். அதாவது, ஒரு புதிய கத்தரிக்கோலை செய்ய, பழைய கத்தரிக்கோலின் மதிப்பு அப்படியே திரும்பி வந்தால் போதும். ஒரு புதிய கத்தரிக்கோலில், பழையதைக் காட்டிலும் கூடுதல் மதிப்பு சேர்வதில்லை.
ஒரு சரக்கில் சேர்த்திருக்கும் கூடுதல் மதிப்பை இலாபம் என்று எடுத்துக் கொண்டால், கத்தரிக்கோலுக்கு அந்த இலாபம் தேவையில்லை. இலாபம் என்பது அதனுள் பொதிந்தில்லை. இலாபத்தை அது தன் தேவைக்காகப் பயன்படுத்துவதுமில்லை.
எந்தவொரு உற்பத்தி சாதனங்களுக்கும் இது பொருந்தும். அதன் உண்மை மதிப்பைக் காட்டிலும் கூடுதலான மதிப்பு உற்பத்தி சாதனங்களில் சேரவில்லை என்றாலும், அதை மறு உற்பத்தி செய்யப் பிரச்சினை ஏதும் இருக்கப் போவதில்லை. ஆக, ஒரு சரக்கிலிருந்து வரும் இலாபம் என்பது உற்பத்திச் சாதனங்களின் பொருட்டு ஈட்டப்படுவதில்லை. உற்பத்தி சாதனங்களுக்கு இலாபம் தேவையில்லை.
மூலதனம் 100இல் 80 உற்பத்திச் சாதனங்களின் மதிப்பு என்றும் 20 தொழிலாளர்களின் பராமரிப்புக்கான மதிப்பு (கூலி) என்றும் வைத்துக் கொள்வோம்.
ஒரு சரக்கு உற்பத்தி ஆன பின்னர், முதலீடு செய்த மூலதனம் 100ஐக் காட்டிலும் கூடுதலாக 20 கிடைக்கிறது என்றால், அந்தக் கூடுதல் மதிப்பானது உற்பத்தி சாதனங்களாலோ அல்லது தொழிலாளர்களின் பராமரிப்பு மதிப்பிலிருந்தோ கிடைக்கும் ஒன்றல்ல. உற்பத்தி சாதனங்களை மீண்டும் வாங்க, அதற்காகக் கொடுத்த 80 மதிப்பு கிடைத்தாலே போதும். அதேபோல் தொழிலாளிக்குக் கொடுத்த பராமரிப்புப் பொருட்களைத் திரும்பப் பெற, அதே 20 மதிப்பு போதும். மூலதனத்தின் எந்த அம்சத்திற்கும் அந்தக் கூடுதல் மதிப்பான 20 தேவை இல்லை. போட்ட முதலீடான 100ஐ மீண்டும் எடுத்துவிட முடியும். அதற்குக் கூடுதல் மதிப்பு ஏதும் தேவையில்லை.
இவ்வாறாக, மூலதனம் கொண்டு ஈட்டப்பட்ட இலாபம் என்பது மூலதனத்திற்கானது அல்ல. ஆனால், “மூலதனம் போட்டால் இலாபம் வேண்டாமா?” என்கின்றனர். ஆனால், மூலதனத்திற்கு இலாபம் தேவையில்லை.

அப்படியென்றால், இலாபம் என்பது யாருடைய தேவை?அது முதலாளியின் தேவை! எதற்காக அவருக்கு இலாபம் தேவை? உழைக்காமல் வாழ்வதற்கு.
*******
முதலாளிகளின் மூளைத் திறன் தான் தொழில் வளர்ச்சிக்கு காரணம் என்போர், முதலாளியின் மூளையை கழட்டி ஓர் இயந்திரத்தின் அருகில் வைக்கவும், இயந்திரம் வேலை செய்கிறதா என்று பார்ப்போம். இது மாதிரி கேனைத்தனமான வாதத்திற்கெல்லாம் காலம் காலமாக பதில் சொல்லியாகிவிட்டது. இந்த நூல் முழுமையாக வெளிவரும் வரை இந்த ஊடகத்தில் விவாதிக்க இயலாது. இனி எல்லா பதில்களும் நூல்களின் வாயிலாக மட்டுமே. நன்றி, கொற்றவை.


Apr 26, 2020

பெண்கள் தங்கள் முற்போக்கு அறிவை யாரிடம் மெய்ப்பிக்க வேண்டும்?

