May 18, 2018

உழைக்கும் மகளிர் (அறிக்கை)


ந. கா. க்ரூப்ஸ்கையா எழுதிய அறிமுகம்
இச்சேறேடு நீண்டகாலத்திற்கு முன் 1889ஆம் ஆண்டில் சைபீரியாவில் உள்ள யெனிசெய் மாகாண மினுசின்ஸ்க் பகுதியின் ஷுஷென்ஸ்கோயே கிராமத்தில் இருந்தபோது எழுதப்பட்டது. அங்குதான் நான் வ்ளாடிமிர் இலியீச்சுடன் (லெனின்) நாடு கடத்தப்பட்டேன். இதுதான் நான் எழுதிய முதல் சிற்றேடு என்பதால் என்னால் இயலுமா என்கிற நடுக்கம் எனக்கிருந்தது. வ்ளாடிமீர் இலியீச்தான் எனக்கு ஊக்கமளித்தார். அக்காலகட்டத்தில் இத்தகைய சிற்றேட்டை வெளிப்படையாக வெளியிட முடியாது, மீறினால் வெளியிடுபவர் கைது செய்யப்படுவார். இரகசியமாக சட்ட அங்கீகாரமின்றியே இவற்றை வெளியிட வேண்டியிருந்தது. 1900இல் ப்ளெக்கனோவ், அக்செல்ராட், சாஸுலிச், மார்தோவ் மற்றும் பொட்ரெசோவுடன் வ்ளாடிமீர் இலியீச்சும் இஸ்க்ரா இதழை தொகுக்க வெளிநாடு சென்றார். அப்போது ரஷ்யாவில் இரகசியமாக இஸ்க்ரவை ஒரு தேசிய நாளிதழாக தொகுக்கும் முயற்சி நடந்து வந்தது. நான் ஊஃபா நகரத்தில் நாடுகடத்தப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்தேன். நான் மிகவும் மதிக்கும், விரும்பும் மூத்த புரட்சியாளராகிய வேரா இவனோவா சாஸுலிச்சிடம் உழைக்கும் மகளிர் கைப்பிரதியை வ்ளாடிமீர் இலியீச் காண்பித்தார். அவருடைய மதிப்பீடு எனக்கு மிகவும் முக்கியமானது. அதனைப் படித்த வேரா இவனோவா: “சிற்றேட்டில் சில தவறுகள் இருப்பினும் அவர் பிரச்சினையின் ஆணிவேரைப் பிடித்துவிட்டார்” என்று சொல்லி பதிப்பகத்தையும் பரிந்துரை செய்தார். இஸ்க்ரா இச்சிற்றேட்டை பதிப்பித்தது. ரஷ்யாவில் அது ஒரு இரகசிய அச்சகத்தில் மறுபதிப்பும் செய்யப்பட்டது. 1905இல் தான் வெளிப்படையாக அச்சிட்டு விநியோகிக்கும் நிலைமை உருவானது. நான் அவ்வப்போது பயன்படுத்திய “சப்லீனா” என்னும் புனைப்பெயரில் கையொப்பம் இட்டிருந்தேன். வெகு விரைவில் அது மீண்டும் தடைசெய்யப்பட்டது.
1900 தொடங்கி தற்போது 25 வருடங்கள் கழிந்துவிட்டன. ஃபிப்ரவரி மற்றும் அக்டோபர் புரட்சி உட்பட இக்காலகட்டத்தில் பல்வேறு எழுச்சிகளும் ஏற்பட்டன. பாட்டாளி வர்க்கம் ஆட்சியைப் பிடித்துவிட்டது. பாட்டாளி வர்க்கத்தின் நிலைமைகள் மாறிவிட்டன, அதனோடு உழைக்கும் மகளிர் மற்றும் விவசாய மகளிரின் நிலைமைகளும் மாறிவிட்டன. உழைக்கும் மகளிரின் நிலைமைகள், அவளது உரிமைகள் மற்றும் அரசாட்சியில் பெண்களை இணைத்தல் குறித்தெல்லாம் வ்ளாடிமீர் இலியீச் பேரார்வத்துடன் அழகாகவே எழுதியுள்ளார். அதேபோல் மற்ற தோழர்களும் இதுகுறித்து நல்லபடியாக நிறையவே பேசியுள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்கள் அமைப்புகளும் தங்களுடைய நடவடிக்கைகளை பரந்த தளங்களில் நீட்டித்திருக்கின்றனர். இதன் விளைவாக ஒவ்வொரு நாளும் உழைக்கும் மகளிர் மற்றும் விவசாய மகளிர் மேலும் மேலும் அரசியல் விழிப்புணர்வு பெருகின்றனர், தன்னம்பிக்கை பெறுகின்றனர். புதிய வாழ்வை அமைத்திடுவதில் மேலும் ஊக்கத்துடன் பங்கெடுக்கின்றனர்.
இந்த உழைக்கும் மகளிர் அறிக்கையானது காலத்தால் பழையது.
இருப்பினும், இத்துண்டறிக்கையைப் படிக்கையில், இதனை மறுபதிப்பு செய்ய வேண்டும் என்ற தோழர்களின் திட்டத்தை நான் ஏற்கிறேன். அன்றைய உழைக்கும் மகளிரின் நிலைமைகள் பற்றிய விவரணங்களைப் படிக்கும்போது அங்கிருந்து நாம் இன்று எதுவரை முன்னேறியுள்ளோம் என்ன சாதித்தோம் என்பதை அறிந்துகொள்ள முடியும். அதேவேளை நாம் சாதிக்காதது என்ன, உழைக்கும் மகளிரின் முழுமையான விடுதலைக்காக நாம் இன்னும் தீவிரமாக, விடாப்பிடியாக எவ்வளவு உழைக்க வேண்டும் என்பதையும் அறிந்துகொள்ள முடியும்.
உங்களுடைய சொந்த வாழ்வையோ அல்லது நீங்கள் அறிந்த ஒரு பெண் தொழிலாளியின் வாழ்வையோக் கூட சற்று திரும்பிப் பாருங்கள். நெக்ரசோவின் சொற்களில் சொல்வதானால், “ஓ! பெண்களின் பாடுதான் எவ்வளவு கடினமானது, பெண்ணைப் போன்றொதொரு துன்பப்படும் பிறவியும் உள்ளதோ. கிராமமோ, சிறு நகரமோ உழைக்கும் வர்க்கப் பெண்கள் “நிலையான, எப்போதைக்குமான தொழிலாளியாகவே இருக்கின்றனர்.” ஆண்களைக் காட்டிலும் அதிகம் உழைக்க வேண்டியுள்ளதோ இல்லையோ, கண்டிப்பாக பெண்கள் குறைவாக உழைப்பதில்லை. அவளும் அதே ஏழ்மையை, ஊட்டச்சத்துக் குறைபாட்டை, தூக்கமின்மையை பகிர்ந்துகொள்கிறாள். அதனோடு கூட துயரமும் அவமானமும் அவளை கூடுதலாகப் பீடிக்கிறது.”
இன்பமாக வாழ ரஷ்யாவில் யாருக்கு கொடுத்துவைத்திருக்கிறது (To whom in Russia is it given to live well) என்று நெக்ரசொவின் கவிதை ஒன்றிருக்கிறது. அதில் ஒரு விவசாயப் பெண் தன்னுடைய கசப்பான வாழ்வு பற்றி ஒரு யாத்ரீகரிடம், “பெண்ணின் மகிழ்ச்சிகரமான வாழ்விற்கும், சுதந்திரமான இன்பகரமான வாழ்க்கைக்குமான சாவியை மறந்து கடவுளானவர் அதை தொலைத்தும் விட்டார்… ஆம் தொலைந்துவிட்டது! ஏதோ ஒரு மீன் அதனை விழுங்கிவிட்டது என்று நினைத்துக்கொள்ளுங்கள்… எந்த மீன் அந்த விலைமதிப்பற்ற சாவியை விழுங்கியது… அது எந்தக் கடலில் நீந்திக் கொண்டிருக்கிறது என்பதை கடவுள் மறந்துவிட்டார்!” என்று கூறுகிறாளாம். அந்த விவசாய அடிமைப் பெண்ணால் புலம்பவும், என்றோ ஒருநாள் அந்த மறைத்துவைக்கப்பட்ட சாவியை கடவுள் கண்டுபிடித்துவிடுவார் என்ற நம்பிக்கையிலும் மட்டுமே வாழ முடிகிறது. அத்தகைய நம்பிக்கைகளை இப்போதைய பெண் தொழிலாளர் கைவிடுகிறாள், இருட்டில் தட்டுத்தடுமாறி அச்சாவியை தானே தேட முற்படுகிறாள். “பெண்ணின் மகிழ்ச்சிகரமான வாழ்விற்கும், சுதந்திரமான இன்பகரமான வாழ்க்கைக்குமான சாவியை அவள் எங்கு தேட வேண்டும்? சரியாக இதைத்தான் இந்த சிற்றேடு விளக்கப்போகிறது. தொழிற்சாலைகள், பட்டறைகளில் வேலை செய்யும் பெண்கள் அல்லது குடிசைத் தொழில் செய்யும் உழைக்கும் மகளிர் மற்றும் விவசாய மகளிரின் நிலைமைகளை நாம் ஆய்வு செய்வோம். உழைக்கும் மகளிரின் நிலைமை குறிப்பாக கடினமானதாக இருக்கிறது, ஏனென்றால் அவள் பாட்டாளி வர்க்கத்தின் அங்கம். அவளுடைய நிலைமைகள் ஒட்டுமொத்த பாட்டாளி வர்க்க நிலைமைகளோடு பிணைந்துள்ளது. பாட்டாளி வர்க்க வெற்றியே பெண் விடுதலைக்கான திறவுகோல். மேலும், குடும்ப அமைப்பினுள் பெண்ணின் சார்பு நிலையையும், அதனால் அவள் ஆணுக்கு அடிமையாக்கப்படுவதைப் பற்றியும் பார்ப்போம். அத்தகைய சார்பு நிலைமைக்கான காரணங்களையும் நாம் பேசுவோம். அதனூடாக பாட்டாளி வர்க்க விடுதலையோடு தான் ஒரே நேரத்தில் அவள் முழுச் சுதந்திரத்தையும் பெறமுடியும் என்பதையும் விளக்குவோம்.
இறுதியாக, ஒரு தாயாக உழைக்கும் மகளிருக்கு அந்த வெற்றியில் நலன்கள் உள்ளன என்பதையும் எடுத்துரைப்போம். தொழிலாளர்களின் நலனுக்காக பெண்கள் தோளோடு தோள் நின்று போராடினால் மட்டுமே “சுதந்திரமான இன்பகரமான வாழ்க்கைக்கான சாவியை” பெண்கள் கண்டுபிடிக்க முடியும்”.
- நதீஸ்டா கான்ஸ்டாண்டினோவா க்ரூப்ஸ்கையா (1869 – 1939)
லெனின் என்னும் ஆளுமை மீதான பரவலான ஈர்ப்பால் மற்றுமொரு ஒரு புரட்சியாளர், கட்டுரையாளர் என்று இருட்டடிப்பு செய்யப்பட்டதோடு துரதிர்ஷ்டவசமாக பலராலும் ‘லெனினின் மனைவி’ என்று மட்டுமே அறியப்பட்டவர். கல்வியாளராக அவர் ஒரு தனித்துவமான ஆளுமை என்றபோதும் க்ரூப்ஸ்கையாவின் எழுத்துகள் இதுவரை ஆங்கிலத்தில் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளது என்று டிமிட்ரி கொலெஸ்நிக்கும், அலெக்ஸ் கார்டனும் பதிவு செய்கிறார்கள்.

