Showing posts with label விளம்பரங்கள். Show all posts
Showing posts with label விளம்பரங்கள். Show all posts

Apr 8, 2018

விளம்பரம் என்னும் நஞ்சு...



திரு. சூர்யா நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை உணர்ந்துதான் செய்கிறீர்களா, அல்லது வெறும் நடிகன் என்கிற உணர்விலிருந்து மட்டுமே உங்கள் தேர்வுகளை பொதுவெளியில் மேற்கொள்கிறீர்களா?
மீண்டும் மீண்டும் தவறான கருத்தியலை, பாகுபாட்டை நியாயப்படுத்தும் வகையிலான விளம்பரங்களிலேயே நடிக்கிறீர்களே, இதன் ஆபத்தை எப்போது உணர்வீர்கள்?
உஜ்ஜாலா கிர்ஸ்ப் & ஷைன் என்னும் விளம்பரத்தை இன்று காண நேர்ந்தது. அதில் என்ன திறமை இருந்தாலும் இந்த உலகம் ஒருவனின் உடையை வைத்துத்தான் மதிக்கிறது என்று ‘அக்கறையுடன்’ பேசியுள்ளீர்கள். குறைந்தபட்சம் அதையாவது பேசினீர்களே, மகிழ்ச்சி. ஆனால் அப்படி பாகுபடுத்திப் பார்க்கும் ஒரு பிரச்சினைக்குத் தீர்வு பாதிக்கப்பட்டவருக்கு அறிவுரை வழங்குவது, அல்லவா? இது எவ்வளவு வன்முறையானது, ஆபாசமானது என்பதை உணர முடிகிறதா உங்களால்?
முதல் விளம்பரத்தில், ஒரு அதிகாரி உங்கள் மிளிரும், விரைப்பான உடையக் கண்டு சுரேஷ் என்பவராக உங்களை நினைத்து புன்னகையுடன் அழைக்கிறார், அது தாங்கள் இல்லை என்றதும் மங்கலான கசங்கிய சட்டையுடன் வரும் மற்றொருவரைப் பார்த்து அந்த அதிகாரியின் முகம் கோணுகிறது. சந்திப்பதை தவிர்த்து செல்கிறார். ஆம் இதுதான் சமூக யதார்த்தம்.
அடுத்த விளம்பரத்தில் நேர்முகத் தேர்வுக்கு வந்திருக்கும் ஒருவர் தன்னுடைய MERITகளை சொல்லி பெருமை பேசுகிறார், ஆனால் அதே திறமைகளைக் கொண்டிருக்கும் உங்களின் உடைக்காக அந்த நிறுவனம் உங்களை தேர்ந்தெடுப்பதாகச் சொல்கிறது. உடனே “இந்த உலகம் நம்ம திறமையை மட்டுமல்ல, நம்ம டிரஸ்ஸையும் எடை போடும்” என்று உருக்கமாகப் பேசுகிறீர்கள்.
ஆனால் இதற்குத் தீர்வு – உஜாலாவுக்கு மாறுவதா? அல்லது அப்படி பேசிய அதிகாரியின் சட்டையைப் பிடித்துக் கிழிப்பதா? உங்கள் திரைப்படங்களில் அநியாயங்களை எதிர்த்தும், ஒடுக்குபவனை அடித்தும் பேசும் தார்மீக்க் கோபங்கள் எங்கு போனது? உங்களைப் போன்றோரை கதாநாயகனாக கட்டமைக்க ‘படைப்பாளிகள்’ அக்கறையோடு புனையும் வசனங்களையும், சிந்தனைகளையும் ஓய்வாக இருக்கும் போது அசை போட்டு பார்த்தாலே, கொஞ்சமேனும் அரசியல் விழிப்புணர்வு ஏற்படுமே. அதில் பெண் விடுதலைக்கு இடமில்லை எனினும், அநியாயங்களை தட்டிக் கேட்க வேண்டும், ஏற்றத்தாழ்வு கூடாது என்னும் Formula உணர்வையாவது எடுத்துக்கொள்ளலாமே.