பெண்கள் மயிர் வெட்டி தான் தங்கள் முற்போக்கு அறிவின் தெளிவை மெய்ப்பிக்க வேண்டுமெனில்.. ஆணுக்கு எதை வைத்து அவர் முற்போக்குவாதி, அனைத்திலிருந்தும் விடுபட்டவர் என்று அளப்பது?
ஆம்பிளை அடையாளம் தானே மீசை, தாடி? பெரியார், மார்க்ஸ், ஏங்கல்ஸ்,லெனின் என எல்லாரும் வைத்திருந்தார்கள்... முகப்பு படம் கூட வைக்க துணிவில்லாதவர்கள் ஆண்களை பார்த்து இக்கேள்வியை கேட்பார்களா?
முற்போக்கு ஆண்களே மீசையை மழியுங்கள்.. தாடி மயிர் வைக்காதீர்கள்.. நீங்கள் முற்போக்குவாதி... அதிலும் புரட்சிகர ஒரிஜினல் கம்யூனிஸ்ட் முதலில் மயிரை நீக்குங்கள் உலகுக்கு உங்களின் ஆணாதிக்க அடையாள துறப்பை மெய்ப்பியுங்கள் என்று கூறுவார்களா? 
கண்காணிப்பு அரசியல், தூய்மைவாதம், வரட்டு வாதம் இதெல்லாம் உங்களிடமிருந்து ஒழியாதா?
******** 
பெரியாரை படிக்கத் தொடங்கிய நாள் முதல் “பெண்கள் அழகுணர்ச்சியிலிருந்து விடுபட வேண்டும்” என்றும் “பெண்கள் என்ன நகை மாட்டும் ஸ்டாண்டா” என்று பெரியார் கேட்கிறார் என்பதையெல்லாம் குறிப்பிட்டு எழுதியும் வந்துள்ளேன். பின்னர் மார்க்சியம் கற்ற பின்னர் நுகர்வு கலாச்சாரத்திலிருந்து விடுபடுவதன் அவசியத்தை பெண் உடல், உடை, உறவு ஆகியவற்றை உள்ளடக்கி எழுதியும், பேசியும் வந்துள்ளேன். அதில் மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனால் நிச்சயமாக தத்துவப் பிழை இருக்காது என்றே நம்புகிறேன்.
இது எதுவும் தெரியாமல் புதிதாக என் பதிவுகளுக்கு பின்னூட்டம் இட வருபவர்கள் அவ்வப்போது பல பட்டங்களை வழங்கிச் செல்வார்கள்.
பெண்கள் அழகுணர்ச்சியிலிருந்து விடுபடுதல் என்பது ஆணைப் போல செய்தலோ அல்லது ஆண் வரையறுத்திருக்கும் முற்போக்கு அளவையை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு மெய்ப்பித்தலோ அல்ல. அது அவசியமும் இல்லை. ஒருவர் தம் உடலை தன் அடையாளமாக கருதுவதைவிட தன் அறிவை அடையாளமாக கருத வேண்டும் என்பதே அழகுணர்ச்சியிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்கான பொருள்.
தன்னை அடுத்தவருக்காக அழகுபடுத்திக்கொள்ளுதல் என்பதிலிருந்து விடுபடுதல்; அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதை தவிர்ப்பது, அழகுநிலையங்களுக்கு சென்று அழகுபடுத்திக்கொள்வதை தவிர்ப்பது என்று சில கொள்கைகளை பின்பற்றலாம். ஆனால் ஆணாதிக்க முதலாளித்துவ நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு (ஆண்களுக்கும்) இதை முற்றிலும் தவிர்க்க முடியுமா? Grooming என்றொரு அளவை கொண்டே இங்கு வேலை கொடுக்கப்படும். வேலைக்கு வரும் பெண்கள் ஒப்பனை அணிவது இங்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுய தொழில் செய்பவராக இருந்தாலும் பொதுவெளிக்கென்று ஒரு தோற்றத்தை கொண்டிருக்கவில்லையெனில் அது சார்ந்த மதிப்பீடுகளும் இந்த ஆணாதிக்க உலகின் கேடு!
நிலைமை இப்படி இருக்க துறவு மனப்பான்மைக்கு நிகராக இங்கு சிலர் முற்போக்கு அரசியலின் பெயரால் பெண்களை எல்லா நேரமும் கண்காணித்துக் கொண்டே இருப்பது இணையவெளி அராஜகம். நீங்கள் ஏன் புகைப்படம் போடுகிறீர்கள் என்று சிலர் பலமுறை என்னிடம் கேட்டுள்ளார்கள்.
பிரதான முரண்பாடு, இரண்டாம் முரண்பாடு என்றெல்லாம் பிரித்துக்கொண்டு வேலை செய்வதே தற்போது முக்கியம் என்பவர்கள் ஏன் இப்படி இணையவெளி கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள்? (முற்போக்கு பேசுபவர்களை மட்டும்) தூய்மைவாதம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்?
இவர்களுக்கு உண்மையில் எதிரி யார்?
தனிப்பட்ட நபர்களை கண்காணித்து தூய்மைவாத கேள்விகளை எழுப்புவதுதான் முற்போக்கு அரசியலா? எந்த தத்துவத்தில் அது உள்ளது? தொடர்ந்து முற்போக்கு அறிவூட்டிக்கொண்டே இருப்பதும், அமைப்பில் அணிதிரட்டி பிற்போக்கான உற்பத்தி முறையை முற்போக்காக மாற்றி அமைப்பதற்கான போராட்டத்தில் மக்களை இணைப்பதும் தானே புரட்சிக்கான தேவை? அதைவிடுத்து ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு அசைவிலும் ஒருவரைப் பற்றிய முன்முடிவுகளை வைப்பதும், முத்திரை குத்துவதும், ஆதாரங்களே இன்றி எதிரி போல் சித்தரிப்பதுமே சிலரின் வேலையாக இருக்கிறது.
மார்க்சியத்தை ஏற்றுக்கொண்டவர்கள் கடைபிடிக்க வேண்டிய ‘சில’ அடிப்படை கொள்கைகள் (ஒரு கம்யூனிஸ்ட் என்பவர் அமைப்பில் இருந்தால் மட்டுமே கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொள்ளும் தகுதி உடையவர் என்பதையும் அறிவோம்):
1. உழைப்புச் சுரண்டலில் ஈடுபடக் கூடாது.
(ஆனால் தனியுடமையின் ஏற்றத்தாழ்வு மிக்க பொருளாதார சூழலில் - சிறு,குறு தொழில் செய்பவர்கள் தற்போதைய முறையின் கீழ் இதனை பின்பற்றுவது சவாலுக்குறியது).
2. வாடகை, வட்டி வாங்கி பிழைக்கக் கூடாது. உழைத்து வாழ வேண்டும்.
3. எந்த வகையிலும், வடிவத்திலும் ஏற்றத்தாழ்வு பார்க்கக் கூடாது.
4. வீட்டில் வேலைப் பிரிவினையை சமமாக வைத்திருக்க வேண்டும்.
5. அதிகாரத்திற்கு விலை போகக் கூடாது. மக்களுக்கு துரோகம் செய்யக் கூடாது.
6. உழைப்புச் சுரண்டல் மூலம் சொத்து சேர்க்கக் கூடாது.
- இதில் சில தெளிவுகளை ஏற்படுத்த வேண்டியுள்ளது. தம் உழைப்பில் அல்லது குடும்பத்தினர் சேர்ந்து உழைத்து சுறிதளவு நிலமோ, சொந்த வீடோ, கடையோ வைத்திருந்தால், அப்படி உழைத்து பாட்டன் முப்பாட்டன் சேர்த்த சொத்து பரம்பரையாக வந்திருந்தால் அது உழைப்புச் சுரண்டலில் – அதாவது உபரி மதிப்பில் – தனியுடைமை அபகரிப்பு செய்து ஈட்டிய சொத்து அல்ல – என்பதால் அதை பறிமுதல் செய்யச் சொல்லி வழிகாட்டுதல் இல்லை! (நீ கம்யூனிஸ்டு ஆனா சொந்த வீட்ல இருக்க, கார் வச்சிருக்க என்றெல்லாம் அறியாதவர்கள் கேள்விகள் கேட்பார்கள்! என்கிட்ட சொந்த வீடுமில்ல, காரும் இல்லீங்கோ!)
உழைப்புச் சுரண்டலில் – உபரி மதிப்பு அபகரிப்பில் ஈடுபட்டு சொத்துக் குவிப்பு, செல்வக் குவிப்பில் ஈடுபடுபவர்களின் சொத்து, அவர்களிடம் இருக்கும் உற்பத்திச் சாதனங்கள் (ஏனென்றால் அவை அவர்களின் உழைப்பால் சேர்ந்த சொத்து கிடையாது) போன்றவற்றை – அதாவது முதலாளிகள், பெருமுதலாளிகளின் சொத்துகளை, நிலவுடைமையாளர்களின் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான அவசியத்தைப் பற்றி தான் மார்க்சியம் பேசுகிறது.
புரட்சிகர உற்பத்தி முறை / உற்பத்தி உறவுகளுக்கு மாறுகையில் அதாவது பொதுவுடைமை சமூகத்திற்கு மாறுகையில் படிப்படியாக மாற்றங்கள் நடைபெறும்.
(இந்த பட்டியலில் விரிவாக இன்னும் நிறைய சேர்க்கலாம். நான் இங்கு சுட்டிக்காட்டுவது தனி நபராக ஒருவர் குறைந்தபட்சம் கடைபிடிக்க வேண்டிய கொள்கைகள். இதுவும் மார்க்சியத்தை கற்று அதிலிருந்து சாரமாக முன்வைப்பது…)
7. அதேபோல் #கம்யூனிஸ்டுகள் இந்த வேலைதான் செய்யவேண்டும். இது நல்ல வேலை, அது கெட்ட வேலை என்றெல்லாம் எந்த ‘அறவாதமும்’ தத்துவத்தில் இல்லை. ஓர் அரசு ஊழியர் அரசிடம் வேலை செய்துகொண்டே எப்படி சங்கம் அமைத்து தம் உரிமைக்காகவும், மாற்று அமைப்பிற்காகவும் இந்த அமைப்பிற்குள் இருந்துகொண்டே போராடுகிறாரோ, அதேபோல் தான் தனியார் நிறுவனங்களில் தம் உழைப்புச் சக்தியை விற்று வாழும் நிலையில் உள்ள உழைப்பாளிகளின் நிலையும். கம்யூனிஸ்டா இருந்துக்கிட்டு சீரியல்ல வேலை பார்க்குற, சினிமால வேலை பார்க்குற, நடிக்குற என்றெல்லாம் கேட்பவர்கள் தத்துவத்தை தவறாக முன்வைக்கிறார்கள் அல்லது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் என்றே பொருள். (அறிவார்ந்த வகையில் உரையாட இயலாதவர்கள் வசுவிடம் வைத்த கேள்விகள் இவை).
நிலவும் அமைப்பில் இருந்துகொண்டே தான் மாற்று அமைப்பிற்கான போராட்டங்கள், அறிவூட்டலில் ஈடுபட முடியும். துறவு மனப்பான்மையில் செயல்பட்டால் அது கருத்துமுதல்வாதம் அல்லது பொறாமை.
அமைப்பில் முழுநேரம் ஈடுபட்டு மக்களுக்காக உழைக்கும் தோழர்கள் நிச்சயமாக தியாகிகளே. அதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்துமில்லை. அதற்காக அமைப்பில் இல்லாதவர்களை எல்லா நேரமும் மட்டம் தட்டும் மனநிலையில் இருப்பதென்பது ஓர் அதிகார மனோபாவம். இது முற்போக்கு பண்பாகாது! முற்போக்குவாதி என்பவர் எப்போதும் உரையாடலில் ஈடுபடுவார், குற்றம் கண்டுபிடித்து பெயர் வாங்குபவர் அல்ல!
புரட்சிக்கான வேலைகள் நடந்துகொண்டிருப்பதும், சமூக இயக்கம் ஒரு பொருளாதார அமைப்பின் கீழ் நடப்பதும் சமகாலத்தில் நடைபெறுவதுதான். கிடைக்கும் வேலைகளை செய்துகொண்டு அவரவர் சமூகத்திற்கு பங்களிப்பு செய்வது என்பதும் நடப்பதுதான்.
அதேபோல் பெண்கள் விசயத்திற்கு வருவோம். ஜென்னி, க்ளாரா ஜெட்கின், சிமோன் தே பொவ்வா உட்பட அனைத்து முற்போக்கு பெண்களும் கூந்தல் மயிர் வைத்திருந்தவர்கள், பொதுவெளிக்கேற்ற வகையில் தங்களை ‘அலங்கரித்து’க் கொண்டவர்கள் தானே! அவர்களை முன்வைத்து இந்த முற்போக்கு காவல்கர்கள் கேள்வி கேட்பார்களா?
மதவாதிகளுக்கும் சில #முற்போக்கு ஆர்வக் கோளாறுகளுக்கும் வித்தியாசமில்லை. அதுவும் பெண்களையே தான் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதிலேயே இவர்கள் முற்போக்கு முகமூடி கிழிந்து தொங்கிவிட்டது.
மக்களிடம் #மார்க்சியம், முற்போக்கு #அரசியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்தரப்பட்ட பிரிவினர் நமக்கு தேவைப்படுகிறார்கள். கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அவர்களை குத்திக்கொண்டே இருந்தால், ஓடத்தான் வேண்டும். நாற்காலியை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். அதற்கு போட்டி போட இங்கு யாரும் வரவில்லை.
அமைப்பில் இல்லாதவர்கள் தம்மால் இயன்றதை செய்ய முற்படுகிறார்கள். யாருக்காக? தம் சொந்த நலனுக்காகவா? (விளம்பரப் பிரியை என்றால் வலது பக்கம் போனா இன்னும் சிறப்பான வாய்ப்பும், பணமும், புகழும் கிடைக்கும்).
நட்பு சக்திகளை குடைந்து இவர்கள் என்ன சாதிக்கப் போகிறார்கள்?