க்ரூப்ஸ்கையா தற்போது என் புதிய காதலி!


.... வேறு சொற்களில் சொல்வதானால், உழைக்கும் மகளிர் அறிக்கை தொலைந்து போகவில்லை என்றாலும்கூட, புறக்கணிக்கப்பட்டது. 1925 முதல் இன்றுவரை க்ரூப்ஸ்கையாவின் தொகுப்புகளில் அல்லாது அது தனியாக பதிப்பிக்கப்படவே இல்லை. ஒரு சில கூற்றுகள் மட்டுமே (விபச்சாரம் போன்ற) விவாதத்திற்கு அவசியப்படுமிடத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த அறிக்கையும் இதற்கு முன்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை (ரஷ்ய புரட்சியாளர்களின் இதர படைப்புகளைப் போல்). ..
26 வருடங்கள் கழித்து தனி சிற்றேடாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வந்த இந்த அறிக்கையை தற்போது மேனிஃபெஸ்டோ பிரஸ்ஸின் அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வருகிறேன். மொழிபெயர்த்து வெளியிட்டதும் சில பிரதிகளை அவர்களின் விநியோகத்திற்காக அனுப்பும்படி கேட்டுள்ளார்கள்.
20 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை விரைவில் தமிழில்... மொழிபெயர்த்து முடித்தாலும் வெளியிடுவதற்கு தலைகீழாய் நின்று தண்ணீர் குடிக்க வேண்டியுள்ளது!
(The Woman Worker என்பதை உழைக்கும் மகளிர் என்று மொழிபெயர்த்துள்ளேன். தன்னுணர்வோடு ஆசிரியர் பெண் தொழிலாளி என்பதை தவிர்க்கிறார்.
மொழிபெயர்ப்பு பிழைகள் இருப்பின் kotravaiwrites@gmail.com க்கு எழுதுங்கள். நன்றி)
ஆசிரியரின் அறிமுகம் அடுத்த பதிவில்....

May 17, 2018

ஃபீனிக்ஸ் பறவையல்ல இவள்....