இந்த நாட்டில் (உலகெங்கிலும்) மொழி, இனம், சாதி, மதம், பாலினம், உடல் திறன் என்று பல்வேறு ’அடையாளங்களை’ வைத்து மனிதர்கள் பாகுபாட்டிற்கு உள்ளாகிறார்கள், ஒடுக்கப்படுகிறார்கள், அடித்துக் கொல்லப்படுகிறார்கள். எல்லாரும் உஜாலாவுக்கு மாறிவிட்டால் தப்பித்துக்கொள்லலாமா? உலகம் இப்படித்தான் இருக்கு நாமதான் மாறணும் என்பது என்னவிதமான சமூக அக்கறை, என்னவிதமான அரசியல் புரிதல்? பெண்களும், குழந்தைகளும் வன்புணர்வுக்குள்ளாகையில் அவர்களின் உடைதான் காரணம் என்று இந்த ஆணாதிக்க சமூகம் வியாக்கியானம் செய்கிறதோ, அதற்கு நிகரான ஒரு உபதேசத்தை நீங்கள் இந்த விளம்பரத்தில் செய்துள்ளீர்கள். அதைப் பார்க்க பார்க்க நெஞ்சு பதைபதைக்கிறது. விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்குத் தான் அதில் உள்ள ஆபத்தான வணிகப் பேச்சின் பாதிப்பு புரியும். நீங்கள் எல்லாம் ‘மேட்டுக் குடியினர்’ உங்களைப் போன்றோருக்கு ‘சமூக அக்கறை’ என்பது பொழுதுபோக்கு, பெயர், புகழ், புண்ணியம் சேர்க்கும் வழிமுறையாக இருக்கலாம். எங்களுக்கோ அது வாழ்க்கைப் போராட்டம். போராட்டமே எங்கள் வாழ்க்கை என்னும் நிலையில் உள்ளோம். போராடுபவர்கள் அதற்கும் உரிமை இன்றி சிறையிலடைக்கப்படுகிறார்கள். போலீஸும் அரசும் அப்படித்தன் ஒடுக்கும், விரைப்பான உடை அணிந்து சென்றால் விட்டுவிடும் என்று நாம் சொல்ல முடியாது சூர்யா.
இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் திரள் (உழைப்பாளிகள்) உடுத்த கோவணம் கூட இல்லாமல் இருப்பதைக் கண்ட காந்தி தன் மேலாடையைத் துறந்தார். இந்த விளம்பரத்தில் வருவது போல் - பிறப்பாலேயே ஒரு பிரிவினர் தீண்டத்தாகாதோர், நாகரீகமற்றோர், குற்றப்பழங்குடிகள் என்றெல்லாம் ஒதுக்கப்பட்ட சமூகத்திலிருந்து தலைவனாய் மேலெழுந்த அம்பேத்கர் ’நாகரீக’ உடை அரசியலை கையிலெடுத்தார். அப்போதும் அவரது சாதியைச் சொல்லி ஆதிக்க சமூகம் அவரை அவமானப்படுத்தி, ஒதுக்கி வைத்து கொடுமைகள் செய்தது. தங்களை வன்புணர்வு செய்யும் இராணுவத்திற்கு எதிராக பெண்கள் சிலர் முழுவதுமாக ஆடைகளைத் துறந்து தங்கள் நிர்வாண உடலை ஆயுதமாக்கினர். இப்படிப்பட்ட போராட்டங்கள் எல்லாம் அதிகாரத்திற்கு எதிராக ஆயுதமேந்துவதாக இருந்ததே ஒழிய பாதிக்கப்பட்டவர்களுக்குப் (வணிக ரீதியான) பொருள்களை வழங்கி உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை. முதலாளிகளே உங்கள் விடிவெள்ளி, அவர்கள் தயாரிக்கும் பொருள்களே எங்கள் ‘உயர்வுக்கு’ வழி என்பது எவ்வளவு சுயநலம் மிக்க போதனை.