Apr 22, 2020

நாம் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் யார்?

அனுபவப் பாடம் 2

இந்த இணைய வெளி தனி மனிதர் ஒருவருக்கு மற்றவர் மீது எல்லையற்ற அதிகாரம் உண்டு என்னும் மாயையை ஏற்படுத்துகிறது. ஆனால் இது மூட நம்பிக்கை!

நாம் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் யார்?

1. தனிப்பட்ட வாழ்வு சார்ந்து - குடும்ப உறுப்பினர்கள். அதுவும் நம்மை சார்ந்திருக்கும் உடனடி / நேரடி உறவுகள் மற்றும் நாம் பொருளாதார ரீதியாக சார்ந்திருக்கும் நபர்/நபர்கள். மற்ற உறவுகளுக்கு நாம் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் அல்லர்.

2. நம்மால் யாரேனும் நேரடியாக பாதிக்கப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட அந்த நபருக்கு நாம் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளோம். அதுவும் அவரிடம் நேரடியாக (அவர் சார்பாக குடும்ப உறுப்பினர்கள் வரலாம்) அல்லது அவர் சட்டத்தை நாடியிருந்தால் சட்டத்தின் முன் நாம் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.

3. சட்டத்திற்குப் புறம்பாக ஏதேனும் நாம் செய்தால் சட்டத்தின் முன் பதில் சொல்ல கட்டமைப்பட்டிருக்கிறோம்.

4. சமூக-அரசியல் ரீதியாக ஏதேனும் கருத்து சொல்லி இருப்பின் கருத்தியல் சார்ந்து அதற்கு விளக்கம் கொடுத்து தெளிவு ஏற்படுத்த முனையலாம். ஆனால் அதை இணைய வெளியில் தான் செய்ய வேண்டுமென்று கட்டாயமில்லை. புத்தகம் / ஊடகம் இதன் வாயிலாக ‘ஓர் எல்லை’ வரை பதில் சொல்லலாம். (தத்துவ / கருத்து தெளிவு ஏற்படுத்த மட்டுமே).

5. விமர்சனம் / திறனாய்வு எழுத்துகளாக இருப்பின், எதிர் கருத்துடையோர் தமது விமர்சனங்களை கருத்தியல்பூர்வமாக வைத்தால் அவசியமிருப்பின் பதில் சொல்லலாம்! (நாம் சொல்ல வேண்டியதைத்தானே ஏற்கனவே விமர்சனமாக வைத்துள்ளோம்). நூலாக வெளியிட்டிருந்தால் பதிலுக்கு எப்போது முடியுமோ அப்போது நூலாக நாமும் பதில் அளிக்கலாம். ஆனால் அது சட்டப்படி கட்டாயமில்லை.

அவதூறு என்று கூறுவார்களெனில் அதற்கு சம்பந்தப்பட்ட நூலே சாட்சியாக அமையும். மேற்கொண்டு விளக்கங்கள் தேவைப்படப் போவதில்லை. அரசியல் களத்தில் இத்தகைய கருத்துமோதல்கள் இயல்பே. ஆயுசு இருக்கும் வரை “நீ என் தலைவரை விமர்சிச்ச”, “நீ இதைப் பண்ண நீ அதைப் பண்ண” என்று வசைபாடிக்கொண்டே தான் இருப்பார்கள். ஒவ்வொரு பொலம்பலுக்கும், பின்னூட்டத்துக்கும் பதில் சொல்லிட்டிருக்கும் அவசியமில்லை! (இவர்களால் அறிவார்ந்த வகையில் பதில் சொல்லவே இயலாது!)

6. ஏதோ ஒரு குழு / அமைப்பு அமைப்புரீதியாக செயல்பட்டு தவறுகள் நடந்திருப்பின் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தார்மீக அடிப்படையில் விளக்கங்கள் அளிக்க கடமைப்பட்டிருக்கிறது. அடுத்து சட்டத்தின் முன் முறையீடு நடந்தால் சட்டத்திற்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறது. சமூக ரீதியாக கருத்து பரவல் ஏற்பட்டிருப்பின் தம் அதிகாரப்பூர்வ பக்கத்தில் கருத்து தெளிவு ஏற்படுத்த வேண்டியுள்ளது. (பண்புடன்!).

7. நம்மை மீறி ஏதேனும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் யார் பற்றியாவது தனிப்பட்ட அளவில் யாரிடமாவது ‘பொறணி’ பேசியிருந்து, சம்பந்தப்பட்டவர் காயப்பட்டால் தார்மீகமாக பொறுப்பேற்று மன்னிப்பு கேக்க வேண்டும். (அவர் மன்னிப்பதும் மன்னிக்காததும் நம் கையில் இல்லை). அதனால் வன்மம் கொண்டு நம்மை காலம் முழுக்க வசைபாடலாம். பொறணி பேசுனதுக்கு தண்டனையா எடுத்துக்கிட்டு கம்முன்னு போக வேண்டியதுதான்!

8.  இதுவல்லாது வேறு யாருக்கும் நாம் எந்த விளக்கங்களையும் அளிக்கத் தேவையில்லை (நாம் சம்பந்தபட்டவர்கள் பற்றி பொதுவெளியில் பெயர் சொல்லி கருத்து தெரிவிக்காத போது). குறிப்பாக மேற்சொன்ன எந்த வகையிலும் நமக்கு தொடர்பில்லாத இணையவெளி ‘நீதிமான்களுக்கு’ நாம் எந்த பதிலும் அளிக்க கடமைப்பட்டவர்கள் அல்லர்.

நாம் பொருட்படுத்தி பதில் அளிக்கும் நம் அர்ப்பணிப்பை இவர்கள் கேலிக் கூத்தாகிவிடுகிறார்கள். எனவே அவங்க shut up பண்ணாத போது, நாம பண்ணிக்க வேண்டியதுதான்.

9. அரசியல் ரீதியாக முரண்பட்டு ஒரு பிரச்சாரத்திலிருந்து வெளியேறியிருந்தால் ஏன் வெளியேறினோம் என்ற விளக்கத்தை பொதுவெளியில் தெளிவுபடுத்த கடமைப்பட்டுள்ளோம். வெளியேறியபின், விளக்கம் கொடுக்கப்பட்ட பிறகு நடக்கும் எந்த செயலுக்கும், பொறணி பேச்சுகளுக்கும், அவரவர் கற்பனைகளுக்கும் விளக்கம் கொடுக்க நாம் கடமைப்பட்டவர்கள் அல்ல.

அவரவர் தம் பக்கங்களில் என்ன வேண்டுமானாலும் ‘கதைக்க’லாம். தூற்றலாம், அவதூறு செய்யலாம், ‘பதில் சொல்லு’ ‘பதில் சொல்லு’ என்று உங்களை வண்டியில் ஏற சொல்லலாம். உலகமே நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறதே என்னும் பதட்டம், மன உளைச்சல் எல்லாம் ஏற்படும். அது மாதிரி நேரத்தில் கடைய தற்காலிகமா சாத்திவிட்டு, எந்த குப்பைப் பேச்சுகளும் நம் கண்ணில் படாமல் ஒதுங்கி இருந்து, நம்மை நாமே தேற்றிக்கொண்டு தேவைப்படும் விளக்கங்களை மட்டும் அளித்துவிட்டு (அரசியல் ரீதியான பேச்சாக இருந்தால் மட்டுமே) கடந்து போக வேண்டியதுதான்.

இது எனக்கு நானே சொல்லிக் கொள்ளும் வழிகாட்டுதல்! (Self-motivation! Self-Talk!)

இது எந்த இசத்துலையும் சேர்த்தி இல்லைங்க! ஏன்னா எல்லா இசத்தைப் பற்றியும் தலைவர்கள் பற்றியும் பேசும் ‘குத்தகை’ ஒரு சிலரிடம் மட்டுமே உண்டு. (என்ன இருந்தாலும் இது தனியுடமை அமைப்பு அல்லவா). குறிப்பா அம்பேத்கர பத்தி பேசனும்னா ‘பொறப்பு’ முக்கியம்… இனி அவங்களே பேசிக்கட்டும்… நான் என் பொழைப்பை பார்க்குறேன்… இனியாவது! ஏன்னா அவங்க பொழப்பெல்லாம் நல்லாதான் ஓடுது! நமக்கு ஒரு பய வேலை தரமாட்றான்!

EMI கட்டலன்னா உடமாட்டோம், 3 மாசம் moratorium அரசு சொன்னா என்ன யார் சொன்னா என்ன... நீ வட்டி கட்டித்தான் ஆகனும்னு மெயில்ல மிரட்ட ஆரம்பிச்சுட்டானுவ!
Top of Form
Bottom of Form


Apr 18, 2020

கண்காணிப்பு அரசியல் என்பது இடதுசாரி அரசியல் அல்ல


இனி நான் யாருக்கும் 'தோழர்' இல்லை! இனி எமக்கும் யாரும் 'தோழர்கள்' இல்லை! Simplifying life amidst uncultured, mean-spirited so called 'leftists'. Better to stay away (self-Isolation) than feeling traumatized by certain left-let downs! This is to do with people and not left politics!