வீழ்தல் என்பது தவறி வீழ்தல்
பற்றியதை அற்று வீழ்தல்
பொய்த்துப் போன நா எரியும்
கற்களிடறி வீழ்தல்
எண்ணிலடங்கா வீழ்ச்சிகளின் பாரம் 
பூமி புதைந்துவிடவில்லை
சுழன்று கொண்டேயிருக்கிறது
போராட்டமே வாழ்வென்றது
தாடி வைத்த கம்யூனிச பூதம்
ஒடுக்கும் புற உலகோ
ஒடுக்கப்படும் அக உலகோ
அடங்க மறு
போர் தொடு
நிலம் செழிக்க
வா
இருவரும் உழவு செய்வோம்
ஒரு கை ஓசை
சொடுக்கும் அதிகாரம்
இரு கை சேர்கையில்
வெற்றிக் களிப்பு
காத்திருத்தலும்
மௌனித்திருத்தலும்
நிபந்தனைகளற்று முந்தானை விரித்தலுமே
காதலென்றால்
வேசை என்னும் சொல்லுகுரிய
ஆண்பால் சொல்லை
உருவாக்காத இச்சமூகத்தின்
குறிகளை அறுத்தெரியும்
வல்லமை முலைகளுக்குண்டு
பெண்
அன்பு காட்டுவதும்
அறிவு காட்டுவதும்
தேவதையாவதும்
நீலியாவதும்
ஆண் நாவின் நீளம் பொறுத்தது
வீழ்கையில்
மன் சுமக்கிறது
மண் கரைக்கிறது
மண் முத்தமிடுகிறது
கசியும் ஈரம் போதும்
விழ விழ
எழும்
ஃபீனிக்ஸ் பறவை
அல்ல இவள்
வீழும் விதை
ஒற்றை மரமோ
அடர் காடோ
(ஓவியம்: ஃப்ரீதா காலோ - https://www.fridakahlo.org/marxism-will-give-health-to-the-…)

May 13, 2018

அன்னையர் தின கட்டவிழ்ப்பு





இந்த அன்னையர் தினத்தில் (எனக்கு) அவசியமானதோர் கட்டவிழ்ப்பை மேற்கொள்ள விரும்புகிறேன். இக்கட்டவிழ்ப்பு என் நலம் விரும்பிகளுக்கு சற்று அதிர்ச்சிகரமானதாகவும் என்னைத் தங்களின் எதிரிகளாக கட்டமைத்துக் கொண்டவர்களுக்கு மகிழ்ச்சிகரமாகவும் கொண்டாட்டம் தரக்கூடியதாகவும் இருக்கும்.

எவ்வகையிலேனும் இச்சமூகத்திற்கும்… ‘எதிரிகளுக்கும்’ என்னால் மகிழ்ச்சியளிக்க முடியுமெனில் எனக்கு அது பெரும் மகிழ்ச்சியே.
என்னுடைய முகநூல் செயல்பாடுகளில் சமீப காலங்களில் சில மாற்றங்கள் தென்படுவதை ஒட்டி, ஒரு சில நண்பர்களுக்கு குழப்பம், வெறுப்பு… நீங்களுமா இப்படி போன்ற கேள்விகள்…

அந்த நீங்களுமா என்பதில் உள்ள அக்கறையை நான் மதிக்கும் அதேவேளை இதுபோன்ற கேள்விகள் என் மீது ஏற்றி வைக்கும் பிம்பத்தையும் நான் தகர்க்க விரும்புகிறேன். ஏனென்றால் அதுவும் ஒருவித தூய்மைவாத கண்ணோட்டமாக – ‘மார்க்சியர்’ / ‘பெண்ணியவாதி’ / ‘போராளி’… என்பதற்கு அவர்கள் கொடுத்துக்கொள்ளும் முட்டாள்தனமான புரிதலாக இருக்கிறது.

அத்தகைய பிம்பங்கள் எனது தனிப்பட்ட வாழ்வை பாதிக்கக்கூடியதாகவும் சில நேரங்களில் மாறிவிடுகிறது. அவரவர் என்னை (என் போன்ற பெண்களை) தங்களின் விருப்பம் போல் வடித்துக்கொள்ளும் அவசியமின்றி நான் முன்னமே சொன்னது போல் என் சுயசரிதையை எழுதும் அவசியம் ஏற்படுமெனில், அதை நானே எழுதுவேன்.

தனிப்பட்ட வாழ்வை ஏன் பொதுவெளியில் வைக்க வேண்டும் என்கிற கேள்வியும் எழலாம். பொதுவெளியில் இயங்குவதால் என் போன்ற பெண்களின் வாழ்வு மற்றவருக்கு ஏதோ ஒரு வகையில் ’கற்பிக்கவும்’, கற்பிதங்களை முறியடிக்கவும் உதவுகிறது. அதோடு இங்கு ஒரு சில ‘குடிகார மகான்களுக்கு’ கம்யுனிஸ்டுகள் / சமூக மாற்றத்திற்காக இயங்க விரும்பும் ஆர்வலர்கள் பற்றி - கோட்பாட்டு அறிவற்ற காரணத்தால் – ஏற்படும் புரிதலில் (தன்னுணர்வின்றி?!) பல்லிளிக்கும் ஆணாதிக்க எக்காளத்தை காரி உமிழவும் இது தேவைப்படுகிறது.

என்னைப் பற்றிய சுய குறிப்பில் மற்றுமொரு பண்பை சேர்க்கும் தருணம் வந்துவிட்டது:

நான் பெண், ஆனால் பெண்மையைத் துறந்தவள்
நான் தாய், ஆனால் தாய்மையைத் துறந்தவள்
நான் ஆகச்சிறந்த காதலி, ஆகவே சகியாக் காதலை துறப்பவள்
தனியுடைமையின் உடலரசியல் அறிந்தவள்
ஆகவே ஆணாதிக்க கருத்தாயுத வாளினை
வீசுபவர்களின் அமிலக் குறிகளை நோக்கி திருப்பிவிட்டு
பொருள் போற்றி
வாழ்வைப் பொருளோடு
சமூக மாற்றத்திற்கான சிறிய வினையூக்கியாக செயல்படுவது
என்று எனக்கு நான் கட்டளையிட்டுக்கொண்ட பொருளோடு
அறிவாயுதம் ஏந்தி வாழ்பவள்.

பெண் உடல் என்பது யோனி மட்டுமல்ல….
ஆண் உடல் என்பது குறி மட்டுமல்ல
பெண் உடலும் ஆண் உடலும் கூடுவது புணர்ச்சிக்காக மட்டுமல்ல
இணைதல் என்பது அறிவுச் சேர்க்கை
இணைதல் என்பது மனத்துணை*

இப்படியெல்லாம் தெளிவாகப் பேசும் பெண்கள் குறித்த ‘பொதுக் குறிப்பு’ – திமிர் பிடித்தவள், கேடுகெட்ட பெண்ணியவாதி, தேவடியா… புரட்சிகர வேஷம் போடும் வேசி … இதை சுயக் குறிப்பாக தேர்வு செய்யும் வசதியை முகநூல் APP வழங்காத காரணத்தால் ….

என்னைப் பற்றிய சுய குறிப்பில் இப்போது மற்றுமொரு பண்பை சேர்க்கும் தருணம் வந்துவிட்டது:

நான் பெண், ஆனால் பெண்மையைத் துறந்தவள்
நான் தாய், ஆனால் தாய்மையைத் துறந்தவள்
அறிவைத் துற உடலாய் இரு
என்னும்
ஆண் சிலந்திகளுக்கு
ஒரு போதும் நான்
ஈயாவதில்லை

(*மனத்துணை - அனுபவத்திலும், கற்றலில் ஈடுபடுவதன் மூலம் ஏற்படும் எண்ண ஓட்டங்கள், விருப்பங்களின் தேக்கம் மற்றும் அசைபோடும் செயல்பாடுகளைப் பகிர்ந்துகொள்ள, ஊற்றெடுக்கும் அன்பை இறைக்க, இறைப்புக்கு ஈடாக பன்மடங்காய் திரும்பப் பெற.. இப்படியாக)
ஓவியம் வருணா

Apr 13, 2018

நாம் மனிதர்கள் தானா?