சமத்துவத்தை நிலைநாட்ட யார் மாற வேண்டும்?

நீங்கள், இயலாதவர்களுக்கு கல்வி கொடுக்கும் இலட்சிய அமைப்பை நடத்துகிறீர்கள்.
முதலாளிகளுக்கு மலிவான கூலிகளை உற்பத்தி செய்வதற்கான கல்விதான் அது எனினும், அதன் பயனைக் கூட வீணடிப்பதில் திரைப்படங்களும், விளம்பரங்களும் முதன்மைப் பங்கு வகிக்கின்றன.
உலகெங்கிலும் வறுமையே மரணத்திற்கான முதல் காரணமாக இருக்கிறது. அதில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள். ஒருநாளைக்கு 20 ரூபாயில் வாழும் நிலையில் 836 மில்லியன் மக்கள் இருப்பதாகவும், தினம் தினம் 7000 இந்தியர்கள் வறுமையின் காரணமாக இறப்பதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதைத் தவிர ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கும் குழந்தைகள், பெண்களின் எண்ணிக்கை இலட்சக் கணக்கில், ஆனால் நமக்கிருக்கும் கவலையோ முதலாளிகளின் பொருள்களுக்கு நுகர்வோரைப் பிடித்துக் கொடுத்து (ஆம், ஆட்பிடிக்கும் வேலைதான் அது) அவர்களை காப்பதாகவே இருக்கிறது.
மிகவும் வேதனையாக உள்ளது சூர்யா.
திரைத்துரையில் பெரும்பாலும் எதையோ செய்து பிழைக்கிறீர்கள்… பிற்போக்குத்தனமான சிந்தனைகளை உயர்த்திப் பிடித்து இந்த சமூகத்தை பின்னுக்குத் தள்ளுவதில் முனைப்புடன் இருக்கிறீர்கள். அதை பொறுத்துக்கொள்கிறோம். ஆனால் விளம்பரங்களிலும் அதுபோன்ற கருத்தியல்களை போதித்து இச்சமூகத்தை சீரழிவிற்குத் தள்ளிவிடாதீர்கள். ஏனென்றால் திரைப்படம் என்பதை பார்க்க அல்லது பார்க்காமல் இருக்க குறைந்தபட்ச தேர்வு எங்களிடம் உள்ளது, ஆனால் விளம்பரம்என்பது எங்களின் அனுமதியின்றி எங்கள் படுக்கையறை வரை எட்டிப் பார்க்கும் சாதனம். அது மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாகிறது. குறிப்பாக குழந்தைகள் விளம்பரங்களால் மிகவும் ஈர்க்கப்படுகின்றனர். அவர்களின் சிந்தனைகளை விளம்பரங்கள் கட்டமைக்கவல்லது. குறிப்பாக தரம், அந்தஸ்து, வெற்றி, இலட்சியம் பற்றி விளம்பரங்கள் போதிப்பவை எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு மனிதனை மனிதன் வெறுக்கச் செய்தலே. அதிலிருந்து அவர்களை மீட்டெடுப்பது பெரும் சவாலாக மாறி வருகிறது.
இச்சமூகத்தை நுகர்வு கலாச்சார அடிமைகளாக்குவதில் விளம்பரங்களே பெரும்பங்கு வகிக்கின்றன. அதனால் பயனடைவது முதலாளிகளே அன்றி மக்கள் அல்ல. Pl do not work hard to make a Capitalist Rich at the cost of our lives & problems.
கூடுதலாக இதற்கும் ஆலோசனை வழங்குங்கள்: பெண்கள் என்பதால் அவர்களின் உடலை இழிவாகப் பார்க்கும், நுகர நினைக்கும், வன்புணர்வால் சிதைக்கும் “எக்சக்குட்டிவ் லுக்கிலிருந்து” தங்களைக் காத்துக்கொள்ள பெண்கள் எதற்கு மாற வேண்டும்?
உங்களைப் போன்று உச்சத்தை எட்டாமல் கூலிக்கு மாறடிக்கும் நிலையில் உள்ளவர்களை நோக்கி நாம் இக் கேள்விகளை எழுப்பும் அவசியமில்லை, ஆனால் எல்லாவிதத்திலும் இன்று நீங்கள் ஓர் உயர்நிலையை எட்டியுள்ளீர்கள். தேர்வு செய்யும் சுதந்திரமும், அதிகாரமும் உங்களிக்கிருக்கிறது. அதை கூருணர்வுடன் பயன்படுத்துங்கள்.
உங்களின் சமூக அக்கறையின் காரணமாகவே இந்த வேண்டுகோளை நாங்கள் விடுக்கிறோம். அத்தோடு, இது உங்களுக்கு மட்டுமான வேண்டுகோளன்று விளம்பரங்களில் நடிக்கும் அனைத்து நடிகர்கள், நடிகைகள் மற்றும் இதுபோன்ற ஆபத்தான, பிற்போக்குத்தனமான, வணிகரீதியான சமூக அக்கறையை பண்டமாகப் பயன்படுத்தி விளம்பரங்களை உருவாக்கும் ‘படைப்பாளிகள்’ ஆகியோரிடமும் வைக்கும் வேண்டுகோள்.
விளம்பரங்கள் மிகவும் ஆபத்தான பிரச்சாரம் … சமூக பொறுப்புடன் செயல்படுங்கள்.
நன்றி
கொற்றவை

Nov 11, 2014

செல்ஃபியும் சமூகமும்




சமீப காலங்களில், இணைய அத்துமீறல்கள் குறித்த செய்திகள் ஒரு தொடர் நிகழ்வாகி விட்டது. இது மிகவும் கவலைத்தரக்கூடிய ஒன்றுதான்.  இச்சூழலில், நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் மற்றும் அவரது தோழியான நவ்யா (அமிதாப்பச்சனின் பேத்தி) என்று சொல்லப்படும் இருவர் காருக்குள் நெருக்கமாக இருக்கும் வீடியோ எம்.எம்.எஸ் ஒன்று சமீபத்தில் வெளியாகி உள்ளது. இது இப்போது தீவிரமான விவாதத்திற்கும் உள்ளாகி இருக்கிறது.

தம்மைத் தாமே படம் அல்லது வீடியோ பிடித்து சமூக வலைதளங்களில் பகிரும் செல்ஃபி எனப்படும் ஒரு சுய-புகைப்படப் பரிமாற்றமானது தற்போது மிகவும் பெருகிவிட்டது. பதின்பருவ வயதினர் முதல் வயதில் முதியவர்கள் வரை கிட்டத்திட்ட இதற்கு  அடிமைகளாகி வருகின்றனர் என்றால் அது மிகையாகிவிடாது.   

அழகு பற்றிய பிரக்ஞையும், அடையாளச் சிக்கலும் ஒவ்வொருவருக்குள்ளும் ஆழ வேரூன்றி இருக்கிறது. ஒருவகையில் இந்த சமூக அமைப்பானது ‘தகுதி’ படைத்தவர்களுக்கே மரியாதை கொடுப்பது அதற்கு முக்கியக் காரணம்.  இந்த வேட்கையை வியாபார நிறுவனங்கள் பலவகைகளில் உக்குவிக்கின்றன. 

புகைப்படங்களில் நாம் எவ்வாறு இருக்கிறோம் என்பதை உடனுக்குடன் பார்க்கும் வசதியை இந்த செல்ஃபிகள் வழங்குவதால், ஒவ்வொரு உடையிலும், அலங்காரத்திலும் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை பார்த்து ரசிப்பதோடு, அதை மற்றவர்களிடமும் பகிர்ந்து கருத்துப் (பாராட்டுகள்) பெறுவது கிட்டத்திட்ட ஒரு  போதைப் பழக்கம் போல் ஆகிவிட்டது. (ஆக்கப்பட்டுவிட்டது என்பதே பொருத்தமாக இருக்கும்).