ஒரு பெண்ணின் கவிதை தொகுப்பிற்கு எதிரான அடக்குமுறை பாணி ஆணாதிக்க தாக்குதல்கள், அம்பேத்கரை விமர்சித்த எனது மொழிப்யெயர்ப்புக்கு எதிரான ‘தலித்திய-கம்யூனிஸ்ட்’ தாக்குதல்கள் என தொடங்கி ஒவ்வொரு கட்டத்திலும் ‘பல இடதுசாரி’களின் வன்மம் நிறைந்த எதிர்வினைகள் என்னை மன அதிர்ச்சிக்கே உள்ளாக்கியிருக்கிறது. அத்தகையோர் இணைய வன்முறையில் (cyber bullying / cyber harassment) வலதுசாரிகளுகு சற்றும் குறைந்தோர் அல்லர் என்பது என்வரையிலான அனுபவம்.

ஓர் இடதுசாரி அமைப்பு மற்றும் தனிநபர்கள் சிலர் ஒரு கவிதை தொகுப்பிற்கு எதிராக நடந்துகொண்ட விதம் எந்த வகையிலும் இடதுசாரி பண்புடைய செயலாகாது என்று கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக எழுதியதற்கு என் மீது ‘கண்ட’ முத்திரைகளை குத்தினார்கள். ஆனால் ஒரு போராட்டம் என்று வரும்போது ஆதரவு வேண்டி அழைப்பார்கள்! கூட்டத்திற்கு கூப்பிட்டு அவமானப்படுத்துவார்கள்! “இதெல்லாம் யாரு? இவங்களை எதுக்கு மேடைக்கு ஏத்துறீங்க? நம்மாளுங்கள மேடைக்கு ஏத்து” என்று ஒரு சிவப்பு சட்டை - கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரிடம் சொன்னபோது நான் அவர் பின்னால் தான் நின்று கேட்டுக்கொண்டிருந்தேன்! ஆரம்பகாலத்தில் இது போல் பல மோசமான அனுபவங்கள்!

இருப்பினும் கம்யூனிஸ்டுகள் என்றால், மார்க்சியம் என்றால் எனக்கு உயிர்! அவர்கள் மீது பெரும் மரியாதை எனக்கு எப்போதும் உண்டு. கம்யூனிஸ்டுகளின் தியாகமின்றி, போராட்டமின்றி இன்று நாம் இந்த வாழ்வை இப்படி அனுபவிக்க முடியாது என்கிற நன்றி கடன் எனக்கு எப்போதும் உண்டு.

பறையர் ஆதிக்க அரசியல் சூழலில் அருந்ததியருக்கு நியாயம் வேண்டி செல்ல ‘கம்யூனிஸ்ட்’ என்கிற அடிப்படையில் அழைப்பார்கள் அம்பேத்கரை விமர்சித்ததும் சாதிவெறி பிடித்தவர் என்று பண்பற்ற ஆணாதிக்க வசைகளை, வன்மம் நிறைந்த சாதிய வசைகளை வைப்பார்கள். அவர்களும் தங்களை இடதுசாரிகள் / முற்போக்காளர்கள்/ சமூக போராளிகள் என்று தான் சொல்லிக்கொள்கிறார்கள்.

இப்படி ஒவ்வொன்றையும் தனியாகவும், வசுவோடும் இணைந்துமே எதிர்கொண்டு 10 வருட காலங்கள் மார்க்சிய பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்துள்ளேன். விரல்விட்டு எண்ணிவிடக் கூடிய அளவில் 5,6 ‘நபர்கள்’ அப்போது ‘மனிதர்களாக’ ஆதரவு தெரிவித்தார்கள். அவ்வளவே! இங்கு மற்ற ‘லாபியிஸ்டுகளுக்கு’ சாதாரண வெட்டிப் பேச்சுகளுக்கு கிடைக்கும் ஆதரவு கூட நான் மேற்கொண்ட மார்க்சிய அறிவூட்டலுக்கான விமர்சன போராட்டங்களுக்கு பெற்றதில்லை என்பதே உண்மை!

ஆதரவுகளை எதிர்பார்த்ததுமில்லை! நான் சிலரிடம் சொல்வதுண்டு ‘நான் அரசியல் தீண்டாமைக்கு உள்ளான ஆள்! தலைக் கணக்கு தேவையென்றால் நம்மை உடன் சேர்த்துக்கொள்வார்கள் (கொச்சையாக சொல்வதெனில் பயன்படுத்திக் கொள்வார்கள்) அதன் பிறகு தாக்கப்படுகையில் வேடிக்கை பார்ப்பார்கள் (வெகு சில தோழர்கள் தவிர), மார்க்சிய எதிர்ப்பாளர்கள் பெண்ணான என்னையும், இன்னொரு பெண்ணான ரங்கநாயகம்மாவையும் கொச்சை கொச்சையாக திட்டி புக்கு போட்டு கூட்டம் நடத்தி தங்கள் அடையாள அரசியலை அரங்கேற்றுவார்கள்! அப்போதும் வேடிக்கை பார்ப்பார்கள். கண்டும் காணாதது போல் இருப்பார்கள். ஏன்னா அது சாதிய பிரச்சினை என்னும் சென்சிட்டிவ் இஷ்யூ… எனக்கு ஆதரவு தெரிவிச்சா அப்புறம் அடுத்த டார்கெட் அவங்கதான்… அப்ப எங்க போச்சு பெண் ஒற்றுமை, கம்யூனிஸ்ட் ஒற்றுமைன்னு கேட்றாதீங்க? இது சுயபச்சாதாபமல்ல. இந்த வெளியை சரியாக புரிந்து கொண்ட வரையறுப்பு அவ்வளவே!

இதையெல்லாம் பொருட்படுத்தாமல் துணிந்து நின்று என் எழுத்துகளின் வாயிலாக, செயல்பாடுகளின் வாயிலாக நான் யார் என்பதை தூற்றியவர்களே நாணும் அளவுக்கு மெய்ப்பித்து காட்டினேன். ஒரு கட்டத்தில் ‘ஆதெண்டிக் நபர்களின்’ ஆதரவும், ‘சான்றிதழும்’ கிடைத்தது. நன்றிகள்.

தனிப்பட்ட வாழ்விலும், சமூக வெளியிலும் பெரும் இழப்புகளை சந்தித்துக்கொண்டு தான் இங்கு இந்த இடதுசாரி அரசியல் களத்தில் இயங்க வேண்டியுள்ளது. எல்லாரும் அப்படித்தான் இயங்குகிறார்கள். எனவே ஒருபோதும் அதற்காக நான் துவண்டதில்லை!

ஆனால் தற்போது ’பாலுறவுவாதம் / பாலியல் சுரண்டல்’ என்னும் பெயரில் நடந்து வரும் இணைய வழி பகிர்வுகள் அறமற்ற வகையில் செல்கிறது. எடுத்துக்கொண்ட பிரச்சினை மற்றும் நோக்கத்திற்கு மாறான திசையில் சென்று விட்டது. அது ‘மார்க்சியத்தின்’ பெயரால் நடக்கிறது! இதைவிட கேவலம் ஏதும் இருக்க முடியாது!
என் மனதின் அறம் வீழ்த்தப்பட்டதாக உணர்ந்ததால் நான் என் எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக தற்காலிகமாக முகநூலில் இருந்து வெளியேறினேன். தற்போது அரசியல் பேசுவதில் இருந்தும் விலகி இருப்பது என்று முடிவு செய்துவிட்டேன்.

என்ன நியாயங்கள் சொன்னாலும் கண்காணிப்பு அரசியல் மற்றும் பெண்களின் அந்தரங்கங்களை வெளியிடுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. வக்கிரம் பிடித்த இந்த ஆணாதிக்க சமூகத்தின் பத்தினி vs வேசி என்னும் வியாக்கியானங்களுக்கு இடதுசாரி அரசியலின் பெயரால் தீனி போடப்படுகிறது. அதை கண்டு சகித்துக் கொள்ளும் கல் மனம் எனக்கில்லை. இப்படி செய்துதான் இந்த சமூகத்தையும், மார்க்சிய தத்துவத்தையும், பெண்ணியத்தையும், பெண்களையும் காக்க வேண்டுமெனில், நான் அவளில்லை! மார்க்சியத்தை போதிக்கும் அவசியமும் எனக்கில்லை என்னும் மனநிலைக்கு நான் தள்ளப்பட்டிருக்கிறேன்!

I am traumatized because of certain incidents and let me do it my own way. Thanks in advance for any of your advises! I have had enough! I am always a leftist! But choosing to stop talking about it! That’s it. And most importantly please do not tag me in any posts!