கடவுளும் மதமும் மனித சமூகத்தில் நிலவிய சுரண்டல்வாத நிலைமைகளிலிருந்து பெண்களையும் உழைப்பாளர்களையும் ஒடுக்குவதற்காக, ஆளும் வர்க்க ஆயுதமாக தோன்றிய கருத்தியலாகும். சிறுமி ஆசிஃபாவிற்காக ஒட்டுமொத்த இந்தியாவும் கண்ணீர் வடிக்கையில் கடவுளுக்கெதிராக பேசுவது பாவமாகிவிடுமா?

மதவாத அராஜகங்களுக்கெதிராக, அதிலும் குறிப்பாக அது தற்போது குழந்தைகளையும் காவு வாங்குமளவுக்கு கொடூரமாக மாறி வரும் வேளையில் நீதி வேண்டுவதும், அத்தகைய கொடுமைகக்காரர்களை தண்டிக்க வேண்டுவதும் அவசியமே. ஆனால் எந்த மதமும், எந்த இறைத்தூதரும், எந்த மத சீர்திருத்தவாதியும் இந்த மனித சமூகத்தை பண்படுத்திவிட முடியாது என்பதை நாம் அனைவரும் இப்போதாவது உணர்வது அதைவிட முக்கியமானது.

மதம் என்பது ஒரு நிறுவனம். பணக்காரர் வர்க்கம் சொத்து சேர்க்க ஏதுவாக மற்றவர்களை ஒடுக்க தோன்றிய ஒரு நிறுவனம். மற்றவர்களைக் காட்டிலும் தம்மை மேன்மையானவர்களாகவும், தூய்மையானவர்களாகவும் பிரகடணப்படுத்தி பாகுபாட்டை போதிக்கும் ஒரு நிறுவனமிது. வெறுப்பும் அதிகாரமுமே அதன் உள்ளுணர்வு. அராஜகமும், காட்டுமிராண்டித்தனமுமே அதன் அடித்தளம்.

அறிவிருக்கும் மனிதர்களாக பகுத்தறிவோடு சிந்திப்பதிலிருந்து எது நம்மை தடுக்கிறது? இத்தனை கடவுளர்கள் இருக்கையில் ஏன் ஒரு கடவுள் (ஆண்) கூட இந்த அராஜகங்களை நிறுத்த முடியவில்லை என்ற ஒரு எளிய கேள்வியைக் கூட நம்மால் கேட்கவியலாதா? எது நம்மை தடுக்கிறது?

‘பாவம்’, ‘புண்ணியம்’, ‘மறு பிறவி’ போன்ற வாதங்களால் எதிர்கொள்ளாதீர்கள். ‘பாவம்’, ‘புண்ணியத்தில்’ நம்பிக்கை உண்டெனில் எதற்காக நீங்கள் ஆசிஃபாவிற்காக கண்ணீர் சிந்துகிறீர்கள்? ‘நல்லவன்’, ‘கெட்டவன்’ என்பதில் நம்பிக்கை உண்டெனில், எதற்காக நீதி வேண்டி நீதிமன்றத்திடம் போராடுகிறீர்கள்? வாருங்கள் நாம் அனைவரும் ஒன்றுகூடி நம் உணர்ச்சி மிகு குரலால், பக்திப் பாடலால் கடவுளை இறங்கிவரச் செய்வோம். அவர் அவதாரம் எடுத்து ‘அசுரனை’க் கொல்லட்டும்.

எந்த மதமும், கடவுளும் வன்புணர்வு செய்ய சொல்லி கற்றுத்தரவில்லை. அது ’கெட்ட’ விஷயங்களை போதிப்பதில்லை என்பீர்களானால், தயவு செய்து உங்கள் இல்லங்களில் உள்ள மத நூல்களை எடுத்துப் படித்துப் பாருங்கள் – அது பெண்களைப் பற்றியும், உழைக்கும் வர்க்கத்தைப் பற்றியும் என்ன சொல்கிறது என்பது உங்களுக்குப் புரியும்.

நம்மை நாமே ‘மனிதர்கள்’ என்கிறோம். அதாவது சிந்திக்கத் தெரிந்த ஆறரிவு பெற்ற மனிதர்கள். பகுத்தறியக் கூடியவன் மனிதன், அல்லவா? நாம் நம்மை மனிதர்கள் என்று கூறுகையில், அது நாம் இயற்கையைப் பற்றி அறிந்திராத விலங்காண்டிகளாக, காட்டுமிராண்டிகளாக வாழ்ந்து பண்பட்ட மனிதர்களாக வளர்ந்துவிட்ட வரலாற்று வளர்ச்சியைச் சுட்டுகிறது. விலங்காண்டிகளும் காட்டுமிராண்டிகளும் இயற்கையின் மாறுதல்களை, அதில் நேரும் அழிவுகளையெல்லாம் புரிந்துகொள்ளக் கூடியவர்களாக இருக்கவில்லை. ஆகவே இயற்கை / அழிவு குறித்த அச்சம் அவர்களுக்கு இருந்தது. ஆகவே அவர்கள் அதனை வழிபட்டும், தம் நல்வாழ்விற்காக அதன் கருணையை வேண்டியும் வாழ நேர்ந்தது. பயத்திலிருந்து மீளும் விதமாக தமக்குத் தாமே உதவிக் கொள்ளும் வகையில் ஏதோ ஒன்றை பற்றிக்கொண்டனர். அத்தகைய மூடநம்பிக்கைகளிலிருந்து ஒரு சாரார் செல்வம் சேர்க்கவும், அதற்கு வேண்டிய அதிகாரத்தைப் பெறவும் உண்டான சுரண்டல்வாத சமூகத்திலிருந்து மதமும் கடவுளும் தோன்றின.

ஆளும் வர்க்கமாக, அரசாக தோன்றிய இந்தப் பிரிவு மற்றப் பழங்குடிகளை ஒடுக்கவும், அவர்களின் செல்வங்களை சூறையாடவும் ஆயுதங்கள் மற்றும் ‘இராணுவத்தை’ப் பயன்படுத்தினாலும், அடிமைப்படுத்தப்பட்டோர் தாமாக அடங்கிப் போகும் வகையில் மத கருத்தாக்கங்களையும், நெறிமுறைகளை போதிக்கும் மத நூல்களையும் உருவாக்கியது. அதன் மூலம் பாவம் புண்ணியம் என்னும் பெயரிலும், விசுவாசம் என்னும் பெயரிலும் அதிகாரத்திற்கு அல்லது அரசனுக்கு அல்லது எஜமானனுக்கு அல்லது முதலாளிக்கு மற்றும் ஒரு பெண் ஆணுக்கு தானாக அடிபணிந்து நடக்கும் அடிமைகளாக மனிதர்கள் மாற்றப்பட்டார்கள். மனிதன் உண்டாக்கிய சுயநலமிக்க நயவஞ்சகமான கருவியே மதம் (கடவுள்).