 எந்த அளவுக்கு அடிமைத்தனம் கூடுகிறதோ அந்த அளவுக்கு அந்த தொழில் நுட்பக் கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் வளர்ச்சி அடையும் என்பதே நுகர்வோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். 

இணைய மற்றும் தொழில்நுட்ப தாக்கங்களுக்கு பதின்பருவ வயதினர் வெகு எளிதில் வீழ்த்தப்பட்டுவிடுகின்றனர். குறிப்பாக, டீன் ஏஜ் பெண்கள் இதன் கவரிச்சித் தன்மையில் தன்வயம் இழந்து பகிரக்கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களால் பல தொல்லைகளுக்கும், மன உளைச்சல்களுக்கும் உள்ளாக நேர்கிறது. ஆணாதிக்கச் சமூக கட்டமைப்பின் விளைவாக, பாலியல் ரீதியாக அப்பெண்கள் பற்றிய தவறான முன்முடிவுகளுக்கு வரவும் இது வகை செய்கிறது.

பல வேளைகளில் சக தோழர்கள், காதலர்கள் என்று சொல்லிக் கொள்வோருமே பெண்களின் புகைப்படங்களை, வீடியோக்களை இணையத்தில் ஆபாசமாக உலவவிட்டு, சம்பந்தப்பட்டப் பெண்களை தங்கள் பாலியல்  இச்சைக்கு அடிபணியச் செய்வதும் நடந்துவருகிறது. ஆகவே எவராக இருப்பினும், புகைப்படமோ அல்லது வீடியோவோ எடுக்க ஆயத்தமானால் - பெண்கள், சிறுமிகள் எச்சரிக்கையோடு இருப்பது மிகவும் அவசியமாகிறது. குறிப்பாக, தங்களது அந்தரங்கத் தருணங்களை எவரும் புகைப்படம் எடுக்கவோ, வீடியோ எடுக்கவோ அனுமதிக்கக் கூடாது.  ஏனென்றால், என்னதான்   ‘கேட்ஜெட்’டில் இருந்து அவை அழிக்கப்பட்டாலும்கூட இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டு அழிக்கப்பட்டக் கோப்புகளை மீண்டும் எடுத்துவிடலாம். பெரும்பாலும் நம் கேட்ஜெட்களை விற்பதற்காகவோ அல்லது பழுதுபார்க்கவோ கொடுக்கும் இடங்களில் நமக்குத் தெரியாம்லே நமது கோப்புகள் பிரதி எடுக்கப்படும் சாத்தியங்கள் இருக்கின்றன. நண்பர்களும் இத்தகைய திருட்டு வேலைகளைச் செய்யும் சாத்தியம் உண்டு.

வெறும் கட்டுப்பாடுகள் மூலம் நம் பிள்ளைகளை இதிலிருந்து நாம் காத்துவிட முடியாது. புறச் சூழலின் தாக்கம் அதி தீவிரமாக இருக்கையில் என்னதான் பெற்றோர்கள் கண்காணித்து வந்தாலும், எச்சரித்து வந்தாலும் பதின்பருவ வயதின் கோளாறு காரணமாக அது சர்வாதிகாரம் போல் அவர்களுக்குத் தோன்றி விடுகிறது. பல நேரங்களில் அவர்கள் மூர்க்கமாக எதிர்வினையாற்றும் அளவுக்கும் சென்று விடுகின்றனர்.

இச்சூழலில் பெற்றோர்களுக்கு சில ஆலோசனைகள்: 
முதலில் அவர்களே இந்தச் சமூக வலைதளங்களை சிலக் கட்டுப்பாடுகளோடு கையாள வேண்டும்.

 குழந்தைகளுக்கு அரசியல் பொருளாதார அறிவூட்ட வேண்டும். அதாவது வணிக நிறுவனங்கள், விளம்பரங்கள், நுகர்வு கலாச்சாரம் இவற்றைப் பற்றிய விவாதங்களை மேற்கொள்ளலாம். குறிப்பாக ஒவ்வொரு விளம்பரத்தைப் பற்றியும் குடும்பமாகச் சேர்ந்து ஒரு விமர்சன உரையாடலை நிகழ்த்தலாம். அதில் வலியுறுத்தப்படும் அழகு, சிவப்பு நிறம், அந்தஸ்து, ஆடம்பரங்கள் என எல்லாமே போலியானது என்பதை குழந்தைகள் உணரும்படிச் செய்யலாம்.

நேரடியாக விமர்சிக்கப்படும் போது தம்மைக் குற்றவாளிகளாகப் பெற்றோர்கள் பார்க்கிறார்கள் என்று குழந்தைகள் கருதுவார்கள். ஆனால் இது ஒரு வணிகரீதியான மூளைச் சலவை, அதனால் ஏற்பட்டிருக்கும் சில ஆபத்தான நிகழ்வுகள் இவற்றைப் பற்றி குடும்பமாகப் பேசுவதும், அதுபற்றி குழந்தைகளின் கருத்தைக் கேட்பதும், அவர்களுக்குத் தங்களது பொறுப்பை உணர்த்துவதும் பயன் தரும்.