யாரும் எனக்கு எந்தவித ஆறுதலையோ, ஆலோசனைகளையோ வழங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். தனிப்பட்ட முறையில் உள்பெட்டியில் உரையாட வர வேண்டாம். நான் என்னோடு உரையாட வரும் ஒவ்வொருவரையும் எப்போதும் பொருட்படுத்தி பதில் அளிப்பேன். அது மனிதர்களுக்கு அளிக்கும் மரியாதை. ஆனால் இது விசயமாக யார் பேச வந்தாலும் என்னால் அதற்கு இடமளிக்க முடியாது என்பதை மிகுந்த மரியாதையுடனும், வருத்தத்துடனும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் ஏதோ பெரிய ஊடக பிரபலமில்லை ஊடகத்தின் வாயிலாக அறிக்கை விட. ஒரு சில்லறை இந்த சில்லறை ஊடகத்தில் தான் தனக்கான தொடர்பாடலை மேற்கொள்ள முடியும். எனவே ‘மீண்டு’ வந்து இதை இங்கு பதிவு செய்கிறேன்.
இறுதியாக, ‘scams & exposures’ என்னும் பாணியிலான செயல்பாடுகளில், அதிலும் குறிப்பாக ஆணாதிக்க வக்கிர சமூகம் நாக்கைத் தொங்க போட்டுக்கொண்டு அலையும் காமம் சார்ந்த விசயங்களை அம்பலப்படுத்துவது, கேள்விக்கு உட்பத்துவது பெரிய சமூக சேவை, மனித உரிமை காக்கும் செயல் என்று செயல்படும் நபர்கள் இனி எக்காரணம் கொண்டும் தயவு செய்து என்னை தொடர்புகொள்ளாதீர்கள். பாலியல் சுரண்டலில் இருந்து ஒரு பெண்ணை காக்க வேண்டும், தவறான வழிநடத்தல் செய்யும் ‘குழு’ மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில் சம்பந்தப்பட்ட மீட்பர்(கள்) சட்டத்தை நாடியிருக்க வேண்டும். தேவைப்படும் ஆதாரங்களை திரட்ட சட்டத்தின் ஆணைபடி காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்கும். அதைவிடுத்து தனிநபராக களம் இறங்க, அதிலும் அதை இணையத்தின் வழி அரங்கேற்ற யார் அதிகாரம் வழங்கியது? கண்காணிப்பு அரசியலில் ஈடுபடும் அதிகாரம் தனிநபருக்கு உள்ளதா? எந்த அமைப்பில் இருந்தாலும் தனிநபருக்கு அந்த அதிகாரமில்லை. ஒருவேளை ஏதோ ஒரு வகையில் ‘சமூக அக்கறை’ சார்ந்து சில ‘அமைப்புகளுக்கு’ அந்த அதிகாரம் வழங்கப்படுமாயின் அது மிகவும் ஆபத்தானது. மனித உரிமையின் அடிப்படியில் அது எதிர்க்கப்பட வேண்டும்.

காவல்துறையோ, சட்டமோ புகார்களை எடுத்துக்கொள்ள மறுத்திருப்பின் அதற்கெதிரான போராட்டத்தை தொடுக்கலாம் என்னும் அரசியல் அறியாதவரா நாம்?

பாடம் புகட்டுங்கள்! பாடம் புகட்டுங்கள் என்று சிலர் கூப்பாடு போடுவதும். கானொளி வெளியிட்டதில் உடன்பாடில்லை… உடன்பாடிருக்கு.. பலவித கருத்துகள் மோதட்டும் அப்போதுதான் ஒரு தெளிவு ஏற்படும் என்று மாறி மாறி பேசுவோரும் என்ன சாதிக்க விரும்புகிறார்கள்? இதுவும் ஒருவித அதிகார மனோபாவமே. வலுவுள்ளோர் வலுவற்றோரை மிரட்டுவதற்கும் இதற்கும் எந்த வேறுபாடுமில்லை.

இதுவரை நடந்திருக்கும் காமக் களியாட்ட எக்ஸ்போஷர்களால் இந்த சமூகத்தில் ஏதேனும் மாறியிருக்கிறதா? பிட்டு படம் பார்க்க விரும்பும் வக்கிரம் பிடித்தவர்களுக்கு விருந்தளித்ததை தவிர இங்கு என்ன மாறியிருக்கிறது? இதுபோன்ற பாலியல் எக்ஸ்போஷர்கள் உண்மையில் முதலாளித்துவ / குட்டிபூர்ஷுவா வக்கிரம் பிடித்த தன்முனைப்புவாதமன்றி எந்த வகையிலும் அறமார்ந்த செயலாகாது. எந்த வகையிலும் அது சமூக மாற்றத்தை ஏற்படுத்தாது. அதிகாரம் படைத்தோர் கைலாசா அமைத்து தங்கள் காமக் களியாட்டங்களை தொடர்வார்கள். எளியோரும் வரியோரும் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொள்வார்கள். அவ்வளவே! (தப்பு செய்யும் போது தைரியமா செஞ்சீங்கல்ல… அப்ப இதையும் தைரியமா எதிர்கொள்ளுங்கன்னு தங்கள் அரைகுறை அகவாத ஒழுக்கவாத பிட் நோட்டீசை எடுத்துக்கிட்டு சிலர் வருவாங்க!)

மார்க்சியம் என்பது புறவயமாக சமூகத்தை அணுக கற்றுக்கொடுக்கிறது. அது பெருங்கருணை! அதை இன்று கேலிக் கூத்தாக்கிவிட்டார்கள்! அதன் வழியில் நின்று பார்த்தால் எப்போதும் கருத்தியல் போர் தொடுக்க வேண்டுமே அல்லாது தனிமனித எக்ஸ்போஷர்களை மூன்றாம் நபராக தனிமனிதர்கள் செய்வது அறமாகாது!

அடிப்படை சமூக மாற்றத்தை ஏற்படுத்தாமல், குடும்ப உறவுகளில் இருக்கும் சிக்கல்கள் மற்றும் மறுக்கப்படும் பெண் உரிமை சார்ந்த சிக்கல்களை களையாமல் சில மிரட்டல்கள் மூலம் தனிநபர் மாற்றங்களை எதிர்பார்ப்பது எத்தனை அபத்தமானது, அராஜகமானது! This is a one-sided stand! மார்க்சிய தத்துவார்த்த அறிவூட்டல் மற்றும் கருத்தியல் விவாதங்கள் மூலமாக முதலில் சமூகத்தின் அறிவுநிலையையேனும் மாற்றியுள்ளோமா? ஆணாதிக்க சமூகம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, உறவுகளை மேம்படுத்திக்கொள்ளும் வழிமுறைகளை கற்றுக்கொடுப்பது இப்படித்தானே முன்னெடுக்க வேண்டும்! அதேபோல் தனிமனித சுதந்திரம் என்று பாலுறவு விசயத்தில் பேசுவோருக்கும் அதன் சாதக பாதகங்களை விளக்கி உரையாடலாம். ஏற்றுக்கொள்ள மறுத்தால் அதுஅவரவர் சுதந்திரம்! அதனால் யாரேனும் பாதிக்கப்படுகையில் அவரவர் அதை எதிர்கொள்ளட்டும். சட்டத்தை நாடட்டும்! சமூக சீரழிவு நேர்கிறதென்றால் அதையும் சட்டத்தின் முன் வைத்து முறையிடுங்கள். Moral Policing is not the solution for this!

அதுவரை பாதிக்கப்படுவோரை கைவிட்டுவிட வேண்டுமா என்றால்… சட்டத்தை நாட வழிவகை செய்யுங்கள்! அவ்வளவே! போராட கற்றுக்கொடுங்கள். நீங்கள் நாட்டாமையாகி பஞ்சாயத்து செய்யாதீர்கள். இது ஒருவகை இணையதள கப்-பஞ்சாயத்து! இதுவும் ஆணாதிக்கமே!

பாதிக்கப்பட்ட பெண், பாதிக்கப்பட்ட பெண் என்றால் அந்த பெண் தன் அடையாளங்களை மறைத்து தனக்கு நேர்ந்த துன்பங்களை பொதுவெளியில் பகிர, சட்டத்தை நாட, காவல்துறையை நாட, ஊடகத்தை நாட இங்கு ஆயிரம் வழியுள்ளது மீட்பர்கள் ஏன் அப்படி வழிநடத்தவில்லை? பாதிக்கப்பட்ட அந்த பெண் ஏன் பொதுவெளிக்கு வர அஞ்சுகிறார்? சமூகத்தை காக்கும் அக்கறை அவருக்கு இல்லையா? அதற்காக போராட வரமாட்டாரா? அப்படியென்றால் தவறு செய்து தன் அடையாளத்தை மறைத்துக்கொள்ள அவருக்கு உரிமை இருக்கிறது, ஏனென்றால் வெளியில் வந்துவிட்டார்… மற்ற பெண்கள் இந்த மிரட்டலாளர்களின் ஆணைக்கு இணங்காமல் இன்னும் அந்த குழுவிலே இருக்கிறார்கள், எனவே அசிங்கப்பட வேண்டும், தண்டிக்கப்பட வேண்டும்… அல்லவா?