மனிதர்கள் என்போர் தம் புலன்களால் இயங்கக் கூடியவர்கள், கற்கக் கூடியவர்கள், சிந்திக்கக் கூடியவர்கள். அப்படியிருக்கையில், இயற்கைக்கு அப்பாற்பட்டு ஒரு சக்தி இருக்கிறது என்று நம்புவது விந்தையானதும், முட்டாள்தனமானதுமில்லையா? நம் புலன்களுக்குப் புலப்படாத பல விஷயங்கள் இயற்கையில் உள்ளன. ஆம்! அதற்காக கடவுளை வழிபட்டால் இவையெல்லாம் விளங்கிவிடுமா? இதுவரை மனிதர்கள் கண்டுபிடித்துள்ள அத்தனை விஷயங்களும் மனித மூளையின், மனித முயற்சியின் விளைவுதான் என்று ஏற்றுக்கொள்வதில் நமக்கு ஏதும் பிரச்சினைகள் உள்ளனவா? கடவுள் பற்றிய கதைகளும், பிம்பங்களும், உருவங்களும் மனித வாழ்வை அதன் வக்கிரங்களோடும், ஏற்றத்தாழ்வோடும் பிரதிபலிக்கும் ஒன்றுதான் என்பதை நம்மால் பகுத்தறிய முடியாதா? பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோமே, நாளுக்கு நாள் தீமைகள் பெருகிக்கொண்டே இருக்கையில் தீமையை அழிக்க தசாவாதாரம் எதையும் நாம் காண முடியவில்லையே.

ஆசிஃபாவுக்காக, நிர்பயாவுக்காக அல்லது பாதிக்கப்பட்ட யாரோ ஒரு மனிதருக்காக அழும் எம் சகோதர சகோதரிகளிடம் நான் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் – முதலில் உங்கள் நம்பிக்கைகளைப் பற்றி கேள்வி எழுப்புங்கள். ஏனென்றால் நம்மைப் போன்ற ‘நம்பிக்கைக்காரர்களே’ (சாதி, மதம் மற்றும் இதர கருத்தியல்கள் மீது நம்பிக்கையுள்ளவர்கள்) சமத்துவத்திற்கு தடைக்கற்களாக இருக்கின்றோம். இச்சமூகத்தில் ஏற்றத்தாழ்வை ஒழித்து சமத்துவத்தை நிலை நாட்டி உண்மையான நீதியை நிலை நாட்ட நம்பிக்கைக்காரர்களே தடை சக்திகள்.

அறிவியலுக்குப் புறம்பான நம்பிக்கைக்காரர்கள் தான் நம் ‘எதிரிக்குப் பாடம் புகட்ட வேண்டும்’ என்று அழித்தொழிக்கும் அதிகாரத்தை வழங்குபவர்கள். நாமே அதன் பாதுகாவலர்களும் கூட. ‘சரி’, ‘தவறு’, ‘நல்லது’, ‘கெட்டது’, ‘மேலானது’, ‘கீழானது’ என்றெல்லாம் சொல்லப்படும் ஒன்றை என்னவென்று கேள்வி கேட்காமல், ஆளும் வர்க்கம் நிர்ணயித்துள்ள இந்த எதிர்மறைகளின் உண்மையானப் பொருளை கேள்வி கேட்காமல் ‘தீமை’யை அழிக்கவும், தண்டிக்கவும் அதிகாரம் வழங்கும் நாம் தானே உண்மையில் ‘தீயவர்கள்’.

நம்பிக்கைக்காரர்களாக நாம் இந்த சமூகத்தில் நிலவும் நன்மை, தீமை, ஏழ்மை, செல்வநிலை, நல்லவர், கெட்டவர், தூய்மையானது, அசுத்தமானது, பலமானவர், பலவீனமானவர், மதம் x மதம், சாதி x சாதி, பாலினம் x பாலினம், இனம் x இனம் என்று பகைமை நிலவுவதற்கான அடிப்படை காரணங்களைப் பற்றி கேள்வி எழுப்ப விரும்புவதில்லை. ‘பாவம்’ x ‘புண்ணியம்’ அல்லது ‘நல்லவன்’, ‘கெட்டவன்’ ஆகிய வியாக்கியானங்களைப் பேசி சமாதானம் கொள்வோம். மிஞ்சிப் போனால், தாயின் ‘வளர்ப்பு’ சரியில்லை என்று ஒரு பெண்ணுக்கு சான்றிதழ் வழங்குவோம்.

மனிதர்கள் ஒன்று அறியாமையினாலோ அல்லது சுயநலத்தாலோ இதுபோன்ற ‘நம்பிக்கைக்காரர்களாக’ இருப்பார்கள் (சுயநலமே முதன்மை காரணம்). ஆனால், மனிதர்களாக சக மனிதனை துன்புறுத்தவும், கொல்லவும், வன்புணர்வு செய்யவும், ஒடுக்கவும், சுரண்டவும் அதிகாரம் வழங்கும் நம்பிக்கைகளை (மார்க்கம் - மதம்!) கேள்வி எழுப்பாமல் போனால் நம்மை ‘நாகரீக மனிதர்கள்’ என்று சொல்லிக் கொள்ளும் தகுதியும் நமக்கு உள்ளதோ?

To Read in English - https://masessaynotosexism.wordpress.com/2018/04/13/are-we-humans/



Apr 8, 2018

விளம்பரம் என்னும் நஞ்சு...