இரண்டாவதாக, ஒருவேளை ஒரு உணர்ச்சி வேகத்தில் படங்களைப் பகிர்ந்து எவரேனும் அதைத் தவறாகப் பயன்படுத்தி தொல்லைகள் கொடுத்தால், அதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருமாறு அறிவுறுத்துவதுடன், பிரச்சினையை நிதானமாகக் கையாள வேண்டும். மானம் அவமானம் என்று அச்சுறுத்தாமல் அந்த நிலையிலாவது அத்தளங்களைப் பயன்படுத்துவதை சிலக் கட்டுபாடுகளோடு பயன்படுத்தச் சொல்லி வழி நடத்தலாம். 

தம் மகனோ அல்லது மகளோ பதின்பருவத்திலேயே காதல்வயப்பட்டு அவர்கள் தனிமையில் இருக்கும் தருணங்களைப் பதிவு செய்து அதைப் பொதுவெளியில் காண நேர்ந்தால் ஆணாதிக்க ஒழுக்க விதிகளை மனதில் கொண்டு இச்சூழலைக் கையாளக் கூடாது. அதேவேளை எந்த ஒரு தவறான சீண்டல்களையும் மனத் துணிவுடன், தேவைப்பட்டால் சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் துணிவைப் போதிப்பதே நல்லது. மகனைப் பெற்றவர்களுக்கு இவ்விஷயத்தில் கூடுதல் பொறுப்பு இருக்கிறது. பெண்கள் பற்றிய ஆணாதிக்கச் சமூக மதிப்பீடுகளை, சினிமாக்கள் ஏற்றிவைக்கும் பாலியல் கவர்ச்சி பற்றிய கருத்துகளை மாற்றியமைக்கத் தேவையான அறிவை அவர்கள் தம் பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும். இவ்வறிவு கல்விக் கூடங்களுக்கு வெளியில்தான் கிடைக்கும்.

மற்றபடி இதில் ஒழுக்கரீதியான சரி தவறுகளுக்கு இடமில்லை. உண்மையில் இந்த தொழில்நுட்பங்கள் வரவேற்கத் தக்கவையே, குடும்பங்களைப் பிரிந்து வாழ்பவர்கள், நண்பர்களோடு மகிழ்ச்சிகரமானத் தருணங்களைப் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கக்கூடியதே. 

கவனமாகக் கையாண்டால் மகிழ்ச்சி என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். 

நன்றி, உயிரோசை மாத இதழ்.



Dec 8, 2010

ஊடக முதலாளிகளுக்கு ஓர் வேண்டுகோள்,


இக் கடிதத்தை ஓர் கேள்வியுடன் தொடங்கவேண்டியுள்ளது. தொலைக்காட்சி என்ற மாபெரும் ஊடகத்தைக் கொண்டு நீங்கள் என்ன செய்துக்கொண்டிருக்கிறீர்கள் என்ற சுயநினைவோடு, உணர்ந்துதான் செய்கிறீர்களா? உங்கள் வெற்றியின் அளவுகோலை அளக்கும் T.R.P  என்ற ஒரு முறை இருப்பது போல் உங்கள் சேவைகளின் மதிப்பையும் அது சமூகத்தில் விதைக்கும் சிந்தனைகளையும் அதன் மூலம் நடக்கும் சீர்கேடுகளையும் அளக்கும் முறை என்று ஒன்றிருந்தால் உங்கள் துரோகங்களின் எண்ணிக்கையையும் கணக்கிடலாம். குறிப்பாக குழந்தைகளையும், பெண்களையும் நீங்கள் சந்தைப் படுத்துவது சொல்லக் கூசும் அளவுக்கு மிக மிக ஆபாசமாக உள்ளது.

எங்கள் குழந்தைகள் உங்கள் விற்பனைப் பொருள் ஆக்கப்படுவதைக் கண்டு அச்சுறும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது.  தயவு செய்து குழந்தைகளை குழந்தைகளாக இருக்க அனுமதியுங்கள்.  உங்கள் காமிராவின் கோரப் பற்கள் புகழுக்கான ஆசையை  அவர்கள் மீது மென்று துப்பி அவர்கள் பண்புகளை, குழந்தமையை, சமத்துவத்தை பிடுங்கிச் செல்வது மிகுந்த வேதனையை அளிக்கிறது.   குழந்தைகளின் திறமைகளுக்கான நிகழ்ச்சி என்பதில் சினமாவைப் பிரதி எடுக்கும் நிகழ்ச்சிகளே தலையானதாய் உள்ளது, இப்போக்கு குழந்தைகள் மத்தியில் திறமைப் பற்றிய தவறான புரிதலை விதைக்கிறது.  புகழ் என்றாலே அது திரைத்துறையின் வாயிலாகத் தான் கிடைக்கும் என்று கற்றுத்தருகிறது. அப்புகழுக்காக தங்களை எவ்வகையிலும் பணையம் வைக்க ஐந்திலேயே அவர்களைத் தயார் செய்வது சமுதாய எதிர்காலத்திற்கு பெறும் கேடு என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