இதுபோல் எனக்கு ஆயிரம் கேள்விகள் உள்ளன.

இப்போது இதன் பொருட்டு வன்மம் கொண்டு என்னையும் கண்காணிக்க தொடங்குங்கள்! நாம் அதற்காகத் தான் ‘முற்போக்கு’ அரசியல் கற்றோம்!

வாழ்க உங்கள் சமூக சேவை!

இனி என்னுடைய இந்த முகநூல் பக்கமானது வெறும் தனிப்பட்ட விளம்பரப் பலகையாக மட்டுமே இருக்கும். Just a personal page for fun and some light hearted ‘talks’. ஆமாம்! இனிமேல் ஜாலியா பேசுவோம்! தனியாதாங்க! குழுவா இல்ல https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t57/1/16/1f609.png;)

You wana call me ‘opportunist’, ‘weak’, ‘emotional’, ‘stupid’, ‘anti-revolutionary’, ‘individualistic approach’ blah blah blah… pl go ahead! I have had enough branding from ‘many leftists’ already! Ofcourse I have seen enough as well! When the left movements (individuals here and there are condemning) are silent about an Individual’s Moral Policing sort of Sexual scam exposures happening in the name of Marxism or lefitism (infact one movement had encouraged it and justified such activities in the past) and not willing to condemn it – not even women’s movement are coming forward to condemn this! Then let me stay away from left politics!

I did write about Free-Sex and the ill effects of hyper-sexualization from Marxist point of view after few people tagged me in their posts! But that was pure theoretical! That is education and not slandering. But I was always against personal defamation, moral policing, taking 'proofs' in an unauthorized manner and requested the ‘good shepherd’ in polite manner not to do such things and also informed that incase such things happen I will not be a part of it. Hence when it happened, I quit!

Thank you Friends! No more ‘comradeship’! am sure you have got nothing to loose in this! But I have much to loose! But that’s ok… I am used to loses! Authentic and Committed leftists may unfriend me https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t4c/1/16/1f642.png:)

Always love to Marxism and Proletarian revolution ❤️


Apr 15, 2020

தத்துவார்த்தப் போர் vs தனிநபரை அம்பலப்படுத்துதல்

பாலியல் சுரண்டல் மற்றும் பாலுறவு சுதந்திரம் சார்ந்த தத்துவார்த்த புரிதலை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் கருதியே நான் அது சார்ந்த பதிவுகளை எழுத முற்பட்டேன். பெண் விடுதலை மற்றும் சமூக விடுதலை போராட்டத்தில் தத்துவார்த்த தெளிவு என்பது முக்கியப் பங்கு வகிக்கின்றது. அதீத பாலுறவுவாதமானது புரட்சியை மழுங்கடிக்கும் தன்மை கொண்டது என்னும் அரசியல் காரணமும் அதற்கு உண்டு.

தனி மனிதர்கள் தங்கள் வேட்கைக்கு நியாயம் கற்பிக்க முற்போக்கு தத்துவங்களை பயன்படுத்துவது தவறு என்று கருத்தியல் போர் மூலம் உணர்த்த வேண்டியுள்ளது. நான் களமிறங்கியது அந்த நோக்கத்தினால் மட்டுமே.

ஆனால் தற்போது இந்த பாலியல் சுரண்டல் சார்ந்த விவாதங்கள் கருத்தியல் போர் என்பதை தாண்டி தனிநபர் அம்பலப்படுத்துதல் மற்றும் தன் முனைப்பு சார்ந்த தரமற்ற பகிர்வுகளாக சென்றுகொண்டிருக்கிறது. தனிநபர்வாத போக்குகள், மற்றும் கண்காணிப்பு அரசியலில் எனக்கு எப்போதும் உடன்பாடில்லை. குறிப்பாக பெண்களின் பெயர்களை குறிப்பிட்டு ‘அம்பலப்படுத்துவதில்’ எனக்கு துளியும் உடன்பாடில்லை.

இதுபோன்ற குழுக்களில் இடம்பெறும் ஆண்கள் முற்போக்கு வலை வீசி பெண்களை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பது பற்றி நாம் விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்பினோம். அதோடு இதுபோன்ற தனிப்பட்ட குழுவினை நடத்தும் பெண்கள், அதில் ஈடுபடும் பெண்கள் அறியாமை நிறைந்த தங்களது தனி மனித சுதந்திரவாதத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று உணர்த்த விரும்பினோம். அதை பொதுப்படையாக மட்டுமே செய்ய வேண்டும். தேவைப்படுமாயின் பெண்களை காக்கும் பொருட்டு ஆண்களை நேரடியாக அம்பலப்படுத்தலாம். அதேபோல் நம் விழிப்புணர்வு பதிவுகளைக் கண்டு பாதிக்கப்பட்ட பெண்கள் தாமாக முன் வந்து தமது பிரச்சினைகளை பொதுவில் வைத்து பேசலாம். நிச்சயமாக அவர்களுக்கு நியாயம் பெற்று தர வேண்டும்.

அதேவேளை தவறுகள் செய்வோர் தம்மை சுய விமர்சனத்திற்கு உட்படுத்திக்கொள்ளும் அளவுக்கு நமது அணுகுமுறை மிகவும் முதிர்ச்சியுடனும், கண்ணியத்துடனும் இருக்க வேண்டும் என்பதே எனது அணுகுமுறை.

முதலாளிகளுக்காகவும் சேர்த்துதான் நாம் போராடுகிறோம் என்பதே மார்க்சின் வழிகாட்டுதல். தனிமனித சுதந்திரம், பாலுறவு சுதந்திரம் என்பது ஏதோ சரியான வாழ்வுமுறைதான் என்று நம்பும், வழிநடத்தும் பெண்களுக்காகவும் சேர்த்து போராட வேண்டிய தேவை உள்ளது. அவர்கள் தம் தவறை உணர வேண்டுமெனில் தொடர்ந்து நாம் தத்துவார்த்த முறையில் தான் போராடி இருக்க வேண்டும். அறிவூட்டலை நிகழ்த்தியிருக்க வேண்டும்.

அதைவிடுத்து தனிநபர் அம்பலப்படுத்தல் என்னும் போக்கை சிலர் கையிலெடுப்பதால் நான் மிகுந்த மன வருத்ததிற்கு உள்ளாகி இருக்கிறேன். வக்கிரம் பிடித்த சமூகத்தில் இது கிசுகிசுப்பு சார் கிளர்ச்சிக்கு மட்டுமே தீனி போடும். தரம் தாழ்ந்த சொற்பகிர்வுகள் நிகழத் தொடங்கிவிட்டன. அப்படிப்பட்ட கள சுத்திகரிப்பில் ஈடுபட நான் தயாராக இல்லை.

எனவே என்னுடைய எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக நான் தற்காலிகமாக முகநூலில் இருந்து வெளியேறிவிட்டேன்.

நான் பின்வாங்கிவிட்டேன். நான் அவளில்லை என்று கை தூக்கிவிட்டேன். முதிர்ச்சியில்லை, ஒற்றுமையில்லை, நான் அஞ்சிவிட்டேன், அவர்களின் மிரட்டலுக்கு பணிந்துவிட்டேன். அல்லது அவர்களின் தரம் தாழ்ந்த பேச்சு கண்டு ஓடிவிட்டேன், இது மார்க்சிய வழிமுறை இல்லை… எப்படி வேண்டுமானாலும் சம்பந்தப்பட்டவர்கள் இதனை புரிந்துகொள்ளட்டும் எனக்கு கவலை இல்லை.

நான் களமிறங்கியது இந்த தனிநபர் ‘சுத்திகரிப்பு’ பாணி செயல்பாடுகளுக்காக அல்ல.

வன்புணர்வில் ஈடுபட்டவனுக்குக் கூட தூக்கு தண்டனை தரக்கூடாது என்று மனித உரிமை பேசும் அரசியல் தெளிவு கொண்ட நபராய் இருக்கிறோம். எதற்காக? ஆணாதிக்க மற்றும் தனியுடைமை சமூக கட்டமைப்பு சார்ந்த புரிதல் நமக்கு இருப்பதால். இன்று அதையே கேலிக்கு உள்ளாக்கி விட்டோமோ என்னும் கேள்வி மேலோங்க விடைபெறுகிறேன்.

நன்றி, கொற்றவை


Apr 6, 2020

பாலுறவு சாகசப் பேச்சு பெண்ணியமல்ல!


பெண்ணியம் என்றால் கட்டற்ற பாலுறவு சுதந்திரம், தான்தோன்றித்தனமான போக வாழ்வு (ஆண்களுக்கு கிடைத்திருப்பதுபோல்) என்னும் தனிப்பட்ட இச்சைகளை மட்டுமே பெண் விடுதலை என்று ஒரு சிலர் பேசுகின்றனர் (ஆண், பெண் இருபாலரும்). இத்தகைய செயல்பாடுகளால் பெண் விடுதலையை சமூக-அரசியல்-பொருளாதார விடுதலையாக முன் வைத்து இயங்கும் பெண் உரிமைப் போராட்டங்கள் மீது தவறான, கொச்சையான புரிதல் ஏற்படுகிறது என்னும் தோழர்களின் பதிவினை ஒட்டி எனது பதிவும்!