திரு. சூர்யா நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை உணர்ந்துதான் செய்கிறீர்களா, அல்லது வெறும் நடிகன் என்கிற உணர்விலிருந்து மட்டுமே உங்கள் தேர்வுகளை பொதுவெளியில் மேற்கொள்கிறீர்களா?
மீண்டும் மீண்டும் தவறான கருத்தியலை, பாகுபாட்டை நியாயப்படுத்தும் வகையிலான விளம்பரங்களிலேயே நடிக்கிறீர்களே, இதன் ஆபத்தை எப்போது உணர்வீர்கள்?
உஜ்ஜாலா கிர்ஸ்ப் & ஷைன் என்னும் விளம்பரத்தை இன்று காண நேர்ந்தது. அதில் என்ன திறமை இருந்தாலும் இந்த உலகம் ஒருவனின் உடையை வைத்துத்தான் மதிக்கிறது என்று ‘அக்கறையுடன்’ பேசியுள்ளீர்கள். குறைந்தபட்சம் அதையாவது பேசினீர்களே, மகிழ்ச்சி. ஆனால் அப்படி பாகுபடுத்திப் பார்க்கும் ஒரு பிரச்சினைக்குத் தீர்வு பாதிக்கப்பட்டவருக்கு அறிவுரை வழங்குவது, அல்லவா? இது எவ்வளவு வன்முறையானது, ஆபாசமானது என்பதை உணர முடிகிறதா உங்களால்?
முதல் விளம்பரத்தில், ஒரு அதிகாரி உங்கள் மிளிரும், விரைப்பான உடையக் கண்டு சுரேஷ் என்பவராக உங்களை நினைத்து புன்னகையுடன் அழைக்கிறார், அது தாங்கள் இல்லை என்றதும் மங்கலான கசங்கிய சட்டையுடன் வரும் மற்றொருவரைப் பார்த்து அந்த அதிகாரியின் முகம் கோணுகிறது. சந்திப்பதை தவிர்த்து செல்கிறார். ஆம் இதுதான் சமூக யதார்த்தம்.
அடுத்த விளம்பரத்தில் நேர்முகத் தேர்வுக்கு வந்திருக்கும் ஒருவர் தன்னுடைய MERITகளை சொல்லி பெருமை பேசுகிறார், ஆனால் அதே திறமைகளைக் கொண்டிருக்கும் உங்களின் உடைக்காக அந்த நிறுவனம் உங்களை தேர்ந்தெடுப்பதாகச் சொல்கிறது. உடனே “இந்த உலகம் நம்ம திறமையை மட்டுமல்ல, நம்ம டிரஸ்ஸையும் எடை போடும்” என்று உருக்கமாகப் பேசுகிறீர்கள்.
ஆனால் இதற்குத் தீர்வு – உஜாலாவுக்கு மாறுவதா? அல்லது அப்படி பேசிய அதிகாரியின் சட்டையைப் பிடித்துக் கிழிப்பதா? உங்கள் திரைப்படங்களில் அநியாயங்களை எதிர்த்தும், ஒடுக்குபவனை அடித்தும் பேசும் தார்மீக்க் கோபங்கள் எங்கு போனது? உங்களைப் போன்றோரை கதாநாயகனாக கட்டமைக்க ‘படைப்பாளிகள்’ அக்கறையோடு புனையும் வசனங்களையும், சிந்தனைகளையும் ஓய்வாக இருக்கும் போது அசை போட்டு பார்த்தாலே, கொஞ்சமேனும் அரசியல் விழிப்புணர்வு ஏற்படுமே. அதில் பெண் விடுதலைக்கு இடமில்லை எனினும், அநியாயங்களை தட்டிக் கேட்க வேண்டும், ஏற்றத்தாழ்வு கூடாது என்னும் Formula உணர்வையாவது எடுத்துக்கொள்ளலாமே.
இந்த நாட்டில் (உலகெங்கிலும்) மொழி, இனம், சாதி, மதம், பாலினம், உடல் திறன் என்று பல்வேறு ’அடையாளங்களை’ வைத்து மனிதர்கள் பாகுபாட்டிற்கு உள்ளாகிறார்கள், ஒடுக்கப்படுகிறார்கள், அடித்துக் கொல்லப்படுகிறார்கள். எல்லாரும் உஜாலாவுக்கு மாறிவிட்டால் தப்பித்துக்கொள்லலாமா? உலகம் இப்படித்தான் இருக்கு நாமதான் மாறணும் என்பது என்னவிதமான சமூக அக்கறை, என்னவிதமான அரசியல் புரிதல்? பெண்களும், குழந்தைகளும் வன்புணர்வுக்குள்ளாகையில் அவர்களின் உடைதான் காரணம் என்று இந்த ஆணாதிக்க சமூகம் வியாக்கியானம் செய்கிறதோ, அதற்கு நிகரான ஒரு உபதேசத்தை நீங்கள் இந்த விளம்பரத்தில் செய்துள்ளீர்கள். அதைப் பார்க்க பார்க்க நெஞ்சு பதைபதைக்கிறது. விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்குத் தான் அதில் உள்ள ஆபத்தான வணிகப் பேச்சின் பாதிப்பு புரியும். நீங்கள் எல்லாம் ‘மேட்டுக் குடியினர்’ உங்களைப் போன்றோருக்கு ‘சமூக அக்கறை’ என்பது பொழுதுபோக்கு, பெயர், புகழ், புண்ணியம் சேர்க்கும் வழிமுறையாக இருக்கலாம். எங்களுக்கோ அது வாழ்க்கைப் போராட்டம். போராட்டமே எங்கள் வாழ்க்கை என்னும் நிலையில் உள்ளோம். போராடுபவர்கள் அதற்கும் உரிமை இன்றி சிறையிலடைக்கப்படுகிறார்கள். போலீஸும் அரசும் அப்படித்தன் ஒடுக்கும், விரைப்பான உடை அணிந்து சென்றால் விட்டுவிடும் என்று நாம் சொல்ல முடியாது சூர்யா.
இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் திரள் (உழைப்பாளிகள்) உடுத்த கோவணம் கூட இல்லாமல் இருப்பதைக் கண்ட காந்தி தன் மேலாடையைத் துறந்தார். இந்த விளம்பரத்தில் வருவது போல் - பிறப்பாலேயே ஒரு பிரிவினர் தீண்டத்தாகாதோர், நாகரீகமற்றோர், குற்றப்பழங்குடிகள் என்றெல்லாம் ஒதுக்கப்பட்ட சமூகத்திலிருந்து தலைவனாய் மேலெழுந்த அம்பேத்கர் ’நாகரீக’ உடை அரசியலை கையிலெடுத்தார். அப்போதும் அவரது சாதியைச் சொல்லி ஆதிக்க சமூகம் அவரை அவமானப்படுத்தி, ஒதுக்கி வைத்து கொடுமைகள் செய்தது. தங்களை வன்புணர்வு செய்யும் இராணுவத்திற்கு எதிராக பெண்கள் சிலர் முழுவதுமாக ஆடைகளைத் துறந்து தங்கள் நிர்வாண உடலை ஆயுதமாக்கினர். இப்படிப்பட்ட போராட்டங்கள் எல்லாம் அதிகாரத்திற்கு எதிராக ஆயுதமேந்துவதாக இருந்ததே ஒழிய பாதிக்கப்பட்டவர்களுக்குப் (வணிக ரீதியான) பொருள்களை வழங்கி உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை. முதலாளிகளே உங்கள் விடிவெள்ளி, அவர்கள் தயாரிக்கும் பொருள்களே எங்கள் ‘உயர்வுக்கு’ வழி என்பது எவ்வளவு சுயநலம் மிக்க போதனை.

சமத்துவத்தை நிலைநாட்ட யார் மாற வேண்டும்?