புகழை முன் நிறுத்தும் போட்டி நிகழ்ச்சிகளினால் மற்ற குழந்தைகளுக்கு (பெற்றோர்களுக்கும்)  ஏற்படும் உளவியல் சிக்கல்களைப் பற்றி சிந்திக்கும் நேரம் உங்களுக்கு இருக்க வாய்ப்பில்லை.  இசை, நடனம் இவைகளை கற்ற குழந்தைகள் மட்டுமே திறமைக் கொண்டவர்கள் என்ற உங்களது தவறான சித்தரிப்பினால் இன்று ஒவ்வொரு குழந்தையும் கல்விப் படிப்போடு சேர்த்து மற்றப் படிப்புகளைக்  (Extra-curricular activities)  கற்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். உடற்பயிற்சிக்கான விளையாட்டுகள், அறிவு விரிவாக்கத்திற்கான அறிவியல் பயிற்ச்சிகளை விட இசையும் நடனமுமே முதன்மை பெறுகின்றன உங்கள் தயவால்.  குழத்தை 5 வயது எட்டியவுடன் பாட்டு, நடன வகுப்பில் சேர்க்கப்படுகிறார்கள், பின்பு 6 அல்லது 7 வயதில் தொலைக்காட்சிக்கு நேர்ந்து விடப்படுகிறார்கள். 

மூன்று வேளை உணவுக்கு வருடக்கணக்காக உத்தரவாதம் இருப்பவர்களே இது போன்ற துறைகளை தேடிக் கற்கின்றனர். மேலும் இத்திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பு பெரும்பாலும் பார்ப்பனியக் குழந்தைகளுக்கே அமைகிறது, ஆம் இசையும், நடனமும் அவர்களின் பிடியில்தானே இருக்கிறது. பார்பனியர் வகுத்த வர்ண பேதத்தை பறை சாற்றும் உங்கள் நற்பணிக்கு முதலாளிகளின் ஆதரவு கிட்டுவதில் பெரிய ஆச்சரியம் ஒன்றுமில்லை. பார்பனியரல்லாத குழந்தைகளும் இசையும் நடனமும் கற்றுக்கொள்வதாக நீங்கள் சொல்ல்லாம், அவர்கள் முதலாளிகளின் பிள்ளைகள் அங்கு பொருளாதாரம் பார்ப்பனியக் கலையை விலை பேசிவிடும்.  ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிள்ளைகளின் திறமைகளுக்கான சந்தை உங்களிடத்தில் உண்டா சகோதரர்களே? அப்படியே அவர்களுக்கான நிகழ்சிகளை ஒளிபரப்பினாலும் அவர்கள் மீது பரிதாபத்தை ஏற்படுத்திவிடுவீர்கள் அல்லது அவற்றை வைத்து விளம்பரம் தேடுவீர்கள்.( நீங்கள் வெளியிடும் விளம்பரங்களில் அம்மாக்கள், பெண்கள், குழந்தைகள், ஆண்கள் யாரும் கருப்பு நிறமாய் இருந்ததேயில்லை, இருப்பின், வேலைக்காரி, மற்றும் உதிரித்தொழில் செய்வோர், இவர்கள்தான் இங்கு சமுதாயமாக இருக்கிறார்கள் இவர்கள்முந்தான் நீங்கள் உங்கள் கலாச்சாரத்தை விதைக்கிறீர்கள்)

திறமைகளுக்கான மேடை என்றால் ஏன் இவ்வளவு ஆர்பாட்டம், மாறுவேடப் போட்டி போன்ற ஒப்பனைகள்? பாடல்களுக்கேற்ப ஒப்பனைகள் என்ற பெயரில் குழந்தைகளுக்கு நீங்கள் தரும் உடைகள் எது போன்றவை. நடிகைகளின் மார்புகளையும், தொப்புளையும் சுரண்டிப் பிழைக்கும் பிழைப்பு போதாதென்று பெண் குழந்தைகளின் மார்புகளையும், தொப்புளையும் குறி வைக்கிறீர்கள்.  பாடலுக்கேற்ற பாவம் என்ற பெயரில் ஆண் சிறுவனைப் பார்த்து பெண் சிறுமி பாடல் வரிகளுக்கேற்ற பார்வைய செலுத்துவது திறமையை வளர்கிறதா பால் உணர்வை வளர்கிறதா என்று பரப்பரப்பை உண்டாக்க நீங்கள் ஒளிபரப்பும் slow motion முன்னோட்டக் காட்சிகளைப்போல குழந்தைகளின் பாவங்களை ஓட்டிப் பாருங்கள். உங்கள் கண் முன் படுக்கை அறை விரிவதை கண்டுணர்வீர்கள்.

