Showing posts with label மதம். Show all posts
Showing posts with label மதம். Show all posts

Apr 13, 2018

நாம் மனிதர்கள் தானா?



கடவுளும் மதமும் மனித சமூகத்தில் நிலவிய சுரண்டல்வாத நிலைமைகளிலிருந்து பெண்களையும் உழைப்பாளர்களையும் ஒடுக்குவதற்காக, ஆளும் வர்க்க ஆயுதமாக தோன்றிய கருத்தியலாகும். சிறுமி ஆசிஃபாவிற்காக ஒட்டுமொத்த இந்தியாவும் கண்ணீர் வடிக்கையில் கடவுளுக்கெதிராக பேசுவது பாவமாகிவிடுமா?

மதவாத அராஜகங்களுக்கெதிராக, அதிலும் குறிப்பாக அது தற்போது குழந்தைகளையும் காவு வாங்குமளவுக்கு கொடூரமாக மாறி வரும் வேளையில் நீதி வேண்டுவதும், அத்தகைய கொடுமைகக்காரர்களை தண்டிக்க வேண்டுவதும் அவசியமே. ஆனால் எந்த மதமும், எந்த இறைத்தூதரும், எந்த மத சீர்திருத்தவாதியும் இந்த மனித சமூகத்தை பண்படுத்திவிட முடியாது என்பதை நாம் அனைவரும் இப்போதாவது உணர்வது அதைவிட முக்கியமானது.

மதம் என்பது ஒரு நிறுவனம். பணக்காரர் வர்க்கம் சொத்து சேர்க்க ஏதுவாக மற்றவர்களை ஒடுக்க தோன்றிய ஒரு நிறுவனம். மற்றவர்களைக் காட்டிலும் தம்மை மேன்மையானவர்களாகவும், தூய்மையானவர்களாகவும் பிரகடணப்படுத்தி பாகுபாட்டை போதிக்கும் ஒரு நிறுவனமிது. வெறுப்பும் அதிகாரமுமே அதன் உள்ளுணர்வு. அராஜகமும், காட்டுமிராண்டித்தனமுமே அதன் அடித்தளம்.

அறிவிருக்கும் மனிதர்களாக பகுத்தறிவோடு சிந்திப்பதிலிருந்து எது நம்மை தடுக்கிறது? இத்தனை கடவுளர்கள் இருக்கையில் ஏன் ஒரு கடவுள் (ஆண்) கூட இந்த அராஜகங்களை நிறுத்த முடியவில்லை என்ற ஒரு எளிய கேள்வியைக் கூட நம்மால் கேட்கவியலாதா? எது நம்மை தடுக்கிறது?

‘பாவம்’, ‘புண்ணியம்’, ‘மறு பிறவி’ போன்ற வாதங்களால் எதிர்கொள்ளாதீர்கள். ‘பாவம்’, ‘புண்ணியத்தில்’ நம்பிக்கை உண்டெனில் எதற்காக நீங்கள் ஆசிஃபாவிற்காக கண்ணீர் சிந்துகிறீர்கள்? ‘நல்லவன்’, ‘கெட்டவன்’ என்பதில் நம்பிக்கை உண்டெனில், எதற்காக நீதி வேண்டி நீதிமன்றத்திடம் போராடுகிறீர்கள்? வாருங்கள் நாம் அனைவரும் ஒன்றுகூடி நம் உணர்ச்சி மிகு குரலால், பக்திப் பாடலால் கடவுளை இறங்கிவரச் செய்வோம். அவர் அவதாரம் எடுத்து ‘அசுரனை’க் கொல்லட்டும்.

எந்த மதமும், கடவுளும் வன்புணர்வு செய்ய சொல்லி கற்றுத்தரவில்லை. அது ’கெட்ட’ விஷயங்களை போதிப்பதில்லை என்பீர்களானால், தயவு செய்து உங்கள் இல்லங்களில் உள்ள மத நூல்களை எடுத்துப் படித்துப் பாருங்கள் – அது பெண்களைப் பற்றியும், உழைக்கும் வர்க்கத்தைப் பற்றியும் என்ன சொல்கிறது என்பது உங்களுக்குப் புரியும்.