நீங்கள், இயலாதவர்களுக்கு கல்வி கொடுக்கும் இலட்சிய அமைப்பை நடத்துகிறீர்கள்.
முதலாளிகளுக்கு மலிவான கூலிகளை உற்பத்தி செய்வதற்கான கல்விதான் அது எனினும், அதன் பயனைக் கூட வீணடிப்பதில் திரைப்படங்களும், விளம்பரங்களும் முதன்மைப் பங்கு வகிக்கின்றன.
உலகெங்கிலும் வறுமையே மரணத்திற்கான முதல் காரணமாக இருக்கிறது. அதில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள். ஒருநாளைக்கு 20 ரூபாயில் வாழும் நிலையில் 836 மில்லியன் மக்கள் இருப்பதாகவும், தினம் தினம் 7000 இந்தியர்கள் வறுமையின் காரணமாக இறப்பதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதைத் தவிர ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கும் குழந்தைகள், பெண்களின் எண்ணிக்கை இலட்சக் கணக்கில், ஆனால் நமக்கிருக்கும் கவலையோ முதலாளிகளின் பொருள்களுக்கு நுகர்வோரைப் பிடித்துக் கொடுத்து (ஆம், ஆட்பிடிக்கும் வேலைதான் அது) அவர்களை காப்பதாகவே இருக்கிறது.
மிகவும் வேதனையாக உள்ளது சூர்யா.
திரைத்துரையில் பெரும்பாலும் எதையோ செய்து பிழைக்கிறீர்கள்… பிற்போக்குத்தனமான சிந்தனைகளை உயர்த்திப் பிடித்து இந்த சமூகத்தை பின்னுக்குத் தள்ளுவதில் முனைப்புடன் இருக்கிறீர்கள். அதை பொறுத்துக்கொள்கிறோம். ஆனால் விளம்பரங்களிலும் அதுபோன்ற கருத்தியல்களை போதித்து இச்சமூகத்தை சீரழிவிற்குத் தள்ளிவிடாதீர்கள். ஏனென்றால் திரைப்படம் என்பதை பார்க்க அல்லது பார்க்காமல் இருக்க குறைந்தபட்ச தேர்வு எங்களிடம் உள்ளது, ஆனால் விளம்பரம்என்பது எங்களின் அனுமதியின்றி எங்கள் படுக்கையறை வரை எட்டிப் பார்க்கும் சாதனம். அது மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாகிறது. குறிப்பாக குழந்தைகள் விளம்பரங்களால் மிகவும் ஈர்க்கப்படுகின்றனர். அவர்களின் சிந்தனைகளை விளம்பரங்கள் கட்டமைக்கவல்லது. குறிப்பாக தரம், அந்தஸ்து, வெற்றி, இலட்சியம் பற்றி விளம்பரங்கள் போதிப்பவை எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு மனிதனை மனிதன் வெறுக்கச் செய்தலே. அதிலிருந்து அவர்களை மீட்டெடுப்பது பெரும் சவாலாக மாறி வருகிறது.
இச்சமூகத்தை நுகர்வு கலாச்சார அடிமைகளாக்குவதில் விளம்பரங்களே பெரும்பங்கு வகிக்கின்றன. அதனால் பயனடைவது முதலாளிகளே அன்றி மக்கள் அல்ல. Pl do not work hard to make a Capitalist Rich at the cost of our lives & problems.
கூடுதலாக இதற்கும் ஆலோசனை வழங்குங்கள்: பெண்கள் என்பதால் அவர்களின் உடலை இழிவாகப் பார்க்கும், நுகர நினைக்கும், வன்புணர்வால் சிதைக்கும் “எக்சக்குட்டிவ் லுக்கிலிருந்து” தங்களைக் காத்துக்கொள்ள பெண்கள் எதற்கு மாற வேண்டும்?
உங்களைப் போன்று உச்சத்தை எட்டாமல் கூலிக்கு மாறடிக்கும் நிலையில் உள்ளவர்களை நோக்கி நாம் இக் கேள்விகளை எழுப்பும் அவசியமில்லை, ஆனால் எல்லாவிதத்திலும் இன்று நீங்கள் ஓர் உயர்நிலையை எட்டியுள்ளீர்கள். தேர்வு செய்யும் சுதந்திரமும், அதிகாரமும் உங்களிக்கிருக்கிறது. அதை கூருணர்வுடன் பயன்படுத்துங்கள்.
உங்களின் சமூக அக்கறையின் காரணமாகவே இந்த வேண்டுகோளை நாங்கள் விடுக்கிறோம். அத்தோடு, இது உங்களுக்கு மட்டுமான வேண்டுகோளன்று விளம்பரங்களில் நடிக்கும் அனைத்து நடிகர்கள், நடிகைகள் மற்றும் இதுபோன்ற ஆபத்தான, பிற்போக்குத்தனமான, வணிகரீதியான சமூக அக்கறையை பண்டமாகப் பயன்படுத்தி விளம்பரங்களை உருவாக்கும் ‘படைப்பாளிகள்’ ஆகியோரிடமும் வைக்கும் வேண்டுகோள்.
விளம்பரங்கள் மிகவும் ஆபத்தான பிரச்சாரம் … சமூக பொறுப்புடன் செயல்படுங்கள்.
நன்றி
கொற்றவை

Apr 6, 2018

தனிமை என்னும் துணை



தனிமை - அதன் பன்முகத்தைக் கண்டுகொண்டால், தனிமை என்பது எப்போதும் துயராகாது.  
தனிமை குறித்து என்னைச் சுற்றியுள்ளவர்கள் துயரோடு பேசுகையில், அவர்களுக்காக இதை எழுத விழைகிறேன்.

தனிமை என்பது துணையின்றி வாழ்வதாகக் கருதப்படுகிறது. துணையோடு வாழ்வதே பெரும்பாலும் தனிமையாக உருமாறுகிறது என்பதே இச்சமூகத்தின் நகை முரண். சுயநலம், அதிலிருந்து விளைந்த சமூக மதிப்பீடுகள், அதற்கேற்ற சமூக உறவுகள், அதிலிருந்து எழும் நெருக்கடிகள் இதுவே வாழ்க்கை வட்டமாகிவிடுகிறது. குடும்ப உறவுகளும், காதல் உறவுகளும் அதன் ஒரு சிறிய அமைப்பு வடிவம். அவ்வளவே! இதில் பெறுவதற்கு நிறைய இருப்பினும், இழப்பதற்கு ஏதுமில்லை என்பதே எனது கண்டறிதல். அப்படியே ‘இழப்பு’ ஏற்படினும், அங்கு ஒரு புதியதற்கான இடம் பிறக்கிறது. இழப்பு அனுபவமாக மாறுகிறது. அது பல தத்துவங்களை உருவாக்கவல்லது. தேவைப்படுவதெல்லாம் அகவய மூழ்குதலுக்குப் பதிலாக புறவய எதிர்நீச்சல்.

சமூக உறவுகள் பற்றிய அறிவுத் தேடல் எதிர்நீச்சல் போடும் சக்தியை வழங்கும். கைக்கொண்டு பாருங்கள். மனித சமூகத்தின் வரலாற்று வளர்ச்சியோடு மனிதர்களுக்கிடையிலான உறவுகள் பரிணமித்து வந்துள்ளன. உறவும் கூட பண்டமயமாகிவிட்ட இக்காலகட்டத்தில் பொருள்களின் (நுகர்வுப் பொருள்/பணம்) இருப்பும் அளவுமே ஒருவரின் வாழ்வை, சிந்தனையை, தேவையை, உறவுகளை, தேடலை வடிவமைக்கிறது. இந்த உண்மை விளங்குகையில், நம்மைக் கட்டுப்படுத்தும் எதுவொன்றும் - உணர்ச்சிகள் – உணர்வுகள் உட்பட எதுவும் இயற்கையானதல்ல என்னும் உண்மையும் விளங்கும். அந்த உண்மையே நல் துணையாக மாறி நம் வாழ்வை இன்பமயமாக்க வல்லது.

ஆனால், இத்தேடலை மேற்கொள்ளக்கூட நமக்கு ஒரு மனநிலை தேவைப்படுகிறது. தனிமைத் துயர் என்னும் மூடநம்பிக்கை அதற்குள் நம்மை மூழ்கடித்துவிடுகிறது. துன்பப்படாமல் இருக்க முடியாது எனினும், அதற்கொரு சிறப்பிடம் கொடுத்துவிடாதீர்கள். ஏனென்றால் பிறகு அதனை சுவைக்கத் தொடங்கி, அதுவே ஒரு போதையாகி விடக்கூடும்.