ஆணாதிக்கச் சமூகத்தில், ஆணாதிக்க திரைப்படங்களையே எதிர்பார்க்க முடியும். ஆணாதிக்க சிந்தனையோடு எழுதப்பட்ட ஆபாசமான இரட்டை அர்த்தப் பாடலை போட்டிக்காக குழந்தைகள் திரும்ப திரும்ப பாடி மனப்பாடம் செய்யும் பொழுது பெண் பற்றிய எத்தகைய மனப்போக்கை ஆண் குழந்தைகளுக்குள் நீங்கள் வளர்த்துவிடுகிறீர்கள்? “வாடா வாடா பைய்யா என் வாசல் வந்துப் போடா”, “நீ மாசத்துல 3 நாளு எங்க போயி படுப்ப” போன்ற வரிகளின் அர்த்தம் தங்களுக்கும் புரியும் தானே? (இத்தருணத்தில் ஓர் ஐயத்தை கேட்கவேண்டும் இது போன்ற நிகழ்சிகளில் உங்கள் குழந்தைகளோ, உங்கள் குடும்பத்தாரின் குழந்தைகளோ, உங்கள் ஊழியரின் குழந்தைகளோ, நடுவர்களின் குழந்தைகளோ பங்கு பெறுகிறார்களா, அவர்கள் இவ்வரிகளை அதே பாவனையோடு மற்றவரின் நிகழ்சிகளில் பாடுவதுண்டா, ஆடுவதுண்டா?)

குழந்தைகளை இப்பொழுது. 2வயதிலிருந்தே பலாத்காரம் செய்கிறார்கள். யோசித்துப்பாருங்கள்.  ஆணாதிக்க படைப்புகள், ஆணாதிக்க சமூக அமைப்பு இப்பொழுது அதோடு சேர்து உங்கள் தொலைக்காட்சி நிகழ்சிகளும்.  விளம்பரம் என்ற பெயரில் முலைகளை பிதுக்கிக் காட்டி சுவரொட்டிகளை தெருவெல்லாம் ஒட்டி, இதழ்களின் அட்டைப்படங்களில் போட்டுப் போட்டு சமூகத்தில் கற்பழிப்புகளின் எண்ணிக்கையை வளர்க்க அன்றாடம் பாடுபடும் உங்கள் பணி அளவிடற்கறியது. இப்பொழுது சிறுமிகளையும் அப்பட்டியலில் சேர்க்க உதவிய உங்கள் நல்லெண்ணங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை.  

உங்களிடம் நான் வேண்டுவதெல்லாம், நுகர்வு கலாச்சர அடிமைகளாகவும், பணம் புகழிற்கு அடிமைகளாகவும் எங்கள் குழந்தைகளை உருமாற்றம் செய்யாதீர்கள்.  உண்மையிலேயே திறமைகளுக்கான மேடை அமைத்துத் தருவதில் உங்களுக்கு அளவிட முடியாத ஆசை இருப்பின் சினிமாவின் பிரதி எடுக்கும் நிகழ்சியாக அல்லாமல், குழந்தைகள் குழந்தைகளாக இருக்க அனுமதிக்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புங்கள். முடிந்தால் குழந்தைகளை ஊடகத்திலிருந்து ஒதுக்கி விடுங்கள் அவர்கள் காண வேண்டிய உலகம் அரியது அதை ஓர் அறைக்குகள் (சினிமாவிற்குள்) அடைக்க நினைக்காதீர்கள்.

இசை, நடனத்திற்கான நிகழ்ச்சி நடத்தித்தான் நீங்கள் பிழைப்பு நடத்த வேண்டியிருந்தால், போட்டியல்லாத நிகழ்ச்சியாக நடத்துங்கள். அடிப்படைத் தேர்வுகளை திரை மறைவில் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கான (பெரியவர்களுக்கும் கூட) சமமான ஓர் மேடையை அமைத்துக்கொடுங்கள்.  நடுவர்கள், ஆசிரியர்களாக செயல்பட்டு திறைமறைவில் அவர்களுக்கான வழிமுறைகளை வழங்கட்டும்.   பரபரப்பான முன்னோட்டங்கள், ஓட்டு வேட்டை, சுவரொட்டி வேட்டைகளை தடுத்து ஓர் ஆரோக்கியமான நிலை உருவாக அது உதவும்.  போட்டிகள் நிலவினால்தான் திறமைகள் வளரும் என்ற முதலாளித்துவ அரசியலை குழந்தைகளிடம் செயல்படுத்தாதீர்கள். பணம், அங்கீகாரம், புகழ் இவையெல்லாம கொண்டவரே வாழ்வதற்கான தகுதி பெற்றவர் என்று நீங்கள் பல்லாயிரம் வருடங்களாக முன்னிறுத்திவருகிறீர்கள். அவ்வரசியல் நீங்கள் மேலும் மேலும் உங்கள் பொருளாதாரத்தை வளர்க்கவும், பண்பற்ற குணமற்ற சமுதாயத்தை வளர்க்கவும் மட்டுமே உதவுகிறது.  இதுவரை  ஆண்களை, குடும்ப உறவுகளை சுயநலமிக்க உங்கள் முதலாளித்துவ அரசியல் ஆட்டிப்படைத்தது, அதன் அடுத்த குறி பெண்கள், குழந்தைகள்.

உங்களை எதிர்த்து நீதித்துறையை அனுகலாம்தான் அதற்கான பொருளாதார சூழலும், அரசியல் பலமும் எங்களைப் போன்ற எளியவர்களிடத்தில் இல்லை. அது பயன் தரப்போவதுமில்லை.  அப்படியே எதிர்க்கப்பட்ட வழக்கிலும் கூட குழந்தைகள் தங்கள் விருப்பத்தின் பேரில் பங்கேற்பதை குழந்தை ஊதியம் என்று கருத முடியாது என்ற தீர்ப்பு வழங்கப்பட்டுளது. ஒருவேளை குழந்தைகள் தங்கள் விருப்பத்தோடு உடலை விற்க துணிந்தாலும் சட்டம் இப்படித்தான் பார்த்துக்கொண்டிருக்கும் போலிருக்கிறது.