நம்மை நாமே ‘மனிதர்கள்’ என்கிறோம். அதாவது சிந்திக்கத் தெரிந்த ஆறரிவு பெற்ற மனிதர்கள். பகுத்தறியக் கூடியவன் மனிதன், அல்லவா? நாம் நம்மை மனிதர்கள் என்று கூறுகையில், அது நாம் இயற்கையைப் பற்றி அறிந்திராத விலங்காண்டிகளாக, காட்டுமிராண்டிகளாக வாழ்ந்து பண்பட்ட மனிதர்களாக வளர்ந்துவிட்ட வரலாற்று வளர்ச்சியைச் சுட்டுகிறது. விலங்காண்டிகளும் காட்டுமிராண்டிகளும் இயற்கையின் மாறுதல்களை, அதில் நேரும் அழிவுகளையெல்லாம் புரிந்துகொள்ளக் கூடியவர்களாக இருக்கவில்லை. ஆகவே இயற்கை / அழிவு குறித்த அச்சம் அவர்களுக்கு இருந்தது. ஆகவே அவர்கள் அதனை வழிபட்டும், தம் நல்வாழ்விற்காக அதன் கருணையை வேண்டியும் வாழ நேர்ந்தது. பயத்திலிருந்து மீளும் விதமாக தமக்குத் தாமே உதவிக் கொள்ளும் வகையில் ஏதோ ஒன்றை பற்றிக்கொண்டனர். அத்தகைய மூடநம்பிக்கைகளிலிருந்து ஒரு சாரார் செல்வம் சேர்க்கவும், அதற்கு வேண்டிய அதிகாரத்தைப் பெறவும் உண்டான சுரண்டல்வாத சமூகத்திலிருந்து மதமும் கடவுளும் தோன்றின.

ஆளும் வர்க்கமாக, அரசாக தோன்றிய இந்தப் பிரிவு மற்றப் பழங்குடிகளை ஒடுக்கவும், அவர்களின் செல்வங்களை சூறையாடவும் ஆயுதங்கள் மற்றும் ‘இராணுவத்தை’ப் பயன்படுத்தினாலும், அடிமைப்படுத்தப்பட்டோர் தாமாக அடங்கிப் போகும் வகையில் மத கருத்தாக்கங்களையும், நெறிமுறைகளை போதிக்கும் மத நூல்களையும் உருவாக்கியது. அதன் மூலம் பாவம் புண்ணியம் என்னும் பெயரிலும், விசுவாசம் என்னும் பெயரிலும் அதிகாரத்திற்கு அல்லது அரசனுக்கு அல்லது எஜமானனுக்கு அல்லது முதலாளிக்கு மற்றும் ஒரு பெண் ஆணுக்கு தானாக அடிபணிந்து நடக்கும் அடிமைகளாக மனிதர்கள் மாற்றப்பட்டார்கள். மனிதன் உண்டாக்கிய சுயநலமிக்க நயவஞ்சகமான கருவியே மதம் (கடவுள்).

மனிதர்கள் என்போர் தம் புலன்களால் இயங்கக் கூடியவர்கள், கற்கக் கூடியவர்கள், சிந்திக்கக் கூடியவர்கள். அப்படியிருக்கையில், இயற்கைக்கு அப்பாற்பட்டு ஒரு சக்தி இருக்கிறது என்று நம்புவது விந்தையானதும், முட்டாள்தனமானதுமில்லையா? நம் புலன்களுக்குப் புலப்படாத பல விஷயங்கள் இயற்கையில் உள்ளன. ஆம்! அதற்காக கடவுளை வழிபட்டால் இவையெல்லாம் விளங்கிவிடுமா? இதுவரை மனிதர்கள் கண்டுபிடித்துள்ள அத்தனை விஷயங்களும் மனித மூளையின், மனித முயற்சியின் விளைவுதான் என்று ஏற்றுக்கொள்வதில் நமக்கு ஏதும் பிரச்சினைகள் உள்ளனவா? கடவுள் பற்றிய கதைகளும், பிம்பங்களும், உருவங்களும் மனித வாழ்வை அதன் வக்கிரங்களோடும், ஏற்றத்தாழ்வோடும் பிரதிபலிக்கும் ஒன்றுதான் என்பதை நம்மால் பகுத்தறிய முடியாதா? பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோமே, நாளுக்கு நாள் தீமைகள் பெருகிக்கொண்டே இருக்கையில் தீமையை அழிக்க தசாவாதாரம் எதையும் நாம் காண முடியவில்லையே.