பெண்ணியத்திற்கு மட்டும் ஏன் இந்த சிக்கல்? பெண் உடல் இங்கு சம்பந்தப்பட்டிருப்பதால், அல்லவா? பெண் விடுதலை பேசும் உடல் அரசியல் என்பது உழைப்புச் சுரண்டலிலிருந்து விடுதலை கோருவதாகும். அது ஆண், பெண், மாற்றுப் பாலினம் என அனைவருக்குமானது. இதில் பெண் உடலை முன்வைத்துப் பேசுகையில் கூடுதலாக பெண் உடலுக்குரிய இயற்கையான வடிவமைப்பின் காரணமாக, அவளின் உடலுக்கு சில சமூகக் கடமைகள் விதிக்கப்பட்டுள்ளது என்று பேச வேண்டியுள்ளது. இந்த விதிமுறைகள் தனியுடைமை சமூகத்தின் விளைவாக உருவாகிய தந்தை வழிச் சமூகம் அல்லது ஆணாதிக்க சமூகத்தின் விதிமுறைகள். அது பெண்ணை உடல் ரீதியாக சுரண்டுகிறது. ஒடுக்குகிறது. அதேவேளை, ஆணை அது பொருளாதார அடிமையாக்கியது. பெண்ணை பாலியல் மற்றும் பொருளாதார அடிமை ஆக்கியது என்பதே இதன் சாரம்.

பெண்ணின் மறு உற்பத்திச் சக்திக்காக (அதாவது குழந்தைப் பேறு) அவள் பாலியல் அடிமையாக்கப்பட்டாள். அதுமட்டுமின்றி பொருள் உற்பத்திக்கு பிரதான சக்தியாக இருக்கும் உழைப்புச் சக்தியை பெற்று, பராமரித்து வளர்க்கும் பொறுப்பும் அவளுடையதே. மூன்றாவதாக சொத்துடைமை சமூகத்தில் தன் ரத்தத்திற்கு – தன் இரத்த வாரிசிற்கு சொத்து சென்று சேர வேண்டும் என்னும் தந்தை வழிச் சமூகத்தின் தேவைக்காகவும் அவள் வீட்டிற்குள் முடக்கப்பட்டாள். அவளுடைய கருப்பை ஆணாதிக்க கருத்தியல்களால் பூட்டப்பட்டது. இதன் காரணமாக பெண்கள் உற்பத்தியிலிருந்து விலக்கப்பட்டது போல் சமூக-அரசியல்-பொருளாதார பங்கெடுப்பிலிருந்தும் விலக்கப்பட்டனர்.

இந்த வரலாற்றுப் பின்னணியை கற்றறிந்து பெண்களை உழைப்புச் சுரண்டலிலிருந்து விடுவிப்பதும், பெண்களும் சமமாக அரசியல் உரிமை பெறுவதற்காகவும் போராடுவதே பெண் விடுதலைப் போராட்டம். ஆனால் இந்த பெண் விடுதலை என்பது தனித்ததன்று அது சமூக விடுதலையோடு அதாவது உழைக்கும் மக்களின் (வர்க்கத்தின்) விடுதலையோடு தொடர்புடையது என்பதை உணர்த்துவது மார்க்சியம்.
பாட்டாளி வர்க்கப் போராட்டம் என்பது பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான போராட்டக் கூறுகளைக் கொண்டது. அதில் சோஷலிசப் பெண் விடுதலைப் போராட்டம் மேற்சொன்னது போல் பெண் உடல் மீதான ஆணாதிக்க கட்டுப்பாட்டையும், உழைப்புச் சுரண்டலையும் எதிர்ப்பதுமாக இருக்கிறது.
பெண் உடல் மீதான பாலியல் கட்டுப்பாட்டிற்கு எதிரான போராட்டம் என்பது குடும்பம் என்னும் அமைப்பின் வாயிலாக அவள் எப்படி பிள்ளை பெறும் இயந்திரமாக மாற்றப்படுகிறாள், வெறும் பராமரிப்பு தாதியாக மாற்றப்படுகிறாள் என்பதை உணர்த்துவதாக இருக்கிறது. அதேபோல் கற்பு ஒழுக்கத்திற்கு எதிரான போராட்டங்கள் கற்பின் பெயரால் பெண் உடல் எப்படி குடும்பம் என்னும் நிறுவனத்திற்குள் சுயநலமாக முடக்கப்படுகிறது என்பதை உணர்த்தி கற்பின் பெயரால் பெண் உடல் மீது ஆண் உடல் செலுத்தும் உடல்ரீதியான வன்முறை மற்றும் கருத்தியல் ரீதியான வன்முறையை எதிர்க்கிறது.

எந்த வகையிலும் பெரியாரியமோ, மார்க்சியமோ கட்டற்ற பாலுறவை போதிக்கவில்லை.

பெண் விடுதலை பேசுவோர் பெண் உடல் மீதான தவறான கருத்தியல்களை முறியடிக்கப் பேசுகையில் விழிப்புணர்விற்காக பெண் உடல் மற்றும் காமம் சார்ந்த பல்வேறு உரையாடல்களை நிகழ்த்துகின்றனர். ஆணாதிக்க பண்பாட்டுக் கல்வியின் காரணமாக ஆண்கள் பெண் உடலைப் பற்றி சரியாக விளங்கிக் கொள்ள இயலவில்லை என்பதால் பெண்கள் தங்கள் உடல் மற்றும் மனத் தேவைகளைப் பற்றி பேச வேண்டியுள்ளது. இந்த பாலியல் / காமம் பற்றிய கல்வி என்பது பெண் விடுதலையின் ஒரு பகுதி. பாலியல் / பாலுறவு சாகசப் பேச்சு மட்டுமே பெண்ணியமாகிவிடாது.

ஆணாதிக்க அறியாமையிலிருந்து சமூகத்தை விடுவித்து ஆண் பெண் உறவை மேம்படுத்தி குடும்பம் அல்லது காதல் அல்லது இணைகளுக்கிடையில் மகிழ்ச்சிகரமான வாழ்வை ஏற்படுத்தி வன்முறையற்ற உறவை மலரச் செய்வதே இதன் நோக்கம்.

கட்டற்ற பால் உறவு, அயல் உறவு போன்றவற்றை நியாயப்படுத்துவதோ, அதனை போதிப்பதோ பெண்ணியமல்ல!

ஆனால் பாலுறவு என்பது நிச்சயமாக தனிப்பட்ட விசயம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எந்த உறவிலும் அன்பும், முழுமையான மனநிறைவும் கண்டிப்பாக அவசியம். அதுவல்லாத உறவுகளில் சிக்கல் ஏற்பட்டு ஆணோ பெண்ணோ அயல் உறவை நாடுவது நேர்ந்துவிடுகிறது! அது சரியா தவறா என்று பேசுவது நிலவும் வன்முறையான சமூகத்தில் பாசாங்கில் மட்டுமே போய் முடியும். பிடிக்காத உறவிலிருந்து வெளிவருவது அவ்வளவு எளிதாக இங்கு நடந்துவிடுவதில்லை. ஆகவே அந்த சிக்கலைக் களையாமல் அயல் உறவை ‘கள்ள உறவு’, ‘அரிப்பு’ என்று ஒழுக்கவாதமாக பேசித் திரிவதில் எனக்கு உடன்பாடில்லை. ஆணாதிக்க குடும்ப அமைப்பில் பெண் உடலின் தேவை என்ன என்பது பற்றிய விழிப்புணர்வு யாருக்கும் இல்லை. குறிப்பாக தங்களுக்கும் தேவை என்று ஒன்று இருக்கலாம் என்பது கூட பெண்களுக்கு தெரியாத வகையில் தான் இருக்கிறார்கள். இந்த அறியாமையைப் போக்க பெண்ணியக் கல்வி அவசியமாகிறது! இதன் மூலம் பெண்கள் தங்களின் உரிமைகளுக்காகப் போராடுவதோடு, சமூக விடுதலைக்காகப் போராட ஊக்குவிக்கப்படுகிறனர். அதோடு பாலியல் சுரண்டலிலிருந்து தம்மை தற்காத்துக்கொள்ளும் அறிவினையும் பெறுகின்றனர்.

இந்தப் போக்கில், இந்த அரசியல் போராட்டத்தை கைகாட்டி பெண்ணியத்தை தம் தனிப்பட்ட போக இச்சைகளுக்காக பயன்படுத்திக் கொள்பவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். இவர்கள் தனிப்பட்ட அளவில் தம் வாழ்வில் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும், ஆனால் அதுதான் முற்போக்கு, அதுதான் பெண்ணியம், அதுதான் கம்யூனிசம் என்று பேசி அடுத்தவரை மயக்கி தம்மின் பாலியல் சாகச வாழ்வினை முன்வைப்பதும், அதற்குள் அப்பாவிப் பெண்களை இழுத்து ‘செக்ஸ் லாபி’ செய்து பிழைப்பதும் தவறானது. கண்டிக்கத்தக்கது.   (பெண்ணியம் என்னும் சொல்லையே நாம் தவிர்க்க வேண்டும்! சோஷலிசம் என்றும் தேவைப்பட்டால் சோஷலிசப் பென்ணியம்).