தனிமை என்பது அதிகாரமளித்தல். நம்மை நாமே நிர்வகித்துக்கொள்ளவும், சுதந்திரமாக இயங்குவதற்குமான அதிகாரத்தை அது நமக்கு வழங்குகிறது. தனிமை என்பது நேரம். அது முழுக்க முழுக்க நமக்கானதாய் அமைகிறது. அதனை திகட்ட திகட்ட பருகலாம்.  

துணை என்று ஒன்றிருந்தால் இவற்றையெல்லாம் சரிசமமாக பகிர்ந்துகொள்ளலாம். இல்லையேல் அதுவும் நமகே நமக்காய்… கொண்டாடுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக தனிமை என்பது வீடு / குடும்பம் என்னும் அமைப்பிற்குள் நம்மை அடைத்துக்கொண்டு நாம் கற்பனை செய்வதாகும். அந்த சிறைக்குள்ளிருந்து நாம் தான் நம்மை விடுவித்துக்கொள்ள முடியும். அதற்கு நூல்களும், வாசிப்பும் சிறந்த ஊக்கமருந்து. வாசிக்க வாசிக்க சிறகு முளைப்பதை உணர முடியும். அடுத்ததாக இசை எந்த முயற்சியுமின்றி நம்மை தளர்த்தக்கூடியது. பயணம். தனியாக வாழ்பவர்கள் பெற்றிருக்கும் சிறந்ததொரு அதிகாரமிது.

“இதற்கெல்லாம் பணம் தேவையில்லையா. சாப்பாட்டிற்கே வழியில்லாத போது எங்கிருந்து புத்தகம் வாங்க, பயணம் போக…”    

இப்போது நான் சொல்லப்போவது சற்று காட்டமாக இருக்கலாம். உண்மையில், கடின உடல் உழைப்பாளிகளுக்கும். கொடிய வறுமையில் வாடுவோருக்கும் தனிமைத் துயர் பற்றி எண்ணக் கூட நேரமிருக்குமா தெரியவில்லை. இந்தத் தனிமை துயரில் வாடுவோரும் பெரும்பாலும் குறிப்பிட்ட வர்க்கத்தினராக (பெரும்பாலும் மூளை உழைப்பாளிகளாக) இருக்க வாய்ப்புள்ளதோ என்று நான் எண்ணுவதுண்டு. வறுமைக்கோட்டில் வாழ்வோருக்கு வாழ்வதே போராட்டமாக இருக்கையில் உழைத்து களைத்து உறங்கச் சென்றுவிடுகிறார்கள் போலும். அதையும் மீறி துணை சார்ந்த விஷயங்களில், ‘அழகான வாழ்க்கை’ பற்றிய அவர்களுடைய எதிர்பார்ப்புகள் முற்றிலும் வேறானதாக இருக்கிறது. ஆகவே உறவமைதல் எளிதாகி விடுகிறது. அந்நிலையிலிருந்து சற்றே மேல் நிலையில் இருப்பவர்களுக்கே சமூக அழுத்தத்தின் காரணமாக இந்த மனச்சிக்கல் ஏற்படுகிறது. (அதற்கும் மேல் நிலையில் இருப்பவர்களின் நிலை வேறு).
இன்பமென்றும், காதலென்றும், சிறந்ததொரு வாழ்வென்றும் நமக்குப் போதிக்கப்படுவதை கற்பனை செய்துகொண்டிருக்க நிறைய நேரமிருப்பதாலும், பகுத்தறியாமல் அவற்றை அப்படியே உள்வாங்குவதாலும் கூட தனிமை என்பது துயர் மிகுந்ததாகிவிடுகிறது.

இந்தத் தனிமை என்னும் ‘சாத்தானை’ பிறக்க விடுவதே ஆபத்து. கருவிலேயே அழித்துவிடுங்கள். இல்லையேல் அது சாத்தானை விடக் கொடிய ‘கடவுளாய்’ வளர்ந்து நம்மை அழிக்க அவதாரம் எடுத்துவிடும்.

தனிமையிடமிருந்து விடுபட மற்றொரு உயிர்தான் துணையாக இருக்க வேண்டுமென்பதில்லை. ஓருயிர் என்பதை விடுத்து பல்லுயிர்களை நாடிப்பாருங்கள். மனிதனிடமிருந்து விலகி, சமூகத்தை நெருங்குங்கள். நமக்கு இன்பம் தரும் நிலையில் இங்கு எந்த மனிதருமில்லை. நமக்கான இன்பத்தை நாம் தான் உருவாக்கிக்கொள்ள முடியும். அதற்கு நமக்கான இன்பம் என்ன என்பதை முதலில் நாம் வரையறுக்க வேண்டும்.  அப்படி வரையறுக்க பகுத்தறிவே வழிகாட்டி. சமூக உறவுகள் (மனித சாரம்) பற்றிய சமூக விஞ்ஞான நூல்கள் (எழுத்துகள்) அதற்கான கலங்கரை விளக்கம்.

மேற்சொன்னவை நம்மை மனதளவில் விடுவிக்க உதவலாம். உடல் ரீதியான தேவைக்கு என்ன செய்வது என்றொரு கேள்வி எழலாம். துணை இருப்பதால் மட்டுமே யாரும் உடலின்பத்தில் திளைத்து மகிழ்ந்து வாழ்ந்துவிடுவதில்லை. அது வேறொரு புதிய சிக்கலாக மாறிவிடுவதும் உண்டு. குறைந்தபட்சம் தனியாக வாழ்வோருக்கு இத்துன்பம் வாய்க்காது. இயற்கை அதற்கும் நமக்குள் சில இயல்பூக்க வழிகளை வகுத்துள்ளது. அதன் மூலம் அவ்வேட்கையை சற்று தணித்துக்கொள்ள முடியும் என்று கருதுகிறேன்.

துரதிர்ஷ்டவசமாக பாலுறவு மற்றும் காமம் சார்ந்த இழிவான ஆணாதிக்க சமூக கட்டமைப்பால் உடலுறவு என்னும் இயற்கைத் தேவையை நாம் ‘முறைபடுத்தப்பட்ட உறவுக்குள்’ மட்டுமே பூர்த்தி செய்துகொள்ள முடியும். ஆனால் அதுபற்றிய அரசியல் அறிவை பெற்றுவிட்டால், இச்சக்கலிலிருந்து விடுபடவும், தேவையான தீர்வை வகுத்துக்கொள்ளவும் நாமே கற்றுக்கொள்வோம்.

நம் (மன) மகிழ்ச்சிக்காக நாம் எவரையும் சார்ந்திருக்கும் வரை மகிழ்ச்சி என்பது எட்டாக் கனியே.

சொல்லுதல் யார்க்கும் எளியவாம் என்று எண்ணிவிடாதீர்கள். இது அனுபவப் பகிர்தலும் கூட J

தனிமை வாய்ப்பு!
தனிமை திறப்பு
தனிமை புதுமை!
தனிமை விடியல்!
தனிமை புத்துணர்ச்சி
தனிமை செல்வம்
தனிமை இன்பம்
தனிமை கொண்டாட்டம்
தனிமை புதுமொழி
தனிமை காதல்
தனிமை பேரறிவு
தனிமை மெய்யறிவு
தனிமை விடுதலை