முதலாளிகள் ஊடகங்கள் மூலம் சந்தைப்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் பணம் படைத்தவர்களுக்கே, ஆகவே நீங்களும் அவர்களின் இலக்கான படிநிலைக்குடும்பங்களின் பிள்ளைகளை பயன்படுத்தி சாமர்தியமாக பல நிகழ்ச்சிகளை நடத்துகிறீர்கள். அதே வேளையில் இரவு 10 மணிக்கு மேல் ஒளிபரப்பாகும் உண்மை நிகழ்ச்சிகளின் மூலம் கிராமங்களை மூடநம்பிக்கையின் சின்னமாக காண்பிக்கிறீர்கள்.

உன்மையில் குழந்தைகளுக்கான சமூக அறிவை ஏற்படுத்த நீங்களும் உங்கள் விளம்பர நிறுவனங்களும் துடிப்பீர்களானால் பின்தங்கிய கிராமங்களில் இருக்கும் அரசாங்கப் பள்ளிகளை சீரமைக்கும் முயற்ச்சிகளை மேற்கொள்ள முடியுமா? முடிந்தால் நகரப்  பிள்ளைகளை அச்சீரமைக்கும் பணிகளுக்கு அழைத்து சென்று அவர்களையும் அதில் பங்கு பெற செய்யுங்கள். எங்கள் பிள்ளைகள் ஒடுக்கப்பட்ட பிள்ளைகளின் நிலையையும், பார்ப்பனியம் தன் குல, வர்ண, வர்க்கப் பேதத்தால் செய்த கொடுமைகளையும் கண்டுணரட்டும்.

பாடதிட்டத்தில் கற்றுத்தரப்படும் வரலாற்றுப்பாடங்கள் ஆதிக்க வர்க்கத்திற்கு துதி பாடும் (வடிகட்டப்பட்ட) வரலாறு. உண்மைகளைத் தெரிந்துக்கொள்ள அவர்களுக்கு உதவும் வகையில் களப்பணியாளர்களையும், மறைக்கப்பட்ட வரலாற்றை கற்றுணர்ந்த மேதைகளையும் பயன்படுத்தி வகுப்பறைக்கு அப்பாற்பட்ட கல்வியை போதிக்கும் நிகழ்ச்சிகள் ஏதாவது நடத்த முடியுமா?

தற்போதைய அரசியல் சூழலில் எதிர்காலும் குறித்து முற்றிலும் நம்பிக்கை இழந்து போய் இருக்கும் எங்களின் கடைசி நம்பிக்கை குழந்தைகள் (எதிர்காலத் தூண்கள் !!) அவர்களையும் பெரியவர்களாக்கி பிரிவினைகளையும், முதலாளித்துவ படிநிலைகளையும் மேலும் மேலும் வளர்த்து சமூக சீரழிவிற்கு நீங்கள் துணைபோவதை யோசித்துப் பாருங்களேன்.

நீங்கள் தயாரித்து அனுப்பும் குழந்தைகள் விளம்பரங்களால், ஊடகங்களால் சாரம் உறிஞ்சியெடுக்கப்பட்ட வெற்றுப் பொம்மைகள், நிகழ்வில் நடக்கும் எதையும் சற்றும் கவனத்தில் கொள்ளாத இளம் தலைமுறை, இவர்களுக்கு நெல் எப்படி விளைகிறது என்று தெரியாது, சுதந்திரப்போராட்டம், இழப்புகள், இந்திய ஜாதிகள், வர்க்க வேறுபாடுகள், அரசியல் சூழல்கள் எதுவும் தெரியாத நிலைக்கு தள்ளப்பட்ட அப்பாவிகள். இவர்களுக்கு அரசியல் எதற்கு என்று நீங்கள் கேட்கலாம், (நாளை அரசியலில் நடக்கும் குறைகளை ஊழல்களை இவர்கள் போன்றோரே வளர்த்து பிரச்சாரத்துக்கும் வருவார்கள்.) அதே கேள்வியோடு இவர்கள் வரலாற்றுத் தூண்கள் என நீங்கள் சொல்வதை நிறுத்திக்கொள்ளுங்கள். இளம்தலைமுறை என்று நீங்கள் கொண்ட்டாட்டமாய் உங்கள் ஊடகத்தில் காண்பிப்பது யாரை, அவர்களின் மனவளர்ச்சி என்ன என்பதை சோதித்துப் பாருங்கள்.


மூன்று வேளை உணவு இல்லாவிட்டாலும் இல்லம்தோறும் உங்களை நுழைய வாய்ப்பளித்த இவ்வரசியலை நான் புரிந்துகொள்கிறேன், அய்யா நீங்களும் புரிந்துகொள்ளுங்கள். 

இனி இது குறித்து தாங்களிடம் நான் நிறைய விவாதிக்க இருக்கிறது என்பதை நானறிவேன்...நீங்களும்....