நிலவுமொழி, ஆனந்தி, தமிழச்சி, மோகன தர்ஷினி மற்றும் சில தோழர்கள் இதைத்தான் கவனப்படுத்த விரும்புகிறார்கள்! எவரின் தனிப்பட்ட பாலுறவு வாழ்க்கைக்குள்ளும் நாம் எட்டிப்பார்க்க விரும்பவில்லை. ஆனால் அதனை ஏதோ பெரிய அரசியல் செயல்பாடென பிரச்சாரம் செய்வதும், அது தன் வாழ்வின் பாணி, தனி மனித சுதந்திரம் என்று பொதுவெளியில் தம்பட்டம் அடிப்பதும் ஆரோக்கியமானதல்ல. முதிர்ச்சியற்ற சமூகத்தில் இது மீண்டும் ஆணாதிக்க சுரண்டலுக்கே பயன்படும். பெண் விடுதலையில் அக்கறையில்லாத ஆண்கள் பெண்களை தங்கள் இச்சைகளுக்காக பயன்படுத்திக் கொண்டு சக்கையென தூக்கி எரிந்துவிட்டுப் போக ஊக்குவிக்கும். “நீ விரும்பித்தான வந்த… இப்ப என்ன ஒப்பாரி வைக்குற” என்பதாக ஒரு கட்டத்தில் ஆண் பெண்ணை அவமானபப்டுத்தி விட்டு செல்லும் சலுகையை வழங்கிவிடும். மூளைச்சலைவுக்கு உள்ளாகி அரசியல் விழிப்புணர்வின்றி பாலுறவு சாகசத்திற்குள் (சுதந்திரம் என்பது வேறு) ஈடுபடும் பெண்கள் பின்நாளில் கடும் மன உளச்சலுக்கு உள்ளாகி விடுவார்கள். குடும்ப அளவிலும் இது பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

சரியான நோக்கமும், சரியான அரசியல் தத்துவார்த்த பார்வையுமற்ற தனிமனித பாலுறவு சாகச செயல்பாடுகள் பற்றிய பகிர்வுகளை சமூகப் பொறுப்புணர்வு கருதி சம்பந்தப்பட்டவர்கள் கைவிடுவது நல்லது. (சரியான அரசியல் தத்துவார்த்த புரிதலுடன் காமம், பாலுறவு பற்றிய கல்வி மற்றும் உரையாடல் என்பது வேறு).
பாலுறவு சாகசங்களில் ஈடுபடுவோர் அதனை தமது தனிப்பட்ட விசயமாக வைத்துக்கொள்ளுங்கள்! பெண் விடுதலைப் போராட்டத்திற்கு நீங்கள் ஏதும் பங்களிக்காவிட்டாலும் பரவாயில்லை, ஆணாதிக்க பாலியல் சுரண்டலுக்குப் பெண்களை பலியாக்காதீர்கள். பெண் விடுதலைப் போராட்டத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தாதீர்கள்!

பெண் விடுதலைப் போராட்டம் என்பது உயிர் காக்கும் போராட்டம்! மானுடம் காக்கும் போராட்டம்! அரசியல் பொருளாதார விடுதலைக்கான போராட்டம்! ஆணாதிக்க சமூகத்தின் தாக்கத்தினால் இங்கு பெண் அடிமைத்தனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஏற்கனவே பெரும் சவால்கள் நிலவுகின்றது. பெண்களுக்கு எதிராக எரியும் ஆணாதிக்க நெருப்பில் மேலும் எண்ணெய் ஊற்றுவதென்பது பெண்களுக்கு எதிரான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு உங்களின் தனிப்பட்ட பாலுறவு சாகங்கள் பற்றிய பிரச்சாரங்களை நிறுத்திக் கொள்ளுங்கள்.


வாசிக்க வேண்டிய நூல்கள் சில

·        பெண்களும் சோஷலிசமும்: அகஸ்ட் பெபெல்
·        ஒரு கோப்பை தண்ணீர் தத்துவமும் காதலற்ற முத்தங்களும், ஆசிரியர்: மகாராசன்
·        உழைக்கும் மகளிர் – க்ரூப்ஸ்கயா, தமிழில் கொற்றவை


Apr 1, 2020

அவள் கரையட்டும்!


தனது மூளை அமெரிக்கா மற்றும் சீனா எனப் பிரிக்கப்படுவதை அவள் பார்த்துக்கொண்டிருக்கிறாள்!
அழைக்கப்படாத விருந்தினர்களாக அவளது மண்டை ஓட்டிற்குள் நுழைந்தவர்கள் அவளது நரம்புகளையும் இரத்த நாளங்களையும் பிழிவதை அவளால் பார்க்க முடியும்!
அவள் கண்களில் இருந்து பாயும் திரவம் மூக்கிற்குள் தடுக்கப்பட்டு தொண்டையில் விழுங்கப்படுகிறது!
இல்லை அவள் அதை கண்ணீர் என்று அழைக்கப் போவதில்லை! அவள் அழமாட்டாள்!
அவளை நிறைய விருந்தினர்கள் தேடி வருகிறார்கள்! அவர்களுக்கு பல வடிவங்களும் பெயர்களும் உள்ளன!
மனநிலை மாற்றங்கள், மனப் பதட்டம், மன அழுத்தம், பி.எம்.எஸ் மற்றும் பல!
சில நேரங்களில் அவர்கள் தனியாக வருகிறார்கள்! சில நேரங்களில் அவர்கள் கலவையான பழ ஜாம் போலாகி வருகிறார்கள்!
எப்போதாவது மாதாந்திர விருந்தினர்களாக வந்தவர்கள், இப்போது நிரந்தர விருந்தினராகிவிட்டனர்!
அவள் வெளியே வர ஆசைப்படுகிறாளா?
ஊரடங்கு அவளுக்கு கதவுகளைத் திறக்கிறது!
அவளுக்கு அச்சமில்லை!
இத்தனை ஆண்டுகள் அணிந்திருந்த அதே முகமூடியை அணிவதில் அவள் திறமைசாலி!
‘இயல்பான’ முகமூடி! என்.எம் .1985!
இந்த முகமூடியை அணிவதால் அவளால் பெண்ணிய கட்டுரைகள், மார்க்சிய மொழிபெயர்ப்புகள், சமூக அக்கறை கொண்ட எழுத்துகளை உருவாக்க முடிகிறது!
ஆனால் இதில் அவள் எங்கே?
அவள் காலத்தை ஏற்கனவே டாலியின் ஓவியத்தில் மறைத்து வைத்துவிட்டாள்!
எனவே நாட்கள் கடந்து செல்கின்றன!
படுக்கையில் போர் தொடங்குகிறது! இருள் தேவதையை அவள் கண் முத்தமிடுமாறு கெஞ்சும்!
ஆனால் இருள் தேவதையோ சந்திரனின் கீழ் ஒளிந்து விளையாடுவதையே விரும்புகிறாள்!
தனது உடலை படுக்கையில் வைத்து அவள் மூளைக் கண்களின் வழியாகப் பார்க்க ஆரம்பிக்கிறாள்!
மின்சார கம்பிகளுடன் மனிதன் வருகிறார்!
செல்கள் எரிகின்றன!
துரோகிகளின் புட்டத்தை உதைக்க முடியவில்லை!
அவள் கால்கள் வெற்று இடத்தை உதைக்கின்றன!
சில உதைகள் மற்றும் வலிப்புகளுக்குப் பிறகு இருள் தேவதை அவளைக் கட்டிப்பிடிக்கிறாள்!
சூரியன் உதிக்கிறது! அவள் தன்னை ஒரு பெட்டியில் பூட்டி வைத்துவிட்டு உலகுக்கு கற்பிக்கத் தொடங்குகிறாள்!
அவள் தன்னை விட்டு விலகி இருக்க முயற்சிக்கிறாள்!
அவள் புத்திசாலித்தனமாக தன் காதலை அவளிடமிருந்து விலக்கி வைத்தாள், ஆனால் காதல் அவளை ஒருபோதும் விடவில்லை!
அவர் சுமார் 3000 பக்க சிவப்பு வார்த்தைகளை தயாரித்தாள்!
சில நேரங்களில் அவளுடைய பரந்த திறந்த கரங்கள் அவளை இயேசுவாக்குகின்றன!
அவளது ஆணி கைகளால் முள் கிரீடத்தை அகற்ற முடியவில்லை!
மாயமாக அவள் இரத்த ஓட்டத்தின் போக்கை மாற்றுவதில் வல்லவள்!
உள்ளூர குருதி வடிவதை யாரும் பார்க்க முடியவில்லை!
இப்போது யார் வெல்வார்கள்? அவள் அல்லது அவள்?
அநேகமாக வரலாறு அவளை விடுதலை செய்யும்!


(Pic from https://themotherofallnerds.com/two-paintings-that-raise-t…/)