ஆசிஃபாவுக்காக, நிர்பயாவுக்காக அல்லது பாதிக்கப்பட்ட யாரோ ஒரு மனிதருக்காக அழும் எம் சகோதர சகோதரிகளிடம் நான் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் – முதலில் உங்கள் நம்பிக்கைகளைப் பற்றி கேள்வி எழுப்புங்கள். ஏனென்றால் நம்மைப் போன்ற ‘நம்பிக்கைக்காரர்களே’ (சாதி, மதம் மற்றும் இதர கருத்தியல்கள் மீது நம்பிக்கையுள்ளவர்கள்) சமத்துவத்திற்கு தடைக்கற்களாக இருக்கின்றோம். இச்சமூகத்தில் ஏற்றத்தாழ்வை ஒழித்து சமத்துவத்தை நிலை நாட்டி உண்மையான நீதியை நிலை நாட்ட நம்பிக்கைக்காரர்களே தடை சக்திகள்.

அறிவியலுக்குப் புறம்பான நம்பிக்கைக்காரர்கள் தான் நம் ‘எதிரிக்குப் பாடம் புகட்ட வேண்டும்’ என்று அழித்தொழிக்கும் அதிகாரத்தை வழங்குபவர்கள். நாமே அதன் பாதுகாவலர்களும் கூட. ‘சரி’, ‘தவறு’, ‘நல்லது’, ‘கெட்டது’, ‘மேலானது’, ‘கீழானது’ என்றெல்லாம் சொல்லப்படும் ஒன்றை என்னவென்று கேள்வி கேட்காமல், ஆளும் வர்க்கம் நிர்ணயித்துள்ள இந்த எதிர்மறைகளின் உண்மையானப் பொருளை கேள்வி கேட்காமல் ‘தீமை’யை அழிக்கவும், தண்டிக்கவும் அதிகாரம் வழங்கும் நாம் தானே உண்மையில் ‘தீயவர்கள்’.

நம்பிக்கைக்காரர்களாக நாம் இந்த சமூகத்தில் நிலவும் நன்மை, தீமை, ஏழ்மை, செல்வநிலை, நல்லவர், கெட்டவர், தூய்மையானது, அசுத்தமானது, பலமானவர், பலவீனமானவர், மதம் x மதம், சாதி x சாதி, பாலினம் x பாலினம், இனம் x இனம் என்று பகைமை நிலவுவதற்கான அடிப்படை காரணங்களைப் பற்றி கேள்வி எழுப்ப விரும்புவதில்லை. ‘பாவம்’ x ‘புண்ணியம்’ அல்லது ‘நல்லவன்’, ‘கெட்டவன்’ ஆகிய வியாக்கியானங்களைப் பேசி சமாதானம் கொள்வோம். மிஞ்சிப் போனால், தாயின் ‘வளர்ப்பு’ சரியில்லை என்று ஒரு பெண்ணுக்கு சான்றிதழ் வழங்குவோம்.

மனிதர்கள் ஒன்று அறியாமையினாலோ அல்லது சுயநலத்தாலோ இதுபோன்ற ‘நம்பிக்கைக்காரர்களாக’ இருப்பார்கள் (சுயநலமே முதன்மை காரணம்). ஆனால், மனிதர்களாக சக மனிதனை துன்புறுத்தவும், கொல்லவும், வன்புணர்வு செய்யவும், ஒடுக்கவும், சுரண்டவும் அதிகாரம் வழங்கும் நம்பிக்கைகளை (மார்க்கம் - மதம்!) கேள்வி எழுப்பாமல் போனால் நம்மை ‘நாகரீக மனிதர்கள்’ என்று சொல்லிக் கொள்ளும் தகுதியும் நமக்கு உள்ளதோ?

To Read in English - https://masessaynotosexism.wordpress.com/2018/04/13/are-we-humans/